தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் நடந்தது.
அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்களும் திரளான பொதுமக்களும் மாற்று அமைப்பு நண்பர்களும் கலந்து கொண்டனர்.
சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை.
அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது.
இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
• மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
• மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு
சிவனடியாருக்கு எமது சிவப்பஞ்சலி.
உண்மையில் கடவுள் நம்பிக்கையுள்ளோர் என்று தம்மை கருதிக் கொள்பவர்கள் மட்டுமல்ல நாத்திகர்களும் அவரிடம் இருந்து விடபிடியான போராட்ட உணர்வையும் தமிழ் உணர்வையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கம்யுனிஸ்டுகளும் பெரியார்வாதிகளும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தாம். ஆனால் எளிய மனிதர்களின் தெய்வ நம்பிக்கைகளை ஒருபோதும் அவர்கள் கேலி செய்வது இல்லை. சிவனடியார் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடியதை சாத்தியமாக்கியது அவரது பக்தியுனர்வல்ல மாறாக தமிழின சுமரியாதை உணர்வு தான்.
நாடு முழுவதும் மோடி அரசு கட்டவிழ்த்து விடும் மக்கள் விரோத போக்குகளை எதிர்கொள்வது மக்களின் பக்தி உணர்வு அல்ல மாறாக அவர்களின் போராட்ட உணர்வு தான். இதுதான் சிவனடியாரிடமும் இருந்தது. நாமும் கற்றுக் கொள்ள வேண்டியது.