privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க" நமீதா அழைக்கிறார் " – நாசரேத் ஆயர்

” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்

-

ஓரே நேரத்தில் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கிறது? ஸ்ரீநகரில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். பீகாரில் திசை திரும்பிய கோசி ஆற்றின் வெள்ளத்தால் பல இலட்சம் மக்கள் உடமைகளை இழந்து வர மறுக்கும் நிவாரணத்திற்காகத் தவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் டாடாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்க விவசாயிகள் போராடுகிறார்கள். ஒரிசாவில் சங்கபரிவார குண்டர்களுக்கு அஞ்சி பல்லாயிரம் கிறித்தவப் பழங்குடிகள் காடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வடக்கிலிருந்து வரிசைப்படி வரும் இக்காலத்தில்மின்வெட்டால் இருண்டு கிடக்கும் தென்கோடித் தமி்ழ்நாட்டில் என்ன நடக்கிறது? நடிகை நமீதாவின் விஜயத்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல்! வடக்கே போராட்டம்; தெற்கே டிராபிக் ஜாம்!

நமீதாவால் மையம் கொண்ட அரசியல் புயல் என்று இந்த தூத்துக்குடி விஜயத்தைக் குமதம் ரிப்போர்ட்டர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அரசியலில் கொட்டை போட்ட இரா. ஹென்றி எனும் பிரமுகர் முதலில் அ.தி.மு.கவிலும் பின்பு காங்கிரசிலும் காலம் தள்ளிக் கடைசியில் புரட்சித் தலைவியிடமே தஞ்சமடைந்திருக்கிறார். அம்மா கட்சியில் சேர்ந்த உற்சாகத்தில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜெபா ஜூவல்லர்ஸ என்றொரு நகைக்கடையைத் திறந்திருக்கிறார். இதனைத் திறந்து வைக்கத்தான் நமீதா முத்து நகருக்கு வந்தார்.

அரசியலிலேயே பிரம்மாண்டமாக ஏதாவது செய்து பெயரெடுத்த ஹென்றி தனது சொந்த நகைக் கடையை மட்டும் சிம்பிளாக திறப்பாரா என்ன? ஊர் முழுக்க நமீதாவின் கட்அவுட்டும், பேனரும் , சுவரொட்டிகளையும் இறைத்திருந்தார். உள்ளூர் சேனல்களில் நமீதா வாராரு, நகைக்கடையைத் திறப்பாரு என்று பாடல்கள் இடையறாது ஒளிபரப்பாகின. காலை ஒன்பதே முக்காலுக்கு கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதிகாலையிலிருந்தே இரசிகர்கள் வெள்ளமெனத் திரண்டனர். டி.எஸ்.பி, மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐம்பது போலீசாரின் தலைமையில் பாதுகாப்பு போடுமளவுக்கு கூட்டம். இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் நெரிசல். தென்மாவட்டங்களில் நவரசக் கோமாளி கார்த்திக், நாட்டாமை சரத்குமார், கேப்டன் விஜயகாந்த், குண்டுகல்யாணம், குமரிமுத்து யார் வந்தாலும் கூட்டம் சேருவது என்ன கணக்கென்று புரியவில்லை.

நமீதாவுடன் நாசரேத் ஆயர்!
நமீதாவுடன் நாசரேத் ஆயர்!

மதுரை வரை விமானத்தில் வந்த நடிகை பின்னர் காரில் தூத்துக்குடி வந்து சேர்ந்தார். நமீதா வருகிறார், வந்து கொண்டேயிருக்கிறார் என்று அறிவிப்பு கொடுத்தவாறு கூட்டத்தைச் சூடேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு சர்வ கட்சிப் பிரமுகர்களையும் ஹென்றி அழைத்திருந்தார். நமீதாவின் முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்றஞ்சி யாரும் வராமலில்லை. பின்னே மேடைக்கு அருகாமையில் அந்த அம்மையாரை தரிசிக்கும் வாய்ப்பை யார்தான் இழப்பார்கள்?

