privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்

-

துவரை ”புதிய கலாச்சாரம்” வாசகர் களுக்கு ”அறிவுச் சோதனைப் போட்டி” எதையும் நாம் நடத்தியதில்லை. இப்போது ஒரு சிறு ஆவல். அதையும் செய்து பார்த்து விடுவோமே! கீழே தரப்படும் மேற்கோள்கள் யாருடையது என்று வாசகர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!

வேத கலாச்சாரம்
வேத கலாச்சாரம்

”பல்வேறு மன்னர்கள் ஆட்சி நடத்திய நாடுகளாகத் தான் இந்திய உபகண்டம் இருந்தது. ஆனால், இந்த உபகண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையே ஏதோ ஒருவிதமான இணைப்பும் – பிணைப்பும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய மக்களின் மொழிகளுக்கிடையிலான தொடர்புகள், இலக்கியங்கள் – இதிகாசங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள ஆன்மீகப் பிணைப்புகள், ஆச்சாரங்கள் அனுஷ்டானங்களில் காணப்படுகிற ஒருமைப்பாடுகள், மத நம்பிக்கையினாலும் – கடவுள் வழிபாட்டினாலும் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, உறவுகள் – இவைகளினால் ஏற்பட்ட இந்தியா என்ற இந்தியர் என்ற உணர்வு ஆழமாகவே வேரூன்றியுள்ளது”.

”வேதங்கள், உபநிடதங்கள் இந்திய உபகண்டத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மக்களின் உணர்வைப் பற்றிக் கொண்டிருந்த தத்துவங்கள்”

”இந்தியா வேதங்களின் நாடு என்றும் இந்தியாவின் ஆரம்பகால கலாச்சாரம் வேத கலாச்சாரம் என்றும் தான் உலகில் அறியப்படுகிறது. வேதங்களையும் வேத கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் ஆரியர்கள் தான் பிரதான பங்குவகித்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இதனை ஆரியர் கலாச்சாரம் என்றும் கூறுவர்”

நால்வருண முறையும் சாதீய முறையும் நிலவிய காலத்தில் தான், ”இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும் பங்காற்றின”.

”சமூக விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை அறியும் தாகத்தால் இந்திய வேதங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து ஆராய்கின்றனர். அயல்நாடுகளில் தங்கள் மொழியில் இவைகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பண்டைக்கால கலாச்சாரத்தைப் போற்றுகின்றனர். இந்தியர்களான நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆரியக் கலாச்சாரம்” என்றும் அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததினால் வேதக்கலாச்சாரம் என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்”.

இந்தியாவில் ஆரியர்களின் வருகை
இந்தியாவில் ஆரியர்களின் வருகை

”இந்தியக் கலாச்சாரத்தில் ஆரியர்களால் இயற்றப்பட்ட வேதங்களும் இதிகாசங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை இந்தக் கலாச்சாரம்தான் இந்திய மக்களின் கலாச்சாரமாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது”.

”வேதங்கள், உபநிஷத்துகள், பல்வேறு விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதப்பட்ட நூல்கள், புராண இதிகாசங்கள், காவிய நாடக இலக்கிய நூல்கள் – இவைகள் மூலமாக மனித சமுதாயத்தின் கலாச்சார வளர்ச்சிக்கு விலை மதிக்க முடியாத பங்கு செலுத்த ஆரிய சமூகத்தினால் முடிந்தது”.

”ஒட்டுமொத்தமாக ஆரியர்களுக்கும், வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை”.

”பொதுவாக இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்தை உருவாக்கியதிலும் வேதங்களுக்கும் ஆரியர்களுக்கும் பங்குண்டு என்பது தானே உண்மை”“.

இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களது ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நீங்கள் கருதினால் அது தவறாகும். இவை ”இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி” என்ற பெயரில் இயங்கிவரும் சங்கரன் நம்பூதிரிகள் மற்றும் அவரது சீடர்களின் ஆய்வு முடிவுகள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா?

”வேதங்கள், உபநிஷதங்கள் முதலிய பாரதீய கலாச்சாரப் பொக்கிஷங்களும் மார்க்சிய – லெனியத்தின் புரட்சிகரத்தத்து வமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப்பி டிக்கின்ற இந்திய மார்க்சியம்”. ”நான்பிரதி நிதித்துவப்படுத்துகிற மார்க்சியம் – லெனினியம் தான் உண்மையான பாரதீயத் தத்துவம் என்று கூட உரிமை பாராட்டுவேன்” என்கிறார் சங்கரன் நம்பூதிரி. இதை அவரது சீடர்கள் நியாயப்படுத்தி உரையும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களின் தத்துவப்படியான ஆய்வு முடிவுகள் ”இந்துத்துவத்”தோடு இசைந்து நிற்பதில் வியப்பில்லை.

நம்பூதிரி
சங்கரன் நம்பூதிரி

உண்மையில் இந்த சங்கரன் நம்பூதிரி, அதே கேரளத்தின் ஆதிசங்கரனின் இன்னொரு அவதாரமாக தன்னை அடையாளங் காட்டிக் கொள்கிறார். சாங்கியம், சாருவாகம், பெளத்தம் ஆகிய பொருள்முதல்வாதத் தத்துவங்களால் தாக்கப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது வருணாசிரம சாதிய அடிப்படையிலான பார்ப்பன சனாதன மதம், அதை மீண்டும் உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்காற்றியவனே ஆதிசங்கரன். எப்படி? பல்வேறு தத்துவத் திருட்டு – தத்துவப் புரட்டு பித்தலாட்டம் மோசடி, சூழ்ச்சி – சதி உருட்டல் மிரட்டல், ஆதிக்க சக்திகளின் துணையோடு அராஜக வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி!

இப்போது, அதே வேலையை பகிரங்கமான வகுப்புவாத, பாசிச முறைகளைக் கொண்டு செய்து முடிக்க ஒருபுறம் ஆர். எஸ்.எஸ். பார்ப்பனர்கள் முயலுகிறார்கள். மறுபுறம் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் கம்யூனிசத்தின் பேரால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் புகுந்து கொண்டு நயவஞ்சகம் – துரோகம், தத்துவ – வரலாற்றுப் புரட்டு ஆகிய மறைமுக வழிகளில் பார்ப்பன சனாதன மதத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்; பார்ப்பன நலன் காக்கப் பாடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் இத்திருப்பணிக்கு தலைமையேற்றிருப்பவர் திருவாளர் பி.ஆர். பரமேசுவரன். இதற்காகவே அவரது பொறுப்பில் ”மார்க்சிஸ்ட்” என்ற ஒரு தத்துவ மாத இதழே நடத்தப்படுகிறது. இவர்களின் தத்துவ – வரலாற்றுப் புரட்டுகளைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நாம் வேறெங்கும் போய்த் தேடத்தேவை இல்லை. சங்கரன் நம்பூதிரியின் பார்ப்பனிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் – சொற்பொழிவுகளின் மொழி பெயர்ப்புகளையும், அவற்றுக்கு பரமேசுவரன் தரும் பொழிப்புரைகளையும் மட்டுமே பெரும்பாலும் தாங்கி வரும் அந்த ”மார்க்சிஸ்ட்” மாதப் பத்திரிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே போதும். முன்னுக்குப் பின் முரணாகவும், சந்தர்ப்பவாதமாகவும், யாவரும் அறிந்த உண்மைகளையே மூடி மறைத்துப் பொய்களையே எழுதுவதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இங்கே சில சான்றுகளைப் பாருங்கள்.

நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு அமைப்பில் பார்ப்பனர்கள் வகித்து வரும் ஆதிக்கம் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்ட பட்டவர்த்தனமான உண்மை. நாட்டின் பிரதமர், குடியர சுத்தலைவர், சமீபகாலம் வரை துணைத் தலைவர், இராணுவத் தளபதிகள், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிகள், உளவுத்துறை இயக்குநர்கள் தேர்தல் கமிசன் தலைவர், மத்திய – மாநில அமைச்சரக தலைமைச் செயலர்கள், காங்கிரசின் கீழ் பெரும்பாலான மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய – மாநிலஅமைச்சர்கள்- பார்ப்பனர்களே! மத்திய ரிசர்வ் வங்கி உட்பட பெரும்பாலான அரசுடமை வங்கிகள், பங்குச் சந்தை உட்பட அனைத்து அரசு நிதி நிறுவனக் கட்டுப்பாடு அமைப்புகளின் தலைவர்கள் உலகவங்கி-ஐ.எம்.எஃப் போன்ற ஏகாதிபத்திய உலக நிதிநிறுவனங்கள், பல தேசங்கடந்த – பன்னாட்டுத் தொழில் – வங்கிக் கழகங்கள், இந்திய அரசு – தனியார்துறை தரகு அதிகார முதலாளிகளது நிறுவனங்கள் ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் – பார்ப்பனர்கள். அரசியல், பொருளாதாரத் துறையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நபர்கள் காலில் விழுந்து வணங்கவும், அவர்களுக்கு சகல வித ஆலோசனைகள் வழங்கவும் தகுதி பெற்றவர்களாக விளங்கும் சங்கராச்சாரிகள் ஜீயர்கள் உட்பட மடாதிபதிகளாகவும், சாதுக்கள் சன்னியாசிகளாகவும் இருந்து வருபவர்கள் உட்பட சமூக அமைப்பில் உயர்நிலை வகிப்பவர்கள் – பார்ப்பனர்கள். வானொளி, வானொலி, பத்திரிக்கை மற்றும் கல்வி- கலாச்சாரத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் – பார்ப்பனர்கள். நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கமின்றி இந்த நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும்? இத்தனையும் தெரிந்திருந்தும் பி.ஆர். பரமேசுவரன் கேட்கிறார்:

”பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் இன்று வைத்துக் கொண்டுள்ள எந்த வித ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது? அவர்களுக்கு எதிராக என்ன கோரிக்கை வைப்பது? பார்ப்பன எதிர்ப்பு என்ற சாதி வெறிப் பிரச்சாரம் ஒன்றுதான் செய்யமுடியும். இதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும்” (மார்க்சிஸ்ட் மே, 93 பக் 63)

நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கமின்றி இந்த நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும் ?
நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கமின்றி ஆதிக்க நிலைக்கு எப்படி வந்திருக்க முடியும் ?

