கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குக்கனூர் என்ற ஊரில் ‘பிராமண யுவ பரிக்ஷத்’ என்ற பிராமணர் சங்கமும், பெண்கள் அமைப்பும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மோடி அரசின் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரானஆனந்த்குமார் ஹெக்டே பங்கேற்றுப் பேசினார். அதில் “மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பெற்றோர்களின் இரத்த அடையாளங்கள் இருப்பதில்லை” என்று பேசியுள்ளார். சரியாகச் சொன்னால் ஆபாசமாக ஏசியுளளார்.

மேலும், “அத்தகைய இரத்த அடையாளங்கள் தான் ஒரு மனிதனுக்கு சுயமரியாதையைத் தருகின்றன. ஒருவர் தன்னை, முசுலீம், கிருஸ்துவன், பிராமின், லிங்காயத், இந்து என ஏதேனும் ஒன்றாக அடையாளப்படுத்திக் கொண்டால் நான் சந்தோசம் அடைவேன். ஆனால் பிரச்சினை தங்களை மதச்சார்பற்றவர்கள் என யாரேனும் சொல்லும் போது தான் எழுகிறது” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதனை மாற்ற வேண்டியது இருக்கிறது. பல சமயங்களில் அது மாற்றப்பட்டும் இருக்கிறது. அதை மாற்றுவதற்காகத் தான் நாங்கள் வந்திருக்கிறோம்.”என்று கூறியிருக்கிறார். இது வெறுமனே, முன்னால் அமர்ந்திருக்கும் பார்ப்பனக் கூட்டத்தைப் பார்த்து ஏற்பட்ட உற்சாகத்தால் பேசிய பேச்சல்ல. இது ஆர்.எஸ்.எஸ் -ன் பழங்கனவு.
இதே ஆனந்த்குமார் ஹெக்டெ கடந்த 2016 -ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் “இசுலாம் இருக்கும் வரை தீவிரவாதம் இருக்கும். இசுலாம் மதத்தை ஒழித்துக் கட்டாமல் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது.” எனப் பேசி வெளிப்படையாக மதவெறியை கக்கியுள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டே ஒரு காவிக் கிரிமினல் மட்டுமல்ல.
கடந்த 2017 ஜனவரியில், தனது தாயை சேர்த்திருந்த மருத்துவமனையில் தகராறு செய்து அங்கே 3 மருத்துவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இது மருத்துவமனையில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. ஹெக்டேயின் இந்த ரவுடித்தனத்தின் அடித்தளம் 1993 -ம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் நடத்தப்பட்ட பட்கல் கலவரத்திலேயே போடப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் காலூன்றி இருக்கும், கர்நாடகக் கரையோரப் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.- நடத்திய பல மதக் கலவரங்களிலும், பல சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த கிரிமினல் தான் ஹெக்டே. இது போன்ற வெறுப்புப் பேச்சுக்களால் பல்வேறு கலவரங்களை நடத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆதர்ஷ நாயகனாக வளர்ந்தவர் தான் ஹெக்டே. அதற்கான பரிசு தான் இந்த மத்திய அமைச்சர் பதவி.
தனது பரிவாரங்கள் மூலம் நாடு முழுவதும் மிகப்பெரும் கலவரங்களை நடத்தி அந்த இரத்தத்தின் மீது தான் இன்றுவரை ஆட்சியைப் பிடித்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல். இந்தக் கும்பலின் முன்னணி அடியாட்களாக இத்தகைய ஹெக்டேக்களும், சாக்சி மகராஜ்களும், சாத்வி நிரஞ்சன் ஜோதிக்களும் மக்களைத் துண்டாடும் விதத்தில் பேசி வருகின்றனர். இந்த காவி பயங்கரவாதிகளை ஒழிக்காமல் இங்கு மதக் கலவரங்கள் ஓயாது.
அடிக்கொள்ளியை உருவினால் தானே தீயை அணைக்க முடியும்?
மேலும் :