நகைக்கடை விளம்பரத்தில் நமீதாவைப் போட்டவர் நகைக்கடை வைக்குமளவு சம்பாதிக்க வழி செய்த புரட்சித் தலைவி அம்மாவை கண்டுகொள்ளவில்லையே என சில அ.தி.மு.க தொண்டர்கள் கிசு கிசுக்க அரசியல் வேறு, தொழில் வேறு என்றாராம் ஹென்றி. இதை அம்மாவும் ஏற்றுக்கொள்வார் என்றுதான் தோன்றுகிறது. அம்மாவின் சேனல் அழகிரியின் கேபிள் நிறுவனத்தில் தெரிவதும், அம்மாவின் கோல்டன் மிடாஸ் சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பதும் சரியென்றால் இதுவும் சரிதானே? அரசியலில் எவ்வளவுதான் சண்டை போட்டாலும் தொழிலில் மட்டும் அது மணற் கொள்ளையோ, ரேசன் அரிசி விற்பதோ, கிரானைட் விற்பனையோ, ரியல் எஸ்டேட் தொழிலோ எதுவாக இருந்தாலும் ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் மனமாச்சரியங்களில்லாமல் ஒரு உண்மையான ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அரசியலில் வெட்டு குத்து இருந்தாலும் அரசியலால் கைவரப்பெற்ற தொழிலில் அவரவர் எல்லை என்ன என்பதை எழுதாத ஒப்பந்தம் போல ஒற்றுமையாக கடைபிடிப்பார்கள்.

நாம் தூத்துக்குடியைத் திணறடித்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க விஜயத்திற்குத் திரும்புவோம். எல்லோரையும் காக்க வைத்து டென்ஷனாக்கிய நமீதா சரியாக பதினொன்றரை மணிக்கு பல கார்கள் பவனி வர ஒரு மந்திரி ரேஞ்சில் வந்திறங்கினார். இறுதியில் பரம்பொருளைக் கண்ட பரவசத்தில் இரசிகர்கள் எழுப்பிய கூச்சல் கடல்தாண்டி கொழும்பிலும் எதிரொலித்ததாம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் சிறிய தடியடி நடத்தியபோது என் செல்லங்களை அடிக்காதே என்று மழலைத் தமிழில் பேசிய நடிகை கூட்டத்திற்கு எண்ணிறந்த பறக்கும் முத்தங்களை அள்ளி விட்டாரம். பெண் காவலர்கள் அவருடன் புகைப்படம் எடுப்பதற்குப் போட்டிபோட, மேடையிலிருந்த சர்வகட்சிப் பிரமுகர்கள் அவரையே பரவசத்துடன் பார்க்க, மேடையில் ஐந்தே முக்கால் வார்த்தைகள் பேசியபின் நகைக்கடையைத் திறந்த அம்மையார், பேசியபடி சில இலட்சங்களை தரிசனக் கட்டணமாக வாங்கிவிட்டு சென்னைக்கு விமானமேறிப் போய்விட்டார். இத்துடன் கதை முடியவில்லை, இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

மேடையில் நமீதாவுக்கு அருகாமை இருக்கையில் அமரும் பாக்கியம் பெற்றவர் நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் அவர்கள். பொதுவாக பல நிகழ்ச்சிகளில் ஆயருக்காக மற்றவர்கள் காத்திருப்பார்கள். இங்கே எல்லோரையும் போல நமீதாவுக்காக ஆயரும் காலையிலிருந்தே காத்துக்கொண்டிருந்தார். ஒரு நடிகை திறக்கும் நகைக்கடையில் ஆயருக்கு என்ன வேலை?

நகைக்கடை முதலாளி பெரும் அரசியல் பிரமுகர் என்பதோடு கிறித்தவராகவும் இருக்கிறார் என்பதால் ஆயரை அழைத்திருக்க வேண்டும். இதே அழைப்பை கடற்கரை மீனவர் கிராமங்களில் இருக்கும் ஒரு ஏழை அம்புரோஸோ, அந்தோணி சாமியோ தங்களது வீட்டுநிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டிருந்தால் ஆயர் வரமாட்டார். என்ன இருந்தாலும் பணக்கார மந்தைகளுக்குத்தான் தேவனது கிருபை கிடைக்கும். அ.தி.மு.கவில் மாவட்ட செயலாளராக இருந்ததினால் அதுவும் ஜெயா சசி கும்பல் தமிழகத்தை மொட்டையடித்த காலத்தில் புறங்கையை ருசித்து சம்பாதித்தவர் ஹென்றி. இதை தூத்துக்குடி நகரமே அறியும் என்றால் ஆயருக்கு மட்டும் தெரியாதா என்ன? அரசியலிலும், சமூக வாழ்க்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக முளைத்திருக்கும் இந்த தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை நம்பித்தான் திருச்சபையும் இயங்க வேண்டியிருக்கிறது.