இப்படிக் கேள்விகள் கேட்கும் இதே நபர்தான் இதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ”சி.பி.ஐ.(எம்) பிராமண ஆதிக்கத்தை மட்டுமின்றி எல்லாவிதமான மேல்சாதி ஆதிக்கத்தையும் உறுதியாக எதிர்த்துவரும் கட்சி” (மார்க்சிஸ்ட் மார்ச், 93 பக் 63). என்று பிரகடனம் செய்தார். ஆனால் இந்தப் பிரகடனம் வெறும் பித்தலாட்டமே என்பதை அடுத்து வரும் வரிகளில் இந்த நபர் காட்டிவிட்டார். அதாவது ”பார்ப்பனிய எதிர்ப்புக்” கொள்கையைத் தனது கட்சி ஏன் ஏற்க முடியாது என்பதற்கு பின்வரும் காரணத்தை எழுதுகிறார். ”சி.பி.ஐ. (எம்) பிராமண ஆதிக்கத்தை மட்டுமின்றி எல்லாவிதமான மேல் சாதி ஆதிக்கத்தையும் உறுதியாக எதிர்த்து வரும் கட்சி, பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் பார்ப்பனரல்லாத மேல் சாதியினர் அவர்களுக்குக் கீழே உள்ள கீழ் சாதியினரை கேவலமாக நடத்துவதைப் பற்றி மெளனமாக இருக்கிறார்கள். பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் ஒட்டு மொத்த சாதீய முறையை எதிர்ப்பதில்லை. அதற்கு அடிப்படையாக உள்ள நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்ப்பதில்லை. இந்திய நாட்டில் சாதீய முறைக்கு முக்கிய காரணம் நிலப்பிரபுத்துவ முறை என்ற உண்மையையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. பார்ப்பனரல்லாத மேல் சாதியினர்தான் பார்ப்பன எதிர்ப்பு பேசி வருகின்றனர். இந்திய நாட்டின் சாதீய முறை என்பது ஒரு சாதிக்கு மேல் ஒரு சாதி, அதே போல் ஒவ்வொரு சாதிக்கும் கீழ் இன்னொரு சாதி என்பது தான். இது ஒட்டு மொத்தமாக மாற்றப்பட வேண்டியது. இது நிலப்பிரபுத்துவ ஒழிப்போடு இரண்டற இணைந்தது. அதனால் சி.பி.ஐ (எம்) சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையையும் எதிர்த்து போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்தி வருகிறது.

”பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நடைமுறையில் பார்ப்பன எதிர்ப்பாகவே இருந்துள்ளது என்பது தான் தமிழ்நாட்டின் அண்மைக்கால வரலாறு. தத்துவத்தை நடைமுறையில் இருந்து பிரிக்கமுடியாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஒரு தத்துவத்தை ஒரு கட்சி முன்வைத்தால் அதன் நடைமுறை பார்ப்பன எதிர்ப்பாகவே அமையும். ஒரு சாதியினருக்கெதிரான வெறுப்புணர்வைத் துண்டுவதாகவே அமைகிறது. இது சாதி ஆதிக்க எதிர்ப்புக்கு எந்த வகையிலும் பயன்படாது. ஆகவே சி.பி.ஐ (எம்) பார்ப்பனிய எதிர்ப்பு என்பதையும் ஒரு கொள்கையாக ஏற்பது சரியாக இருக்கமுடியாது. சாதி ஒடுக்குமுறை எப்பகுதியில் இருந்து வந்தாலும் அதனை எதிர்ப்பது தான் சி.பி.ஐ (எம்) நிலைப்பாடு. (மார்க்சிஸ்ட் மார்ச் 93 பக் 63)

கீழ்வெண்மணியில் 42 தாழ்த்தப் பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு, பார்ப்பனன் அல்லாதவன். ஆனால் அவனைத் தண்டிக்க சி.பி.ஐ (எம்) என்ன செய்தது?
கீழ்வெண்மணியில் 42 தாழ்த்தப் பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு, பார்ப்பனன் அல்லாதவன். ஆனால் அவனைத் தண்டிக்க சி.பி.ஐ (எம்) என்ன செய்தது?

இங்கே பார்ப்பனிய எதிர்ப்பாளர்களைப் பற்றியும், தமது கட்சி நடைமுறை பற்றியும் பரமேசுவரன் கூறுவது பச்சைப் பொய்தான். பார்ப்பனிய எதிர்ப்பில் வீரமணி போன்ற சில திராவிட இனவாதிகளின் அணுகுமுறையையே அனைத்து அமைப்புகளுக்குமானதென பரமேசுவரன் புளுகுகிறார். வேறு சில பெரியாரிய, அம்பேத்காரிய அமைப்புகளும், மார்க்சிய – லெனினிய அமைப்புகளும் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை உடையனவாக உள்ளன. இவை பார்ப்பனரல்லாத மேல்சாதி அமைப்புகள் அல்ல; இவை நிலப்பிரபுத்துவத்துக்கும் சாதீய முறைக்கும் உள்ள உறவை அங்கீகரித்தும், இரண்டையும் எதிர்த்துப் போராடும் கொள்கை உடையவைதாம். அதேசமயம் சி.பி.ஐ (எம்) சாதிய முறை, நிலப்பிரபுத்துவம் ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராடுவதாகக் கூறுவது அண்டப் புளுகுதான். அதன் சாதி எதிர்ப்புக்குச் சான்றாகக் கூறுவதெல்லாம் 1946-50 காலகட்ட தஞ்சை விவசாய சங்க இயக்கம் மட்டும்தான். நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக்கு ஆதாரமாகக் கூறுவதெல்லாம் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தச்சட்டங்கள் தாம். கீழ்வெண்மணியில் 42 தாழ்த்தப் பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு, பார்ப்பனன் அல்லாதவன். ஆனால் அவனைத் தண்டிக்க சி.பி.ஐ (எம்) என்ன செய்தது?

சரி! பிற அமைப்புகளின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைதான் பார்ப்பன எதிர்ப்பு சாதி வெறியாகிவிட்டது. அதற்காக பார்ப்பனிய எதிர்ப்பு ”தத்துவமே” தவறாகிவிடுமா? பார்ப்பனியத்தை எதிர்க்காமல், “பிராமண ஆதிக்கத்தை” எப்படி எதிர்த்துப்போராட முடியும். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தத்துவத்தை பார்ப்பன எதிர்ப்பு என்ற நடைமுறையில் இருந்து பிரிக்க முடியாது என்கிறார் பரமேசுவரன். “இந்துத்துவ எதிர்ப்பும்” கூட இந்து மதத்தினர் அனைவருக்கும் எதிராகி விடாதா? அதோடு “இந்துத்துவம்” என்பதே பார்ப்பன – பனியா தத்துவம் என்று மேற்சொன்ன அமைப்புகள் மட்டுமல்ல சி.பி.ஐ (எம்) ஏற்றுக் கொண்ட சோவியத் ஆய்வாளர்களே கூறுகிறார்களே இதனால் இந்துத்துவ தத்துவத்தை எதிர்க்கும் கொள்கையை சி.பி.ஐ (எம்) ஏற்காதா?

உண்மை என்னவென்றால், பார்ப்பன ஆதிக்கத்தையும் அதன் அடிப்படையான பார்ப்பனியத்தையும் காப்பதுதான் சி.பி.ஐ (எம்) கட்சியின் நோக்கம். அதனால்தான் பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் என்று எதுவுமே கிடையாது என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் சாதிவெறியைத் துண்டுபவர்கள் என்றும் சாதிக்கிறார் பரமேசுவரன். “ஆரிய எதிர்ப்பைப் போலவே பார்ப்பன எதிர்ப்பும் தமிழ்நாட்டில் இன்று எடுபடக்கூடியதாக இல்லை. சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. அந்தஸ்தும் இறங்கிவிட்டது. இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்த நிலை இப்போது இல்லை. அன்று பொருளாதாரத்திலும் உயர் உத்தியோகத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராய் இருந்தனர். அதுதான் அன்று பிராமண எதிர்ப்பின் அடிப்படையாக இருந்தது. அந்நிலை மாறிவிட்டது” (“மார்க்சிஸ்ட் அக், 93 பக்.58)

“அன்றைய நான்கு வருணமுறையும் சிதைந்து விட்டது. இன்று பிராமணர்கள் புரோகிதர்களாக மட்டும் இல்லை. அன்றைய ஆதிக்க நிலையிலும் இல்லை. இன்று அவர்களும், பல்வேறு வர்க்கத்தினராகப் பிரிந்துள்ளனர். அவர்களில் முதலாளிகளும், தொழிலாளிகளும் உள்ளனர். கோடீஸ்வரர்களும் பிச்சைக்காரர்களும் உள்ளனர். இப்போது அவர்களை ஒரு சாதி என்ற முறையில் ஆதிக்கம் செலுத்துவோர் என்று கூறுவது இன்றைய எதார்த்த நிலை அல்ல. “பார்ப்பனியம், பார்ப்பனிய ஆதிக்கம் என்று கூறி வெறுப்புணர்வைத் துண்டுவது உழைப்பாளிகளிடையில் சாதி உணர்வை, வெறியைத் தூண்டி பிளவுபடுத்துவதாகவே உள்ளது. இது முதலாளித்துவத்திற்குச் சாதகமானது.” (மார்க்சிஸ்ட்மே 93 பக்: 63).

survey-main
பொருளியல்-வாழ்வியல் நிர்பந்தங்களுக்காக உழைப்பாளிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டாலும், அரசியல், சமூக, கலாச்சாரரீதியில் மாறாதவர்கள் இந்தச் சிறுபிரிவினர்.

“சமுதாய வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் இந்த மாறுதல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆரிய திராவிட இனவாதத்தை இப்போதும் பேசிவருவதும் உழைத்து வாழும் வர்க்கமாக மாறிவிட்ட பிராமண சாதியினரை சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாக இனமாகப் பார்ப்பதும் சமூக மாறுதல், வளர்ச்சி பற்றிய விஞ்ஞானப் பார்வைக்குப் பொருந்தாதது. அதன் காரணமாக பகுத்தறிவிற்கும் மாறுபட்டது. இந்தப் பார்வை இன்றைய சமுதாயத்தின் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக சாதி, மத இனபேதமின்றி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுக்கக்கூடியது. மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது” (மார்க்சிஸ்ட் ஜூன் 93 பக் 63).

மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பார்ப்பன சாதியினர். சி.பி.ஐ (எம்) வாதப்படியே அவர்களில் உழைக்கும் மக்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டவர்கள் எவ்வளவு பேர்? ஒரு வாதத்திற்குக் கேட்கிறோம்! நமது பார்ப்பனிய எதிர்ப்பு இந்த ஒரு சிறு பிரிவினரோடு சாதி, மத, இனபேதமின்றி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடுவதைத் தடுத்து விடும் அதனால் மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து விடும் அப்படித்தானே? வெறுப்புணர்வைத் தூண்டி உழைப்பாளிகளிடையில் சாதி உணர்வை, வெறியைத் தூண்டி பிளவு படுத்தி, முதலாளித்துவத்துக்குச் சாதகமாகி விடும். அப்படித்தானே உழைப்பாளிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்ட இந்தச் சிறுபிரிவினரான பார்ப்பனர்களே கூட பார்ப்பனியம், பார்ப்பனீய ஆதிக்கம் போன்ற அரசியல், சமூக, பண்பாட்டு அநீதி – கொடுமைகளுக்கு எதிராக பிற உழைக்கும் மக்களோடு ஒன்றுபட வேண்டும்; அப்படி இல்லாமல் தமக்குக் கூலி உயர்வு போன்ற பொருளாதார நலன்களைப் பெறுவதற்காக மட்டும் முதலாளிகளை எதிர்த்து பிற உழைக்கும் மக்களோடு ஒன்றுபட்டு என்ன பலன்?

பொருளியல்-வாழ்வியல் நிர்பந்தங்களுக்காக உழைப்பாளிகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் மாறிவிட்டாலும், அரசியல், சமூக, கலாச்சாரரீதியில் மாறாதவர்கள் இந்தச் சிறுபிரிவினர். இவர்கள் தாம் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிச ”இந்துத்துவம்” மற்றும் சங்கரன் நம்பூதிரி – போலிப் பொதுவுடமைத் தத்துவம் ஆகிய இரண்டுக்குமே சமூக அடிப்படையாக, ஆதரவாக உள்ளவர்கள். எனவே தான் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. சி.பி.ஐ (எம்). அதற்குப் பதிலாக “சி.பி.ஐ. (எம்) சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையும் எதிர்த்த போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்திவருகிறது” என்று புளுகுகிறார் பரமேசுவரன்.

கணசக்தி
கணசக்தி

இப்படி எழுதிய இரண்டே மாதத்தில் அந்தப் பரமேசுவரனே பின்வருமாறு எழுதுகிறார். “நீண்ட காலத்திற்கு முன்னால் தோன்றிய சாதிமுறை மக்களின் சமூக வாழ்க்கையில் பெரும் அளவு மாறிவருகிறது. ஆனால் பல காரணங்களால் சாதீய உணர்வு இன்னும் ஆழமாக உள்ளது. ஒரு கருத்து தோன்றிய சமூகச் சூழ்நிலை மாறினாலும், அக்கருத்து மேலும் சில காலம் வரை நீடித்திருக்கும் என்று மார்க்சீய விஞ்ஞானம் போதிப்பது சரியானது என்பதை இது நிரூபிக்கிறது. பல சாதிகளாக இருந்த மக்கள் இன்று உழைத்து வாழும் வர்க்கமாக மாறி வருகிறது. உழைக்கும் வர்க்கம் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. இந்த உணர்வை வளர்ப்பதுதான் சாதீயப் பாகு பாடுகளையும், உணர்வுகளையும் முற்றாக ஒழிக்க முடியும். இதுதான் மார்க்சிஸ்டுகளின் வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படை”. (மார்க்சிஸ்ட் ஜூன் 93 பக்:64).

பார்த்தீர்களா இந்த போலிகளின் பித்தலாட்டத்தை முன்பு “சாதீய முறையையும் நிலப்பிரபுத்துவ முறையையும் எதிர்த்த போராட்டத்தை ஒன்றிணைத்து நடத்திவருவதாகக் கூறினார் பரமேசுவரன். இரண்டே மாதங்களில் சாதிமுறை மக்களின் சமூக வாழ்க்கையில் பெரும் அளவு மாறுவதாகவும் இப்போது சாதிமுறை போய் சாதி உணர்வுதான் நீடித்திருப்பதாகவும் எழுதுகிறார். எனவே சாதி, நிலப்பிரபுத்துவ முறைகளை எதிர்த்தபோராட்டம் பற்றி முச்சுவிடவில்லை. உழைக்கும் வர்க்கம் என்று வளர்ந்து வரும் உணர்வை வளர்ப்பதுதான் சாதிபாகுபாடுகளையும், சாதி உணர்வையும் முற்றாக ஒழிக்க ஒரே வழி என்கிறார். எப்படி பத்திரிக்கையில் எழுதியே இரண்டே மாதத்தில் சாதிமுறையை மாற்றி விடுகிறார்கள் பாருங்கள் இதே பரமேசுவரன். அடுத்த பத்தாவது மாதம் எழுதுகிறார். “வர்க்கரீதியாக மக்களை ஒன்றுபடுத்துவதுதான் சாதீய ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வழி. இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றாமல் சாதிப் பாகுபாடுகளை முழுமையாக ஒழிக்க முடியாது. அதற்கு வர்க்கப் போராட்டமும் வர்க்கப் புரட்சியும் தான் ஒரே வழி. வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” (மார்க்சிஸ்ட் மார்ச் 94 பக்: 46)

சாதிமுறைக்கு எதிரான போராட்டம், சாதி உணர்வை அகற்ற உழைக்கும் வர்க்கம் என்ற உணர்வை வளர்ப்பது சாதிபேதமின்றி உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவது – இவை தான் சி.பி.ஐ.(எம்)மின் நடைமுறை என்று பீற்றிக் கொள்கிறார்கள். இதை அக்கட்சியினர் எப்படிச் செய்கிறார்கள் என்பதற்கு அதே பரமேசுவரனின் வாக்கு மூலத்தைப் பாருங்கள்!

சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி

மே. வங்கத்தில் சி.பி.ஐ (எம்) கட்சி நடத்தும் வங்காளி நாளிதழ் கணசக்தி. அதில் லாட்டரி பங்குச் சந்தை மணமகள் தேவை விளம்பரங்கள் வெளியிடுகின்றனர். சாதிக்கேற்ற மணமக்கள் தேவை விளம்பரம் வெளியிட்டு வருவதோடு, அக்கட்சித்தலைவர் ஒருவரின் மகனுக்கு அதே சாதி மணமகள் தேவை என்றும் விளம்பரம் வந்தது. இதை “புதிய ஜனநாயகம்” எடு அம்பலப்படுத்தியதையும் சாதி விவகாரத்தையும் குறிப்பிடாமல் கேட்கப்பட்ட கேள்விக்கு அது செய்திப்பத்திரிக்கை அதிக மக்கள் படிக்கவும், மக்கள் தேவைக்கும் அப்படி விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி சமாளித்தார் பரமேசுவரன். மீண்டும் ஒரு வாசகி, “சாதி, மதம், இனம் சம்பந்தமான விளம்பரம் நமது இதழில் வருவது சரியானதா?” என்று கேட்டார்.

அதற்கு ”கணசக்தியில் வெளியிடப்படுகிற விளம்பரங்கள் சாதி, மதத்தைப் பற்றிய விளம்பரம் அல்ல. மணமக்கள் தேவை பற்றிய விளம்பரங்கள் தான். அதில் வரும் வார்த்தைகளும் கருத்துக்களும் விளம்பரதாரரின் கருத்துக்கள் தான். பத்திரிக்கையின் கருத்து அல்ல. இந்நிலை மாற சமுதாயத்தில் பெரும்மாறுதல் ஏற்படவேண்டும். இத்தகைய விளம்பரங்களை வெளியிடாமல் இருப்பதனாலேயே அந்த மாறுதல் ஏற்படாது. இத்தகைய விளம்பரங்கள் மக்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களை ஒன்று திரட்டித் தான் அந்த மாறுதலை ஏற்படுத்த முடியும்.”

“இத்தகைய விளம்பரங்கள் இடம் பெறும் கணசக்தி நாளிதழில் சாதி, மத முட நம்பிக்கைகளுக்கெதிரான தத்துவ விளக்கக் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுதான் கனசக்தி ஆற்றிவரும் பிரதான பணியாகும்” (மார்க்சிஸ்ட்” டிசம், 93 பக். 62).

ஆக, நடைமுறை வாழ்க்கையில் சாதி அமைப்பைக் காப்பதோடு, அதற்கு ஆதரவும் அளிப்பார்கள். அதே சமயம் காகிதத்தில் சாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகத் தத்துவ விளக்கங்கள் தருவார்கள். இதுதான் சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி. இப்படி இவர்கள் சாதிமுறை எதிர்ப்பு நாடகமாடுவதே பார்ப்பனியத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் காப்பதற்காகத்தான். இவர்கள் நன்கு அறிந்தே இந்தப் பித்தலாட்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் பத்திரிக்கையின் வெள்ளிவிழா
மார்க்சிஸ்ட் பத்திரிக்கையின் வெள்ளிவிழா

இன்றைய சமுதாயத்தில் பார்ப்பன ஆதிக்கமே கிடையாது; பார்ப்பன எதிர்ப்புக்கு அடிப்படையே இல்லாமல் போய் விட்டது. பார்ப்பனீய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது சாதிவெறியைத் துண்டி உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தக் கூடியதாக உள்ளது. பார்ப்பனர்களின் எந்தவித ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது? அவர்களுக்கு எதிராக என்ன கோரிக்கை வைப்பது? – இப்படி முடிவுகளும் கேள்விகளும் வைக்கிறார் சி.பி.ஐ.(எம்)கட்சியின் குட்டிச் சித்தாந்தத் தலைவர் பரமேசுவரன்.

ஆனால் இதே நபர், அதே மார்க்சிஸ்ட் பத்திரிக்கையில் ”ஆர்.எஸ்.எஸ். – தத்துவமும் வரலாறும்” என்றொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் குறித்து பின்வரும் முடிவுகளை பரமேசுவரன் வைக்கிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆரிய இனவாதத்தின் பிரதிநிதிகள். ஆரிய இனவாதம் பேசிய ஜெர்மானிய இனவெறியன் பாசிஸ்ட் இட்லரைப் போற்றுபவர்கள். இந்தியாவை இந்து நாடு என்று அவர்கள் கூறுவதன் பொருள் ஆரிய நாடு என்பது தான். ஆரியர்கள் தான் இந்துக்கள் என்பதே அவர்களின் தத்துவம். இந்து மதவெறியர்கள் ஆரிய இன வெறியர்களாகவும் உள்ளனர். “நாகரீக உலகம் முழுவதும் வெறுத்து ஒதுக்கும் சாதீய முறையை ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களின் கூட்டாளிகளும் துக்கிப்பிடிக்கின்றனர். இந்து மதத்தோடு இணைந்தது சாதீய முறை. இந்து மதத்தின் பழையவாதங்களை உயர்த்திப் பிடிப்போர் சாதிய முறையை மட்டும் விட்டுவிடுவார்களா? ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமதவாத அமைப்புகள் இந்திய நாட்டில் நிறுவ முயற்சிப்பது இந்து மதஆதிக்கம் அல்ல. ஆர்.எஸ்.எஸ்.சில் இன்று ஆதிக்கம் செலுத்துகின்ற மேல் ஜாதி ஆதிக்கத்தை நாட்டின் மீது திணிப்பதே அவர்களின் நோக்கம். சிதைந்து வரும் சாதியத்திற்கு புத்துயிருட்டுவதும் வருணாசிரம முறையை புணரமைப்பதும் தான் அவர்களின் லட்சியம்” இந்தியாவின் பொது மொழி இப்போதைக்கு இந்தி, பின்னர் சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழி என்பது இவர்களின் கொள்கை; அதற்காக அனைத்து மாநில மொழிகளும் சமஸ்கிருத எழுத்துக்களில் எழுத வேண்டும் என்பவர்கள் இவர்கள் நவீன உலகிலும், இந்தியாவிலும் வாழும் மனிதர்களாகத் தெரியவில்லை. பிராமண ஆதிக்கம் நிலவிய உப நிடதங்களின் காலத்தில் வாழும் பிராமணர்களாகவே தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

