privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

-

தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன்? இதையே வலிந்து பேசிக் கொண்டிருப்பதால் நீங்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட மாட்டீர்களா என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

இதையே இன்னும் விரித்துக் கூறுகிறார் வாசகர் சுகதேவ்.

“உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணம் இருந்தால் மட்டும் தான் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். உடனடி நலன் சார்ந்த ஒன்றை மட்டுமே அவர்கள் நெருக்கமாக உணர்கிறார்கள். அரசுக் கட்டமைப்பின் செயல்படாத தன்மைக்காக தேர்தல் புறக்கணிப்பில் அமைப்புகள் ஈடுபடலாம். மக்கள் ஈடுபடுவது கடினம்.

ஒரு பிரச்சினையின் நீண்ட பரிமாணத்தை மக்கள் புரிந்து கொள்வது சிரமம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வேட்டந்திட்டை என்ற கிராமத்தில் மக்களின் போராட்டத்தை கடுமையாக நசுக்கி உள்ளது போலீஸ். அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஜூ.வி நிருபரை பார்த்து ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் தான் அவரை அனுப்பி வைத்ததாக சொன்னாராம்.

தேர்தலில் ஈடுபடாத கட்சிகளை மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு கூட பொருட்படுத்துவதில்லை. மக்களுக்கு அவநம்பிக்கை. ஊடகங்களுக்கு சுவாரசியமின்மை. அரசுக்கு கையாள்வது எளிதாக இருக்கிறது. நா.த.க, பா.ஜ.க ஆகியவை பேராபத்தாக தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை தேர்தல் புறக்கணிப்பு உத்தி தடுத்து விடுமா என்று சிந்திப்பது நல்லது. இன்னொரு பக்கம் அரசு மேலும், மேலும் மக்களை வதைத்து வருகிறது. தனது தோல்வியை மறைக்க இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பிக்கப்படலாம். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை அமலில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற ஆணைக்கிணங்க மனித உரிமை பாதுகாப்பு மையத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மையமாக மாற்றியது போன்று மக்கள் அதிகாரமும் அப்படி ஒரு நெருக்கடிக்கு பிறகு முடிவை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்படி செய்தால் அது பெரும் இழப்புக்கு பிறகு எடுக்கும் முடிவாக இருக்காதா?

காஷ்மீர் மக்களாலேயே புறக்கணிக்க இயலாத தேர்தலை இந்தியாவின் பிற பகுதிகள் புறக்கணிக்க இயலுமா?” – சுகதேவ்

“மனித உரிமை“ பெயரை மனித உரிமை அமைப்புக்கள் பயன்படுத்தக் கூடாது எனும் நீதிமன்ற ஆணைக்கிணங்க மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள். இது வெறும் பெயர் மாற்றமே அன்றி கொள்கை மாற்றமல்ல. ஒரு வேளை அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவு போட்டால் அதை ஏற்கத்தானே வேண்டுமென நினைக்கிறார் சுகதேவ்.

இந்த வாதத்தை நீட்டித்தால் ஆளும் வர்க்கம் சட்டபூர்வமாக அனுமதித்தால் மட்டுமே ஒரு நாட்டில் புரட்சி நடத்த நினைக்கும் கம்யூனிசக் கட்சிகளின் விருப்பம் ஈடேறும் என்றாகிறது. அரசு, நீதிமன்றங்களை எதிர்த்துக் கொண்டு என்ன அரசியல் வேலை செய்யமுடியும் என்று ஐயப்படுகிறார் நமது வாசகர்.

முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் நாடுகளில் அந்த “ஜனநாயகம்” வழங்கும் வாய்ப்புக்களை ஒரு புரட்சிகர கட்சி பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. மாறாக அந்த வாய்ப்புதான் மக்களிடையே வேலை செய்யவும், புரட்சியை நிறைவேற்றவும் நிபந்தனை என்று புரிந்து கொள்வது பாரிய பிழை. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களை தூக்கி எறியும் ஒரு மாபெரும் நடவடிக்கையென்றால் அதை ஒருக்காலும் முதலாளித்துவ அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.

எனவே அவர்களது ஜனநாயகம் எந்த அளவு அனுமதிக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மேல் மீறுகிறோம். அந்த வகையில் ஒரு கம்யூனிசக் கட்சி வெளிப்படையாக மட்டுமல்ல இரகசியமாகவும் செயல்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். புரட்சி நடந்த நாடுகளில் கம்யூனிசக் கட்சிகள் மேற்கண்ட இருமுறையிலும் வேலை செய்திருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு விவாதம்நமது நாட்டைப் பொறுத்தவரை இங்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்பது அரசு வடிவத்தில்தான் உள்ளது. சமூக உள்ளடக்கத்திலோ அரை காலனியாதிக்கமும், அரை நிலபிரபுத்துவமுமே நிலவுகிறது. அதனால்தான் இதை போலி ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.

இன்றைக்கு கட்டமைப்பு நெருக்கடியின் காலத்தில் இந்த போலி ஜனநாயகத்தை மக்களே உணர்ந்து கொண்டு பேசுகிறார்கள். அரசு உறுப்புகள் எதையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. கடைசியாக நடந்த பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பி.எஃப் நிதியை முடக்கும் உத்திரவுக்கு எதிராகப் போராடியவர்கள் சாதாரண தொழிலாளிகள் மட்டுமே. அவர்களில் கணிசமானோர் பகுதி நேரத் தொழிலாளிகளும் கூட. இந்த அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வர அவர்கள் மனு தாக்கல், மந்திரிகளிடம் முறையீடு, கலெக்டரிடம் கருணை மனு இன்னபிறவெல்லாம் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்டவர்கள். அதனால்தான் மத்திய அரசு ஒரிரவில் உத்திரவை ரத்து செய்யும் வண்ணம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தினார்கள்.

பி.ஆர். பழனிச்சாமி கிரானைட் கொள்ளை முதல் அம்பானியின் இயற்கை எரிவாயு கொள்ளை வரை அனைத்தையும் இந்த அரசமைப்பே காப்பாற்றுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய தேர்தலில் அ.தி.மு.கவின் ஊழல் பணம் கோடி கோடியாய் கைப்பற்றப்பட்டாலும் அந்தக் கட்சியை தடை செய்ய வேண்டும், குறைந்த பட்சம் தேர்தலிலாவது போட்டியிடத் தடை செய்ய வேண்டும் என்று இங்கே ஏதோ ஒரு ஊடகத்தில் கூட பேசப்படாததற்கு என்ன காரணம்? அதுதான் போலி ஜனநாயகம்.

