privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

-

 

ஈழத்தின் நினைவுகள்: பாகம் – 12

சமகால கனடாவும் அதன் வரலாற்றுப் பின்னணியும்!

 

O Canada! Our home and native land! கனடாவின் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணை எங்களின் வீடு மட்டுமல்ல பூர்வீகமும் கூட என்று தேசியகீதத்தில் பாடுமளவிற்கு அனுமதித்திருக்கிறார்கள். கனடா ஒரு வந்தேறு குடிகளின் நாடு. அவலப்பட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

முதலில் பிரான்சிலிருந்தும் பிறகு பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் கனடாவை தேசியகீதத்தில் தங்கள் பூர்வீக பூமி என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் புரிதல். கால ஓட்டத்தில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் குடிபெயர்ந்தோ அல்லது அகதியாகவோ வருபவர்கள் எல்லோரும் அவர்களை தொடர்ந்து அதையே பாடிக்கொண்டிருக்கிறோம். கனடாவுக்கு உண்மையாகவும் இருக்கிறோம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு விடயங்கள் கனடியர்களை அவ்வப்போது சில சமயங்களில் எதையாவது முணு, முணுக்கவைக்கிறது.

அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் அருகாமையில் இருந்துகொண்டு அதை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்று நான் நினைப்பதுண்டு. இரண்டாவது கனடாவின் Constitutional Monarchy.  இன்னமும் இங்கிலாந்தின் ராணிதான் கனடாவுக்கும் ராணி. முந்தையது மாற்ற முடியாது.  முணுமுணுக்க மட்டுமே முடியும். பிந்தயதை மாற்ற வேண்டுமென்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

கனடாவுக்குள் நுழையுமுன் வரலாற்றின் கரையோரம் கொஞ்சம் கால் நனைக்கலாம். கனடாவுக்கென்று ஓர் சுவாரசியமான வரலாறு உண்டு. ஐரோப்பியர்கள் கிழக்கு இந்தியாவை கண்டுபிடிக்கிறோம் என்று அதிர்ஷடவசமாக தடுமாறி பகுதி, பகுதியாக   கனடாவையும் கண்டுபிடித்தார்கள். இந்த மண்ணில் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் இங்கிருந்த பூர்வீக குடிகளோடு வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தி இங்கேயே தங்கியும் விட்டார்கள். இந்த நாட்டை சீரும்  சிறப்புமாய் கட்டி எழுப்பியவர்களும் அவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இந்த நாட்டின் மூத்த குடிகள் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிகம் பங்களிக்கவில்லை என்ற ஓர் கூற்றும் முன் வைக்கப்படுகிறது. கனடாவின் மூத்த குடிகளை (Aboriginal Peoples) மூன்று வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். First Nations (Indians), Inuits அல்லது Metis அல்லாதவர்கள். இவர்களில் (First Nations) பாதிப்பேர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் (Reserve Land) தான் வாழ்வதாக சொல்லப்படுகிறது. Inuits, இவர்களின் முன்னோர்களின் பூர்வீகம் Arctic ஆதலால் இன்றும் சிறு, சிறு குழுக்களாக அங்கேதான் வாழ்கிறார்கள். பூர்வீக குடிகள் அல்லாத ஐரோப்பியர்களை மணந்தவர்கள் Metis என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரினதும்  பூர்வீக பூமி இதுவென்றாலும் அதற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு தங்களை கனடிய அரசிடம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரசியல் நடைமுறை.

சில சமயங்களில் ஒரே நாட்டிற்குள்ளிருக்கும் இன, மத, மொழி, பண்பாடு, கலாச்சாரம் இன்னும் என்னென்னெல்லாம் உண்டோ அதன் முரண்பாடுகளிலேயே மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டுப் போயிருப்பார்கள். பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். ஒருவேளை அப்படியேதும் இல்லையென்றாலும் தங்கள் பங்கிற்கு அரசியல்வாதிகள் எதையாவது கிளப்பிவிடுவார்கள். ஒத்துவராது என்றால் சிலசமயங்களில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஜனநாயக வழிகளில் முயல்வதே மேல் என்பது என் கருத்து.

கனடாவிலும் Quebec மாகாணத்தின் மொழி, கலாச்சாரம் முதல் அனைத்து உரிமைகளுக்கும் சட்டரீதியான சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தன் பிரெஞ்ச் தனித் தன்மைகளோடு வாழ, பிரிந்துபோக இரண்டுமுறை ஜனநாயக வழியில் (Referendum) முயன்று வெற்றியளிக்காமல் போனாலும் இன்னோர் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஈழத்தில் எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத எங்களுக்கு இப்படியோர் ஜனநாயக ரீதியான ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க மறுக்கும் உள்ளூர், உலக அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஊமைப்படங்கள். உலகத்தமிழரெல்லாம் அதன் பார்வையாளர்கள்.

கனடாவில் நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்லின, பல்கலாச்சார மக்கள் (Multiculturalism) அடுத்தவர் நம்பிக்கைக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தனித்தன்மைகளை பேணிக் காப்பதோடு, இந்த நாட்டின் ஆங்கில, பிரெஞ்சு மொழி, கலாச்சாரம், பொருளியல் வாழ்க்கை முறை என்பவற்றிற்க்கு தங்களை பழக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் கலந்து போகிறார்கள் (Assimilation). வாழச்சிறந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா தனக்கென்றோர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக ஜனநாயகம் போலல்லாது அந்த தலைப்பை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதில் கனடாவை யாரும் குறை கூற முடியாது.

ஆனாலும் கனடாவின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் கழிசடை அரசியல் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும். பூர்வீக குடிகளுக்கும், 1800 களில் Canadian Railway யை கட்டி முடிக்க குறைவான கூலியில்  கொண்டு வரப்பட்ட சீன தேசத்தவர்களுக்கும் இந்த அரசு செய்த தவறுகள் “White-Collar Crime” என்று தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலைத் தேசங்களின் வரலாறு, அரசியல், பொருளாதார கொள்கைகளை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் தான் புரியும், எங்களைப்போன்ற அகதிகள் எல்லாம் இந்நாடுகளில் வேண்டப்படாத விருந்தாளிகள் என்பது. அதுவும் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு அதை எங்கள் மனங்களில் இன்னும் ஆழமாக பதிந்து போக வைத்து விட்டார்கள்.

கனடாவின் சமூகவாழ்க்கை – ஒரு பறவைப் பார்வை

கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா. நிறைகளும் குறைகளும் அதனதன் அளவுகளில் பரிமாணங்களில் இருந்தாலும் (pros and cons), கனடாவின் ஒவ்வொரு சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் சிறப்பாகத்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது. வேலை பறிபோனால் அதன் தாக்கங்கள் தனிமனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்காமல் விடாது. அது மனித இயல்பு. துன்பியல் வாழ்வு. ஆனால், வேலை போய்விட்டதே இனி ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது, பிள்ளை குட்டிகளோடு வீதியில் உறங்கமுடியுமா என்ற கவலைகள் எல்லாம் இங்கு வாழ்பவர்களுக்கு வரக்கூடாது என்று அரசு கவனமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காமல் விட்டால் அது தனிமனித வாழ்வில், சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் அதன் பன்முகத்தாக்கத்தை உண்டுபண்ணுமே; பஞ்சம், திருட்டு, சமூகவாழ்வின் சீர்கேடுகள், கொள்ளை, எல்லாவற்றுக்கும் மேல் குடும்ப உறவுகள் சீரழியும் என்பது வரை. குடும்ப உறவுகள் சீரழிந்தால் குழந்தைகளின் மனநலம் மற்றும் எதிர்காலம்  பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டிருகின்றன. அரச சேவைகள் ஆயிரந்தான் செலவு செய்தாலும் இங்கேயும் வருமானம் குறைந்த மக்கள் வாழும் பகுதிகள், அதன் விளைவான சமூகப் பிரச்சனைகள், வீடில்லாதவர்கள் பிரச்சனை (Homeless people) என்பதெல்லாம் அரசுக்கு தலையிடியாக இல்லாமலும் இல்லை.

என்னைப்பொறுத்த வரை இந்த வீடில்லாதவர்கள் என்போர் அவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த, தாங்களாக தெரிந்தெடுத்த வாழ்க்கை அது. அரசு எவ்வளவுதான் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களில் பலர் மறுபடியும் வீதியில் வந்து முடிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு shelters என்று வைத்து உணவு, உறங்கும் வசதிகள் எல்லாம் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள். பொதுமக்கள் பலபேர் அங்கே சேவையாக (Volunteer) பணியாற்றுகிறார்கள். இங்கே volunteer work என்பது மிகவும் மதிக்கப்படும் ஓர் விடயம். அதாவது, நான் சொல்லவருவது என்னவென்றால் அரசு, மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது, சகமனிதர்கள் மீது அக்கறையோடும் விழிப்புணர்வோடும்  இருக்கிறார்கள் என்பது தான்.

எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன. கல்லில் நார் உரிக்கும் கடும் முயற்சி மட்டுமே அதன் மூலதனம்.

கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை தொடர கடனுதவிகள் வழங்கப்படும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். வாங்கிய கடன் வட்டியோடு குட்டிபோடும் என்பதால் மாணவர்கள் பொறுப்போடு படிப்பார்கள். பெற்றோருக்கும் அது பொருளாதார சுமையாக இருக்காது. காரணம், வாங்கும் கடனுக்கும் வட்டிக்கும் அவரவரே (மாணவரே) பொறுப்பு. வேலைக்கு செல்பவராயின் அவரின் வருமானத்திற்கேற்றவாறு குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும். ஒருவர் வீட்டில் இருந்து குழந்தையை பராமரிப்பதிலும் படித்து வேலைக்கு போனால் அரசுக்கு வரி வருமானம் வரும் அல்லவா. வரி செலுத்தும் போது வலித்தாலும், அதன் பலன்களை கல்வி, சுகாதாரம் என்று உலகின் எத்தனையோ பேருக்கு கிடைக்காத சர்வதேச தராதரத்துடனான சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் போது மூன்றாம் உலக ஜனநாயகத்தில் இருந்து தப்பி வந்த ஓர் visible minority யின்  மனம் நிறைந்து போகிறது.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஓர் சாதாரண கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்கும் படி செலவின்றி, பாரபட்சமின்றி இருக்கிறது. கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.

கனடாவில் ஈழத்தமிழர்கள் – வந்த விதமும், இணைந்த நிலையும்!

கனடாவில் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாய் தஞ்சமடைந்தவர்கள்தான். ஆசியாவிற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழுவது இங்குதான். மேல்தட்டு இந்தியர்களைப் போல் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி குடிவந்தவர்களோ அல்லது மில்லியன் டாலர் வியாபாரத்தை முதலீடு செய்தவர்களோ கிடையாது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று கல்வி, வியாபாரம், பொருளாதாரம் என்று மிக குறுகிய காலத்திலேயே ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் மற்றவர்கள் வியக்கும் படி அதன் எல்லைகளைத் தொட்டிருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பங்கள் கனடாவில் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவாயிருப்பதால் அது சாத்தியமும் ஆயிற்று.

முயற்சி திருவினையாக்கும் என்பதை என் அனுபவத்தினூடே உணர்ந்து கொண்டது இங்கேதான். கனடாவின் வாக்கு வங்கியில் எங்கள் வாக்குகளின் இருப்பு லட்சத்திற்கு மேல் என்பதால் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் உள்வாங்கப்படுகிறோம். கனடாவின் வளங்கள், பொருளாதாரம் பற்றி தெரிய வேண்டுமானால் அண்மையில் கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து சிரித்துபேசி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து பாருங்கள் புரியும்.

செல்வமும், செழுமையும் புதைந்தும் ஒளிந்தும் கிடக்கும் இந்த பரந்த பூமியில் தான் தஞ்சமடைவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வரவில்லை. தமிழ்நாட்டில் அகதி வாழ்வின் கசப்பான அனுபவங்கள், கொழும்பில் எந்த நேரமும் ஏதோ ஓர் இனம்புரியாத பயம், உயிரை பிச்சையாய் கேட்கும் தலைவிதி இவற்றிலிருந்து தப்பிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் முயன்று எனக்கு கிட்டியது கனடா என்ற நாடு. “சிங்கள” என்ற அடைமொழியோடு கூடிய எல்லாமே என்னை, என் உயிரை வதைத்தது. இதில் நல்லது, கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து பயப்படுமளவிற்கு ஓர் ஈழத்தமிழ் என்ற வகையில் எனக்கு தெரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.

தலைநகரில் தமிழர் என்றாலே வெளியில் தலைகாட்டப் பயம். கைது, சித்திரவதை, தமிழனா காவல் நிலையத்தில் உன் வரவை பதிந்துகொள் என்ற நடைமுறைகளும் பீதியை கிளப்பின. பாரதியார் பாணியில் சொல்வதானால், ஈழத்தமிழன் அஞ்சாத பொருள் இல்லை இலங்கையிலே. அது அப்படியே எங்களுக்குப் பொருந்துவது போல் கொழும்பில் அன்றும் சரி இன்றும் சரி தமிழர்கள் ஏதோ Phobia வால் பீடிக்கப்பட்டவர்களாய்தான் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக “தெனாலி” திரைப்படத்தில் எங்களை பரிதாபத்திற்குரிய கோமாளிகளைப்போல் போல் உருவகப்படுத்தியது, கேலிபேசியது எல்லாம் கசப்பானதே. பசியை கூட பிணி என்ற உவமையால் அதன் கொடுமையை உணரவைக்கலாம். சிங்களப்பேரினவாதம் எங்கள் மனங்களில் அதன் வன்கொடுமைகள் மூலம் உண்டாக்கிய வலிகள், வடுக்கள், தீராப்பயம் அனுபவங்களால் மட்டுமே உணர முடியும். அதை எழுத்துக்களில் விவரிக்க முடியாது.

கடல் கடந்து பரதேசம் வந்த உடனேயே பயம் மறைந்து சந்தோசம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் புதிதாய் எதுவுமே புரியாத ஓர் தேசமாய் தோன்றியது. இலங்கை ராணுவம், மனித உரிமை மீறல்கள் பற்றிய பயம் போலில்லாமல் புதிதாய் ஓர் இனம்புரியாத மிரட்சி மனமெங்கும் விரவிக் கிடந்தது; மொழி, கல்வி, வேலை, கலாச்சாரம், காலநிலை முதல் மனிதர்கள் வரை. இலங்கையிலிருந்து வந்ததாலோ என்னவோ கருத்து சுதந்திரம் (Freedom of Speech) என்பதின் யாதார்த்தபூர்வமான அர்த்தத்தை புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது.

பயமுறுத்தும் ஆங்கிலத்தை கற்ற கதை!

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டுமே தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அந்நாட்களில் ஆங்கிலத்தோடு எனக்கு ஏதோ ஒரு பயம் கலந்த சிறிய பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அதுவே தொடர்பாடலுக்கான என் ஊடகமானது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கண்டு நான் மிரண்டதுதான் அதிகம். பொது இடங்களுக்குப் போனாலும் யாராவது ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு தொலைத்து விடுவார்களோ

என்ற பயம் மூளையின் முடுக்கில் கூட மண்டிக் கிடந்தது. கனடாவில் என் சுய முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை நான் ஓர் வெறியோடுதான் படித்தேன். அதற்கு வேறோர் காரணமும் உண்டு. புலத்தில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எம்மவர்களில் ஒருசாரார் அடுத்தவரை இளக்காரமாய் பார்த்த, பார்க்கும் சமூக அவலம் தான் அது.

ஈழத்தில் நான் என் சொந்த ஊரில் கல்வி கற்ற நாட்களில் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்தில் இருக்கும் பாடசாலைகளில்தான் ஆங்கில வழிக்கல்வி கற்கும் வசதிகள் இருந்தன. அது அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் எரிச்சலாகவும் கூட இருந்தது.

இங்கே குடியேறியோ அல்லது தஞ்சமடைந்தோ வருபவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓர் பாரமாய் அல்லது சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்து கனடிய அரசு புதிதாய் வருபவர்களுக்கு மொழியை அரச செலவில் கற்றுத் தருகிறார்கள். நாங்கள் மொழியை கற்றுக் கொண்டு மேலும் படிப்பிலோ அல்லது வேலையிலோ முன்னேறி இந்நாட்டிற்கு எங்களின் பங்களிப்பை வரியாகவும், வேறு வழிகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலத்தில் எனக்கு அதிகம் பிடித்த வார்த்தை “determination”. அது மட்டும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் ஒன்றும் கடினமல்ல என்பது என் சொந்த அனுபவம். ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புகளோடு பேசவேண்டுமென்ற அவாவோடு நான் குழந்தைகளின் Cartoon மற்றும் செய்திகளிலிருந்துதான் தொடங்கினேன். அதில்தான் நிறுத்தி நிதானித்து அழகாக பேசுகிறார்கள். ஆனாலும், புலம் பெயர் வாழ்வில், பொருளுலகில் மனிதம் தொலைத்த மானுட வாழ்வு ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரம்மையை என்னிலிருந்து உதறமுடியவில்லை.

இந்த அக்கப்போரில் எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் அதற்காக யாரும் எனக்காக காத்திருந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, எல்லோருக்கும் சமமாய் நானும் ஓடவேண்டுமானால் என்னை நான் தயார்ப்படுத்த வேண்டும். இப்படித்தான் கனடாவில் ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தோடு மல்லுக்கட்டி, அப்படியே படிப்படியாக படிப்புவரை சென்று, அகதியாய் அடிமேல் அடிவாங்கினேன். அழுவதற்கு கூட நேரமில்லாமல் அடித்துப் பிடித்து படித்து முடித்து அந்நியதேசத்தில் ஓர் கெளரவமான  வேலைசெய்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டே இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.

உத்தியோகம் புருஷலட்சணம் என்ற பழமைவாதம் ஈழத்திலே குழிதோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு பெண்கள் படிப்பில், வேலைக்குப்போவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் என் கருத்து. போர்பூமியில் ஏதோ இயன்றவரை படித்தார்கள். தலைநகர் வாழ்வின் சம்பிரதாயம் மீறாமல் அங்கே வாழ்ந்தவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றார்கள். இந்த வாழையடி வாழை வழமைகளை வேரோடு தறித்தது புலத்தின் பொருளாதார வாழ்க்கை முறை. கனடாவில் தமிழ்ப் பெண்களின் மன உறுதியையும் முயற்சிகளையும் நான் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி குழந்தைகள், கணவன், உறவுகள் என்பவற்றுக்கு நடுவே தங்களையும் வளர்த்து முன்னேறும் அளவிற்கு ஈழப்போர் பெண்களை புடம்போட்டு புதியவர்களாக்கியிருக்கிறது. இது நிஜம். ஈழத்தவர்களின் யதார்த்த வாழ்க்கை. குறைந்தபட்ச கூலியை கொடுக்கும் வேலைகள். படித்து கொஞ்சம் கெளரவமான நான்கிலக்க ஊதியத்துடனான வேலை. புலத்தில் இதில் எது வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு அல்லது முயற்சி. தனி ஆளாய் அல்லது மாணவராய் இருக்கும் பட்சத்தில் இதில் கஷ்டங்கள் குறைவே. ஆனாலும், இங்கே படிப்பை தொடர்ந்து கொண்டே ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சுமையையும் தாங்கிக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்.

குடும்பத்தையும் கட்டிக்காக்க வேலை ஒருபுறம், பகுதிநேர படிப்பு மறுபுறம் என்ற முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அதன் அழுத்தங்கள் எங்களுக்கு புதிது. புலத்தில் ஈழத் தமிழர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல ஓர் தனிப்பதிவே போடவேண்டும். ஆனாலும் சுருக்கமாகவேனும் அதை சொல்லாமல் விடமுடியாது.

கடின உழைப்பில் காலம் தள்ளும் ஈழத்து அகதிகள்

சாதாரண வேலை,General Labor, (தமிழாக்கம் சரியா தெரியவில்லை) செய்பவர்கள் இங்கே இரண்டு, மூன்று வேலை செய்து மனைவி, குழந்தைகள் குடும்பம் வீட்டிலிருக்க இவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை வேலை தளத்திலேயே வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் பொதுவான ஓர் சொல்வழக்கு, “நான் double அடிக்கிறன்”. அதன் அர்த்தம் ஒன்றில் பதினாறு மணித்தியாலங்கள் மாடாய் உழைக்கிறார்கள் அல்லது இரண்டு வேலை செய்கிறார்கள் என்பது தான். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாயிருந்தால் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

யார் எந்த வேலை செய்தாலும் அடிப்படை தேவைகள் இந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படவேண்டுமென்று அதற்கான கூலியும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்திற்கேற்றவாறு தனக்கென்றோர் வீட்டையோ, சொத்தையோ வாங்குமளவிற்கு பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எல்லலாமே சரிதான். ஆனால் அன்றாட வாழ்விலும், வேலைவாய்ப்பு என்று தேடும் சந்தர்ப்பங்களிலும் என் சிந்தனையில் அடிக்கடி இடறும் ஓர் வார்த்தை “Visible Minorities”. இவர்கள் யாரென்று கேட்டால், பூர்வீக குடிகள் தவிர்ந்த இனத்தாலோ அல்லது நிறத்தாலோ வெள்ளையர்கள் அல்லாதவர்கள். (Visible Minorities, “Persons, other than Aboriginal peoples, who are non-caucasian in race or non-white in colour” -Federal Employment Equity Act). Visible Minority என்று சொல்லப்படும் சிறுபான்மை சமூகங்களில் நாங்களும் அடக்கம்.

எங்களுக்கும் வேலைவாய்ப்புகளில் சமமாக சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமென்று சட்டம் போட்டது சந்தோசம்தான். ஆனால் சட்டத்தின் அளவுகோலும் சமூகத்தின் அளவுகோலும் எப்போதுமே ஒன்றாய், சமமாய் இருப்பதில்லையே. வேலை வாய்ப்புகளில், வேலைத்தளங்களில், அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.

இப்படி அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலுள்ள சவால்களை எதிர்கொண்டுதான் வாழ்க்கையையும் ஈழத்தில் எங்கள் உரிமைப்போருக்கான அங்கீகாரத்தை பெறுவதையும் முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.

பண்பாட்டு அதிர்ச்சியும், பாதை மாறிய ஈழத்து இளையோரும்!

கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. கனடாவில் தனிமனித உரிமைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் கூட சுதந்திரமாகவே, இன்னும் சொன்னால் கொஞ்சம் காட்டாற்று வெள்ளம் போன்றது. அது மொழி, நடை, உடை, மரபுகள், கல்வி என்று வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கிளைபரப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டற்ற வேகத்தோடும் பண்புகளோடும் ஒட்டிக்கொண்டு ஓடவும் முடியாமல், வெட்டிக்கொண்டு வாழவும் முடியாமல் தத்தளிக்கும் போது ஈழத்தமிழர்கள் (பெற்றோரும் குழந்தைகளும்) தொடக்கத்தில் திணறத்தான் செய்வார்கள்.

புலத்தில் இப்படியான சவால்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவற்றை சமாளித்து தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில்தான் வேறுபடுகிறார்கள். மனிதனுக்கு எந்த கலாச்சாரம் அல்லது மதம் எதைக் கற்றுக் கொடுத்தாலும் சீரிய சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பனதான் ஓர் மனிதனை தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பது என் கருத்து. சீரான சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் தேடல், கற்றுக்கொள்ளல் மற்றும் அனுபவம் மூலம்தான் சாத்தியமாகிறது. ஆனால் மாறாக மன உளைச்சலுக்கு ஆளாகி புலத்து வாழ்வின் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது சிலபேர் தவறான வடிகால்களை தேடிக் கொள்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் குறிப்பாக இளைய சமுதாயம் போர்பூமியிலிருந்து கசக்கி எறியப்பட்டவர்கள் ஆதலால் சரியான நெறிப்படுத்தலும் வழிகாட்டலும் இன்றி ஆரம்பகாலங்களில் கொஞ்சமல்ல நிறையவே வன்முறைகளில் இளைப்பாறி மனச்சலனங்களோடு குழுச்சண்டைகளில் ஈடுபட்டார்கள். நானும் ஓர் முன்முடிவோடு யோசித்ததால் ஆரம்பத்தில் அவர்கள் மேல் எனக்கு கோபமே விஞ்சியிருந்தது. அதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் எப்படி தங்களை சூழ உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களை அறியாமலேயே வன்முறைக்குள் நழுவிப்போனார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.

இந்த நாட்டில் கல்விக் கூடங்களில் சகமாணவர்கள் அவர்களுக்குரிய comfort zone என்னவோ, அது பெற்றோர், வீடு முதல் சமூகம் வரை அவர்களின் செளகர்யங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் குழந்தைகள் போரில் பெற்றோரை, இரத்த உறவுகளை இழந்தவர்கள். உறவினர்களின் உதவியில், தயவில் புலத்தில் வாழ்பவர்கள். இல்லையென்றால், கலாச்சார முரண்பாடுகள், அன்றாடவாழ்வின் அழுத்தங்கள் காரணமாக மனதின் சமநிலையை தடுமாறவிட்டு வீட்டோடு, பெற்றோரோடு முரண்பட்டு போவார்கள். பெற்றோர்களால் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் விலக்கிவைக்கப்பட்ட (taboo) சில நியாயமான விருப்பங்களுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிட்டியது. ஒருசிலரின் முரண்பாடுகளின் உடன்பாடுகளே அவர்களை ஓர் குழுவாய் உருவாக்கியது.

இந்த குழுக்கள் என்பது தமிழ் இளையோர் சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களினாலும் கூட உருவாக்கப்படதுதான். ஆனால், சில அரசியல் அநாமதேயங்கள் அதற்கு அரசியல் சாயம் பூசி அதில் குளிர்காய்ந்துகொண்டதுகள். இப்படியாக இவர்களின் வன்முறை சமன்பாடுகளில் இவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டபோது, தங்கள் சொந்த எதிர்காலத்தையே இருண்டதாய் ஆக்கிக் கொண்டபோது தான் வன்முறையிலிருந்து விழித்துக் கொண்டார்கள்.

தமிழ்சினிமாவில் காண்பிப்பது போல் ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு ஸ்லோ மோஷனில் இந்தநாட்டு சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார்கள். புலத்தில் ஈழத்தமிழ்சமூகத்திற்கு இவர்களின் வன்முறை உண்டாக்கிய அவப்பெயர் இவர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிவைத்தது. முடிவாக அவர்களே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்றுவரை புலம்பெயர் வாழ்வில் இவர்களின் மன உளைச்சலையும் கலாச்சார பண்பாட்டு முரண்பாடுகளையும் ஒத்துக்கொள்ளும் என்னால் அதற்குரிய வடிகாலாய், வழிமுறையாய் இவர்களின் வன்முறைச் சமன்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், எங்களை இன்று புலத்தில் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழவைப்பது இந்த இளைய சமுதாயம் என்றால் அது நிச்சயமாய் மிகையில்லை. இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.

இளையவர்களின் கலாச்சார முரண்பாடுகள் சீரியஸாக இருந்தால், பெரியவர்களின் முரண்பாடுகள் அர்த்தங்களோடு அபத்தங்களும் கலந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க தமிழர்கள் பொருளீட்டுவதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. புலம் பெயர்ந்து வந்தாலும் வேலை, வேலையென்று ஓடுவார்கள். அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்வார்கள். மேலைத்தேய கலாச்சார சம்பிரதாயப்படி சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்களில்தான் வாழ்க்கையை வாழ முயற்சிப்பார்கள். கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம்,  சாவு என்று எல்லாத்துக்குமே Week-end தான்.

இந்தியாவிலிருந்து நிறையவே விதம், விதமாக ஆடை ஆபரணங்கள் இறக்குமதியாகின்றன. இவற்றையெல்லாம் உடுத்தி, அழகு காட்டி, உண்டு, குடித்து, புலத்து வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறவில்லை நாங்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் புடவைகளில், ஆடைகளில் FLA (Fair Labor Association)  லேபிள் இருந்தால் மனட்சாட்சி உறுத்தாமல் இருக்கும் என்று நான் நடைமுறை சாத்தியமற்று சிந்திப்பதுமுண்டு. வியர்வை கூடங்களில் (Sweat Shops) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிய மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை எனக்கு.

ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம். எப்படியோ, ஈழ, இந்திய, கனடிய கலாச்சாரங்களை ஒன்றாய் கலந்து வாரநாட்களில் கனடியர்களாகவும், வார இறுதி நாட்களில் ஈழத் தமிழர்களாகவும் இரட்டை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டோம். கொஞ்சம் போதையோ, கவலையோ மிஞ்சிப்போனால், “சூ! அதென்ன வாழ்க்கை” என்று ஈழம் பற்றிய பழைய நினைவுகளை அடுத்தவர்கள் கேட்டே தீரவேண்டும் என்று அடம் பண்ணி ஒப்புவித்தோம்.

அப்படி ஒப்புவிக்கும் நினைவின் மீட்சிகள் உறவுகள் அல்லது நண்பர்களின் இழப்புகள், ஈழத்தில் நாங்கள் இழந்த சந்தோசம், பள்ளிக்கூடவாழ்க்கை, போர் தின்ற காதல், பழகிய நண்பர்கள், பறிகொடுத்த நண்பர்கள், ராணுவத்திடமிருந்தும் தலையாட்டியிடமிருந்தும் (கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட ஆட்காட்டி) தப்பித்தது என்று மனதில் காட்சிகளாய் நீளும். உடல் இங்கேயும் மனம் ஈழத்திலுமாய் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போம். அதன் நீட்சியாய் தூக்கம் தொலைக்கும் இரவுகள். கலையாத தூக்கமும், தொலையாத துக்கமுமாய் திங்கட்கிழமை அடித்துப் பிடித்து காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் வேலைக்கு ஓடுவோம்.  இன்னோர் அல்லது அடுத்த  week-end இல் வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையுடன்…..!

_____________________________________________ தொடரும்……..

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 

  1. ரதியின் கனடா கட்டுரையை வைத்து சில விசயங்களை பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
    ஏனைய முதலாளித்துவ நாடுகளைப்போல கனடாவும் ஒரு முதலாளித்துவ நாடுதான். மூன்றாம் உலக நாடுகளையும் மக்களையும் சுரண்டும் அடித்தளத்தில்தான் கனடாவின் முன்னேறிய நிலை அழுத்தமாக நிற்கிறது. பல நாட்டின் அகதிகள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதி தரப்படுவது ஏன்?
    மலிவாகச் சுரண்டுவதுதான். ரதி குறிப்பிடுவது போல ஈழத்தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்தால்தான் குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றமுடியும். இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது. எனவே கனடாவில் அகதிகள் வருவது என்பது அந்நாட்டிற்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இப்படி மலிவாக சுரண்டுவதற்கு வாய்ப்பு இருக்கும் போது அதை ஏன் தடை செய்யப்போகிறார்கள்.?

    • ////ரதி குறிப்பிடுவது போல ஈழத்தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்தால்தான் குறைந்த பட்ச வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றமுடியும். இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது.///

      ===>இதை ரதியே ஒத்துகொள்ள மாட்டார்கள். இன்றைக்கு ஈழத் தமிழர்கள் தான் கனடாவின் Visible Minority – யில் வாழ்வின் தரத்தில் முதலாவதாக இருக்கிறார்கள். இரண்டு வேலை செய்ய வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் உதவியை (Government Dole) எதிர் பார்ப்பது கேவலம் என்று இரண்டு வேலை செய்கிறார்கள்..

      ///பல நாட்டின் அகதிகள் கனடாவில் குடியேறுவதற்கு அனுமதி தரப்படுவது ஏன்? மலிவாகச் சுரண்டுவதுதான். ///

      ===> இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. எல்லாம் ஒரு நம்பிக்கையில். எல்லாரும் ஒன்றே என்று. ஒரு நாள் முன்னுக்கு வந்து அரசுக்கு வரி செலுத்துவார்கள். நல்ல குடிமகன்களாக இருக்க வேடனும் என்று. இலவசக் கல்வி, ஏழைதாய் இருந்தால் பள்ளியில் குழந்தைகளுக்கு இலவச முதல் தர உணவு. ஓசி பள்ளி பஸ். இன்னும் நிறைய வே. எல்லாம் கிடைக்கும் சட்டத்தை மதித்து நடக்கும் வரை.

      ——-நீங்கள் சொல்லும் அகதிகள் முகாம் தமிழ் நாட்டிற்க்கு மட்டும் தான் பொருந்தும்—-

      நீங்கள் சொல்லும் எல்லாம் இந்தியாவிற்கு சரி. முதலில் யாருக்கும் அடி மட்ட உழைப்பாளிக்கும் கூலியை Federal Minimum Wage – க்கு கீழே கொடுக்க முடியாது. கொடுத்தால் ஜெயில் தான். Federal Minimum Wage — மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்..

      இந்திய ஒரு சாக்கடை அதில் தமிழ் நாடு, மன்னிக்கவும் தமிழ்க்காடு, ஒரு கக்கூஸ்.

    • “இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது. எனவே கனடாவில் அகதிகள் வருவது என்பது அந்நாட்டிற்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இப்படி மலிவாக சுரண்டுவதற்கு வாய்ப்பு இருக்கும் போது அதை ஏன் தடை செய்யப்போகிறார்கள்.?”

      இக்கருத்து மிகவும் தவறானது. இங்கு அகதிகள் செய்யும் வேலைகள் எல்லாம் வெள்ளைக்காரர்களும் செய்கிறார்கள். அவ்வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கும் அதே சம்பளம் தான். அதில் வேறுபாடு கிடையாது. அதோடு இங்கு 15, 16 வயதிலிருந்தே குறைந்த பட்சம் பணத்தின் பெறுமதி தெரியப்பண்ணுவதற்காயினும் பகுதி நேர வெலை பார்க்க தூண்டப்படுவர். நானும் வந்த புதிதிலும் படிக்கும் போதும் பத்திரிகை போடுவது முதல் எத்தனையோ பகுதி வேலைகள் செய்தவளே. ஒரு சந்தர்ப்பத்திலும் சுரண்டப்படவில்லை. அதே நேரம் முதலில் வந்து ஓரளவு cleaning தொழில் செய்து முன்னேறி தாமே cleaning company திறந்து பின் அகதிகளாக வந்த தமிழர்களை அவர்களுக்கு இந்நாட்டின் நடைமுறையோ மொழியோ தெரிவதற்கு முதல் தாம் வேலை தருவதாகக் கூட்டிச்சென்று மிக மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை கொடுத்து நம்மவர்களையே சுரண்டிய நம்மவர்களை எனக்குத்தெரியும்.

      இங்கு அகதிகளுக்கு எவ்வளவோ சலுகைகள் மாத்திரமன்று முன்னேறுவதற்கு சந்தர்ப்பங்களும் உண்டு. இலவச ஆங்குல வகுப்புகள் முதல், இலவச‌தொழில் தேட வசதிகள், இலவசமாக இந்நாட்டின் கலாச்சாரங்கள், எதிர்பார்ப்புகள், இலவச cv preparation எல்லாம் உண்டு. எனது அனுபவத்தில், பல சந்தர்ப்பங்களில் எம்மவர்களை இவற்றிற்குப் போகப் பண்ணுவது தான் கடினம்.

      • ////அதே நேரம் முதலில் வந்து ஓரளவு cleaning தொழில் செய்து முன்னேறி தாமே cleaning company திறந்து பின் அகதிகளாக வந்த தமிழர்களை அவர்களுக்கு இந்நாட்டின் நடைமுறையோ மொழியோ தெரிவதற்கு முதல் தாம் வேலை தருவதாகக் கூட்டிச்சென்று மிக மிகக் குறைவான சம்பளத்திற்கு வேலை கொடுத்து நம்மவர்களையே சுரண்டிய நம்மவர்களை எனக்குத்தெரியும்.///

        நூற்றுக்கு நூறு உண்மை. Please visit places, shops at Toronto, Scarborough, Mississauga, ஏறக் in Canada.This applies to all races and minorities such Indians, Chinese, Sri Lankans, etc…

        மனிதன் தனக்கு மட்டும் மற்றவர்கள் உழைப்பில் பணம் சேரனும் என்று என்னும் ஒரு மிருகம்…

    • “இப்படி பதினாறு மணிநேரம் வேலை செய்யும் அந்த உழைப்பாளிகள் இருப்பதால்தான் வெள்ளையர்கள் ஐந்து ஆறு மணிநேரம் வேலை செய்து விட்டு மாலை நேரத்தில் பஃப்பில் சென்று நேரத்தை கழிக்க முடிகிறது.”

      Again, மிகத்தவறான generalisaiton. நீங்கள் இப்படிச்சொல்வீர்களென எதிபார்க்கவில்லை.

      • பொதுமைப்படுத்தி மட்டும் இதை சொல்லவில்லை. ஐரோப்பாவில் பணிபுரியும் நண்பர்கள் சொல்வதையே எழுதியிருக்கிறேன். மேலும் இது பற்றி கீழே வினவு சார்பிலும் முக்கியமாக சுரேஷூம் எழுதியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

    • என்ன தான் முதலாளித்துவம் என்றலும் இலங்கை இந்தியாவுடன் பார்க்கும் பொது கனடா 1000 மடங்கு திறம். நீங்கள் சொல்ல்வது சரி என்றாலும் கனடா என்ற ஒரு நாடு இல்ல விடில் ஈழத்தமிழர் கதியை நினைத்து பாருங்கள். மற்றும் படி தற்போது இங்கு கலூரிகளில் இந்திய மாணவர்கள் அனுமதி ஒரு ஒப்பந்தத்தின் படி தாரளமாக வருகிறார்கள். ஒரு கல்லோரிஎல் மட்டும் 2000 மாணவர்கள் என்றல் பார்த்து கொள்ளுங்கள். அனால் அதில் 4 – 5 மாணவர்களே தமிழ். மீதம் மலையாளிகளும் வட இந்தியரும்.

  2. அமெரிக்க கண்டத்திலிருக்கும் கனடா அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கில்தான் இயங்குகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எதுவோ அதுதான் கனடாவின் கொள்கை. ஈராக்கோ, ஆப்கானோ, லத்தீன் அமெரிக்காவோ எல்லா தலையீடுகள், ஆதிக்கங்களுக்கும் கனடா தோள்கொடுக்கிறது. கனடாவின் மனித நேய முகமூடியின் உட்கிடை இதுதான். அமெரிக்கா போல கனடா இராணுவ செலவு செய்ய முடியாது என்பதோடு செய்யவேண்டிய அவசியமும் அமெரிக்காவின் அரவணைப்பில் இருப்பதால் இல்லை. அவ்வகையில் கனடாவின் சமூக நலத்திட்டங்களுக்கான வாய்ப்பு இப்படி கிடைக்கிறது.

    • அமரிக்காவிலும் இதே மாதிரி அகதிகளுக்கு எல்லாமே ஓசி தான். அமெரிக்காவிடமிருந்து தான் கனடா இந்த மாதிரி social welfare system-த்தை எடுத்துக்கொண்டது. ஆனால் அமெரிக்காவை விட கனடா ஒரு படி மேல். எதில்.? இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது? எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்.

      Even that is past is the United States of America as medical insurance, a compulsory one for all that will be in full force from 2014.. If you don’t have money the government will pay the insurance for medical coverage.These welfare measures for all–whether you are white or black.

      ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? நூற்றாண்டுகளாக தாழ்த்தப்படவர்களுக்கு படிப்பதில் சலுகை குடுக்க என்ன கூச்சல். ஏன் சலுகை என்று?

      ஆட்டையாம்பட்டி அம்பியும் மயிலாப்பூர் கொண்டுயும் ஒரே தராசில். ஆட்டையாம்பட்டியில் பள்ளி கிடையாது. பள்ளி இருந்தால் அதில் ஆசிரியர் இருக்க மாட்டான். ஆசிரியர் இருந்த அவனுக்கு அறிவு இருக்காது. இருந்தாலும் அவனுக்கு கை கால் அழுத்தி விட்டுட்டு அப்புறம் நேரம் இருந்தால் படிக்கணும். பாதி பள்ளியில் காது இருக்காது. எருமை மாட்டை துரத்திவிட்டுட்டு அப்புறம் அந்த குப்பைத் தரையில் தான் நாங்கள் உக்காரவேனும். இன்னும் நிறையவே ஆனால் அது இங்கு தேவை இல்லை.

      இந்த அழகில கனடாவைப் பற்றி பேச நமக்கு அருகதை இல்லை. வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ் நாடு என்பது உண்மை. அதே மாதிரி இருப்பவரை சாக அடிப்பதும் தமிழ் நாடு தான்….

  3. ரதி
    கனடாவில் ஈழத்தமிழர்களின் சாதியப் பிரச்சனைகள், ஏழை, பணக்காரன் வேறுபாடுகள் அப்புறம் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து வேளாள ஆதிக்கத்தின் நிலை பற்றி அடுத்த பதிவில் சொல்வீர்களா?

    • இதை பற்றி  நானும் கேட்க வேண்டும் என்றிருந்தேன்,லண்டணில் கிட்டதட்ட பத்து வருடங்கள் இருந்த எனது நண்பர்சொன்ன தகவல் ஒன்று
      ‘என்னங்க பெருசா ஈழத்தமிழன்னு உருகறிங்கஅவனுங்க நம்மளயெல்லாம் மதிக்கறதேயில்லிங்கவடக்கத்தான்னு ரொம்ப கேவலமா பேசுவானுங்கவீட்டுக்கு போனா use and throw cupல தண்ணி குடுப்பானுங்கஇதையெல்லாம் நான் கூட இருந்து அனுபவிச்சேன்அங்க வந்து பொழைக்கிற சிங்களக்காரனுங்கள நம்பற அளவுக்கு கூடநம்பள(தமிழகத்தை சேர்ந்தவர்களை) நம்ப மாட்டானுங்க’
      இது எந்த அளவுக்கு உண்மை ரதி அவர்களே விளக்கினால் நன்று! 

      • வினவுக்கும் மரண அடிக்கும் எனது பதில்.:

        எப்ப பார்ப்பானுங்க கோயிலையும் அதோட பார்பனீயத்தையும் சேர்த்து அவாளோட அங்கே ஏற்றுமதி பண்ணினானுன்களோ அப்பவே அமெரிக்காவில் எல்லா கருமமும் வந்துடிச்சு. கூட கேட்கவே வேண்டுமா நம்ம தமிழ் நாட்டு அடி வருடிங்களுக்கு! அவாளுக்கு பல்லாக்கு தூக்கிக்கொண்டே அவாளை எப்பொழுதும் அடிவருடிக்கொண்டு அதில் வரும் இன்பத்தில் புளகாங்கிதம் அடையும் நமது தொங்கு தசைகளின் தொல்லை தாங்க முடியாது.

        In Toronto, there is separate temple for Tamil Nadu Tamilians and Sri Lanka Tamilians.
        அனால் , அவாளுக்கு (கோயில் ஐயர்) பணம் கொடுப்பதில் ஆகட்டும்
        அவாளுக்கு அடிவருடுவதில் ஆகட்டும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

        • அம்பி
          நான் கேட்டது ஜாதியை தாண்டி பிராந்திய ரீதியீல்தமிழர்களை அணுகுவது குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி

        • ///அம்பி
          நான் கேட்டது ஜாதியை தாண்டி பிராந்திய ரீதியீல்தமிழர்களை அணுகுவது குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி—மரண அடி///

          ===> உங்களுடைய மறுமொழியில் “Reply Button” இல்லாததால் எனது பதில் இங்கே தந்துள்ளேன். ஒரே வரியில் எனது பதில் “பார்பனீயத்தையும் சேர்த்து அவாளோட அங்கே ஏற்றுமதி பண்ணினானுன்களோ அப்பவே கனடாவிலும் எல்லா கருமமும் வந்துடிச்சு.”

          அவர்கள் வடக்கத்தான் என்று கூறுவது எனக்கு தெரியாது. அப்படி கூறினாலும் தப்பு இல்லை. வாழ்கையில் கஷ்டத்தை தவிர வேற எதையும் பார்க்காத அவர்களை நாம் நமது அடிமை முகாமில், மன்னிக்கவும் அகதி முகாம்களில், நடத்தியதை அவர்கள் எவ்வாறு மறக்க முடியும்? இருந்தாலும் ஈழத் தமிழர்கள் மீது நமது தமிழர்களுக்கு அதிக மரியாதை. உண்டு. உழைப்பை மட்டும் நம்பி சொந்தக்காலில் அவர்கள் போல் வாழ்வது உலகத்தில் எவனும் கிடையாது. ஒரு வேளை “Jews” இருக்கலாம்.

          அடி உதய் வாங்கினவனுக்குத்தான் அதனுடைய வலி தெரியும். அதனால் எல்லாவற்றிலும் ஒரு பயம். சந்தேகம். அதில் தப்பு இல்லை. அதனால் அவர்கள் நமது தமிழர்களை நம்புவது இல்லை. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் சிலருக்கு அதுவே வியாதி (Paranoid behavior) ஆக மாறி விடுகிறது. இனி வரும் தலை முறைக்கு அந்த பயம் இருக்காது. வளர்ந்த சூழ்நிலை அப்படி. இந்த இளைய தலைமுறை இப்போது கனடாவில் படிப்பில் வேளையில் எல்லாவற்றிலும் Number One— ஆக இருக்கிறார்கள். Compared to their population they rank one of the highest achievers in all fields in Canada.

          தமிழனை விட்டு உயிர் போனாலும் ஜாதி போகவே போகாது. ஈழத் தமிழர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. ஆனால் நமது கோயிலில் இருந்து அவர்களை (ஈழத் தமிழர்) கழட்டி விட்டது நமது பார்பனீயமும் அதற்க்கு சொம்பு தூக்கிய நமது சூத்திரக் கண்மணிகளும் தான் . பார்பனர் அல்லாதோர் எவனாக இருந்தாலும் அவன் சத் சூத்திரனே. ஆனால் அது நமது அடி வருடி களுக்கு தெரிந்தாலும் அவாளுடன் சேர்ந்து நன்னா ஈஷிக்க வேண்டியது. இன்பத்தில் எல்லாம் தலையாய இன்பம் சொம்பு தூக்குவதே. அது கனடாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும் , ஆப்ரிக்காவாக இருக்கட்டும் —-என் பனி எப்பொழுதும் சொம்பு தூக்குவது.—இது தான் தமிழனின் நிலை.

  4. ரதியின் ஆங்கிலம் கற்றுக் கொண்ட அனுபவத்தைப் பார்க்கும் போது ஒரு சூழ்நிலை, வேறுவழியில்லை என்ற நிலைமை வந்தால் எல்லாரும் கற்றுக் கொள்ளலாம் இல்லை கற்றே ஆகவேண்டும் என்பதை தமிழக இளைஞர்கள் கவனிக்க வேண்டும். இங்கு கூட ஆங்கிலம் கற்பது என்று வந்தால் பெரும்பாலான தமிழக இளைஞர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இப்போது இந்தநிலை கொஞ்சம் மாறிவருகிறது. பார்ப்பன மேல்சாதியினரிடம் இந்த தாழ்வு மனப்பான்மை இல்லை என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.

  5. இது கனடாவுக்கு மட்டுமல்ல, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்துவதுதான், ரதி நீங்கள் நன்றாக எழதுகிறீர்கள், தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் 

  6. ரதி. நல்ல பதிவு. உங்கள் நிகழ்காலமும் எதிர்காலமும் வளமாக அமைய என் வாழ்த்துக்கள்.

  7. கனடா முறைகளைப் பற்றி ஆட்கள் சொல்லக் கேட்டுள்ளேனே ஒழிய, பெரிதாக ஒன்றும் தெரியாது. உங்களின் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் போது மனம் நியூசிலாந்தில் தமிழருடைய வாழ்க்கையை ஒப்பிட்டுக் கொண்டு மனதில் தோன்றியதை இங்கு பகிர்கின்றேன்.

    “கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா.”

    “சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது.”

    “எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன.”

    நியூசிலாந்திலும் இவ்வாறு நிறைய சலுகைகள் உண்டு.

    “கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.”

    முழுமையாக ஆமோதிக்கின்றேன்.

    “அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.”

    again எனக்கு கனடாவில் எந்தளவு racism உண்டெனத்தெரியாது. நியூசிலாந்தில் மிக மிகக்குறைவு என்றே சொல்வேன். சிலருக்கு இந்த மாதிரியான அனுபவங்கள் உண்டென ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் சில/பல‌ சமயம் நாம் racism/discrimination என நினைப்பது உண்மையில் அப்படியில்லாமல் இருக்கலாமென நம்புகின்றேன். உதாரணத்திற்கு ஒரு வேலை நேர்முகத்தேர்வுக்கு நாம் போகின்றோம். எமக்கு எல்லா கல்வித் தகுதிகளும் பட்டங்களும் உண்டு. ஆனால் வேலக்கு எடுக்கவில்லை. அவர்கள் தெர்ந்தெடுத்த ஆளுக்கு சிலசமயம் எங்களளவு formal கல்வித்தகுதிகள் இருக்காது. அதனால் நம்மில் அநேகமானோர் உடனே racism என்ற‌ முடிவுக்கு வந்துவிடுகின்றோம். ஆனால் இங்கு அவர்கள் எதிர்பார்ப்பது தனியக் கல்வித் தகுதிகளும் பட்டங்களும் அல்ல. அவர்கள் personality மிகவும் எதிர்பார்ப்பார்கள். தன்னம்மிக்கை, கதைக்கும் திறன் (ஆங்கிலம் தெளிவாகத்தெரியாவிடினும் தலை நிமிர்ந்து கதைக்கும் தன்மை) எனச்சில தன்மைகளை எதிர்பார்ப்பார்கள்.

    எனக்கொருசர் சொன்னார் சில வேலைகளில் அவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்க எமக்குத் தொலைபேசி எடுக்கும் போது நாம் முதன்முதலில் அவர்களுடன் கதைக்கும் போதே assessment தொடங்கலாமென.

    ஆனால் எம்கலாச்சாரத்திலோ இலங்கையிலோ அவ்வாரில்லை. அப்படி நடக்க எமக்குத் தெரியாத்தாலோ/தயங்குவதாலோ தான் எமக்கு அவ்வாய்ப்பு கிடைக்காமல் போகுதே ஒழிய அவர்கள் discriminate பண்ணுவதால் அல்ல என நம்புகின்றேன். அவ்வாறு நிறைய சந்தர்ப்பங்காள் நான் பார்த்ததுண்டு.

    • நீங்கள் எழுதியது உண்மை! தமிழ் நாட்டைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் அவன நன்றாகவே வாழ்கிறான்.

      தமிழ் நாட்டில் நீ கஷ்டப்பட வேணும் என்பது உன் விதி, பாலு —This dialogue is from the famous Rathaka kanner movie by Mr. MR. ராதா spoken to Mr. SSR. Please do not blame the leaders of Tamilzh Naadu. Where do they come from—from us ONLY…from people like you and me. They will be like us only. Let us change first…then we could change our leaders…

      Until then….தமிழ் நாட்டில் நீ கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டு மடா பாலு… அது உன் தலை விதி…

      அன்புடன்….ஆட்டையாம்பட்டி அம்பி!?

  8. “ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம்.”

    சில சமயம் நம்பவே முடிவதில்லை. ஆனால் உண்மை.

  9. பொதுவாக கிராமங்களில் பெண்களுக்குள் அவ்வப்போது வரும் சிறு சண்டைகளில் ஒருவர் கை ஓங்கி மற்றவர் கை தாழ்ந்திருக்கும்போது, கை தாழ்ந்தவர் சொல்லுவார் , ‘ஊம், எங்க வீட்டு ஆம்பிளை ஒழுங்கா இருந்தா, கண்டவள் எல்லாம் என்னை இப்படி பேசுவாளா?’ என்று. ஈழ தமிழ் சகோதர சகோதரிகளின் துன்பங்களை படிக்கும்போது மனதில் இந்த எண்ணம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

  10. ////அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது.///

    ===> இரு தவறுகள்!. ஒன்று கனடா United States of America” -வின் வட பகுதியில் இருக்கிறது. தெற்கு எல்லையில் இல்லை. அமெரிக்கா என்று பொதுவாக கூறுவது தவறு. North America என்று தான் கூற வேண்டும அதில் United States of America – உம் Canada – உம் அடக்கம்..

  11. அப்படியே ப்ரான்ஸு லா சப்பல் பற்றியும் யாராவது எழுதினால் தேவலை.

  12. //…United States of America” -வின் வட பகுதியில் இருக்கிறது. …//

    ஆட்டையாம்பட்டி,

    அப்போ கனடாவின் தெற்கில் அமெரிக்கா இருக்கிறது என்பது சரிதானே. அடுத்து நான் வட அமேரிக்கா பற்றிப்பேசவில்லை. USA என்ற நாட்டைப்பற்றித்தான் பேசினேன். அதை குறிப்பிட தவறிவிட்டேன். ஒரு சில விடயங்களை நீங்கள் பின்னூட்டியிருந்தாலும் இது ஒன்றுதான் தகவல்களோடு இருக்கிறது. 

    உங்கள் எல்லாப்பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல நான் இன்னோர் பதிவுதான் போடவேண்டும். ஆனாலும், முதலில் Government Dole என்பது ஐரோப்பிய நாடுகளில் பாவிக்கப்படும் சொல்லென்று நினைக்கிறேன். நீங்கள் வேறெந்த நாட்டை நினைத்துக்கொண்டு இதை சொன்னீர்களோ தெரியவில்லை. 

    ////இன்றைக்கு ஈழத் தமிழர்கள் தான் கனடாவின் Visible Minority – யில் வாழ்வின் தரத்தில் முதலாவதாக இருக்கிறார்கள்.//

    இந்த தரவை எந்த சுட்டியில் அல்லது மூலத்தில் இருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? ஈழத்தமிழர்கள் தங்கள் கடின உழைப்பால் மற்ற சமூகங்களுக்கு குறைவில்லாமல் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு வர முயல்கிறார்கள். அப்படி சொன்னால் அதிகம் பொருத்தமாக இருக்கும்.

    Minimum Wage $6 என்று நினைக்கிறீர்களா? இது எத்தனையாம் வருட தகவல்? இப்படி நீங்கள் வினவின் பின்னூட்டத்திற்கு சொன்ன ஏறக்குறைய எல்லா கருத்துகளுக்கும் நிச்சயம் விரிவாக நேரமிருக்கும் போது பதில் சொல்கிறேன். தயவு செய்து வந்து படித்து விட்டுப்போங்கள்.

  13. ///அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது.///

    I am NOT sure what you are saying. From your statement, it means that Canada is located south of America (you call it USA or whatever). Please explain…

    You are welcome to approach the Human Services of Canada and find out who gets the least amount of social welfare assistance from the government. European immigrants are number one in getting the “Dole.’
    Dole is used as a slang. It is used as an offensive word when people use it for long and as a way of life. thta’s it. But, Sri Lankan Tamils–refugees–the moment they can earn they are out of the welfare system and make their own living BY SHEER HARD WORK. BTW, it is a compliment, Madam, Rathi…

    ///நீங்கள் சொல்லும் எல்லாம் இந்தியாவிற்கு சரி. முதலில் யாருக்கும் அடி மட்ட உழைப்பாளிக்கும் கூலியை Federal Minimum Wage – க்கு கீழே கொடுக்க முடியாது. கொடுத்தால் ஜெயில் தான். Federal Minimum Wage — மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்.///

    Please read carefully. What I said is an estimate when I lived there.
    “மணிக்கு 6 dollar என்று நினைக்கிறேன்.”
    I am happy to know that in Toronto the minimum wage is $10.25.

    Ontario 10.25 2009.03.31Mar. 31, 2010

    * Students (those under age 18 working under 28 hours per week during the school year [September to June]) is $9.60

    * Liquor servers $8.90.

    * Homeworkers (includes students and overrides the student wage) $11.28

    * Currently the highest in Canada

    I urge all of you to read the following link:

    http://en.wikipedia.org/wiki/List_of_minimum_wages_in_Canada

    Ms. Rathi, you missed my point as Vinavu was telling that Canada sucks its workers. I am explaining that it is NOT as they are paying around $6/hour. If it is $10.25, it adds credibility to my argument. I am happy that Canada pays so much. It means India sucks its employees….and its own citizens….MUCH MORE….

    BTW, Canada is a great country, and it is a blessing to live there…

    என்றும் அன்புடன்….ஆட்டையாம்பட்டி அம்பி!?

    • //I am NOT sure what you are saying. From your statement, it means that Canada is located south of America (you call it USA or whatever). Please explain//

      நான் சொன்னதில் அமெரிக்கா என்ற “நாட்டுக்கு” அருகாமையில் “கனடாவின்” தெற்கு எல்லையில் அமெரிக்கா இருக்கிறது என்பதுதான். என் கவனக்குறைவால் “கனடாவின்” என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது. அதை துரத்தி, துரத்தி மறுமொழிந்து சுட்டிக்காடியதற்கு நன்றி. 

  14. கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் மாகாணத்திற்கு மாகாணம் வேருபடும். $8/hr முதல் $10.25/hr வரை. மேலும் விபரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/List_of_minimum_wages_in_Canada

    வினவு குறிபிட்டுள்ள விமர்சனங்களில் பொதுவான ஒப்புதல் இருந்தாலும் சில விளக்கங்கள்:
    வெள்ளையின வந்தேறிகள் இந்த நிலங்களில் இருந்த பூர்வ குடிகளை அடித்து துரத்தி அபகரித்த நிலமே கனடா (அமெரிக்கா போல). இவ்வாறு அபகரிக்கப் பட்ட பெரும் நில பகுதியில் உள்ள இயற்கை வளங்களை அளித்துன்பதன் மூலமே (not the only reason, but one of the main reasons) கனடா ஒரு பணக்கார நாடக உள்ளது (மீண்டும், அமெரிக்கா போல).

    ஒரே வித்தியாசம், அமெரிக்கா ‘அளவுக்கு’ மேல் கடன் வாங்கி தன் ராட்சத கால்களை உலகம் முழுக்கப் பரப்பி உள்ளது. அமெரிக்கா நிற்க வேண்டுமாயின் மற்ற நாடுள் மிதிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அனால் கனடாவிற்கு அப்படி ஒரு நிலை (தொடரவேண்டியது) இல்லை. இவ்வளவு பெரிய நாட்டில் மூன்று கோடி மக்களே உள்ளனர். ‘தன்’ நிலத்தை சுரண்டி தின்றாலே போதும் (self sufficient). அதற்கு அச்சுறத்தல் வந்தால் முதலில் அது அமெரிக்காவிடமிருந்துதான் வரும்!

    கனடா அகதிகளை வரவேற்க பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

    1. It’s a country with below replacement fertility rate. ஆகா வெளி ஆட்களின் வருகை இந்த நாட்டிற்க்கு அவசியமாகிறது (அந்த மூன்று கோடி பேர் , ரெண்டரை ஆகாமல் இருக்க) . அது skilled labour’ஆக மட்டும் இருந்தால் unskilled work செய்ய ஆட்கள் தேவைப் படும். So they extract skilled work through ‘processed, selective immigration’ and uskilled work through asylum seekers. அந்த வகையில் வினவு சொல்வது சரிதான். ஆனால் தமிழர்கள் 16 மணி நேரம் வேலை செய்வது அவர்களது தெரிவு.

    சராசரி வேலை/ஊதிய கணக்கு: 8 hours a day, 5 days a week, 4 weeks a month: 160x$10 = 1600. இந்த ஊதிய அளவில் அரசாங்கம் வரிகள் ஏதும் பிடிக்காது. குடும்பத்தில் இருவரும் வேலை செய்தால் $3200[1]. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு இது போதுமானதே. ஆனால் அகதியாய் வரும் மக்கள் பலர் அடிப்படை வாழ்வை மீறிய ‘முன்னேற்றக்’ கனவுகளை தழுவுகின்றனர். சொந்த வீடு, தம் சமுதாயத்தினடையே கிடைக்கும் ‘மதிப்பு’ போன்றவற்றால் உந்தப் படுகிறார்கள். ஒரே நாளில் இரு நாள் ஊதியம் (கடின உழைப்பை கோரினாலும்) என்ற ‘instant gratification’ம் உள்ளது — இது மனிதர்களுக்குள் புதைந்திருக்கும் அடிப்படை முதலாளித்துவ/சேமிக்கும் குணம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத, uncertainty நிறைந்த, போர்ச்சூழலில் இருந்து வருபவர்களுக்கு இது அதிகமாக இருக்கலாம் (ஒரு யூகமே).
    [1]. பெண்களை வேலைக்கனுப்பாமல் ஆண் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்ற போக்கும் இருக்கத்தான் செய்கிறது. ‘பிள்ளைகளை பராமரித்தல்’ என்ற பிரச்சனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

    2. கனடா, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளின் ஆதிக்கம் உலக அரசியலில் மிகச் சிறிய அளவே. அவர்கள் மற்ற நாடுகளோடு தங்களின் குடியை (value of their sovereignty) உயர்த்திப் பிடிக்கவும், தங்களது ‘அற உணர்வை’ (moral superiority) பறைசாற்றவும் அகதிகளுக்கும் இன்ன பிற மக்களுக்கும் புகலிடம் வழங்கப்படுகிறது.

    Power of sovereignty:
    யார் என்னை அச்சுறுத்துகின்றாரோ அவரை விட வலிமையனவரே எனக்கு பாதுகாப்பளிக்க முடியும். இந்த இயங்கியல் விதியில்தான் புகலிடம் வழங்குவதின் முக்கியமான அரசியல் அடங்கி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கோ, ஆஸ்திரேலியாவிற்கோ செல்பவர்களின் கதி அந்த நாடுகளால் மட்டுமே தீமனிக்கப் படுகிறது. இதில் இலங்கை தலையிட முடியாது. ஒரு நாடு கட்டுப்பாட்டில் உள்ள நிலப்ரதேசம் (நீரும்) எது, அதில் உள்ள மக்களின் நிலை என்ன என்பவற்றை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை அவ்வப்போது நிறுவ உதவும் பல வழிகளுள் புகலிடம் வழங்குதலும் ஒன்று.

    Moral Superiority:
    இதுவரை ஆப்ரிக்க நாடுகள், இலங்கை, சீனா, கியூபா போன்ற நாடுகளிலிருந்து பல லட்சம் மக்கள் ஆண்டு தோறும் ‘வளர்ந்த’ நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்கிறார்கள் (எதிர் திசையில் எத்துனை பேர் சென்றிருப்பார்கள்?). மேற்கத்திய நாடுகள் ஐ.நா, உலக வங்கி போன்ற நிர்மாணங்களை ஆட்படுத்த இந்த ‘moral superiority’ முக்கியமான கருவியாகிறது.
    மற்ற நாடுகள் இந்த ‘அற உணர்வின்’ ஆதாயங்களை புரிந்து வைத்தாலும், தன் குடி மக்களைப் பொறுத்தவரை தன் நாடு ‘நல்ல’ நாடு என்ற கண்ணோட்டம் பேணப்படுகிறது. “உயரிய மனித உரிமைகளை கொண்ட இந்த திருநாட்டை நோக்கி மக்கள் வருவதில் என்ன ஆச்சர்யம்? வந்தாரை வாழ வைக்கும் அமெரிக்கா போன்ற நல்ல நாடு எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்,” என்று பெரும்பன்மை அமெரிக்கர்கள் ஒருவகை தேசிய உயர்வு மனப்பான்மை மயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை அந்நிலையிலேயே வைத்திருக்க புகலிடம் வழங்குவதெல்லாம் சில்லறை செலவு. அது ‘அளவுக்கு’ மீறும்போது, அதையும் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக எப்படிப் பார்த்தாலும் லாபமே.

  15. At the outset, my sincere apologies to Ms. Rathi for taking up this space as this letter is addressed to Vinavu to translate the information found in the following web sites and publish in Tamilzh in his column. This will a great social service to all Tamilians in India.

    http://en.wikipedia.org/wiki/Minimum_wage

    http://en.wikipedia.org/wiki/List_of_minimum_wages_in_Canada

    The following is with respect to United States, and I trust Canada will have the same privileges for its workers. If someone is working 15 hours a day, imagine how much he makes per day compared to our Indians. Say, you are injured you are covered by Workers Compensation and treatment is FULL FREE (in the U.S.). You get unemployment benefits for up to 26 months (62% max; and there is a ceiling to that) even if you are retrenched. If you are NOT employed because of injury or disability (say a driver lost his hands), he will be re trained in another job with full government support and ALL gadgets are given free. If he wants to study, the government pays free for its education. Even Alcoholism is also a disability . Strange…Is it not? Any accommodation, say, the injured worker needs a prosthesis it is provided free. If that person is a quadriplegic the government even provides a quad-van free that can cost up to 70000 US dollars. Why? In a matter of years, he is going to be independent and earn and pay taxes to the government.There are many more help given to its citizen. they want every one to be productive. The government pays social security wages free and also supplements with supplementary social security wages. Reduced housing in good condition based on your earnings. It can be free or at a low percentage of your earning. And the housing is MUCH better than many housing here and must meet best federal regulations. All of them have A//c heating, fridge, etc…

    Why am I writing here??? Because….

    இங்கு எல்லா சுகத்தையும் அனுபிவிக்கும் மேல் தட்டு மக்கள் இந்தியா என்று வந்தால் தொழிலாளிகளுக்கு சரியான கூலியும் கொடுப்பதில்லை. வேலையில் அடிபட்டாலும் இறந்தாலும் ஒரு மXXயும் கொடுப்பதில்லை. கேட்டால் கம்யுனிஸ்ட் என்று கூக்குரல் வேறு. இந்த சும்பனுங்க இங்க எல்லாத்தையும் வாங்கிக்குவானுங்க. அங்கே என்றால் வலிக்கும். வினவு அவர்களே இந்த “web site” யும் பாருங்க.

    http://www.ssa.gov/disability/

    http://www.rehab.cahwnet.gov/aboutdr.htm

    America is a capitalist country. yes, ஆனால் தொழிலாளிகளுக்கு எல்லா வித உதவியும் செய்யும் ஒரே நாடும் அதான். உலகத்திலே முதன்மையான நாடும் அதான். கனடாவும் அப்படித்தான் என்று நினைக்கிறன்…இந்தியா தொழிலாளிகளைப் பொறுத்த வரை ஒரு பகல் கொள்ளைக்காரன்…..

    வினவு அவர்களே தயவு செய்து இதை எல்லாம் (please read the web links) தமிழில் எழுதுங்கள். அதுவே நமது தொழிலாளர்களுக்கு நீங்கள் செய்யும் மகத்தான சேவை. செய்வீர்களா?

    அன்புடன்….ஆட்டையாம்பட்டி அம்பி!?

  16. ஆட்டையாம்பட்டி பாதி உண்மைகளை வைத்து முழு உண்மைகளை உருவாக்குகிறீர்கள். சுரேஷ் எழுதியிருக்கும் கருத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவற்றில் பல சரியானது என கருதுகிறேன்.

    அமைச்சர் கென்னி சமீபத்தில் பேசியிருக்கும் புதிய அகதி நிர்மாணதிட்டம் அதற்கு செலவிடப்படும் 54மில்லியன் டாலர் பற்றி கனடியர்கள் அதிலும் ஒரிஜினல் வெள்ளையர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை படித்து விட்டு இதை எழுதுகிறேன்.

    சுரேஷ் ஏற்கனவே கூறியது போல மூன்றுகோடியே முப்பது இலட்சம் மக்கள் தொகை கொண்ட கனடா நம்ம தமிழகத்தின் பாதி மக்கள் தொகையைத்தான் கொண்டுள்ளது. இதில் ஏழு அல்லது எட்டில் ஒருவர் அகதியாக இருப்பார் என கருதுகிறேன். அகதியாக வந்தாலும் குடியுரிமை பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்குமேல் ஆகும் என்கிறார்கள்.

    இந்த புரேபேஷன் பீரியடில் எப்போதும் புதியவர்கள் வந்து கொண்டே இருப்பதால் இது மலிவான உழைப்பாளிகளை தயாரிக்கும் தந்திரமாகத் தெரிகிறது. வெள்ளையர்கள் ஒரு குழந்தையை பெறுவதே சராசரி என்பதையும் அகதிகள் நாலு, ஐந்து என்று பெறுவதையும் வெள்ளையர்கள் சற்று அச்சத்துடனே பார்க்கிறார்கள்.

    வெள்ளையர்களை விட தேர்தலில் வாக்களிக்கும் விகிதம் அகதிகளுக்கு அதிகமாம். இங்கும் பணக்காரர்களை விட ஏழைகளே அதிக்ம் ஓட்டு போடுகிறார்கள். கனடாவில் குறைந்த பட்ச கூலி நம்மைப் போன்ற ஏழை நாடுகளை ஒப்பிடும்போது பலமடங்கு அதிகம்தான். அதே போல வாழ்க்கைத்தரத்திற்கான செலவும் பலமடங்கு அதிகம் எனும் போது என்ன சொல்வது?

    இந்தியர்கள், ஈழத்தமிழர்கள் போன்ற தெற்காசிய பின்னணியிலிருந்தோ அல்லது மற்ற ஏழை நாடுகளிலிருந்து செல்லும் அகதிகள் வெள்ளயர்களை போல செல்வு பிடிக்கும் வாழ்க்கை வாழ்வதில்லை. சேமிக்கிறார்கள். இது ஒரிஜனல் கனடியர்களுக்கு உறுத்துகிறது. வந்தவன் வீடு, வசதி என்று வாழும் போது நான் இன்னும் விடுதியில்தான் தங்குகிறேன் என்று கேட்கிறார்ன.

    அகதிகளுக்கு செலவிடும் பணத்தை சொந்த தேசத்தவருக்கு செலவழிக்கலாம் என்று பலர் விரும்புகிறார்கள். அதன் படி வரியைக் குறைக்க வேண்டுமென்பது அவர்களது விருப்பம். அப்படிக் குறைத்தால் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனாலும் அடித்த்ட்டு வேலைகளுக்கு எவ்வளவு வெள்ளையர்கள் தயாராக இருப்பார்கள் என்பது சந்தேகமே.

    அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இதுவரை வெள்ளையின கனடியர்களை வைத்து தொழில் நடத்தியது இனி அகதிகளை வைத்து நடத்துவார்கள் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஒருவேளை பெரும் அகதிகள் வந்து ஊரகப்பகுதிகளில் வைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போல தொழில்நடத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவையெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும்.

    சாதாரண வெள்ளையின மக்கள் நினைப்பதற்கும் முதலாளிகளான வெள்ளையர்கள் சிந்திப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. முதலாளிக்கு குறைந்த கூலியில் கடுமுழைப்பு செய்பவன்தான் வேண்டும்.அவன் எந்த நாட்டவனாக இருந்தாலும் பிரச்சினையில்லை.

    சுரேஷ் சொல்வது போல சொந்த நாட்டின் வளத்தை சுரண்டி வாழ்வதற்கே பெரும் வாய்ப்பை கனடா கொண்டிருக்கும் போது அகதிகள் நிச்சயம் தேவைப்படுவார்கள். இல்லையென்றால் கனடாவின் வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். அதனால்தான் முதலாளிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் அரசியல்வாதிகள் அகதிகளை கொண்டு வருவதற்கு விரும்புகிறார்கள்.

    மேற்கு ஐரோப்பிய நாடுகள் போல இந்த இனப் பிரிவினை இன்னும் கனடாவில் உறுதியடையுமளவுக்கு அங்கு சமநிலை குலையவில்லை. அந்த அளவுக்கு இன்னும் எத்தனை இலட்சம் பேர் வந்தாலும் கனடா தாங்கும். அப்படி வந்தால்தான் கனடாவே தொடர்ந்து இயங்கும்.

    தொகுப்பாக பார்த்தால் இதில் மனிதநேய அக்கறை இருப்பதாக நான் பார்க்கவில்லை. அதை பொருளாதார அரசியல் காரணங்களே முக்கியமாக தீர்மனிக்கின்றன. இதை இன்னும் பல தரவுகளைப் படித்துவிட்டு எழுதலாம். சுரேஷ், ரதி போன்ற நண்பர்கள் இதை தொடரலாம். நன்றி.

    • I will write later in detail in Tamilzh.

      I don’t know why you said mine are half-truths. Could you please explain.
      If refugees don’t have education what kind of Jobs they would get. Let me know?

      If you read Ms. Rathi’s blog, she has clearly outlined the benefits given to them. if some of them don’t want to use that but make money immediately by working two jobs it is their mistake. Moreover, in Canada and in the U.S. the family immigration is MORE. In fact, in Canada, if you have good education, you can immigrate on your own with merit-based-point system.

      //அமைச்சர் கென்னி சமீபத்தில் பேசியிருக்கும் …..///

      What is wrong in it? In Canada and USA any mister can talk what he thinks is right and NOT like India where no minister can talk without higher ups permission. Finally the law will be enacted after voting. No whip here like India. one can vote as he likes.

      Finally, all capitalists are same. Yes, but here they cannot do what they want. They have to give what the employee is due. Rights! Rights! And lawyers will argue free initially based on contingency. 33% compensation will go to them approx after they win the case. And the punishment to capitalists is always in millions…

      I again say that if you want to see how a labor is protected come to USA. For example, if you hit a road side worker in car, you jailed and fined. Fines are double. And one can go to jail for life if that worker dies. people have gone to jail for life by killing a road side worker. In India??????? it is ONLY in the USA..they are protected maximum..I can write separate blog on this..

      BTW, why do you think American Capitalists are coming to India for charity or for our knowledge. No. They come here because you can do whatever you want with employees. If workers agitate you can attack them with power. You can bribe the court…The list is endless.

      Please for heaven sake do not compare an Indian worker with an American or Canadian worker

      அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.!

  17. நண்பர் மரண அடி,

    //குறிப்பாக தமிழக தமிழர்களைகீழாக ‘வடக்கத்தான்’ என்று அணுகுவது பற்றி..//

    உங்கள் நண்பருக்கு நேர்ந்த அனுபவம் கசப்பானதே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எனக்கு தெரிந்தவரை கனடாவில் அப்படி யாரும் தமிழக தமிழர்களை அழைப்பதுபோல் அல்லது நடத்துவது போல் தெரியவில்லை. உண்மையில், கனடாவில் தமிழக தமிழர்களை பொதுவாழ்விலும் சரி, சில ஊடகங்களிலும் சரி ஈழத்தமிழர்கள் மிகவும் மரியாதையோடுதான் நடத்துவதை பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இதை பற்றி அடுத்த பதிவில் குறிப்பிடலாம் என்றுதான் இருக்கிறேன். குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் எங்களோடு வீதியில் விழுதுந்து கிடந்தது அவர்களும்தானே. தமிழக தமிழர்கள் எங்களோடு சேர்ந்து நின்றபோது தான் நினைத்தேன், நாங்கள் தனித்தவர்கள் அல்ல. அனாதைகள் அல்ல என்று.

    ஒருவேளை ஒன்றிரண்டு “bad apples” இருக்கலாம். அது எனக்கு தெரியாமலும் இருக்கலாம்.

    • இல்லை ரதி. கொஞ்சம் நிறையவே அழுகின ஆப்பிள்கள் இருக்கின்றன.

        • ரதி, கிருதிகன் போன்றவர்கள் எங்களை நாங்களே பிழை சொன்னால் மட்ட்ரவர்கள் எங்களை நல்லவர்கள் எண்டு நினைப்பார்கள் என்ற தமிழ் பத அப்ப்லஸ்

    • சார் வனக்கம், நான் மதுரை பக்கத்துல, 12 வது படிச்சுருக்கேன், Tower crane operator ஆக பனிபுரிந்து வருகிறேன், நான் கனடா விற்கு ஏதேனும் வேலைக்கு வந்தால் பள்ளி படிப்பு பேதுமா இல்லை டிகிரி முடித்து இருக்க வேன்டுமா தகவல் தரவும்

  18. ஆட்டையாம்பட்டி,
    ///இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது? எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்//
    என்ன சொல்கிறீர்கள்? வெள்ளையர்களைத் தவிர இங்கே யாருமே வரி காட்டுவதில்லையா? ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும். வருமானவரி, சொத்துவரி என்று இதெல்லாம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களைத் தவிர யாருமே கட்டுவதில்லை என்று சொல்கிறீர்களா. 

    ///இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //
    இது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது. 

    அடுத்து, சுரேஷ் அழகாகவும், விளக்கமாகவும் அகதிகளை கனடா ஏற்றுக்கொள்வது பற்றியும் மற்றும் குறைந்த ஊதியம் பற்றியும் சொன்னவைகளோடு உண்டபடுகிறேன். இங்கே நகைச்சுவையாக சிலர் சொல்வார்கள். கனடா அமெரிக்காவின் இன்னொரு state (மாநிலம்) என்று. 

    சுரேஷ் சொன்னது, ///ஆனால் தமிழர்கள் 16 மணி நேரம் வேலை செய்வது அவர்களது தெரிவு./// 
    நீங்கள் சொல்வது சரி. அது அவர்கள் தெரிவுதான். ஆனால், அதே சமயம் ஈழத்தமிழர்கள், அவர்களின் பிரச்சனைகளின் அடிப்படையிலிருந்து உருவாகும், ” தம்பி எத்தனை நாளைக்கு கொழும்பிலேயே இருக்கிறது. அவங்கள் பிடிச்சாலும் என்று பயமாக்கிடக்குது. கெதியா அவனையும் கனடாவுக்கோ அல்லது வேறை எங்கையாவதோ அனுப்ப நீதானே ஐயா முயற்சி எடுக்க வேணும்” இப்படி தொலைபேசியில் அழும் ஈழத்து தாய்மார்கள். “இருந்த வீட்டை முழுசா குண்டு போட்டு அழிச்சிட்டானுகள். வீடெண்டு ஒரு கூரையாவது வேணும்”. “தங்கச்சியை ஆமிக்காரனுக்கு நடுவில கனகாலம் வைச்சிருக்க ஏலாது. அதுக்கும் ஒரு வழி பாருங்கோ” . இதுக்கெல்லாம் ஒரு சாதாரண வேலை செய்பவர் எப்படி முகம் கொடுப்பார். இரண்டு வேலைதான் ஓரளவாவது இதற்கு வழி சொல்லும். கனடியர்களைப்போல் eat, sleep, play sports என்று மட்டும் வாழ அடிப்படை சம்பளம் போதும் தான். எல்லோருமே நீங்கள் சொல்லும் “மதிப்பு” கருதி தான் இரண்டு வேலை செய்கிறார்கள் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

    வினவு சொன்னதோடு சேர்த்து, 

    கூலி வேலைக்கு வந்தவன் computer analyst ஆக ஆனால் இவர்களின் வேலைக்கு வேட்டு வராதா? தவிர சில காலங்களுக்கு முன் இங்குள்ள ஊடகங்களில் ஓர் விடயத்தை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதாவது, Toronto, Vancouver போன்ற நகரங்களில் visible minorities தொகை இங்குள்ளவர்களின் தொகையை விட அதிகமாகப் போகிறது என்று. மற்றும் அண்மைய புதிய குடிவரவு கொள்கைளில் உருவாக்கப்பட்ட மாற்றங்கள். இதையெல்லாம் மொத்தமாக யோசித்தால் இனிமேல் கனடாவுக்கு யாராவது மில்லியன் டொலர் முதலீட்டோடு வரவேண்டும். அல்லது, குறைந்தபட்ச கூலிவேலைக்கு ஏதாவதொரு ஐ. நாவின் அகதி முகாமிலிருந்து வரவேண்டும். 

  19. கண்டா அமெரிக்காவின் வெளினாட்டு கொள்கைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை.அது இப்போதும் ஒரு மக்கள் நல அதாவது welfare அரசுதான்.பாரபட்சம் இல்லை என்பதை விட குறைவு என்பது பொருந்தும்.ஈழத்தமிழர்கள் தவிர ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாபிகள் வாழும் இந்த நாட்டில் வாழ்க்கைத் தரம் உயர்வானது.கல்வி,உடல் நலம் போன்றவற்றில் ஏழைகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வகைசெய்யப்பட்டது.அகதிகளையும் நன்றாக நடத்துகிறார்கள்.இது சொர்க்கம் இல்லை ஆனால் ஸ்டாலின்ஸ் ரஷயா,மாவோயிஸ் சீனாவுடன் ஒப்பிட்டால் சொர்க்கம்தான்.
    முதலாளித்துவம் என்றால் எங்கும் ஒரே போல் இருப்பதில்லை.கனடாவில் முதலாளித்துவம் இருந்தாலும் சமூகப் பாதுகாப்பும்,அடிப்படை உரிமை,வ்சதி அனைவருக்கும் கிடைக்கிறது. கனடாவில் பிரச்சினைகள், பாராபட்சம் உண்டு, அது குறித்த அக்கறையும் உண்டு. ஈழப் பெண்கள் பலர் கனடாவில் உள்ளவ ஈழத்தமிழ்ர்களை திருமணம் செய்து கொண்டு குடியேறியிருக்கிறார்கள்.பிரச்சினை இருந்தாலும் பாதுகாப்பு உண்டு, வாழ முடியும், முன்னேற முடியும் அத்துடன் அங்கு இரண்டாம் தர மக்களகாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை.எனவே முதலாளித்துவ நாடு என்றால் பேய்,பூதம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.வினவு நண்பர்கள் உலகை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. இயக்கம் சொல்வதை ஒப்பிக்கிறார்கள்,யோசிக்க மறுக்கிரார்கள்.

  20. ஆட்டையாம்பட்டி,

    ///இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது? எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்//

    என்ன சொல்கிறீர்கள்? வெள்ளையர்களைத் தவிர இங்கே யாருமே வரி காட்டுவதில்லையா? ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும். வருமானவரி, சொத்துவரி என்று இதெல்லாம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களைத் தவிர யாருமே கட்டுவதில்லை என்று சொல்கிறீர்களா.

    ///இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //

    இது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது.

    —————————————
    For more details you can also see the post கனடாவில் அமெரிக்காவில் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம்! at my blog :
    http://tamilkadu.blogspot.com/

    MS. Rathi-அவர்களே,
    உங்களுடைய பதிலில் கோபம் தான் தெரிகிறது. நீங்கள் எதையும் கூர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலும் உங்களுக்கு ஆங்கில அறிவு இருப்பதால் நான் சில வரிகளை ஆங்கிலத்தில் எழுதிகிறேன். அந்த வரிகளை தமிழில் எனக்கு சரியாக மொழி பெயர்க்கத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

    //இலவச மருத்துவத்தில். அகதிகளுக்கு எல்லாமே ஓசியில் கொடுப்பதிக்கு பணம் ஏது? எல்லாம் பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள் கட்டும் வரிப்பணம்///

    நான் சொன்னது “பெரும்பான்மயினார வெள்ளைக்காரர்கள்.” அதில் என்ன தவறு? கனடாவில் யார் பெரும்பான்மையினர். வெள்ளைகாரர்கள் தான் பெரும்பான்மையினர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? நான் தமிழர்கள் வரி கட்டுவது இல்லை என்று சொன்னேனா? இல்லையே? அப்புறம் ஏன் இந்தக் கோபம்.Whites will be more than 80% of population, I guess. Why don’t you refer the census?. என்னுடைய அறிவுக்கு 80 விழுக்காடு பெரும்பான்மையினர் தான். 80 விழுக்காடு பெரும்பான்மையினர் இல்லை என்றால் அதுக்கு மேல் என்னால் பேச முடியாது. வெள்ளையர்களைத் தவிர யாருமே வரி கட்டுவதில்லை என்று நான் சொல்லாததை உங்கள் வசதிக்கு சேர்த்துக் கொண்டிரிருக்கிரீர்கள்! மறுபடியும் நான் சொன்னதை கூர்ந்து படிக்கவும்.

    சரி அப்படியே எடுத்தக் கொண்டாலும் நான் சொன்னது அகதிகளைப் பற்றி. அகதி என்றால் என்ன. வீடு, வாசல், உற்றார், உறவினர், பணம் மற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டவனுக்கு. உயிரைத்தவிர! அவர்களுக்கு ஜாதி மதம் பேதம் எதுவும் கிடையாது. அவர்களை உயிர் வாழ் வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரே மனிதபிமான எண்ணத்தில் மட்டும் தான். அப்படி இருக்கும் போது ஒரு 10000 அல்லது ஒரு லட்சம் அகதிகளுக்கு பணம எது? வீடு இல்லாத அகதிகளுக்கு சலுகைகள் இனாம்கள் எல்லாம் மற்ற கனடியர்கள் கட்டும் வரிப் ப்பணம் தான். அதில் ஒன்னும் சந்தேகம் இல்லையே/? அதைத்தான் தான் நான் கூறினேன். எனது விவாதம் அகதிகள் பணம் மக்களுடைய வரிப்பணம் தான்.

    பொருளாதாரம் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சமூகத்திலும் முதுகு எலும்பு என்பது majority தான். Minority அல்ல. முந்தா நேத்து நாம (என்னையும் சேர்த்துததான்) இங்க வந்த்கிட்டு கொஞ்சம் வரி கட்டிக் கொண்டு….. We cannot talk like this. What about the infra structure that have been built for years by the majority of the Americans and Canadians. We forget that.Those are worth trillions and trillions of dollars and we are enjoying the infra structure what those people have built here..

    /////இது தவறு. அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட சலுகைகள் அதிகம். எல்லாமே ஓசி. //

    இது அடுத்த உச்சபட்ச உளறலாக எனக்குத் தெரிகிறது.///

    விடயம் புரியவில்லை என்றால் எல்லாமே உளறலாகத் தான் இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் அகதிகள் அடிமை மாதிரி நடத்தப்படுகிறார்கள். கனடாவிலும் அமெரிக்காவிலும் அப்படி இல்லை, .அகதிகளை மனிதாபமான முறையில் அணுகுவார்கள்.

    மறுபடியும் கூறுகிறேன் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன்களை விட இங்கு சலுகைகள் அதிகம். எப்படி?

    உதாரணமாக ஒரு அகதி குடும்பம் நான்கு பேருடன் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் (அப்பா அம்மா, ஒரு மகன் மற்றும் மகள் ). கையில் பணம் இருக்காது. உயிர் மட்டும் தான் இருக்கும். இருப்ப தற்கு வீடு . வீடு என்றால் எப்படி. எல்லா வசதியும் உள்ள வீடு. இந்த குடும்பத்திற்கு மூன்று “bedroom apartment” சட்டப்படி கொடுக்க வேண்டும். எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். வீட்டுக்கு வாடகை கிடையாது. சாப்பிடுவதற்கு ‘Food Stamps.” கொடுப்பார்கள். அதை வைத்து உணவுப் பொருள்கள் வாங்கலாம். பள்ளிப் படிப்பு வரை இலவச படிப்பு (இது எல்லா குடிமகன்களுக்கும் பொருந்தும்). இலவச மருத்துவம் (இது கனடாவில் மட்டும் எல்லா குடிமகன்களுக்கும் பொருந்தும்).

    அத்தியாவசத் தேவைக்கு ஒரு “dollar amount – maintenance amount.” வருமானமே இல்லாததால் வருமான் வரி கிடையாது. உண்மை என்று வந்தால் எல்லா உண்மையையும் சொல்ல வேண்டும். இதை அமெரிக்காவில் “double-dipping” என்று சொல்லுவார்கள். Double dipping என்றால் அகதிகளுக்கு வருமான வரி கிடையாது (வருமானமே இல்லாததால்). அதே சமயம் அகதிகளை பராமரிப் பதற்கு பணம் மற்றவர் களுடைய வரிப் பணம். நாங்கள் கட்டும் வரிப் பணம் எதற்க்காக நாங்கள் அகதிகளுக்கு செலவிட வேண்டும். அந்த மனிதாபமான் அடிப்படை உதவியை மறந்து விட்டு ஏதோ அடிமட்ட வேலைக்காக அகதிகளை கனடாவிற்கு ஏற்றுமதி செய்தது மாதிரி பேசக் கூடாது. கனடா என்ன உங்களை இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் தூக்கிக் கொண்டு வந்ததா . இல்லையே? நீங்களாகத் தானே வரும்பி வந்தீர்கள். அப்புறம் என்ன கூலிக்காக கூட்டிக்கொண்டு வந்தது மாதிரி சொல்லுவது?

    சரி நீங்கள் கூறிய படி எல்லா வசதியும் செய்து கொடுக்கும் பொழுது (இதை எல்லாம் நீங்களே விலாவரியாகக் கூறியுள்ளீர்கள்) யார் உங்களை படிக்க வேண்டாம் என்று சொன்னது. யாரும் உங்களுடைய கையை பிடித்து தடுக்கவில்லையே? கடன் வசதி உண்டு. அகதிகளுக்கு முதலில் அரசு “Grant money from the Universities.” கொடுக்கும். இந்த “grant money” திருப்பித்தர தேவை இல்லை. அதே சமயம் எனது மகன் மகள் இவர்களுக்கு “grant” கிடையாது.. கடன் மட்டும் தான். நாங்கள் திருப்பி செலுத்தும் கடன் மட்டும் தான். அதுவும் வருமானம் ஒரு அளவுக்கு மேல் போனால் எங்களுக்கு கடனும் கிடையாது. என்னுடைய சேமிப்பு மட்டும் தான் எனது குழைந்தைகளின் படிப்பிற்கு. Masters படிக்கும் போது என்னுடைய வருமானம் எனது குழைந்தைகளுக்கு கணக்கிடப் படாது. இப்பொழுது சொல்லுங்கள் சலுகைகள் யாருக்கு அதிகம்?

    Another one regarding education and Affirmative Action: If two students of equal credentials apply for one seat in a college, then the priority is given to the minority student—NOT for a white. If the other student is a refugee (அகதி) he walks away with the seat as well as with extra grant money. Affirmative action applies to all women of all races including white and to all male minorities in the United States, as defined by the law.

    இந்தியா மாதிரி ஒரு 10000 – பேர் அகதிகள் வந்தால் கூவம் என்ற சாக்கடைக்கு பக்கத்தில் அகதி முகாம் கட்ட முடியாது. இங்கு அகதிகளுக்கும் நாட்டின் குடிமகனுக்கு உண்டான ஒரு மனிதனுக்கு கொடுக்க வேண்டிய எல்லா வசதியும் கொடுக்க வேண்டும். நான் இருக்கும் ஊரின் ஜனத் தொகை 55000 – பேர். இந்த ஊரின் budget கோடிகளில். அந்த 10000- பேருக்கு எல்லா வசதியும் செய்ய வேண்டும். நாங்கள் அனுபவிக்கும் எல்லா வசதியையும் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். இது சட்டம். அப்படி செய்ய வில்லை என்றால் : American Civil Liberties Union affectionately known as ACLU (http://www.aclu.org/ ) நோண்டி நொங்கை எடுத்துடுவான். அமெரிக்கா முதலாளியும் அரசும் பயபடுவது இந்த ACLU – ஐ பார்த்து தான். Civil Liberties என்றால் எல்லாரும் எந்த ஒரு மனிதனும் அமெரிக்கா மண்ணில் இருந்தால். அவன் கொலைகாரன் கொள்ளைக்காரனாக இருந்தாலும்…யாரும் அவன் “Civil Liberties” – ஐ தொட முடியாது? அது தான் ACLU.. இந்த சேவையும் ஓசி தான்.

    சரி இந்த அகதிகளுக்கு 10000 பேருக்குக்கு எத்தனை கோடி பணம் வேண்டும். அந்த பணம் எனது வரியில் இருந்து போனாலும், 80 சதவீத பணம், அந்த முதுகு எலும்பு தான், 80 சதவீத வெள்ளைக்கார முதுகு எலும்பு தான் கொடுக்க வேண்டும் அதாவது 100 சதவீதம் எங்களது வரிப் பணம் தான் அகதிகளுக்கு போகிறது. இதை நான் சொல்லுவது ஏன் என்றால் ஏதோ அகதிகளை நாங்கள் வலுக் கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து விட்டது மாதிரி பேசியதால்.

    அகதிகளுக்கு பணம் இல்லை என்பதால் அவற்களுக்கு “immigration papers” process – பண்ண ” application fee” கிடையாது . தேவைப் பட்டால் சட்ட உதவி இலவசம். ஆனால் நங்கள் வரு மான் வரி கட்டி இது மாதிரி எல்லா செலவும் செய்து அகதி களையும் காப்பாற்றுகிறோம். அதற்கு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

    உண்மையில் அமெர்க்காவில் ஏழையாய் இருப்பது தான் நல்லது. எல்லாமே ஓசி. வேலைக்கு போக பணமில்லையா. பஸ் வசதி இலவசம். எங்களுக்கு வருடத்திற்கு 11000 dollar insurance premium- நாங்கள் அழனும். அப்புறம் இதற் செலவுகள். அகதிகளுக்கு எல்லாமே இலவசம் – எங்கள் வரிப் பணத்தில் இருந்து. இன்னும் நிறையவே உள்ளது அதை எல்லாம் சொல்வதற்கு நேரம் இலை தேவை பட்டால் அந்த web link -ஐ கொடுக் கிறேன் . மறுபடியும் கூறுகிறேன் அகதிகளுக்கு நாட்டின் குடிமகன் களை விட இங்கு சலுகைகள் அதிகம் தான்

    ///ஒரு டொலருக்கு யார் என்ன பொருள் வாங்கினாலும் அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றுச்சீட்டில் தெளிவாக இருக்கும்///

    அகதிகளுக்கு கொடுக்கும் பணமே எங்களுடைய வரிப் பணம். அப்புறம் அதில் நீங்கள் வாங்கும் பொருளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் GST அது மாதிரி போகிறது. அது என்று இது என்று? அதற்க்கு என்ன இப்போது? மறு படியும் நாம் பேசுவது அகதிகளைப் பற்றித் தான்.

