Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைசாராய ஜனநாயகம் !

சாராய ஜனநாயகம் !

-

சாராயத்துக்காகவே
ஒரு ஆட்சி நடக்குது
மக்கள் எதிர்த்துக் கேட்டால்
மண்டையைப் பிளக்குது

இது சாராய ஆட்சி
காவலுக்கு நிற்கும்
போலீசே சாட்சி!

இது சாராய ஜனநாயகம்
இதில் கிடைக்காது நியாயம்!

எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது
இந்த டாஸ்மாக்,
எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக்
எங்கள் ஊரையே சீரழித்து விட்டது
இந்த டாஸ்மாக்
நாங்கள் போராடாமல்
யார் போராடுவது?

குடியால்
குடும்பத்தையே தெருவில் நிறுத்தியது
குற்றமில்லையாம்,
பாதிக்கப்பட்டவர்கள்
குடும்பமாக தெருவுக்கு வந்து
போராடுவதுதான் குற்றமாம்!

மணிக்கணக்கில்
ரோட்டை அடைத்து ஓட்டு வேட்டை
எங்கே உன் தடியடி?

ஊரே சிரிப்பாய் சிரிக்குது
ஒவ்வொரு பினாமி பெயரிலும்
ஊழல் பணம் பல கோடி…
எங்கே உன் கொக்கிப்பிடி?

கொள்ளையர்க்கு பாதுகாப்பு
கொள்கையர்க்கு கைகால் முறிப்பு…

போஸ்டரை மட்டுமே
கிழித்துக் கொண்டிருந்த போலீசு
புடவையையும் கிழிப்பதுதான்
சட்டம் ஒழுங்கின் சிறப்பு!

சாராயத்தை
நிறுத்தச் சொன்னதற்கேன்
இத்தனை ஆத்திரம்
சாராயம் இல்லாமல்
இயங்காதோ அரசு எந்திரம்?
டாஸ்மாக்கின் ஒவ்வொரு துளியிலும்
குடிகெடுக்கும் வெறித்தனம்
மக்களின் குரலை மதிக்காத
இந்தத் தேர்தல் வெறும் சதித்தனம்!

மதுவிலக்கு படிப்படியாகவாம்
மதுவை விலக்கக் கோருபவர்களை
ஒடுக்குவது உடனடியாகவாம்!

பெண்களின் முடியை பிடித்து இழுத்து
பிள்ளைகள் கன்னத்தை கிழித்து
ஆடைகளை அவிழ்த்து
அடித்து பூட்ஸ் காலால் மிதித்து
கைது செய்து கை கால் முறித்து
குழந்தைகள் அழுகுரல் ரசித்து…
வேடிக்கை பார்க்கும் அரசமைப்பிற்கு
இன்னும் வேண்டுமா ஓட்டு?
டாஸ்மாக்கோடு இதற்கும் சேர்த்து
போடுவோம் பூட்டு!

– துரை.சண்முகம்,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க