நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கூட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. அதே விமானத்தில் அருகில் பயணித்த 31 வயதுடைய ஆண் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடன்றி சுய இன்பமும் செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரிலிருந்து மும்பை நோக்கி 30.06.2017 அன்று காலை 6.30 மணிக்குப் புறப்பட்ட விமானம் மும்பையை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் 31 வயதுடைய சபீன் ஹம்சா அருகிலிருந்த பெண் பயணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதையுணர்ந்து அவரைச் சீண்ட ஆரம்பித்துள்ளார்; திடீரென அந்தப் பெண் விழித்துப் பார்க்கும்போது அவன் சுய இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, உடனடியாக அபாய எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளார். விரைந்து வந்த விமானப் பணியாளர்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போது பேண்ட் ஜிப்பை சரிசெய்து கொண்டே தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதிட்டுள்ளார் அந்தக் காமுகன். இதையடுத்து விமானப் பணியாளர்கள் போலீசுக்குத் தகவல் தரவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு 10 நாட்களுக்கு முன்னரும் நடந்துள்ளது. ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் 56 வயது காமுகர் ஒருவர் 44 வயது பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடன்றி சுய இன்பமும் அனுபவித்துள்ளார். இத்தனைக்கும் அந்தப் பெண்மணி புகார் கொடுத்து விடுவேன் என்று பலமுறை எச்சரித்தும் அது குறித்து கொஞ்சம் கூட கவலையின்றி மேலும் தொந்தரவு கொடுத்துள்ளார் அந்த காமாந்திரக் கனவான். இறுதியில் அந்தப் பெண் புகார் கொடுக்கவே அவர் கைது செய்யப்பட்டு இப்போது பிணையிலும் வந்துவிட்டார்.
விமானப் பயணம் என்பது எப்படிப் பார்த்தாலும் சாமானிய மக்களுக்கு இல்லை. சாமானிய மக்கள் பயணிக்கும் பேருந்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் பல சம்பவங்கள் உடனுக்குடனே மக்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுகின்றன. இதில் பெண்கள் சகித்துக் கொள்ளும் அளவுக்கேற்ப குற்றவாளிகள் தமது பொறுக்கித்தனத்தை தொடர்கிறார்கள். ஆனால் விமானப் பயணத்தில் பயணிக்கும் மேன்மக்களிடத்தில் இது இப்படி நடக்கிறதென்றால் என்ன காரணம்?
ஏற்கனவே பல விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் செய்த கனவான்கள் குறித்து பல வழக்குகள் உண்டு. தமது வர்த்தக, தொழில், அரசியல் அதிகாரத்தை வைத்து இவர்கள் அப்பணிப்பெண்களை மிகவும் மலிவாக பார்க்கின்றனர். அதுவே கூட பயணிக்கும் பெண்களையும் அப்படி பார்க்க வைக்கிறது.
சமீபத்தில் சிவசேனா எம்.பி ஒருவர் ஏர் இந்தியா பணியாளரை அடித்த சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். அதற்கு பிறகும் அந்த எம்.பி திமிராகவே அதை நியாயப்படுத்துகிறார். விமானப்பயணம் உயரத்தில் இருப்பது போலவே அதில் பயணிக்கும் பலரும் தமது அதிகாரமும் உயரத்தில் இருப்பதால் இத்தகைய அருவெறுப்புக்களை கூசாமல் செய்கின்றனர்.
பெண்களைத் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையேயில்லை என்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. அனால் அதே பாரதத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை எதிர்த்து ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்தாலும் ஒட்டுமொத்த சமூகமோ, பார்ப்பனியத்தின் ஆணாதிக்க மனோபாவத்தில் ஊறிப் போய் இருக்கிறது.
சாதாரண ஆணை விட அதிகாரத்தில் இருக்கும் பொறுக்கிகள் தமது வக்கிரத்தை நியாயப்படுத்த பதவி, அந்தஸ்து, அரசியல் பலத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த அதிகாரத்தை வெட்டினால் அந்த பொறுக்கித்தனம் அழிந்து போகும்.
செய்தி ஆதாரம்:
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி