privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் - பங்கேற்க அழைக்கிறோம்!

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் – பங்கேற்க அழைக்கிறோம்!

-

vote-012பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளின் தொழில் வளர்ச்சி முற்றிலும் சமூகமயமாகியிருந்தன. முதலாளித்துவ சமூகம் பல நாடுகளில் வேர் விட்டிருந்தது. உற்பத்தி சமூகமயமாகியிருந்த காரணத்தால் பெண்கள் அதிகம் வேலைக்குப்போவது சாத்தியமாகியிருந்தது.

வீடு, குடும்பம், கணவன், குழந்தை என்ற குறுகிய கட்டமைப்பிலிருந்து பெண்கள் ஆண்களைப்போல பொது வெளிக்கும் நுழைந்திருந்தார்கள். வீட்டு வேலையோடு, தொழிற்சாலை வேலை அவர்களை கசக்கிப்பிழந்திருந்தாலும் சிந்தனையில் சமத்துவத்துக்கான வேட்கையும் முளைவிட ஆரம்பித்திருந்தன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பணிநேரத்தைக் குறைக்கக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட ஆரம்பித்திருந்தனர். 1908இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 15,000 பெண் தொழிலாளிகள் வேலைநேரத்தைக் குறைக்கக் கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கேட்டும் ஊர்வலம் சென்றனர்.

அமெரிக்க சோசலிசக் கட்சியின் சார்பாக 1909 முதல் தேசிய அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. 1910இல் கோபன்ஹென் நகரில் சர்வதேச உழைக்கும் மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள் சார்பாக நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிளாரா செட்கின் என்ற புகழ்பெற்ற தலைவர் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைத்தார். பிரதிநிதிகள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி 1910 இல் மார்ச் 19 இல் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அணிதிரண்டனர். இதே ஆண்டில் நியூயார்க் நகரின் ஜவுளித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இத்தாலிய மற்றும் யூத இனத்தைச் சேர்ந்த அகதிகளே அதிகம். இந்த விபத்து பெண் தொழிலாளிகளின் அவல நிலையை உலகிற்கு தெரிவித்தது.

முதல் உலகப் போரில் ஈடுபட்ட ரசியாவில் ஜாருக்கும், போருக்கும் எதிராக போல்ஷ்விக்குகள் காட்டிய எதிர்ப்பு பெண்களிடமும் எழுந்தது. போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைதியை வேண்டியும் ரசியப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரசியாவில் ஜூலியன் காலண்டரில் வரும் இந்நாள் மற்ற நாடுகளில் கிரிகோரியன் காலண்டர் படி மார்ச் – 8 இல் அனுசரிக்கப்பட்டது.

இதன்பிறகு மார்ச் -8 என்பது சர்வதேச உழைக்கும் மகளிர் தினமாக வரலாற்றில் இடம்பெற்று கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கம்யூனிச நாடுகளிலும், மற்ற நாடுகளின் சோசலிசக் கட்சிகள் சார்பாகவும் இந்த தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. தற்போது உலகமெங்கும் மகளீரின் பல்வேறு அமைப்புக்களால் மகளிர் தினம் பிரபலமாயிருக்கிறது.

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் மகளிர் தினம் இன்று காதலர் தினம் போல மகளிருக்கு ஏதோ ஒருபரிசு கொடுத்து வாழ்த்துக் கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. மறுபுறம் இடதுசாரி மற்றும் சமூக அக்கறை கொண்ட பெண்கள் அமைப்புக்கள் இந்த தினத்தின் வரலாற்றுச் செய்தியை ஏந்தி போராடவும் செய்கின்றன.

பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான பல பதிவுகள் வினவு தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பெண் பதிவர்கள், வாசகர்கள் படித்திருக்கக் கூடும்.

