privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை...அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

-

151

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடியவிடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்க பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா,  நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும்  தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally)ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதைவைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

எம்முடைய முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”…

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை.

எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு, போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள்.

ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி – பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப் பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.

ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்லவைக்கப் பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?

அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர்  என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறியை விட நீதிமன்றத்தின் சாதிவெறி கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப் பட்ட ஒரு வன்முறை – ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான்  தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும்,  ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப் படவில்லை” என்று சொல்லி  சமாதானமடைந்து கொள்வோமா?  மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனச்சாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா?

அத்தகைய ‘நியாயம்’ ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப் படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப் பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப் பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்கவேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது.

தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – – இதுதான் காந்தியின் பதில்.

எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்ட போது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார்.

அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர் சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யைச் சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால்    “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று  சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால், இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை.

ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால்,  திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம்.

போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை.

இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ  பெயரிடப் படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்  தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’.

அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத்தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித்தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது.

மிகத் தந்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது!

எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் – டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.

“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக்  கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல…  நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் – நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன்.  நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை.

பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும்.

ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை – அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானது!

____________________________________

 


  1. //ஒளிபரப்பப் பட்ட ஒரு வன்முறை – ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!//

    இந்த ஒரு வாக்கியத்தில் அத்தனையும் அடங்கிவிட்டது.

    • வினவு தவறு செய்கிறீர்கள், ஜாதி வெறி தூண்டுவது உயர் ஜாதினர் இல்லை உங்களை போன்ற ரெண்டும் கெட்டங்க தான். நீயெல்லாம் மனுஷன ?

  2. நான் இன்றுதான் கவனித்து விட்டு வருகிறேன். சென்னை அரசு மருத்தவமனையில் அடிப்பட்டு கிடக்கும் (அ )சிங்கங்களுக்கு ஆறுதல் சொல்ல முட்டாள் முன்னேற்ற கழகத்தினர் மஞ்சள் கொடிகளை தலையில் கட்டியவாறு கூச்சலிட்டபடி மருத்துவமனையிலிருந்து போகிறார்கள்.

    அரசு மருத்துவமனை பொதுமக்களுக்கானது, நோயாளிகளை தொந்தரவு செய்வது எத்தனை குரூரம் என்பது கூட அறியாத முட்டாள்கள் கத்தியபடி போவதை சிக்னல் மீறி 10 இரு சக்கர வாகனங்களில் போவதை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் காவல் துறையினர். இது ஒரு ஆரம்பம்தான் இவன்கள் திருந்தவே மாட்டார்கள் மீண்டும் குற்ற பரம்பரை சட்டம் தேவை இவர்களை ஒடுக்க

    வாங்கினது பத்தாது இவனுங்களுக்கு

  3. நல்ல வியூ வினவு! யாராவது இதைச் சொல்ல மாட்டார்களா என்றெண்ணிக் கொண்டிருந்தேன்!

    முதலில் என்னதான் பிரச்சனை என்று அறிந்துக்கொள்ள முயற்சித்தபோது
    தட்ஸ்
    தமிழில்
    விடுதியில் என்னக் குழப்பம் என்று போட்டிருந்தார்கள்.

    *அந்த மாணவர்களின் பிரச்சினைகளை, இல்லை அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை என்றாவது இதற்குமுன் அறிந்திருக்கிறோமா, அறிந்திருந்தாலும் அதைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறோமா? சாதிப்பிரச்சனை நீறுப் பூத்த
    நெருப்பாக மட்டுமே இருந்திருக்கிறது, ஆனால் மாணவர்கள் இந்த அளவிற்கு வெறி கொள்ள வேண்டுமானால், அதன் பின்புலம் எவ்வளவு மோசமானதாயிருக்க வேண்டும்? தன்மானம் சீண்டப்பட்டால போதும் நம் அனைவருக்கும்,
    எளிதில் உணர்ச்சிவசப்பட! ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டத்தில் படித்தேன்,”நமக்குள் தூங்கிக்கிட்டிருக்கும் மிருகம் அங்கே விழித்துகொண்டிருக்கிறது” என்று. எவ்வளவு உண்மை!

    *இந்த ஒரு நிகழ்வுக்கே, அந்த மாணவர்களின் எதிர்காலத்தை சஸ்பெண்ட் செய்து ஜெயிலில் உள்ளே தள்ளி அவர்கள் வாழ்வை பாழாக்க வேண்டும் என்று தீர்ப்புக் கொடுக்கிறோம். ஆனால், அவர்களின் தினசரி வாழ்வில் எவ்வளவு சீண்டல்களை, பிரச்சனைகள் இருந்திருந்தால் இந்தளவுக்கு வந்திருப்பார்கள் என்று ஏன் சிந்திக்க மறுக்கிறோம்!

    யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க???

    மேலே லிங்கில் சொல்லப்பட்டிருப்ப்வையும் நடந்த வன்முறைக்கு சமம். ஆனால்,நாமெல்லாம் இதற்கு என்ன பதில் கொடுத்தோம்? செய்தியைப் படித்துவிட்டு கடந்து சென்றோம்! அல்லது அந்த செய்தியினைக் கூட அறியாது இருந்திருப்போம்.

    வரவனையாணின் ஒரு பதிவிலிருந்த வார்த்தைகளை படித்தது நினைவுக்கு வருகிறது! அதை கடன் வாங்கி..

    ஏண்டா எங்களை கெட்டவனா ஆக்குறீங்க…..

    இப்படித்தான் கேட்க தோன்றுகிறது, நாங்கதான் 5 ஆயிரம் ஆண்டு கோபத்தை எப்போ காட்டுறதுன்னு
    காத்துகிட்டு இருக்கோமே. கேப்பு கெடச்சா கெடா வெட்டலாம்ன்னுதானே அலையுறோம்

  4. இப்பிரச்சனை குறித்த சரியான புரிதல் உங்கள் பதிவின் மூலமாக ஒரு சிலருக்காவது மண்டையில் ஏறினால் நல்லது.

  5. // நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை. //

    :-(((((

  6. \\ ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும்.

    ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது. //

    மனம் வலிக்கிறது….

  7. அடபாவிகளா…இதை எழுதுனவங்க, இதை படிச்சுட்டு மட்டும் போறவங்க, இதுக்கு பதில் எழுதுறவங்க எல்லோரும் படிச்சவங்க.(அரசாங்கம் கணக்கு சொல்ற மாதிரி கஷ்டப்பட்டு எழுத, படிக்க தெரிஞ்சவங்க இல்லை) குறைந்த பட்சம் இளங்கலை பட்டம் அல்லது தொழில்நுட்ப பட்டயம் படித்தவர்கள்.

    ஆனால் வந்து போனவர்கள் எல்லோரும் ஜாதி இருக்கின்றது என்றோ, இல்லை நான் ஜாதி பார்கிறேன் என்றோ வெக்கமில்லாமல் எழுதிகிறார்கள், மீதிபேர் ஜாதி போகவேண்டும் என்றே எழுதுகிறார்கள்.

    ஒருவர் கூட தான் எப்படி ஜாதியை பார்க்காமல் இருக்கிறார் என்றும், அதை மற்றவர்கள் எப்படி பின்தொடரலாம் என்று ஒருவர் கூட சொல்லவே இல்லையே.

    நம் முன் தலைமுறை தான் கிணற்று தவளையாக தங்களது வாழ்கையை ஓட்டிவிட்டனர், படித்த நாமும் இதை இப்போதைய நிலையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் எப்படி, எதை போக்குவர்க்கான யோசனைகளை பகிர்ந்து கொள்ளலாமே. அதைவிடுத்து ஜாதியை பற்றி பேசி மற்றும் அடுத்த ஜாதியை குறை சொல்லி மேலும் அதை படித்தவர்களிடமும் வளர்த்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டாமே.

    முடிந்தால் ஜாதி ஒழிக்க யோசனை மட்டும் சொல்லவும். எரிகிற தீயில் நல்ல சுத்தமான எண்ணையை ஊற்ற வேண்டாம்.

  8. பொதுவாக செய்திகளில் கேள்விப்படுவதை விட உங்களது பதிவுகள் தான் உண்மை நிலையை எடுத்துக் கூறுகின்றன. என்னைப் பொறுத்தவரை வினவு ஒரு நம்பகமான தமிழ் செய்திப் பத்திரிக்கை. இந்தியா ஒரு பக்கம் சந்திராயனை அனுப்பி அபிவிருத்தி அடைந்த நாடு போல காட்டிக் கொள்கின்றது. ஆனால் இன்னமும் காட்டுமிராண்டி கால சாதியை அழிக்க முடியவில்லை.

    • Your name speaks your caste. You are supporting vinavu for the only reason that they are also dalit. //ஆனால் இன்னமும் காட்டுமிராண்டி கால சாதியை அழிக்க முடியவில்லை.// முன்பு சாதி வெறி இருந்தது, தற்போது சாதி வெறி, சாதியால் வேற்றுமை ஆகியன இல்லை. இந்த சாதி வெறியை தற்போது மீண்டும் தூண்டி விடுவது உங்களை போன்ற தலித்துகள் தான். அத்து மீறு, திருப்பி அடி என்று கூக்குரல் இடுவது நீங்கள் தான். இது போதாதென்று கி.சாமி, ஜான் பாண்டி, உள்ளிட்டோர் செல்லும் இடமெல்லாம் கலவரம், வரலாற்றை பொய்யாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

  9. Really super.
    இதை படிக்கும்போது உங்களை தொற்றிக்கொண்ட பதற்றம் என்னையும் தொற்றிக்கொண்டது.

  10. மதுரையில் ஒருமுறை பத்திரிக்கை அலுவலகத்தில் அடிவாங்கியதற்கே,
    மந்திரி பதவி போனதற்கும், தனது சுமங்கலி டி.வியின் ராஜ்யம் பறிபோனதற்கே கருணாநிதி அரசை பழிவாங்குவதாய் நினைத்து, சன் டிவி இவ்வளவு பண்ணுகிறது.

    தினந்தோறும் அவமானங்களையும், கிண்டல்களையும், அடிகளையும் வாங்கி கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு காயப்பட்டிருப்பார்கள்.

    ச‌ம‌ கால‌, அவச‌ர‌, அவ‌சிய‌மான‌ க‌ட்டுரை. தொட‌ர்ந்து வினையாற்றுங்க‌ள்

  11. குப்பன்_யாஹூ : பதிவர் நன்றாக எழுதி உள்ளார், அனேகமாக நம்மாளா தான் இருக்கக் கூடும்.

    சக பதிவர்: ஆமா நான் அப்போவே நினச்சேன், அவர் நம்மாளாத்தான் இருப்பர்னு, சூப்பரா எழுதறாரு பாருங்க.

    இதுதான் எதார்த்தம்.

    குப்பன்_யாஹூ

  12. “even now many do not know about chithiraiselvan…it is unfortunate that only ten guys joined together to hit back”

    you are a sadist to the core.do you think that violence should be responded with more violence and muder/

  13. “மீண்டும் குற்ற பரம்பரை சட்டம் தேவை இவர்களை ஒடுக்க”
    a solution that is worse than the problem.

  14. Your today’s post on “சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!” must be printed out and should be distributed to all the people, including to all meadia. Atleast, some neutral people would realize about the problems faced by the dalits. The so called upper castes also may realize what they do to dalits is injustice or inhumen.

    In 1995, I was at BSc 3rd year in a govt. arts college. That time, almost similar incident occurred and I was beaten up by Murugesan (BSc Maths, 3rd year student), a MBC student. Two of my hostel mate’s head was damaged by a group of MBC students during that incident. Among those two, one almost has gone mad.

