திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சிறுவர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாகவும் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சிறுவர்கள் மத்தியில் திணிக்கப்படும் போதை கலாச்சாரம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தின் கோர விளைவை எடுத்துக்காட்டியுள்ளது. ஆனால்,
இதனையெல்லாம் புறக்கணித்துவிட்டு சிறுவர்கள் தலித்துகள், ஜென் சி (Gen Z) தலைமுறையினர் என்ற அடிப்படையில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இதனை உடைக்கும் விதமாக சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியான இப்பதிவுகளை இங்கே வெளியிடுகிறோம்.
-வினவு
000
உண்மையில் யார் குற்றவாளி?
எந்த கோணத்தில் அல்லது எந்த வடிவத்தில் வன்முறை நிகழ்ந்தாலும் வன்முறையை பற்றிய கருத்துகளையோ, அது சார்ந்த பாதிப்பு குறித்தோ பேசுவதற்குள், எப்படியாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்மம் பரவத் துவங்கி குற்றங்கள் திசை திருப்பப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால், செய்தி பரவிய சில மணித்துளிகளிலேயே விவாதங்கள் தொடங்கிவிடும். குற்றவாளி யார்? குற்றங்கள் குறைக்க என்ன வழி? இதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் எப்படி மீண்டு வருவது? அரசின் தவறு, கடமைகள் என்ன? என இப்படியெல்லாம் அந்த விவாதங்கள் இருக்காது. இவற்றை பேச வேண்டிய தேவை உள்ளவர்களும் கட்டாயத்தின் பேரில் கலாச்சார காவலர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவள் அந்த உடை போட்டிருக்க கூடாது – இல்லை அது அவளது உரிமை. அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கக் கூடாது – குற்றவாளிகள் மட்டும் செல்லலாமா? அந்த பொண்ணு NO சொல்லி இருக்கனும் – அந்த பொண்ணு YES சொல்லவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்போது திருத்தணி அருகே ரயிலில் வடமாநில தொழிலாளி ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் தாக்கிய சம்பவமும் இந்த திசையில்தான் நகர்கிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக சகமனிதன் எனக்கூட உணராமல் இவ்வளவு பெரிய வன்முறை. இந்த தாக்குதலை அவர்களே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். மிக முக்கிய காரணம் அந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்தது. 18 வயது கூட நிரம்பாத சிறுவர்களிடம் எப்படி கஞ்சா இவ்வளவு எளிதாக கிடைக்கிறது? போதையிலும் பொதுவெளியில் பயணிக்க முடிகிறது, அதிலும் ஆயுதங்களுடன். எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக யோசித்தாலே இது குறித்த அடிப்படை புரிதல் ஏற்படும். கூல் லிப் முதல் கஞ்சா வரை மாணவ, மாணவிகளுக்கு எளிதாக கிடைக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் முக்கிய பொறுப்பு. அதே அரசு அவர்களை அரசியல்படுத்தவிடாமல் முயன்றதன் முக்கிய விளைவுதான் போதை அடிமைதனம், ரீல்ஸ் மோகம் மற்றும் அவற்றின் உச்சமான இதுபோன்ற வன்முறைகள்.
இந்த திருத்தணி சம்பவத்திலும் போதை கலாச்சராம் இவ்வளவு தீவிரமடைந்ததன் காரணம், சிறுவர்கள் போதையின் பக்கம் திசை மாறியதற்கான காரணங்கள், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், அரசின் மெத்தனப்போக்கு மற்றும் இயலாமை, இதன் விளைவுகள் இவற்றைப்பற்றி எழும் விவாதங்களைவிட அந்த சிறுவர்களின் தோற்றத்தைவைத்து “இவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்” என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர். புள்ளிங்கோ பசங்க என்றாலே இப்படித்தான். அதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் தான் புள்ளிங்கோ-க்கள் என சமூக வலைதளத்தில் தலித்துகள் மீதான வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்ப ஆரம்பித்துள்ளனர். மற்றொருபுறம் தமிழ் சினிமாவில் சமூக அக்கறையோடு விளிம்புநிலை மக்களின் கதைகளையும் திரையில் கொண்டுவரும் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்றோரின் படங்களில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளே இப்படிப்பட்ட வன்முறைகள் நிகழ காரணம் என ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு குரல் கொடுப்போரின் மீதும் வன்மங்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படிக்கூறும் ஒருவரும் கமர்ஷியல் என்ற பெயரில் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு என கொலைகளை ஹீரோயிசமாக காட்டும் லோகேஷ் போன்றவர்களையும், துளியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அதில் நடித்து இளைஞர்களை திசை திருப்பும் விஜய், ரஜினி போன்றவர்களின் படங்களையும் பார்த்ததில்லை போல. இந்த நிகழ்வு இன்னும் ஒரு வாரத்திற்கு அரசியல்வாதிகளுக்கு ஆளும் கட்சியை குறை சொல்லுவதற்கான ஒரு செய்தி மட்டுமே. வழக்கம்போல நடந்த சம்பவம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பேச முயலும் சமூக அக்கறைகொண்டவர்களும் அதைவிட்டுவிட்டு இப்படி அவதூறுகளை பரப்புபவர்களுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சமூக வலைத்தளத்தில்: தாரகை
***
வன்முறை எப்பொழுதும் தீர்வாகாது!
