privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்...

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்…

-

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா – 6 (மெக்சிகோ, பகுதி: இரண்டு)

து என்னவோ தெரியவில்லை. மெக்சிகோவுக்கும் கடவுளுக்கும் ஒரு நாளும் ஒத்துப் போவதில்லை. வரலாற்றில் எந்தப் பிரச்சினை வந்தாலும்  மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் நாடு கடத்தி விட்டனர். இவை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள் அல்ல. மெக்சிக்கோ வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள். காலனியாதிக்கம் செய்யும் எண்ணத்தோடு வந்த ஸ்பானியர்களை, அன்றைய அஸ்தேக் சக்கரவர்த்தி கடவுளின் தூதர்கள் என்று தவறாக கருதினான். அந்த தப்பெண்ணம், ஒரு தலை சிறந்த நாகரீகத்தின் அழிவிலும், இரண்டு லட்சம் மக்களின் இனப்படுகொலையிலும் சென்று முடித்தது. “பூர்வீக செவ்விந்திய மக்களை ஆண்ட மன்னர்கள் மதத்தின் பெயரால் மூடுண்ட சமுதாயத்தை வழிநடத்தினார்கள். மக்களை அறியாமை என்ற இருளில் வைத்திருந்தார்கள்.” நமது காலத்திய கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும் இவ்வாறான பிரச்சாரம் செய்கின்றனர். (உதாரணம்: மெல் கிப்சனின் அபோகலிப்டோ திரைப்படம்)

ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மெக்சிகோ மக்களின் வாழ்வில் ஒளியேற்றவில்லை. நாடு முழுவதும் காளான் போல முளைத்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மக்களை அடிமை இருளில் வைத்திருந்தன. மெக்சிகோவின் அரைவாசி நிலப்பகுதி இந்த தேவாலயங்களின் சொத்தாக இருந்தது. அவற்றில் கூலி விவசாயிகளை கொத்தடிமைகளாக வேலை செய்வித்து சுரண்டிய பணத்தை தேவாலயங்கள் வட்டிக்கு கொடுத்தன. பிற நிலவுடமையாளர்களும், முதலாளிகளும் தேவாலயங்களிடம் கடன் வாங்கியதால், மதகுருக்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.

ஒரு ஊரில் ஒரு தேவாலயம் இருக்குமாகில், அந்த மத நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் பாதிரிகள் சாதாரண மக்களை சுரண்டி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும். அவர் அதற்கென வசூலிக்கும் பணம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு ஏழை உழைப்பாளி தனது வருமானத்தில் பாதியை ஆவது இது போன்ற செலவுகளுக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் எந்த மனிதனும் சுதந்திரமாக வாழ முடியாது. யாராவது கட்டுப்படியாகாது என்று தேவையற்ற சடங்குகளை தவிர்க்க விரும்பினால் மதத்தில் இருந்து விலக்கப் படுவார்கள். மெக்சிகோ மக்களின் விடுதலைக்காக போராடிய ஹிடால்கோ கூட அவ்வாறு மத நீக்கம் செய்யப் பட்டார். இவ்வளவவிற்கும் மெக்சிகோவின் தேசிய நாயகனான ஹிடால்கோ ஒரு முன்னாள் பாதிரியார்!  எசுயிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்...
ஹிடால்கோ பாதிரியார்

மெக்சிகோ புரட்சியின் வேர்கள், அன்று தாய்நாடாக கருதப்பட்ட ஸ்பானியாவின் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. ஐரோப்பாவில் சிலுவைப் போர் காலத்தில், பல கிறிஸ்தவ இயக்கங்கள் தோன்றியிருந்தன. மதத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகள், பிற்காலத்தில் பணபலம் கொண்ட தேசங்கடந்த நிறுவனங்களாக மாறி விட்டன. எசுயிஸ்ட் சபை அவற்றில் ஒன்று. மெக்சிகோவில் குடியேறிய அதன் அங்கத்தவர்கள் வைத்திருந்த அசையும், அசையா சொத்துகளும், விவசாய உற்பத்தியில் கிடைத்த வருமானமும், அரசை அச்சமடைய வைத்தது. எசுயிஸ்ட் அமைப்பினர் சித்தாந்த பற்றுக் கொண்டவர்கள் என்பதால், அவர்களின் பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப் பட்டன.