இருப்பினும் இதெல்லாம் தெரிந்த மக்கள் வாக்களிக்கத்தானே போகிறார்கள் என்று சுகதேவ் கேட்கிறார். ஆம், வாக்களிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அது அவர்களது தலையெழுத்தை மாற்றும் என்றோ, பாரிய மாற்றம் வரும் என்பதாலோ அல்ல. சாதாரண மக்களைப் பொறுத்த வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது என்பது மாதம் ஒரு முறை ஆண்டவனை வழிபடுவது போலத்தான். தனது பிரச்சினைகளை எள்ளளவு கூட சாமி குறைக்காது என்றாலும் இந்த வழிபாடு மாற்ற முடியாத ஒரு சடங்கு போல நிலவுகிறது, அவ்வளவுதான்.

தேர்தல் பரபரப்பு என்பது மக்களைப் பொறுத்தவரை அதிக பட்சம் ஒரிரு வாரங்களுக்கு மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் இந்தத் தேர்தல் அரசியல் குறித்து அதாவது இதுதான் தமது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதாக ஒரு குழந்தை கூட நினைக்காது. இன்னும் எளிமையாகச் சொன்னால் தோற்றுப் போன இந்த அரசு என்பது ஏதோ ரேசன் கார்டு, சாதிச் சான்றிதழ், இலவசங்கள் அளிப்பது போன்ற சில்லறைச் சமாச்சாரங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.

எங்கே தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அந்த உரிமைகளை பெறமுடியாமல் போய்விடுமோ என்பதைத் தாண்டி மக்களுக்கு இந்த தேர்தலின் மீது எந்தக் காதலும் இல்லை. இல்லையென்றால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற முதன்மைத் தேவைகள் இந்த தேர்தல் மாற்றத்தால் மாறிவிடுமா என்று கேட்டுப் பாருங்கள்! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார் கல்வியின் கொள்ளையோ, தனியார் மருத்துவமனைகளின் வழிப்பறியோ முடியாது என்பது தெரிந்த மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை மாபெரும் அரசியல் நடவடிக்கையாக கருதுவதில்லை. நாம் ஏன் கருத வேண்டும்?

முதலாளி என்ற முறையில் பாரிவேந்தர் பச்சைமுத்துவையும், காமடி என்ற பெயரில் நடிகர் கார்த்திக்கையும் தேர்தலுக்காக நேர்காணல் செய்யும் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் போலவோ இல்லை இந்த ஊடகங்கள் கிளப்பும் இப்பேற்ப்பட்ட அக்கப் போர்களில் மண்டிக் கிடக்கும் அரதப்பழசான அபத்தக் காமடிகளை மாபெரும் அரசியல் விவாதமாக கருதும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் போலவோ மக்கள் தேர்தலை அணுகுவதில்லை.

தேர்தலுக்கு முந்தைய மாதத்திலோ, இல்லை தேர்தலுக்கு பிந்தைய மாதத்திலோ மக்கள் யாரும் சீமானின் பிளிறலையோ, வைகோவின் கண்ணீரையோ, ஜெயாவின் ஹெலிகாப்டரையோ, கருணாநிதியின் தேர்தல் அறிக்கை குறித்தோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு துரோகம் செய்கிறார்கள், யார் யார் குறித்து இரகசியங்கள் தெரிவிக்கிறார்கள், தொகுதி கிடைக்காமல் ஜனநாயகம் குறித்து புலம்புவர்கள் யார், எந்த தொகுதியில் யார் வெல்வார்கள், அந்தக் கணிப்பை யார் திறம்பட செய்கிறார்கள் இவைதானே ஒவ்வொரு தேர்தலின் போதும் பரபப்பாக பேசப்படுகிறது? இதில் ஒரு தேசத்தையோ இல்லை அந்த தேசத்து மக்களின் தலைவிதியையோ தீர்மானிக்கும் எதுவுமில்லை.

ஆக மக்களே சடுதியில் மறந்து போகும் தேர்தல் பரபரப்பை சுகதேவ் போன்றவர்கள் கொஞ்சம் தத்துவப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த ‘தத்துவம்’ சமூக இயக்கத்தின் விதிகளை மறந்து விட்டு சென்சேஷனில் சிக்கிக் கொள்கிறது, இதுதான் பிரச்சினை!

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில அறிஞர் பெருமக்கள் எமது தேர்தல் புறக்கணிப்பு குறித்து புள்ளிவிவரங்கள் கேட்பார்கள். அதாவது தமிழகத்தில் எத்தனை சதவீத மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள், தேர்தல் புறக்கணிப்பை எவ்வளவு வருடமாக செய்கிறீர்கள் என்றெல்லாம் மடக்குவார்கள்.

தேர்தல் புறக்கணிப்பை மதிப்பிடும் அளவு கோல் வெறுமனே தேர்தலில் பதியப்படாத வாக்குகளை வைத்து மட்டுமல்ல. ஏனெனில் முந்தைய காலத்தில் இது போலி ஜனநாயகம் என்று நாம் மட்டும் பேசி வந்தோம். அப்போது ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு இந்த அமைப்பு மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தது. இன்று அது துளியளவும் இல்லை. துறை சார்ந்து பார்த்தால் பல்வேறு பிரிவினர்களிடையே இந்த புரிதல் வளர்ந்து வருகிறது.

சட்டத்தை வைத்து பிழைக்கிறார்கள் என்று தூற்றப்பட்ட வழக்கறிஞர்களே இன்று நீதிமன்றங்களையும் ஊழல் நீதிபதிகளையும் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த அளவு நீதித்துறை திவாலாகியிருக்கிறது. வழக்கறிஞரை விடுங்கள், ஒரு ஏழையிடம் கேட்டால் கூட, குமாரசாமி கணக்குதான் நீதிமன்றத்தின் கணக்கு என்பதை சட்டென்று கூறிவிடுவார்.

மாருதி தொழிலாளியோ இல்லை கோவை பிரிக்கால் தொழிலாளியோ இந்த அரசும், நீதித்துறையும் யாருக்கு ஆதரவானது என்று கேட்டால் என்ன சொல்வார்? இந்துமதவெறியர்களையும், ரன்வீர் சேனா போன்ற ஆதிக்க சாதி குண்டர் படைகளையும் விடுதலை செய்து ஏராளமான தீர்ப்புகள் சமீப காலத்தில் வந்துள்ளன. கயர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினரிடமோ இல்லை சுண்டூர் தாழ்த்தப்பட்ட மக்களிடமோ இல்லை முஃசாபர் நகர் முஸ்லீம்களிடமோ இந்த அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறதா என்றால் கோபப்படமாட்டார்களா?

