privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் 'சகிப்புத்தன்மை'!

ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!

-

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர்கள் மீதான தாக்குதலுக்காக சென்ற ஆண்டில் மட்டும் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தாக்கப்படும் பலர் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதால், தாக்குதலின் எண்ணிக்கை உண்மையில் இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் கூறுகின்றனர்.

நிதின் கார்க் கொலையைத் தொடர்ந்து, இது நிறவெறித்தாக்குதலாக இருக்க வாப்பு இருக்கிறது என்று முதன் முறையாக விக்டோரியா மாகாணத்தின் தலைமை போலீசு கமிசனரே ஒப்புக் கொண்டிருக்கிறார். எனினும் இவையனைத்தும் வழிப்பறி, ரவுடித்தனம் போன்ற வழமையான குற்றங்களேயன்றி நிறவெறித் தாக்குதல்கள் அல்ல என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலியாவுக்குப் பிழைக்கப்போன டாக்சி டிரைவர்கள் போன்ற அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த இந்தியர்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடக்கும்போதும், வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் இதைவிடக் கொடூரமாக இந்தியத் தொழிலாளிகள் நடத்தப்படும்போதும் அவற்றைக் கண்டு கொள்வதற்குக் கூட மறுக்கும் இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் சமீபகாலமாகக் குமுறிக் கொந்தளிப்பதற்குக் காரணம், அடி வாங்குபவர்களின் வர்க்கமும் சாதியும்தான். தற்போது தாக்கப்படுபவர்கள், இலட்சக்கணக்கில் பணம் கட்டி அங்கே படித்து விட்டு, பின்னர் ஆஸ்திரேலியக் குடியுரிமை வாங்கி அங்கேயே “செட்டில்” ஆக விரும்பும், உயர் நடுத்தர வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன. பாலிவுட் திரைப்பட இயக்குநர் மொகித் சூரி, இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்துப் படமெடுப்பதற்குத் திரைக்கதையே தயாரித்து விட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் “கடுமையான” கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது இந்திய அரசு. சில மாதங்களுக்கு முன் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சாதாரணக் கண்டனத்தைக் கூடத் தெரிவிக்க மறுத்த இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, “இது அப்பாவி இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் மட்டுமல்ல, மனித குலத்தின் மீது இழைக்கப்பட்டுள்ள கொடுங்குற்றமும் ஆகும்” என்று வருணித்தார். பார்ப்பதற்குக் கடும் கண்டனம் போலத் தெரிந்தாலும், நிறவெறித் தாக்குதல் என்று குற்றம் சாட்டுவதற்குக் கூடப் பயப்படுகின்ற இந்திய அரசு, கண்டனம் என்ற பெயரில் உதிர்த்துள்ள நகைச்சுவைத் துணுக்குதான் இது .

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை கொடுத்துள்ள வழிகாட்டுதலே இதனை நிரூபிக்கிறது; “தீவிரமான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட போதிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ஆஸ்திரேலியாவில் ஆகப்பெரும்பான்மையான இந்தியர்களுடைய அனுபவம் நேர்மறையானதே என்றபோதிலும், கீழ்க்கண்ட தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியர்கள் மேற்கொள்வது நல்லது. மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதிகளுக்குத் தனியாக செல்லாதீர்கள். எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதை யாரிடமாவது சோல்லாமல் வெளியே போகாதீர்கள். மடிக்கணினி போன்ற விலை உயர்ந்த பொருட்களை மற்றவர்களுக்குத் தெரிவது போல எடுத்துச் செல்லாதீர்கள். ஆபத்து என்றால் யாருக்குத் தகவல் சொல்லவேண்டும் என்பதை எழுதி சட்டைப் பையில் வைத்திருங்கள்” என்று நீள்கின்றன, இந்திய அரசின் வழிகாட்டுதல்கள்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய அரசிடம் இந்திய அரசு அடக்கி வாசிப்பதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா அமைத்துள்ள ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான இராணுவக் கூட்டணியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது என்பதுடன், அணு ஆயுதப் பரவல் தடையில் கையெழுத்திடாமலேயே, யுரேனியத்தைப் பெறுவதற்கும் இந்திய அரசு, ஆஸ்திரேலியாவைத் தாஜா செய்து வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் வாய்ப்பு இந்தியக் கல்வி வியாபாரிகளுக்கு இப்போது கிடைத்துள்ள சூழலில், சவடாலுக்காகக் கூட நிறவெறி எதிர்ப்பு பேசி வருமானத்தைக் கெடுத்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்பவில்லை.

இந்திய ஊடகங்கள் சாமியாடுவதை ஆஸ்திரேலிய அரசு சகித்துக் கொள்வதற்கும் காரணம் உள்ளது. அந்நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் சரக்குகளில் நான்காவது இடத்தில் இருக்கிறது கல்வி. ஆண்டொன்றுக்கு 15.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருமானத்தை கல்வி வியாபாரத்தின் மூலம் ஈட்டுகிறது ஆஸ்திரேலியா. இதில் இந்திய மாணவர்களின் பங்கு 2 பில்லியன் டாலர்கள். தற்போது இந்தியாவிலும் தனது கல்வி வியாபாரத்தைத் தொடங்கவிருக்கிறது. வெள்ளைக் கனவான்கள் கண்ணியம் காப்பதற்குக் காரணம் இதுதான். மற்றபடி, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் வெள்ளை நிறவெறியை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப்படவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியப் பழங்குடிகளைத் துப்புரவாக வேட்டையாடி ஒழித்து அந்த கண்டத்தையே கைப்பற்றிக் கொண்டது மட்டுமின்றி, பழங்குடி மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தடை செய்தது அரசு. அம்மக்களின் குழந்தைகள் மூலம் அந்தப் பண்பாட்டின் எச்சங்கள் கூட மிஞ்சி இருக்கக் கூடாது என்பதற்காக, 5 வயதுக்கு உட்பட்ட பழங்குடியின குழந்தைகளை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பறித்தது. இந்த நடவடிக்கைகளில் நேரடியாகப் போலீசாரே ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பிள்ளை பிடிக்கும் கொடுமை 1970-ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது என்பது ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் யோக்கியதைக்குச் சான்று.

இந்திய ஆளும் வர்க்கத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தீண்டாமைப் படுகொலைகள் கூட சாதாரணக் கொலைக்குற்ற வழக்குகளாகவே இங்கு பதியப்படுகின்றன. தீண்டாமையோ இந்துக் கலாச்சாரத்தின் அங்கமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை நிறவெறியைப் பற்றி வரம்பு மீறிப் பேசினால், தீண்டாமையும் சர்வதேசப் பிரச்சினையாகச் சந்திக்கு வந்துவிடும் என்ற அச்சமும் இந்திய அரசுக்கு இருக்கிறது.

உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை. மக்கள் தொகை அதிகரிக்காத ஆஸ்திரேலியாவுக்கோ, ஆசிய நாடுகளிலிருந்து மலிவான கூலிக்கு ஆட்கள் தேவை. இந்தியாவில் வர்க்க முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கு இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சாதி எப்படிப் பயன்படுகிறதோ, அப்படித்தான் நிறவெறியும் அங்கே பயன்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகளை இழந்து வரும் வெள்ளை இளைஞர்களின் கோபம் தனக்கெதிராகத் திரும்பாமல், ஆசிய நாட்டினருக்கும், கருப்பினத்தவருக்கும் எதிராகத் திரும்பும் அளவில், வெள்ளை நிறவெறி ஆஸ்திரேலிய முதலாளி வர்க்கத்துக்கும் பயன்படுகிறது. சாதிவெறியாகட்டும், நிறவெறியாகட்டும் எல்லாமே தமது தேவைக்கு உகந்த அளவில் தொடரவேண்டும் என்பதே முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது பற்றிக் கேட்டபோது, “கடந்த மூன்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரவிரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 30,000 இலிருந்து 1,00,000 ஆக உயர்ந்திருக்கிறதே” என்று பதிலளித்தார் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஹை கமிசனர் பீட்டர் வர்கீஸ். நிதின் கார்க்கிற்கு விழுந்த கத்திக்குத்தை விடவும் வலிமையானது இந்தக் குத்து. இருப்பினும் இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.

___________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010
___________________________________________

  1. டைம்ஸ் னௌ (டைம்ஸ் வொவ் என்று பெயர் வைத்திருக்கலாம்) என்று ஒரு வக்கிரமான சேனல் உள்ளது. அதில் தேசப் பக்தி பொங்க அஸ்திரேலிய நிகழ்வுகளைப் பற்றி ஒரு நாதாரி கத்திக் கொண்டிருந்தது, அதன் வொவ் வொவ் பொறுக்காமல், சேனல் மாற்றினேன். ஏதோ ஒரு சேனலில் இந்தோனேசியாவிலோ எங்கேயோ வேலைக்குச் சென்று கொத்தடிமை கொடுமைக்கு ஆளான பலரில் சிலரை மீட்டு திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வருவதை காட்டினார்கள்.

    அவர்களும் இந்தியர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், டைம்ஸ் நௌவும், அரசும் தான் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

    நாமெல்லாரும் இந்தியர்கள், இந்தியன் என்பதில் பெருமிதம் கொள் என்று தேச பகதி பஜனை பாடும், ஹாலிவுட் பாலா, கபிலன் போன்ற ரொம்ப நல்லவர்களை இங்கு பதில் சொல்வதற்கு அழைக்கிறேன்.

    • இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.

      டாப்பு…!

    • இரங்குவோன்,

      உங்கள் அனுபவத்தில் இந்த்ப் பிரச்சினை பற்றி என்ன கருதுகீறீர்கள் என்பதை பகிர்ந்து கொண்டால் பலனுள்ளதாக இருக்கும்.

  2. என்னதான் சொல்ல வருகிறீர்கள்.இந்தியாவில் சாதி வெறி, தீண்டாமை இருக்கிறது,ஆஸ்தேரலியாவில் நிற வெறி இருக்கிறது.ஆகவே அதற்கும் இதற்கும் சரி என்றா இல்லை சாதி வெறி,தீண்டாமை இருப்பதால் இந்தியாவும்,இந்தியர்களும் ஆஸ்த்ரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டாலும் ஒன்றும் செய்யக் கூடாது சொல்லக் கூடாது என்றா.

    ’இருப்பினும் இந்தக் குத்தெல்லாம் என்.ஆர்.ஐ. அம்பிகளின் தோலைக்கூடத் துளைக்க முடியாது.’ யார் அந்த என்.ஆர்.ஐ அம்பிக்கள்?. புரியவில்லை தயவு செய்து விளக்கம்.

    • “நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார்.”

      காப்புறுதிப்பணம் பெறுவதற்காக நடாத்திய நாடகம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரெலியாவில் இனவெறியில்லை. வட இந்தியா ஊடகங்களின் பொய்ச்செய்திகள், வதந்திகளை வைத்து இவ்வாக்கம் எழுதப்பட்டிருக்கிறது.

      டெல்லி: ஆஸ்திரேலியா வில் படுகொலை செய்யப்பட்ட ரஞ்சோத் சிங் என்ற இந்தியர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      இனவெறி காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

      25 வயதான ரஞ்சோத் சிங், ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், கிரிபித் நகரில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிருடன் எரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

      முதலில் இது இனவெறியால் நடந்த கொலையாக கருதப்பட்டது. விசாரணையில், ஒரு தம்பதி உள்பட 3 இந்தியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கைதான தம்பதியும் கிரிபித் பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இவர்களுடன் ரஞ்சோத் சிங்குக்கு நட்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

      இந்த நிலையில், ரஞ்சோத் சிங்கின் உடல் இன்று டெல்லி வந்து சேர்ந்தது. அவரது உடலில் பலத்த தீக்காயம் காணப்படுகிறது. முதலில் அவரை கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர் கத்தியால் பலமுறை உடல் முழுவதும் குத்தியுள்ளனர். அரைகுறையாக உயிருடன் இருந்த நிலையில் அவரைக் கொடூரமாக தீவைத்துக் கொன்றுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

      இதுகுறித்து உதவி போலீஸ் ஆணையர் மார்க் முர்டோச் கூறுகையில், இது மிகவும் கோரமான கொலையாகும். மிகக் கொடூரமான முறையில் ரஞ்சோத் சிங் கொல்லப்பட்டுள்ளார். கொலையின் உச்சகட்ட அளவு இது என்றார்.
      http://thatstamil.on…njodh-sing.ஹ்த்ம்ல்


      இன்சூரன்ஸுக்காக ‘தாக்குதல் நாடகம்’ நடத்திய இந்தியர்!

      மெல்போர்ன்: இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக, தன்னை சிலர் தாக்கி எரிக்க முயன்றதாக கூறி நாடகமாடியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.

      மெல்போர்ன் நகரின் வடக்கில் உள்ள எஸ்ஸன்டன், கிரிஸ் கிரசென்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங். இவர் சமீபத்தில் சிலர் தன்னை வீட்டின் முன்பு காரை பார்க் செய்து கொண்டிருந்தபோது தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதாக கூறினார்.

      இதனால் இது இனவெறித் தாக்குதலாக கருதப்பட்டது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் அல்ல, மாறாக யாரும் இவரைத் தாக்கவில்லை. இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார் சிங் என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.