பொருளாதார விடுதலைதான் பெண் விடுதலையின் முதல் படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. காலை 7 மணிக்கெல்லாம் தூக்கம் கலையாத தந்தைமார்களின் தோளைப்பற்றியபடி வந்து இறங்கி, பொறியியல் கல்லூரிப் பேருந்துகளில் அவசரம் அவசரமாக ஏறி, அமர்ந்த மறுகணமே படிக்கத் தொடங்கும் மாணவிகள்; சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டுவிட்டதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓட்டல்களில் மேசை துடைத்துக் கொண்டிருக்கும் பெண் சிப்பந்திகள்; தினம் 5,6 வீடுகளில் வேலை செய்யத் தோதாக சைக்கிளில் விரையும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்; டிபார்ட்மென்டல் ஸ்டோர் காமெராக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்குள் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் விற்பனைப் பெண்கள்; மாலை நேரத்தில் ஆயத்த ஆடை நிறுவனங்களிலிருந்து களைத்துக் கசங்கி வெளியேறும் இளம் பெண்கள்  – இவர்களெல்லாம் கடந்த பத்து ஆண்டுகளில் உழைப்புச் சந்தையில் புதிதாக நுழைந்திருப்பவர்கள்.

இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ணடிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அல்லது எத்தகைய அடிமைத்தனங்களை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஏன்?

பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட ஜீன்ஸ் போட்ட பெண்ணையும், தனியாக இருசக்கர வாகனத்தை ஓட்டும் பெண்ணையும் சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை இருந்தது. இன்று இல்லை. கடைகளில் தொங்கும் அரை அம்மணப்படங்களைப் பார்ப்பதிலும் இப்போது அதிர்ச்சி இல்லை. பெண் என்பவளை ஒரு பிள்ளை பெறும் எந்திரமாகக் கருதி நடத்திய காலம் மாறியிருக்கிறது என்றாலும், பெண்ணை உடலால் மதிப்பிடும் ஆண் பார்வை மாறவில்லை. அதனை அங்கீகரித்து மகிழும் பெண்ணின் சிந்தனையும் மாறிவிடவில்லை. குடும்பம் என்ற பாசச்சிறையில் ஆயுட்கைதியாகப் பெண்ணும், வார்டனாக ஆணும் இருக்கும் நிலையையும் பொருளாதார சுதந்திரம் மாற்றிவிடவில்லை.

பதிவுலகில் கூட பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு, சமையல், இன்னபிற ஆபத்தில்லாத விசயங்களாக இருக்கின்றன. ஆண்களின் பாராட்டையும் பெறுகின்றன. ஒரு பெண்பதிவர் காத்திரமான ஒரு நிலைப்பாட்டை சாதி,மதம்,ஆணாதிக்கம் குறித்து எழுதினால் அதனை ஆண்கள்  விரும்புவதில்லை. பெண் பதிவர்கள் அப்படி எழுதுவதற்கு சுதந்திரமான வெளியாக பதிவுலகம் மாறவில்லை. சில விதிவிலக்குகள் தவிர பெயர், படம், முகவரி போன்றவற்றை மறைக்க வேண்டிய நிலையே பதிவுலகில் உள்ளது.

பெண் வயிற்றில் பிறந்து பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள விரும்புவதுமில்லை. இனிய இல்வாழ்க்கை என்று கருதப்படும் மண உறவில் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலையும்கூட இதுதான்.

பொதுமேடையில் ஊரறியப் பேசமுடியாத பல விசயங்களை தனிப்பட்ட உரையாடல்களில் மனம் விட்டுப் பேசிக்கொள்ள முடியும். கணவன் மனைவி முரண்பாடுகள் வரும்போது தனியே மனம் விட்டுப் பேசி தீர்த்துக் கொள்ளுமாறுதான் பலரும் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் ஆணாதிக்கத்தை, தனிப்பட்ட முறையில் பேசித் திருத்த முடியாது. ஏனென்றால் அது தனிப்பட்ட விவகாரம் அல்ல. கணவன், அண்ணன், தந்தை என்ற தனி மனிதர்களின் மூலம்தான் அது வெளிப்படுகிறது என்ற போதும் அது ஒரு சமூக ஒடுக்குமுறை. எனவே பொதுவெளியில்தான் அதன் அழுக்கைத் துவைத்து அலச வேண்டும்.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி, உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் எழுதுமாறு பெண் பதிவர்களையும் வாசகர்களையும் கோருகிறோம். மார்ச் மாதம் முழுவதும் அதனை வெளியிட எண்ணியிருக்கிறோம். உழைக்கும் பெண்களின் அனுபவப் பதிவுகளும் அவற்றை ஒட்டி எழும் விவாதங்களும் பதிவுலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விழைகிறோம். ஆதரவு தாருங்கள்!

நன்றி.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்