‘வடக்கன்’ என்று சொல்லி வடமாநிலத் தொழிலாளர்களைக் கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து, வடமாநிலத்தவர் மீதான ஏளனப் பிம்பத்தைக் கட்டமைத்து, அவர்கள் மீதான வெறுப்புணர்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தூண்டி, அதன் மூலம் வருவாய் பார்த்தவர்களும், அதை ரசித்தவர்களும் இன்று சமூகம் சீர்கெட்டுவிட்டதாக அங்கலாய்த்து கொள்கிறார்கள்.
ஆம், சிறார்கள் செய்யும் எவ்விதக் குற்றங்களையும் நம்மால் நியாயப்படுத்த முடியாது, அப்படி நியாயப்படுத்துவதும் நியாயம் அல்ல! ஆனால் ஒரு நிமிடம் ‘ஏன்?’ என்று யோசித்தால் புரியும். சமூகம் என்பது ஏதோ வேற்றுக் கிரகவாசிகளால் கட்டமைக்கப்பட்டது அல்ல; இங்கு இருக்கும் நம் அனைவராலும்தான் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அரசு, அதிகாரிகள், குடும்பம், சுற்றம் ஆகியவற்றால் தான் இந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அந்தச் சிறார்கள் மட்டுமல்ல, நாமும்தான் குற்றவாளிகள்! சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட நாமும்தான் காரணம். இதைச் சிந்திக்காமல், ‘வடசென்னை பசங்க’, ‘புள்ளிங்கோ’ என்று அவர்கள் மீது வெறும் வெறுப்பை மட்டும் உமிழ்வது ஏற்புடையது அல்ல.
ஒருவரை அவரின் வாழ்விடத்தை வைத்தோ, உண்ணும் உணவை வைத்தோ, புறத்தோற்றக் காரணிகளான உடுத்தும் உடை, சிகையலங்காரம், வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றை வைத்தோ குற்றப்பின்னணியுடன் சேர்த்து பேசுவது சரியல்ல. ஆளும் அரசு, போதைப்பொருட்களைச் சிறார்களிடையே புழங்கும் அளவிற்குச் சுலபமாக விட்டுவைத்திருக்ககூடாது. மேலும் இம்மாதிரியான புழக்கம் எங்கு அதிகம் இருக்கிறது என்பதைக் கண்காணித்து அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் முற்றிலும் அரசின் கையில்தான் இருக்கின்றன. அதே போல, புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி போன்ற ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக உள்ளன.
கானாப் பாடல்கள், ரீல்ஸ் மோகம் மட்டுமே இந்தக் குற்றத்திற்குக் காரணங்கள் அல்ல. போதைப் பொருட்களின் பயன்பாடுதான் மிக முக்கிய காரணம்.
அதே போல, “இந்தச் சிறார்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் அவர்கள் திருந்திவிடுவார்களா? இவர்களை அடிக்கவேண்டும், சுட்டுத்தள்ள வேண்டும்…” என்று கூறுபவர்கள் உண்மையிலே இந்தச் சிறார்களை விட மிகவும் மோசமானவர்கள்! உண்மையிலேயே இவர்கள்தான் சமூகத்திற்கு எதிரானவர்கள். இவர்களும் இதையெல்லாம் கடந்துதான் வந்து இருப்பார்கள். அதே போல, இப்படிச் சொல்பவர்கள் அனைவரும் யாராக இருக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டியுள்ளது. எந்தவொரு தண்டனையின் நோக்கமும் குற்றவாளியை சீர்படுத்தி நெறிப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அதை விடுத்து உயிரைப் பறிப்பதாக இருக்கவேண்டும் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை.
இன்னுமொரு கும்பல் 2000க்குப் பிந்தைய தலைமுறைகள்தான் தான்தோன்றித் தனமாக இருக்கிறார்கள், நாங்கள் எல்லாம் அப்படி இல்லை; 90-களில் எல்லாம் இப்படியான சம்பவம் இல்லை, வாத்தியார்கள் கண்டிப்புடன் இருந்தார்கள், அடித்து நல்வழிப்படுத்தினார்கள், ஆனால் இன்றைய தலைமுறையினர் வாத்தியாரையே அடிக்கிறார்கள், அல்லது அடித்தால் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என்றெல்லாம் கூறுவது தீர்வை நோக்கி நகராமல் இன்னும் பழமைவாதத்தன்மையுடன் இருப்பதையே வெளிக்காட்டுகின்றன. அடித்து நல்வழிப்படுத்துவதும் வன்முறைதான்! இப்படி ஆசிரியர்கள் அடித்ததால் எத்தனைப் பேரின் கல்வி பாழானது? அது எவ்வாறு ஒருவரை உளவியல் ரீதியாக சீர்குலைக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்றப்படி, நாம் கண்டிப்பாக மாறியாக வேண்டும்.
அதைவிடுத்து 90-களில் சிறார்கள் இப்படி இல்லை, புள்ளிங்கோதான் பிரச்சனை, ரீல்ஸ்தான் பிரச்சனை என்றெல்லாம் கூறி பிரச்சனையைத் திசை திருப்புவது சரியல்ல. போதைப் பொருள் புழக்கத்தை அரசு மிகக் கூர்மையாக ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதில் மட்டும் மாற்றுக்கருத்தில்லை.
சமூக வலைத்தளத்தில்: பானுபிரியா
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











