privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்காஷ்மீர், அப்சல் குரு.... இந்திய அரசின் பயங்கரவாதம் !

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

-

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 5 )

மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம்.

முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான சூழ்நிலையை இந்து மதவெறியர்களும், இந்திய அரசு நிறுவனங்களும் எவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இத்தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்களில் பார்த்தோம். இங்கு காஷ்மீர் பிரச்சினையின் மூலம் இந்தியாவின் பாத்திரத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீர் மக்கள் அறுபதாண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தப்போராட்டத்தில் மதம் இருக்கவில்லை, தேசிய இன உணர்வுதான் இருந்தது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.

இப்படித்தான் பாக் ஆதரவு இசுலாமியத் தீவிரவாகக் குழுக்கள் பிறந்தன. இந்தியாவும் தனது பங்கிற்கு ஜே.கே.எல்.எப் போன்ற அமைப்புக்களை பிரித்தும் கைக்கூலிக் குழுக்களை உருவாக்குவதையும் செய்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தை பாக் ஆதரவுக் குழுக்கள் பாக்கிஸ்தானுடன் இணையவேண்டுமென மாற்ற முயற்சித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியத் துருப்புக்கள் செய்ய அட்டூழியத்தை வைத்து பாக்கிஸ்தான் ஆதாயம் தேடப் பார்த்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்கு காஷ்மீர் போராட்டம் பாக்கிஸ்தானுக்கு அளப்பரிய வாய்ப்பை அளித்தது. இப்படி இருநாடுகளும் காஷ்மீரை சூடு தணியாமல் பார்த்துக் கொண்டன. இருப்பினும் இந்த அநீதியில் இந்தியாவின் பாத்திரமே முதன்மையானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியப் படைவீரர் என்ற கணக்கில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் எல்லாவகை அடக்குமுறை அதிகாரங்களையும் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீரில் இன்று எங்கும் இராணுவ முகாம்கள்தான் முளைத்திருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். இதுதான் நிலைமை என்றால் காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாக தீவிரவாதிகளின் பயங்கரவாதம் ஏன் தோன்றாது?

இந்தச் சூழ்நிலையில்தான் தனது உயிரைத் துச்சமென மதித்து வரும் பிதாயின் தாக்குதல்கள் காஷ்மீரிலும், இப்போது மும்பையிலும் நடக்கின்றன. இவர்கள் பொதுமக்களை இரக்கமின்றி கொல்லும் வெறித்தனத்தை இந்திய அரசிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அதுதான் இந்தியாவிற்கு புரியுமென நம்புகின்றனர். இப்போது போலீசின் பிடியிலிருக்கும் அஜ்மல் சிறு திருடனென்றும், ஏழையென்றும், தனது குடும்பத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கிடைக்கும் என்பதற்காக இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கலந்துகொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் கதையிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. காசு அல்ல, தனது உயிரைப் பணயம் வைக்கும் உணர்ச்சிதான் காஷ்மீரிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம். அந்த உணர்ச்சியை இந்திய அரசின் அதிகார்வப்பூர்வ பயங்கரவாதம் வரம்பில்லாமல் அளிக்கிறது.

காஷ்மீரிலிருப்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும்தான் என ஏனைய இந்தியாவை நம்பவைக்கும் இந்திய அரசின் முகமூடியைக் கிழித்தெரியும் வரை இந்தியாவிற்கும் இப்பிரச்சினையிலிருந்து விடுதலை இல்லை. நாளொன்றுக்கு 500 கோடி ரூபாயைக் காஷ்மீரிலிருக்கும் இராணுவத்திற்கு இந்திய அரசு செலவழிக்கிறது என்பதிலிருந்து கூட இந்த சீழ் பிடித்த புண்ணின் நாற்றத்தை முகரலாம். காஷ்மீர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த அரச பயங்கரவாதத்தையே தேசபக்தி என்பதாக சிலர் திமிருடன் பேசித் திரிகின்றனர்.

மும்பைத் தாக்குதலுக்கு மோடி போன்ற தேசபக்த சர்வாதிகாரிகளின் ஆட்சிதான் தீர்வு என்று எழுதும் டோண்டு ராகவனுக்கோ, டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா, பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ, குமரி முனையிலிருந்து தனது நடுத்தர வர்கக்க அற்ப வாழ்க்கையையே மாபெரும் ரசனையாக வாசகருக்குக் கற்றுத் தரும் தேசபக்தர் ஜெயமோகனுக்கோ, மற்றும் பாரத மாதவுக்கு போட்டோவில் பூஜை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கோ தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாக் வசமிருக்கும் காஷ்மீரில் இருக்கும் போராளிக் குழுக்களைத் தாக்கி அழிப்பதற்கு தற்கொலைப் படையாக அனுப்பினால் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். அனுதினமும் எல்லா க்ஷேமங்களையும் அனுபவித்து வாழும் அவர்கள், வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும், நிம்மதியான குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் அப்படி இழந்தவன்தான் தன்னை அழிப்பதற்கும் தயாராய் வருவான். மூன்று வேளையும் மூச்சுத்திணற தின்று வாழும் ஜன்மங்களுக்கு இந்த இழப்பின் வலி தெரியாது.