எசுயிஸ்ட் உறுப்பினர்கள் அரச அடக்குமுறைக்கு ஆளானதால், அவர்களின் பண்ணைகளும் அழிக்கப் பட்டன. இதனால், ஜீவனோபாயத்திற்காக எசுயிஸ்ட் பண்ணைகளில் தொழில் செய்த பூர்வீக இந்தியர்களும் பாதிக்கப் பட்டனர். ஹிடால்கோ பாதிரியார், அரச அடக்குமுறையினால் பாதிக்கப் பட்ட மக்களை ஒன்று திரட்டினார். மெக்சிகோவில் பிறந்த ஸ்பானிய வம்சாவழியினர் முதல், பூர்வீக இந்தியர்கள் வரை அவரின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற நடந்த முதலாவது சுதந்திரப் போரும் அது தான்.

ஹிடால்கோ தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி விரைவிலேயே அடக்கப்பட்டாலும், சுதந்திர வேட்கை மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஸ்பெயினில் மன்னராட்சிக்கு எதிரான தாராளவாத (லிபரல்) கொள்கையாளர்களின் எழுச்சி, ஆங்கிலேயருக்கு எதிரான வட- அமெரிக்க காலனிகளின் சுதந்திரப் பிரகடனம், ஹைத்தியில் கறுப்பின அடிமைகளின் புரட்சி, போன்ற பல சர்வதேச நிகழ்வுகள் மெக்சிகோவின் சுதந்திரத்தை விரிவுபடுத்திய புறக் காரணிகளாகும். புதிய சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகளை கூறும் ரூசோ, வோல்டேயர் ஆகியோரின் நூல்கள் படித்தவர்களால் பரவலாக வாசிக்கப்பட்டன. இதன் விளைவாக நாஸ்திகவாதம் பேசும் லிபரல்கள் உருவாகினார்கள்.

மெக்சிகோவில், நூறாண்டு காலமாக நடந்த உள்நாட்டுப் போருக்கும் கொள்கை வேறுபாடே காரணமாக அமைந்திருந்தது. நிலப்புரபுக்கள், பழமைவாதிகள், மதகுருக்கள் ஆகியோர் தமக்கென தனியான இராணுவம் ஒன்றை வைத்திருந்தனர். மறு பக்கத்தில், லிபரல், சமதர்ம கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோரும் இராணுவ பலத்தை கொண்டிருந்தனர். பூர்வீக இந்திய சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஹுவாரேஸ் லிபரல்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த முரண்பாடு அதிகரித்தது.

மத நம்பிக்கையுள்ள பழமைவாதிகளுக்கும், மதச் சார்பற்ற லிபரல்களுக்கும் இடையிலான தீராப் பகை, இரத்தம் சிந்தும் போராக பரிணமித்தது. இரண்டு தரப்பிலும், தீவிரவாதிகள் குரூரத்தின் உச்சிக்கு சென்றனர். பழமைவாதிகள் மதச்சார்பற்ற பாடசாலை ஆசிரியர்களை கொன்றார்கள். பதிலுக்கு லிபரல்கள், பாதிரிகளை கொன்று தேவாலயங்களை கொளுத்தினார்கள். நீண்ட காலம் நீடித்த போரின் முடிவில், சில லிபரல்கள் கம்யூனிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது ரஷ்யாவில், போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்த அதே காலத்தில், மெக்சிகோவிலும் உள்நாட்டுப் போர் நடந்தது. சமூக மாற்றத்திற்கான புரட்சிகர யுத்தத்தின் இறுதியில் சோஷலிசம் மலரா விட்டாலும், வர்க்க எதிரிகளுக்கு இடையிலான சமரசமும், நிலையான ஆட்சியும் ஏற்பட்டது. அது வரையில் நடந்த உள் நாட்டுப் போர்களில், கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர். தேசத்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதமடையும் அளவிற்கு சொத்தழிவு ஏற்பட்டது. ஒரு வகையில், மெக்சிகோவின் வறுமைக்கு அதுவும் ஒரு காரணம்.

மெக்சிகோவின் உள்நாட்டுப் போருக்கு, மக்களிடையே பிளவுகளை உருவாக்கிய சாதிய படிநிலை அமைப்பு முக்கிய காரணம். பிற நாடுகளில் நடந்ததைப் போல, லிபரல்கள் தான் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த “மெக்சிகோ தேசியத்தை” உருவாக்கினார்கள். அதற்கு முன்னர், ஸ்பெயின் நாட்டின் கடல் கடந்த மாகாணமாகவே கருதப் பட்டு வந்தது. மெக்சிகோவை காலனிப்படுத்திய முதல் நாளில் இருந்து, சுதந்திரம் பெற்ற நாள் வரையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் சமூகத்தின் உயர்நிலையில் இருந்தனர். அதாவது, மெக்சிகோ நாட்டின் அரசியல், இராணுவ, பொருளாதார நிர்வாகப் பொறுப்புகளுக்கு, ஸ்பெயினில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களது சேவைக்காலம் முடிந்ததும், தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்வார்கள். அப்படியானவர்களே ஸ்பெயின் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது.

ஸ்பானிய குடாநாட்டை சேர்ந்தவர்கள் என்ற அர்த்தப்படும் “peninsulares ” வகுப்பை சேர்ந்தோரே உயர்சாதியினராவர்.  தமிழில் சாதி என்பதை, ஆங்கிலத்தில் “Caste” என்று மொழிபெயர்ப்பது தவறானது. ஏனெனில் “Caste” என்ற சொல், மத்திய/தென் அமெரிக்காவின் காலனிய கால சமுதாயத்தை குறிக்கும் சொல்லாகும். அதற்கும் இந்திய சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருக்கலாம், அதே நேரம் வேற்றுமைகளும் நிறைய இருக்கின்றன. ஸ்பானிய பெற்றோருக்கு மெக்சிகோவில் பிறந்த பிள்ளைகள் “கிரயோல்கள்”. இவர்கள் தூய ஸ்பானிய வம்சாவழியினர் என்றாலும், மெக்சிகோ மண்ணின் மைந்தர்கள் என்பதால், விசுவாசம் குறைந்தவர்களாக கருதப் பட்டனர். சாதிய படிநிலையில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், சொத்துடமையிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், தாம் புறக்கணிக்கப் படுவதாக உணர்ந்த கிரயோல்கள், ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை அடைய வேண்டுமென விரும்பினார்கள். பூர்வீக இந்தியர்களுக்கும், ஸ்பானிய குடியேறிகளுக்கும் இடையில் பிறந்த பிள்ளைகள் “Mestizo” என அழைக்கப் படலாயினர். பூர்வீக இந்தியர்களும், மெஸ்தீசொக்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக நடத்தப் பட்டனர். அவர்கள் பண்ணையடிமைகளாக, விவசாயக் கூலிகளாக மட்டுமே வேலை செய்ய முடியும். இவ்விரு சாதியினரும் உடமைகளற்ற ஏழைகளாக இருந்தனர். அந்த அவல நிலை 21 ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.

மெக்சிகோவின் பொருளாதாரத்தை உள்நாட்டுப் போர்கள் சிதைத்து நாசமாக்கின. வெளிநாட்டு சக்திகள், இதையே சாதகமாக பயன்படுத்தி மெக்சிகோவை அடிமை நாடாக்க முயன்றன. சுதந்திர நாடான மெக்சிகோவுக்கு பிரிட்டனும், பிரான்சும் கந்து வட்டிக்கு கடன் வழங்கி வந்தன. வட்டி, இடைத்தரகர்களின் கமிஷன் போன்ற செலவுகளை கழித்து விட்டு, அரைவாசி கடன் தொகையை தான் மெக்சிகோவுக்கு கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரிக்கவே, பணத்தை அறவிடுவது என்ற சாட்டில் பிரான்ஸ் படையெடுத்தது.

அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்
தளபதி சான்டா அனா

மெக்சிகோவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு இராணுவத்தை எதிர்த்து போராடி வென்ற, சாண்டா அனா என்ற படைத் தளபதி, பின்னர் ஆறு தடவைகள் ஜனாதிபதியானார். சுமார் கால் நூற்றாண்டு காலம் மெக்சிகோவை ஆண்ட, சாண்டா அனா காலத்தில் தான், வட அமெரிக்காவுடன் யுத்தம் வெடித்தது. இன்று ஐக்கிய அமெரிக்க குடியரசின் மாநிலமான டெக்சாஸ் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்பானியர்களுக்கு அங்கே சென்று குடியேறும் ஆர்வம் இல்லாதிருந்த படியால், அமெரிக்க-ஆங்கிலேயர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப் பட்டது. கத்தோலிக்க – புரட்டஸ்தாந்து மதப் பிரிவினைகள் ஆழமாக வேரூன்றி இருந்த காலம் அது. டெக்சாசில் (ஆங்கிலேய) புரட்டஸ்தாந்துகாரர்கள் அதிகளவில் குடியேறினர். அவர்கள் டெக்சாசை தனி நாடாக பிரகடனம் செய்தனர். சாண்டா அனா அனுப்பிய படைகள் கிளர்ச்சியாளர்களை நசுக்கியது.

எல் அலெமோ என்ற இடத்தில் டெக்சாஸ் பிரிவினைவாதிகளின் இராணுவத்தையும், மக்களையும் படுகொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியது எனலாம்.  மெக்சிக்கர்களுக்கு, அது ஒரு பிரிவினைவாதிகளை அடக்கிய “எல் அலெமோ யுத்தம்”. ஆனால், அமெரிக்கா அதனை “எல் அலெமோ  இனப்படுகொலை”  என்று பிரச்சாரம் செய்தது. உணர்ச்சிவசப்பட்ட மக்களின் “தேசிய எழுச்சி”, மெக்சிகோ மீது படையெடுக்க உதவியது.  நூறாண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கில் நடந்ததைப் போல, அதுவும் ஒரு “மனிதாபிமானத் தலையீடு” தான். குவைத்தை மீட்க ஈராக் மீது போர் தொடுத்தது போன்று, “டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்பதற்காக” அந்த போர் நடவடிக்கை அமைந்திருந்தது. பண்டைய காலங்களில் தான் பொண்ணுக்காக, பெண்ணுக்காக என்றெல்லாம் காரணம் சொல்லி, ஒரு சாம்ராஜ்யம் தன்னை விஸ்தரித்துக் கொள்ளும். இது தனி மனித சுதந்திரத்தை சட்டமாக்கிய புரட்சிகர அமெரிக்கா அல்லவா? அதனால், “தனியொருவனுக்கு சுதந்திரம் இல்லாத” நாடுகள் மீது படையெடுக்கிறார்கள். 19 ம் நூற்றாண்டில் படையெடுத்து ஆக்கிரமித்த நிலங்கள், அமெரிக்க கண்டத்தில் இருந்தன. குறிப்பாக மெக்சிகோவின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா விழுங்கி விட்டது.

நூறாண்டுகளுக்கு ஒரு தடவை வரலாறு திரும்பும் போலும். அமெரிக்காவின் ஆயுதபலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல், இராணுவ பலம் குன்றிய ஈராக் குவைத்தை விட்டோடியது. அமெரிக்காவுக்கு எதிரான போரில் மெக்சிகோ தோற்றதற்கும் அதுவே காரணம்.   மெக்சிகோ படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், நவீன ஆயுதங்களுடன் போரிட்ட அமெரிக்க படைகளை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியது. டெக்சாஸ் சுதந்திரத்தை மீட்கும் போர் என்பது ஒரு கண் துடைப்பு நாடகம். குறைந்தது பத்து ஆண்டுகளாவது சுதந்திர நாடாக இருந்த டெக்சாஸ், “வாக்கெடுப்பில் மக்களின் விருப்பின் பேரில்” அமெரிக்காவின் மாநிலமாகியது. இன்று அது எண்ணை வளம் மிக்க பணக்கார மாநிலமாக திகழ்கின்றது. 1848 ல், மேலதிகமாக மெக்சிகோவின் பிற பகுதிகளும் அமெரிக்காவுடன் இணைக்கப் பட்டன. அமெரிக்க மாநிலங்களான நியூ  மெக்சிகோ, கலிபோர்னியா, போன்ற பகுதிகளை, அன்று 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்கள். ரியோ கிராண்டே ஆறு, இன்றுள்ள அமெரிக்க-மெக்சிகோ எல்லைக் கோடாக வரையறுக்கப் பட்டது.

இன்றைய அமெரிக்க அரசியலில், மெக்சிக்கர்களின் குடியேற்றம் முக்கிய பிரச்சினையாக பிரச்சாரம் செய்யப் படுகின்றது. பணக்கார அமெரிக்காவை நாடி வரும் மெக்சிக்கர்கள் முன் வைக்கும் வாதமும் வலுவானது தான். அதாவது அண்ணளவாக மெக்சிகோவின் அரைவாசி நிலப்பரப்பு அமெரிக்க வசமாகியுள்ளது. “நாங்கள் எல்லையைக் கடக்கவில்லை. எல்லை தான் எங்களைக் கடந்தது.” என்பது மெக்சிகோ குடியேறிகளின் வாதமாகவுள்ளது.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் நடந்த போரும், ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்களும் குறித்த வரலாற்றுத் தகவல்கள், அமெரிக்க மாணவர்களுக்கு முக்கிய பாடங்கள் அல்ல. ஆனால், மெக்சிகோவின் இளம் சமுதாயம், “அந்த அவமானகரமான தோல்வியை”  நினைவு கூறுவது அவசியம் என்று அரசு கருதுகின்றது. இதனால் வடக்கே உள்ள அமெரிக்க வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்புவாதம் குறித்த அச்சம், இளையோர் மனதில் குடி கொண்டுள்ளது. அமெரிக்க- மெக்சிகோ போர், எதிர்கால அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வருகையை கட்டியம் கூறியது. “அமெரிக்காவின் கொல்லைப்புறத் தோட்டம்” என்று வர்ணிக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகளாகின.  ஆரம்பத்தில் பத்துக்கும் குறையாத ஆங்கிலேயக் காலனிகளைக் கொண்டு உருவான அமெரிக்கா என்ற புதிய தேசம், வட மெக்சிகோ மாநிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம் வல்லரசாகியது. நிலங்களை அபகரிப்பதிலும், வளங்களை சுரண்டுவதிலும் காட்டிய அக்கறையை, அங்கே வாழ்ந்த மக்கள் மீது காட்டவில்லை. அந்த மக்கள் தாம் இழந்த செல்வத்தை தேடி அமெரிக்கா செல்வது நியாயமானது. அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் என்பதால், கேட்பாரின்றி   திருப்பி அனுப்பப் படுகின்றனர். இதனால், அமெரிக்கா மீது வன்மம் கொண்ட மக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருகி வருகின்றனர்.

(தொடரும்)

_________________________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • தோழரே உங்களுக்கு,

      செங்கொடி வினாத்தாள் தயாரிச்சு வைச்சுருக்காரு !

      அவருகிட்ட வச்சுக்கங்க உங்க வீண் ஜம்பத்தை !!

      ஒழுங்கa பதில் சொல்லி பாஸ் ஆகிற வழியைப்பாருங்க !!!

      All the Best !

      • தல நீங்க போக வேண்டிய எடம் senkodi.wordpress.com அங்கே போயி ஓங்க தெறமைய காட்டுங்க பாப்போம்

    • என்னன்னே இப்படிக்கேட்டுட்டீங்க..

      விதவிதமா கட்டுரை எழுதி ஒரு சராசரி இந்துவின்(பிராமணன் அல்லாதவர்) மனதை புன்படுத்த முடியும்..

      மதநல்லிணக்கத்தை குழைக்கும் வகையில் மத துவேசக்கருத்துக்கள் அடங்கிய ஜோடிக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய கட்டுரை எழுதத்தெரியும்..

  1. ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் மதமாற்றத ஆதரிச்சு ஒரு கட்டுரை
    https://www.vinavu.com/2011/06/01/conversion-2/

    இன்னிக்கு மதமாற்றத எதிர்த்து ஒரு கட்டுரை
    சூப்பரா கல்லா கட்டுரிங்க பாஸ்

    • இந்த கட்டுரை மதமாற்றத்தை எதிர்த்து எழுதப்பட்டது என நிரூபிக்க முடியுமா மதுசூதனன்? உங்களால முடியாதுங்கறேன்.. சவால்!

    • சென்கொடிக்கு இருக்கும் தெகிரியம் வினவுக்கு இல்லை.செங்கொடி போல பொட்டில் அடித்தாற்போல் பேசும் தெறம வினவுக்கு இல்லை.சும்மா பெரியார் போல கருணாநிதி போல போலி நாத்திகம்தான் பேசுறாரு!!திருந்துங்கன்னே!!

  2. வினவு, கிறிஸ்தவம்,இஸ்லாம்,இந்து,புத்தம் என ஓவ்வொரு மதத்தைப் பற்றி எழுதும் நீங்கள்.

    பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
    1.பிடல் காஸ்ட்ரோ தனக்குப்பின் யாரை அதிபராக நியமித்தார்?
    2.கம்யுனிச சீனாவில் ஓட்டுயுரிமைக்காக போராடிய பத்தாயிரம் மாணவர்களை கென்றது ஏன்?
    3.வட கொரியாவில் கருத்துக்கள் வெளியிட ஏன் தடையுள்ளது?.அதாவது வினவு போன்ற தளங்கள்,பொதுக்கூட்டங்கள் நடத்த.
    (தயவு செய்து போலி கம்யுனிசவாதிகள் என்று கூறாதீர்.பின் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை
    கம்யுனிசம் மற்றும் உயிர் கொல்லும் மதங்கள் நாட்டின் புற்றுநோய்கள்.
    காந்தியம்,உண்மை இவை என்றும் நிலையான வெற்றியாளர்கள்.
    உதாரணம்.
    மார்ட்டின் லூதர் கிங்,அமெரிக்க-ஆப்பிரிக்க மக்களுக்காக காந்திய வழியில் போராடிவர். இன்றுவரை அதன் வெற்றியை அசைக்கமுடியவில்லை.
    நெல்சன் மண்டோலா,தென் ஆப்பிரிக்கவுக்காக காந்திய வழியில் சுகந்திரம் வாங்கியவர்.

    Christians and India (particularly Tirunelveli)

    கால்டுவெல்,தமிழ் தென்மையான மொழி என உலகுக்கு எடுத்துக்கூறியவர்.
    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்.(இடம். இடையன்குடி,நெல்லை)

    எமி கார்மைக்கேல்,இந்து கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்ட பெண்களின் முறையற்ற பிள்ளைகளுக்காக
    உழைத்தவர்.(இடம். டோனாவூர்,நெல்லை)

    ரிங்கல் தெபே, பண்ணையார்களின் அடிமைகளாக இருந்தவர்களை தாழ்த்தப்பட்ட மக்களை மீட்டவர்.
    (இடம்.நெல்லை).

    வில்லியம் ஹென்றி, சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஓழித்தவர்.(இடம். கல்கத்தா)

    ஆஸ் துரை,நெல்லை கலெக்டர். தழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பிணத்தின் சவத்தை அக்ரகரத்தின் வழியாக
    கெண்டு சென்றதற்காக,வாஞ்சிநாதன்* என்ற பிராமணரால் சூட்டுக்கொல்லப்பட்டவர்.(இடம்.நெல்லை).
    (*வரலாற்றை புரட்டவும்.குறிப்பாக வாஞ்சிநாதனின் இனத்தை)

    இன்னும் அன்னை தெரசா,ஜடா,அன்னிபெசன்ட்,ரிப்பன்,வீரமாமூனிவர்,பவர்.

    • ஜப்பானில் ஜாக்கிச்சான் அமெரிக்காவில் மைக்கல் ஜாக்ஸன் போன்றோரை விட்டுவிட்டீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

      • ஜாக்கிசான் ஆங்காங்கை சேர்ந்தவர்..கம்யுனிச சீனர் அல்ல…thalava note panunga

    • ” ஆஸ் துரை,நெல்லை கலெக்டர். தழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பிணத்தின் சவத்தை அக்ரகரத்தின் வழியாக
      கெண்டு சென்றதற்காக,வாஞ்சிநாதன்* என்ற பிராமணரால் சூட்டுக்கொல்லப்பட்டவர்.(இடம்.நெல்லை).
      (*வரலாற்றை புரட்டவும்.குறிப்பாக வாஞ்சிநாதனின் இனத்தை)”

      இது உண்மையா ??? ராவணன்

  3. லத்தீன் அமெரிக்கா மெக்சிக்கோ பற்றிய தமிழில் தரமான அற்புத கட்டுரை. தமிழர்களின் உலக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் கட்டுரை. நன்றியுடன் வரவேற்கிறேன்.

  4. //ஆஸ் துரை,நெல்லை கலெக்டர். தழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பிணத்தின் சவத்தை அக்ரகரத்தின் வழியாக
    கெண்டு சென்றதற்காக,வாஞ்சிநாதன்* என்ற பிராமணரால் சூட்டுக்கொல்லப்பட்டவர்.(இடம்.நெல்லை).
    (*வரலாற்றை புரட்டவும்.குறிப்பாக வாஞ்சிநாதனின் இனத்தை)//

    உண்மையா! வாஞ்சிநாதன் ஆஷ் துரையை போட்டுத் தள்ளியது நாட்டின் சுதந்திர வேட்கையை வேண்டி என்றல்லவா வரலாறு சொல்கிறது? நீங்கள் கூறும் கூற்றுக்கு ஆதாரம் தாருங்களேன்.