ஆக, சி.பி.ஐ.(எம்)யின் கணிப்பின் படியே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் இந்துமத வெறி பார்ப்பன பாசிச சக்திகள்தாம்.
ஆக, சி.பி.ஐ.(எம்)யின் கணிப்பின் படியே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் இந்துமத வெறி பார்ப்பன பாசிச சக்திகள்தாம்.

ஆக, சி.பி.ஐ.(எம்)யின் கணிப்பின் படியே ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் இந்துமத வெறி பார்ப்பன பாசிச சக்திகள்தாம். அதன் இந்து மதவெறி என்பது ஆரிய இன மொழி வெறி பார்ப்பன சனாதன வருணாசிரம சாதீய முறையை மீட்பதுதான் அவர்களது இலட்சியம். இந்தச் சக்தி நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. இதன் நேரடிக் கூட்டுச் சக்திகளாக ஜெயலலிதா கட்சியும், சிவசேனாவும். இதன் மறைமுக கூட்டாளியாக-துணைபோகும் சக்தியாக ஆளும் காங்கிரசும் உள்ளன. சி.பி.ஐ. (எம்) தலைமையின் கூற்றுப்படியே இதற்கு ஏகாதிபத்தியத் துண்டுதலும் ஆதரவும் உள்ளது. இந்து ராஷ்டிரம், இந்துத்துவம் என்பது பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் தான் என்பதையும், இவற்றுக்கு எதிரான போராட்டம் அவசியமானது என்பதையும் இவை காட்டவில்லையா?

ஆனால், இந்து ராஷ்டிரம் இந்துத்துவமும், பார்ப்பனியம் – பார்ப்பன ஆதிக்கமும் வேறு வேறானவை என்று சித்தரிக்கிறது சி.பி.ஐ (எம்) தலைமை. பார்ப்பனியம், பார்ப்பன ஆதிக்கம் என்பவை அர்த்த மற்றவை. அவற்றுக்கு எதிரான போராட்டம் அடிப்படை அற்றவை என்று கூறும் அதே சமயம் இந்து ராஷ்டிரம் – இந்துத்துவத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதாகப் பீற்றிக் கொள்கிறது.

இப்படி இரட்டை வேடம் போட்டு கபடநாடகமாடுவதன் மூலம் ஒருபுறம் தன்னைப் புரட்சிகரமான தலைமையாக காட்டிக்கொள்கிறது. மறுபுறம் பார்ப்பனியம் பார்ப்பன நலன் காக்கும் பணியையும் செய்கிறது. ஆகவே, பார்ப்பன சனாதன- இந்து மதவெறிப் பாசிசத்தை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்பனர்களைவிட உண்மையில் இந்த போலி மார்க்சிஸ்டுகள் தான் மிகவும் அபாயகரமானவர்கள்.

(தொடரும்)

புதிய கலாச்சாரம், பிப் – மே 1994.

  1. நேற்றைய தினம் கோவை மாவட்ட செயலர் தோழர் மணிவண்ணன் இறந்தது குறித்து எந்த அறிவிப்பும் இந்த இணைய தளத்தில் வரவில்லையே…….
    ஏன் ?

  2. கபாலி படத்தை விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக உங்களை இந்துத்துவ அடியாள் என்று மாற்று என்ற தளத்தில் வசை பாடி இருக்கின்றார்கள்
    வினவு பதிலடி கொடுக்க வேண்டும்

    • அது எப்படினே தெரியல. சி.பி.எம் காரணுக ஒரு தினுசா சிந்திருக்குறாய்ங்க!

      கடந்த தேர்தலில் போது விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்துவிட்டு பா.ஜ.க வுடன் அவர் கூட்டணி சேருவதை தடுத்துவிட்டோம்;விஜயகாந்தை ஏதோ உளற வைத்துவிட்டு அவரை இடது கொள்கைகளை பேசவைத்துவிட்டோம் என பேசிதிரிந்தார்கள்.

      அதை சினிமாவுக்கும் அப்ளை பண்ணி ரஜினியை பிற்போக்கு படம் எடுக்கவிடாமல் தடுத்துவிட்டார்களாம். படம் எடுத்த இயக்குநருக்கே தெரியாத குறீயீடெல்லாம் கண்டுபிடிக்குறானுக.

      மத்தவெனெல்லாம் குறியீடு கண்டுபிடிக்குறான் ஒ.கே. அதுல ஒரு லாஜிக் இருக்கு. சி.பி.எம் கட்சியே கண்டுபிடிக்கபடவேண்டிய குறியீடாக இருக்கும் நிலையில் இவங்ககளுக்கு இது தேவையா? எம்.எல்.ஏ விடுதியில் இடம் இல்லை, வெளிநடப்பு வேலை இல்லைனா அதுக்காக இப்படியா? மிடியல

  3. வினவு இடம் அடிப்படை நேரமையை எதிர்பார்க்கின்றேன்
    நீங்கள் ஏற்கனவே குறிப்பிடட கீழ் வெண்மணி படுகொலைக்கு ஈவே ராமசாமி யின் எதிர்வினை தொடர்பான கமெண்ட் போட்டிருந்தேன் . அதை வெளியிட மறுப்பதேன் ?

  4. எந்த ஒரு சமூகத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கும். அவர்களின் பண்பாடு பல நூற்றாண்டுகளாக முன்னோர்களால் உருவாக்கப் பட்டதன் தொடர்ச்சியே. அதில் காலாவதியாகிப் போன நம்பிக்கைகளும், வழக்கங்களும் இருக்கும். தீய அம்சங்களும் இருக்கும். ஆனால் அதுதான் அவர்களின் அடையாளம். அவர்களின் கலை, இலக்கியம், சிந்தனை அனைத்துமே அந்தத் தொடர்ச்சியில்தான் உருவாகும்.
    பண்பாட்டின் எதிர் மறைக் கூறுகளை களைந்து அதை சமகாலத் தன்மையுடன் முன்னெடுப்பதையே எந்த அறிஞர்களும் செய்தாக வேண்டும். ஆனால் இங்கே மார்க்ஸியர்கள் அதைச் செய்யவில்லை. நேர்மாறாக கழுவிய நீரில் பிள்ளையையும் தூக்கி வீசுவதை செய்தார்கள். ஒரு தலைமுறையையே ஒட்டு மொத்தமாக, மரபில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் விலக்கியவர்கள் அவர்கள். ஒட்டு மொத்த இறந்த காலத்தையே வெறுக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.

    தன் முன்னோர்களை மதிக்காத சமூகம் வாழ்ந்ததில்லை. காலப்போக்கில் அந்த சமூகத்தின் தன்னம்பிக்கை அழியும். ஆன்ம வல்லமை சரியும். எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்து அது அன்னியச் சக்திகளுக்கு அடிமைப்படும். இடதுசாரிகள் நம் சமூகத்தின் தன்னம்பிக்கையை அழிக்க ஆனதையெல்லாம் செய்திருக்கிறார்கள். நம்மை பண்பாடற்ற காட்டு மிராண்டிகளாகச் சித்தரிக்கும் ஐரோப்பிய நோக்கை இங்கே மீண்டும், மீண்டும் முன் வைத்தவர்கள் அவர்களே.

    இந்தப்பார்வை மார்க்ஸிடம் இருக்கவில்லை. லெனினிடம் இருக்கவில்லை. இ.எம்.எஸ்ஸிடமும் இருக்கவில்லை. ஆனால் நம் அடித்தள மார்க்ஸியரிடம் இது எப்படியோ இருக்கிறது. தமிழகத்தில் முட்டாள்தனமும், வெறுப்பும் மட்டுமே அரசியலியக்கமாக வடிவமெடுத்த திராவிட அரசியலில் இருந்து இதை இன்னும் விரிவாக கற்றுக் கொண்டு அந்த மொழியில் பேசுகிறார்கள்.

    பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான கருத்து முதல் வாத மரபை தன் தத்துவப் பின்புலமாக ஏற்கவும் அவற்றுடன் விவாதித்து தன்னை முன்னெடுக்கவும் அவற்றில் கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் கார்ல் மார்க்ஸால் முடியும் என்றால் நமக்கு ஏன் சங்கரரும், ராமானுஜரும் பழங்குப்பைகளாக இருக்கவேண்டும்? இந்த எளிய வினாவை நம் மார்க்ஸியர் ஏன் எழுப்பிக் கொள்வதில்லை?

    • வேல்தமிழ்,
      பழைய விடயங்களில் இருந்து நல்லதைத் தேடலாம், தவறில்லை. நரகலிலிருந்தும் தேடலாம் என்கிறீர்களே – சிபிஎம்மையே மிஞ்சிவிட்டீர் போங்கள் …

      சங்கரனிடமிருந்து எடுத்துக் கொள்ள ஒரு நல்ல விசயத்தை எடுத்து வைத்துத் தாங்கள் வாதிடலாமே ?.

      பசுங்கன்று தேர்க்காலில் நசுங்கி விட்டது என்ற காரணத்திற்காக மனிதனைக் கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமா இல்லையா ?.. ’மனு நீதி’சோழனை பாடப் புத்தகத்தில் வைக்கும் பார்ப்பனப் பன்றிகளைக் காட்டுமிராண்டி என்று அழைக்காமல் பூட்டுமிராண்டி என்றா அழைக்க முடியும் ?.

      அந்தப் புத்தகத்தைப் படித்த கூட்டம் தான் 2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்கள் கூண்டாக எரித்துக் கொல்லப்பட்ட போதும், தற்போது தலித்துகள் மீது மாடு உரித்த குற்றத்திற்காக அப்பாவிகள் அடித்துத் துவைக்கப்பட்ட போதும், கமுக்கமாக அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

      காட்டுமிராண்டிகள்..

Leave a Reply to manoj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க