அசுர வெடி!
நடப்பவைகளை
சகித்துக்கொள்ள முடியாதபோது
நான் நரகாசுரன்.
எங்கிருந்தோ வரும் தேவர்கள்
எனது கதிராமங்கலத்தை
துளையிடுவதை
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.
மூலதன கூர்ம அவதாரங்கள்
எனது நெடுவாசலை
பாயாய் சுருட்டிக் கொண்டு
ஓட வருகையில்
வீதிக்கு வந்து விரட்டினால்
நான் நரகாசுரன்.
தமிழகத்தையே மத்தாக்கி
‘கெயில்’ ஆதிசேசன்
இறுக்குகையில்
அமிழ்தம் ‘மேல்’ லோகத்திற்கு
விசம் எங்களுக்கா?
என ஆர்த்தெழுந்து போராடினால்
நான் நரகாசுரன்.
பசும்தளிர்
அகலிகையை அபகரிக்க
‘மேக் இன் இந்தியா’
மாறுவேடத்தில் வரும்
பன்னாட்டு இந்திரனை
தடுத்து நிறுத்தினால்,…
நான் நரகாசுரன்.
அழகிய தாமிரவருணியை
ஆக்கிரமிக்க வரும்
அமெரிக்க பிரகஸ்பதியை,
“என்னைக் கொன்றுவிட்டு
தீபாவளி
என் ஆற்றை கொன்றுவிட்டு
கோக் கோலாவா?”
என எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.
வல்லினம், மெல்லினம்
இடையினமாய்
உயிராய், மெய்யாய்
உயிர் மெய்யாய்
அணி, அணியாய்
அளபடயாய்
இலக்கணமாய், இலக்கியமாய்
இன்னிசையாய்
எம் குருதி கலந்த தாய்த் தமிழை
ஆதிக்கம் செய்யவரும் சமஸ்கிருதத்தை
அடித்துத் துரத்தினால்
நான் நரகாசுரன்.
கருவறைக்கு வந்தால் தீட்டு
கல்வி பயில வந்தால் நீட்டு
பூர்வகுடி உரிமைகளுக்கு பூட்டு
என்ன அநியாயம்!
இந்த அரசுக் கட்டமைப்பையே ஓட்டு!
என தெளிந்து நின்றால்…
நான் நரகாசுரன்.
– துரை. சண்முகம்
_____________
இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சமீபத்தில் கொல்லப்பட்ட நரகாசுரன் கெளரிலங்கேஷ் அவர்கள்.
தீபாவளிக்கு நான் குளிக்கவில்லை, புது சட்டை போடவில்லை, பட்டாசு கொளுத்தவில்லை, என் வீட்டில் துக்கதினம், வீழ்ந்த அசுரர்களுக்கு மாட்டுக்கறி படையல் தான்.
ஆம்! இதையெல்லாம் புரிந்து கொண்டால் நாமும் நரகாசுரன் கள்தான் “தேவையை உணர்தலே விடுதலை”…