    சரி. அகதியாக இருந்து அப்புறம் “resident” ஆக மாறி விட்டால்? ஒரு 3000 டாலர் மாதம் சம்பாதிக்கும் குடும்பம் எவ்வளவு வரி கட்டப் போகிறார்கள்? வீட்டில் யாரவது ஒருவர் ஹாஸ்பிட்டலில் ஒரூ வாரம் படுத்தால் 30000 டாலர் bill. இந்த பணம் எங்கிருந்து வரு கிறது? யோசிக்கவும்.

    ///கூலி வேலைக்கு வந்தவன் computer analyst ஆக ஆனால் இவர்களின் வேலைக்கு வேட்டு வராதா///

    ஏன் கூலி வேலை என்றால் இளப்பமா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? நான் படிக்க மாட்டேன் ஆனால் computer analyst , doctor- ஆகணும் என்றால் எப்படி. எனக்கு புரிய வில்லை.இவ்வளவு வசதி செய்து கொடுத்தும் படிக்காதது யார் தப்பு? சரி பள்ளி முடித் திருந்தால், ஒரு semi-tralier driver -ஆகலாமே. இங்கு Electrician, plumber, construction workers -இவர்கள் எல்லாம் வருடத் திற்கு 50000 dollar-கள் வரை சம்பாதிக் கிறார்கள்.

    இது இந்திய அனபர்களுக்கு: அமெரிக்காவின் தொழிலாளிக்கு உள்ள மரியாதை with full benefits, retirement, pension, social security, medical insurance coverage, workers compensation, overtime, double holiday pay, disability insurance payments, free training to a new job, family medical leave for three months without pay but with all other benefits maintained, etc, etc… இந்தியாவில் நினைத்து பார்க்க முடியாது. மேலும் வேலைக்குப் போகும் நமது பெண்கள் மீது எந்த முதலாளியும் இஷ்டம் போல கையை வைக்க முடியாது. வெச்சா ஜெயில் தான். முழு விவரமும் தெரியாமல் இந்தியத் தொழிலாளி யையும் அமெரிக்கா தொழிலாளி யையும் தயவு செய்த ஒப்பிடாதீர்கள்.

    இது மட்டுமா நீங்கள் வேலை செய்தால் உழைத்தால் ஒரு அளவு வருமானம் உள்ளவர்களுக்கு….நீங்கள் வரி கட்டவேண்டாம் அதே சமயம் வேலை செய்தற்காக உங்கள் குடும்பத்திர்க்குய் வருடத்திற்கு அரசு மானியம் கொடுக்ககிறது . எவ்வளவு? உங்களுக்கு மூன்று குழந்தை களுக்கு மேல் இருந்தால் உங்கள் குடுமப்த்திற்கு அதிக பட்சமாக $5,657. வரை மானியம் கிடைக்கும். அனால் வருடத்திர்க்கு $43,279 மேல் சம்பதிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.

    The United States federal Earned Income Tax Credit (EITC or EIC) is a refundable tax credit; it is means tested, and designed to encourage low-income workers and offset the burden of U.S. payroll taxes. For tax year 2009, a claimant with one qualifying child can receive a maximum credit of $3,043. A claimant with two qualifying children can receive a maximum credit of $5,028. The credit is expanded for tax year 2009 and 2010. For claimants with three or more qualifying children, the maximum credit is $5,657. Grandparents, aunts, uncles, and siblings can also claim a child as their qualifying child provided they shared residence with the child for more than six months of the tax year. However, in tie-breaker situations in which more than one filer claims the same child, priority will be given to the parent. A foster child also counts provided the child has been officially placed by an agency or court. There is a much more modest EIC for persons and couples without children that reaches a maximum of $457.[1]

    Reference:

    http://en.wikipedia.org/wiki/Earned_Income_Tax_Credit

    இதற்க்கு மேலும் உன்னொரு tax credit. அதான் The The child tax credit. The child tax credit can reduce the amount that you owe for taxes. If youʼre current tax liability is less than the child tax credit than you may be eligible for the additional child tax credit. அதாவது உங்களுக்கு வரி இல்லை என்றாலும் அரசு உங்களுக்கு பணம் கொடுக்கும் ! உங்கள் குழந்தைகளுக்காக!

    Reference:

    http://hubpages.com/hub/Additional-Child-Tax-Credit-Amount

    இந்த சலுகைக்கு ஏது பணம் . நாங்கள் இதற்கு மேல் சம்பாதிரிப்பதால் நாங்கள் கட்டும் வரிப்பணம் உழைக்கும் தொழிலாளிகளுக்குப் போகிறது. இதில் வருத்தம் இல்லை. ஏன்

    எந்த ஒரு தொழிலாளியும் இல்லாமல் நாங்கள் இல்லை. எவனும் இல்லை—-இந்த விடயம் எல்லா அமெரிக்கன்களுக்கும் கனடியன்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவில் தொழிலாளிக்கு மதிப்பும் கிடையாது மரியாதையும் கிடையாது. பணமும் கிடையாது.

    அமெரிக்காவிற்கு சொன்னது எல்லாம் கண்டவிர்க்கும் பொருந்தும். In the United States, we loving call Canada as our appendix. Not a direct translation but close enough to make fun at Canada…Just a joke. தமிழில் கூறுவது என்றால் கனடா அமெரிக்காவின் வால்!

    அமெரிக்கா கனடா தொழிலாளிகளின் கனவு. அவர்களின் சொர்க்கம்.

    ஆனால் முதலாளிகளுக்கு தான் இந்தியா ஒரு சொர்க்கம்; இந்தியாவில் ஒவ்வொரு முதலாளியும் ஒரு கடவுள்.

    அமெரிக்கா கனடா தொழிலாளிகளுக்கு ஒரு நதி.
    இந்தியா ஒரு சாக்கடை.

    மேலும் அமெரிக்காவில் கனடாவில் வாழ்கையில் முன்னேறுவதற்கு படிப்பு தேவை இல்லை. உழைப்பு முயற்சி மட்டும் போதும் . கடைசியாக சொல்வது பணம் இருந்தாலும் இங்கு நன்றாக வாழலாம். பணம் இல்லை என்றாலும் நன்றாக வாழலாம்.. என்ன எங்களுடைய வரி பணத்தில் வாழ்வார்கள் அவ்வளவு தான். வாழட்டுமே. வாழ்கையில் தோற்றவன் வாழக் கூடாதா. அல்லது அதற்க்கு எங்கள் வரிப்பணம் போகக் கூடாதா. போகும் பொது எல்லாத்தையும் அள்ளிக் கொண்ட போகப் போகிறோம்?

  21. ஆட்டையாம்பட்டி,
    நெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். இது நிச்சயமாக தனிநபர் தாக்குதல் இல்லை. உங்கள் பதில்களில் அகதிகளுக்கான சலுகைகள் என்று நீங்கள் சொன்னதை படித்த போது மனதில் ஏற்பட்ட impression. 
    நான் ஏற்கனவே பதிவில் சொன்னதையெல்லாம் நீங்கள் நான் அதையெல்லாம் சொல்லாதது போல் …..  <<<<>>> 
    What’s all this? This is what I call redundancy. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்த நாட்டை யார் கட்டியெழுப்பினார்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இதையெல்லாம் அவர்கள் என்னவோ அகதிகளுக்காக மட்டுமே கட்டினார்கள் என்று சொல்வது போலுள்ளது. 
    //////இந்த குடும்பத்திற்கு மூன்று “bedroom apartment” சட்டப்படி கொடுக்க வேண்டும். எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். வீட்டுக்கு வாடகை கிடையாது. சாப்பிடுவதற்கு ‘Food Stamps.” கொடுப்பார்கள்.///////நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை இங்கே “Housing” என்று சொல்வார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் லட்சணங்கள். ஒழுங்காக ஓர் light கூட கிடையாது. இந்த “ghetto life” தான் ராஜவாழ்க்கையா? ஏனைய்யா அந்த மக்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்கள். /////எந்த ஊர்லே அகதிகளுக்கு A/c, Heating, Oven, Family size Big Fridge, Carpet எல்லாம் கொடுக்கிறார்கள். ///// பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு. 
    நண்பர்களே, கனடாவில் Housing or Apartments இவற்றில் அடுப்பு மற்றும் குளிர்சாதனப்பெட்டி இருக்கவேண்டும் என்பது விதி. என்னது A/C யா? அடப்பாவமே!! என்ன சொல்ல நான் இதற்கு? 
    இவர் சொல்லும் இந்த வீடுகள் அல்லது மாடிக்குடியிருப்பில் வாழ்பவர்கள் பெரும்பாலும் யார் தெரியுமா? அதிகம் படிக்காத சாதாரண வேலை செய்யும் சிறுபான்மை சமூகத்தினர், கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளோடு வாழும் பெண்கள் இப்படியானவர்கள் தான். இவர்களில் சிலர் மீது எனக்கும் கோபம் உண்டு. முன்னேற வாய்ப்புகள் இருந்தும், கடின உழைப்பை புறம்தள்ளி ஏதோ கிடைத்தை வைத்து வாழ்வோம் என்ற மனோபாவம் தான் எரிச்சலூட்டும் விடயம். இவர்களால் ஏன் வாடகை வீட்டில் குடியிருக்க கூட முடியவில்லை என்று நீங்கள் யோசிக்கவே மாட்டீர்களா? காரணம், அதன் உரிமையாளர்கள் கண்டபடி வாடகையை ஏற்றுவதுதான். இன்னோர் விடயம், அண்மையில்(அமெரிக்க பொருளாதார சுனாமிக்கு முன்) Scarborough என்ற நகருக்கு சென்றபோது கவனித்தேன். Apartment க்கு மூன்று மாதம் வாடகை இல்லை என்று sign போடப்பட்டிருந்தது. ஏனென்று கேட்டால் அந்த சமயத்தில் இங்கே வீடு வாங்குபவர்களுக்கு வங்கிகள் 0% down and 40 years amortization period என்று கடன்கள் கொடுத்தார்கள். ஓரளவு வருமானம் குறைந்தவர்களும் ஓர் சிறிய வீட்டையேனும் வாங்கி குடியேறினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட apartment உரிமையாளர்கள் மூன்று மாதம் இலவசம், வந்து குடியேறுங்கள் என்று தாரள மனம் காட்டினார்கள். ஏன் இப்படி வாடகை குடியிருப்பகளை கட்டி பணம் பார்ப்பவர்களை ஓரளவிற்கேனும் அரசு கட்டுப்படுத்த முடியாதா என்பதை பேசுங்கள், ஆட்டையம்ப்பட்டி!!!!

    <<<<<<<>>>>>
    கனடா எங்களுக்கு புதுவாழ்வு கொடுத்தது என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். இந்த மண்ணை, மக்களை, மனங்களை நாங்களும் நேசிக்கொறோம் ஆட்டையாம்பட்டி ஐயா. நாங்கள் இலங்கையிலிருந்து வந்தாலும் அந்த மண்ணை கூட ஒருபோதும் நீங்கள் தமிழ்நாட்டை சொல்வது போல் “கக்கூஸ்'” என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் கிடையாது. அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத்தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான். அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான். சும்மா நாங்கள் ஏதோ கனடாவை குறை சொல்வதையே முழுநேர தொழிலாக கொண்டவர்கள் என எங்களை நீங்கள் சித்தரிப்பது எரிச்சலூட்டுகிறது. ஏன் சுரேஷ் என்பவர் சொன்ன பதிலை நீங்கள் படிக்கவே இல்லையா? படித்துத்தான் பாருங்களேன். 

    <<<<<<>>>>> நானும் கனடாவில் மற்றவர்கள் கேட்டாலே வாய்பிளந்து வயிறு கலங்கும் அளவிற்கு கடன் வாங்கித்தான் படித்தேன். “நீ ஒரு பொம்பிளை. எப்பிடி இந்த கடனை திருப்பி கொடுப்பாய்” என்று கேட்ட அறிவாளிகள்  எல்லாம் கூட இருக்கிறார்கள். எத்தனையோ வருடப்படிப்பிற்கு எனக்கு  கிடைத்த grant $3000 dollars. அதை தந்தற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே இங்கே அகதிகள் ஏதோ grant இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று? தயவு செய்து எங்கே அல்லது எந்த பல்கலைக்கழகம் என்று சொல்கிறீர்களா? 
    நாங்கள் அகதியானது விதிதான். நாங்களாகத்தான் விரும்பி வந்தோம். உங்களைப்போன்றவர்கள் எங்களை ஒசிக்கிராக்கிகள் என்று கேலி பேசுமளவிற்கு நாங்கள் கனடாவில் தரம் தாழ்ந்து வாழவில்லை ஐயா. கனடா போனால் போகிறது என்று இலவச சலுகைகள் எதையும் வாரி, வாரி வழங்கவில்லை. Yes, we did work hard to be better off. 
    வினவு, மற்றும் வினவு நண்பர்களே ஆட்டையாம்பட்டி இட்டுக்கட்டி, கொண்டு கூட்டி கனடா பற்றி சொல்லும் கதைகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். 

    • Part – I

      Ms. Rathi அவர்களே .

      நீங்கள் நான் சொல்லாததை சொல்லியதாகவும் விவாதத்தை திசை திருப்புவதிலும் கெட்டிக்காரர் என்று தெரிகிறது.எனது விவாதம் கனடா அகதிகளை அனுமதிப்பது மனிதாபமான செயல் மட்டும் தான். கூலிக்கு ஆள் பிடிக்க அல்ல என்று. அதை விட்டு எங்கியோ சென்றுவிட்டீர்கள் . நீங்கள் நான் சொல்லாததை சொல்லியதாகவும் விவாதத்தை திசை திருப்புவதிலும் கெட்டிக்காரர் என்று தெரிகிறது.நமது விவாதம் கனடா அகதிகளை அனுமதிப்பது மனிதாபமான செயல் மட்டும் தான். கூலிக்கு ஆள் பிடிக்க அல்ல.

      ரதி சொன்னது: ////நெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு.அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான///

      ====>.உங்களை யாரும் பதில் சொல்ல கட்டயபடுதவில்லை. இது மாதிரி சினிமா dialogue–உம் தேவை இல்லை. கூலிக்கு ஆள்பிடிக்க கனடா அவ்வளவு பணம் அழ வேண்டியது தேவை இல்லை. அகதிகளுக்கு இலவசமாக குடுக்கும் பணத்திலேயே தேவையான் ஆட்களை பிடிக்க முடியும். வேணுமா அகதிகள் அரசிடமிருந்து வாங்கும் பணம் எவ்வளுவு என்று?

      இதோ….Reference:

      http://www.ncwcnbes.net/documents/researchpublications/ResearchProjects/WelfareIncomes/2008Report_Spring2010/HRSDC_Bulletin_4_v4.pdf

      http://www.canadiansocialresearch.net/welfare.htm

      டொரோண்டோ, Scarborough, Mississauga எல்லாம் Ontario-வில் உள்ளது . ஏன் இந்தப்பணம் பத்த வில்லை என்றால் மீதி Provinces- களுக்கு செல்ல வேண்டியது தானே? இதைப்படித்து விட்டு சொல்லுங்கள். இந்த பணத்தில் வாழ முடியுமா அல்லது முடியாதா? இந்தப்பணத்தில் உதாரணமாக சென்னையில் வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதிப்பவர்களை விட இங்குள்ள அகதிகள் வசதியாகா வாழ முடியும். மேலே உள்ள Welfare Income -ஐ பாருங்கள். இவர்களுக்கு வருமான வரி கிடையாது. குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு இலவசம்.. எல்லோருக்கும் ஒரே மாதிரி பள்ளி. ஆண்டானுக்கும் அடிமைக்கும் இந்தியாவில் தான் வேறு வேறு பள்ளிக் கூடங்கள். Admission donation கிடையாது. இங்கு எல்லோரும் சமம். வருமானம் இல்லாததால் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு. எங்கள் குழந்தைகள் எனக்கு வருமானம் இருப்பதால் மதிய உணவுக்கு கட்டணம செலுத்த வேண்டும். பள்ளி பஸ் வசதி இலவசம். எங்களுக்கும் தான். அவர்களுக்கு இலவச மருத்துவம். எங்களுக்கும் தான். வீடு வாடகை சொப்பமாக இருக்கும். அது ஒரு விழுக்காடு கணக்கு. தட்ப வெட்ப நிலையைப் பொருத்து A/C கொடுக்க வேண்டும் கனடாவில் அதிக பட்சம் மூன்று மாதம் A/C தேவைப்படலாம். ஏன் ஒரு 100 அல்லது 150 டாலர் கொடுத்து A/C வாங்க முடியாதா? அதுவும் அரசாங்கம் கொடுத்த பணத்தில் தானே. அதுவும் உங்களுக்கு GST credit-உம் அரசு கொடுக்கிறது. சரி யார் அதுக்கு மின்சாரம் கொடுப்பது. அதுவும் அரசு “subsidize” பன்னுகிரது. இது மாதிரி ஏராளமான சலுகைகள். உணமையில் கனடாவில் ஏழையாய் இறுப்பதுதான் நல்லது.

      That is what we call as secondary gain and many people refuse to leave the welfare state. This is one of the biggest problems for people like us who write policies for the government.. We look sympathetically at them ONLY for ONE reason that their children (any one under 18) for no fault of theirs should NOT be penalized because of their parents’ choice of life. Unfortunately, many refugees have also jumped into this bandwagon. BTW, I am telling refugees in general; and for my related discussion, I would like to emphasize that Sri Lankan Tamil refugees are not part of this scam. I am emphasizing this here because people are clever in diverting the crux of the argument into a racial war. There is also a huge burden for tax payers especially with regard to building EXTRA infra structure and medical expenses concerning refugees. We know that refugees are NOT, typically, in their good health and in spite of that both American and Canadian governments are sympathetic to refugees in providing the best of treatment NOT available to ordinary tax paying citizens—this later statement refers to the United States citizens who can not afford to buy a medical insurance but we spend huge amounts of money to refugees. This is MORALLY wrong, in my opinion. This humanitarian gesture-ஐ இதை விட கேவலமாக அசிங்கமாக யாராலையும் பேச முடியாது. அதை தமிழனால் மட்டும் தான் பேச முடியும்!

      ரதி சொன்னது: ///அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள்.///

      ====> இதற்க்கு ஒரு வழக்க மான புலம்பல். நான் சொன்னது இப்படி கொடுத்து உங்களை கூலிக்கு ஆள் பிடிக்க தேவை இல்லை என்று தான் சொன்னேன்.. ஒரு மனிதாபமான செயல். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் அதை மாற்றி விட்டு வேறு ஏதோ பாதையில் போகிறீர்கள.

      ரதி சொன்னது: ///அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான்.///

      ====> இவ்வளு பணம் செலவு செய்து எந்த முட்டாளும் கூலிக்கு ஆள் பிடிக்க மாட்டான். எதற்கு நாங்கள் கூலிக்கு ஆள் பிடிக்க வேண்டுமானால் “Middle East Countries” மாதிரி நல்ல திடமான (எந்த வித வியாதியும் இல்லாடத திடமான் 20 வயதிலிருந்து 45 வயது வரை ஆண்களை மட்டும் எங்கள்ளால் கூட்டிக்கொண்டு வரமுடியும். இப்ப… ஊம்… என்றால் இந்தியாவில் இருந்து வர, குழந்தை குட்டிகளை விட்டு வர, லட்சக்க் கணக்கான பேர் இருக்கிறார்கள். அதும் எந்த வித “agent commission” –உம் கொடுக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு Middle East Countries, Malaysia மாதிரி கூலிக்கு ஆள் பிடித்து சம்பளமும் கொடுக்காமல் அடிமை மாதிரி நடத்துவது தான் பிடிக்கும் போல!

      ரதி சொன்னது:///அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத் தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான///

      ====> நான் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.. நானும் mid-80-இல் இங்கு படிக்கத்தான் வந்தேன். எனக்கு தமிழ் நாட்டில் post-graduate படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. என்னை மாதிரி ஆட்களுக்கு படிக்க இடம் கொடுக்க தமிழ் நாடு என்ன அமெரிக்காவா?

      “எனக்கு தமிழ் நாட்டில் படிக்க இடம் கிடைக்காமல் செய்த புண்ணியவானுங்களுக்கு அநேக நமஸ்காரம்! அந்த புண்ணியவானுங்க ஷேமமாக இருக்க வேண்டும்!”

      ஒரு வருடம் வருத்தப்பட்டேன். GRE படித்தேன.பிறகு அமெரிக்காவில் படிக்க இடம் கிடைத்தது. 880 டாலர்கள் “Graduate Assistantship-இல். நாலு வருடம் ஒன்பது மாதம் படிப்பு. அப்டிப்பை முடிக்கும் போது எனது சம்பளம் 1100 டாலர்கள். முழு படிப்பும் எனக்கு ஓசி All fees including out of state and in state tuition (around $30000/year) + fee for recreation with a gym with swimming pool =for me and my family ($250/year). This is for all graduate assistant on Assistantship and fellowship. அப்பொழுது இந்தியாவில் இருந்து பணம் கொண்டு வர முடியாது. முடிந்தாலும் என்னிடம் பணம கிடையாது? இது நான் மட்டுமல்ல. அமெரிக்காவில் மேல் படிப்பு “Doctorate” படித்த இந்தியர்கள் இதர வெளிநாட்டவர்கள் 90% மேல் என்னை மாதிரி தான். எல்லா படிப்பும் ஓசி. ஏன் அமெரிக்கர்கள் எங்களுக்கு படிக்க உதவி செய்யணும். America welcomes immigration provided the immigrant is NOT a public charge.

      இந்தப்பணத்தில் தான் நானும் எனது மனைவியும் வாழ்ந்தோம். குழந்தைகளும் பிறந்தது.குழந்தை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அமெரிக்காவில் subsidized family housing. Immigration status is NOT a requirement for family housing during my times and now this privilege is only for immigrants, citizens, and refugees. குழந்தை பிறந்தவுடன் எனக்கு subsidized family housing கிடைத்தது. Two bedrrom apartment. வாடகை மாதத்திற்க்கு 126 டாலர்கள் மட்டும். குழந்தை பிறந்தால் வாடகை கம்மி. எப்படி? வீட்டிற்கு ஒரு ஆள் புது வரவு. My family status was changed from a family of two to family of three. இந்த வீட்டில் A/c உண்டு! நான் படித்த ஊர் Toronto- மாதிரி climate உள்ள ஊர். அப்போது எங்களுக்கு இந்திய பிரஜை யாக இருந்த தால் மீதி அரசு மானியங்கள், Eraned Income Credit கிடையாது. அகதிகளுக்கு குடிமகன்களுக்கு உள்ள எல்லா சலுகைகளும் உண்டு.

      அகதிகளை விட மிக மிக குறைவாக சம்பாதித்து நாங்கள் வாழ்ந்தோம். உங்களால் வாழ முடியவில்லை என்றால்?

      நான் பெரிய அறிவாளி என்று சொல்லவில்லை. ஏன் எனக்கு தமிழ் நாட்டிலே படிக்க இடம் கிடைக்க வில்லை. அப்புறம் என்ன வெங்காயம். என்னால் என்னை விட ஒரு சம தகுதி வாய்ந்த வெள்ளைக்காரனுக்கு இந்த சலுகை கிடைக்க வில்லை. ஒரே குறை அவனிடம் என்னை விட பணம் இருந்தது. அவன் பணம் கட்டிப் படிக்கட்டும் என்ற அமெரிக்காவின் கொள்கை. என்கிட்டே பணம் இல்லாத தால் எனக்கு எல்லாமே ஓசி. நான் இவ்வாறு அமெரிக்காவை உயர்திப் பேசுவதைத்தான் அம்மணி “அந்நிய மோகத்தில் திளைப்பவர்களுக்கு கனடா சொர்க்கமாகத்தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை தான” என்று கூறுகிறார்கள். ரதி மேடம் அவர்களே இதற்க்கு பெயர் விசுவாசம் அப்புறம் நன்றி என்றும் பெயர் உண்டு.. இது உங்கள் அகராதியில் அந்நிய மோகம என்றால….அப்ப இலங்கையில் இரண்டாம் தர குடிமகளாக இருந்த நீங்களும் இந்த்கியாவில் அடிமை முகாம் என்ற பெயரில் திறந்த வெளி சிறைசாலையில் வைக்கப் பட்ட நிலையிலும் நீங்கள் இந்த இரு கழிசடை நாட்டையும் போற்றுகிரீர்கள் என்றால் உங்களுக்கு இருப்பது அடிமையாய் இருக்கும் மோகம் தான். அதற்கு நான் வருத்தப் படுகிறேன்……

      இது தொடரும்….

      அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

      • இன்னும் கனடாவின் கொள்கைகளை எழுதுங்கள். பகுதி, பகுதியாய் பின்னூட்டம் போடுங்கள். வாழ்த்துக்கள். 

  22. wow அழகாக எழுதி இருக்கின்றீர்கள் …உங்களின் எழுத்து நடை வாசிக்க interest ah iruku and informative too…keep writing good luck

  23. Ms. Rathi அவர்களே .

    .

    ரதி சொன்னது: ///எத்தனையோ வருடப்படிப்பிற்கு எனக்கு கிடைத்த grant $3000 dollars. அதை தந்தற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்கிறீர்களே இங்கே அகதிகள் ஏதோ grant இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று?///

    ====>நான் சொன்னது: Another one regarding education and Affirmative Action: If two students of equal credentials apply for one seat in a college, then the priority is given to the minority student—NOT for a white. If the other student is a refugee (அகதி) he walks away with the seat as well as with extra grant money///

    நீங்கள் எதையும் கூர்ந்து படிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள். எனது விவாதம் வரி கட்டும் குடிமகனுக்கும் அகதிக்கும் என்று வந்தால் அகதிக்கு தான் “grant money”. எங்களுக்கு இல்லை.மேலும் உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி தான் “grant money கிடைக்கும்.

    “நான் சொல்லாததை அகதிகள் ஏதோ Grant Money- இல் மட்டுமே படிக்கிறார்கள் என்று எப்படி நீங்கள் சொல்லலாம் ?” எங்கு சொன்னேன் அகதிகள் Grant Money- இல் மட்டும் தான் படிகிறார்கள் என்று? யார் பொய் சொல்லுகிறார்கள் என்று தமிழ் படிக்கத் தெரிந்தவனுக்கு புரியும். நீங்கள் உங்கள் வசதிக்கு நான் சொன்னதாக அவுத்து விட்டு விட்டு அதுக்கு ஒரு புலம்பல். இது என்ன கூத்து?

    ரதி மேடம் சொன்ன சினிமா “dialogue: அவர்களுக்குத் தான் பொருந்தும் . இதோ அவர்கள் அள்ளி விட்ட dialogue… ///நெஞ்சுபொறுக்குதில்லை நீங்கள் கனடாவின் அகதிகள் பற்றி இட்டுக்கட்டி, கொண்டுகூட்டி கதை சொல்லும் அவலம் கண்டால். நீங்கள் மேல்தட்டு வாழ்க்கை கண்ணோட்டத்தில் அகதிவாழ்வையும் அதற்கு கனடா ஏதோ நாங்கள் சும்மாயிருக்க அள்ளியள்ளி கொடுக்கிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் மறுபடியும், மறுபடியும் இதையெல்லாம் சரியாக அறிந்துகொள்ளாமல் தான் அவிழ்த்துவிட்டுக்கொன்டிருக்கிறீர்கள். பொய் சொல்லவும் புழுகவும் ஒரு அளவே கிடையாதா உங்களுக்கு.///

    ====> மீண்டும் யார் பொய் சொல்லுகிறார்கள் என்று தமிழ் படிக்கத் தெரிந்தவனுக்கு புரியும்.

    இது தொடரும்….

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

  24. ///…His comments have already misled the public and fanned the embers of prejudice….///

    //….Protecting refugees is a legal obligation, not a matter of generosity. Canada, along with 143 other countries, has signed the Convention relating to the Status of Refugees, which prohibits us from sending refugees home to face persecution. Refugee protection is an obligation we have chosen. And the burden is small for us in global comparison: a rich country like Canada ought not complain about 35,000 people in a year when Syria hosts more than a million Iraqi refugees…..//

    http://oppenheimer.mcgill.ca/Tough-on-refugees-policy-reflects

    • /// நான் சொன்னது: I would like to emphasize that Sri Lankan Tamil refugees are not part of this scam.///
      /// ரதி சொன்னது:///…His comments have already misled the public and fanned the embers of prejudice….///

      இது வரை நான் சொல்லாததை நான் சொன்னதாக ங்கள் எழுதிய பொழுது ‘நீங்கள் மேலாக நுனிப்புல் மேய்ந்திறுக்கிறீர்கள்’ என்று நினைத்தேன் . ஆனால் இப்போது புரிகிறது நீங்கள் வேண்டுமென்றே விவாதத்தை திசை திருப்ப அப்படி பேசினீர்கள் என்று. இப்பொழுது கூறுகிறேன் அரசாங்கத்தை ஏமாத்தி யார் பணம் வாங்கினாலும் கனடாவில் அது குற்றம்.

      • Immigration Minister Jason Kenny இவரைப்பற்றி நான் கொடுத்த இணைப்பில் எழுதப்பட்டதை சொன்னால் மற்றவர்கள் ஏன் கோபிக்க வேண்டும் என்று புரியவில்லை. நான் எதையோ சொன்னால் தங்களை தான் அது குறிப்பிடுவதாக நினைத்தால் அது என் பிழையா?

        ஆட்டையாம்பட்டி எதையும் முழுதாக படித்துவிட்டு யார் சொன்னது என்று பின்னூட்டம் போடுங்கள். எடுத்த எடுப்பிலேயே நுனிப்புல் மேய்ந்துவிட்டு என் மீது ஏன் போர் தொடுக்கிறீர்கள்?

        • தெரியும் Jason Kenny சொன்னது என்ன என்று. மற்றும் நீங்கள் எங்கு விவாதத்தை விவாதத்தை எங்கு திசை திருப்ப விருபிகிரீர்கள்
          என்றும். மற்றவர்களை உங்களோடு கூட்டுக்கு வரவழைக்க மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று
          இவ்வாறு எழுதியதால் // //…His comments have already misled the public and fanned the embers of prejudice….//. நீங்கள் Jason Kenny சொன்னது
          என்று குறிப்பிடாமல் எழுதியதால் தான். அதனால்
          நான் மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு எழுதினேன்.

          His Comments—whose comments…
          You ought to have mentioned Jason Kenny ‘s name. you have deliberately
          written like that without mentioning Kenny ‘s name.

          Let the readers judge…

          அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

  25. Part – III

    ///நீ ஒரு பொம்பிளை. எப்பிடி இந்த கடனை திருப்பி கொடுப்பாய்” என்று கேட்ட அறிவாளிகள் எல்லாம் கூட இருக்கிறார்கள்.///

    கனடா அமெரிக்காவை விட மனிதாபமான் விடயத்தில் மேல். அமெரிக்காவின் கடன் வசதியைப் பற்றி என்னுடைய “references” நீங்கள் சொல்லும் அறிவாளிகளை இங்கு வந்து பார்க்க சொல்லுங்கள். கடனை திருப்பிக் கொடுக்க வேலை இல்லையா? பணம் இல்லையா? உங்கள் வட்டியை அரசாங்கமே கட்டும். கீழே சொன்ன வகைகளுக்கு. பணம் காட்டுவதை தள்ளி போட கீழே உள்ள” A complete listing of deferments available

    All deferment forms are available for download on this Web site. There are requirements for qualifying for each deferment. Be sure to read the eligibility requirements before you download a forACTION Program

    Armed Forces

    Economic Hardship

    Graduate Fellowship Program

    In-School (at least half-time)

    Internship/Residency

    Military

    National Oceanic and Atmospheric Administration (NOAA)

    Parental Leave

    Peace Corps

    PLUS – In-School (disbursed on or after 07/01/2008)

    PLUS – In-School (FFEL disbursed before 07/01/1993)

    PLUS – Rehabilitation

    Public Health Service

    Rehabilitation Training Program

    Tax Exempt Organization

    Teacher Shortage Area

    Temporary Total DisabilityUnemployment

    Working Mother///

    ஏகப்பட்ட Deferments உண்டு. பணம் இல்லையா? வேலை இல்லையா ? உங்கள் வட்டியை அரசாங்கமே கட்டும். மேலே சொன்ன வகைகளுக்கு. அப்புறம் forbearance (வட்டி மட்டும் நீங்கள் கட்டவேண்டும்; வட்டி கட்ட பணம் இல்லையென்றால் உங்கள் முதலுடன் கூடும். ).

    Death or Permanent disability— கடன் முழு தள்ளு படி. மனைவி மற்றும் குழந்தைகள் கடனை திருப்பத்தேவை இல்லை. பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னாலும் ஜெயிலில் போட முடியாது.!இது அமெரிக்காவில். கனடாவில் இதை விட சலுகைகள் அதிகமாக இருக்கலாம்.

    கடன் வாங்கி படிப்பது ஒரு சுமையே அல்ல! உடனே நான் கடன் வாங்க வில்லை என்பீர்கள். நான் அப்போது இந்தியக் குடிமகன். எனக்கு கடன் வசதி கிடையாது. தேவையும் இல்லை. ஆனால் எனது மகன் மகள் கடன் வாங்கித்தான் படிக்கிறார்கள். மேற்ப் படிப்புக்கு அவர்கள் முயற்சி செய்தால் “Graduate Assistantship or Fellowship” வாங்கி முழுவதும் ஓசியில் படிக்கலாம்.

    ///தயவு செய்து எங்கே அல்லது எந்த பல்கலைக்கழகம் என்று சொல்கிறீர்களா?//

    ===> எல்லா பல்கலை கழக த்திலும் உண்டு. Please go to their web site and do some research before writing like this. How can one write like this in this internet age when the information is at finger tips in a matter of seconds..

    அமெரிக்காவில் கடன் வாங்கிப் படிப்பது ஒரு சுமை என்றால் அதை விட ஒரு பொய்யை எந்த அண்டப் புளுகனாலும் -யாராலும்–சொல்ல முடியாது. இப்பொழுது Income Based Repayment Plan: (IBR) வந்துள்ளது. அது கனடாவில் இல்லை என்றால் இனி வரும். அது என்ன என்று பாருங்கள்.

    From Income Based Repayment Plan:

    The IBR monthly payment amount is based on your annual Adjusted Gross Income (AGI) and family

    size. Specifically, the maximum annual amount you are required to repay under IBR during any period

    when you have a “partial financial hardship” (as discussed in Q&A #4 above) is 15 percent of the

    difference between your AGI and 150 percent of the U.S. Department of Health and Human Services’

    (HHS) Poverty Guideline amount for your family size. This annual repayment amount is then divided by

    12 to determine your monthly IBR repayment amount.

    For example, 150 percent of the 2009 HHS poverty guideline amount for a family of three is $27,465. If

    your AGI was $40,000, the difference would be $12,535. Fifteen percent of that is $1,880; dividing this amount by 12 results in a monthly IBR payment amount of $157. If the calculated IBR payment amount using this formula is less than $5.00, the monthly payment amount is zero. If the calculated payment is more than $5.00 but less than $10.00, the monthly payment is $10.00. [January 5, 2010]

    References:

    http://studentaid.ed.gov/students/attachments/siteresources/IBRQ&A_template_123109_FINAL.pdf

    Ref: http://studentaid.ed.gov/students/attachments/siteresources/PSLF_QAs_final_02%2012%2010.pdf

    உங்களுக்கு மேலே கூறியுள்ளபடிவருமானம் $27,465″ இருந்தால் அது poverty guideline amount for a family of three. அதனால் ஒரு பைசா கோடா பணம் கட்ட வேண்டாம். இது மாதிரி ஏழ்மை நிலையில் 25 வருடம் இருந்தால். எல்லா கடனும் தள்ளு படி. இது மாதிரி பத்து வரும் Government -க்கு வேலை செய்ததால் பத்து வ்ருடத்திர்ர்க் அப்புறம் எல்லா கடனும் தள்ளு படி.

    எத்தனை கஷ்டம் வந்தாலும் ஒரு 40000 டாலர் சம்பாதிக்கும் ஒருவனால் மாதம் 157. டாலர்கள் கட்ட முடியும். அப்படி கட்ட வில்லையென்றால் அவன் ஒரு மனிதனே அல்ல. எத்தனை கோடி கடன் இருந்தாலும் நீங்கள் கட்ட வேண்டிய பணம் உங்கள் வருமானத்தியும் குடும்பத்தையும் (family size) தான் கொண்டது. கடன் அளவைக் கொண்டது அல்ல.

    கனடா அமெரிக்காவை விட நல்ல நாடு. அங்கு இதை விட இன்னும் சலுகைகள் இருக்கலாம்..நீங்கள் உண்மையை மறைத்து எழுதியுள்ள ஒவ்வொரு விடயத்தையும் என்னால் Refernces காட்டி நிரூபிக்க முடியும்.

    ஏன் நமக்கு இவ்வளவு நல்லது செய்யும் நாட்டிற்க்கு எதிராகா இப்படி அளக்க வேண்டும். உண்மையை சொன்னால் என்ன.?

    இது தொடரும்….

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

  26. Part – IV

    Ms. Rathi அவர்களே!

    ///நண்பர்களே. வினவு, மற்றும் வினவு நண்பர்களே ஆட்டையாம்பட்டி இட்டுக்கட்டி, கொண்டு கூட்டி கனடா பற்றி சொல்லும் கதைகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்///

    ——உங்களால் பதில் சொல்ல முடியாது. சும்ம்மா எதை வேணா பொய்யாக எழுதுவது என்று இருக்கக் கூடாது.

    ////இதையெல்லாம் மொத்தமாக யோசித்தால் இனிமேல் கனடாவுக்கு யாராவது மில்லியன் டொலர் முதலீட்டோடு வரவேண்டும். அல்லது, குறைந்தபட்ச கூலிவேலைக்கு ஏதாவதொரு ஐ. நாவின் அகதி முகாமிலிருந்து வரவேண்டும்.///

    ///அடுத்தவன் கூலிக்காக கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஒத்துக்கொள்ளவோ போவதில்லைதான்.///

    —–இதுவும் நீங்கள் சொன்னது தான். கூலிக்காக ஆள் பிடிக்க வேண்டுமானால் எதற்கு இந்த கெடு பிடி. ஏன் என்றால் அகதி என்ற போர்வையில் வருபவ்ரகளைத் தடுக்க தான் இந்த கெடு பிடி. நீங்களே மாத்தி மாத்தி பேசுகிறீர்கள்.

    அப்படி ஏன் மில்லியன் டாலர் முதல்ளேடு செய்து இங்கு வர வேண்டும. ஏன். Immigration Reforms—Merit based immigration எல்லாம்? கூலிக்கு ஆள் தேவை இல்லை. அப்படி வேணுமென்றால் எங்களால் சீனா இண்டியா என்று கொண்டார முடியும். எங்கள்ளுக்கு வேண்டியது “High-Skilled” professionals. Low skilled workers or No-skilled workers தேவை இல்லை. தேவை இலவே இல்லை. Low -Skilled immigration workers- ஆல் எங்களுக்கு தொல்லை தான் அதிகம்.வரி சுமை அதிகம். இந்த Low -Skilled i வேலையை செய்ய எங்களது குடிமகன்களே இருக்கிறார்கள்

    Low Skilled Immigrant workers-ஆல் எங்களது வரி சுமை அதிகமாகிறது. எப்படி? இவர்கள் எங்கள் நாட்டின் குடிமகன்களுடைய “low -skilled” jobs-ஐ எடுத்துக் கிறார்கள். . இவர்களால் அவர்கள் welfare or social assistance-க்கு வந்து விடுகிறார்கள் ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் அறிவாளி அல்ல.இங்கேயும் low-skilled workers இருக்கிறார்கள்.

    மேலும் இதில் ஊழலும் கூட. எப்படி. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாத்திதால் social assistance -ஐ விட்டு வெளியேறனும். So they keep the income below the threshold level. I can openly say this is happening and happened in the United States and Canada. How? they keep their income below the threshold level (required for social assistance) and work for money under the table. இதனால் முதலாளிக்கும் லாபம். வேலை செய்பவனுக்கும் லாபம். மணிக்கு பத்து டாலர் கொடுக்க வேண்டிய இடத்தில் 6 dollar வாங்கிக்க்கொள்வான். முதலாளிக்கு ஒவ்வொரு தொழிலாளி சம்பாதிக்கும் பணத்திற்கு social security tax கட்ட வேண்டும். domestic help -ஆக இருந்தாலும் அரசுக்கு வரி கட்ட வேண்டும். அமெரிக்காவில் ஒரு டாக்டர் குடும்பம் ஐந்து வருடம் Domestic help- க்கு Social security tax கட்ட வில்லை . இப்பொழுது இருவருக்கும் நாலு வருடம் ஜெயில். கோர்ட்டில் பொய் சொன்ன்திர்க்காக மேலும் இரண்டு வருடம். கலிபோர்னியாவில் ஒரு சைவ தென் இந்திய ஹோட்டல் நடனத்தின சகோதர் களுக்கு 14 வருடம் ஜெயில். இது மாதிர் ஏராளம்.

    அதே மாதிரி தொழிலாளிக்கும social security tax and other taxes உண்டு. வருமான் வரி ஏறும் . social assistance-இல் வெளியே வந்து விட வேண்டும். கணவன் மனைவி இருவரும் இது மாதிரி (4 hrs+4 hrs X 6 டாலர்கள்) 8 மணி நேரம் ஒரு நாள் வேலை செய்தால் மாதம் குறைந்த பட்சம ஆயிரம் டாலர்கள் கறுப்புப் பணம். பத்து டாலர்கள் மணிக்கு வாங்க வேண்டிய இடத்தில் 6 டாலர்கள் வாங்கிக்கொண்டு. Double வேலை செய்தால் 2000 டாலர் கறுப்புப் பணம். கறுப்புப் பணத்திற்கு கறுப்புப் பணம். கூட social assistance-பணம். இதுவே வாழ்க்கை.

    இது அங்காடித்தெரு மாதிரி. முதலாளியும் தொழிலாளியும் ஒரே மொழி ஒரே இனமாக மட்டும் இருந்தால் சாத்தியம். ஒரே ஜாதியாக இருந்தால் இன்னும் விசேஷம். இதனால் அரசுக்கு இரண்டு பக்கம் இருந்து வரி வருமானம் தடுக்கப் படுகிறது. மேலும் தகுதி இல்லாதவர்களுக்கு ( over the income limits) social assistance or welfare பணம்.

    எல்லா முதலாளியும் தொழிலாளியை சுரண்டுவதில் ஒன்று தான். மேலும் முதலாளிக்கு அரசுக்கு கட்ட வேண்டிய social security and other taxes— கட்டாமல் ஏமாற்றலாம்..இதனால் தான் Merit based Immigration Reforms and One million dollar investment to live in Canada as a landed immigrant.

    இத்தனை கெடுபிடியையும் கொண்டு வந்ததது Workers Union and democrats.

    எனவே உங்கள் கோபத்தை இந்த Canadian Low-Skilled workers– இடம் காட்டுங்கள்.

    இதனால் மறு படியும் நான் சொல்வது அகதிகளை கூடிக்கொண்டு வந்தது கூலிக்க் ஆள் பிடிக்க அல்ல. ஒரு மனிதாபமான செயல். கூலிக்க் ஆள் பிடிக்க கூடிக்கொண்டு வந்தது என்று ரதி கூறியது வடிகட்டிய பொய்.

  27. Ms. ரதி அவர்களே!!

    நீங்கள் சொன்னது: ///நீங்கள் சொல்வதை இங்கே “Housing” என்று சொல்வார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அதன் லட்சணங்கள். ஒழுங்காக ஓர் light கூட கிடையாது. இந்த “ghetto life” தான் ராஜவாழ்க்கையா? ஏனைய்யா அந்த மக்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்கள். ///

    ====> இதை ராஜ வாழ்க்கை என்று சொன்னேனா? ஏன் அளக்கிறீர்கள்?? நான் சொல்லாததை எப்படி நீங்கள் நான் சொன்னதாக சொல்லி அதற்க்கு ஒரு புலம்பல்? மேலும் ரதி மேடம் அவர்களே நீங்கள் எழதிய பழைய பதிவுகளில் எதிலும் இலங்கையையிலும் தமிழ் நாட்டிலயும் பாலும் தேனும் ஓடுகிற பூமி என்று எழுதியதாகத் தெரியவில்லை.

    இந்தியாவில் வசிக்கும் 100 கோடி மக்கள்களில் 76% வறுமை நிலைக்கு கீழே இருக்கிறார்கள். இவர்களுக்கு Running Water Toilet கிடையாது. அவர்களுக்கு எல்லாம் மந்தை தான். மந்தை என்றால் என்ன என்று தெரியாத வாசகர்களுக்கு……….

    எப்படி தமிழ் நாட்டில் அகதிகள் முகாம் திறந்த வெளி சிறைச்சாலையோ அது மாதிரி எங்களுக்கு (நான் இந்தியாவில் வாழ்ந்த போது) மற்றும் எனது சகோதர சகோதரிகளுக்கு மந்தை என்பது திறந்த வெளி கக்கூஸ்.

    மீதி உள்ள 20 கோடி மக்கள் நடுத்தரம், உயர் நடுத்தர வாழ்கை வாழ்கிரார்கள் . 4 கோடி மக்கள் பணக்காரர்கள். ஆக மொத்தம் இந்தியாவில் வாழும் 96 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை விட இங்கு வாழும் அகதிகள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் மிக மிக அதிகம். ஒப்பிட முடியவே முடியாது. மேலும் இங்கு அவர்களை எல்லோரும் (அரசும் கூட!) மனிதனாக மதிக்கிறார்கள் அது தான் மிக மிக முக்கியம். இங்கு மனித உரிமைகளுக்கும் மனித உயிருக்கும் விலையே இல்லை. அந்த விலையில்லா மதிப்பு மனிதனுக்கு உலகத்தில் எங்கும் கிடையாது. இங்கு ஆண்டானும் அடிமையும் கிடையாது.

    ///ஒழுங்காக ஒரு light- கூட கிடையாது///

    ===> இது பொய். ஒழுங்காக ஒரு light கூட இல்லாவிட்டால் ஏன் அந்த Land Lord- இடம் ஏன் Complaint செய்யவில்லை. ஏன் இந்த Welfare Fraud—ஐ Report செய்யவில்லை. உங்களுக்கு ஒன்றும் அந்த Land Lord–தானமாக கொடுக்கவில்லை. அந்த Land-Lord-க்கு Market Rate வாடகை அரசு கொடுத்து இருக்கிறது. Tax-deduction- உம் கொடுக்கிறது. Property tax அவர்களுக்கு கம்மி. உங்களுக்கு அவர்கள் Market Rate–வாடகை வீடு மாதிரி எல்லா வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். கொஞ்சம் சுமாராக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி மோசமாக அரசு மானியம் பெரும் “Family housing” இருக்க முடியாது. There is auditing and twice the year inspection, etc…and the owners won’t let their property go into shambles…

    Ghetto life—Ghetto உருவாக்குவது அரசாங்கம் அல்ல. நீங்கள் மக்கள் தான் அதற்கு காரணம். Ghetto life– வாழ்வது ஏன் என்றும் அதன் அனுகூலங்கள் என்ன என்ன என்று அடுத்த பதிவில். Ghetto-உக்கு நாங்கள் அமெரிக்கா கனடா அரசாங்கங்கள் எதிரிகள். ஏன் Ghetto -வின் எதிரி என்று பற்றி தனி பதிவு போடுகிறேன். அகதிகள் “Resident” மாதிரி. நீங்கள் அரசிடம் வாடகை voucher வாங்கி apartment that allows vouchers -இல் வசித்து இருக்கலாமே? Ghetto- வை தேர்வு செய்தது நீங்கள் . அதற்கு அரசு என்ன செய்யும். நீங்கள் எங்கு வசிக்க வேண்டியது என்பதை நீங்கள் தான் முடி வெடுக்க வேண்டும். அது உங்கள் உரிமை .

    நீங்கள் சொன்னமாதிரி வீடுகள் மோசமாக இருந்தால்… நீங்கள் Anonymous – ஆக கூட Complaint – செய்யலாம். இதோ அந்த address:

    http://www.mcss.gov.on.ca/en/mcss/programs/social/fraud.aspx

    செய்வீர்களா ரதி மேடம் அவர்களே?

    Who to contact if you suspect fraud: If you suspect fraud that is enough. You don’t need to prove that. Govt will investigate. Your name will be kept confidential.

    எங்களுக்கு Welfare- Fraud– ஐ ஒழிக்க உதவி செய்யுங்கள். அரசு கொடுக்கும் எல்லா பணமும் ஏழை குடிமகன்கள் அகதிகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும். நடுவில் முதலாளி சுரண்டுவதற்கு துணை போகாதீர்கள்.

    ——————————————–

    இது வினவுக்கு:

    உங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று தான் நான் இவ்வளவு ஆதாரத்தோடு எழுதினேன். இங்கு வாழும் பெருவாரியான மக்களும் இந்தியா சென்றவுடன் ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது மாதிரி அளப்பார்கள். இங்கு opportunities எல்லோருக்கும் சம அளவில் கிடைக்கும். இந்தியாவில் opportunities எல்லோருக்கும் கிடைக்காது. அது தான் வித்தியாசம்.இங்கு படிப்பது வாழ்வது எல்லாம் மிக மிக சுலபம். அதற்க்கு தேவையானது: உழைப்பு மற்றும் முயற்சி —அவ்வளவு தான். எல்லோருக்கும் Equal Opportunities.

    ஒரு அகதி குடும்பம் மற்றும் ஏழை குடிமகன் குடும்பத்திற்கு welfare assistance -இல் வருடத்திற்கு 20000 dollars to 50000 dollars வரை வருமானம். இது மாகாணத்திற்கு மாகாணம் வேறு படும். கீழே கூறிய ஆதாரத்தைப் பாருங்கள்.

    Reference:

    http://www.ncwcnbes.net/documents/researchpublications/ResearchProjects/WelfareIncomes/2008Report_Spring2010/HRSDC_Bulletin_4_v4.pdf

    B R I D G I N G F R O M W E L F A R E T O P A I D E M P L O Y M E N T

    The adults in the couple with two children are, like other family types, able to earn income while on welfare. The value of those earnings—the amount you can keep—varies across the country.

    மேலும் அவர்கள் சம்பாதித்து கொண்டே (documented earnings) இந்த welfare assistance-ஐயும் (able to earn income while on welfare ) வைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு அவர்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும். Welfare- ஐ விட்டு வெளியேற வேண்டும். ஆனால் நிறைய பேர் ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் “மட்டும்” வேலை செய்து கொண்டு (5 days a week=20 hours a week) under the table- –கறுப்புப் பணத்தில் வாழுகிறார்கள். இது வரி கட்டும் குடிமகன்களுக்கு பெரும் சுமையாய் இருக்கிறது. வெறுப்பை உண்டாக்குகிறது. அதனால் தான் இத்தனை கெடுபிடி.

    மேலும் அமெரிக்காவில் எங்களுக்கு Illegal Immigrants தொல்லை. அவர்கள் குழந்தைகள் படிப்பதை தடை செய்ய முடியாது. அதே மாதிரி அவர்கள் Medical insurance இல்லாததால் ஹாஸ்பிடலில் உள்ள Emergency Care செல்கிறார்கள். ஹாஸ்பிடலில் யாருக்கும் வைத்தியம் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பில் வரும் ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் பணம் கட்ட வில்லை என்றால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பாதி கூலிக்கு வேலை செய்து குடி மகன்கள் வேலையை எடுத்து கொள்கிறார்கள். குடி மகன்கள் Welfare Assistance–க்கு செல்கிறார்கள். இது மாதிரி ஏராளமான செலவுகள். எல்லாம் எங்கள் தலையில். இவர்களால் பத்து வருடத்திற்கு முன்னால் 5000 dollars insurance premium கட்டிய நான் இப்போது 11000 dollars insurance Premium கட்டுகிறேன். அவர்களுக்கு Write-Off செய்யும் பணம் எங்கள் தலையில். அதே மாதிரி தான் அகதி என்ற போர்வையில் கனடா நாட்டிற்க்கு நிறைய பேர் வருகிறார்கள். அதைத் தடுக்கத் தான் இவ்வளுவு கெடு பிடி. இது மாதிரி இங்கு வரும் இவர்களைத் தடுப்பது சரியாய் தவறா? சொல்லுங்கள் வினவு?

    அமெரிக்காவின் கனடாவின் வெளிஉறவு கொள்கை களில் உங்களுக்கு கோபம் இருக்கலாம். அது நியாமாக கூட இருக்கலாம். அதற்காக இங்கு அரசு செய்யும் எல்லா மனிதாபமான உதவியையும் உள் நோக்கத்தோடு கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலை என்று கூற வேண்டாம். தயவு செய்து கூற வேண்டாம். கூலிக்கு ஆள் பிடிக்க்க எந்த முட்டாளும் இவ்வளவு கெடு பிடி செய்ய மாட்டான்.

    .அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

    _____________
    பின் குறிப்பு: இந்த “கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை” பதிவை மறுபடியும் தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் வெளியிட்டால் மற்ற மக்களின் கருத்துக்களையும் நீங்கள் மேலும் அறியமுடியும். செய்வ்வேர்களா? எல்லா உண்மையும் வெளியில் வர வேண்டும்….

  28. அம்பி, pls understand onething. I wont say Canada is the best. but for eelam tamils it is like heaven. we were rescpected like dogs in sri lanka and india, but compared to that canada is several times better. every eelam tamil will anyhow greatful to canada. economically and morally. 95% of the eelm ppl are somehow connected to Canada. We are always greatful to canada. even it is good or bad. without canada I cant imagine eelam tamils. we came here to save our life.
    other than that: noone including u and every canadian or usa never shout for their tax money but they never care a bit how much of their tax money is spent on killing innocent people in iraq.

  29. Dear Venkattan,

    I trust that you have NOT read my comments in depth…My main counter to Rathi and others was that Canada did NOT offer asylums to refugees to make them work for cheap labor. There is no iota of truth in that statement. This is ridiculous and felt it is mean to criticize the genuine humanitarian efforts of Canada. One should not write for the sake of writing.

    /// I wont say Canada is the best. but for eelam tamils it is like heaven.///
    Yes, I respect your views. At the same time, for me, USA is the BEST country as in India I was treated as a second-class citizen. And my view of India is based on my personal and life experiences. India is ONLY for people with power, money, and connections. This sums up all.

    ///other than that: noone including u and every Canadian or usa never shout for their tax money but they never care a bit how much of their tax money is spent on killing innocent people in iraq///
    This is beyond the purview of our subject. I would consider this as side-tracking issue totally unrelated to the main subject. Our argument is NOT as how USA spends its tax money.Period.

    In fact I have mentioned to Vinavu that the readers in this forum may be against USA’s foreign policy but that should not deter the readers from judging what it does for its citizens. When it comes to its citizens USA is ONE of the best in the world. I believe Canada should be on the same lines or may be better than USA. But certainly better than India.

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி.

    • அம்பி உண்மைலேயே ஆச்சர்யம் அடைகிறேன் அந்நாட்டு சட்டங்கள் குடிமக்களை எந்த அளவு தாங்குகின்றன அனால் இந்தியாவில் சனாதன சூழ்ச்சியில் பல ஆயிரம் ஆண்டுகள் நசுங்கிய மக்கள் சமூகத்தில் தங்கள் எண்ணிக்கை அளவுக்கு கல்வி வேலை மற்றும் அரசியலில் பிரதிபலிப்பது reservation அல்லாமல் எங்கனம் சாத்யம்? பிரிவை விதைத்தது சாதி அந்த முள்ளால் தான் அதை அகற்ற முடியும்.அங்கு ஒருவனை அறைந்தாலே 5 ஆண்டு சிறை உண்டு அனால் இந்தியாவில் அந்த சட்டம் வர வாய்ப்பில்லை யோசித்தால் விடை புரியும்.

Leave a Reply to ஆட்டையாம்பட்டி அம்பி. பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க