ஜனநாயகத்தின் பாதை
ஜனநாயகத்திற்கு செல்லும் பாதை – கேலிச்சித்திரம் நன்றி Cartoon Movement

ஆனால் இந்த பிரிவு மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்றால் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஏன்? காசுமீரிலேயே தேர்தல் புறக்கணிப்பு சாத்தியமாகாத போது மற்ற பகுதிகளில் எப்படி சாத்தியமாகும் என்று சுகதேவ் கேட்பதை எடுத்துக் கொள்வோம். இங்கே தேர்தல் நடந்து விட்டதாலேயே காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததா பொருளா? இல்லை இலட்சக் கணக்கில் துருப்புக்களை நிறுத்தியிருக்கும் இந்திய இராணுவம்தான் இனி போராட்டம் இல்லை, ஜனநாயகம் வந்து விட்டது என்று காலி செய்து வெளியேறுமா? காஷ்மீர் மாணவி ஒருவரின் நேர்காணலை சுகதேவ் படித்திருப்பார். அதில் இந்த அமைப்பு குறித்து ஏதாவது கடுகளவாவது நம்பிக்கை தெரிகிறதா?

டாஸ்மாக் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். சசி பெருமாள் எதற்காக உயிர் துறந்தார்? ஒரு கடையை இடம் மாற்றவேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவைக் கூட இந்த அரசு செயல்படுத்த மறுத்ததால்தானே? மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டின் மக்கள் உரைகளைக் கேளுங்கள்! வழக்கமாக தோழர்கள் பேசுவதைக் காட்டிலும் வீரியமாக மக்கள் பேசுகிறார்கள். காரணம் இந்த அமைப்பு திவாலாகி வருகிறது என்பதை நடைமுறை அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தேர்தல் பங்கேற்பு – புறக்கணிப்பு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்க வேண்டாம் என்கிறோம்.

அதே நேரம் இந்த தேர்தல் பங்கேற்பினால் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்திருக்கவும் மக்கள் பயிற்று வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் தேர்தல் புறக்கணிப்பையும் விடாது செய்ய வேண்டும். தோற்றுப் போன இந்த சமூக அமைப்பிற்கான மாற்று தோன்றி வளர்வதற்கேற்ப தேர்தல் புறக்கணிப்பும் வீச்சாக நடக்கும். இதைத்தாண்டி இதில் குறுக்கு வழி ஏதுமில்லை.

எவ்வளவு ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்கிறீர்கள் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, டாஸ்மாக் பிரச்சனையை இந்த அமைப்பு முறையால் தீர்க்க முடியாது என்ற உண்மையை மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் கொண்டு வரவில்லையா? அ.தி.மு.க தவிர அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை கொள்கையளவிலாவது ஏற்கவில்லையா? அடுத்த அரசாங்கம் அது அ.தி.மு.க அல்லது தி.மு.க என்று யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது உறுதி என்பதாக இந்த சமூக நிலைமை மாற்றப் பட்டிருக்கிறதா இல்லையா?

தேர்தல் புறக்கணிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதால் என்ன பிரச்சினை? நாம் சொல்லும் கட்டமைப்பு நெருக்கடி ஊடக உலகிற்கும் பொருந்தும். தேர்தல் குறித்த கட்சி மற்றும் வேட்பாளர் செய்திகள் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியிடப்படுகின்றன, பெரும் முதலாளிகளே ஊடகங்களை ஏற்று நடத்துகிறார்கள்..இவையெல்லாம் என்ன? பச்சமுத்துவுக்கு கட்சி இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, ஊடகமும் இருக்கிறது அதே போல வைகுண்டராசனுக்கு, அம்பானிக்கு.. முதலாளி மல்லையா மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். பொதுத்துறை வங்கிகளுக்கு பட்டைநாமம் போட்டுவிட்டு அதிகாரப் பூர்வமாகவே வெளிநாடு செல்பவராகவும் இருக்கிறார்.

அவரது கடன் குறித்த செய்திகள் வந்த போது மல்லையா சவால் விட்டார். தனது விருந்துபுசாரத்தில் புரண்ட பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் பட்டியல் எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று பகிரங்கமாகவே பேசினார். அதை எந்த ஊடகமாவது மறுத்ததா?

தேர்தல் புறக்கணிப்பு விவாதம்இறுதியாக தோற்றுப் போன இந்த அமைப்பு முறையை எப்படி நீக்க வேண்டும் என்பதே கேள்வி. அதில் தேர்தல் புறக்கணிப்பு ஒரு முறை என்கிறோம். மாறாக மக்கள் எப்படியும் தேர்தலில் பங்கேற்பதால் நாமும் பங்கேற்ற வேண்டும் என்றால் அது எங்கே போய் முடியும்?

சந்தர்ப்பவாதம் அங்கேதான் தன்னை தவிர்க்க இயலாமல் ‘நியாய’ப்படுத்திக் கொள்கிறது. எது முடியுமோ அதைச் செய், எது சாத்தியமோ அதை எடுத்துக் கொள் என்பதெல்லாம் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் காரியவாதம். துவக்கத்தில் புரட்சி கூட சாத்தியமில்லைதான். எனவே புரட்சியை மறுக்க இயலுமா? இந்துமதவெறியை எதிர்த்து இந்துக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது என்றால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர் கொள்வது எப்படி? வன்னிய சாதிவெறியை அம்பலப்படுத்தாமல் இளவரசனின் மரணத்திற்கு நீதியை எப்படி பெற முடியும்?

இதனாலெல்லாம் இவை சுலபமான அரசியல் நடவடிக்கைகள் என்று சொல்லவில்லை. கடினமானதுதான். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்கும் வரையிலும் முயற்சியை விடாது தொடரும் போதும் அந்த மாற்றங்கள் நடந்தே தீரும். வெல்ல முடியாத அமெரிக்காவை வியட்நாம் மக்கள் வெல்லவில்லையா? ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்தாலும் சோவியத் யூனியனில் சோசலிசம் குறிப்பிட்ட காலம் வரையிலாவது வெற்றி பெறவில்லையா?

இந்த அமைப்பு திவாலாகி விட்டது, இது ஒரு போலி ஜனநாயகம் என்பதை நண்பர் சுகதேவ் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம். எனில் இதை மக்களிடம் விளக்குவதற்கு தேர்தல் பங்கேற்பு சரியாக இருக்குமா இல்லை தேர்தல் புறக்கணிப்பு சரியா இருக்குமா?

