Sunday, May 4, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்கூடலையாத்தூர் - மணல் கொள்ளையை நிறுத்து ! - பொதுக்கூட்டம்

கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்

-

ன்புடையீர் வணக்கம் !

கடலூர் மாவட்டம் வெள்ளாறு, கூடலையாத்தூர் மணல் குவாரியை மூடு என காவாலகுடி முடிகண்ட நல்லுர், ஒட்டி மேடு, பெருந்துறை, அகரம் ஆலம்பாடி, பவழங்குடி கானூர், பேரூர் என பல கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளாற்றில் முற்றுகையிட்டு கொளுத்தும் வெயிலில் போராடினார்கள். தாகத்தில் தவித்த மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்கூட கொடுக்கவிடாமல் போலீசார் தடுத்தனர்.

குவாரியை தற்காலிகமாக மூடுகிறோம் என மாவட்ட நிர்வாகம் நயவஞ்சகமாக பேசி போராடும் மக்களை அனுப்பி விட்டு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுகிறது காவல் துறை. திருமுட்டம் ஆய்வாளரோ முக்கியமானவர்களை குண்டாசில் போடுவேன் என மிரட்டுகிறார். உதவிக்கு வந்த வழக்கறிஞர்களையும் வழக்கில் சேர்த்துள்ளனர்.

கொள்ளையடிப்பவன் “காக்கி உடையில் அதிகாரத்தில்”; மக்களுக்காக, நீராதாரத்தை காக்க போராடுபவர் குண்டர் சட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டுமாம், இதுதான் இன்றைய நீதி?

பர்மிட் இல்லை, ஓவர் லோடில் மணல் கொள்ளை போகிறது என பல முறை திருமுட்டம் காவல் ஆய்வாளர் பீர்பாஷாவிடமும், பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனிடமும் சொன்னதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. கூடலையாத்தூர், காவாலகுடி மக்கள் தாங்களே களத்தில் இறங்கி கடத்தல் மணல் லாரிகளை மடக்கி சிறைபிடித்து பத்திரிக்கை தொலைக்காட்சி மூலமாக ஒப்படைத்தார்கள்.

50 அடி நிலத்தடி நீர்மட் டம் இன்று 250 அடிக்குக் கீழ் செல்கிறது. வெள்ளாறு கண் முன்னே அழிவதை வேடிக்கை பார்க்க முடியுமா? நெய்வேலி சுரங்கம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பல இடங்களில் ஆழ்குழாய் போர் போடப் பட்டுள்ளது. கடலூர் ரசாயன ஆலைகளால் நீர் ஆதாரம் நஞ்சாக மாறிவருகிறது.

வெள்ளாற்றில் மணல் இல்லை என்றால் எப்படி மழை நீரை தேக்க முடியும்? நிலத்தடி நீர் குறைந்தால் கடல் நீர் உள்ளே புகும், விவசாயம் அழியும். இதை அரசு தடுக்காது. இந்த பகுதி மக்கள்தான் – விவசாயிகள்தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும், தடுக்க வேண்டும்.

சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அதிகாரிகள் மயிரளவும் மதிக்காதபோது பாதிக்கப்பட்ட மக்கள் எதற்கு மதிக்க வேண் டும்?

நமது நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைபோகுதே என்ற சமூக பற்று, மக்கள் பற்று, நாட்டுப்பற்று மக்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு துளியும் இல்லை. கூலிப்படையாக மாறிவிட்டார்கள். சட்டம் சொல்கிறது. ஆற்றில் மூன்றடி மட்டுமே மணல் அள்ள வேண்டும், ஆனால் 30 அடிஅள்ளுகிறார்கள்.

மணல் அள்ளும் இடத்தை சிமெண்ட் தூண் நட்டு, சிகப்பு கொடி கட்டி நான்கு பக்கம் எல்லைகளை வரையறுக்க வேண்டும். எந்த மணல் குவாரிகளில் எவன் செய்தான்? சர்வே 8-ல் 40 ஏக்கர் அளவில் 20,000 லோடு எடுக்க அனுமதி என்றால், நடப்பது என்ன? சுமார் ஒரு லட்சம் லோடுகள் எடுக்கிறார்கள்.

தினந்தோறும் பல ஆயிரம் லாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடுகிறது. இந்த மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் துணையாக உள்ளார்கள்.

கூடலையாத்துரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எம்.எல்.ஏ-க்கு ஒரு குவாரி, எம்.பி-க்கு ஒரு குவாரி என பிரித்து கொடுத்துள்ளார் எடப்பாடி, குவாரியில் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் வசூலிக்கும் மாமூல் தொகை தினந்தோறும் உள்ளூர் போலீசுக்கு செல்கிறது. இதை எதிர்த்து கேட்டால் எலும்பு துண்டை வீசுவார்கள், மறுத்தால் பொய் வழக்கு படுகொலை, உள்ளூர் சாதி பிரச்சினையை போலீசே உருவாக்கும்.

