privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசோனியா,ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி...பெண்களின் பெருமையா?

சோனியா,ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி…பெண்களின் பெருமையா?

-

வர்க்க விடுதலையும் பெண் விடுதலையும்

ரசியல் என்பது ஆண்கள் கோலேச்சும் துறைதான், பெண்களுக்கு அங்கே இடமில்லை என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் சிலர் அவ்வப்போது சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பினாலேயே சோனியா, ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி போன்ற பெண் தலைவர்களின் அரசியல் வெற்றியை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். இந்த பெண் தலைவர்கள் மீது அரசியல் ரீதியான விமரிசனங்கள் இருந்தாலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இவர்கள் பெற்ற வெற்றியை சிலாகிப்பார்கள்.

முதலில் எந்த ஒரு துறையையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளையும் இப்படி ஆண், பெண் என்று பாலின வேறுபாட்டால் எளிமையாக பிரிப்பது அபத்தம். இந்த உலகில் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தும் பாலின வேறுபாட்டை அடிப்படையாக வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்படுவதில்லை. மேற்கத்திய நாடுகளில் எழுந்த நடுத்தர வர்க்க பெண்ணியவாதிகள்தான் முதலில் இப்படி பார்க்கும் பார்வையை பரப்பினார்கள். முதலாளித்துவம், கம்யூனிசம் எல்லாமே ஆணாதிக்கம்தான் என்று ஒப்பிட்டு பேசுவார்கள். சரி, இதிலிருந்து எப்படி விடுதலை என்று கேட்டால் அது இறுதியில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருக்கும். இன்று அந்த பார்வை தேய்ந்து காற்றில் கரைந்து போயிருக்கிறது. காரணம் அது யதார்த்தத்தோடு கொண்டிருக்கும் கற்பனையான உறவுதான்.

அதே நேரம் உலகம் முழுவதும் சமூக இயக்கத்தில் பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும் அப்பட்டமாகவும், நுட்பமாகவும் பின்பற்றப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த பிரச்சினையை வார்த்தை, மொழியில் மட்டும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பவர்கள் எவரும் நடைமுறையில் உழைக்கும் வர்க்கத்தின் பெண் விடுதலை குறித்து எதுவும் பேசுவதில்லை, செய்வதில்லை. அது குறித்து அறிந்ததும் இல்லை. ஏனெனில் பெண்கள் எல்லாருக்கும் பிரச்சினைகள் என்பது ஒரே மாதிரியாக இல்லை. பாலியல் ரீதியான பிரச்சினைகளும் வர்க்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. பொதுவில் வசதியானவர்கள், ஏழைகள் என்ற வர்க்க வேறுபாடே பெண் உலகத்தையும் தீர்மானிக்கிறது. ஏழைப் பெண்ணின் விடுதலை என்பது பொருளாதாரா துறையில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கம் என்பது அதற்கு உட்பட்ட ஒன்றுதான். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஆண்களும், பெண்களும் ஒன்றாகத்தான் அவதிப்படுகிறார்கள்.

இந்த உலகில் ஆணாதிக்கத்தை நிர்மூலமாக்குவதற்கு, பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட பெண்களே துவக்கினார்கள், சாதித்திருக்கிறார்கள். உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறே அதற்கு சான்று. சென்னை சேரி ஒன்றில் வாழும் பெண்ணிடம் என்ன பிரச்சினை அவரது வாழ்வில் முதன்மையானது என்று கேட்டால், “நேரத்திற்கு வராத குடிநீர், கழிப்பறை வசதி இல்லாதது, விலைவாசி உயர்வு, நிலையான வேலை கிடைக்காமை, ஆண்களின் குடிப்பழக்கம் ” என்று பட்டியிலிடுவார். இதையே ரோட்டரி கிளப்பிற்கு வரும் சீமாட்டிப் பெண்ணிடம் கேட்டால், சினிமா, விளம்பரத் துறை, தொழில் முனைவோர், அரசியல் கட்சி போன்றவற்றில் பெண்கள் முன்னிலை வகிக்காதது குறித்து வருந்துவார். அந்த வருத்தத்திற்கு பின்னர் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் ஒருவர் அளிக்கும் நட்சத்திர விருந்துடன் அந்த மகளிர் தின கொண்டாட்டம் முடிவுக்கு வரும்.

இன்றைய அரசியலின் பெண் தலைவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேறாமல்தான் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வட இந்திய சமூக நீதிக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு தேவை என்கிறார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் சரி, இல்லை அதற்குள் சாதி ரீதியான இட ஒதுக்கீடும் சரி இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் பெண்களது வரவை நிறைவேற்றப் போவதில்லை. வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் பெண்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டை பெறப் போகிறார்கள். அந்த வகையில் அவர்களது பிரதிநிதித்துவமும், செயல்பாடும் வசதி படைத்த வர்க்கத்தின் சார்பாகவே நடைபெறும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? இன்று அரசியல் என்பதே மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் தொழில் என்றான பிறகு அதில் பெண்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் அன்றாடங்காய்ச்சிகளின் வாய்ப்பாகவா இருக்கப் போகிறது?

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரசு சார்பாக போட்டியடும் ஜெயந்தி தங்கபாலுவை வைத்து பெண்ணுரிமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று யாராவது பேசினால் சிரிக்க மாட்டீர்களா? தங்கபாலுவின் மனைவிக்கு இடம் கிடைத்தமைக்கு காரணம் அவர் தங்கபாலு என்ற அரசியல தரகர், சுயநிதிக் கல்லூரி முதலாளி, மெகா டி.வி ஓனர், மற்றும் காங்கிரசு தலைவர் என்ற ஒரு மாகாராஜாவின் மகாராணி அந்தஸ்தை பெற்றிருப்பதுதான்.

தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தலையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சில இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்களும் வெற்றி பெற்று செயல்படுகிறார்கள். இந்த பெண்களில் பெரும்பான்மையினர் தங்கபாலு போன்ற உள்ளூர் அரசியல் ஆதிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். மேலும் இன்றும் கூட இந்த பெண் தலைவர்களை யாரும் உள்ளூரில் பஞ்சாயத்து தலைவர்களாக கருதுவதில்லை. ஊராட்சி தலைவர் யார் என்று கேட்டால் கணவனது பெயரைத்தான் மக்கள் சொல்லுவார்கள். இதனால் மக்கள் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் கருதலாம். உண்மை அதுவல்ல.

ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் தலைவனாக இருக்கும் கணவனது செயல்பாட்டில் இந்த மனைவியும் பங்கு பெறுவதன் நீட்சிதான் பஞ்சாயத்து தலைவர் அவதாரம். சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் யாரும் தங்களை பாலின ரீதியாக அடையளம் காண்பதில்லை. மக்களும் அவர்களை அப்படி பார்ப்பதில்லை.

எனில் அரசியலில் பெண்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை யார் செய்யமுடியும்? உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் வரும் போது மட்டும்தான் அவர்கள் உண்மையிலேயே பஞ்சாயத்து தலைவர்களாக அறியப்படுவார்கள். அவர்களின் கணவர்களது பெயரில் அறியப்படமாட்டார்கள். இதை இன்னும் எடுப்பாக பார்க்க வேண்டுமென்றால் நாடறிந்த பெண் தலைவர்களது பாத்திரத்தின் மூலம் எதிர்மறையாக அறியலாம்.

நேரு குடும்பத்தின் சீமாட்டி சோனியா காந்தி

காங்கிரசு கட்சியின் தலைவராக இந்திய மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும், வழிநடத்தும் சோனியாவின் அருகதை என்ன? ஆக்ஸ்போர்டில் அவர் ராஜீவ் காந்தியை காதலித்தார் என்பதுதான். ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசரை காதலிக்கும் தகுதியே ஒரு பெண்ணை நாடாளும் ராணியாக மாற்றிவிடும் என்றால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற இயலுமா என்ன? முக்கியமாக சோனியாவுக்கு இந்தியாவைப் பற்றியோ, இல்லை இந்திய மக்களது பிரச்சினைகளைப் பற்றியோ இன்று வரை எதுவும் தெரியாது. இது அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமல்ல. உள்நாட்டிலேயே பிறந்த பிரியங்கா காந்திக்கு மட்டும் உண்மையான இந்திய வாழ்க்கை குறித்து என்ன தெரியும்?