  1. அடிமறி மண்டில் ஆசிரியப்பா நினைவுக்கு வந்த்து.. கேள்விக்கான பதிலை பார்த்தவுடன்.. நல்ல பதில்

    • கவுட்டுக்கிடை கனாவில் கைப்புள்ள நினைவுக்கு வந்தான்…. நல்லதொரு பகடி

  2. //இந்த அமைப்பு திவாலாகி விட்டது, இது ஒரு போலி ஜனநாயகம்………… இதை மக்களிடம் விளக்குவதற்கு தேர்தல் பங்கேற்பு சரியாக இருக்குமா இல்லை தேர்தல் புறக்கணிப்பு சரியா இருக்குமா?//

    நல்ல கேள்விதான்! ஒடுக்கபட்ட மக்கள் ஒரே அணியாக திரண்டு , தேர்தல் புறக்கணிப்பு செய்தாலும் இரண்டொருநாட் கள் ஊடக செய்தியாக வந்து மறைந்து விடும்! மற்றபடி ‘னோடா’வின் கதிதான்! அரசியலில் எதிர்வினையாற்றும் செயலை செய்யாது! எதிரணிக்கு வோட்டும் , உரிமைக்கு குரலும் வலுத்துவர ஆதிக்க சக்திகள் பதுங்கும்! ஆனால் சாதி வெறி ஒருபுறமும், இலவச மாயை ஒருபுறமும் அல்லவா மக்கள் வாழ்வை பறிக்கின்றது! அயராத விழிப்புணர்வு பிரச்சாரமே பயன் தரும்! பெருவாரியான மக்கள் விழிப்புணர்வு (சாதியத்தை மறந்து) பெறாதவரை புரட்சி கானல்னீர்தான்! ஜனனாயகம் , பணனாயகத்தால் விழுங்கப்பட்டது போல, மதவாதமும், சாதியும் சமதர்மத்தை ஒருநாளும் அனுமதிக்காது!

  3. /வெல்ல முடியாத அமெரிக்காவை வியட்நாம் மக்கள் வெல்லவில்லையா? ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்தாலும் சோவியத் யூனியனில் சோசலிசம் குறிப்பிட்ட காலம் வரையிலாவது வெற்றி பெறவில்லையா?/எல்லாம் சூப்பரப்பு கடைசி வரில கவுந்துடீக எல்லா தொழிலளர்களாலும் வெகு ஜன மக்களாலும் கொண்டு வரப்பட்டது கம்மூனிஸ சோசலிசம் ருசியாவில தோத்து போக காரணத்த ஏகாதிபத்தியம் அப்பிடினு அடுத்தவக மேல வைக்காம இதுல எதானும் டிஸ் அன்வான்டேஜ் இருக்குதானு பாத்து அதை களைய வகை பார்க்கனும் அதை விடுத்து முதலாளித்துவம் அமெரிக்கானு பலி போடுரது அறிவியல் பூர்வமானதா தெரியலயே ,5 வருசத்துக்கு வந்து போற அதிகார வர்க்கத்தால் திட்டங்கள் தீட்டத்தான் முடியும் அதை செயல் படுத்தும் அதிகாரவர்க்கத்தின் ஆயுள் 60 ஆண்டுகள் அல்லவா அப்புறம் எப்பிடி அரசு கட்டமைப்பு மாறும் ஏன் அதிகார வர்க்கத்தையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றலாமே இதுக்கு எதுனா செயல் திட்டம் கம்மூனிஸத்துல இருக்குதானு பிரியல ஏன்ன எனக்கு கம்மூனிஸம் சத்தியமா தெரியாது …………………………

    • நான் சொல்ல வந்ததோட பொருளயே மாத்தீட்டிங்க கோடு போட்டு

      5 வருசத்துகு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆளும் வர்க்கம் அதிகாரி வர்க்கம் என்று தவறாக எழுதி விட்டேன்…

  4. பி கு : இந்த கம்மூனிஸ்டுகள்தான் பைபிளை புதைக்க வேண்டிய புத்தகம் என்று புலம்புகின்றன

  5. தேர்தல் புறக்கணிப்பு தேவையில்லை/சாத்தியமில்லை என்பதல்ல வாதம். தேர்தலை புறக்கணிக்க அறைகூவல் விடுக்கும் பாணி மாவோயிஸ்ட் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனால் அதில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆனால், மக்களதிகாரத்தின் அரசியல் நடைமுறை மாவோயிஸ்ட் தன்மை கொண்டதல்ல. அதன் போராட்டங்களை போர்க்குணமிக்க சட்டப்பூர்வ போராட்டங்கள் என்றழைப்பது சரியாக இருக்கும். இந்த அரசியல் நடைமுறையில் பயணித்து தேர்தலை புறக்கணிப்பதற்கு தேர்தல் பங்கேற்பு அவசியப்படலாம். தேர்தலில் பங்கேற்று சீரழிய கூறவில்லை. தேர்தல் பங்கேற்பின் மூலம் பாலபாரதி போன்ற மக்கள் தலைவர்கள் உருவாக வேண்டும். அது மக்களின் உளவியல் பாதுகாப்புக்கு அவசியமானதாக இருக்கிறது. அப்படி உருவாகும் தலைவர்களின் பேச்சுக்கு கட்டுண்ட மக்கள் தான் தேர்தல் புறக்கணிப்புக்கு தயாராவார்கள்.

    குஜராத்தில் பா.ஜ.க.வோ அல்லது தமிழகத்தில் ஜெயலலிதாவோ தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தால் மக்களில் கணிசமானோர் அதனை ஏற்றுக் கொள்வர் என்று நம்பலாம். காரணம் இந்துத்துவமும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிம்பங்களும் அடித்தட்டு மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் தாக்கம் வலிமையானது. இது அவர்களுக்கு தேர்தல் மூலமே சாத்தியப்பட்டது. தேர்தல் வழிமுறை வெறுமனே சந்தர்ப்பவாதம்/பிழைப்புவாதம் என்று பழிப்பதற்கு எதிராக காமராஜர், கக்கன், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்களின் நினைவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஒரு புறம் புரட்சி தாமதமாகிறது. இன்னொரு புறம் அர்விந்த் கேஜ்ரிவால், சகாயம் போன்றோர் செல்வாக்கு பெறுவதை கண்டு சினம் கொள்கிறோம். ஆளும் வர்க்கம் இவர்களை திட்டமிட்டு உருவாக்கி உலவ விடுவதாக பிரச்சாரம் செய்கிறோம். ஆனால், தேர்தல் புறக்கணிப்பென்று இரண்டு கைகளிலும் விலங்கை அணிந்து ஆளும் வர்க்கத்துடன் மோதுகிறோம். அதனால் ஏற்படுகின்ற தாமதத்தை இட்டு நிரப்புபவர்களே மேற்சொன்னவர்கள். கேஜ்ரிவாலின் ஆட்சி குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையை தக்க வைக்குமானால், அங்கு புரட்சிகர வசனம் எடுபடுமா?