    Nobody from the local police station or taluk office visited us or our hostel, no case was field against those MBC fellows. It did not come in the news. Everything was hided.

    Head of people like “குப்பன்_யாஹூ” must taste one day or other, something like my hostel mate had, then only they will realize what they are…..

    If the violance is the solution to eradicate castism 100 s and 1000s of such incident should occur.

  15. Sadism? What about Hinduism – or brahminism to be precise – the institutionalized sanctification of sadism? And about the Geethopadesa of the GOD of the Godzillas?

    What a tactic to circumvent the core issue? “provoke – then patiently wait for the outburst of the provoked – then quote the outburst of the provoked to brand him a sadist or a terrorist!”

    Godzilla, I thought POTA had been repealed. One cannot repeal a mindset.

    வினவு

  16. i am not justifying caste based violence.all i am saying that statements like ‘even now many do not know about chithiraiselvan…it is unfortunate that only ten guys joined together to hit back’ will only add fuel to the fire. you can argue that dalits have the right to hit back and indulge in murderous attacks but this may result in more violence from both sides.is that the best solution.
    ‘If the violance is the solution to eradicate castism 100 s and 1000s of such incident should occur.’
    an eye for an eye will make the half of the world blind.
    you know who said so.

  17. நன்றி அய்யா,

    சிந்திக்க வேண்டிய ஆழமான கருத்துக்கள்.

  18. che neengalam manithargal thana? pazhasalam pesi senja thappa maraikathingada….. vinavu solrathukalam jingchan adikurathukae oru group iruku inga… innum yaethunaliku than ‘thalith kodumai thalith kodumai’nu oora yaemathuvinga?… vaekama illa intha polapu puzhaikurathuku….?
    innaiku kathaiya paesunga da… enga da neenga illa bank’la illaiya?,court’la illaiya?,arasiyala illaiya?,tholilar sangathula illaya?yaentha govt. office’la da neenga illa?yaela edathulaium neenga thana da mukiyamana post’la irukinga manasa thottu solllunga….itho intha pathvugala kuda unga kai thanada oongi iruku….

    chumma ‘then mavattam then mavatamnnu’ oor’a yaemathathingada…. intha pathiva padichavangalukum athaku jalra adicha nainga comment’a padichavangalukum thaerium, ‘yar’ jhathi verila irukanganu therium!!!..

    \\வாங்கினது பத்தாது இவனுங்களுக்கு\\

    Itha padicha saathanama iruka enake kovam varuthu, mathavangaluku?…. inum yaethna nazhaiku than ‘theendamai theendamai’ nu oosi soru sapiduvinga…? yaennaiku than suyama padichu suyama ulachi munnuku vara poringa…..?

    Innum niraiya kaepaen,ena than nan kaelvi kaetalum neenga palasa than paesa poringa…..arasnga sazhugagalaium, ungaluku sathagamana sattangalaium vachi yaepdi rowdy’sem pannalamnu ninaikathinga… kudutha salugagaila olunga ubhayogam seithu innum yaepdi life’la munnaerurathunu yosinga da,yepadi namma sangathingala nallapadiya uruvakurathunu yosinga da……. .

    \\வாங்கினது பத்தாது இவனுங்களுக்கு\\

    Nan kuriya varthaigal anaithum maela irukum vakkiyangalai manathirkul ninaipavargaluku mattum…!!!

  19. கோட்சில்லா : ஏன்டா அம்பி இவா இப்படி ஒரு பதிவ போட்டிருக்கா இன்னும் ஒன்னும் தகறாறே வரலையே

    குப்பன் யாஹூ : இருங்கோன்னா நான் ஒரு நட போய் பாத்துட்டு அப்படியே எதாவது செஞ்சுட்டு வந்துடறேன்

    உவ்வே ( குப்பன் யாஹூ வாந்தி எடுக்கிறார்)

    குப்பன் யாஹூ : இப்ப பாத்தேளா, தலித்துதான் எழுதறாங்கறமாதிரி ஒரு பிட்ட போட்டுட்டேன்

    கோட்சில்லா : நல்ல காரியம் செஞ்சேடா இரு நான் ஏதாவது பன்றேன்

    சொர்ர்ர் ( கோட்சில்லா சிறுநீர் கழிக்கிறார்)

    கோட்சில்லா :ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சுட்டேன் நிச்சயமா இவா அடிச்சுப்பா நாமளும் ரெண்டு பக்கமும் தட்டிவிட்டு இரத்தத்த குடிக்கலாம்.

    குப்பன் யாஹூ : அந்த டாக்டர் எழுதுனதையும் டச் பன்னிட்டேள் போல இருக்கே

    கோட்சில்லா : பின்னே டாக்டர் வக்கீல்னு ஆன அப்புறம் சம்பாதிக்கறத பாக்காம் இவாளுக்கு என்ன சமூக அக்கற வேண்டிகிடக்கு. இவர பாத்து நாளைக்கு மத்த படிச்சவா எல்லாம் நல்லவா ஆயிட்டா அப்புறம் நம்ம பொழப்பு எப்படி நடக்கும்னேன் ?

    குப்பன் யாஹூ : அதேனே

    டேய்ய்ய்ய்ய் (தேவன் வருகிறார்)

    குப்பன் யாஹூ : தேவர்வாள் வாங்கோ நன்னாஇருக்கேளா?

    தேவன் : சாமி நீங்க போங்க இந்த பசங்கள நான் பாத்துக்கறேன்

    கோட்சில்லா : அப்புறம் என்ன குப்பா நாம வந்த வேல முடிஞ்சது கிளம்ப வேண்டியதுதானே?
    அபிஷ்டூ அவன் மேல படாம வாடா!

  20. வினவு, நீங்க 2000 வார்த்தையில சொன்ன மேட்டர தேவன் நாலு பாராவில சொல்லிட்டாரு..

    //enga da neenga illa bank’la illaiya?,court’la illaiya?,arasiyala illaiya?,tholilar sangathula illaya?yaentha govt. office’la da neenga illa?yaela edathulaium neenga thana da mukiyamana post’la irukinga manasa thottu solllunga….itho intha pathvugala kuda unga kai thanada oongi iruku….?//

    இந்த வயிற்றெறிச்சலில் இருப்பது சாதிவெறி

    Itha padicha saathanama iruka enake kovam varuthu, mathavangaluku?

    இந்த மிரட்டலில் இருப்பது சாதிவெறி

    num yaethna nazhaiku than ‘theendamai theendamai’ nu oosi soru sapiduvinga…? yaennaiku than suyama padichu suyama ulachi munnuku vara poringa…..?

    இந்த ஏளனத்தில் இருப்பது சாதிவெறி

    .arasnga sazhugagalaium, ungaluku sathagamana sattangalaium vachi yaepdi rowdy’sem pannalamnu ninaikathinga

    இந்த புலம்பலில் இருப்பது சாதிவெறி

    kudutha salugagaila olunga ubhayogam seithu innum yaepdi life’la munnaerurathunu yosinga da,yepadi namma sangathingala nallapadiya uruvakurathunu yosinga da

    இந்த அனுசரனையில் இருப்பது தேவர்மகன்!

  21. மயிலே மயிலே இறகு போடு என்று கேட்டால் இறகை நமக்கு கொடுத்து விட்டு செல்லும் மயில்கள் இருக்கிறதா என்ன? இருக்கிறது என்கிறார்கள் ஒரு சில மறு மொழி நண்பர்கள்..
    சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறும் நண்பர்கள், இதை வன்முறையில்லாமல் , சாதியின் பெயரை சொல்லாமல் செய்ய சொல்கின்றனர்..
    லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் இதை லஞ்சம் வாங்குவோரை தண்டிக்காமல் செய்ய வேண்டும்…
    இங்கு வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் நண்பர்கள், இன்றும் நடந்து கொண்டு தலித் அடிமைதனத்திற்கு என்ன பதில் சொல்லபோகிறார்கள்.. வன்முறையை ஆதரிப்போர் யார் என்று வினவு இவ்வளவு தெளிவாக கூறியும் இன்னும் புரியாமல் இருக்கும் உயிரினங்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது..
    //“நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” //
    இங்கு உள்ள யாராவது வரலாற்றை புரட்டி பார்த்து சொல்லட்டும் ஒரு அடிமைப்பட்ட சமூகம் அதற்க்கு எதிராக போராடாமல் எவ்வாறு தனது அடிமை தனத்தை விடிவித்தது என்று..
    “காந்தி, வெள்ளைகாரனை மேல்சாதியாக வைத்து உங்களுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்த மாட்டோம்.. நீங்கள் எங்களை என்ன செய்தாலும், நாங்கள் உன்னா விரதம் இருந்து எங்கள் எதிர்ப்பை காட்டுவோம்..”
    என்ன கொடுமை இது.. ஆங்கிலேயன் சென்று விட்டான் ஆனால் அவனால் சுடப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட பல லட்சம் மக்களும் மாண்டு விட்டனர் ஆனால் அதற்க்கு காரணமான எல்லா வெள்ளையனும் எதோ பணியில் இருந்து ஓய்வு பெற்று செல்வது போல் நமது நாட்டை விட்டு சென்றான்..
    இதே காந்தி தலித் மக்களை வேற்றுமையில் இருந்து விடுவிக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கு “அரிசணன்” என்று பெயர் வைத்தார்.. என்ன நடந்தது.. என்ன மாற்றம் அவர்களின் வாழ்வில் நடந்தது.. இன்றும் அதே தனிகுவலைதான், அதே அடிமைத்தனம்தான் .
    ஒரு மாணவனை அடித்ததை பற்றி மனித நேயத்தை முன்னிறுத்தி விவாதிக்கும் அன்பர்களே இந்த வன்முறையை தோற்றுவிக்கும் காரணி என்ன என்பதை பற்றி சொல்லட்டும் .. இதை ஒழிப்பது என்பதற்காக , தலித் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை மன்னித்து விட்டு விட வேண்டுமா..? அவனுக்கு மட்டும் தான் இந்த மனித நேய உபதேசமா?
    இந்த மாணவனுக்காக குரல் கொடுக்கும் அன்பர்கள் மேலே வினவு குறிப்பிட்ட இன்றும் நடந்து கொண்டு இருக்கும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தயாரா..?
    வினவை போன்று இந்த அன்பர்கள் அதே தேநீர் கடையில் நின்று இருந்தால் அவர்களின் செயல் என்னவாக இருந்து இருக்கும்..?

    நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி விடுவீர்களா?

    அந்த ஊரின் ஒற்றுமையை குலைக்காமல், சாதி பிரச்சினை பெரிதாகாமல் இருக்க “நல்ல எண்ணத்துடன்” இந்த தனிக்குவளை முறை என்பது நமது பாரம்பரியம் என்று கூறி அதை அந்த முதியவரின் சந்ததிக்கே கற்று கொடுப்பீர்களா?
    (அந்த முதியவர் தனிக்குவளை என்பது அடிமைத்தனம் இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கும் வரையில் அங்கு சாதி அடிமைத்தனம் இல்லை, எல்லோரும் நிம்மதியாக , சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டு இருப்பர். ஆனால் என்று அவர் தனிக்குவலைக்கு எதிராக குரல் கொடுக்கிறாரோ அன்று நம்மை போன்ற பலரும் அவரை அமைதியாய் இருந்த ஊரில் சாதிப் பிரிவினையை தூண்டி விடுவதாக சாடுவோம்)

    அல்லது இதை அரசியல் ரீதியாக மக்களை திரட்டி போராடி மற்ற முயல்வீர்களா?

  22. Very well said. Actually i am not interested in posting comments , but your writing made me to appreciate you.
    “இப்பிரச்சனை குறித்த சரியான புரிதல் உங்கள் பதிவின் மூலமாக ஒரு சிலருக்காவது மண்டையில் ஏறினால் நல்லது”. I accept this.

    // நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை. // Hurting me very much.
    Please keep writing posts like this.

  23. வினவு –

    குற்றம் செய்த மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பதிவும் இதே பதிவில் தான் வந்தது. அப்போழுது கேள்வி கேட்ட ரவி ஸ்ரீநிவாஸ் போல் இருக்கு உங்களது இந்த பதிவு. “அவங்க, இவங்க, நீங்க” என்று திசைத் திருப்பும் செயலிது.

    தெரு நாயக்கூட இவ்வளவு மோசம அடிச்சு நான் பார்த்ததில்லை ஆனால் நீங்கள் கண்ட சாதியக் கொடுமை வலியை நான் அனுபவிக்கவில்லை என்பதும் உண்மை.

    எனினும் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் அத்துமீரினார்கள் என்று ஏன் எழுத மறுக்கின்றீர்கள். ஆதிக்க சாதி ஆதிக்க சாதி என்று மூச்சுக்கு முண்ணூறு முறை முறையிடும் பொழுது, இந்த காட்டுமிராண்டி செயலையும் கண்டிக்க வேண்டுமா வேண்டாமா ? சக மனித கோட்பாடுகள் எங்கே ? தலித்துகள் ஆட்டோ, சமான், உருட்டுக்கட்டைகளுடன் பார்ப்பனீயம் பழகினால் அது சரியா ?

    தலித்துகளை அடிப்பதாக படம் பிடித்திருந்தால் இன்று இந்த பதிவில் இரத்த மையால் எழுத மாட்டீர்களா என்ன ? இதைத் தானேயா கேட்கறாங்க ? உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்துவனுக்கு ஒரு நியாயமா ?

    மருத்துவர் ருத்திரன் –

    செத்த பாம்ப அடிக்கர மாதிரி அடிக்கராங்க அந்த காட்டுமிராண்டி பசங்க, இன்னும் பல பேர் சேர்ந்து அடிக்கலையா என்று கேள்வி கேட்பது உங்களது தடுமாறிய மனநிலைக் காட்டுகிறது.

  24. முர்லி கண்ணா, பதிவை ஒழுங்காப் படிச்சயா இல்லையா? இந்த வன்முறை ஒளிபரப்பப்பட்டது. ஒளிபரப்பபடாத , இதைவிடக் க்ரூரமான வன்முறைகளுக்கு உன் பதில் என்ன?

    இன்றைக்கு ஊடகங்களில் பேசப்படும், திண்ணியம், மேலவளவு, பாப்பாபட்டி கீரிப்பட்டி போன்ற வன்முறைகள் போன்றவற்றின் மேலதிகத் தகவல்களைத் தேடிப் படித்திருக்கிறாயா?

    அதன் படத்துணுக்குகள் உன் பார்வைக்கு வந்திருக்கிறதா? ஒருவன் வாயில் மலம் திணிக்கப்படுகிற காட்சியை உனக்குக் காட்டினால், உனக்கு ரத்தம் கொதிக்குமா, லேதா?

    நீ எதைப் பார்க்கவேண்டும் என்று ஊடகங்கள் முடிவு செய்கிறதோ அது மட்டும் தான் உன் பார்வைக்கு கொண்டு வரப்படுவதன் பின் உள்ள கான்ஸ்பிரசியை புரிந்து கொள்ள முடியாத மூடனா நீ?

    இந்த வன்முறைக்கு முன்னால், ஒரு தலித் மாணவனின் காது அறுக்கப்பட்டு அவன் அரசாங்க ஆஸ்பத்திரியில் இருக்கிறான். அதைப் பற்றிய விவரம் தெரியுமா? அந்தக் காட்சியைப் படமாகப் பார்த்து, பின், இந்த வன்முறையை நீ பார்த்தால், அப்போதும், ‘ காதை அறுத்தா என்ன, அதுக்காக இப்படி போட்டு அடிக்கறதா’ என்று மிடில் க்ளாஸ் மொரன் போலப் பேசுவாயா?

    நீ, சாதி, இன மதம் பாராதவனாக இருக்கலாம். ஆனால், உன்னைப் போன்றவர்களின் apathy, அலட்சியம் தான், என் பார்வைக்குத் தென்படுகிறவற்றில் உள்ள அநியாயங்களை மட்டும், மூடு நேரம் இருந்தால் கண்டிப்பேன் என்று சொல்கிற தெனாவட்டுத்தனம் தான், எரிகிற தழலில் ஊற்றப்படும் எண்ணெய்.

  25. யாராவது இதை எழுத மாட்டார்களா? என்றிருந்தேன் நேற்று நானே எழுதினேன். இன்று போடலாம் என்றிருந்தேன் நீங்கள் நேற்றே எழுதி முகத்திலறைந்து விட்டீர்கர்கள். நன்றி தோழர் மிகவும் நேர்த்தியகாவும் உண்மையாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஊடகங்கள்,அரசதிகாரம்,ஆதிக்கசாதி அடியாள்ட்கள் இவர்களின் கொஞ்சம் படித்தாலும் இது வெற்றிதான்.
    நன்றி,

  26. Caste oppresssion is a reality I wont go away anytime soon. Thevars and dalits have to co exist in this land for many centuries to come . So hating each other based on past prejudices and oppression is not an option.
    We have fought the british but we did not hate them, Gandhi never allowed hatred towards british. The result is there for all to see. Indians and british co operate in a large number of businesses, both in india and abroad.
    Similarly Dalits have to love and shame thevars and other oppressors, and work hard to get to the top and claim a rightful share in economy , politics and other arena.
    Violence will only be counter productive, and will lead to a cyles of misery.

    This is what internet intellectuals want. They want misery so they can shame our entire system and call for a revlolution.
    Its not surprising that marxists/periyarists like you cannot see this simple fact .

    I request all dalits and well wishers of dalits not to listen to this writer. Focus on your career, we will see progress in a few years time.
    There are plenty of role models among dalits from ambedkar to mayawati, please emulate them.

  27. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மணிதுளியிலும் சாதிவேற்றுமைசாதி பார்க்காமல்
    யார்தான் இங்கு இல்லை.கலகத்தில் லூசு கோட்சில்லாவும்,குமரன்மார்களும்
    தன் அறிவாளித் தனத்தை காட்டிக் கொண்டு தானிருக்கின்றார்கள்.
    அவர்களுக்கு கீழ் கண்டவாறு பதில் சொன்னோம். அதற்கும் தயாராய் பதில் சொல்லி தன் சாதி வெறியை கிழித்துக்காட்டினார்கள்.

    குமரன்,
    சென்னை சட்டக்கல்லூடி மாணவர் பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து அங்கே தேவர் சாதிவெறியர் களின் கொட்டத்தினால் தான் பிரச்சனை வந்தது என்றாலே தேவர் சாதி வெறியர்களுக்கு கோபம் வருகின்றது.சாதிவெறீ ஆதிக்க சாதியினரிடமோ ஒடுக்கப்பட்டவரிடமோ எங்கே இருந்தாலு தவறு என் கிறோம். பொதுவாய் சாதி வெறி மக்களை பிரிக்கும் ஒடுக்கப்பட்டவரிடமிருக்கும் சாதி வெறியும் பார்ப்பனீயத்துக்கு
    சேவை செய்யௌம்.

    பிரச்சனையை இவ்வாறு ஜனநாயக முறையில் முன் வைத்ததையும் குமரன்மார்களுக்கு
    (தேவர் மார்களுக்கு) நெஞு வலிக்குது எனில் அது தான் உண்மையான சாதியின் வெளிப்பாடு.அவரை போன்றோர் மனதில் மூடிவைத்து விட்டு வெளியே ஜனநாயகவாதி வேசம் போட்டோரின் உண்மை முகம்.

    மெலவளவு படுகொலையின் போது வருத்தமும் கோவமும் கொண்ட சமாதான தேவனாம்
    சமாதான தேவன?சமாதான தேவரா? உங்களால் வருத்தமும் கோவமும் தவிர என்ன செய்ய முடிந்தது
    தாழ்த்தப்பட்ட நண்பர்களுடன் ஒரெ தட்டில் சோறு சாப்பிட்டது ஒரெ அறையில் தங்கியது எல்லாம் வேண்டாம். சாதி எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் ஒரு முறையாவது நின்றிருகின்றீகளா?

    இப்படி உங்களுக்குள் ஒளிந்திருந்த உண்மையான சாதிவெறியை மனதினை கீறி வினவு,கலகம் போன்றோரிடம் வெளியே எடுத்து நீங்களே காட்டியிருக்கின்றீர்கள்.நாங்கள் எழுதியது சாதியை விதைக்கவில்லை.உங்களின் சாதி வெறியை அடையாளம் காட்டியிருக்கின்றது.

    இந்து மத வெறி பாசிச் பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பி.வி.எச்.பி போன்றோரி கொடும் பாதக செயல்களை கண்டு பார்வையாளாராக இருந்து வருத்தப்படு மனது யாருக்கு வேண்டும்.இந்துக்களின் மவுனம் மத வெறிக்கு சம்மதம் என்பது தான்..உங்களின் கோபம் உண்மையாயிருப்பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயபட்டால் மட்டும் தான் உங்களை ஜனநாயகவாதியாய் ஏற்கமுடியும் .அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் வருத்தப்பட்டு கோபப்பட்டு பார்பனீயத்துக்கெதிராய் கலகம் செய்தல் வேண்டும்.அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இப்பரீட்சையில் தன்னை சோதிக்க வேண்டும்.இது தான் வரலாற்று தேவை.உண்மையை உணர்ந்து சாதிக்கெதிரை கலகம் புரிவோம். சாதியை வெரருப்போம்.”

    கலகம்

    http://kalagam.wordpress.com/

    • to கலகம்

      அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் வருத்தப்பட்டு கோபப்பட்டு பார்பனீயத்துக்கெதிராய் கலகம் செய்தல் வேண்டும்.அதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இப்பரீட்சையில் தன்னை சோதிக்க வேண்டும்

      நல்ல வரிகள். சிந்தித்து பார்க்கின்றேன்….

  28. “num yaethna nazhaiku than ‘theendamai theendamai’ nu oosi soru sapiduvinga…? yaennaiku than suyama padichu suyama ulachi munnuku vara poringa…..?”

    சுயமா எந்த பார்ப்பான் உளைச்சான்.ஊர்ல உள்ள கோவில் நிலத்தை எல்லாம் வளைச்சு வளைச்சு பார்ப்பானுங்களுக்கு கொடுத்தார்கள் தமிழ் மன்னர்கள். அவன் கொடுத்த ஓசி நிலத்துல உக்காந்து திங்கிற வெண்ணெய்..முதுகு ஒடிய ஆண்ட நிலத்துல கூலிக்கி மாறடிக்கிற தலித்தை பாத்து. ஓசிச் சோறுங்குது, காஞ்சிபுறத்துல மாட்டோட மூத்திரத்த ஹோமியம்ணு அள்ளி அள்ளி குடிக்கிறாம்பாரு.அந்த பொதிமாடுகிட்ட போய்க் கேளு…உண்மையான ஓசிச் சோறு அதுதான்.

  29. அற்புதமான பார்வை வினவு !!!!

    வரிகளை கோர்த்த விதமும், எடுத்துக்கொண்டு கருத்தை அட்சரம் பிசகாமல் நெத்தியடியாய் சொன்ன முறையும் !!!!

    இது தான் தேவை !!!!!!!

  30. மக்கள் மறந்தாலும் நீங்கள் மறக்க விரும்ப வில்லை, உங்களின் பதிவு ஒரு தலை பட்சமானது.

    நடந்த சம்பவம் தவறானது. இரு தரப்பிலும். ஒரு கை ஓங்கி உள்ளது. மாணவர் சமுதாயம் இப்படி நடந்து கொள்வது மிகவும் தவறு. அடித்தவன் / அடிப்பட்டவன் எவன் எந்த ஜாதியாக இருந்தாலும்.

    தலித்தாக இருந்தாலும், தேவராக இருந்தாலும் வறுமையில் வாழ்வோர் தான் இன்றைய சூழ்நிலையில் அடித்து கொள்வது. அதை தூண்டுவது அந்த அந்த ஜாதியில் உள்ள வசதியானவர்கள் தான்.

    மாணவர்களே உங்களின் வருமையை வெல்ல முயலுங்கள்.

    பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்று இறங்குவது தீர்வல்ல.

    டாக்ட அம்பேத்கர் என்றும் தன்னை தலித் என்று சொல்லி முன்னேறியதாக தகவல் இல்லை. அன்றைய சூழ்நிலையிலும் அவரால் சாதிக்க முடிந்தது என்றால் அவரது திறமைதான்.

    அவர் பெயர் சொல்லி ஓட்டு வங்கி நடத்தும் அரசியல் வாதிகளே ஏன் இன்று உள்ள வசதிகளில் ஒரு அம்பேத்கரை உருவாக்க இயலவில்லை.

    இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அரசையும் போலிஸையும் தான் குறை சொல்ல வேண்டும்.

    அந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் எதற்கு வந்தார்.

    அவர் நான் வரவில்லை, என்னை சமாதானத்திற்கு ஒரு போலிஸ் அதிகாரி அழைத்தார், நான் என் நண்பர் எனது காரை எடுத்து சென்றார், என்று சொல்லி உள்ளார்.

    அவரை அழைத்தா அந்த அதிகாரி யார்… அந்த காரில் யார் இருந்தது…

    இந்த செயல்களை தான் நாம் கண்டிக்க வேண்டும்

    அதை விடுத்து அடித்தவனுக்கு வக்காலத்து செய்வதும், அடிபட்டவனை பார்த்து ஐயோ பாவம் என்பது முட்டாள் தனம்.

    அடித்தவன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தால் – இன்று அடக்கி வாசிக்கும் திருமாவளவன்களும் / கிருஷ்னமூர்த்திகளும் / செல்வ பெருந்தகைகளும் தலையில் கொடியுடன் மருத்துவ மனையில் கோஷம் எழுப்பி இருப்பார்கள்.

    இது தானே உண்மை….

  31. என்னதான் இருந்தாலும் என சொல்லும் ஆதிக்க சாதி வெறியர்களை கிளித்து நார் நாராக தொங்கவிட்டதிற்க்கு நன்றி.

  32. Some dumbwits just go on saying the same stuff that they are students but they fail understand the fact before they can even enter school they are forced to accept a religion and a caste identity(what if these same students clashed after finishing college is it acceptable?). everyone is bred in this manner and only shows up at appropriate times(ex. marriage, temple festivals etc).
    Vinavu has bought up a fine point that violence need not always be physical. The other thing with violence is that even if the police had intervened they would have lathi charged the students which in itself is violence which no one seems to understand. So what do we do is uprooting the cause of this violence which is caste built-in hinduism.
    These kind of clashes sadly are bound to happen as Dalits start to assert their identity and naturally the so called progressed castes are not in a position to digest this fact and with the help of the media and the establishment will do their best to quell this uprising.
    Maybe this is a defining moment in the long struggle against caste oppression and kudos to Vinavu for the thought provoking article.
    Some of the comments and counter rebuttals were also very lively and informative especially by Rudran, Agragarthil Kazhuthai etc were also good.

    P.S: Does anybody know whether any case has been filed against Bharathi Kannan and Aarumugam?

  33. vinavu has brought out the truth in a very wonderful way.the moment i saw this footage in the TV i was thinking ” something is wrong” as generally the students of law college used to protest against retrogade things.
    you have brught it out in detail.
    as correctly pointed out by you the “media donkeys” broadcast only selectsed things.why cannot they broadcast the in human atrocities on oppressed people???????????
    al l the more saddest thing is that this sort of thing is happening still in our country inspite of mayawatis and karunanidhis who themselves are from such oppressed backgrounds.
    the only way out of all this is only an “armed revolution” which installs the proletarian dictatorship
    rajan s ( a brahmin by birth)

  34. @கழுதை –

    ஒருவரை தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசும் உன்னுடன் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. மோடி பதிவில் யார் பக்கம் பேசினேன் என்று பார். அதே போல் ஊடங்கள் பற்றி எனக்கு நீ ஞான உபதேசம் தரத் தேவையில்லை.

  35. “1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

    2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

    3. ‘பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்’ அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

    1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு ‘சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது’ என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

    2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.”(http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_18.html)

    மிகவும் தாமதமாக உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தாக்கியவர்களை போலீஸ் எப்படி கைது செய்கிறதோ அது போல தாக்குதலுக்கு காரணமானவர்களையும் போலீஸ் கைது செய்ய வேண்டும். பிரதானமாக தலித் மாணவர்களை தேர்வெழுத விடாமல் தடுத்தவர்கள்.அரசு வழங்கும் சலுகைகளை இழிவாக பேசியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாரபட்ச மற்ற முறையில் நடவைட்க்கை எடுக்கப்பட வேண்டும்.பார்ப்பன பொதுப் புத்திக்கு பலியாகியுள்ள பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதிகள் தங்களி உண்மையான எதிரிகளை இனம் காண வேண்டும்.

    நன்றி- அருள் எழிலன்.

  36. அழுத்தமான, ஆழமான வரிகள்… நடைமுறையும், அரசியலும் இணையும் பொழுதில் மட்டுமே எழும்புவதான தெளிவான பார்வை…நீரோடை போன்ற நடை…

    இந்து மதத்திற்காக போராட யாருமே இல்லாததால் போராடிக் கொண்டிருந்த, போராடிக் கொண்டிருக்கும் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, இவர்களுக்கெல்லாம் தலைமகன், தலைக்கனம் பிடித்த மகன் – ஜெயமோகன் போன்ற தூய இந்துத் தொண்டுள்ளங்கள் தங்கள் திருவாயைத் திறந்து இங்கே விவாதிக்கலாமே!

  37. உங்கள் பதிவில் உண்மை இருக்கிறது.

    “இரு மாணவர் கோஷ்டிகளுக்கான சண்டையாக” ஒரு சினிமா போல பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் (இரசிகர்களுக்கு) பார்வையாளர்களுக்கு இந்த உண்மை கசக்கும்.

    இப்போது ஏன் இதைச் சொல்கிறாய் என்று உங்களை பலர் கேட்கக் கூடும்.

    இப்போதும் சொல்லக் கூடாதென்றால் வேறொப்போது என்று நான் திருப்பிக் கேட்கிறேன்.

    நான் டிவியில் ஒளிபரப்பப் பட்ட வன்முறையையும் ஆதரிக்கவில்லை.
    ஒளிபரப்பப் படாத வன்முறையையும் ஆதரிக்கவில்லை.

    உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

  38. ஜாதி பார்க்கிறதில்ல
    நான் நல்லவரு, வல்லவரு என்று பேசுறவனுக எல்லாம் ஜாதி மாறி கல்யாணம் பண்ணியிருந்தாலேயொழிய நீயும் ஜாதி வெறியன்தான்!
    ஏன், சாதிகள் இல்லையெடி பாப்பா கண்ணம்மா என்று பாடியவனும் சாதிவெறியன்!

  39. //the only way out of all this is only an “armed revolution” which installs the proletarian dictatorship//

    சர்வரோக நிவாரணியான “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரப் புரட்சி வந்தால் எல்லாம் சரி ஆகிவிடும்” என்னும் பேத்தல் இன்னமும் வரவில்லையே என்று பார்த்தேன், அஹா வந்துவிட்டது.
    நாட்டுல எது நடந்தாலும் 1. பாப்பான் தான் காரணம் 2. புரட்சிதான் தீர்வு..
    @#$@#$

    ஒரே காரணம் ஒரே தீர்வு இதை தாண்டி யோசிக்கத்தெரியாது? மாவோ சொன்னதயே மாத்தி மாத்தி மீள்வாந்தி எடுத்தா எப்படி.. சொந்தமா யோசிங்கடா

  40. முடிவு: சாதி ஒழியாது.. எல்லோரோட சர்டிபிகேட் ல இருந்து நீக்கும் வரை …

    அமெரிக்காவில் ஜாதி !!! நம்பமுடிகிறதா!!
    நான் அமெரிக்காவிற்கு வந்த புதிது .. சில வருடங்களுக்கு முன்னால் …..
    நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனிக்காக வந்தேன் …..
    வந்த புதிதில் அமெரிக்காவும் தெரியாது ஒரு புண்ணாக்கும் தெரியாது !!…

    இந்த சிறிய உண்மை நாடகத்தில் நானும் என்னோடு ப்ராஜெக்ட் வொர்க் செய்தவனும்….
    நான் –> பாதிக்கப்பட்டவன்.
    அவன் –> சாதி வெறியன் .
    வீட்டில் நான் அவன் எதிரில் நிர்கேறேன் ..
    சாதி வெறியன் . : சார் ..( போனில் கம்பெனி தலயுடன் உரையாடல் ).
    தல: ……
    சாதி வெறியன் . : சார் இவன ஏன் அனுபெநீங்க … நம்மாளு( இதனுடைய மீனிங் புரியல ….. அவன் என் சாதியை கேட்கும் வரை ) இருக்கான் இல்ல…(
    மெல்ல எழுத்து பேசினான் ) அவன விட்டுட்டு ..

    தல:….

    சாதி வெறியன் . : …

    தல…

    நான் அவமானப்பட்டு பக்கத்து ரூமேற்கு போய்விட்டேன்

    மறுநாள் :

    சாதி வெறியன் . : நீ sc யா !!! ( sc யா இருந்தால் என்னடா புண்ணாக்கு )

    நான்: எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை ஒரு நிமிடம் !!!………..!!!!

    நான் என் சாதியை தெரிவித்தேன் ( வடமாவட்ட அதிக்க சாதி என்று ) ..

    ஒரு கணம் என்னை பார்த்தான். உன்ன பார்த்தால் மரம் வெட்டி மாதிரி தெரியல ……

    ( புண்ணாக்கு சாதி தலைல இருக்கா….)

    பிறகு விசாரித்து பார்த்ததில் சாதி வெறியன் . , தல மற்றும் பலர் அந்த தென் மாவட்ட நாடார்ர்ரூஊ என்று…

    சாதி வெறியன் . .. அமெரிக்காவில் ms படித்தவன்…(காசு கொடுத்துதான் ..இவனுக்கு என்ன அறிவா இருக்கு )

    நம்ப முடிகிறதா..( sc யா இருந்தால் அல்லது யாராவுது இருந்தால் என்னடா புண்ணாக்கு ….. இதுக்கு மேல என்னால திட்ட முடியவில்லை படித்துவிட்டதால் )

    முடிவு: சாதி ஒழியாது.. என்னோட சர்டிபிகேட் ல இருந்து நீக்கும் வரை …

  41. ///
    தலித்துகளை அடிப்பதாக படம் பிடித்திருந்தால் இன்று இந்த பதிவில் இரத்த மையால் எழுத மாட்டீர்களா என்ன ? இதைத் தானேயா கேட்கறாங்க ? உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்துவனுக்கு ஒரு நியாயமா ?

    மருத்துவர் ருத்திரன் –

    செத்த பாம்ப அடிக்கர மாதிரி அடிக்கராங்க அந்த காட்டுமிராண்டி பசங்க, இன்னும் பல பேர் சேர்ந்து அடிக்கலையா என்று கேள்வி கேட்பது உங்களது தடுமாறிய மனநிலைக் காட்டுகிறது
    .///

    அய்யா முரளி ஏற்கெனவே உங்களிடம் வினவிய வினாவிற்கு வினை இல்லை என்பது நினைவில் இருக்கிறதா ?

    சரி அது இருக்கட்டும் நீங்கள் பேசிய தலித் பக்க நியாயத்தை சொல்ல முடியுமா,தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட‌ பொழுதுகளில் நீங்கள் ஆற்றிய எதிர்வினைகள் என்னென்ன என்பதை அடுக்க முடியுமா ஏனென்றால் ஒருமுறை ஒரே ஒரு முறை விதிவிலக்காக‌ அடிபட்ட தேவனுக்காக மனுதாபிமானம் பற்றியெல்லாம் அங்கலாய்க்கும் உங்கள் நியாயம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டாமா ?

  42. உங்களது கருத்துகள், ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்.

    படித்தவர்களாகிய பெரும்பாலோர்( அவர் தலித்தாக இருந்தாலும்) நடுநிலைமை கொண்டு பேசி, உண்மை நிலையினை அதன் வீரியத்தினை மழுக்கிவிடுகின்றர்.

  43. ‘சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை’

    பொய்தான் சொல்றீங்க, நம்பும்படி சொன்னா என்ன?. அங்கு என்ன சினிமா படபிடிப்பா
    நடந்தது.நம்மாள் அடிபடறான், செத்தாலும்
    செத்துறுவான், பரவாயில்லை படம் பிடிக்கட்டும்ன்னு காப்பாத்தாம
    விட்டுவிட்டாங்கன்னு
    சொல்றீங்களா.

  44. //என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” //

    I always think this so i was labled as rebel in my family or doesnt know the reality in life

    //என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன //
    Same applied to all issues . I accidently went to different caste ‘s street ( area ) and my friend advised just put your eyes down and walk instead of keep your shoulder high . so whether SC /BC/FC all experienced this issue because of social fabric . Ban DOWRY / caste association’s control to Educations institutions .

  45. திரு. வினவு…
    ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் இந்த சம்பவம் குறித்து எனது கருத்தை இங்கு சொல்கிறேன்.

    கேரளாவில் மதம்பிடித்த யானை ஒன்று பாகனை அரைமணி நேரத்துக்கும் மேலாக தூக்கி பந்தாடி கொன்ற கொடூர காட்சிகளை ஓராண்டுக்கு முன்பு நீங்கள் தொலைகாட்சிகளில் பார்த்திருக்க கூடும்.

    இந்த சம்பவத்தை வியர்க்க வியர்க்க ஓடி ஓடி அதே நேரத்தில் பதட்டத்துடன் பயத்துடன் உயிரை பணையம் வைத்து ஒளிபதிவு செய்த செய்தியாளர்களை நீங்கள் எந்த விதத்தில் குற்றம் சொல்லக்கூடும்?. அதே போல திரும்ப திரும்ப ஒளிபரப்பிய தொலைகாட்சிகளை நீங்கள் எந்த விதத்தில் குற்றம் சொல்ல முடியும்?

    ஒருவேளை சட்டக்கல்லூரி சம்பவம் செய்தியாளர்களால் படம்பிடிக்கபடவில்லை என்றால் நிச்சயமாக இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்காது. சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதிக்கொண்டார்கள் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. இவ்வளவு தான் செய்தி. இது எந்தவிதத்திலும படிப்பவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாணவர்கள் மோதல் என்றால் என்ன என்பதை தமிழக மக்கள் கண்கூடாக இப்போது தான் பார்த்து பதர நேர்ந்தது.

    அடுத்து நீஙகள் சொன்னது போல தலித்துகளுக்கு எதிரான கொடூரங்களை பல பத்திரிக்கையாளர்கள் ஒளிப்பதிவு ஆதாரத்துடன் வெளியுலகுக்கு தெரியப்படுத்தி நீதிக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஒளிபரப்பபடாத ஆயிரம் வன்முறைகளை குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த ஆயிரம் வன்முறைகளும் ஒளிபரப்பியிருந்தால் நிச்சயமாக இன்று சாதியகொடுமைகள் ஒழிக்கப்பட்டிருக்கும்.

    இரக்க குணம் உள்ள மனித சமுதாயத்திடம் நிச்சயம் சாதி தோற்றுப்போயிருக்கும்.

    மூன்று மாணவர்கள் அடிபடுவதை பார்த்து மனித மனங்கள் பதறுவது சாதி ஆதிக்கம் என நீங்கள் வலியுருத்தினால் நிச்சயம் அது தவறானது.

    தேசிய கீதம் பாடும் போது. மௌன அஞ்சலி செலுத்தும்போது அத்துனைபேரும் அமைதியாக இருப்பார்கள். புகைபட நிருபர்கள் மட்டும் தங்கள் கடமையை செய்துகொண்டிருப்பார்கள். இதை எந்த நாட்டு சட்டமும் தருமமும் குற்றமாகவோ தவறாகவோ சொல்வதில்லை ஏன்? அந்த நிமிடங்களில் நிருபர்கள் தங்கள் பணியை செய்யவில்லை என்றால் அந்த நிமிடம் இருண்ட நிமிடம் அல்லது இல்லாத நிமிடமாக தான் இருக்கும்.

    சாதியை மறக்க சாதிசான்றிதழை ஒழியுங்கள். தயவு செய்து சாதிய அடிப்படையிலான சலுகைகள் இட ஒதுக்கீடுகள் இவற்றை ஒழியுங்கள். சாதியை பயன்படுத்துவது தேசதுரோகம் என அறிவியுங்கள்.

    சாதியை விட கொடுமையானது போதை. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அத்திரத்தல் தாக்குவது இயல்பு. ஆனால் தொடர்ந்து வெறி கொண்டு தாக்குவது நிச்சயம் மனிததன்மையே அல்ல.

    இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவரும் பான்பராக், ஃகான்சு புகையிலை, மது, சிகரெட் இதெல்லாம் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டி விடுகின்றன. நிச்சயம் சுய நினைவோடு சுய உணர்வோடு இப்படி கொடூர தாக்குதல் எந்த மனிதனும் செய்ய மாட்டான். இங்கு நான் பார்த்த சட்டக்கல்லூரி தாக்குதலை மட்டும் குறிப்பிடவில்லை. நீங்கள் குறிப்பிடும் இது போன்ற ஒளிபரப்பப்படாத தாக்குதல்களையும் தான்.

    மனிதநேயம் வளர்க்க முயற்சி எடுக்கள். மனிநேயம் சாவது சாதிய கொடுமைகளை விட கொடூரமானது.

  46. சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையின் பின்ன்னி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, தொலைக்காட்சிகளிருந்து மறைந்தாலும், வீடியோவாக கணிணி நிறுவன மின்னஞ்சல்களில் ஆங்கில முன்னுரையோடு உலவி் சாதி ஆதிக்கத்திற்கு தார்மீக ஆதரவைப் பெறவும் தலித்துக்களுக்கு எதிராக ஒரு பொதுகருத்தை உறுவாக்கும் சூழ்ச்சி நடைபெருகின்றது அதை முறியடிக்க மருத்துவர் ருத்ரனின் ” dalit fury? ”ஆங்கிலக் கட்டுரையை அனைவருக்கும் சுற்றுக்கு விடுங்கள். பொய்மையின் பேரிரைச்சலை தான்டி உண்மையின் அதிர்வுகளை உணரச் செய்வோம். படியுங்கள் dalit fury?
    http://rudhran.wordpress.com/2008/11/17/dalit-fury/

  47. Bharathi kannan kaiel vaithu iruntha verum kathiyai vaithu avar than evalo paeriya thakuthaluku porupu enbhathi yepdi yaetru kolla mudium?
    avar thearvu yeluthivittu vaeliyae varum pozhuthu than intha sambhavam nadanthathu enbhathum,,,,, vaeliya irukum kumbal avarai thakka thayaraga irupathu therinthu thaan kavalargal kalluriku vaeliyae kuvikapattu mudhalvar anumathikaga kaththu irunthargal enpadhum,,,,Avar kaiyel vaiththu iruntha kaththi angae thakuthal nadathiya kumbhal nazhuva vita kaththi enbhathum unmai…..,
    antha kaththiyai tharkapirkagavum ,then saga enathu maanavan adivanguvathi poruka mudiyamalum angu irunthavaragai miratiyathu’ tholaikachiyai kanda anaivarukum purinthu irukum….thannai patri kavazhai padamal’ then saga enathu manavanai kaptra bharathi kannan nadanthu kondathai parkum pozhuthu avarai oru maa veranagavae ninaika thonrukirathu….
    Intha seithikana sachikgalo,aatharangalo ennidam illai….. aanal evai annaithum nan seithiyil kandanavaium, kaetavaium…. (neengal kuriyavatirkum yaentha aatharamum illai enbhathai ninavu kurukinraen)
    “Adipattavargal’ mael jathi vargama irunthal’ avargal mael vazhaku thoduthu kaidhu seyalam” enru dr.ambedkar sattam yaeri irunthal tharalamaga bharathi kannanai kaithu seiyalam…..neengal kuriyavatrai parthal intha sattathai yaethir nokki irupergal enru ninaika thonru kirathu….
    Maela kuriyavatrai ungalal kandipaga yaetrukolla mudiyathu enbhathu enaku therium….
    Ithai vedungal

    Arasangam thalith enamakkaluku evazhavu salugagaigal kuduthum’ avargal’ sariyana vazhiyil ubhayogam seivathillai…..….ithai vaithu sela paer arasiyal nadathukurargal,athai selar purachikara arasiyal enru paerittu kolgirargal….vaedikaiyaga irukinrathu…
    Arasangam thalith enamakkaluku evazhavu salugagaigal kuduthum’ avargal sariyana valiyil ubhayogam seivathillai….PCR act enra paeriel’ thinam thinam yaethanai poi valakugalai kavalthurai pathivu seikirargal enbhathu arugil irunthu kankudaga parkinra enaku therium….. poi vazhaku enru thaerinthu ‘antha vazhakai poda marutha kavalargal mael intha PCR act paaikinrathu…… ithai patriyaelam yaen neengal yaelutha marukurirgal? Satta kolluri kalavarathai thaduka’ kavalduraiku thunivuillamal ponathuku intha PCR act um oru karam….
    Ithuthan nadunilaya?ithuthan ungal purachigara arasiyala?bharathikannanku nadantha kathi’ thalith ena manavanuku nadanthu irunthal inaeram tamilnadu patri yaerinthu irukatha,…?ippozhuthu yar odukapatavargal enbhathu kaelvikuriyaga irukingrathu!!!(manathirkul neengal aanavama siripathu purikinrathu)
    Kaalam marivittathu,innum yaethunai kaalam than ippadi poi pracharangal seithu athil kulirkaya poginrirgal?
    //சில தினங்களுக்கு முன் 2ம் ஆண்டு, மாணவர்கள் ஒரு நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார்கள். அது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    5ம் ஆண்டு படிக்கும் விடுதி மாணவர்களான சித்திரை செல்வன், வெற்றி கொண்டான், குபேந்திரன், மணிமாறன் ஆகிய 4 மாணவர்கள் இதை பெரிதுபடுத்தி மாணவர்களிடையே கூட்டம் நடத்தி, உணர்ச்சி பொங்க பேசினார்கள். நாங்களும் அவர்
    களது பேச்சுக்கு கட்டுப்பட்டோம்//
    Ithu kavalthuraidam kaithana ilaiyaraja kudutha vakkumulam….. சித்திரை செல்வன், வெற்றி கொண்டான், குபேந்திரன், மணிமாறன் evargalum,ungalukum ena vithyasam enbhathai konjam yosithu parungal….
    Poradungal!! Aanal kanmudithanamaga poradathirgal!! Adhai theeviravatham enbargal….manithaneyathai kakka mudiyavittalum…. Ungal thalaimuraiyai Theeviravathigalaga uruvakivedathirgal….
    Thalith ena uyarvukana ungal pathivai’ satta kallori pathivodu saerkamal irunthu irunthal ungalai innum paerumaiya karuthi irupaen….

  48. I live in U.S. For the record, I am born in the Iyer caste.

    How exactly do you expect people to react to the scene of a person being mercilessly beaten? Do you expect people to rejoice? We are all human beings, and expecting us to shout “Hurray” at this is just stupid.

    Also, the Thinniyam incident is quoted all the time – the implication being that the “common, non-Dalit man” was thrilled with the incident. The common man’s problem is passiveness – most of us assign a higher priority to our daily problems, and we are not Gandhis who would go to work for the upliftment of the society. What makes you think that the “common, non-Dalit” is a monster? Your (and others’) posts imply that we should have all gone to Thinniyam to protest and stop this. The common-man – whether Dalit or not – will behave exactly like you did in that teashop – just move away from the scene of conflict. After all, you didn’t go to Thinniyam either, did you?

    The attack on the thevar student is perhaps justified, perhaps not. Perhaps that student tried to humiliate the dalit students. But then the justification should be based on what that person did! It would be justifiable to beat him up in self defense, for example. But if this guy is beaten mercilessly because the dalit students were the victims of the two glass practice in their native villages, it is both legally indefensible and morally reprehensible!

  49. தேவர் மகன் படத்திற்கு இளையராஜாவை இசை அமைக்க எந்த சமத்துவம் அனுமதித்து என்று புரியவில்லை .
    ஒரு தலித் இசை அமைத்த பாடல்கள் இவர்களுக்கு தீட்டாக தெரியவில்லையா ? போய் புள்ள குட்டிகள படிக்க சொல்லுங்க . படிக்கிற எடத்துல ஜாதி வெறிய தூண்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்

  50. //பிறகு விசாரித்து பார்த்ததில் சாதி வெறியன் . , தல மற்றும் பலர் அந்த தென் மாவட்ட நாடார்ர்ரூஊ என்று… //

    The ironic fact is that the nadar community (ex: shanar community) itself is once a worst oppressed by their oppressors. In kanyakumari dist., the womanhood were not allowed to wear blouse by their oppressors. In one horrific event a woman breast was cut off for not exposing it to the oppresor. That much painful history, the community of that caste fanatic had.

    In virdhunagar a violence was unleased to prevent their economical mobilty, by the oppressors of that time using kallar group. the more funniest thing is even that kallar caste was once brutully suppressed by maravar group.Once the nadar showed their resistance through violence,the kallar stopped attacking nadars

    But the painful fact is all these groups are working hand in glove with their one time oppressor in suppressing those wards below them.

    what i have to assume from this is people give respect and hear their voice only when they unleash violence against their oppressors. otherwise commoners feels it as a just like that

    Parapaniyam only produces cowards who attack hapless people but not a brave one.when ever these cowards recieve a counter violence from the suppressed then they start to hide their tail under butts

  51. வினவு. நான் ஒரு பிராமணன். தாங்கள் சொன்ன சில விஷயங்கள் என்னை கண் கலங்க செய்தன. தாத்தா ஒருவருடன் தாங்கள் டீ கடையில் டீ குடித்தது பற்றிய அந்த செய்தி. மிகவும் வருந்தத்தக்கது.

    இன்னும் நம் நாட்டில் இந்த மாதிரி கொடுமைகள் இருப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இதை தடுக்க நாம் எதாவது செய்தாக வேண்டும்.

    குறைந்தது அடுத்த தலைமுறையாவது இந்த கொடுமைகளை எதிர்க்க / சமமாக நடத்த ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    கிராமங்களில் தலித்துகளுக்கு நடக்கும் இந்த கொடுமையயை அவகளுக்காகவே கட்சி நடத்துபவர்கள் இந்த மாதிரி நடத்தும் டீ கடைகளின் விபரத்தை நேரடியாக முதல்வருக்கு எடுத்து சொல்லி தடைகளை எடுக்க குரல் கொடுக்கலாமே!

    குறைந்தது கடைக்கு உரிமையையை ரத்து செய்யசொல்லலாமே!

    தாங்கள் கூறியதில் ஒன்று மட்டும் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை.

    “சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை”

    அதாவது சட்ட கல்லூரியில் நடந்த வன்முறையில் யார் யாரை தாக்கி இருந்தாலும் அது வன்முறையே.

    பாரதி கண்ணன் கையில் கத்தி இருந்தது உண்மை. ஆனால் தாங்கள் சொன்னதை போல் தேவரினத்தவர்தான் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்தர்களானால் இப்படி இருவர் மட்டும் வந்து இவர்களிடம் அடி படும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல.
    இந்த சட்ட கல்லூரி சம்பவத்தி பொறுத்தவரை தேவரினத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது இதை தாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

    ஒளிபரப்ப்படாத ஆயிரம் வன்முறைகளை பற்றி சொல்லிருதீர்கள். அதை வெளி உலகுக்கு வெட்ட வெளிச்சமாக்க வேண்டிய கடமை பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. நாம் அதை ஏன் செய்வதில்லை!

    அதை வோட்டு அரசியலுக்கு தான் சிலர் பயன்படுதுகிரார்களே தவிர கொடுமையயை எதிர்த்து எந்த செயலும் அவர்கள் செய்வதில்லை.

  52. அடப்படுபாவிகளா… நீங்களெல்லாம் மனிதர்கள்தானா… அது சரி.. மிருகத்தனமாக அடித்த காட்டுமிராண்டிகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுபவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் கிடையாது.. அவர் உயர்ந்தவர். அவர் பெயரை சொல்லி இப்படி அடிதடி பண்ணிக்கொண்டு திரிபவனும் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு நியாயம் கற்பிப்பவனும் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவன்தான். கேவலமானவன்தான். இப்போது “வினவு”பவனும், அதற்கு வக்காலத்து வாங்குபவனும் அவன் கூறும் “தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” “மேல்(!)” வர்க்கத்தால் தாக்கப்பட்டபோதே இந்த blog-ல் எழுதி கிழித்திருக்கலாமே! இதுவே அவன் வீட்டு பிள்ளையை அடித்திருந்தால் அலறி துடித்திருப்பானா… இல்லை அடித்தவன் என்ன ஜாதி என்று ஆராய்ந்து அவன் பக்கத்து நியாயத்தை கண்டுபிடித்துக் கொண்டிருப்பானா…? என்ன ஜாதியோ.. என்ன எழவோ..!

  53. அடிப்பதும் தவறு! திருப்பி அடிப்பதும் தவறு!! ஆனால், இப்போ நீங்க திருப்பி அடிப்பது தவறு இல்லை என்பது போல் எழுதியிருக்கிறீர்கள். அவ்வளவு தான்.

  54. திரு வினைவு, நீங்கள் நன்றாக புனைவு செய்கிறீர்கள்!
    நீங்கள் இராமாயணம் கூட படைக்கலாம், நம்புவதற்கு ஆள் இருந்தால். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். ஒரு வேலை நீங்கள் நல்லவராக கூட இருக்கலாம். வன்முறை செய்த மாணவர்களுக்கு வக்கலாத்து வாங்காதீர்கள். நூறு பேரு வக்கலாத்து வாங்கினால் கோயபல்ஸ் மாதிரி, எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்பது உங்கள் கணிப்பா? போங்கையா நீங்களும் உங்கள் நியாயமும். மெனக்கெட்டு பக்கம் பக்கமாக வேறு எழுதித் தள்ளுகிறீர்கள். உங்களிடம் உள்ள சாதி வெறியும், தாழ்வு மனப்பான்மையும் அகன்றால் தான் சாதீயம் ஒழியும். தீண்டாமை ஒழியும்.

  55. அம்பேத்கார் உங்களை இப்படி அடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாரா?
    என் பேரை சட்ட கல்லூரிக்கு வையுங்கள் என்று சொன்னாரா? இப்படி அடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாரா?முத்துராமலிங்கத் தேவர் தன் பெயரை விமான நிலையத்துக்கு சூட்டச் சொன்னாரா? ஏன்டா இப்படி அலையுறீங்க.
    உங்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு கொடுத்து அரசு படிக்கச் சொல்கிறது. அதை விட்டு விட்டு ஏன்டா அடிச்சிகிறீங்க. உருப்புடுங்கடா!
    அந்த நாய்களுக்கு தற்காத்து எழுத கிளம்பிட்டாங்க! இவங்க!! போய் வேலையைப் பாருங்கப்பா!!! சண்டை வராது. நீங்களெல்லாம் இப்படி எழுதுவதால் தான் சாதிவெறி ஏற்படுகிறது. சண்டை மூளுகிறது.

  56. //Naan kadavul, மேல் நவம்பர் 20th, 2008 இல் 3:10 பிற்பகல் சொன்னார்:
    தேவர் மகன் படத்திற்கு இளையராஜாவை இசை அமைக்க எந்த சமத்துவம் அனுமதித்து என்று புரியவில்லை .
    ஒரு தலித் இசை அமைத்த பாடல்கள் இவர்களுக்கு தீட்டாக தெரியவில்லையா ? போய் புள்ள குட்டிகள படிக்க சொல்லுங்க . படிக்கிற எடத்துல ஜாதி வெறிய தூண்ட வேண்டாம் என்று சொல்லுங்கள்
    //

    தோடா இவரு சொல்ல வந்துட்டாரு.
    படிச்ச்சவந்தான்ய்யா இந்த வேலை செய்யிறான். அது தெரியாம பின்னூட்டம் போடுறே?
    தப்பு தப்ப எழுதாதைய்யா!
    இளையராஜாவே ஒன்னும் சொல்லலை. இவரு சொல்ல வந்துட்டாரு.
    இளையராஜாவையும் வைரமுத்துவையும் சென்னைக்கு அழைத்துவந்தது யாருன்னு தெரியுமா உனக்கு. அதெல்லாம் வசதியா மறந்திடுங்கய்யா!
    உங்க வெறியை மட்டும் காட்டுங்க!

  57. //godzilla, மேல் நவம்பர் 19th, 2008 இல் 6:32 பிற்பகல் சொன்னார்:
    ‘சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை’

    பொய்தான் சொல்றீங்க, நம்பும்படி சொன்னா என்ன?. அங்கு என்ன சினிமா படபிடிப்பா
    நடந்தது.நம்மாள் அடிபடறான், செத்தாலும்
    செத்துறுவான், பரவாயில்லை படம் பிடிக்கட்டும்ன்னு காப்பாத்தாம
    விட்டுவிட்டாங்கன்னு
    சொல்றீங்களா.//

    ஆகா godzilla நீ படமுன்னுதான் நினைச்சேன். நல்ல படத்தையே உருவாக்குவே போலிருக்கே! உன்னை நம்பி பணம் போட்டா வீண் போகதப்பா! நல்ல கதையைத் தயார் பண்ணு.

  58. இதை எழுதிய வினைவு ஒரு தலித்தாக இருக்க முடியாது. ஒரு தேவராகவோ அல்லது வேறு சாதியைச் சேர்ந்தவராகவோத்தான் இருக்க முடியும். அவனுக தான் இப்படி எழுதி பேர் வாங்க அலையுறாங்க. முற்போக்குவாதிகளாம். போங்கய்யா நீங்களும் உங்க வாதமும்!

  59. //வினவு, மேல் நவம்பர் 18th, 2008 இல் 9:22 பிற்பகல் சொன்னார்:
    “1. அடிபட்ட மாணவர்கள் அப்பாவிகளா?

    2. சம்பவ இடத்திற்கு மீடியாக்கள் எப்படி வந்தன?

    3. ‘பத்து பேர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக ஒருவனைத் தாக்கும்’ அளவுக்கு அவன் செய்த குற்றமென்ன?

    1. அடிபட்ட மாணவர்களில் பிரதானமானவன் பாரதி கண்ணன் என்னும் மாணவன் கல்லூரியில் தொடர்ச்சியாக வன்முறைச் செயல்களை நிகழ்த்தியும் வன்முறைச் செயல்களைத் தூண்டியும் வந்திருக்கிறான். இவன் மீது பாரீஸ் காவல் நிலையத்தில் ஆறு எப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு ‘சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே அரிவாளோடு திரிந்த மாணவன் கைது’ என்னும் பெட்டிச்செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. அந்த இளைஞன் பாரதிகண்ணன்தான். தேவர் ஜெயந்திக்குப் போஸ்டர் அடித்தது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் பாலநாதன், ஜெகதீஸ் என்னும் இரண்டு தலித் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியது, தலித் பெண்களைத் தொடர்ச்சியாகச் சீண்டுவது, தலித் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது ஆகிய செயல்களைத் தொடர்ச்சியாகப் பாரதிகண்ணன் கும்பல் நிகழ்த்தியுள்ளது.

    2. சட்டக்கல்லூரியில் மோதல் நிகழப்போகிறது என்பது தேவரின மாணவர்களுக்கு முன்பே தெரியும். தேவரினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக மீடியாவில் சில பத்திரிகை நிருபர்களுக்குச் செய்தி அனுப்பியே அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு முன் தேவரின மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது நிகழ்த்திய எந்த வன்முறையும் மீடியாக்களில் பதியப்படவில்லை.”(http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_18.html)

    மிகவும் தாமதமாக உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தாக்கியவர்களை போலீஸ் எப்படி கைது செய்கிறதோ அது போல தாக்குதலுக்கு காரணமானவர்களையும் போலீஸ் கைது செய்ய வேண்டும். பிரதானமாக தலித் மாணவர்களை தேர்வெழுத விடாமல் தடுத்தவர்கள்.அரசு வழங்கும் சலுகைகளை இழிவாக பேசியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாரபட்ச மற்ற முறையில் நடவைட்க்கை எடுக்கப்பட வேண்டும்.பார்ப்பன பொதுப் புத்திக்கு பலியாகியுள்ள பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதிகள் தங்களி உண்மையான எதிரிகளை இனம் காண வேண்டும்.

    நன்றி- அருள் எழிலன்.//

    அய்யா வினைவு, இன்னொருத்தன் சாதி வெறியில் எழுதியதைக் காப்பி அடித்துப் போட்டு நியாயம் தேட வேண்டாம். நீங்க பெரிய ச்காட்லண்டு யார்டுன்னு எல்லோருக்கும் தெரியும். நியாயமா எழுதுங்கடே! கத கட்டாதிங்கடே!! நாக்கு அழுகிப் போகும்.

  60. //இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?
    //

    அன்புள்ள வினவு,
    எல்லா கட்சிக்காறாலும் கறாரா ஒடுராலே அது எதுக்கு ஓய்! ஓட்டுப் பொறுக்கத்தானே? தேர்தல் நேரமாக இருந்தால் நம்ம திருமாவும் அங்கதான் இருப்பா தெரிஞ்சிக்கோ கண்ணு! இதிலிருந்து தெரியுதா, தலித்து, தேவா,வன்னியவா இவா கிட்ட தான் நம்ம அரசியல் வாதிங்க பிழைப்பு நடத்துறாங்கன்னு. அவர்கள் இன்றி தமிழக அரசியலே இல்லை என்பதுதான் உண்மை!

  61. //இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப் படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’.//

    அவர் பிறந்த அன்றே இறந்ததால் தான் அவருக்கு குருபூஜை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தனது சொத்து முழுவதையும் பொதுமக்களுக்கு எழுதி வைத்தவரை தவறாக நீங்கள் சித்தரிக்க முயல்வது ஏன்? இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜிக்கு பக்கபலமாக இருந்து பாடுபட்டவரை ஏன் சதீயத்துக்குள் அடக்குகிறீர்கள். தீண்டாமையை எதிர்த்து, தேவர் இன மக்கள் சிலரை எதிர்த்து எழுதுங்கள், முத்துராமலிங்கத் தேவரைத் தவறாக சித்தரிக்க முயலவேண்டாம். அது வரலாற்றுப் பிழையாகிவிடும். அவரை தவறாக எழுதும் பதிவுகள் எல்லாம் சாதிதுவேஷத்தைக் கட்டவிழ்த்து விடக்கூடியாதகவே இருக்கிறது. வேண்டாம் நிறுத்துங்கள்!

  62. நல்லதம்பி, இனியவன், மாரியப்பன், முனியாண்டி, வடிவேலு, ராஜாராம், இராமானுஜம் என்ற பெயர்களில் ஒருவரே பின்னூட்டம் போட்டிருக்கிறார். சாதி வெறிக்கு ஆதரவாக பலர் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக இவ்வளவு பிரயத்தனம் செய்திருப்பவர் அதை ஒரே பெயரில் வெளிப்படையாகச் செய்யலாமே. ஏனிந்த தசாவதார வேலை? தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதை உங்கள் பதட்டத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் தூக்கிப்பிடிக்கும் சாதிவெறிக்கு எதிர்காலமில்லை, அது எப்படியும் புதைகுழிக்குத்தான் போக வேண்டுமென்பதை இந்தப் பல குரல் மன்னர் இப்போதைக்குப் புரிந்து கொள்ளப் போவதில்லை.

  63. “allathambi, மேல் நவம்பர் 22nd, 2008 இல் 8:49 மு.பகல் சொன்னார்:
    திரு வினைவு, நீங்கள் நன்றாக புனைவு செய்கிறீர்கள்!
    நீங்கள் இராமாயணம் கூட படைக்கலாம், நம்புவதற்கு ஆள் இருந்தால். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். ஒரு வேலை நீங்கள் நல்லவராக கூட இருக்கலாம். வன்முறை செய்த மாணவர்களுக்கு வக்கலாத்து வாங்காதீர்கள். நூறு பேரு வக்கலாத்து வாங்கினால் கோயபல்ஸ் மாதிரி, எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்பது உங்கள் கணிப்பா? போங்கையா நீங்களும் உங்கள் நியாயமும். மெனக்கெட்டு பக்கம் பக்கமாக வேறு எழுதித் தள்ளுகிறீர்கள். உங்களிடம் உள்ள சாதி வெறியும், தாழ்வு மனப்பான்மையும் அகன்றால் தான் சாதீயம் ஒழியும். தீண்டாமை ஒழியும்.”

    டேய் நல்லத்தம்பி!
    தலித்துன்னா ஒனக்கு கிள்ளுக்கீரையா?
    வந்துட்டாணுவ.
    ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிற கதையா.
    தேவர் சாதியை பயபுள்ளையை இன்னும் நொங்காம விட்டது தப்பு.

  64. //“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

    கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

    “நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

    “நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

    “சார் வெளியூர் போல… நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

    என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

    தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

    அவர்கள் பத்து பேர் – நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.//

    நீர் சரியான தொடை நடுங்கி போங்கோ!
    எழுத வந்துட்டாரு புடுங்கி!
    தலித்துகளை மட்டமாகப் பார்க்கும் நீ மேல் சாதி சொறி நாய்தானே!
    அதை உன் பதிவை படிப்பவர்களுக்கே புரியும்.

  65. //டேய் நல்லத்தம்பி!
    தலித்துன்னா ஒனக்கு கிள்ளுக்கீரையா?
    வந்துட்டாணுவ.
    ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிற கதையா.
    தேவர் சாதியை பயபுள்ளையை இன்னும் நொங்காம விட்டது தப்பு.
    //
    மடையா நல்லத்தம்பியை ஏன்டா திட்டுறே?

  66. திரு வினவு, உங்களுடைய கருத்துக்கள் சில ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்த போதிலும், அவை சாதிவெறியை வேறு சாதியனருக்கு ஏற்படுத்தும். நீங்கள் முற்போக்காக எழுத நினைத்தால் கைம் பெண்கள் மறுமணம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் ஒழிப்பு இதைச் செய்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும். இப்படி சாதிவெறியை தூண்டுவது போல் கட்டுரை எழுதினீர்கள் என்றால், வீணாக இருதரப்பையும் மூட்டி விட்டது போல் ஆகிவிடும். உங்கள் பதிவின் பின்னூட்டங்கள் அதையே பிரதிபலிக்கின்றன. நீங்கள் மட்டுறுத்தல் செய்யாதது வீணான பின் விளைவுகளை ஏற்ப்படுத்தும். நன்றி!

  67. குழலி அவர்களுக்கு,

    ஒரு பத்திரிக்கையாளன் கடமையாதெனில்,

    அவை அவர்கள் பாடபுத்த்கத்தில்வரையறுக்கப்பட்டுள்ளது. நடுநிலைமை தவறாது இருத்தல் நன்று……………

    மக்கள் இறால் பண்ணைகளை அழித்தால் அதை அம்மக்களின் (பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கையாக) பார்க்கமாட்டீர்கள்.அதை அத்துமீறலாகத்தான் பார்ப்பீர்கள்.
    உங்களின் நடு நிலைமையின் தரம் அப்படி. எல்லா இடத்திலும் நியாயத்தராசு தேடி அலைந்து கொண்டிருகின்றீர்கள்?.உண்மையை சொல்லுங்கள்.வினவு எழுதிதான் மக்களுக்கு அடிவாங்கியவன் சாதி தெரியுமா? .அடிவாங்கிய மறுநாளே தமிழகம் முழுவதும் தேவர் சாதி சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினவே அதைகூட வினவு போன்றோர்.வெளியிட்டனரா? இல்லை மாட்சிமை தாங்கிய பத்திரிக்கையா?. திண்ணியத்தில் மலம் தின்னவைக்கப்பட்டதாக என்று கூறப்பட்ட நபர் என்று எழுதிய பத்திரிக்கை நிருபரின் நியாயத்தராசு எப்படி சரி சமமாய் நிற்கின்றது.முத்து ராமலிங்கம் என்ற சாதிவெறியனை பற்றி நீங்கள் என்ன குறிப்பிட்டீர்கள்?
    அவரின் சாதிவெறியை எங்காவது மறைமுகமாவவது வெளி காட்டினீர்களா?
    60 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் இந்த சனநாயகத்துக்கு -நீங்கள் மூட்டு கொடுத்து வருகின்றீர்கள் என்பதை மறுக்கமுடியுமா?மேலவளவு,கொடியன்குளம் கலவரத்தை இப்படித்தான் பக்கம் பக்கமாக எழுதினீர்களா?
    சன் டீவி செய்தது என்ன தெரியுமா? தமிழகம் முழுவதும் தலித்துக்கெதிராக அவர்கள் சாதிவெறியர்கள் என்ற பொய் தோற்றத்தை தான்
    உண்மயை புரிந்து கொள்ளுங்கள்.

    நாம் மக்களிடமிருந்து கற்போம்
    மக்களுக்காக வாழ்வோம்

    கலகம்.

  68. முத்து ராமலிங்கம் என்பவனை சாதி வெறியன் என்று சொல்லும். உன் பெயர் கழகமா? கலகமா? நீ தானைய்யா கலகம். நீ திருந்தினால் மற்றவர்கள் திருந்துவார்கள். வாழ்க உன் வேதம்.

