privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

-

1992-ம் ஆண்டில் கொலம்பஸ் கண்டுபிடிப்பு 500-வது ஆண்டுவிழா

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல; நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். கொலம்பஸ் கண்டுபிடிப்பின் 500-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட முக்கியமான புதிய கலாச்சாரம் கட்டுரை .

500 வது கொலம்பஸ் டே - 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்
500 வது கொலம்பஸ் டே – 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்
நன்றி: Getty Images

’அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று கூறினால் வாசகர்கள் அதிர்ச்சியடையக்கூடும் அல்லது சுப்பிரமணியசாமி வெளியிடும் பரபரப்பு அறிக்ககை’யுடன் ஒப்பிட்டு ஒதுக்கிவிடவும் கூடும். புதிதாக யோசனை சொல்பவர்களை “இவரு பெரிய கொலம்பஸ் – கண்டு பிடிச்சிட்டாரு” என்று கேலி செய்ததை இன்றோடு நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. (கொலம்பஸ் ஆக்கிரமிப்பின் வரலாறு – பார்க்க பெட்டிச் செய்தி)

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், யுவான் சுவாங், வாஸ்கோடகாமா, ஆரியர்கள் ஆகிய பலரும் தனித்தனியே இந்தியாவைக் கண்டுபிடித்ததாக ஒப்புக் கொள்ளவேண்டும். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்தார். இந்தியாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டத்துடன் அவர் பயணம் செய்தார். கொலம்பஸும் இந்தியாவுக்கு கடல்வழி தேடிப் புறப்பட்டவன்தான். அமெரிக்கக் கண்டத்தையே அவன் இந்தியாவாக நினைத்தான், பெயரிட்டான். துதிக்கையைத் தடவிப் பார்த்து விட்டு ”யானை துண் போல இருக்கிறது” என்று குருடன் சொன்னால் அது நகைப்புக் குரியது. அந்தக் குருடன் வெள்ளைத் தோல் ஐரோப்பியனாக இருந்த காரணத்தால், துதிக்கைக்கு யானை என்று பெயர் வைத்ததை உலகமே ’ஏற்றுக் கொண்டது’. கொலம்பஸ் கரையொதுங்கிய இடத்துக்கு ’மேற்கு இந்தியத் தீவுகள்’ என்று பெயரும் சூட்டப்பட்டது.

கிறிஸ்டோபர் கொலம்பஸ்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்

சரி, அமெரிக்கா கண்டம் என்று ஒன்று பூமியில் இருப்பதையே முதன்முதலில் கொலம்பஸ்தான் கண்டுபிடித்தாரா? அதுவும் இல்லை. நார்வே, கிரீன்லாந்து போன்ற இடங்களிலிருந்து 10-ம் நூற்றாண்டிலேயே சென்ற மாலுமிகள் வட அமெரிக்கா சென்று அங்கே குடியேறியுமிருக்கிறார்கள். 1440-இல் ரைன்லாந்து பகுதியில் புழக்கத்திலிருந்த உலக வரைபடத்திலும் அமெரிக்கா இடம் பெற்றிருக்கிறது. இது பல ஐரோப்பியர்களுக்கும் தெரிந்திருக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததோ 1492-இல்தான். மேற்கூறிய விவரங்கள் சிதம்பர ரகசியங்களல்ல, ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள்தான். அப்படியிருக்க கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று உலகம் முழுவதும் வரலாற்றுப் பாடம் போதிக்கப்படுவது ஏன்?

அமெரிக்கா யாருடைய நாடு? கொலம்பஸ் கரையிறங்கும்போது அங்கு வெறும் காடும் மலையும்தான் இருந்ததா. மனிதர்களும் இருந்தார்களா? இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இருந்தார்கள், ”வாஸ்கோடகாமாவின் புண்ணியத்தில் தான் இந்தியாவை அடிமைப்படுத்தினோம்” என்று வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் இறங்கிய ஆண்டை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டாக பிரிட்டிஷார் கொண்டாடியிருந்தால் நாம் சகித்துக் கொள்ள முடியுமா? நமக்கு வாஸ்கோடகாமாவின் வரவு, ஆதிக்கத்தின் வரவு, அடக்குமுறையின் துவக்கம். அமெரிக்கப் பழங்குடியினரைப் பொருத்தவரை கொலம்பஸும் அவ்வாறே. போர்த்துகீசியர்களைவிடப் பன்மடங்கு கொடுரமான அடக்குமுறையை இனக் கொலையை முன்நின்று நடத்தியவன் கொலம்பஸ். நிறவெறியை, பண்டங்கள் போல அடிமைகள் விற்கப்படுவதை, இனப் படுகொலையை, கொள்ளையை முன்நின்று நடத்திய மண் வெறியும், பொன் வெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட ஒரு மாலுமிதான் கொலம்பஸ்.

இந்த உண்மைகளை நிறுவுவதுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் – அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொலம்பஸின் கண்டுபிடிப்பிற்கு 500-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட முனையாமல் இருந்தால்! 15-ஆம் நூற்றாண்டின் கொலம்பஸை இருபதாம் நூற்றாண்டின் கொலம்பஸ்கள் உயிர்ப்பிக்கும்போது நாம் வாளாயிருக்க முடியாது.

ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை
ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை

”1492: கொலம்பஸ் அமெரிக்கா-வைக் கண்டுபிடித்தார். 1992: அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கிறது!” அமெரிக்க அரசு கொண்டாடவிருக்கும் ஐநூறாவது ஆண்டு விழாவின் முழக்கம் இது. ”கொலம்பஸின் வீரத்தைக் கவுரவிக்கும் வகையில் நமது கொண்டாட்டங்கள் அமையவேண்டும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் புஷ். கொண்டாட்டச் செலவுகளுக்கு முதல் தவணையாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து மூன்று கப்பல்களில் புறப்பட்டு வந்து அமெரிக்காவில் கரையேறிய கொலம்பஸின் ‘சாகசச் செயல்’ மீண்டும் நிகழ்த்திக் காட்டப்பட உள்ளது. ஸ்பெயினில் உள்ள கொலம்பஸின் சிலைக்கும் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலைக்கும் திருமணமும் செய்து பார்க்கப் போகிறார்கள். இன்னும் பல வடிவங்களில் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.

பிற வடிவங்களைக் காட்டிலும் ஒரளவு பொருத்தமானது இந்தத் திருமணம் தான். அமெரிக்க ஜனநாயகப் புரட்சியின் சின்னம் சுதந்திர தேவியின் சிலை; ஆக்கிரமிப்பு நிறவெறி, பகற்கொள்ளை, இனப்படுகொலை, பொருள் வெறி, நம்பிக்கை மோசடி – ஆகியவற்றின் சின்னம் கொலம்பஸ். அமெரிக்காவின் இரட்டை வேடத்தை சூசகமாகத் தெரிவிக்கவல்லது இந்தத் திருமணம்தான். சுதந்திர தேவியின் சிலையை அகற்றி அங்கே கொலம்பஸின் சிலையை நிறுவுவது மேலும் பொருத்தமாயிருக்கும்.

’அமெரிக்கா கொலம்பஸைக் கண்டு பிடிக்கிறது’ 250 கோடி ரூபாய் செலவு செய்து! விரயம்! ராட்னி கிங் எனும் கறுப்பினத் தொழிலாளியின் மண்டையைப் பிளந்த வெள்ளை காவலர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்த வெள்ளை நீதிபதிகளில் அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கவில்லையா? கரீபியப் பழங்குடி மக்களை நரவேட்டையாடிய தனது வெள்ளை மாலுமிகளுக்கு கொலம்பஸ் வழங்கியிருக்கக் கூடிய தீர்ப்புதானே அது!

13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது
13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது

கொலம்பஸின் ’வரம்புமீறிய’ நர வேட்டையால் கவலை கொண்ட ஸ்பெயின் மன்னன் பெர்டினாண்டைப் போல புஷ் பதறுகிறார்: “நமது முகத்தையே விகாரமாகத் திரித்துக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல லாஸ் ஏஞ்செல்ஸ் கலவரததால் கவலையுற்றதாக” கூறுகிறார். கண்ணாடியில் பிரசன்னமானது அவரது கொள்ளுப்பாட்டன் கொலம்பஸ் தான் என்பதை யார் அவருக்குப் புரிய வைப்பது? கறுப்பின மக்கள்தான் – புரிய வைக்க வேண்டும்.

“இந்த நாட்டை வெறுக்கிறோம். இதன் கொடியை வெறுக்கிறோம். இந்தத் தீர்ப்பை மன்னிக்கும் எல்லா வெள்ளையர்களையும் வெறுக்கிறோம்’ என்கிறார் நியூ யார்க் கறுப்பின சேரி நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் பெளவெல். மகிழ்ச்சியின் 500-வது ஆண்டு விழாவை, வெறுப்பின் 500-வது ஆண்டு விழா முந்திக் கொண்டு விட்டது. லாஸ் ஏஞ்செல்ஸில் பற்றியெரியும் தீயின் வெளிச்சத்தில் கொலம்பஸின் குற்றங்கள் விகாரமாகத் தெரிகின்றன.

இன்றைய அமெரிக்காவின் கறுப்பின இளைஞர்களில் நான்கில் ஒருவர் சிறையில் இருக்கிறார். வேறு விதமாகச் சொல்வதென்றால் கல்லூரியில் படிக்கும் கறுப்பின இளைஞர்களைவிட சிறையில் இருப்பவர்களே அதிகம். தமது சொந்த மண்ணான ஆப்பிரிக்காவிலிருந்து அவர்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து சீரழித்தது யார்? கறுப்பன் என்றாலே அடிமை என்ற நிலையை உருவாக்கியது யார்?

கொலம்பஸ்
தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான்

நிறவெறியின் தந்தை! கொலம்பஸ். ஆம் அமெரிக்க அடிமை வர்த்தகத்தின் தந்தை கொலம்பஸ்: வெள்ளையர் அல்லாதவர்களை மட்டுமே அடிமையாக்கியதன் மூலம், அடிமை வியாபாரத்துடன் நிறவெறியையும் இணைத்தவன் கொலம்பஸ்.

கொலம்பஸிற்கு முந்தைய காலத்திலும் அடிமை வர்த்தகம் இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து போர்த்துகீசியர்களால் கொண்டுவரப்பட்ட கறுப்பின அடிமைகள் வீட்டு வேலைக்காரர்களாக கணக்கர்களாக வர்த்தக முகவர்களாகக்கூட பணியாற்றியிருக்கிறார்கள். 1440 இல் போர்த்துகலில் ஆப்பிரிக்க அடிமைகள் ஏலம் விடப் பட்டபோது அவர்களை குடும்பங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்ததை சாதாரண போர்த்துகீசிய குடிமக்களே எதிர்த்திருக்கிறார்கள். காரணம் நிறம் அல்லது இனம் காரணமாக இயற்கையிலேயே தங்களைவிடத் தாழ்ந்த மனிதர்களாக அடிமைகளை அவர்கள் கருதவில்லை.

ஆனால் அடுத்த 60 ஆண்டுகளில் கி.பி. 1500 இல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மத்திய அமெரிக்கத் தீவுகளின் பழங்குடி மக்களை இரண்டு வகையாகப் பிரித்தான் கொலம்பஸ். ”அரவாக் இனத்தவர்கள் ஆயுதமேந்த லாயக்கற்றவர்கள், ஆனால் சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் – எனவே அவர்களை வேலைக்காரர்களாகப் பயன்படுத்தலாம்; கரீபிய இனப் பழங்குடிகள் மூர்க்கமா னவர்கள் – எனவே அவர்களை அடிமைச் சந்தையில் விற்றுவிடலாம்” என்று ஸ்பெயின் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.

இனப்படுகொலை
நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர்

தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான் ஹெய்தி மக்களைப் பார்த்து ”உலகத்திலேயே இவர்களைப் போல இனிமையானவர்கள் கிடையாது” என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே ”இவர்களை நல்ல வேலையாட்களாகப் பயன்படுத்தலாம்” என்று சிபாரிசு செய்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்கப் பழங்குடிகளைப் பிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்ததுடன் மற்றவர்களை சொந்த மண்ணிலேயே அடிமையாக்கினான். நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர். 1622 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த பெளஹாட்டன் பழங்குடி மக்களை ”மிருகங்கள், மிருகங்களைவிட மிருகத்தனமான மிருகங்கள்” என்று சாடினான் ஆங்கிலேய காப்டன் ஸ்மித்.