ராஜிவ் காந்தி அரசியலுக்கு வந்தது சஞ்செய் காந்திக்கு நடந்த விபத்து காரணமென்றால், சோனியா காந்தி வந்ததும் கூட ராஜிவ் காந்திக்கு நடந்த விபத்துதான். ஆக காங்கிரசின் தலைவராக வருவதற்கு இத்தகைய விபத்துக்களே போதுமென்றால் நாடு எத்தகைய ஆபத்தில் இருக்கிறது? ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும் சோனியா காந்தியை கெஞ்சிக் கூத்தாடி காங்கிரசின் தலைவராக்கியது காங்கிரசின் ஆண் தலைவர்கள்தான். இதனால் சோனியா காந்தி அரசியல் ஆசைக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல. இத்தகைய சீன்கள் நடந்தால்தான் தன்னைப்போன்ற வெளிநாட்டுப் பெண் பதவிக்கு வருவது பொருத்தமாக இருக்கும் என்பது அவரின் அணுகுமுறை.

நேரு குடும்பத்தை சேர்ந்த ஒரு பொம்மையைக் கூட முன்னிறுத்தி இந்திய மக்களை வசியப்படுத்தலாம் என்று காங்கிரசு பெருச்சாளிகள் முடிவு செய்ததன் அபத்தம்தான் சோனியா. இப்படி ஜனநாயகமற்ற முறையில் குடும்ப அந்தஸ்து காரணமாக தலைமைக்கு வந்த சோனியா அதே போல பல காங்கிரசு குடும்ப பெருச்சாளிகளை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். செய்தும் வருகிறார்.

அந்த வகையில் இன்றைய காங்கிரசு மேல் மட்டத் தலைமை என்பது பரம்பரை பரம்பரையாக ஆணாதிக்க இந்துத்வ நிலவுடைமை விழுமியங்களில் புரண்டு நெளியும் கூட்டம்தான். அதன்படி இங்கே இந்த ஆணாதிக்க அடக்குமுறைக்கு தலைமை தாங்கும் வேலையைத்தான் சோனியா செய்து வருகிறார். இதனால் சோனியா பெண் என்பதோடு பெண் விடுதலைக்கும் எதிரியாகவே இருக்கிறார். தள்ளாத வயதிலும் கூட பொறுக்கியாக முடியும் என்று சாதனை படைத்த என்.டி.திவாரி போன்ற மகான்களையெல்லாம் கவர்னர் ஆக்கியது அன்னை சோனியாதான் என்பதை நினைவில் கொள்க.

புரட்சித் தலைவரின் ஆசியுடன் புரட்சித் தலைவி

ஜெயலலிதாவை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆரின் படங்களிலும் அவரது வாழ்க்கையிலும் ஆசை நாயகியாக பணி செய்த பலரில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆர் கருத்தளவிலும், நடைமுறையிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட தலைவர். இந்த பாசிசத்துக்குள் பெண்ணை பச்சையாக அடிமைப்படுத்தி ருசிக்கும் விகாரமும் இயல்பாகவே இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டுதான் புரட்சித்தலைவியின் இளமைப் பருவம் கழிந்தது. அந்த தகுதியிலேயே பின்னர் கட்சியின் தலைமையை கைப்பற்றினார். ஜானகி, லதாவுக்கு மாற்றாக இந்த தலைவியை சில அ.தி.மு.க பெருச்சாளிகள்தான் திட்டமிட்டு திணித்து வெற்றி பெற்றனர். தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் விபத்தாகவும் அது மாறிப் போனது.

இந்த அ.தி.மு.க பெருச்சாளிகளும் சரி, பின்னர் வந்த சசிகலா கும்பலின் பெருச்சாளிகளும் சரி, சாதி ஆதிக்கத்திற்கும், பொருளாதார சுரண்டலுக்கும் பெயர் பெற்றவர்கள். அதன் உள்ளீடாக இருக்கும் பெண்ணடிமைத்தனம்தான் இவர்களது கோட்பாடு மற்றும் நடைமுறை என்பதை விளக்கத் தேவையில்லை. ஜெயாவின் சாணக்கிய குருவான சோ கூட தன்னை அப்பட்டமான பெண் விடுதலையின் எதிரியாக பேசி, எழுதி வருபவர்தான். அ.தி.மு.க மகளிர் அணி தலைவிகள் என்றாலே பொதுவில் புரிந்து கொள்ளப்படும் இழிவான பொருளுக்கான அடிப்படையை இவர்கள்தான் உருவாக்கியவர்கள்.

ஆனானப்பட்ட தேவர் சாதி சிங்கங்களே ஜெயாவின் காலில் விழுந்து கும்பிடுவதை வைத்து இது ஆணாதிக்கத்தின் தோல்வி என்றோ பெண் விடுதலையின் வெற்றி என்றோ முடிவு செய்து விடக்கூடாது. இங்கே ஆதிக்க சாதி – வர்க்கத்தின் தலைவியாகவே ஜெயாவுக்கான பாசிசத் தலைமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அம்மா காலில் விழுபவர்கள் அனைவரும் தனிப்பட்டமுறையில் பெண்களை கேடாக நினைத்து நடத்துபவர்கள்தான். அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட பொதுவில் அடிமை ராணிகளாகத்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் பாமரர்களை அடிமைப்படுத்தும் அடிமை ராணிகள்.

பெண்ணுரிமை திடீர் போராளி குஷ்பு

ந்தியா டுடே மூலம் பெண்ணுரிமை போராளியாக அவதரித்த குஷ்புவை எடுத்துக் கொள்வோம். கதாநாயகி என்றால் சுண்டி விழும் சிவப்பு நிறத்தில் உள்ள வட இந்திய பெண்கள்தான் வேண்டும் என்று அலைகிற தமிழ் இயக்குநர்களின் தேடலில் கிடைத்த குஷ்பு வடக்கிலிருந்து வந்தார். கதாநாயகியாக நிலைபெற்றார். பிரபுவுடன் காதல். அவரை மணம் செய்ய்யப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நேரம். ஆனாலும் பரம்பரை பண்ணையார் மரபுகளுடன் வாழும் சிவாஜியின் குடும்பம் ஒரு நடிகையை ஏற்க தயாரில்லை. அங்கீகாரமில்லாமல்தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அது முடிவுக்கு வந்தது. சரி, பெண்ணுரிமை போராளியான குஷ்பு அப்போது இது குறித்து போராடவோ குறைந்த பட்சம் பேசக்கூட தயாரில்லை. என்ன இருந்தாலும் பெரிய இடத்து விவகாரமல்லவா!

பின்னர் சுந்தர் சியை மணந்தார்.  ஜாக்பாட் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தனது இமேஜை உயர்த்திக் கொண்டார். திரைப்படங்களை தயாரிக்குமளவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அம்மாவுடன் நெருக்கமானார். பின்பு ஏதோ பிசினஸ் தகராறு காரணமாக அய்யா கட்சியில் சேர்ந்தார். இடையில் இந்தியா டுடே மூலம் மண உறவுக்கு முந்தைய பாதுக்காப்பு குறித்து பேசினார். தமிழ் ஆர்வலர்கள் பொங்கி எழுந்து குஷ்புவை பெண்ணுரிமை போராளியாக மாற்றி விட்டார்கள். கடைசியில் அதே தமிழ் ஆர்வலர்கள் மூர்ச்சையாகுமளவு தி.மு.கவிலே சேர்ந்து செம்மொழி மாநாட்டிலெல்லாம் முதல் வரிசையில் இடம்பெற்றார். தமிழ் பெற்ற பேறு!

தமிழ் திரையுலகம் திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் பெண்களை வதைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாதது. அந்த உலகில் அந்த கொடுமைகளை ஏற்றுக் கொண்டு சம்பாதித்து ஆளான குஷ்பு அது குறித்து எங்கேயும் பேசியதில்லை. ஏனெனில் அந்த விழுமியங்கள் சினிமாத் துறையில் இயல்பாக இருக்கும் ஒன்று. அதை ஒத்துக் கொண்டுதான் ஒரு நடிகை அவர் பிரபலமானாலும் குப்பை கொட்டமுடியும். சரியாகச் சொன்னால் பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கதைகளில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை பெண்ணுரிமை குறித்து கனவிலும் கூட பேச முடியாதல்லவா?