இந்த ஜென்மங்கள்தான் மும்பைத் தாக்குதலை ஒட்டி டெல்லி சிறையிலிருக்கும் அப்சல் குருவை உடனே தூக்கில் போடவேண்டுமெனத் துடிக்கின்றன. அதிலும் அத்வானி அன்கோ இதில் இன்னும் அவசரமாகப் பதறுவதற்குக் காரணமுண்டு.

90களின் பிற்பகுதியில் ஒரு போராளிக் குழுவில் சேர்ந்து பாக் வசமிருக்கும் காஷ்மீருக்குச் சென்று ஆயுதப் பயிற்சியெல்லாம் எடுத்த அப்சல் குரு பின்னர் அதில் நம்பிக்கையிழந்து போலீசில் சரணடைந்து நிம்மதியாக வாழ நினைக்கிறார். ஆனால் திருமணம் முடிந்து குழந்தை குடும்பமென வாழும் அவரை போலீசார் நிம்மதியாக வாழ விடவில்லை. அன்றாட வாழ்விற்கே அல்லல்படும் அவரிடமிருந்து அவ்வப்போது பணம் பறித்துக் கொண்டும் அவரை ஆள்காட்டியாக பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதை மறுத்தால் அவரை ஒரு என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு ஒரு பயங்கவராதியைக் கொன்றாதக அறிவிப்போமென மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து கொண்டே ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீசார் சொல்லும் எல்லா வேலைகளையும் அவர் மறுக்காமல் செய்கின்றார்.

அப்படித்தான் 2001 ஆம் ஆண்டு ஒரு போலீசு அதிகாரி அவரிடம் ஒரு நபரை அறிமுகம் செய்து டெல்லியில் விட்டுவிட்டு தேவையான உதவிகள் செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதை மறுக்காமல் செய்யும் அப்சல்குரு அதை முடித்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அவர் அழைத்துச் சென்ற நபர் பாரளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்து போகும் குழுவில் உள்ளவர். அந்தப் போராளி அப்சல் குருவின் செல்பேசியில் இரண்டுதடவைகள் பேசினார் என்பதுதான் போலீசார் முன்வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி அடுத்த முறை தாக்குதலுக்கு வரும் தீவிரவாதிகள் அவர்கள் செல்பேசியிலிருந்து அத்வானிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்படுமா?

அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த போலீசார் அவரை சித்திரவதை  செய்து தங்களுக்கேற்ற வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். அப்படி மறுவிசாரணை செய்தால் 2001 பாரளுமன்றத் தாக்குதலில் போலீசாரும் அவ்வகையில் பா.ஜ.க கூட்டணி அரசும் ஈடுபட்டிருப்பது தெரியவரும். இது மத்திய அரசுக்கு தெரிந்தே நடந்த பயங்கரவாதம் என்பதையும் அதை வைத்தது பாக்குடன் போரில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் அடைய முயன்ற கதையும் அம்பலத்திற்கு வரும் என்பதால்தான் அத்வானி அன்கோ அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமென இப்போதும் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை முதல் வேலையாகச் செய்வதற்கு வாய்ப்புண்டு.

அப்சல் குருவின் கதையிலேயே காஷ்மீர் தீவிரவாதம்பற்றிய இந்திய அரசின் சதிகளும், சூழ்ச்சிகளும் இருக்கும் பட்சத்தில் நாம் எல்லா பயங்கரவாதங்களையும் இப்படித்தான் சந்தேகிக்க முடியும். மும்பை பயங்கரவாதமும் பல பெரிய கைகளுக்கு தெரிந்தே நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. அந்தப் பெரிய கை அமெரிக்காதான் என்பதோடு அந்தக் கைக்குள்தான் பாக், ஐ.எஸ்.ஐ போன்ற சிறிய கைகள் வருகின்றன என்பது உண்மை. முதலில் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள், சர்வதேசம் பேசும் இசுலாமியத் தீவிரவாதம் குறித்து உலகை பயமுறுத்தும் கதையைப் பார்க்கலாம். இந்த ஜிகாதி பயங்கரவாதமே அமெரிக்கா பெற்றெடுத்து வளர்த்த செல்லப்பிள்ளை என்பதை வரும் பாகத்தில் ஆராய்வோம்.

-தொடரும்