இருபதாம் நூற்றாண்டுக்கு வருவோம். ‘ஆரிய இனம் இயற்கையிலேயே உயர்ந்தது’ என்றான் ஹிட்லர், ‘ஆங்கிலேயர்கள் இயற்கையிலேயே தனிச் சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவர்கள்’ என்றார் மார்கரெட் தாட்சர். ’அமெரிக்க மாண்பு, அமெரிக்க சிந்தனை’ என்று பலவாறாகப் பேசுகிறார் புஷ். வெள்ளையர்களைத் தவிர பிறர் இயற்கையிலேயே தாழ்ந்தவர்கள் என்ற கொலம்பஸின் கருத்து எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கிறது!

அடிமை விற்பனை – கொலம்பஸின் கண்டுபிடிப்பு

Landing_of_Columbus_(2)
அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது.

நிறவெறி மட்டுமல்ல: அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ் அவனுக்கு முந்தைய காலத்தில் ஒரு அடிமையை விலைகொடுத்து வாங்கிய ஆண்டை விதிவிலக்கான சமயங்கள் தவிர மற்றெப்போதும் ஆடுகளைப்போல விற்றதில்லை. ஆதிக்கமும் சுரண்டலும் இருந்த போதும் அடிமைகள் தங்கள் ஆண்டையுடன் பல பரம்பரைகளுக்குக்கூட பிணைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நோயுற்றவர்கள், குறிப்பிட்ட திறமையில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை அடிமாடுகளைப் போல விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ். அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சி கொலம்பஸின் இந்தக் கண்டுபிடிப்பை ‘அதன் எல்லைக்கே கொண்டு சென்றது. அமெரிக்காவின் புகையிலை, ரப்பர். காப்பித் தோட்டங்களுக்காக ஆப்பிரிக்க மக்கள் விரட்டி, வேட்டையாடி, கூண்டிலடைத்து ஏலமிடப்பட்டனர்.

Slavery-sale
அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ்

அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது. Hire and Fire (வேண்டுமென்றால் வைத்துக்கொள். வேண்டாமென்றால் துரத்திவிடு) என்ற மூன்றே சொற்களுக்குள் தனது தொழிலாளர் நல சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்துகிறது. நம்மையும் அமல்படுத்த நிர்ப்பந்திக்கிறது. இளமையை முதலாளிக்குத் தந்துவிட்டு முதுமையில் விரட்டப்பட்டு நிர்க்கதியாய்த் தெருவில் நிற்கும் அமெரிக்க அநாதைகளை உருவாக்கிய பிதாமகன் கொல்ம்பஸ்.

“பொறுமை, வீரம் போன்ற நற்குணங்களை கொலம்பஸிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்கிறது ஒரு அமெரிக்க பாடநூல்: “கரீபிய மக்களிடம் கொலம்பஸ் பெரும் ஆர்வம் காட்டினார்: இருந்த போதும் கொலம்பஸ் அவர்கள் மத்தியில் நிம்மதியாக வாழமுடியவில்லை” என்கிறது இன்னொரு அமெரிக்கப் பாட நூல்.

இதைப் படிக்கின்ற யாரும் கொலம்பஸை புத்தனாகவும், அமெரிக்கப் பழங்குடிகளை காட்டுமிராண்டிகளாகவும் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். பழங்குடிகளிடம் கொலம்பஸ் காட்டிய ”ஆர்வத்திற்கு” சான்று?

கொலைகாரன் கொலம்பஸ்

தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான். எப்படி என்பதை எழுதுகிறார் கொலம்பஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிர்க் பாட்ரிக் சேல்:

தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.
தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.

“இந்தியர்களின் (பழங்குடிகளின்) கைகால்களையும் குடலையும் நாய்களைக் கொண்டு குதற வைத்தனர்; தப்பியோடிய இந்தியர்களை புதர்களில் தள்ளி ஈட்டிகளாலும் வாள்களாலும் கிடிக்கிப் பிடிபோட்டுக் கொன்றனர். தப்பி ஓடியவர்களையும் தேடிப் பிடித்துக் கொன்று ‘கடவுள் அருளால்’ விரைவில் முழுவெற்றி அடைந்தனர்

விரட்டிப் பிடித்த பழங்குடிப் பெண்களைத் தன் மாலுமிகளுக்கு பரிசாகத் தந்தான் கொலம்பஸ். அந்தப் பெண்களைத் தாங்கள் பலாத்காரம் செய்ய முனைந்த போது அவர்கள் காட்டிய எதிர்ப்பை ஆத்திரத்துடன் தனது குறிப்புகளில் எழுதுகிறான் மாலுமி. காமவெறியால் கொலம்பஸின் மாலுமிகளுக்குள்ளேயே தோன்றிய கலவரங்களை எழுதுகிறான் இன்னொரு மாலுமி.

புஷ்ஷின் அமெரிக்கா தனது குழந்தைகளுக்குக் கற்றுத்தர விரும்பும் கொலம்பஸின் வீரத்திற்கும் பொறுமைக்கும் இவை சில சான்றுகள். கொலம்பஸ் காட்டிய பாதையை அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவருமே தவறாமல் பின்பற்றினார்கள்.

25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வளர்ந்த அந்த மக்களின் மண்ணை அவர்களது ரத்தத்தைக் கொண்டே கழுவிவிட்டு, அமெரிக்கா எனப் பெயர் சூட்டி குடியேறினார்கள்.

குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்
குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்

கொலம்பஸ் முதன் முதலில் ஆக்கிரமித்த ஹெய்தி மற்றும் டொமினிகன் தீவுகளின் அன்றைய – 1492 இல் மக்கள் தொகை 30 லட்சம். அடுத்த 40 ஆண்டுகளில் அதாவது 1532 இல் அங்கே எஞ்சியிருந்தவர்கள் வெறும் 300 பேர். கொலை செய்யப்பட்டவர்கள் வெறும் பழங்குடி மக்கள் அல்ல; கொலம்பஸின் வார்த்தைகளில் சொன்னால் ”உலகத்திலேயே மிக இனிமையான மக்கள்!”

அமெரிக்கா என இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடிகள் 2 கோடி. வன விலங்குகளைப் போல மாதிரிக்காக இன்று விட்டு வைக்கப்பட்டி ருப்பவர்கள் 16 லட்சம்.

மெக்சிகோவில் ஐரோப்பியர்களின் நாகரீகக் காலடிகள் பதியும்போது அங்கிருந்த மக்கள் 2 1/2 கோடி இன்று எஞ்சியிருப்பவர்களோ 20 லட்சம். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த இன ஒழிப்பை சாதிக்க நேரடியான கொலைகளைக் காட்டிலும் வக்கிரமான முறைகளையெல்லாம் கையாண்டார்கள் கொலம்பஸின் ஐரோப்பிய வாரிசுகள்.

அழிந்தது போக 4000 பேர் மட்டுமே எஞ்சியிருந்த ‘சேயன்’ எனும் பழங்குடி மக்களை ஆடுமாடுகளைப் போலக் காயடித்தார்கள். வர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து கட்டாயமாகப் பறித்துக் கொண்டு சென்றது வர்ஜினியா புகையிலைக் கம்பெனி.

அம்மைநோய்
நிலங்களை பறித்துக்கொண்டு வெள்ளையர்கள் பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை.

போர்வையைக் கொடுத்து பழங்குடிகளின் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டார்கள். அந்த அப்பாவி மக்கள் அதைப் பயன் படுத்திய போது அப்போர்வையே அவர்களது இறுதிப் பயணத்திற்கான கோடித்துணியானது. ஆம் வெள்ளையர்கள், பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை. வெள்ளையர்களின் நயவஞ்சகம் குறித்து இன்று மனம் வெதும்பிக் கூறுகிறார் ஒரு செவ்விந்தியத் தலைவர் ”பல்வேறு செவ்விந்திய-இனக்குழுக்களுடன் மொத்தம் 371 ஒப்பந்தங்கள் போட்டார்கள் வெள்ளையர்கள் எங்களால் நினைவு வைத்துக் கொள்ளக்கூட முடியாத அளவு பல உறுதி மொழிகளைக் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றை மட்டும்தான் நிறைவேற்றினார்கள் – எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். எடுத்துக் கொண்டார்கள்”

மனித நாகரிகத்தின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்க செங்கிஸ்கானையும், இடி அமீனையும் உதாரணம் காட்டுகிறார்கள் ஐரோப்பிய அமெரிக்க வரலாற்றாசிரியர்கள். இந்த வக்கிரமான இன ஒழிப்பு நடவடிக்கையை ஒப்பிடும்போது அவர்கள் எம்மாத்திரம்? இந்த குரூரத்தை நடத்தி முடிக்க கொலம்பஸின் வாரிசுகளுக்கு எப்படி மனம் வந்தது? இதை நிறைவேற்றுவதற்கான ’தார்மீக பலத்தை’ எப்படிப் பெற்றார்கள்? ‘தார்மீக நியாயத்தை’ எப்படிக் கற்பித்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடை அவர்கள் நடத்தி முடித்த படுகொலையை விட பயங்கரமானது.

வெள்ளையனை எதிர்ப்போர் மனிதர்களல்ல!

ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ வழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்
ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ பழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்

ஒரு நாகரிகம் அல்லது இனம் இன்னொன்றுடன் மோதும்போது போர்களும் கொலைகளும் வரலாற்றில் தவிர்க்கவியலாதவைதான். அதிலும் முன்னேறிய நாகரீகத்தின்மீது பின்தங்கிய நாகரீகம் படையெடுக்கும்போது அழிவு அதிகமாக இருக்கும். சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தின் மீது நாடோடி ஆரியர்கள் நடத்திய தாக்குதலையும், செங்கிஸ்கானின் போர்களையும் இன்ன பலவற்றையும் இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் பின்தங்கிய பழங்குடி மக்கள்மீது முன்னேறிய வெள்ளை நாகரிகம் தொடுத்த தாக்குதலுக்கும் இனக் கொலைக்கும் கிறித்துவப் பாதிரிகளும், வெள்ளை ஆதிக்கவாத வரலாற்றாசிரியர்களும் கற்பிக்கும் நியாயத்தின் சாரம் இது தான்.

முறியடிக்க வேண்டிய எதிரிகளை பழங்குடி மக்களை – கொலம்பஸும் அவர்களது வாரிசுகளும் உயிருள்ள மனிதர்களாகக் கருதவில்லை; அகற்றப்பட வேண்டிய உயிரற்ற சடப் பொருளாகவே கருதினார்கள்; சித்தரித்தார்கள்.

“அவர்களிடம் பண்பாடு இல்லை. எழுதத் தெரியவில்லை. வரலாற்றை எழுதி வைப்பதில்லை. எழுதப்பட்ட சட்டமில்லை, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். நம்மைக் கண்டால் பெண்களைப் போல(!) ஒடி ஒளிகிறார்கள்” – பழங்குடிகளை அடிமையாக்கி விற்க 1550 இல் ஸ்பானிய அரசுப் பிரதிநிதி கூறிய நியாயம் இது. தமது கொலைகளும், அடிமையாக்குவதும் சட்டப்படி செல்லும் என்பதற்கு 16-ம் நூற்றாண்டின் ஸ்பானிய நீதிபதி கூறிய நியாயம் ‘அவர்கள் பண்பாடற்ற காட்டுமிராண்டிகள்’ என்பதுதான். ‘அவர்கள் மாற வேண்டும் இல்லையேல் அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்’ என்று 1930 இல் பேசினான் அமெரிக்க செனட்டர் பேண்டல்டன். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த ஐரிஷ் இன மக்களை (அவர்களும் கிறித்துவர்களாக இருந்தபோதும்) கடவுளுக்கு பலியிடுவதில் தவறில்லை எனக்கூறிய கத்தோலிக்கப் பாதிரிகள் அமெரிக்கப் பழங்குடிகளைக் கொலை செய்ய தேவனின் அங்கீகாரத்தை வழங்கியதில் வியப்பில்லை.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்
அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தான்

கொலம்பஸின் ஆக்கிரமிப்பை மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள் கரீபிய மக்கள். கரீப் என்றால் அவர்களது மொழியில் வீரம் செறிந்த என்று பொருள் அவர்களை நரவேட்டையாடவும் அடிமையாக்கவும் கொலம்பஸ் கற்பித்த நியாயம் நயவஞ்சகமானது. கரீப் கனிப் கானியல் என்று அந்தச் சொல்லின் மூலத்திற்கு விளக்கம் தந்தான் கொலம்பஸ். கணிபல் என்றால் நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள் என்று பொருள். உண்மையில் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இல்லாதபோதும் கொலம்பஸின் இந்த ஆய்வு மட்டுமே அவர்களை கொல்லப் போதுமானதாக இருந்தது.

தொகுத்துக் கூறினால் வெள்ளை நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், எதிர்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல; எனவே அவர்களைக் கொல்வதில் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் தடைக்கற்கள். ஆம் வெறும் தடைக்கற்கள் மட்டுமே.

இதே கருத்தை அமெரிக்க குழந்தைகளுக்கு வெகு எளிமையாக, பூடகமாக சொல்லித்தருகிறது அவர்களது பாடநூல்:

“அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்”.

அமெரிக்க ஆதிக்கத்தின் சின்னம் கொலம்பஸ்!

போராட்டம்
அமெரிக்காவில் கொலம்பஸ் டே – வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்

வரலாற்று ஆதாரங்களை எடுத்து வைத்து கொலம்பஸும், வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களும் பழங்குடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு விளக்கம் கேட்டால் இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள். ”கொடுமை தான். ஆனால் இது தவிர்க்க முடியாதது”. ஈராக்கிய மக்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தபோதும் இவர்கள் அளித்த விளக்கம் இதுதான்.

ஏன் தவிர்க்க முடியாது? ஏனென்றால் அமெரிக்கா சொல்வதுதான் ஜனநாயகம், வெள்ளையர்கள் கூறுவதுதான் பண்பாடு; ஐரோப்பியர்கள் கூறுவதுதான் அரசியல் நியாயம். இவற்றை மறுப்பவர்களோ, எதிர்ப்பவர்களோ தடுப்பவர்களோ கொடுமைக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.

ஏனென்றால் ”தங்கம்தான் செல்வம். அதை வைத்திருப்பவன்தான் உலகத்தில் தான் நினைத்ததைச் சாதிக்கிறான்; ஆன்மாக்களை சொர்க்கத்துக்குக்கூட அனுப்புகிறான். புனித ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே தூதனாக்கியிருக்கிறார். அதைக் கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழிகாட்டினார்” – கொலம்பஸ்.

2014ல் கொலம்பஸ் டே - வை கண்டித்து நடைபெற்ற போராட்டம்
2014ல் கொலம்பஸ் டே – வில், ஏன் நாங்கள் ஒரு பாலியல் பலாத்காரம் செய்தவன், கொலைக்காரன் மேலும் திருடனை கொண்டாட வேண்டும் என்ற பதாகையோடு நடைபெற்ற போராட்டம்

“புதிய உலக ஒழுங்கை புஷ் இறைவனின் பெயரால் அறிவிக்கவில்லையே தவிர அவர் கொலம்பஸ் பேசியதையே தான் பேசுகிறார். 500 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த ஆணவமும், திமிரும், பொருள் வெறியும் எள்ளளவும் குறையவில்லையே!

கரீபியர்கள், அரவாக்குகள், செவ்விந்தியர்கள், பெளஹாட்டன்கள் ஆகியோர் அமெரிக்கா கண்டத்தை – தங்கள் மண்ணை – இழந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரலாற்றை இழக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வரலாற்றை இழந்தவனுக்கு வருங்காலமுமில்லை. கொலம்பஸ் விழாவுக்கு எதிரான சிறு பொறியாக தங்கள் போராட்டத்தை அவர்கள் துவங்கியிருக்கிறார்கள். பாம்புப் பிடாரர்களின் நாட்டைச் சேர்ந்த நாமும் அவர்களுடன் இணைந்து கொள்வோம். சீக்கிரம்! லாஸ் ஏஞ்செல்ஸ் மட்டும்தான் எரிந்திருக்கிறது; அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு; கொலம்பஸ் மிகப் பெரிய எதிரி.

– சூரியன்
மே, ஜூன் 1992, புதிய கலாச்சாரம்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

  1. என்சைக்ளோபேடியா பிரித்தானிகா
  2. 2 என்சைக்ளோபேடியா அமெரிக்கானா
  3. கிராலியர்ஸ் என்சைக்ளோபேடியா
  4. ரேஸ் அண்டு கிளாஸ் – அமெரிக்க இதழ்.

 

கொலம்பஸ்: ஆக்கிரமிப்பின் வரலாறு

இந்தியா உலக நாடுகளைக் கவர்ந்த மோகினி, பொன் விளையும் பூமி. பல ஆக்கிரமிப்புகளுக்கும், வணிகத் தொடர்புக்கும் இதுவே காரணம், ஐரோப்பியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கி.பி. 1453-இல் துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிலைக் கைப்பற்றியதால், ஐரோப்பிய நாடுகளின் இந்திய வர்த்தகத்திற்கான தரைவழி துண்டிக்கப்பட்டது. இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. ஸ்பெயினிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்த கொலம்பஸ் 1492-இல் அமெரிக்காவில் இறங்கினார். போர்த்துகலில் இருந்து கிளம்பிய வாஸ் கோடகாமா கிழக்கு முகமாக பயணம் செய்து நன்னம்பிக்கை முனையைச் சுற்றி கோழிக்கோட்டில் வந்து இறங்கினார்.