    திரிபுரா இன்னொரு உதாரணம். 97 % மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளார்கள். குற்ற விகிதம் குறைந்து இருக்கிறது. பெண் சிசுக்கொலை இல்லை. தோழர் கலையரசன் போன்றோரே கொண்டாடுகின்றனர். கிளர்ச்சி வடிவங்களில் மட்டுமல்ல. இப்படி நேர்மறையிலும் மக்களை பாதித்து அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்தலாம் அல்லவா?

    • ஜனநாயகத்தில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு கணம் சிந்தித்து வாக்கு அளிக்க முடியாதவர்கள் புரட்சி செய்த பின்னர் எல்லாம் சரி செய்துவிடுவார்களா ?

      அம்பேத்கர் சிறப்பாக வடிமைத்த சிஸ்டம் . ஒரே ஒரு குறை ஒருவரே இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டி இட கூடாது என்று அமேரிக்கா போல கட்டுப்பாடு விதிக்கவில்லை . அது ஒருவரே கட்சியின் அதிகாரத்தை தக்க வைத்து கொண்டு , அதிகார குவியம் ஏற்பட காரணமாகி விட்டது . ஆனாலும் மக்கள் ஆதரவு இன்றி அத்தகையா அதிகாரத்தை ஒருவர் தக்க வைத்து கொள்ள முடியாது .

      ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாற்ற கூடிய அதிகார குவியதையே தாங்க முடியவில்லை என்றால் பல தலை முறைக்கும் மாற்ற முடியாத கம்யூனிச அதிகார குவியம் நாட்டை சீரளிதுவிடாதா ?

      ஜாதி இல்லாத சமூக அமைப்புகளில் கம்யூனிசம் ஓரளவு புதிய தலைவர்களை தந்தது . ஆனால் ஆசிய ஜாதி முறை சார்ந்த வாடா கொரியாவில் குடும்பமே கட்சி என்னும் நிலை தான் ஏற்பட்டது .

      யாரும் பிடிக்கவில்லை என்றால் நோட்டா வாவது போடுங்கள்
      அது சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் . இத்துணை பேர் வேட்பாளர்களை ரசிக்கவில்லை என்னும் செய்தியை கொண்டு ச்ல்லும் . அந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் பொழுது , உணமியிலேயே மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் தைரியமாக தேர்தலில் நிற்க முன்வருவார்கள்

    • சுகதேவ்,
      “போர்க்குணமிக்க சட்டப்பூர்வ போராட்டங்கள்” என்ற புதிய பதத்திற்கு விளக்கம் என்ன? பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக் போராட்டத்திற்காக சில வாரங்கள் சிறை வைக்கப்பட்டது ஏன்? கோவன் மற்றும் தற்போது திருச்சி மாநாட்டில் பேசிய அறுவர் மீது தேசத் துரோக வழக்கு ஏன்? சட்டபூர்வ போராட்டங்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதால் அதில் சட்டபூர்வம் எங்கே இருக்கிறது? விளக்கம் தேவை! ஒரு வேளை என்கவுண்டர் மட்டும்தான் சட்ட விரோத போராட்டங்களுக்கு கிடைக்கும் தண்டனை, சிறைவாசம் சட்டபூர்வமான தண்டனை என்பீர்களா?

      தேர்தலில் பங்கேற்று தேர்தலை புறக்கணிப்பது என்ற புதிய பதத்திற்கும் விளக்கம் தேவை! உங்களுக்கு பாலபாரதி முக்கியமான தலைவராக தெரிகிறார். பால பாரதியோ “வினவின் கட்டுரைகள் நம்பிக்கையூட்டுகின்றன” என்கிறார். பாலபாரதியின் தலைவர் மார்க்சிஸ்டு இராமகிருஷ்ணனோ மாமண்டூர் மாநாட்டில் பேசும் போது இடையில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கூட்டத்தில் புகும் போது பேச்சை நிறுத்தி “இதோ கேப்டன், வருங்கால முதல்வர் வருகிறார், பராக், பாரக்” என்று முழங்கினார். இத்தகைய ‘போராளி’களை ம.க.இ.க அமைப்புகள் உருவாக்க வேண்டும் என்கிறீர்களா? தோழர் ராமகிருஷணன் மக்களுக்கு அளிக்கும் உளவியல் பாதுகாப்பு என்ன, விளக்கம் தேவை!

      தமிழகத்தின் சிறு நகரங்களில் மற்ற ஓட்டுக்கட்சிகளை விட குறிப்பாக மார்க்சிஸ்டு பொதுக்கூட்டங்களை விட ம.க.இ.க கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வருவது ஏன்? சி.பி.எம் கட்சியில் இருக்கும் கவிராயர்கள், பாடகர்களை விட கோவன், ம.க.இ.க கலைக்குழு பன்மடங்கு பிரபலமாக இருப்பது ஏன்? சி.பி.எம் அளிக்கும் உளவியல் பாதுகாப்பில் ஈர்க்கப்பட்டு தமிழக மக்கள் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்காமல் ம.க.இ.க கலை நிகழ்ச்சிகளை அதிகம் எதிர்பார்ப்பது ஏன்? ஒரு வேளை மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்களா? விளக்கம் தேவை!

      எம்.ஜி.ஆரின் தாக்கம் இணையத்தில் எப்படியிருக்கிறது? ஒரு சான்று வினவில் வெளியான “எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !” எனும் கட்டுரை இதுவரை 5500க்கும் அதிகமாக மக்களால் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கானோரால் (வினவில் மட்டும் இன்று வரை இதை படித்தோர் 50,000த்திற்கும் மேல், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு படிக்கப்பட்ட கணக்கு தனி) படிக்கப்பட்டும் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எம்.ஜி.ஆரை “எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!” என்ற தலைப்பில் முழு வரலாற்றையும் விளக்கும் அல்லது அம்பலப்படுத்தும் அந்தக் கட்டுரை ஏன் இவ்வளவு பேரால் படிக்கப்படுகிறது? விளக்கம் தேவை! இங்கும் தமிழகத்தின் இணைய மக்கள் முட்டாள்தனமாக அந்த உளவியல் தாக்கம் தெரியாமல் நடந்து கொள்கிறார்களா?

