“நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையை நவீனப்படுத்த எந்த வகையான பெருவீத முதலீடும் செய்வதற்கான நிதி வாய்ப்பு அரசாங்கத்திடம் இல்லை. ஆகையால் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுத்துறை தனியார் கூட்டின் மூலம் இதனைச் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இரயிலை இயக்குவதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்புவிடுக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது அதற்கான அறிவிப்பும் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரயில் சேவைகளை வழங்கும் தெற்கு ரயில்வே உள்ளிட்ட மொத்தம் 6 ரயில்வே மண்டலங்களின் தலைமை இயக்க மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள 23.09.2019 தேதியிட்ட சுற்றறிக்கையில் ரயில்களை தனியார்மயமாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து மதுரை, கோவை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட 150 வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ள ரயில்வே வாரியம், அவற்றில் எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாம் என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்கும்படி மண்டல ரயில்வே துறை நிர்வாகங்களைக் கேட்டிருக்கிறது. இதுகுறித்து ஒப்பந்தப் புள்ளிகள் மேற்கொள்வதற்கான கூட்டம் செப்டம்பர் 27 காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறவிருக்கிறது.

ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கை, முந்தைய பாஜக ஆட்சியிலேயே தொடங்கி விட்டது. எதிர்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போடப்பட்டன. தற்போது தனி பலத்துடன் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் மானியக் கோரிக்கை மீது எழுந்த கேள்வியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் “ரயில்வேயை தனியார்மயமாக்கமாட்டோம்” என்று தெரிவித்தார். அந்த வாக்குறுதி எல்லாம் பொய் பித்தலாட்டம் என்பது தற்போது உறுதியாகிவிட்து.

முதல் கட்டமாக தங்க நாற்கர பாதை என்றழைக்கப்படும் சென்னை – மும்பை, மும்பை – டெல்லி,  டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை ஆகிய முக்கிய வழித்தடங்களில்  இயக்கப்படும் ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள்தான் அதிக மக்கள் பயணிக்கும் ரயில்களாக இருக்கிறது.

படிக்க:
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !
♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!

அதேபோல் பெரும்பாலான அடித்தட்டு ஏழை எளிய மக்கள் பயணிப்பது புறநகர் மின்சார ரயில்கள் தான். இந்த வழித்தடங்களைக் கூட தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களில் இயங்கும் ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து வழித்தடங்களிலும் ஓடும் ரயிலை தனியாருக்கு விட அறிவிப்பு விட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து சென்னையின் உயிர் நாடியாக இருக்கும் யூனிட் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

தனியாரிடம் ஒப்படைக்க அரசு கூறும் காரணம் “ரயில் பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்கள் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் ரயில்களை இயக்குவார்கள்; மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்; நவீன வசதிகள் கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்; இதனால் பயணிகள் மிகவும் விரைவாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க முடியும்” என்று ரயில்வே வாரியம் கூறியுள்ளது.

ரயில்வே வாரியத்தின் இந்த விளக்கம் குறித்து தனது கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பாமக ராமதாஸ், “மேலோட்டமாகவும், மேட்டுக்குடி மக்களின் கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது இவை உண்மைதான் என்பதை மறுக்க முடியாது. ரயில்களை தனியார்மயமாக்குவதால் ஏற்படும் நேர்மைறையான பயன்களை கூறியுள்ள ரயில்வே வாரியம், எதிர்மறையான விளைவுகளை மறைக்க முயன்றிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனியார் ரயில்கள் இயக்கப்பட்டால் அவற்றின் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47% மானியமாக வழஙப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து ரயில்வேதுறை ஓரளவு சமாளிக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரூ.42,000 கோடி இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில் கட்டணம் 28% முதல் 244% வரை உயர்த்தப்படும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேருந்துக் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கட்டணம் குறைவு என்பதால், அவை ஏழைகளிலும் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன. தனியார் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்புக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு ரயில் பயணம் என்பது எட்டாக்கனியாகி விடும்.

படிக்க:
மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?
♦ “ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !

சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் ஆகிய நகரங்களின் புறநகர் ரயில்களும் தனியார்மயமாக்கப்படும் என்பதால் குறைந்த கட்டணத்தில் புறநகர் ரயில்கள் மூலம் அன்றாடம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். புறநகர் ரயில் கட்டணங்களில் 66% மானியம் வழங்கப்பட்டு வருவதால், அவை தனியார்மயமாக்கப்படும் போது 3 மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படும். மாதாந்திர பயணச்சீட்டு முறையும் ஒழிக்கப்படும் என்பதால் புறநகர் ரயில்களில் பயணிப்பவர்கள் மாதம் ரூ.2000 வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும் அல்லது அந்த பணியிடங்கள் ஒழிக்கப்படக்கூடும். இவை எதுவுமே ரயில்வே துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது.

இது ஏழை மக்களின் நலனில் அக்கறையற்ற, தனியார் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த முடிவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும்போது இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து முறையை தலைகீழாகச் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்பு ஒரு காலாத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரயிலில் பயணிப்பது எப்படி எட்டாக்கனியாக இருந்ததோ அதேபோலத்தான் இனி வரும் காலத்திலும் ரயில் பயணம் என்பது ஏழைகளுக்கு பெருங்கனவாகிவிடும்.!

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க