இனி கொலம்பஸின் வரலாறு சுருக்கமாக: ஜெனோவா நாட்டில், நெசவாளி ஒருவரின் மகனாகப் பிறந்த கொலம்பஸ் தனது இருபது வயதிலிருந்து இரண்டாண்டுகள் கடற் கொள்ளைக்காரனாக இருந்தான். பின்னர் போர்த்துகீசிய கப்பல் படையில் சேர்ந்து ஜெனோவாவிற்கு எதிரான யுத்தத்திலும் ஈடுபட்டான். பல்வேறு வர்த்தகப் பயணங்களில் ஈடுபட்ட கொலம்பஸுக்கு மேற்கு முகமாகப் பயணம் செய்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்கும் ஆசை ஏற்பட்டது. சரியாகச் சொன்னால் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பது என்ற தெளிவான லட்சியமும் கொலம்பஸ்க்கு கிடையாது. பொன் விளையும் பூமி ஏதாவது ஒன்றை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறிதான் எஞ்சியிருந்தது. மேற்கு முகமாகச் சென்று இந்தியாவுக்கு குறுக்கு வழி கண்டுபிடிக்கும் தனது திட்டத்திற்கு போர்த்துகல் மன்னன் நிதியதவி செய்ய மறுக்கவே ஸ்பெயின் மன்னன் பெர்டினான்டையும் இசபெல்லாவையும் அணுகினான். ஸ்பெயினிலிருந்து மேற்கே 3900 மைல் துரத்தில் இந்தியா இருப்பதாக (உண்மையில் விண்வெளித் துரமே 10,600 மைல்கள்) கொலம்பஸ் முன் வைத்த கண்டுபிடிப்பை ஸ்பெயின் மன்னன் அமைத்த நிபுணர் குழு 5 ஆண்டுகள் ஆய்வு செய்து இறுதியாக ஏற்றுக் கொண்டது. கொலம்பஸ் கண்டுபிடிக்கவிருக்கும் இடங்கள் ஸ்பெயினுக்கு சொந்தம் என்றும் அதற்குப் பதிலாக கொலம்பஸ்-க்குத் தர வேண்டிய சன்மானங்களும் பேரம் பேசி முடிக்கப்பட்டன. கடற்பயணத்திற்கான செலவுகளுக்கு ராணி இசபெல்லா தனது நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்ததாக ஒரு கட்டுக்கதை உண்டு, அது பொய். யூதர்களிடமிருந்தும், முஸ்லீம்களிடமிருந்தும் பிடுங்கப்பட்ட சொத்துக்கள்தான் கொலம்பஸிற்குத் தரப்பட்டது.

கொலம்பஸின் முதற்பயணம்:

கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்
கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணம்

ஆகஸ்டு, 3 1492 அன்று சந்தா மரியா, பின்டா நினா ஆகிய மூன்று சிறு கப்பல்களில் கொலம்பஸின் தலைமையில் 90 மாலுமிகள் புறப்பட்டனர். அவநம்பிக்கையும். சோர்வும் அளிக்கும் நீண்ட பயணத்துக்குப் பின் அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவில் நிலம் தென்படுவதாக ’ரோட்ரிகோ டி டிரியானா’ என்ற மாலுமி ஆனந்தக் கூச்சலிட்டான். முதலில் நிலத்தைப் பார்ப்பவர்களுக் குரிய வெகுமதியையும், பெருமையையும் பறித்துக்கொள்ள விரும்பிய கொலம்பஸ் தான் அவனுக்கு முன்னரே பார்த்துவிட்டதாகக் கூறி அவனை அடக்கிவிட்டான். இது கொலம்பஸின் ’நேர்மைக்கு’ ஒரு உதாரணம்.

கொலம்பஸ் சென்று இறங்கிய இடம் பஹமா தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த குவானா ஹனி என்ற தீவு. தீவில் இறங்கிய கொலம்பஸ் அங்கே ஸ்பானிய கொடியை நட்டு ஸ்பெயின் மன்னனின் கட்டுப்பாட்டில் அத்தீவைக் கொண்டுவருவதாக அறிவித்து அத்தீவுக்கு சான் சால்வடார் என்று பெயரும் சூட்டினான். டெய்னோ பழங்குடி இனத்தைக் சேர்ந்த அத்தீவின் விவசாயிகளின் முக்கிலும் காதிலும் தங்கத்தைப் பார்த்தவுடனே அவர்களை இந்தியர்கள் என்று நம்பினான்.

கொலம்பஸ்
”கடவுள் தங்கத்தின் பிறப்பிடத்தை எனக்குக் காட்டுவார்” என்று பிதற்றியவாறே 15 நாட்கள் அந்தத் தீவுக்கூட்டத்தில் அங்குமிங்கும் தேடி அலைந்தான்.

”கடவுள் தங்கத்தின் பிறப்பிடத்தை எனக்குக் காட்டுவார்” என்று பிதற்றியவாறே 15 நாட்கள் அந்தத் தீவுக்கூட்டத்தில் அங்குமிங்கும் தேடி அலைந்தான். தான் ஆசியா கண்டத்தின் கிழக்கு பகுதிக்கு வந்துவிட்டதாக நம்பிய கொலம்பஸ் அடுத்து ஜப்பானைத் தேடத் தொடங்கினான். அந்தப் பழங்குடி மக்கள் அவனை கியூபாவுக்கு அழைத்துச் சென்றனர். 20-ம் நூற்றாண்டில் வெள்ளையர்களுக்குத் தங்கத்தை வாரிக்கொடுக்க இருக்கும் புகையிலையை அறிமுகப்படுத்தினர். மோசடி பண்டமாற்றுக்குத் தங்கள் நகைகளையும் வாரிக்கொடுத்தனர். தங்கத்தைக் கொடுப்பதன் மூலம் தங்கள் எதிர்காலத்திற்குத் தாங்களே சவக்குழி தோண்டிக் கொள்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

பழங்குடியினரின் அன்புக்கு கைம்மாறாக அவர்களில் 7 பேரை சிறைப்பிடித்து கப்பலில் ஏற்றினான் கொலம்பஸ். மனிதர்களை தின்னும் காட்டுமிராண்டிக் கூட்டம் தான் இது என்று ஆத்திரமுற்ற பழங்குடியினர் எதிர்க்கத் தொடங்கினர். உடனே அங்கிருந்து புறப்பட்ட கொலம்பஸ் இன்று ஹெய்தி, டொமினிகன் குடியரசுகள் என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை அடைந்தான். அதன் புவியியல் அமைப்பும் வாழ்ந்த மக்களின் தோற்றமும் ஸ்பானியர்களை ஒத்திருக்கவே அதற்கு ‘இஸ்பானோலா என்று பெயரிட்டான். தன்னுடன் வந்த மாலுமிகளில் 38 பேரை அங்கே குடியமர்த்தி அவர்களுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவும். ஆயு தங்களையும் (’உள்ளுர் பழங்குடியினர்க்கு நம்மிடம் அச்சம் கலந்த அன்பு இருக்க வேண்டும்’ – கொலம்பஸ்) அளித்தான்.

christopher-columbus-queen-isabella-native-americans
கொலம்பஸ் தான் கண்டடைந்த நாட்டின் பழங்குடியினரை அடிமைகளாக்கி ஸ்பெயின் இராணி இசபெல்லாவிற்கு பரிசாக அளித்தான்

தான் கண்டுபிடித்த ’இந்தியா’வை வேறு யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகத் தூரம் பயண நேரம், பாதை ஆகியவற்றை மிகவும் ரகசியமாக வைத்துக் கொண்டான் கொலம்பஸ்.

