Saturday, May 10, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !

மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !

-

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கிறது மொட்டா சமதியாலா கிராமம். இங்கே கடந்த திங்களன்று (11-7- 2016) செத்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக ஒரு தலித் குடும்பத்தினரை கட்டி வைத்து அடித்து பின்னர் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர் இந்துமத வெறியர்கள். மேலும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெற்றிக் களிப்பு வெறியுடன் பரப்பியுள்ளனர்.

cow1காலை 10 மணியளவில் பாலு வரியா(46) மற்றும் அவரது மகன்கள் மாட்டின் தோலுரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போபோது காரில் வந்த சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் ஒன்றின் மாவட்ட தலைவரான பிரமோத்கிரி கோஸ்வமி மற்றும் அவருடன் வந்த நபர்கள் தலித் இளைஞர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளனர். பின்னர் தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரைநிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்து இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது. ஈராக்கில் ஐ.எஸ் கும்பல் செய்யும் கழுத்தறுப்பு கொலைகளுக்கு சற்றும் குறையாமல் இந்துமதவெறியர்களும் செய்கிறார்கள்.

இத்தாக்குதலில் பாலுவாரியா, அவரது மனைவி குன்வர்பென், அவரது மகன் வஷ்ரம், ரமேஷ்(23), உறவினர்கள் பேச்சர் சர்வையா(30), அசோக் சர்வையா(20), தேவஷி பார்பையா(32) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

கிராமத்தில் தாக்குதலை முடித்த பார்ப்பனிய மதவெறிக் கும்பல்  ஏற்கனவே காயமடைந்த தலித் இளைஞர்களான வஷ்ரம், ரமேஷ், அசோக், பேச்சர் ஆகியோரை அருகிலுள்ள உனா நகருக்கு இழுத்து வந்துள்ளனர். அங்கு பொதுவெளியில் இவர்களை அடித்து ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். பத்திரிகை செய்திகளின்படி சுற்றி நின்றுகொண்டிருந்த ‘பொதுமக்கள்’ ஆதிக்க சாதி இந்துக்கள் இதை வேடிக்கை பார்த்துள்ளனர்.

தாக்குதலில் இரு இளைஞர்கள் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் ஜுனாகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற இரு இளைஞர்கள் பலத்த காயத்துடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடெங்கிலும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-ஆதிக்க சாதிவெறிக் குண்டர்களின் அராஜக நடவடிக்கைகள் நாள்தோறும் பெருகிவருகிறது. சிலவாரங்களுக்கு முன்னர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ஹரியானா இளைஞர்களின் வாயில் சாணியை திணித்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி அக்லக் என்ற முதியவரை அடித்து கொன்றது ஆதிக்கசாதி இந்துமதவெறிக் கும்பல். அக்லக் கொலையின் போதும் மனித உயிருக்காக துடித்ததைவிடபார்ப்பனிய இந்துமதவெறி மனம் அவர் வைத்திருந்தது மாட்டுகறியா இல்லை ஆட்டுக்கறியா என்பதை தான் கண்டறிய விளைந்தது. மாட்டுக்கறி என்றால் கொலை செய்யலாம் என்பதுதான் இதற்கு பின்னால் மறைந்துள்ள பார்ப்பனிய உளவியல்.

இப்போதும் தலித் இளைஞர்கள் இந்துத்துவ மிருகங்களால் தாக்கப்பட்டுள்ளதைவிட அவர்கள் இயற்கையாக செத்த மாட்டின் தோலை உரித்தார்களா இல்லை தோலுக்காக கொன்று உரித்தார்களா என்பதை விவாத பொருளாக்கியிருக்கிறார்கள் இந்துமதவெறியர்கள். இது குறித்து சோம்நாத் மாவட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் கே.எம்.ஜோஷி கூறுகையில், “ தலித் இளைஞர்களை தாக்கிய மூவரை கைது செய்துள்ளோம் மற்ற மூவர் தலைமறைவாகியுள்ளனர். மாடு செத்தபிறகு தோலுக்காக கொல்லப்பட்டதா இல்லை ஏற்கனவே இறந்த மாட்டின் தோலை உரித்தார்களா என்பதை கண்டறிய தடயவில் துறையினர் விசாரிக்க உள்ளனர்” என கூறியுள்ளார். ஒருக்கால் கொன்று உரித்திருந்தால் இதே போலிசு அவர்களை என்கவுண்டர் செய்து கொல்லும் போலும். என்ன இருந்தாலும் மோடியால் ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டமல்லவா!

இந்திய உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறியை தடை செய்வதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லீம் மக்களின் மீது குறிவைத்து தாக்குகிறது ஆர்.எஸ்.எஸ் வானரக் கும்பல்கள். இதற்காகவே மாட்டுக்கறியை தடை செய்து பல்வேறு மாநிலங்களில் – முதன்மையாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் – சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இங்கெல்லாம் மாட்டுக்கறியை  வைத்திருப்பதே கொலை குற்றத்தைவிட பெரிய குற்றமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் ஹிட்லர் மற்றும் ஐ.எஸ் ஆட்சியை போன்று தங்கள் குண்டர் படைகளையும் களத்தில் இறக்கி மாட்டுக்கறி வைத்திருப்பவர்களை கொல்வதற்கும் சித்ரவதை செய்வதற்கும் ஏவிவிட்டுள்ளார்கள்.

இந்துமதவெறியர்களின் தோலை உரிக்காமல் நாம் தலித்துக்களையோ முசுலீம்களையோ காப்பாற்ற முடியாது. ஐ.எஸ்ஸுடன் போட்டி போடும் இந்த மிருங்கங்களின் வெறி தலைவிரித்தாடும் சமயத்தில் பாரதத்தாயை பிளாட் போட்டு விற்கும் வேலையையும் மோடி கும்பல் செய்கிறது. இப்படி இருமுனைத்தாக்குதலில் சிக்குண்டிருக்கும் நாட்டையும் மக்களையும் மீட்பதற்கு இந்துமதவெறியர்களை முறியடிப்பதே நம் முன் உள்ள ஒரே வழி!-

– ரவி

மேலும் படிக்க