      தற்போது இவர் மீது பொய்யான புகார் கொடுத்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீன் கோரியுள்ளார் ஜஸ்பிரீத் சிங்.

      தனது மனைவியின் மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

      Read: In English
      15 சதவீத தீக்காயத்துடன் ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார் சிங். அவரது முகம், கை, தோள்பட்டை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
      http://thatstamil.oneindia.in/news/2010/02/03/australian-police-say-indian-man-faked.html

      • ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் 

        இது போன்ற தங்களது அனுபவங்களைகூறினால்
         
        பயனுள்ளதாக இருக்கும்.

      • கிரேட் , தயவு செய்து வினவில் கட்டுரை எழுதுபவர்கள் நன்றாக செய்திகளை அப்டேட் செய்து கட்டுரை எழுதவும். இல்லையேல் அது கட்டுரையின் தரத்தை பாதிக்கும்.

  3. தமிழ் மீனவர்கள் சுடப்படும் போது, யாரும் கவலை படுவதில்லை. நட்சத்திர ஹோட்டல் ல நாலு பேர சுட்டாக்க எல்லா சேனலும் நாப்பது நாளைக்கு கூச்சல் போடுவார்கள். யார் சாகறது யார் கொள்கிறார்கள் என்பதை பொருத்து reaction வேறு படுகிறது.

  4. ////உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை./////

    இல்லை. மிக தவறான கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பாணி இடதுசாரி பொருளாதார கொள்கைகளில் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.
    Cumulative and long term effects of the license raaj and control era of the past. தைவான், மலேயா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் 1945இன் முடிவில், இரண்டாம் உலகபோரில் பெரும் அழிவை சந்தித்து, கொடுமையான நிலையில் இருந்தன. இந்தியா அன்று
    Comparatively better off. ஆனால் 40 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது.

    அன்னிய செலவாணி பற்றி இன்னும் பழைய தகவல்கள் அடிப்படையில் இருக்கிறீர்கள் போல. இன்று, அய்.எம்.எஃப் இடம் டாலர் கடன் வாங்கும் நிலை இல்லை. எப்படி ?
    விரிவாக எனது பதிவுகளில் எழுதியுள்ளேன். பல முறை இங்கும் சுட்டிகளை அளித்துள்ளேன்.

    • //. கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பாணி இடதுசாரி பொருளாதார கொள்கைகளில் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.//

      பொய்தியமான்.. இடதுசாரி கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்ற பபொய்யை திரும்ப திரும்ப சொல்லாதிரும் பொய்யரே

      • அசுரன்,

        ////பொய்தியமான்.. இடதுசாரி கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்ற பபொய்யை திரும்ப திரும்ப சொல்லாதிரும் பொய்யரே////

        பக்குவம், பண்பு இல்லாத சிறுவன் என்பதை மீண்டும் மீண்டும் நிருப்பிகிறீர். முதலில் மரியாதையா பேச கற்றுக்கொள். 1991 வரை இந்தியா பின்பற்றிய கொள்கை இடதுசாரி என்ற பெயரில் கீழ் தான் வரும். (அந்த சொல் covers a broad spectrum from communism to socialism to statism to whatever that is against free market economics, etc). பின் அன்று இந்தியா என்ன சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளையா பின் பற்றியது ?

        யார் பொய்யன், யார் அரை வேக்காடு, யார் மரியாதை இல்லாத காட்டன் என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். ஓ.கே. ஸ்டாலின், மாவோ பற்றி அருந்ததி ராய், அ.மார்க்ஸ் மற்றும் பல ஆயிரம் ஆய்வாளர்கள் சொல்வது எல்லாம் பிதற்றல். நீர்
        முழங்குவது தான் உண்மை. அப்படி தானே ? யார் பொய்யன் என்பதை வரலாறு
        நிரினியக்கும். ரஸ்ஸிய மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாட்டினர் அனைவரும் ’அமெரிக்க திரிபுகளுக்கு’ பலியாகி, தம் சொந்த நாட்டில் வரலாற்றை உம்மை போல
        ’தெளிவாக’ அறியாத மூடர்களாகிவிட்டார்கள். யார் பிதற்றுகிறார் என்று வாசகர்கள்
        தீர்மானிக்கட்டும்.

        அன்னிய செலவாணி பற்றி இக்கட்டுரையில் ஒரு குறிப்பு இருந்ததால் அதை பற்றி
        விளக்கினேன். அதை பற்றிய எமது சுட்டி இது :

        http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

        இதுவரை யாரும் இதை மறுக்க முடியவில்லை. அதில் நான் எழுப்பியிருந்த கேள்விக்கு சரியான பதிலுமில்லை :

        அப்படி இருக்கும் போது ‘////……..இவரது சுட்டிகளை முன்பு பலமுறை சிரத்தையெடுத்து படித்த பொழுது அவை வெறும்பானைகளாய் பல்லிளித்த அனுபவமும் உண்டு.’////
        என்று எழுதுகிறீர். That is your gross generalization and not shared by majority of readers. Ok.

    • //பல முறை இங்கும் சுட்டிகளை அளித்துள்ளேன்.//

      அதியமான் சுட்டிகளை மட்டும்தான் அளித்துள்ளார் இதுவரை. இவருக்கு பதில் சொல்லிய எமது தோழர்களோ சுட்டியும் கொடுத்து அதன் சாரத்தை விளக்கியும் எழுதுவார்கள். முன்பொருமுறை அவ்வாறு சுட்டியில் உள்ளவற்றை தொகுப்பாக சொல்லுங்கள் என இவரிடம் கோரிய போது இவர் காணாமல் போயிருந்தார். இவரது சுட்டிகளை முன்பு பலமுறை சிரத்தையெடுத்து படித்த பொழுது அவை வெறும்பானைகளாய் பல்லிளித்த அனுபவமும் உண்டு.

  5. ////////உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும்///
    இதற்க்கு உங்கள் தீர்வு தான் என்ன ? இன்னும் சொன்னால் இதற்க்கு காரணம் யார் ?

  6. ////////இல்லை. மிக தவறான கருத்து. கடந்த 60 ஆண்டுகளில் இந்திய பாணி இடதுசாரி பொருளாதார கொள்கைகளில் நிகர விளைவுகள் இன்றும் தொடர்கின்றன./////////////

    அதியமான்!

    முதலாளித்துவ தனியுடைமை சிந்தனையாளனாக கூட இருக்காலாம்! அந்நிய ஏகாதிபத்திய மற்றும் ஏகபோக முதலாளிகளை எதிர்த்து தேசிய முதலாளிகள் போராடலாம்!

    ஆனால் உங்களை போல உலக மயமாக்கலின் விளைவுகளை, இங்கு ஏதோ சோசலிச பொருளாதாரம் இருந்தது போலவும் அதன் விளைவு தான் என்றும் திரித்து கூறுவது பிரச்சாரம் செய்வது எல்லாம், ஏகாதிபத்திய தாசர்களால் சுருங்க கூறின் அடிமைகளால் தான் முடியும்!
    எங்களால் முடியாது….

  7. இந்தியா செய்வதையும் கொஞ்சம் வாசியுங்கள் . தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகா மில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மீது நேற்று முன்தினம் இரவு சிறப்பு அதி ரடிப் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்கு தலை நடத்தியுள்ளனர்

    செங்கல்பட்டு, பெப்.04
    தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகா மில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மீது நேற்று முன்தினம் இரவு சிறப்பு அதி ரடிப் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்கு தலை நடத்தியுள்ளனர் எனக் தெரிவிக்கப் படுகிறது. இக் கொடூரத் தாக்குதலினால் மூன்று முகாம் வாசிகள் உயிருக்குப் போராடும் நிலையில் வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
    அத்துடன், பன்னிரண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகாமில் மீத முள்ள 16 பேருக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லை என்றும் கூறப்பட்டது.
    கடவுச்சீட்டுச் சிக்கல்கள் மற்றும் விடு தலைப் புலிகளின் தொடர்பாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும், பூவி ருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள
    முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தியும், நீதி வழங்கக்கோரியும் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
    நேற்று முன்தினம் ரமாணா (வயது 33), முகமது ரக்சன் (வயது 24) மற்றும் சேகர் (வயது 27) ஆகியோர் முகாமில் உள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டும், மற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்தும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர். கியூ பிரிவு உயர் அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர்.
    இரவு 9.30 மணிக்கு திடீரென நான்கு பட்டாலியன் அதிரடிப் பொலிஸார் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்து, அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்பட்டது.
    மரத்திலிருந்தவர்கள் கீழே கொண்டு வரப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். பயங்கரத் தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்குப் போராடும் நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
    அதிரடிப் படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம்வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலிய பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்குக் கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர். அத்தோடு இரவோடு இரவாக 12 இற்கும் மேற்பட்ட முகாம்வாசிகளை சென்னை புழல் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
    முகாமில் தற்போது உள்ள 16 முகாம்வாசிகளுக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது வெளித் தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்

  8. உள்நாட்டில் வேலை தர வக்கில்லாததால் வெளிநாடு செல்ல இந்தியர்களை ஊக்குவிப்பதும், அந்த அந்நியச் செலாவணிக்காசை அண்டி நிற்பதும் இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தேவை. ///

    நறுக்….