கோலாகலகத்திற்கிடையே, தாங்கள் ”கண்டுபிடித்த இந்தியாவை” எங்கே போர்த்துகீசியர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்களோ என்று அஞ்சி அதைத் தடுக்கும் பொருட்டு போப்பை அணுகினான் ஸ்பெயின் மன்னன். ஐரோப்பிய மன்னர்களுக்கிடையே தோன்றும் முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் அன்று வாடிகனுக்கு இருந்தது. கொலம்பஸ் கண்டி பிடித்த இந்தியாவையும் இனி கண்டுபிடிக்க இருக்கின்ற இந்தியாவில் பாதியையும் ஸ்பெயினுக்கு பட்டா போட்டுக் கொடுத் தார் அன்றைய போப் நான்காவது அலெக்சாண்டர்.

கொலம்பஸின் இரண்டாவது பயணம்: போர்த்துகீசியர் குறித்த அச்சம், பொன்னையும் அடிமைகளையும் கண்டதில் தோன்றிய வெறி ஆகியவை காரணமாக கொலம்பஸின் இரண்டாவது பயணத்துக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தான் ஸ்பெயின் மன்னன். முதல் பயணத்தின் போது சிலுவையைச் சுமந்து கிறித்துவத்தைப் பரப்பச் செல்வதாக வேடமிட்ட கொலம்பஸ் இப்போது அப்பட்டமான ஆக்கிரமிப்பாளனாகப் புறப்பட்டான். சிப்பாய்கள், பெண்கள், பாதிரிகள், மருத்துவர்கள், விவசாயிகள் ஆகியோரடங்கிய 1500 பேர் கொண்ட பெரும்படை 17 கப்பல்களில் செப்.1493 இல் புறப்பட்டது.

இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான். உடனே அவர்கள் ஒருவேளை தங்கத்தை எங்காவது ஒளித்து வைத்திருக்கக்கூடும் என்று தேடத் தொடங்கினான். பயனின்றிப் போகவே அந்தத்தீவுக் கூட்டங்களிலேயே வேறொரு தீவைத் தெரிவு செய்து அதற்கு இசபெல்லா என்று பெயர் சூட்டி அனைவரையும் அங்கே குடியேற்றினான்.

இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான்.
இஸ்பானோலாவுக்குக் கொலம்பஸின் பட்டாளம் போய்ச் சேர்ந்தபோது அங்கே அவன் விட்டு வந்திருந்த 38 பேரும் உள்ளுர் மக்களால் கொல்லப்பட்டதை அறிந்தான்.

காலனியவாதிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கிய உள்ளுர் மக்களைக் கூட்டம் கூட்டமாகப் பிடித்து அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினான். உள்ளுர் மக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு இவ்வளவு தங்கம் வரியாகச் செலுத்த வேண்டும் என்று சட்டமியற்றினான் இயலாதவர்கள் பட்டினி போடப்பட்டனர். ஆயிரக்கணக்கில் பச்சைப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். மற்ற தீவுகளை ஆக்கிரமிக்க ஸ்பெயின் சிறைகளிலிருந்த கிரிமினல்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனது கொடுரமான வழிமுறைகளை எதிர்த்த ஸ்பானியர்களையும் நூற்றுக்கணக்கில் துக்கிலிட்டுக் கொல்ல கொலம்பஸ் சிறிதும் தயங்கவில்லை. தனது சகோதரன் தாமஸை அரசாங்க நிர்வாகியாக நியமித்து விட்டு இந்தியாவின் நிலப்பகுதியையும் சீனத்தையும் கண்டுபிடிக்கப் புறப்பட்டான். சுமார் 240 கிலோ மீட்டர்கள் மேற்கு நோக்கிச் சென்றுவிட்டு வந்த வழியிலேயே திரும்பி கியூபாவை வந்தடைந்தான். இது தான் இந்திய நிலப்பகுதி என்று அவன் நம்பியதுடன் மற்ற மாலுமிகளும் அவ்வாறே கூறவேண்டும் என்றும் சத்தியம் செய்யச் சொன்னான். இது இந்தியா இல்லை என்று சந்தேகம் தெரிவித்தாலோ, கியூபாவை ஒரு தீவு என்று கூறினாலோ அவர்களது நாக்கை அறுத்துவிடுவேன் என அறிவித்தான். மீண்டும் இசபெல்லாவுக்குத் திரும்பியபோது உள்ளுர் மக்களின் பெரும் எழுச்சியை ஒடுக்க வேண்டியிருந்தது. ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, 500பேரை அடிமைகளாக ஸ்பெயினுக்கு அனுப்பினான். சொந்த நாட்டினரையே மிகக் குரூரமாக நடத்தியதால் தோன்றிய அதிருப்தி மன்னன் காதுக்கு எட்டவே, மன்னனை சமாதானம் செய்ய ஸ்பெயினுக்குத் திரும்பினான்.

கொலம்பஸ் டே - வை எதிர்க்கும் அமெரிக்க பழங்குடிகள்.
கொலம்பஸ் டே – வை எதிர்க்கும் அமெரிக்க பழங்குடிகள்.

கொலம்பஸின் மூனறாவது பயணம் : மே 1498 இல் கிளம்பி தென் மேற்காகப் பயணம் செய்து தென் அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியியிலுள்ள டிரினிடாடுக்கு வந்து சேர்ந்தான். பரியா தீபகற்பத்தில் வாழும் பழங்குடிமக்களின் கழுத்தில் முத்து மாலைகளைக் கண்ட மாலுமிகள் இதுதான் இந்தியா என்று ஆர்ப்பரித்தனர்; ஒரனோகோ நதியின் முகத்துவாரத்தில் கடலில் வந்து கலக்கும் நல்ல நீரைப் பார்த்தவுடன் இந்தியாவை மறந்துவிட்டு சொர்க்கம் பற்றிய நம்பிக்கையில் மூழ்கிப்போனான். கூம்பு வடிவிலான உலகத்தின் உச்சியில் சுவர்க்கம் இருப்பதாகவும் அங்கிருந்து பாயும் நான்கு நதிகளில் ஒன்றின் முகத்து வாரத்தில் தான் இருப்பதாகவும் நம்பினான். சொர்க்கம் ஒருபுறமிருக்க கியூபா தான் இந்தியா என்ற நம்பிக்கையை கொலம்பஸ் கைவிடவில்லை.

கொலம்பஸின் நான்காவது பயணம்: புவியியல், விஞ்ஞானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு புவியியல் குறித்த பைபிளின் கூற்றுகள் அடிப்படையில் இந்தியா, மலேயா, சீனாவைக் கண்டுபிடிப்பதுடன் ஜெருசலேமையும் விடுதலை செய்யத் திட்டம் தயாரித்து, 1502 இல் புறப்பட்டான். இந்தமுறை அவன் போய்ச் சேர்ந்த இடம் ஹொண்டுராஸ், அங்கிருந்த மக்களின் உயர்ந்த பண்பாடும், அவர்களிடமிருந்த தங்கமும் கொலம்பஸை கொள்ளைக்கும் கொலைக்கும்தான் துண்டியது. ஹொண்டுராஸ் சூறையாடப்பட்டது. இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். “இங்கிருந்து பத்தே நாட்களில் கங்கையை அடைந்து விடுவேன்” என்று மன்னனுக்கு கடிதம் அனுப்பினான் கொலம்பஸ். ஆனால் பல தீவுகளில் பழங்குடிகளைக் கொலை செய்யவும் தங்கத்தை சூறையாடவும் மட்டுமே அவனால் முடிந்தது. 1504 இல் ஸ்பெயினுக்குத் திரும்பிய கொலம்பஸ் தான் கண்டுபிடித்த இந்தியத் தீவுகள் முழுவதையும் மன்னன் தனக்கே சொந்தமாக்குவான் என்று கனவு கண்டு ஏமாந்து 1506 இல் இறந்தான்.

  1. அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்? அமெரிக்கோ கிரிஸ்டோபர் என்கிறார்களே உண்மையா?அவர் யார்?

    • Discovery means, Columbus, Amerigo Vespucci etc only discovered a new sea route and made them popular. The land of American continent was discovered by Native Americans. That’s it. Time, place and name of the group can’t be given. But they are the first to “discover”.

  2. கொலம்பஸ் தான் அமெரிக்காவிற்கு கடல் வழி கண்டு பிடித்தார்.

    பூமி உருண்டை , ஐரோப்பாவிற்கு மேற்கே போனால் கிழக்கில் உள்ள இந்தியாவிற்கு சென்று சேருவோம் என்று நம்பிக்கை வைத்தார் .

    ஆழ்மாகஸ்ட் புத்தகம் மூலமாக பூமியின் சுற்றளவு அதில் இருந்த 100000 ஸ்டேடியா என்றால் இவ்வளவு மைல்கள் இருக்கும் என்று தவறாக யூகித்தார்.உயிரை பணயம் வைத்து பயணம் செய்தார் .

    தக்காளி சட்னியும், உருளை கிழங்கு மசாலும் மிளகாய் சேர்ந்து சாப்பிடும் முன்னர் கொலம்பஸின் துணிச்சலுக்கு நன்றி சொல்லுங்கள்.இந்த மூன்றும் அவருடைய துணிவாள் தான் நமக்கு கிடைத்தது

    • நிலக்கடலை கொறிக்கும் போதும் கொலம்பஸுக்கு நன்றி கூறுங்கள்

      • If that criminal had not conquered the continent, then Native Americans could have been a super power by selling these agricultural produce. Why should we thank that bastard for plants and animals native to American continent?

      • எப்படி பாஸ்….

        இராமன் நிலக்கடலை கொறிக்கவா கொலம்பஸ் அந்த பழங்குடி மக்களை படுகொலை செய்தான்….

        குழந்த பொறந்ததுக்கு சந்தோசபடலாம்….ஆனா ரேப் பண்ணி கொழந்த பொறந்துருக்குனு சொல்லி சந்தோசப்பட சொல்றீங்களே என்ன மாதிரியான டிசைன் நீங்க.

        இப்படியே இன்னும் சொல்லுங்க……வாஸ்கோடகாமா இந்தியா வரலன்னா இந்தியாவுல எல்லாரும் கோவணம் தான் கட்டிக்கிட்டு இருந்துருப்பாங்க….வாஸ்கோடகாமாவுக்கு நன்றி சொல்லுங்க….

        கொலம்பசோட வாரிசாட்டமே பேசுறீங்க……

  3. வணக்கம்! தங்களின் கட்டுரை மிகவும் வித்தியாசமான சிந்தனையாக உள்ளது ஆனால் உண்மை. வரலாற்றையே மாற்றி யோசிக்க தூண்டியுளீர்கள்….. செறிவான சிறந்த கட்டுரை. நன்றி.

  4. ம்ம் உண்மையில் என்ன பழையது புதியது, என்ன அம்மக்கள் நமது மானகெட்ட கூட்டதைபோல் அடிமைபடுதியவனுக்கே மீண்டும் மக்களை அடிமையாகுவதில்லை, இப்போதும் ஒரு ஜமைக்கரிடம் போய் கொலம்பஸ் எனும் வார்த்தையை சொல்லிபாருங்கள், கொலை வெறி வரும் அவருக்கு. தம்மை
    ஆனால் இங்கோ எட்டப்பன்களுடன் வெள்ளையன் விளையாடிய கிரிகெட்டு தங்கள் உயிராம்.

Leave a Reply to Raman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க