  5. 1948 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்தியா விரிவாக்கத்தின்போது சீக்கிம்,கோவா போன்ற நாடுகள் எப்படி மாநிலமானது என்பதை பற்றி வினாவு கட்டுரை எழுதினால் நல்லம் நான் வாசிக்க ஆவலாகவுள்ளேன்

  6. அமெரிக்கா இன்று மட்டுமல்ல அன்றும் அப்படித்தான் என்பதை புரிய வைக்கும் கட்டுரை.

    “ஒரு குழந்தையின் பிறப்பு முதல், அது வளர்ந்து திருமணம் செய்து மரணம் அடைவது வரையில், ஒவ்வொரு சடங்கிற்கும் பாதிரியிடம் செல்ல வேண்டும்.”

    இந்து மதத்தில் பார்ப்பனர்களிடம் செல்கிறார்கள். பிறப்பு முதல் தெவ்சத்துக்கு தெவ்சம் வரை தொடர்கிறது. இதற்கு முடிவில்லை.

  7. திரு. சரவணன் வாஞ்சி பற்றி எழுதிய ஒரு பதிவை பார்த்தேன். அதில் ஆஷ் குற்றாலத்தில் பிராமணர்கள் மட்டுமே குளிக்கலாம் என்ற நிலையை மாற்றியதாகவும் அலுவலகத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும் என்றும், ஒரே குடத்து தண்ணீரை அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகவும் அதனால் கோபம் அடைந்த வாஞ்சி ஆஷை சுட்டதாகவும் எழுதப் பட்டிருக்கிறது.

    இருக்கலாம். 1886-இல் பிறந்த ஒரு பிராமணருக்கு ஜாதி உணர்வு இல்லாவிட்டால்தான் ஆச்சரியம். வ.உ.சி. கூட சிறையில் தனக்கு ஒரு வேளாளரோ, இல்லை பிராமணரோ சமையல் செய்து தர வேண்டும், தலித் செய்யக்கூடாது என்று கேட்டாராம். (வ.உ.சி. ஒரு தலித்தை தன் வீட்டு மனிதராகவே பாவித்ததாகவும் ம.பொ.சி. சொல்கிறார், எது சரியோ யானறியேன்) நிலைமை இப்படி இருக்கும்போது சம பந்தி போஜனம் என்று ஒரு வெள்ளைக்கார “மிலேச்ச” கலெக்டர் சொன்னால் கோபம் வருவது புரிந்து கொள்ளக் கூடியதே. அன்று இருந்த சமுதாய நிலையில் ஆஷ் அப்படி சொல்லி இருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

    ஆனால் வாஞ்சியின் கடைசி கடிதத்தை பார்த்தால் அவர் ஆஷின் “ஜாதி ஒழிப்பு முயற்சிகளால்” கோபம் அடைந்து அவரை சுட்டதாக தோன்றவில்லை. அந்த கடிதம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறது. குறிப்பாக சுதேசி கப்பல் கம்பெனியை பற்றி வேறு சொல்லி இருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளபடி அவரது மரண வாக்குமூலம் கீழே.
    I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
    3000 youths of this brave country have taken an oath before mother Kali to send King George to hell once he sets his foot on our motherland. I will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of King George in this glorious land which was once ruled by great samrats. This I do to make them understand the fate of those who cherish the thought of enslaving this sacred land. I, as the youngest of them, wish to warn George by killing Ashe who is his sole representative and has destroyed the Swadeshi shipping company and several other freedom fighters by subjecting them to severe torture.
    Vande Mataram. Vande Mataram. Vande Mataram

    சரவணன் அவர்களும் வாஞ்சியின் மரண வாக்குமூலம் என்று பதித்திருக்கிறார். விக்கிபீடியாவில் உள்ளதற்கும் அவர் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சரவணனின் version-இல் சுதேசி கப்பல் கம்பெனி பற்றி எதுவும் இல்லை. பசு மாமிசம், சனாதன தர்மம் என்று இரண்டு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதிலும் ஜாதியை பற்றியோ ஆஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் “சீர்திருத்த” ஆவலைப் பற்றியோ எதுவும் இல்லை.