நடிகையின் விஜயம் நகைக்கடையைப் பிரபலமாக்குவதற்கும், நாசரேத் ஆயரின் வருகையின் மூலம் தேவனின் கிருபை கிடைப்பதற்கும் ஹென்றி விரும்பியிருக்கிறார். என்னதான் மக்கள் தாலிகளை அறுத்து உருக்கி நகைக்கடை உருவாக்கினாலும் அதுபற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஒரு ஊழல் பேர்வழியை சர்வகட்சி ஊழல் பேர்வழிகள் அங்கீகரிக்கும் போது ஆயரும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? யாரும் இதை ஒரு பாவச்செயலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆயருக்கும் தெரியும். உண்மையில் பல திருச்சபைகள் மேல்மட்ட கிறித்தவர்களின் பிரச்சினைகள் அல்லது பஞ்சாயத்துக்களைத்தானே கவனிக்கின்றன?

இறைச்சலுடன் சிரித்தவாறு நமீதா ரசிகர்களைக் கலாய்த்துக் கொண்டிருந்தபோது அதையே புன்னகை பூத்த முகத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் நாசரேத் ஆயர். இதே நேரம் ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடிக் கிறித்தவ மக்கள் உயிரிழந்து, உடமையிழந்து, இந்துமதவெறியர்களுக்கு அஞ்சி காடுகளில் ஒளிந்தவாறு அலைகிறார்கள். இதற்காக இந்திய கத்தோலிக்கத் திருச்சபை தனது பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறைவிட்டு அடையாள எதிர்ப்பைக் காட்டியது. அதையொட்டி தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் நாசரேத் ஆயர் கலந்து கொண்டு கடமையைச் செய்தார். மற்றபடி ஜெபச்சந்திரனப் போன்ற ஆயர்கள் எவரும் தெருவில் இறங்கிப் போராடவில்லை. ஒரிசாவின் சபிக்கப்பட்ட கிறித்தவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத ஆயர் நகைக்கடைக்கும், நடிகைக்கும் காலத்தை அள்ளி வழங்குகிறார்.

கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!
கருப்பு ஏசுநாதர்; தலித்துக்களுக்கு தேவகிருபை கிடையாது!

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் கிறித்தவ திருச்சபைகள் நவீன சிற்றரசர்களைப் போலத்தான் நடந்து கொள்கின்றன. இந்தச் சொத்துக்களை அனுபவிப்பதில் இவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டையும் நடப்பது உண்டு. பேராயரிலிருந்து கீழ்மட்டப் பாதிரியார் வரை சாதி ரீதியாக சேர்ந்து கொண்டு ஆதிக்கம் செய்வது தமிழகத்தில் சகஜம். தாழத்தப்பட்ட கிறித்தவ மக்களின் தெருவுக்கு இன்றும் கன்னி மேரியோ, தேவனோ வருவதில்லை. ஆயர்களே சாதி ஆதிக்கத்தில் ஊறியிருக்கும்போது, தேவாலயப் பிரார்த்தனையில் மட்டும் சாதி போய்விடுமா என்ன? கல்லறைகளில் கூட பல ஊர்களில் தலித் மக்களின் கல்லறைகளை சாதி ஆதிக்கச் சுவர் பிரித்திருக்கிறது. இப்படி நடை முறை வாழ்க்கையில் எந்தத் துரும்பையும் எடுத்துப் போடாமல்தான் திருச்சபைகள் இயங்கி வருகின்றன.

மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் எளியமக்களை சுரண்டியே பலர் தனித்தனி சபைகளை உருவாக்கியிருக்கின்றனர். இந்த சேவைகள் படம்பிடிக்கப்பட்டுகிறித்தவம் உளுத்துவரும் மேலை நாடுகளுக்கு அனுப்பிப் பணம் திரட்டப்படுகிறது. நம்மூரில் தழைக்காத தேவனின் ராஜ்ஜியம் கீழை நாடுகளிலாவது பரவட்டுமே என பல தனிநபர்களும் நிறுவனங்களும் வாரி வழங்குகின்றன. இயேசு அழைக்கிறார் கூட்டத்தை வைத்தே செத்துப்போன டி.ஜி.எஸ் தினகரன் பல கோடிகளுக்கு அதிபதியாயிருக்கிறார். குணமான சாட்சிகளை செட்டப் செய்தே காருண்யா பல்கலைக் கழகத்தை கட்டியெழுப்பியிருக்கிறார் என்றார் வசூல் எவ்வளவு நடந்திருக்கும்?

பொதுவில் இந்து, இசுலாமிய மதங்களைவிட கிறித்தவ மதம் சற்று முற்போக்காய் இருப்பது போல தோற்றமளிக்கும். அதிலும் இளம் பாதிரியார்கள் மார்க்சியம், சுற்றுச்சூழல், பெண்ணியம், பின்நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லா இயங்களையும் பேசுவார்கள். இந்த இசங்களை வைத்து நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வார்கள். இப்படி ஊருக்கு உபதேசம் இலவசமாய் செய்தாலும், திருச்சபை ஊழல்களைப் பற்றி மட்டும் பேசமாட்டார்கள் என்பதோடு, விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். அவர்களின் வசதி நிறைந்த வாழ்வுக்கு திருச்சபையின் புனித இருப்பு தேவையாயிருக்கிறது.

ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு வயதில் தன்னை பாலியல் வன்முறை செய்த பாதிரியார் புகைப்படத்தைக் காண்பிக்கிறார், லீ காலிகோஸ்

ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் மட்டும் பெண்கள் ஆயர்களாக வரமுடியாது. அது ஆண்களுக்கு மட்டுமே உள்ள தகுதி. இவர்களது பெண்ணிய முழக்கத்தின் யோக்கியதை இதுதான். மேலும் உலகெங்கிலும் உள்ள திருச்சபை பாதிரியார்கள் செய்திருக்கும் பாலியல் முறைகேடுகள் சங்கரமட லீலைகளைப் போல எண்ணிலடங்காதது. அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறாரை பாலியல் வன்முறை செய்ததாக வழக்கு நடக்கிறது. பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை இரண்டு பில்லியன் டாலர் பணத்தை நிவாரணமாகவும், அபராதமாகவும் கட்டியிருக்கிறது. அமெரிக்க பாதிரியார்களில் நான்கு சதவீதம் பேர் பாலியல் முறைகேடுகள் செய்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து போப்பே அவமானப்பட்டிருக்கிறாராம்.

இவையெல்லாம் நமது உள்ளூர் பாதிரியார்களுக்கு தெரிந்த விசயம்தான். கூடவே யார் யாரெல்லாம் இங்கு அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் அவர்கள் மட்டுமே அறிந்த தேவரகசியம். இப்படி ஒழுக்கத்திலும், சாதி ஆதிக்கத்திலும், சொத்து முறைகேடுகளிலும் ஊறியிருக்கும் திருச்சபையை எந்தப் பாதிரியாரும் கேள்வி கேட்டு கலகம் செய்ததில்லை. இதனால் சுயவிமரிசனம் செய்து கொண்டு சபையை விட்டு வெளியேறியதுமில்லை. லிபரேசன் தியாலஜி என்றெல்லாம் கரடி விடும் முற்போக்கு பாதிரியார்கள் கூட இந்தப் பிற்போக்குத்தனத்தை கேள்வி கேட்டதில்லை. போப்புக்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவர்களும் ஹிட்லரின் ஆதரவாளர்களாகவும், புஷ்ஷின் அபிமானிகளாகவும்தான் ஊழியம் செய்திருக்கிறார்கள்.

எது எப்படியோ தூத்துக்குடி மாவட்டத்தின் நாலுமாவடி ஊரில் நடந்த இயேசு விடுவிக்கிறார் கூட்டத்தில் நடிகை நக்மா சகோதரி நக்மாவாக பிரசங்கம் செய்யும் போது நாசரேத் ஆயர் நமிதாவின் இரசிகராக நடந்து கொண்டது அப்படி ஒன்றும் பெரிய தவறல்லவே!