தமிழகம், வழிபறி கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க வழித்தெரியாமல் தவிக்கிறது. மானபங்கபடுத்தும் காமுகனிடமே மனு கொடுத்து கெஞ்ச வேண்டிய துர்பாக்கிய நிலையில் இந்த அரசிடம் மக்கள் போராடுகிறார்கள்.

மகனை இழந்த தாய்மார்களும், கணவனை இழந்த விதவைகளும் வீதிக்கு வந்து சாராய கடை வேண்டாம் என கலெக்டரிடம் கையெடுத்து கும்பிட்டு மன்றாடுகிறார்கள், ஆத்திரத்தில் டாஸ்மாக் கடையை கடப்பாரை கொண்டு இடிக்கிறார்கள். சாராய வியாபாரியாக மாறியுள்ள மாவட்ட நிர்வாகம் போராடும் மக்கள் மீது பொய்வழக்கு போடுகிறது.

போலீசு தாய்மார்களை அடிக்கிறது. இது மக்கள் வாழும் நாடா? வளர்ச்சி, வல்லரசு என பேசுவதற்கு இந்த அரசுக்கு என்ன அருகதை இருக்கிறது? கூவத்தூரில் வழங்கிய கோடிகளும், தங்க பிஸ்கட்டுகளும், ஆர்.கே. நகரில் கரைபுரண்ட கரன்சிகளும், தற்போது குடகு மலையில் குதிரை பேரத்தில் புரளும் கோடிகளும், அனைத்தும் மனித குலத்தை தாயாக காக்கும் ஆறுகளின் ரத்தம் – சதை கொள்ளையடித்த மணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கடத்தி சம்பாதித்த கருப்புப்பணம், எந்த சட்டம், எந்த நீதிமன்றம் இவைகளை தடுத்தது?

பல நூற்றாண்டுகள் பழமையான கிரானைட் மலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. சகாயம் ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் எந்த அதிகாரியும் சிறைக்கு போகவில்லை. கொள்ளைபோன கிரானைட் மலை திரும்பி வருமா? கெள்ளை போன ஆற்றுமணல் திரும்பி வருமா? கடத்தல் சிலைகளை மீட்பது போல் நாம் இயற்கையை மீட்க முடியுமா?

மக்கள் வரிப்பணத்தை தின்று கொழுக்கும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் துறை எதற்கு? கொள்ளையடிக்கவா கரும்புக்கும், நெல்லுக்கும் கட்டுப்படியான விலை கொடுக்க துப்பில்லை. கரும்பு நிலுவைத்தொகை பலகோடி நிற்கிறது. சாவின் விளிம்பில் உள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை.

மணல் கொள்ளை மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சினை, ரேசன் கடை மூடல், பெட்ரோல் விலை உயர்வு, நீட் அக்கிரமத்தால் எற்பட்ட அனிதா மரணம், தனியார்மயமாகும் அரசு மருத்துவமனை, கல்வி, குடிநீர், விஷம் போல் உயரும் விலைவாசி, படித்தவனுக்கு வேலை இல்லை – அனைத்திற்கும் இந்த அரசுதான் காரணம். மொத்தத்தில் எங்களை வாழவிடு என மக்கள் போராடுகிறார்கள்.

தீர்வுகான முடியாமல் அரசு முட்டுச்சந்தில் சிக்கி தவிப்பதுடன், மக்கள் விரோதமாக மாறி ஆளும் அருகதையை இழந்து நிற்கிறது. ஊழல் குற்றவாளி ஜெயா இறந்த நாள் முதல் சசிகலா, ஓ.பி.எஸ். எடப்பாடி, டிடிவி. மெரினா சமாதி, பாஜக என இன்று வரை தமிழக அரசியல் நிகழ்வை ஒரு நிமிடம் ஓட விட்டுப் பாருங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை. பாராளுமன்றம், சட்ட மன்றம், நீதிமன்றம் ஆகியவை கார்ப்பரேட் கம்பெனிகளின் காவல் நிலையங்களாக மாறி வருகிறது. இங்கு நமக்கு நீதி கிடைக்காது.

பல்வேறு கிராம முக்கியஸ்தர்கள், அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். சேத்தியாதோப்பு பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாக நீங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது அவசியம். நீங்களும் வந்தால்தான் வெள்ளாற்றை காக்க முடியும், மணல் கொள்ளையைத் தடுக்க முடியும், ஊழல் அதிகாரிகளை தண்டிக்க முடியும்; நாளை வர இருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டல அழிவுத்திட்டத்தை நிறுத்த முடியும்.

மணல் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட ஆறுகளை மீட்பதில்தான் நமது வாழ்க்கை இருக்கிறது. வெள்ளாற்றின் விடுதலை பிற தமிழக ஆறுகளையும் விடுவிக்கும் போராட்டமாக மாறி பரவவேண்டும். அதற்கு ஒரே வழி மக்கள் அதிகாரம் தான்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம், தொடர்புக்கு – 97912 86994.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி