ஷேல் கேஸ் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் !
நாகைமாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் பகுதி பழையபாளையம், தாண்டவன்குளம், இருவக்கொள்ளை கிராமங்களில் ஷேல்கேஸ் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் நடைமுறையில் உள்ளது. தாண்டவன்குளம் பகுதி கிராம மக்களும் சுற்றுபகுதியில் உள்ள மக்களும் இன்று 9.3.2017 காலை 11 மணி அளவில் கூடி இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவது என முடிவு எடுத்துள்ளனர். வருகிற செவ்வாய்கிழமை 14.03.2017 அன்று தாண்டவன்குளம் கிராமத்தில் காலை 10 மணி அளவில் தொடர் முழக்க போராட்டம் தொடங்குவது எனவும் அரசு இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அம்மக்கள் கோருகிறார்கள்
தகவல் :
தோழர் ரவி, ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம். சீர்காழி
தொடர்புக்கு: 98434 80587
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு !
தமிழக மீனவர் பிரிட்டோ படுகொலை !
இலங்கை தூதரகத்தை இழுத்து மூடு !
மாணவர்களே !
- ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிட மறுப்பு !
- மாணவர்கள் மீது நீட்தேர்வு திணிப்பு !
- மீனவர்கள் படுகொலை !
மீண்டும் களமிறங்குவோம் !
தமிழகத்தையே மெரினாவாக்குவோம் !
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தமிழ்நாடு, தொடர்புக்கு : 9445112675.
குற்றவாளி ஜெயா படத்தை உடனே அகற்று !
மனு கொடுத்த தோழர்களை கைது செய்த காவல்துறை !

விருத்தாசலத்தில் ஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இம்மனுவை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு தலைமையில் மனுகொடுக்க 9-3-2017 காலை 10.00 மணியளவில் செல்ல திட்டமிட்டிருந்தனர். காவல்துறைக்கு மனுகொடுப்பது பற்றி முன்னதாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதை அறிந்த காவல்துறையினர் நகராட்சி அலுவலகத்தில் 300-க்கு மேற்பட்ட போலீஸ் பட்டாளத்தை குவித்தனர். ஆனால் மனுகொடுக்க கால தாமதம் ஏற்பட்டதால் மனுதாரரான வை.வெங்கடேசன் ஐயா அவர்களை அவருடைய அலுவலகத்திற்கே டி.எஸ்.பி. கார்த்திகேயன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் நேரில் சந்தித்து தனது காவல்துறை வாகனத்திலேயே நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க அழைத்து சென்றனர். வை.வெங்கடேசன் ஐயா மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இறங்கியதை பார்த்த அ.தி.மு.க குண்டர்கள் தோழர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் இந்த தே…… பசங்கள அனுமதிச்சீங்கனா நாங்களும் உள்ளே வருவோம் என்று கூச்சலிட்டனர்.
அவங்க கொடுக்கிற மனுவை வாங்க கூடாது என்று நகராட்சி ஆணையருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுத்தனர். இந்த அடாவடி போக்கிரிதனத்தினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது காவல்துறை. இதையெல்லாம் மீறி உள்ளே சென்று மனுவை நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்த அதிமுக குண்டர்கள் மக்கள் அதிகாரத்தின் பெண் தோழரை குறிப்பிட்டு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேச குரல் எழுப்பினர். அதிமுக குண்டர்களை விடுத்து அந்த பெண் தோழரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது காவல்துறை. அதிமுகவினரின் ஆணைப்படி இந்த காவல்துறை பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் 7 பேரையும் கைது செய்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்க அனுமதித்த காவல்துறை மனு கொடுத்த மக்கள் அதிகார தோழர்களை விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தது. அவர்களை குற்றவாளிகளை போல சட்டையை கழட்ட சொல்லி தரையில் உட்காரும்படி ஆணையிட்டார் கே.கே.செந்தில்குமார், காவல்துறை உதவி ஆய்வாளர்.
ஐயா வெங்கடேசன் கழற்ற முடியாது, தரையில் எல்லாம் உட்கார முடியாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பின்வாங்கினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் மதிய உணவை சாப்பிடாமல் காவல்நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் பிறகு மாலை 3.00 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஊழல் என்பது புற்றுநோய் போல பரவி ஊன்றியிருக்க நேர்மையானவர்கள் சிறுபான்மையராகி வருகின்றனர். குரல்வளையை நெறிக்கும் ஊழல் என்ற இந்த மரண துன்பத்திலிருந்து குடிமைச் சமூகத்தை விடுவிக்க அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து கடமையுடன் தைரியமாக சகமனிதர்களின் துணையுடன் போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் விடுதலை போராட்டத் தலைவர்கள் வரிசையில் ஜெயலலிதாவின் படம் இருப்பதற்கு இங்குள்ள அரசும், போலீசும் உதவியாக இருக்கின்றது.
இந்நிலையில் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் பத்திரிக்கையாளர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஊழல் குற்றவாளி என தண்டனை பெற்ற ஜெயாவின் புகைப்படத்தை அரசு மரியாதையுடன் அரசு செலவில் நலத்திட்டங்களில் அரசு அலுவலகங்களில் விளம்பரப்படுத்தக்கூடாது அகற்ற வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த கோரிக்கைக்காக பல்வேறு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது.
ஊழல் குற்றவாளி ஜெயா படத்தை அகற்றும் வரை தமிழகமெங்கும் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தொடரும் !
தகவல் :
மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம்.