    ஆஷ் குற்றால அருவியை எல்லாருக்கும் உரியதாக ஆக்கி இருக்கலாம். அவர் யாராவது ஒரு அருந்ததியர் பெண்ணை பிராமணர் தெரு வழியாக கொண்டு சென்றிருக்கலாம். அது ஆஷ் மேல் உள்ள கோபத்தை அதிகப் படுத்தி இருக்கலாம். ஆனால் வாஞ்சியின் காரணங்கள் வேறு என்றுதான் தோன்றுகிறது. வாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரர் என்ற பிம்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே நேரத்தில் நாம் icon-களாக நினைப்பவர்கள் மீது ஒரு உண்மையான பரிசீலனை நடத்தப்பட வேண்டும், அவர்களது குற்றம் குறைகள் மறைக்கப்படக் கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இது மாதிரி முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் icon-களை பற்றி உள்ள பிம்பங்களை கலைத்து அவை icon-கள் இல்லை என்று நிறுவ முயற்சி செய்யும்போது ஆதாரங்களையும் வெகு கவனமாக கொடுக்க வேண்டும் – செங்கோட்டையில் பலரிடம் பேசினேன் என்று மொட்டையாக சொன்னால் போதாது. யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரங்கள், ஆஷ் என்ன செய்தார் என்பதற்கான ஆதாரங்கள், பாரத மாதா சங்கம் ஆஷின் இந்த சீர்திருத்த ஆவல் பற்றி என்ன எழுதினார்கள் என்ற விவரங்கள் ஆகியவையும் சுட்டப் பட வேண்டும். வாஞ்சிநாதன் இறந்து கிட்டத்தட்ட நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அவர் சம காலத்தவர் அல்ல, நம் ஞாபகங்கள், இல்லை முந்திய ஒரு ஜெனரேஷனின் ஞாபகங்கள் போதும் என்று சொல்ல. இந்த பதிவர் சைக்கிள் காப் கூட இல்லாத இடத்தில் லாரியே ஓட்ட முயற்சி செய்வது போல் இருக்கிறது.

    ஆனால் இவர் அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இதை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர் கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. அந்த புத்தகத்தில் மேல் விவரங்கள் இருக்கிறதோ என்னவோ? இந்த புத்தகத்தை யாராவது பார்த்திருந்தால் படித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

    Reverse casteism – டோண்டு ராகவன் வாஞ்சியின் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய பென்ஷன் தி.மு.க. ஆட்சியினால் மறுக்கப்பட்டது என்று எங்கோ சொல்லி இருந்தார். டோண்டு, என் ஞாபகம் சரிதானா? உறுதிபடுத்துகிறார். அவரது ஆதாரம் திராவிட கழகத்தினரின் விடுதலை பத்திரிகைதான். விடுதலை பத்திரிகையே சொல்வதால் இதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. பிராமண விதவை என்பதற்காக அவரது பென்ஷன் மறுக்கப்பட்டது மிகவும் கீழ்த்தரமான விஷயம். (ஆனால் அவருக்கு ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் ஆட்சியிலும் ஏன் பென்ஷன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.) இதைப் பற்றி முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசியதாகவும், பென்ஷன் வாங்கிக் கொடுக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் ராமகுமரன் அவர்கள் ஒரு சுட்டியை காண்பிக்கிறார்.

    செங்கோட்டைக்காரரும், வாஞ்சியின் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்தவருமான திரு. திரவியம் நடராஜன் எழுதிய மறுமொழிகளில் வாஞ்சி ஜாதி வெறியர் என்ற கருத்து அபத்தம் என்று சொல்லி இருக்கிறார். இது வாஞ்சி பற்றி எனக்கு இருக்கும் பிம்பத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. வாஞ்சியை பற்றி மேலும் எழுதுவதாகவும் சொல்லி இருக்கிறார், காத்திருப்போம்.

    ஆஷ் பற்றி, குறிப்பாக குற்றாலம் அருவியை அவர் பொதுவாக்கியது பற்றி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

    • ஆஸ்ஸின் கல்லறை,நான் செல்லும் கிறித்தவ ஆலயத்தில் உள்ளது.(மிலிட்டரி லையன்,பாளையங்கோட்டை..).

Leave a Reply to சவால் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க