privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

-

நயன்தாரா சகல்
இந்தோ ஆங்கில எழுத்தாளர் நயன்தாரா சகல்

ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு,  தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை,  “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.

அசோக் வாஜ்பாயி
இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி

‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.

உதய் பிரகாஷ்
இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்

கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.

கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே

கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.

அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.

எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.

– சம்புகன்

எழுத்தாளர் நயன்தாரா சகலின் நேர்முகம்