privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்எடியூரப்பா - தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!

எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!

-

எடியூரப்பா
எப்படியாச்சும் இந்த தடவயும் காப்பாத்திடுங்க பார்ட்னர்

எடியூரப்பா முதலமைச்சரான போது தமிழக ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் எல்லாம் என்னமா மகிழ்ந்தார்கள்? தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசு, முதல் இந்துமத ஆதரவு முதலமைச்சர், முதல் இந்து ராஷ்ட்டிரம், இவரும் மோடியைப் போலவே இருந்துவிட்டால் எவ்வளவு அருமையா இருக்கும் என புராணம் பாடி தள்ளினார்கள். எல்லாம் பேஷாக ஷேமமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் சுரங்க மாஃபியாக்கள்தான் சட்ட மன்றத் தேர்தலுக்கு செலவு செய்து தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசுக்கு ஸ்பான்சர் செய்தார்கள். அத்தகைய குபேரன்களை நம்ம எடியூரப்பா லேசாக முறைக்க அவர்கள் அண்ணனையே மாற்றுவதற்கு முயல பின்னர் கண்ணீர் விட்டு ஏதோ காலில் விழுந்து இந்த பா.ஜ.கவின் முதல் தென்னிந்திய முதல்வர் கரையேறினார்.

பிறகு பிளவு வெடித்தது. காரணம் பொறுக்கித் தின்பதில் ஏற்பட்ட போட்டிதான். இதில் அமைச்சர்களும் அமைச்சர்கள் ஆக முடியாதவர்களும் அடக்கம். இந்த நேரம் பார்த்து குமாராசாமி என்ற தேவகவுடா எனும் கொட்டை தின்னு பழம் போட்ட பெருச்சாளியின் சீமந்த புத்திரர் தோதாக உள்ளே நுழைந்து கூடாரத்தை ஒரு கலக்கு கலக்கினார். இருந்தும் ரெட்டி பிரதர்சின் சீரிய கவனிப்பிலும், ஏகப்பட்ட அரசியல் சாசன குழப்பங்களுடனும் எம்.எல்.ஏக்களை நீக்கி தற்காலிகமாக மூச்சு விட்டார் நம்ம தென்னிந்தியாவின் முதல் இந்துத்வ முதலமைச்சர். அது போக தென்னிந்தியா முழுக்க கோவில்களுக்கு சென்று ஏகப்பட்ட ஜோசியர்களை பார்த்து பரிகாரம் செய்து அப்படி இப்படி செட்டிலாகிற நேரம்…. பிடித்தது அடுத்த சனி.

பொறுக்கித் தின்னும் பன்றிகள் எத்தனை நாளுக்குத்தான் ஒற்றுமையாக வாழும்? அந்தப் படிக்கு சில எடியூரப்பாவின் நில ஊழலை எடுத்துக் கொடுக்க குமாரசாமி அதை வாகாகப் பிடித்து காவிக்கட்சி முதல்வரின் டவுசரை கழற்றினார். குடும்ப உறுப்பினர்களுக்கு பாரத மாதாவின் பூமித்தாயின் சில பல ஏக்கர் நிலங்களை ஒதுக்கி அண்ணன் அடித்தது 5000 கோடி என்று ரேட் எகிறிக் கொண்டே இருக்கிறது. இன்னும் முடிந்த பாடில்லை. இதை பார்த்து ஆடிப்போன எடியூரப்பா எல்லாம் குமராசாமி செஞ்ச பில்லி சூன்யம் என்று ஒப்பாரி வைத்தார். ஒரு முதல்வர் அதுவும் முதல்ல வந்த முதல்வர் இப்படி மூடநம்பிக்கை ஐயிட்டங்களை வைத்து அழுது புரள்கிறாரே என்று யாருக்கும் கூச்சமோ நாச்சமோ வரவில்லை. சரி, விட்டுத் தொலைப்போம்.

இந்த நேரம் பார்த்து ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு என்ற கோஷத்தை வைத்து சவுண்ட் விட்டுக் கொண்டிருந்த பா.ஜ.கவை ஆஃப் செய்ய நினைத்த காங்கிரசு இதை பிடித்துக் கொண்டது. கோஷம் எழுப்பிய படி தாண்டாத கற்புக்கரசர்கள் போல சீன் போட்டு வந்த காவிக் கட்சியினரின் ஒழுகத்துக்கு வந்தது சோதனை. உடனே அவர்களும் எடியூரப்பாவை விசாரித்தார்கள், பேசினார்கள், கிசுகிசுத்தார்கள்…..

எடியூரப்பாவும் தான் சட்டப்படிதான் நடந்து கொண்டதாகவும் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் ஏற்று நடக்கக் கூடிய தொண்டன் என்றெல்லாம் ஒப்பாரி வைத்தார். இந்த உபநிடதத்தில் நல்லா பூந்து பாத்தீங்கன்னா சட்டப்படி தான் தவறு செய்யவில்லை என்றுதான் அவர் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதாவது தனது குடும்பத்தினருக்கு சட்டப்படியே நிலத்தை ஒதுக்கி சம்பாதித்திருப்பாக அவர் கூறுகிறார். ஸ்பெக்ட்ரம் கூட சட்டப்படி செய்யப்பட்டதுதான் என்று மந்திரி ராசாவிலிருந்து பதிவுலக உடன்பிறப்புகள் வரை கூறுகிறார்களே.. அதான் இது.