இன்று தி.மு.கவின் உள்ளூர் பண்ணைகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். புரட்சித் தலைவியின் புகழ் பரப்பும் அ.தி.மு.கவிற்கு எதிராக தி.மு.க இறக்கியிருக்கும் மற்றுமொரு புரட்சித் தலைவிதான் குஷ்பு. எனினும் கருணாநிதி குடும்பப் பெண்கள் பொறாமை பயம் காரணமாக விதித்திருக்கும் வரம்பிற்குள் நின்றுதான் குஷ்பு தனது அரசியல் கடமையை ஆற்றுகிறார். பதிலுக்கு தி.மு.கவின் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் அவருக்கும் ஒரு பங்கு காத்திருக்கிறது. எனில் குஷ்புவின் அரசியல் வெற்றியை பெண்களின் வெற்றியாக பார்க்க முடியுமா?

முக்குலத்தோர் வீராங்கனை புவனேஸ்வரி

ரசிகர்களால் பூனைக்கண் என்று அன்பாக அழைக்கப்படும் புவனேஸ்வரியின் கதையை பார்ப்போம். சினிமாவில் சில காட்சிகளில் வந்து போகும் பாத்திரமாகவும், தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாகவும் நடித்து ஏதோ கொஞ்சம் புகழ் பெற்றார். பிறகு வாய்ப்பு கிடைக்காத போது அல்லது கிடைத்த வாய்ப்புகளை வைத்து மற்ற நடிகைகள் செய்யும் ‘தொழிலை’யும் செய்து வந்தார். அதில் ஏதோ உள் குத்து நடந்து விபச்சார வழக்கில் கைதானார். தன்னைக் கைது செய்தவர்கள் மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று புவனேஸ்வரி போட்ட பட்டியிலில் தமிழ் திரையுலகமே கொஞ்சம் பயந்து போனது. அதை எதிர்த்து பெரிய ஆர்ப்பாட்டமும் செய்தது. இடையில் புவனேஸ்வரி பேசத் துவங்கினால் பெரிய கைகள் சிக்கும் என்று அந்த வழக்கை ஏதோ ஊற்றி மூடிவிட்டார்கள்.

பிறகு திடீரென்று ஒரு நாளில் தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில் சேர்ந்து மகளிர் அணித் தலைவியாக அறிவிக்கப்பட்டார். விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணையே இப்படி ஒரு பதவியில் நியமித்தது குறித்து அந்த தேவர் குல சிங்கத்திற்கு விளிம்பு நிலை மனிதர்களை வாழ்விக்க வந்த திலகம் என்று பட்டம் கொடுக்க முடியுமா? புரட்சித் தலைவியின் காலில் விழுந்த சிங்கங்கள் இப்படி புவனேஸ்வரியையும் தலைவியாக்கி அழகு பார்ப்பதில் பெரிய முரண்பாடு இல்லை. இன்று புவனேஸ்வரி போயஸ் தோட்டம் சென்று அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய கையோடு தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்று விட்டார்.

இங்கே கவர்ச்சிக்கு அறியப்பட்ட ஒரு நடிகையை மலிவாக பயன்படுத்தும் ஓட்டுக் கட்சி அரசியலைத்தான் காண்கிறோம். தொழில் செய்யும் ஒரு நடிகை அரசியலுக்கு வரக்கூடாதா என்று சிலர் கேட்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டு இடர்களுடன் வாழும் உழைக்கும் வர்க்க பெண்களை இந்த நடவடிக்கை இழிவுபடுத்தவில்லையா? மேக்கப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகையை வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கூட்டம் சேர்க்கலாம் என்பது கூட சாராம்சாத்தில் விபச்சாரம் போன்றதுதான்.

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெயிட்டாக அடிபடும் கனிமொழி சமீபத்தில் குமுதம் ரிப்போர்ட்டரில் ” நான் பெண் என்பதால் டார்கெட் செய்யப்படுகிறேன்” என்று கூறியிருந்தார். பெண்ணுரிமை என்னபாடு படுகிறது பாருங்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் கனிமொழி காலச்சுவடிலும், உயிர்மையிலும் சில வீணாய்ப் போன கவிதைகளை எழுதி வந்தார். எல்லாம் திராவிட இயக்கத்தோடு ஒட்டவே ஒட்டாத தனிமனித – உள் மன – அடி ஆழக் – கவிதை கண்றாவிகள். கனிமொழிக்கு ஜால்ரா போட்டால் தி.மு.க அரசில் பொறுக்கித் தின்னலாம் என்று கணக்கு போட்ட சில இலக்கியவாதிகள் இந்த கவிதைகளுக்கு தேனே,மானே என்று டன்கணக்கில் ஐஸ் வைத்தார்கள். கனிமொழியும அதை உண்மையென நம்பி அவர்களை ஆதரித்தார்.