  69. நல்லதம்பி, இனியவன், மாரியப்பன், முனியாண்டி, வடிவேலு, ராஜாராம், இராமானுஜம் என்ற பெயர்களில் ஒருவரே பின்னூட்டம் போட்டிருக்கிறார். சாதி வெறிக்கு ஆதரவாக பலர் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக இவ்வளவு பிரயத்தனம் செய்திருப்பவர் அதை ஒரே பெயரில் வெளிப்படையாகச் செய்யலாமே. ஏனிந்த தசாவதார வேலை? தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதை உங்கள் பதட்டத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் தூக்கிப்பிடிக்கும் சாதிவெறிக்கு எதிர்காலமில்லை, அது எப்படியும் புதைகுழிக்குத்தான் போக வேண்டுமென்பதை இந்தப் பல குரல் மன்னர் இப்போதைக்குப் புரிந்து கொள்ளப் போவதில்லை.

    தேவர் சாதியை பயபுள்ளையை இன்னும் நொங்காம விட்டது தப்பு

    அது சரி! தாங்கள் என்னவோ நடுநிலை நாட்டமை என்று நினைத்து நாங்கள் பின்னுட்டம் போட்டால் உங்கள் சாதி வெறி இங்கே தெரிந்துவிட்டது வினவு அல்ல நீர் வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  70. போதனை சாதி மதம் மறப்போமேன
    வேதனை சாதிமதம் பார்த்து
    போதனைக்கு ஒதுக்கீடு

    கவிஞர்கள் பலர் சாடியும்
    கவிதைகளாயிரம் பிறந்தும்
    காற்றோடு விட்டு விட்டோம்
    கருத்துக்களை
    களையெடுக்காமல் விட்டுவிடோம் சாதிமதங்களை
    =======================================
    உண்மையைச் சொன்னால்
    படிககாத பாமரர்கள்
    பார்ப்பதில்லை சாதியும் மதமும்
    படித்தோரே!!!!

    தருமபுரி கிருட்டிணகிரி இரண்டும் பின் தங்கிய மாவட்டங்களாம்
    தமிழகத்தில் உள்ள பல பேருக்கு இவை இரண்டும் தமிழகத்தில் உள்ளனவா என்பதே தெரியாது
    காரணம் சாதி மதச் சண்டைகளின் தாக்கம் அதிகம் இல்லை இங்கு

    கல்வியை வாழ்வில் கடைப்பிடிக்கும் போதுதான் ஒழியும் இவை!!!


    தமிழ்தாசன்

  71. dear friends,we cant change the social systems in one single incidents.other thing solution never come through violence.now i see the video ohhh my heart broke no no .if one person hit the other and get some benifit {like social recognise} the other get safer so ther is no eqality…so the recognition,respect,mariyathai all of these you cant take from anyone.it is some one must be give to you thats good.that time both party will happy.it is not happening tomorrow,you have to wait .(not so long very soon)like mayawathi she is not take any stick or iron rod.she work with people she get respect so now everybody happy.like you we are all so not educated very well.just now we are wearing white thoties without durty,we learn how to live ,we start business only now,only now we are getting some kind of social response NOW.actualy we are both same case.we are the lower level ni tamilnadu.nadar ..naicar..iyer..chettiyar ..anyone of them give respect to us.no in usilai nadar acting like iyer.they dont want talke with us.everybody thinking nadar not brave NO.they looking us ugly stupid.
    so friends forgot why gurupoogai etc etc do your job.think how to improve your society.dont looke only kallar we want enjoy our life.NO MORE FIGHT LIKE OLD DAYS.nowadays obamas become president .why not dalit become good social leader(not caste thalaiver)you fight for all.the real fight is against poverty. money job asset education can change everything.a dalit si coming must be respect.so why asking to anyone or anyparty.leave it.educate well come to good position then the so called recognition and respect come automaticaly.PLEASE NO MORE FIGHT.I WANT LIVE PEACEFULLY

  72. நண்பரே,
    //டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.//
    இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன நானும் மேல் சாதி தான் ஆனால் தலித்துகளுக்காக பரிந்து (பதிவு) எழுதுகிறேன் என்றா..?

    இந்த மனோபாவம் தான் பிரச்சினை.சாதியத்தின் அம்சமே தன்னை வேறொரு சாதிக்கு மேலாகவோ அல்லது கீழாகவோ உணர வைப்பது தான்.இதற்கு நீங்களும் விதி விலக்கல்ல என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

    ஒட்டு மொத்தமாக நமது சமூகம் அழிந்தாலோ அல்லது இந்த INDIA அழிந்து மீண்டும் பிறந்தால் தான் இது சாத்தியம்.

    உங்கள் அடயாளங்களை விலக்கம் செய்து விட்டு பின்னர் பதிவுகளை எழுதுங்கள்

  73. //குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை.//

    You are advocating un-true information and endorsing the roumours.

    Just because you can write, DON’T SHOW OFF THAT YOU DON’T HAVE ANY ETHICS AT ALL AND FOR THE PLEASURE OF APPLAUSE, YOU ARE WRITING ABOUT VARIOUS SICKNESS INSTEAD OF FINDING WAYS TO CHANGE.

  74. சாதியில்லா உலகை படைப்போம்,இந்த சாதி கருமாந்திரம் இல்லாமல் அரசியல் சாக்கடைகளால் இருக்க முடியாது. நாமாவது முயற்சிப்போமே.

  75. //டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.//

    பக்கம் பக்கமாக ஜாதி பாகுபாடை பத்தி எழுதிட்டு “நான் ஒரு (மேல் சாதி)” அப்டீங்கரத்தையும் செத்து மொத்தத்தையும் சொதப்பிட்டீங்களே..

  76. ENNA THALTHTHABADDAVAN UYARNTHAVAN

    MANITHANAKA VALUNKAL:……..

    INDIAVILATHANE BIRAPPU PATHTHIRATHTHILA
    SAATHI KEDDU ELUTHIRANKA.

    MAANAVARKALE NENKAL NINATHTHAL MUDIYUM.

    ORENALILA BIRAPPU BATHTHIRATHTHAI
    KALLURIKALUKKU MUNNAL KOLUTHTHUNKAL:
    ANIMEL BIRAPPU BATHTHIRATHTHIL SATHIY
    ENRU ALUTHAPPADDATHIL THAMILAN, THELUNKAN,KARNADAKAN,MALAYALAN,……….
    IBPADI ORU MUDIVU EDUTHTHU BORADAMUDIYUMA UNKALAALA?
    MUDINTHAL SEYYUNKAL…

  77. நியாயம், நேர்மை, உரிமை என்பதல்லாம் எல்லோருக்கும் எப்போதும் பொதுவானதாக இருக்கமுடியாது. மதம், சாதி, வர்க்கம் ஒழிக்கப்படும்போது மட்டுமே அது போதுவானதாக இருக்க முடியும். எனது பெற்றோர், சகோதரன் குழந்தைகள் சாதிய, மத,வர்க்க ஒடுக்குமுறைக்காக கொலை, கற்பழிப்பு, சித்திரைவதைக்காளாகும் போது அதற்குக் காரமானவர்கள் தண்டிக்கப்படுப்போதுத என் மனம் வலிக்காது. ஏனெனில் நான் வெறும் வாயால் மனிதனாக மாறினவனில்லை. சாதி, மத அடையாளங்களைத் துறந்தது மட்டுமல்லாது நான் பிறந்த மதத்தின் குறைகளைச் சாடுபவன், எதிராக குரல் கொடுப்பவன்.
    கம்யுனிஸ்ட்களான நாங்கள் மறு காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவது ஏகாதியபத்தின் சுரண்டலால் வாழ்விழக்கும் அனைத்து சாதி, மத தொழிலாளிக்காகவும் தான். அதனால் ஒரு முதலாளி எவ்வககையில் துன்பப்பட்டாலும் என் மனம் வலிக்ககாது. மகிழ்ச்சியே அடையும். ஏனெனில் ஒடுக்கப் படுபவர்களுக்காக மட்டுமே நான். நான் ஒரு மனிதன்.

  78. dhevar is our god… you dont consider under he is criminal.. do you know about your leader and law….. while india was struggled to get freedom.. he went for now there is no caste problem. but you are the fellow who makes revenge.. our people still remaining keep silent.. dont touch.

  79. மனிதன் ஒருவரை கடவுளாய் பார்ப்பதே அடிப்படை தவறு….

    மனிதனை மனிதனாய் பார்க்காத எவனும் மனிதன் இல்லை….

    அந்த வயதானவரை ஒடுங்கி போய் உட்கார வைத்து யார்……?????

    எந்த ஒரு தனிப்பட்ட பிரிவினரும் கோபம கொள்ளாமல் நீதி ..நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்……

    கோபப்படும் மேல்சாதிகாரர்கள்(???)…… நீங்கள் தப்பி தவறி ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து … உங்கள் வாயினில் மலம் திணிக்கபட்டிருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று இங்கே பதியவும்….

  80. ஆதிக்க சாதிக்காரன் கிள்ளினால் கூட ‘ஐயோ கொடுமை’ என்று அலறுபவனும்,
    பத்து தாழ்த்தப்பட்டவன் சேர்ந்து ஒரு ஆதிக்க சாதிக்காரனை அடிப்பதை ‘ஆகா சமூக விடுதலை’ என்று வர்ணிப்பவனும் தான் உண்மையான சாதி ஒழிப்பு போராளி.

    இதே வேகத்தோட போங்க,அத்தி பூக்கள் சீரியல் முடியிறதுக்குள்ள சாதிய ஒழிச்சுரலாம்.

  81. பழங்காலத்தில் ஒருவன் மற்றவன் கையை உடைத்தால் உடனே இவன் கையும் உடைக்கப்படும் என்ற காட்டு மிராண்டி தனமான தண்டனையை தான் அரசர்கள் தீர்பளிதார்கள். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தண்டனை முறை எவ்வளவு முட்டாள் தனமானது என்று இன்றைய படித்த தலைமுறையினருக்கு தெரியும். அதேபோல ஒரு முட்டாள் தனம் தான் முன்னொருகாலத்தில் அந்த சாதிக்காரன் அடிதான் பதிலுக்கு நானும் அவனை அடிப்பேன் என்று கூறுவதும்

    நேற்று அவன் அடிதான் இன்று நான் அடிப்பேன் என்றால் நாளை அவன் மகன் உங்கள் மகனை திருப்பி அடிப்பான் இதற்க்கு முடிவே இருக்காது.

    ஆட்சியாளர்களும் புரட்சியாளர்களும் சாதி உணர்வை தூண்டுவதாக வினவு கூறுகிறது. உண்மையில் வினவும் அதன் தலித் ஆசிரியர்களும் தான் சாதி தூண்டும் வேலையை செய்கிறார்கள்.
    இந்த பதிவின் ஆசிரியர் சட்டக்கல்லூரி தேவர் மாணவன் தாக்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்வடைந்துள்ளது, இந்த பதிவின் ஊடே தெரிகிறது.
    சிறு நெருப்பை எதிர்த்து ஊதினால் அது அணைந்து விடும், ஆனால் சாதி என்ற கொழுந்து விட்டு எரியும் தீக்கேதிராய் பெரும் காற்று அடித்தால் அது அணையாமல் மேலும் கொழுந்து விட்டு எரியும் என்பதை மறக்காதீர்கள்.

  82. “நேற்று அவன் அடிதான் இன்று நான் அடிப்பேன் என்றால் நாளை அவன் மகன் உங்கள் மகனை திருப்பி அடிப்பான் இதற்க்கு முடிவே இருக்காது”

    இவளோ நல்ல பேசுறிங்க யோசிக்கிறிங்க… இத எதிர்த்து களத்தில் எறங்கி போரட்ட வேண்டியது தான தோழரே…? கடைசி வர இப்டியே பேசிடு போயிரலாம்னு தான இருகிங்க..!

    இவங்க களத்துல போராடுறவங்க… சரிங்கள அத யோசிக்காம பேச கூடாது தோழரே….

    • Thats true,if they want to respect Ambedkar,one should let them.

      I think it is better for non-SC/ST castes to start freely mixing and consolidating and form a chunk,else they ll become extinct in no time.

Leave a Reply to S:J:R பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க