  9. ஐயா சங்கமித்திரரே, அவ்வளவு சீக்கிரம் பாப்பானையும் ஒழிக்க முடியாது, அவன் கட்டியமைத்த சாதியத்தையும் ஒழிக்க முடியாது,……………………………………………………. ………. உழைக்கும் மக்கள் ஒன்று சேரும் வரை……
    பாட்டாளி வர்க்கம் பட்டய கிளப்பும் வரை,,,,,,,,,,,i.

  10. மிக சமீபத்தில் நான் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது . i had the oppurtunity to satay there for for a month..and met lot of indians .what i have learned from them was, though the incidents are racist in nature ,the situvation is not like the ,TIMES NOW says.and the locals,, look down at indians for sure.as a dentist i had a chat with a patient while treating her.when topic about why is that so many indians are coming to australia to live came…i stared to tell about the living standard and eudcation …and so…she stoped me with “and lot of money….isnt it?”with a lot of lough.thats the way we are looked and that is true.i think i am wandering around.i also agree with vinvu that though they are racial ,it is being used by a section of australian socity to divert the frustruation among the unemployed youth.that has been created by reccession .it serves them well.they get cheep workers to work from the indian student community so that they dont have to pay the minimum wage that is 20 dollers per hour to the locals.and also indians are better in caring the cutomers.8 hours? 10 hours? late night shift ? only indians are working..another irony is there is euqual no of students from china .have anyone heard of any incidents/ i think this will happen in australia or in anyother contry as long as the world is run the bussiness men

    • கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி, கௌரி சங்கர். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல மேலைநாடுகளிலும் குடியேறும் ஆசியர்கள் , லத்தீன் அமெரிக்கர்கள் குறைந்த கூலிக்கு அதிக வேலை செய்ய தயாராக இருப்பதும், இதை தந்திரமாக முதலாளிகள் பயன்படுத்திக்கொள்வதும், அரசுகள் கூட இந்தக் குடியேற்றத்தை கண்டும் காணாமல் இருப்பதும் நடக்கிறது. இதை வைத்து இனவெறிக் கட்சிகள் வளருவதையும் கூட வரம்புக்குட்பட்ட அளவில் முதலாளிகள் உதவுகின்றனர், இது வெள்ளையினத்தவரின் சமூக சிக்கலை திசை திருப்புவதற்கு உதவுகிறது.

  11. எந்த டிரைவரும் பிழைக்க ஆஸ்திரேலியா செல்ல வில்லை …. வடக்கில் உள்ள ஆங்கிலம் பேச தெரிந்த யாராக இருந்தாலும் எதாவது ஒரு மேற்கத்திய நாட்டிற்கோ இல்லை ஆஸ்திரேலியாகோ ஒரு வருட சமையல் கலை இல்லை அக்கௌன்டன்ட் போன்ற எதாவது ஒரு பீஸ் குறைவான படிப்பில் சேர்ந்து பார்ட் டைம் பார்க்கின்றனர். ஏனென்றால் டிரைவர் வேலைக்கு இந்த அரசுகள் விசா தராது. இவர்கள் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருந்தால் மட்டுமே வொர்க் பெர்மிட் வாங்க முடியும். எதோ ஒரு படிப்பின் மூலம் சென்று விட்டு வேலை செய்து மற்றவர்களுக்கு நிகராக சம்பாதிக்க செல்பவர்களுக்கு தாழ்ந்த ஜாதி , உயர் ஜாதி endrillai

  12. கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது !

    இந்தியா மெளனமாக இருப்பது – ஒருபுறம் இந்தியாவில் உள்ள தீண்டாமை கொலைகளை சர்வதேச அளவில் வெளியில் தெரிய படுத்த வேண்டிய தாகிவிடும் ஆஸ்திரேலியாவின் நிறவெறியை ஊதினால் என்பது

    இந்திய ஊடகங்கள் ஊதுவது – அங்கே அடிபடுவது மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என்பதால் (வர்க்க முரண்பாடு )

    ஆஸ்திரேலியா அடக்கி வாசிப்பது -உள்நாட்டில் இருக்கும் தொழிலாளர்

    மடை மாற்றி விடுவது

    கடைசியா நிறவெறி -ஜாதி வெறி என்பதெல்லாம் தனது தேவைக்கு உட்பட்டு வளர வேண்டும் என முதலாளித்துவம் நினைக்கிறது என சொல்லி

    ஆஸ்திரேலியாவின் நிறவெறி தாக்குதல் சரியா இல்லையா

    என்ற தனி கேள்விக்கு வாசகனை மண்டையை குழப்பி இருக்கிறார்கள்

    எந்த வர்க்கத்தை சார்ந்த – எந்த மனிதன் தாக்கப்பட்டாலும்

    நமது கண்டன குரல் இருக்க வேண்டும் என கட்டுரையாளரை கேட்டு கொள்கிறேன்

    அடிப்படை மனிதாபி மானம் இது

    இரண்டாவது அவந்தானே சாகிறான் இலங்கையில் செத்தவனை பற்றி அவன் கவலை ப்பட்டானா என கேட்டு இப்போ ஆஸ்திரேலியாவில் நாள் தோறும் இறக்கும் மனிதர்களின் சாவுகளை சப்பை கட்ட முடியாது

    நிறவெறி தாக்குதலை கண்டிக்க வேண்டும்

    வர்க்க , ஜாதி , அனைத்துக்கும் அப்பாற்பட்டு என்பதுதான் சரி

  13. இது வரை நிற வெறித்தாக்குதல் என கூறப்பட்டு வரும் சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வடஇந்தியர்களாக உள்ளனரே?.  வேறு ஆசிய நாட்டவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கிறதா? நண்பர்களே சற்று தெளிவு படுத்தவும்.

  14. அதியமான் அவர்களுக்கு நான் சில காலமாக தங்களின் பின்னூட்டங்களை படித்து வருகிறேன்.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.சில இடங்களில் ஒத்து போகும் இடங்களில் பின்நூடமிடுவதிலை என்கிறீர்கள் அப்படி என்றால் அதற்கு சொல்லும் தீர்வையும் ஒர்துகொல்கிரீர்களா ? ஒரு இடத்தில அரசு மற்றும் மாவோயிசம் இரண்டும் தீவிரவாத போக்குடையவை தானே என்று கேட்குரீர்கள் .சரி இரண்டையும் ஆதரிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லும் தீர்வுதான் என்ன ?ஒரு இடத்தில் மூன்றாவது வழி ஒன்றை காண வேண்டும் என்றீர்கள் அது என்ன ? கண்டீர்களா ? பின்பு முதலளிதுவதிற்காக பரிந்து பேசுகிறீர்கள் ?அப்படி என்றால் இந்த வழி தான் சரியானது என்று முடிவெடுத்து விட்டதாகவே தோன்றுகிறது .சரி இந்த வழியில் என்ன என்ன சரி ?என்ன என்ன தவறு ? அதை மாற்றும் வ ழி முறைகளை கூறவும் .எல்லாமே சரி என்றால் இங்கு கூறப்படும் விசயங்களுக்கான தீர்வு என்ன ? எனக்கு தெரிந்த வரை நீங்கள் எதற்கும் தீர்வு சொன்னதாக தெரியவில்லை .வெறும் இங்கும் பிரச்னை உள்ளது என்று கூறினால் ரஷ்ய மற்றும் சீனாவிலும் பிரச்னை உள்ளது என்கிறீர்கள் .எனவே தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இந்த மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வழி தான் என்ன ? அதை எவ்வாறு செயல்படுத்துவது ? அது எது மாதிரியான வாழ்க்கையை கொடுக்கும் ? தயவு செய்து மேலை நாடுகளை உதாரணம் கூற வேண்டாம் .நமது நாட்டிக்கு உகந்த வழியை கூறவும் .நம் நாட்டின் சிக்கலான நிலை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை .

  15. ///////இந்த மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வழி தான் என்ன ? அதை எவ்வாறு செயல்படுத்துவது ? அது எது மாதிரியான வாழ்க்கையை கொடுக்கும் ? தயவு செய்து மேலை நாடுகளை உதாரணம் கூற வேண்டாம் .நமது நாட்டிக்கு உகந்த வழியை கூறவும் .நம் நாட்டின் சிக்கலான நிலை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை .///////////////////////
    இந்தியாவில் இப்போ இருக்குற முதலாளித்துவம் மனிதத் தன்மையுடையதில்லையாம்!  அதனால் அதையும் தான்டி புனிதமா…ன உண்மையா…ன Free Market Capitalism தான் தீர்வு….

    அப்படி தானே மிஸ்டர் மான்? 

  16. ஸ்டாலின், மாவோ பற்றி அருந்ததி ராய், அ.மார்க்ஸ் மற்றும் பல ஆயிரம் ஆய்வாளர்கள் சொல்வது எல்லாம் பிதற்றல். நீர்
    முழங்குவது தான் உண்மை. அப்படி தானே ?
    அ.மார்க்சும் ,அருந்ததி ராயும் என்ன புரட்சியை நடத்தினார்கள்?அ .மார்க்ஸ் என்ற கலககாரன் எந்த புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்குகிறார் .
    “பயன் இல்லா படிப்பாலே
    மனம் தான் கோழையாய்
    மாறும் பார்வதி ” என்ற தேவதாஸ் பட பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
    நாள் ஒன்றிற்கு ஒரு புத்தகம் எழுதி ” கலகம்”செய்த்தது மிச்சம் .
    அறை புரட்சியாளர்கள் இவர்கள்.அதியமான் இவர்களுடைய நூல்களை படித்து நிறைய கேட்டு பொய் விட்டார் பாவம்.

    • யோகன்,

      உமது அறியாமையை என்னவென்பது. புரட்சி நடத்துபவர்கள், களப்பணியாளர்கள் மட்டும் தான் ஆய்வு செய்ய வேண்டுமா ? நல்ல கதை. வரலாற்று ஆய்வு என்பது ஒரு
      Specialization. I guess you are Eelam tamil now living in EU or Canada. Try any university history dept in any nation in this whole world for details about Stalin and Mao era history. All of them are of the same view and none support your ‘crazy’ views about history. You may then call all of them as crazy while you and your tribe are right and correct. !!!

      • வேலைய பாரு மான் , எழவு வீட்டுல இன்கம் டாக்ஸ் ரைட் மாதுரி

  17. ஆள் இந்தியன்ஸ் ஆர் சீப் பெல்லோஸ் 🙂
    இன்க்ளுடிங் வினவு அண்ட் கோ 🙂 🙂

  18. அநாதை அகதிப் பயலுகளாஎன்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது காட்டும் பரிவும் பாசமும்.

    வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது..

    இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

    அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

    நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????

    இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு?? உலகெங்கும் ஒடுக்குமுறையைச் சந்திக்கும் நமக்கு இன்னும் விஜய் படம் ஓட வேண்டுமா? அஜித் படம் ஓட வேண்டுமா என்பது பற்றித் தானே அதிக அக்கறை.

    முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களே, இனி உங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது, போராட்டமெல்லாம் வேறு இனத்தவர்களுக்கு, தமிழர்களுக்கு இருக்கும் ஒரே வழி அண்டிப் பிழைப்பது, உங்கள் முகாமுக்கு அருகில் வாழும் ஆளுங்கட்சியின் செல்வாக்குப் பெற்ற தலைவரைப் பிடித்து முதலில் மாலை போடுங்கள், பிறகு மனுக்கொடுங்கள், ஐயாவின் ஆட்சியோ, இல்லை அம்மாவின் ஆட்சியோ தான் இந்த உலகின் தலை சிறந்த ஆட்சி என்று யாராவது ஒரு பத்திரிக்கையாளரைக் கூப்பிட்டு குனிந்து காதிலாவது சொல்லி வையுங்கள், குறைந்த பட்சம் அடி வாங்குவதில் இருந்தாவது தப்பிக்க வழி கிடைக்கும்.

    யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி

    பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது

    பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.

    • அந்த நாய்ங்களுக்கு உதைத்ததில் தப்பில்லை.. தங்களில் குற்றம் இல்லை என்று நிருபித்து வெளியில் போகும் வழியை பார்க்காமல் … போலீசை கேனை என நினைத்தால் இது தான் சரியான பதில்…

  19. சகோதரர்களே…….எல்லோரையும் சமமாகப் பாவிக்கப் பழகிக் கொள்ளவும்…………சாதி என்ற பிரிவினை தான்………. வெள்ளைகார நாட்டில் நிறவெறியாக …………பணத்துக்கு அடிமையானால் சகிப்புத்தன்மை நிறைய வேண்டும்………அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு நடவாமல் சுயமாக சிந்திக்கப் பழகவும்….பல கொடுமைகளின் பின்னும் ……….சகோதரர்களுக்காக கவலைப் படும் ……….உங்கள் மொழியில்……. அகதித் தமிழன்.

Leave a Reply to செந்தழல் ரவி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க