டெல்லி – லக்னோ இடையே முதல் ‘கார்ப்பரேட்’ ரயில் வெற்றிகரமாக இயக்கியதன் மூலம், பல தொழிற்சங்கங்கள் எதிர்த்தபோதும், இந்திய ரயில்வே மேலும் பல ரயில்களை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க ஆர்வம் காட்டுகிறது.
குறைந்தது மூன்று விமான நிறுவனங்கள், இத்தகைய ரயில்களை இயக்குவதில் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி – லக்னோ தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து மும்பை – அகமதாபாத் இடையேயான ரயில் சேவை பயன்பாட்டுக்கு விட தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதிகப்படியான நட்டத்தின் காரணமாக, 50 அதிக தேவை உள்ள பாதைகளில் கிட்டத்தட்ட 150 ரயில்களை தனியாருக்கு விட இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நீண்ட தூரம் அல்லது இரவு பயண ரயில்களை தனியாருக்கு விட ரயில்வே விரும்புகிறது. அதில் டெல்லி – மும்பை, டெல்லி – லக்னோ, டெல்லி – ஜம்மு/கத்ரா, டெல்லி – ஹவுரா, செகந்திராபாத் – டெல்லி, டெல்லி – சென்னை, ஹவுரா – சென்னை, ஹவுரா – மும்பை ரயில்பாதைகளும் அடங்கும்.
அதோடு, இரண்டு நகரங்களுக்கிடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கவும் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது ரயில்வே துறை. மும்பை – அகமதாபாத், மும்பை – புனே உள்ளிட்ட 12 பாதைகள் அடங்கும். அதோடு, மும்பை, கொல்கத்தா, சென்னை, செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்களில் புறநகர் ரயில்களை இயக்கவும் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது, 150 ரயில்களை இயக்குவதற்கான ஏலம் விடுவதற்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் இந்திய ரயில்வே உள்ளது. இந்த 16 பெட்டிகளைக் கொண்ட 150 ரயில்களின் விலை ரூ. 22,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் குறைந்தது 12 ரயில்கள் முதல் 50 ரயில்கள் வரை ஏலம் எடுக்க முடியும்.
படிக்க:
♦ மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?
♦ இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
நட்டத்தில் இயங்கும் விமான நிறுவனங்கள் ரயில்கள் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், புதிய ரயில்களை வெளியிலிருந்து தனியார் நிறுவனங்கள் வாங்குமா அல்லது ரயில்வேயிடமிருந்து குத்தகை அடிப்படையில் ரயில்கள் பெறுவார்களா என்பது குறித்து தெளிவான பதிலை அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
தனியார் நிறுவனங்கள் ரயில்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டாலும் பாதுகாப்பு தொடர்பான விசயங்களை தன்வசமே வைத்திருக்கும் என்கிறது.
சிக்னல் அமைப்புகள், லோகோ பைலட்டுகள், பிளாட்ஃபார்ம் போன்றவை ரயில்வே வசமே இருக்கும் எனவும் கேட்டரிங், பராமரிப்பு, டிக்கெட் விலை நிர்ணயம் மற்றும் பரிசோதனை, தகவல்பரிமாற்றம் போன்றவை ரயில்களை இயக்கும் தனியாரின் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் ரயில்வே சொல்கிறது.
அதாவது பணம் கொட்டும் துறைகளைத் தனியாரிடம் விட்டுவிட்டு, சிக்னல், தண்டவாளப் பராமரிப்பை மட்டும் அரசாங்கம் கையில் வைத்திருக்கும். அரசு தண்டவாளத்தை சுத்தப்படுத்தி வைக்க அதில் இரயில் விட்டு பணம் பண்ணப் போகிறார்கள் கார்ப்பரேட்டுகள் !
ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. தனது பங்கில் 12.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டுள்ளது. டெல்லி – லக்னோ தேஜஸ் ரயில் மூலம் ஒரு நாளில் ரூ. 16 லட்சம் முதல் 17 லட்சம் வரையிலும் ரூ. 13 லட்சம் குத்தகை கட்டணமாகவும் பெறும் என ரயில்வே துறை தெரிவிக்கிறது.
தனியாருக்கு விடுவதன் மூலம், ரயில்வே சேவை என்பதை முழுமையான வர்த்தகமாக மாற்றிவிட்டது மோடி அரசாங்கம். விமானங்களைப் போல பளபளப்பான பயணமாக்குகிறோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கட்டண கொள்ளையடிப்பது உறுதியாகிவிட்டது.
கலைமதி
நன்றி : தி வயர்.