பிறகு கருணாநிதியின் குடும்பத்திற்குள் பாகப்பிரிவினை வந்த போது ராஜாத்தி அம்மாள் “எனக்கு ஒன்னுமே இல்லையா” என்று மூக்கைச் சிந்திய போது கனிமொழி எம்.பியானார். பிறகு டெல்லியில் தி.மு.க மையமானார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராடியா டேப்பில் புகுந்து விளையாடினார். இவரும் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளம்பியிருக்கிறார்.

கனிமொழியின் அரசியல் வருகையை பெண்ணுரிமையின் வெற்றியாக யாரும் எடுத்து கொள்ள முடியாதில்லையா? சொல்லப்போனால் அவரது நைனா பலகாலம் அங்கீகரிக்காத துணைவியின் மகள் என்ற முறையில் அவர் பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் கருணாநிதியைத்தான் லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்க வேண்டும். கருணாநிதி மட்டுமா, தி.மு.கவில்தான் எத்தனை இரண்டு பெண்டாட்டிகாரர்கள்! சமீபத்தில் டி.ஆர் பாலுவின் அதிகாரப்பூர்வ மனைவி ஆந்திராவிலிருக்கும் நாவிதரானா அதிகாரப்பூர்வமற்ற மனைவிக்கு எந்த அங்கீகாரமுமில்லை என்று பத்திரிகைக்கு செய்தியே அனுப்புகிறார். இதில் நாவிதர் என்று குறிப்பிட்டு இழிவுபடுத்தும் அளவு கேவலமான இந்த கட்சியில் கனிமொழி பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் பாலுவை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்?

இரண்டு பெண்டாட்டிகள், எண்ணிக்கையில்லாத வைப்பாட்டிகள் என்று வாழும் தி.மு.க ஆணாதிக்கவாதிகளின் வெற்றிக்குத்தான் நம்ம கவிஞரம்மா இப்போது கிளம்பியிருக்கிறார். இதில் தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா போன்ற கொசுறு கவிஞர்களெல்லாம் கூட கலந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் பெண்களின் பிரதிநிதி என்றால் நாம் தமன்னாவையும், பிரியங்கா சோப்ராவையும் ஏன் ஷகிலாவையும் கூட முன்னோடிகளாக ஏற்கலாம்.

உழைக்கும் வர்க்கத்திலிருந்தே பெண் தலைவர்கள் தோன்றுவார்கள்

ஜெயலலிதா தொடங்கி, குஷ்பு, கனிமொழி, புவனேஸ்வரி வரைக்கும் தாங்கள் பெண்கள் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று கூறுவது அருவெறுப்பாக இல்லையா?

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இந்தியாவில் சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்கள்தான் அரசியலிலும் கோலேச்சுகிறார்கள். இந்த குடும்பங்களிலிருந்து திணிக்கப்பட்ட இந்த பெண் தலைவர்களை நாம் எப்படி பெண்ணுரிமையின் வெற்றியாக போற்ற முடியும்? உண்மையில் பெண்ணுரிமையின் அபாயத்தையும், அவல நிலையையும்தான் இந்த தலைவர்களது வருகை காட்டுகிறது.

கொதிக்கும் வெயியில் தார் போடும் பெண்கள், சில்லிடும் குளிரிலும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்கள், குடலை புரட்டும் துற்நாற்றத்தில் நின்று கருவாடு பதம் செய்யும் பெண்கள், வாடிப்போன மலர்களாக ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள், குடும்பத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணிக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள்…. இவர்களிடமிருந்துதான் உண்மையான பெண் தலைவர்கள் தோன்றி வரமுடியும்.

ஆனால் இந்த சமூக அமைப்பும், தேர்தல் அரசியலும் இந்த உழைக்கும் பெண்களை நுழையவிடாமல் பல்வேறு தடைகளை பூட்டி வைத்திருக்கிறது. அதை உடைக்க வேண்டுமென்றால், பெண் விடுதலையை சாதிக்க வேண்டுமென்றால் நாம் இந்த தேர்தல் முறைக்கு வெளியே இருந்துதான் போராட வேண்டும். அதற்கு முதலில் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011