      அரவிந்த் கேஜ்ரிவால், சகாயம் போன்றோர் செல்வாக்கு பெறுவதாகவும் அதைக் கண்டு நாம் சினம் கொள்வதாகவும் கூறியிருக்கிறீர்கள். “நாம் எங்கே கோபப்பட்டோம்?” கேஜ்ரிவால் ஒரு ஃபோர்ட் பவுண்டேசன் தயாரிப்பு என்பதை நாம் அம்பலப்படுத்தினோம், கொள்கை எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று பில்டப் கொடுத்த யோகேந்திர யாதவ்தான் கேஜ்ரிவால் மீது கொலை வெறியோடு அம்பலப்படுத்தலை செய்தார். மேலும் தமிழக ஆம் ஆத்மி கட்சி தனது ஃபேஸ்புக் கணக்கில் வினவு கட்டுரைகள், கேலிச்சித்திரம், டாஸ்மாக் போராட்டங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறது. வினவிலோ ஆம் ஆத்மியை அம்பலப்படுத்தம் கட்டுரைகள் மட்டுமே இருக்கின்றன.இந்த முரணுக்கு உங்கள் விளக்கம் தேவை!

      கேஜ்ரிவால் மக்களின் குறைந்த பட்ச தேவைகளை பூர்த்தி செய்தால் அங்கு புரட்சிகர வசனம் எடுபடுமா என்று கேட்டிருக்கிறீர்கள். புரட்சிகர வசனம் என்று எழுதுமளவுக்கு புரட்சி உங்களிடம் கேலிப்பொருளாகியிருக்கிறது. பரவாயில்லை. கேஜ்ரிவாலே அப்படி இந்த மாற்றத்தை கொண்டு வரும் போது எதற்கு இப்படி வெட்டியாக புரட்சி, தேர்தல் புறக்கணிப்பு என்று மாரடிக்க வேண்டும் என்று உங்கள் கேள்வியை புரிந்து கொள்ளலாம். அது உண்மையானால் இந்த அரசமைப்புக்குள் இருந்து கொண்டு குறைந்த பட்ச மாற்றத்தையே கொண்டு வரவேண்டும் என்றால் அது எப்படி என்று விளக்குவீர்களா? சான்றாக புது தில்லியில் மின்கட்டணம், குடி நீர் கட்டணம், தில்லியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குடிசை வாசிகள் போன்ற பிரச்சினைகள் உங்கள் வாதப்படி தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி என்று விளக்கம் தேவை.

      “நேர்மறையிலும் மக்களை பாதித்து அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்தலாம்” என்ற விளக்கம் நாம் இப்போது எதிர்மறையில் மக்களை புறக்கணிக்கிறோம் என்பதையும் சொல்கிறது. திரிபுராவை குறிப்பிடும் நீங்கள் மே.வங்கத்தையும் சேர்க்க மறந்து வீட்டீர்களே? இன்று காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கும் சி.பி.எம் நாளையே பா.ஜ.கவோடு கூட்டணி வைக்காது என்பதற்கு நீங்கள் உத்திரவாதம் அளிக்க முடியுமா? அதன்படி பார்த்தால் “ரேப்பை எதிர்க்க முடியாமல் போகும் போது அதை அனுபவித்து விடு” என்ற தத்துவப்படி நாம் எல்லோரும் அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் என்று யதார்த்தமாக யோசித்து சேர்ந்து வாழ்க்கையை வாழலாமே? இதற்கும் விளக்கம் தேவை?

  6. தேர்தலை புறக்கணிப்பதற்கே முதலில் தேர்தல் பங்கேற்பு நிபந்தனையாக இருக்கிறது. இன்று மக்கள் அறிந்திருக்கும்/மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சிகள் அனைத்துமே தேர்தலில் பங்கெடுத்திருப்பவை. தேர்தல் பங்கேற்பின் மூலம் செல்வாக்கு பெற்ற பின்னர் விடுக்கும் தேர்தல் புறக்கணிப்பு அழைப்புக்கு மட்டுமே பொருள் உண்டு. அப்படி அல்லாத அழைப்பு மாவோயிஸ்ட் தன்மை கொண்டது. கட்சி துவங்கி இத்தனை வருடமாகியும் மகஇக என்ற பெயர் அறியாதவர்களே தமிழகத்தில் அதிகம் இருப்பார்கள் என்பதை மறுக்க முடியுமா?

    மக்கள், அடிப்படையில் உளவியல் பாதிப்புக்கு ஏங்குபவர்கள். எம்.ஜி.ஆரின் மரண ஊர்வலத்துக்கு திரண்ட வரலாறு காணாத கூட்டம் தங்கள் ஆற்றாமையை தமக்கு மறுக்கப்பட்ட உயர்மத்தியதர வர்க்கத்தின் நுகர்விடங்களை தாக்கவும்/கொள்ளையிடவும் செய்துள்ளனர். கார் கண்ணாடியை உடைத்தவர்கள் சைக்கிளை ஒன்றும் செய்யவில்லையாம். திரை பிம்பம் மூலமும், போலியான வாழ்க்கை வரலாறுகள் மூலமும் கட்டமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இறக்கும் ஒரு சராசரி மனிதன் என்பதை மக்களால் உடனடியாக ஏற்க இயலவில்லை. எம்.ஜி.ஆரின் கொடூர ஆட்சி எம்.ஜி.ஆர் பற்றிய போலி பிம்பத்தால் மறைக்கப்பட்டு இருந்ததை விரிவாக எம்.எஸ்.எஸ் பாண்டியன் இமேஜ் ட்ரேப்பில் குறிப்பிடுகிறார்.

    கேரளாவில் சிரியன் கிறிஸ்தவ மக்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற முடிந்ததை God of Small Things நாவலில் குறிப்பிடும் அருந்ததி ராய், மேரி – ஜோசப் – இயேசுவினிடத்தில் மார்க்ஸ் – ஏங்கல்ஸ் – லெனினை வைப்பது எளிதாக இருந்தது என்கிறார். பிரபாகரன் வீழ்த்தப்பட்டு கிடந்த காட்சி உலகளவில் தமிழர்களை பாதித்ததையும் சொல்ல முடியும். வலுவான சித்தாந்தம் இருந்தாலும் வலுவான மக்கள் தலைவர்களின் அவசியத்தை உணர்த்துபவை இவை. எம்.ஜி.ஆர் ஒரு எதிர்மறை உதாரணம்.

    பாலபாரதியை குறிப்பிட்டால் வேண்டுமென்றே ராமகிருஷ்ணனையும் வலிந்து வாய்க்குள் திணிக்கிறீர்கள். திரிபுராவை சொன்னால் மே.வங்கத்தை வேண்டுமென்றே கோர்க்கிறீர்கள். தேர்தல் நடைமுறையில் பாலபாரதி போன்ற தலைவர்களும், திரிபுரா போன்ற உதாரணங்களும் எப்படி உருவாக முடிந்தது என்பதை திறந்த மனதுடன் பார்க்கும் மனமில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

    தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வரும் பாசிசத்தை தேர்தலை புறக்கணித்துக் கொண்டு எதிர்ப்பது விரட்டி வரும் யானையை கிணற்றில் குதித்துக் கொண்டு கல்லெறிவதற்கு சமமானது.
    ‘விளக்கம் தேவை’ ‘விளக்கம் தேவை’ என்று கோருவதில் விளக்கம் கேட்கும் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. ‘போர்க்குணமிக்க சட்டப்பூர்வ போராட்டம்’ தனி விளக்கம் தேவைப்படாத ஒன்று. துப்பாக்கி ஏந்தி நடந்த போராட்டம் ஒன்றை நீங்கள் சொல்லுங்கள்.

    • குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும்.தேர்தல் பங்கேற்பு மட்டுமே மக்களிடையே பரவலான அறிமுகத்தை பெற்றுத்தரும் என்பது சரியல்ல.இந்தியாவில்,தமிழ்நாட்டிலும் கூட SUCI என்று ஒரு இடதுசாரி இயக்கம் இருப்பதும்,செயல்படுவதும் எத்தனை பேருக்கு தெரியும்.இத்தனைக்கும் அவர்கள் தேர்தலில் பங்கேற்கும் பொதுவுடைமை கட்சிதான்.

      தேர்தல்களை தாண்டி மக்கள் பிரச்னைகளுக்காக அமைப்புகள் நடத்தும் வீச்சான போராட்டங்களே மக்களிடையே அறிமுகத்தையும் செல்வாக்கையும் பெற்றுத்தருகின்றன.அதனால்தான் SUCI யை அறியாதவர்கள் கூட ம.க.இ.க.வை அறிந்திருக்கிறார்கள்.SUCI-யின் மாணவர் அமைப்பான AIDSO-வை மாணவர் சமுதாயத்தில் எத்தனை பேருக்கு தெரியும்.அதே சமயம் ம.க.இ.க-வின் RSYF -ஐ அறியாதவர்கள் யார்.

  7. உங்கள் பதிலின் கடைசி பத்தி எதற்காக? அதில் எதற்காக ‘ரேப்’ உதாரணம் வருகிறது? இத்தோடு போய் விடு என்கிறீர்களா? தயவு செய்து இந்த ஒன்றிற்கு மட்டுமாவது நான் ஏற்கும் நல்ல விளக்கத்தை தரவும்.

  8. இரண்டாம் பத்தியின் முதல் வரியில், ‘உளவியல் பாதிப்புக்கு’ என்று வருகிறது. உளவியல் பாதுகாப்பு என்பதே நான் சொல்ல வந்தது.

  9. மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்கள் முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்பு குறித்து வாசகர் சுகதேவ் அவரது வார்த்தையிலேயே சொல்வதனால் Seeing is believing என்பதன் அடிப்படையில் விவாதிக்கிறார். இது ஒருபுறமிருக்க புரட்சிகர இயக்கங்கள் முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஆளும் வர்க்கம் என்ன நினைக்கிறது, மக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதற்கு சில செய்திகளை இந்த விவாதத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

    1. இந்த தேர்தல் சீசனில் தமிழ்நாட்டில் கணிசமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக மக்கள் போராடுகின்றனர் என பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடுகின்றன. தேர்தல் வேண்டாம் என்று சொல்கிற இந்த மக்களுக்கு கம்யுனிசம் குறித்து தெரியாது. ஆனால் நடைமுறையில் இந்த தேர்தல் வேலைக்காது என்பதை தங்களுக்கு தெரிந்தவிதத்தில் புரிந்துவைத்திருக்கின்றனர். மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்களின் தேர்தல் புறக்கணிப்பு மாவோயிசதன்மை கொண்டதாக இருக்கிறது என்று சுகதேவ் மதிப்பிடுவதை ஒப்பிட்டு நோக்கினால் பல்லடம் கல்லம்பாளையம் அருந்ததியர் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு இணையாக இருக்கிறது என்று சொல்லலாம்.

    2. மக்கள் நலக்கூட்டணிக்குள் பாய்ந்து தேர்தல் அதிகாரம் தான் தலித்துகளுக்கான விடுதலை என்று கர்ஜிக்கும் விடுதலைச் சிறுத்தைகளை பூனையளவுக்குக் கூட இவர்கள் மதிக்க தயாரயில்லை என்று கல்லம்பாளைய மக்களைப் புரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. தமிழ் இந்துவில் ஏப்ரல் 25, 2016இல் வெளிவந்த செய்தி, தலித் மக்கள் எந்த அடிப்படை வசதியுமின்றி இருக்கிற தங்கள் கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருப்பது வெளிவந்திருக்கிறது. புரட்சியாளர் என்பதை விட்டுவிடுவோம்! ஓர் அறிவுஜீவியாக இருக்கிறவர் இந்த தேர்தல் ஜனநாயக முறைக்குள் கல்லம்பாளையம் மக்களுக்கு தீர்வு உண்டா என்பதை விருப்பு வெறுப்பின்றி தெரிவித்திருக்க வேண்டும். சுகதேவ் திரிபுராவைக்காட்டி தன்விவாதத்தைக் கட்டியமைக்கிற பொழுது, அதிகாரவர்க்கமோ உண்மையைப் போட்டு உடைக்கிறது. கல்லம்பாளையம் மக்களின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது ஆளும் வர்க்க அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றமுடியாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில் கல்லம்பாளையம் மக்களின் கோரிக்கை நகராட்சிக்குள் வராது என்று வாக்குச்சீட்டின் வரம்பை போட்டு உடைக்கின்றனர்.