எல்லாவற்றுக்கும் மேல் ரெட்டி சகோதரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியமானது. அந்த படிக்கு அந்த பிரதர்சுக்கு ஏகப்பட்ட வேலைகளை எடியூரப்பா என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செய்து வருகிறார். அதனால்தான் மேலிடமும் அதை புரிந்து கொள்ளும் என்பது அவரது நம்பிக்கை. இதற்குமேல் மேலிடத்தில் கூட காசு வாங்கிய அகில இந்தியத் தலைவர் பங்காரு இப்போது மீண்டும் வரவில்லையா என்ன? எல்லாம் காவி அரசியலில் சகஜம்தானே! சாயம் போனால் மறுபடியும் காவியில முக்கினால் போச்சு!

இடையில் அவரது குடும்பத்தாருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அரசிடமே ஒப்படைத்து விட்டதாகவெல்லாம் சீன் போட்டார்கள். அந்த சீனின் உண்மையை இப்போது சி.என்.என்-ஐ.பி.என் ஆங்கிலத் செய்தி தொலைக்காட்சி ஆதாரங்களுடன் போட்டுடைத்திருக்கிறது. அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்து மத மேன்மை பேசும் முதல்வரின் புத்திரன் விஜயேந்திராவும், மருமகன் சோகன் குமாரும் நேற்று சூடாக ஒரு நிலப்பரிமாற்றத்தை நடத்தியிருக்கிறார்கள். அது என்ன?

2006ஆம் ஆண்டு குமாரசாமி முதல்வராக இருந்தபோது இந்த எடியூரப்பா தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க துணை முதல்வராக இருந்த போது மேற்கண்ட இருவருக்கும், அதாங்க எடியூரப்பாவின் மகன், மருகமகன்  இருவருக்கும் ஆளுக்கொரு பிளாட் கிடைத்தது. பெங்களூர் வளர்ச்சி நிறுவனம் எனும் அரசு நிறுவனத்துக்குரிய அந்த நிலங்களை தலா இருபது இலட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். இந்த சுருட்டல் சட்டவிரோதமாக நடந்தது. அதாவது நிலம் வாங்கியதற்கு உரிய பட்டாவோ, சான்றோ இல்லை என்பதுதான் முக்கியம்.

பின்னர் அண்ணன் 2008இல் முதல்வராக வந்த போது அந்த திருட்டு சுருட்டலுக்கு பட்டா வாங்கிக் கொண்டார்கள். காவி முதல்வரின் பதவி இவ்வளவு ஆனபிறகும் தேவையா என்று அந்தரத்தில் ஆடும் அவல நிலையில், அடுத்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் கட்சி இமேஜ் அடிவாங்கும் என்ற சோகத்தில் சோதனை மேல் சோதனையாக இந்த ஊழல் இப்போது மீடியா மூலம் நாறத் துவங்கியிருக்கிறது.

அதன்படி 2006இல் தலா இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்ட இரண்டு பிளாட்டுகள் நேற்று ஒரு சுரங்க கம்பெனிக்கு 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. மகனுக்கு 20 கோடி, மருமகனுக்கு 20 கோடி. இத்தனை நடந்த பிறகும் இந்த கசுமாலங்கள் அய்யா டெல்லியில் விளக்கம் அளிக்க சென்ற நேரத்தில் கூட தயக்கமில்லாமல், பயமில்லாமல் இப்படி பிளாக்ல வாங்குன நிலத்தை அப்பட்டமாக ஒயிட்டில் விற்றிருக்கிறார்கள்.

சரி, இனி என்ன நடக்கும்? இத்தனைக்கும் பிறகு அம்மண முதல்வர் காவியில லங்கோடு கட்டியிருக்கிறார் என்று ஏமாற்ற முடியாதே? சொல்ல முடியாது, அப்படி ஏமாற்றவும் செய்யலாம், பொறுத்துப் பார்ப்போம். நாம் சொல்ல வருவது, அந்த புகழ்பெற்ற தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசு  என்ற கீர்த்தியைத்தான். முதல்முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும்போதே, ஏற்கனவே பிரச்சினை முத்தியிருக்கும் நேரத்திலேயே லம்பாக 40 கோடியை சுருட்டுகிறார்கள் என்றால் இவர்களெல்லாம் சில பல வருடங்கள் ஆட்சியில் இருந்தால் என்ன ஆகும்? பதிவுகள், மறுமொழிகள், தமிழ் இந்து, அதன் பக்கத்து சந்தான தமிழ் பேப்பர், என தென்னிந்தியாவின் முதல் இந்துத்வ அரசுக்கு காவடி தூக்கியவர்களை எல்லாம் கண்ட இடத்தில் சட்டையை பிடித்து கேளுங்கள் !

___________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்