privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

-

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!டந்தவருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஓபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கேக் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த ’அதிர்ச்சிக்குரிய’ பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்குமுன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். அதன்பின் நிறைய கட்டுரைகளும் செய்திகளும் அவரைப்பற்றி வெளிவந்தன. மனிதஉரிமை போராளி என்று பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீனநாட்டின்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும் அவரை அவரது துணைவி கூடசந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

லியுவிற்கு நோபல்பரிசு கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நார்வேயிலிருக்கும் பாராளுமன்ற கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டும் லியு நோபல் பரிசை வென்றிடவில்லை. மாறாக, சீனாவுக்கெதிரான அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமாகவே திட்டமிடப்பட்டு லியுவிற்கு கொடுக்கப்பட்டது. சீன நாட்டோடு வலிமையான பொருளாதார பந்தத்தால் அமெரிக்கா பிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், அரசியல் ரீதியில் அந்நாட்டை அடக்கி வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வளர்ந்து வரும் சீன பொருளாதரமும் அமெரிக்காவிற்கு இசைவாக இல்லை. எனவே மனித உரிமை என்ற முகாந்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனாவை குட்டுவதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை. இப்போது நோபல் பரிசால் குட்டுகிறது.

இந்த அமைதிக்கானநோபல் பரிசை சீனாவை சேர்ந்தவருக்கு அதிலும் லியூ ஜியாபோவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதஉரிமைக்காக அவர் என்ன செய்தார்? இந்த கேள்விகளுக்கானவிடைகள் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.

அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர்  துணைபோயிருக்கிறார் என்ற உண்மைதான் அது. சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். கொரியா மற்றும் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார் இந்த லியு. 2004-ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசி ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார்.

இந்தப் போர்களும் எல்லாம் பச்சையான மேலாதிக்க வெறிக்காக கொடூரமாக நடத்தப்பட்டவை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள நிகழ்த்தப்பட்டவை. அவற்றை ஆதரிப்பதே அப்பட்டமான மிகப்பெரும் மனித உரிமை மீறல். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களை குற்றம் சாட்டுகிறார் இந்த ’மனித உரிமை போராளி’ லியு.

அப்படிபட்டவரை மனிதஉரிமைப் போராளி என்று மேலைநாட்டு ஊடகங்கள் அழைப்பது சீனவை மட்டுமல்ல உலக மக்களையே அவமதிப்பதாகும். சீன அரசாங்கத்துக்குள் தங்கள் ஏஜெண்டுகளை நுழைக்க முடியாது என்று கண்டுகொண்ட அமெரிக்க முதலான மேற்கத்திய நாடுகள், இதுபோன்ற நூதன வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. சீனஅரசுக்கெதிராகப் பேசியவர் என்பதோடு அமெரிக்காவின் அத்தனை செயல்களுக்கும் கூஜாவாக இருந்தவர் என்பதே இந்த லியூவின் முக்கியமான தகுதிகள். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இந்த அயோக்கியருக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் சீனாவை மனித உரிமை மீறிய நாடு என்று பிரச்சாரம் செய்வதற்கு தோதாக இருக்கும் என்பதே இந்த அழுகுணியாட்டத்தின் நோக்கம்.

சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் அமெரிக்காவின் கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா மலிவாக நுகர்வதற்காக சீனத்து தொழிலாளிகள் கசக்கி பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்க வேண்டும். ஆனால் என்றுமே அப்படி பேசியதில்லை.

இந்த நோபல் பரிசின் கண்ணைப் பறிக்கும் விளம்பர ஒளியில் லியு செய்த குற்றம் காணாமல் போய் ஊடகங்கள் சொல்வதே உண்மையென்று மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பென் சென்டர் என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவராக 2007 வரை லியு இருந்திருக்கிறார். பென் சென்டர், மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான, ஆங்கிலோ- அமெரிக்க தன்னார்வ மற்றும் தனியார் குழுக்களின் முக்கிய அமைப்பு.  இந்த அமைப்பிற்கு படியளக்கும் ஸ்பான்சர்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான் இந்த பென்சென்டரை வைத்திருக்கிறார்கள். லியு தற்போது அவ்வமைப்பின்  போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.

இவ்வமைப்புக்கும்,  அமெரிக்கா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வாஷிங்கடனை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு பேச்சுரிமை அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  1941-இல் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க உளவுத்துறையால் கம்யூனிஸ்டுகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பு இந்தஃப்ரீடம் ஹவுஸ்.