    3. இது ஏதோ குடிமையியல் சார்ந்த அறிவு என்று வாசகர்கள் கருதிவிட்டு கல்லம் பாளையம் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு முட்டாள்தனமானது என்று கூட கருதவாய்ப்புள்ளது. ஆனால் மதவிவகாரத்தில் வழமையாக வறட்டு கூச்சலிடும் ஜோசப் முன்வைக்கும் முக்கியமான கருத்தை சுகதேவ் முன்னிட்டு அனைவரும் கவனிக்க வேண்டும். “ஐந்து ஆண்டு ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது இருக்கட்டும்; அறுபதாண்டு காலம் ஆளும் அதிகார வர்க்கத்தை தேர்ந்தெடுக்க முடியுமா” என்கிற விதத்தில் தன் கருத்தை நச்சென்று பதிவு செய்திருக்கிறார். தோழர்கள் சிலர் கூட இரட்டை ஆட்சி முறையை விளக்குவதற்கு பிரச்சாரத்தில் கணிசமான நேரம் எடுத்து பலஉத்திகளை கையாண்டிருக்கிறார்கள். இங்கு ஜோசப் ஒரே போடாக உடைத்திருக்கிறார். அரசு வேறு அரசாங்கம் வேறு என்பது இவரது புரிதலில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்போனால் மக்களிடம் செல்கிறபொழுது இன்னும் நிறைய பாடங்கள் நாம் கற்றுக்கொள்ளமுடியும். இந்த வகையில் Seeing is believing என்ற சரடில் சுகதேவ் கோர்த்திருக்கிற மக்கள் தலைமை, பாலபாரதி, திரிபுரா போன்ற பல அடுக்குகள் மோசடியானவை என அஞ்சுகிறேன்!

    4. ஏப்ரல் 22, 2016, இந்து தமிழ் நாளேட்டில் இளமை புதுமைப் பகுதியில் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக இந்து ஆசிரியர் அசோகன் பதட்டத்துடன் ஒரு கட்டுரையை வரைந்திருக்கிறார். கட்டுரையின் தலைப்பு “தேர்தல் பாதை: இது திருடர் பாதை அல்ல!” என்பதாகும். மகஇக வின் நிலைப்பாட்டை நேரடியாக தலைப்பில் விமர்சிக்கிற அவசியம் அசோகனுக்கு ஏன் வந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இத்துணைக்கும் கட்டுரையின் சாரம் புத்தக அறிமுகத்தைப் பற்றியது. மகஇகவை மக்களுக்கு தெரியுமா என்று சுகதேவ் கேட்கிற பொழுது அசோகன் ஏன் வலிந்து கட்டி சுற்றிவளைத்து புரட்சிகர இயக்கங்களின் முழக்கங்களுக்கு ஆளும் வர்க்க சார்பாக பதிலளிக்க வேண்டும்? சொல்லப்போனால் இந்து பத்திரிக்கையை எத்துணை படிக்க போகிறார்கள்? அதுவும் இளைமை புதுமை பகுதியை? ஆனால் அசோகன் தனக்கு இட்டபணியை செவ்வனே செய்கிறார். அனைத்து ஊடக பலங்களை தன்னகத்தே வைத்திருக்கிற ஆளும் அதிகார வர்க்கம், சுகதேவின் பார்வையில் மக்களுக்கு தெரியாத மகஇகவின் அரசியல் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று தவிக்கிறது! ஆளும்வர்க்கத்தின் தவிப்பில் இருந்து கூட இங்கொருவர் தேர்தல் புறக்கணிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ள இயலும் என்பதைச் சொல்வதற்காக இந்த செய்தி!

    5. ஏப்ரல் 28,2016 அன்று தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்த இன்னொரு கட்டுரையின் தலைப்பு “உள்ளூர் பிரச்சனைகளுக்கு தேர்தல் புறக்கணிப்பு தீர்வாகுமா?-சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள்” என்று வெளிவந்திருக்கிறது. மறுகாலனியாக்கத்தின் தீவிரத்தில் ஜார்னலிசம் இது போன்ற செய்திகளுக்கு இடம் அளித்தாகவேண்டியிருக்கிறது என்ற அளவிற்கு மட்டுமே இத்தலைப்பின் பொருளை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இத்தகைய புரிதல் ம.லெ.இயக்கங்களின் தேர்தல் புறக்கணிப்பு, புதிய ஜனநாயக புரட்சி குறித்த வீச்சான பிரச்சாரம் மக்களிடையே வலுவான அளவிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்கிற அம்சத்தைத்தான் உணர்த்துகிறதேயன்றி வேறு எப்படி படித்தாலும் தேர்தலில் ஈடுபடச் சொல்வதாக களநிலைமைகள் இல்லை! வேறுவிதத்தில் சொல்வதென்றால் மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்கள் எடுத்துக்காட்டுகிற கட்டமைப்பு நெருக்கடியை இத்தகைய செய்திகள் தன்பங்கிற்கு வெளிச்சம் போட்டு அறிவிக்கின்றன!

    6. மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு, ஆற்றுமணல் கொள்ளை, தனியார் பள்ளி கொள்ளைக்கு எதிராக மக்கள் தங்களுக்கான அமைப்பை தாங்களே எப்படி நிறுவிக்கொள்வது என நடைமுறையில் விளக்கி காட்டியிருக்கிறது என்பது எனது அவதானிப்பு. ஆனால் சுகதேவ் அவர்கள் இப்படிப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு தேர்தலில் பங்கெடுக்க வேண்டும்; அதன் மூலமாக தேர்தல் புறக்கணிப்பை சாதிக்க வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். சுகதேவ்வின் இந்தக் கருத்து எதற்காக என்று பிடிபடவில்லை? தேர்தல் பங்கேற்பின் மூலமாக மக்கள் தங்களுக்கான அமைப்பை எப்படி தாங்களே நிறுவிக்கொள்வது என்ற ஒரு நிலை இருந்தால் கட்டமைப்பு நெருக்கடி என்பது இங்கு இல்லை என்றாகிறது இல்லையா? சுகதேவ் அவர்களின் கருத்துகள் அரசு கட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது, திவாலாகிவிட்டது, எதிர்நிலையாகிவிட்டது நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது என்பதை மூடிமறைப்பதாகவே இருக்கிறது என்று மதிப்பிடுகிறேன்.

    • பின்குறிப்பு: எனது முதல் கருத்தில் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் என்ற தொனியில் ஒப்பிட்டு இருக்கிறேன். இது ஆளும்வர்க்க பார்வையாகும். சுகதேவ் அவர்கள் முன்வைக்கும் மாவோயிச தன்மை என்னவென்று கேட்டு தெளிவுபெறாமல், முன்முடிவுடன் அணுகவேண்டியதாயிற்று. மன்னிக்கவும். இங்கு நான் வலியுறுத்த விரும்பியது, புரட்சிகர இயக்கங்கள் முன் வைக்கும் தேர்தல் புறக்கணிப்பு மாவோயிச தன்மை கொண்டது என்றால் மக்கள் முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்பு எத்தகையது? என்பதாகும்.

Leave a Reply to Sukdev பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க