திபெத், மியான்மர், உக்ரைன், ஜியார்ஜியா, செர்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்றநாடுகளில் முக்கியமான தன்னார்வக் குழுக்களின் மூலமாக அமெரிக்காவின் அதிகாரவர்க்க நபர்களுக்கான கொள்கைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவது இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளாகும். அவ்வமைப்பைச் சார்ந்து சீனாவில் இயங்கும் அமைப்புதான் பென் சென்டர்.
இதிலிருந்தே லியுவின் நிலைப்பாடும், அவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.

சீனாவில் தாராளமயமாக்கல் முழுமையாக வரவேண்டும்; சந்தை எல்லோருக்கும் திறந்துவிடப்படவேண்டும் ; வெளிநாட்டு வங்கிகளை வரவேற்கவேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்; மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்தான் லியு ஜியாபோ. சீனா இன்னும் அதிகமாக முதலாளித்துவப் பாதையில் பயணிக்கவேண்டும், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு.அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

இந்த நோக்கில் சீனா ஏற்கனவே சென்று விட்டது என்பதுதான் உண்மை. அதாவது பொருளாதரத்தில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சீனா அரசு அமைப்பில் மட்டும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது. அதையும் திறந்து விடவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அமெரிக்காவின் நோக்கம்.

இதனை அவர் 2008-இல் எழுதியசார்ட்டர் 8-இல் மேற்குலகஅரசியல்பாணியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென்றும்,அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டுமென்றும் நிலங்களை தனியார் கையகப்படுத்தப்படவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தில்தான் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று அவர் கருதுகிறார். மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கிறார். மேலும், அவர் தலைமை தாங்கிய நிறுவனங்களெல்லாம் அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில் அவர் நோபல் பரிசு பெற்றிருப்பதை பொருத்தி பார்க்கலாம்.

அதோடு,  லியு ஜியாபோவை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நபரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.லியுவை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைத்தவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும், சிஐஏவிடமிருந்தும் நீண்ட காலமாக நிதியுதவி பெற்று வரும் தலாய் லாமாதான் அவர். அவரோடு, லியுவை பரிந்துரைத்தவர்கள் பட்டியலில் பல நேட்டோ அதிகாரிகளும் அடங்குவர்.இதிலிருந்தே அந்தபரிசின் அரசியலை விளங்கிக்கொள்ளலாம்.

நோபல் பரிசானது அமைதிக்கானதாகக் கொள்ளாமல் எதற்கானதாக இருக்கிறது ?  அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரால், தன்னார்வக் குழுக்களின் வழியாக  அமெரிக்காவின் கூஜாக்களுக்கு விளம்பரம் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு லியு ஜியாபோ ஒரு கருவி. உலகில் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பேர் அரசாங்கக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிறவெறிக்கு சான்றாக, முமியா அபு ஜமால் எனும் கறுப்பின பத்திரிக்கையாளர் செய்யாத குற்றத்துக்காக தூக்குதண்டனை கைதியாக நாட்களை பென்சில்வேனியா சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். லியு ஜியாபோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஒபாமா முமியா அபு ஜமாலை விடுவிப்பாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கிறார். அதேபோல லியுவின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா இங்கு இந்திய அரசால் சிறையில் வதைக்கப்படும் பினாயக் சென் என்ற உண்மையான மனித உரிமைப் போராளிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ நாடுகளில் மக்களின் பொது சொத்துகள் முதல் உழைப்பு வரை எப்படி சுரண்டப்படுகின்றது என்பதற்கும் ஏற்றதாழ்வுகள் எப்படி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் இந்தியாவிலேயே கண்கூடாகக் காணலாம். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. 200 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவத்திலிருந்து காலாவதியாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தஅமைப்பை மாற்றவேண்டும் என்று போராடுகிறார்கள்.தனியார்மயம், உண்மையில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை பல லத்தீன் அமெரிக்கநாடுகளில், இந்தியாவில் கண்கூடாகக் காணலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது அமெரிக்க மேலாதிக்க அரசியலுக்கான ஒரு கருவிதானே தவிர மனிதஉரிமைகளைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தைப் பற்றியோ, அப்பாவி மக்கள் மீதான போர்கள் குறித்தோ அதற்கு எந்தக் கவலைகளுமில்லை என்பதையும் இந்தவருடத்தின் பரிசு பெற்றலியு ஜியாபோ அமெரிக்காவின் போர்களை உற்சாகப்படுத்துபவராகஇருந்திருக்கிறார் என்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தாது. நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
____________________________________________________________

சந்தனமுல்லை, புதிய கலாச்சாரம் – 2011
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: