privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்ஏன் தீக்குளித்தாய் செல்வி? - நேரடி ரிப்போர்ட்!

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!

-

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்! சைதாப்பேட்டை செட்டித்தோப்பைச் சேர்ந்தவர் பாண்டியன்(35). அவரது மனைவி செல்வி(28). இருவருக்கும் மணமாகி இரு குழந்தைகள் மைதீஷ் மற்றும் சந்துரு, முறையே நான்கு மற்றும் ஒன்றரை வயது.  பாண்டியனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. குடியினால் வரும் பிரச்சினைகள் சமயத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதை என்னவென்று சொல்ல?

பாண்டியனின் குடிப்பழக்கத்தால் தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்தபடி இருந்தன. கடந்த சனிக்கிழமையன்று தீக்குளித்து இருவரும் இறந்துவிட்டனர். கூடவே கைக்குழந்தையும் தீயில் கருகி இறந்தது. சிறுவன் மைதீஷை அவனது பாட்டி உணவூட்ட அழைத்துச் சென்றிருந்தபடியால் தப்பித்துவிட்டான்.

இந்த அவலச் செய்தியைக் கேள்விப்பட்டு செட்டித்தொப்புக்குச் சென்றபோது, சிறுவன் மைதீஷ் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்களுடன் பக்கத்து வீட்டில்  விளையாடிக் கொண்டிருந்தான். செல்வியும் பாண்டியனும் தீக்குளித்து இறந்த வீடு ஒரு பொந்துபோல இருந்தது,  பாண்டியன்  நிரந்தர வேலையில் இல்லை. ஆனால், கிடைக்கும் போது டிரைவர் வேலைக்குச் செல்வார். பத்து நாட்களுக்கு  இரண்டு முறை அல்லது  மூன்று முறை வேலைக்குச்  செல்வார். பணம் கையில் இருக்கும்போது வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கி வருவார்.

மீதிநாட்களில், வறுமைதான். அதோடு, குடிக்கப் பணம் கேட்டு செல்வியிடமும் சண்டை போடுவார். செல்வியிடம்  தையல் மெஷின் இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு துணிகள் தைத்து  அந்த வருமானத்தில் செல்வி குடும்பத்தை ஓட்டி வந்தார்.

செல்விக்கு கணவனது குடிப்பழக்கம் பிடிக்கவில்லை. அதை சகித்துக் கொள்ளமுடியாத அளவுக்கு தொல்லைகள் விசுவரூபம் எடுத்து வந்தன. இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தாலும் அவர்களுக்குள்ளேயே சமாதானமாகி விடுவார்கள்.

சில சமயங்களில், செல்வி கோபித்துக் கொண்டு, மரக்காணத்திலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார். சிலநாட்கள் கழித்து, பாண்டியன் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவார். இப்படி குறைந்தது இரு மாதங்களுக்கொரு முறை நடக்கும் என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள்.

பாண்டியனின் குடிப்பழக்கமே இதற்குக் காரணம், அதைத் தாண்டி வேறு எந்த பெரிய பிரச்சினைகளும் இல்லையென்று அக்கம் பக்கத்து வீட்டினர் கூறுகிறார்கள்.ஆனால், அன்று என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை., கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு கதவைப் பூட்டிக்கொண்டு இருவரும் தீக்குளித்துவிட்டனர். வெப்பம் தாங்காமல் அருகிலிருந்த குழந்தையும் அந்தத் தீயில் கருகியதாக கூறுகின்றனர்.

பத்திரிகை மற்றும் போலீஸ் செய்தியின் படி செல்வி தீக்குளித்ததாகவும், பாண்டியன் காப்பாற்றப்போய் அவரும் தீக்காயம்பட்டு இறந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இதில் எப்படி சேர்ந்து இறந்தது என்பதற்கு பதில் இல்லை. இந்த துயர சம்பவம் என்னவாக நடந்திருக்கும் என்று நாம் ஊகிக்கத்தான் முடியுமே அன்றி அறுதியிட்டு இன்னதுதான் நடந்தது என்று கூற இயலாது. மேலதிகமாக அன்று என்ன நடந்தது என்று சொல்வதற்கு செல்வி உயிருடன் இல்லை. வேலையற்ற கணவனும், அவனது குடிப்பழக்கமும் அந்த ஏழைக்குடும்பத்தை எப்படி சீர்குலைத்திருக்கும் என்பதை கண்டுபிடிப்பதற்கு துப்பறிவாளர்கள் யாரும் தேவையில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பாண்டியன் ஒரு மாத வருமானமுள்ள வேலையில் இருந்தார். கையில் காசு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுக்கு உடை எடுத்துக் கொடுத்தும் கொண்டாட்டங்களுக்கும் செலவிட்டுள்ளார். அனைவரிடமும் நன்றாக பழகுவாராம். அவருக்குக் குடிப்பழக்க்கம் உண்டானதிலிருந்து வேலை போயிற்று. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எந்த நிரந்தர வேலையுமில்லாமல் இருந்திருக்கிறார்.

“இங்க குடிக்காதவங்கன்னு யாருமே இல்ல, எல்லாரும்தான் குடிக்கறாங்க. ஒரு சிலதுதான் இந்த மாதிரி. இல்லன்னா, வேலைக்குப் போனமா, குடிச்சுட்டு சோறு துன்னமான்னு இருக்குதுங்க. யாரு வீட்டுலதான் சண்டை இல்ல. எல்லாம் குடிச்சுட்டு பொண்டாட்டிக்கிட்டே சண்டை போடதான் செய்துங்க. அந்த பையனை பொறந்து வளந்ததுலேருந்து பாத்திருக்கேன். என்னமோ, இப்டி பண்ணிக்கிச்சு” என்றார் வயதான அம்மா ஒருவர்.

அது உண்மைதானே, இன்று எவர்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? புள்ளிவிவரங்களைப் பார்த்தால், குடிப்பழக்கம் அதிகரித்திருக்கிறது பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களிலிருந்து சகலரும் குடிக்கிறார்கள். அதைப் பெருமையாக, தகுதிக்குரிய ஒன்றாகவும் கருதுகிறார்கள். வீக்எண்ட் வார விடுமுறை என்றாலே குடித்து விட்டு கொண்டாடுவது என்பது தேசிய பொழுது போக்காக மாறிவருகிறது.

அதற்கு தமிழக அரசின் டாஸ்மாக்குக்கு முக்கிய பங்கிருக்கிறது. டாஸ்மாக்கின் முக்கிய வாடிக்கையாளர்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடிகாரர்கள்தான்.

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, சாராய விற்பனை ஐந்தாண்டுகளில் இருமடங்காகியிருப்பது நமது தமிழ்நாட்டில்தான் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எந்த பொருளாதார மந்தமும் டாஸ்மாக் விற்பனையை பாதிப்பதில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் 45 கோடியிலிருந்து 60 கோடிகள் வரை  விற்பனைசெய்து சாதனை படைக்கிறது.

இதில் அதிக பாதிப்புக்குள்ளாவது அன்றாடம் உழைத்து வாழ வேண்டியிருக்கும் அடித்தட்டு மக்களும் அவர்களது குடும்பங்களும்தான். நகரமயமாக்கலின் விளைவால் அதிகரிக்கும் உதிரிபாட்டாளி வர்க்கத்தினர் தங்களது உடலுழைப்பை மறக்க குடியையே நாடுகின்றனர். உடல் அலுப்பை மறக்க  குடிக்க ஆரம்பித்து முடிவில் வேலைக்கு செல்ல முடியாமல் குடிபழக்கத்துக்கு  அடிமையாகவே சிலர் மாறிவிடுகின்றனர்

அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டு உழைக்க முடியாத நிலைக்குத் தல்ளப்படுகிறார்கள். முடிவில், படிப்பறிவோ போதிய வேலைவாய்ப்போ இல்லாத இவர்களின் மனைவிகள்தான் குருவித்தலையில் பனங்காய் போல  அனைத்து சுமையையும் சுமக்கிறார்கள். விரக்தியடைந்தவர்கள் சிலர் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெறும் நோக்கில்  தற்கொலையை நாடுகிறார்கள், அதற்கு எடுத்துக்காட்டுதான் பாண்டியன், செல்வி மற்றும் அந்தக் கைக்குழந்தையின் மரணம்.

இதுபோல பல மரணங்கள், தற்கொலைகள் நடக்கின்றன. உண்மையில் பார்த்தால் அவையெல்லாம் தமிழக அரசு செய்துவருகின்ற தவணை முறைக் கொலைகளே! மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் தீட்டாமல், பெருக்கெடுத்து ஓடும் நதியாக டாஸ்மாக்கை எல்லா ஊர்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசுதானே இதற்கு பொறுப்பு?

பாண்டியனது வீட்டைவிட்டு தெருமுனைக்கு வந்தபோது ஒரு கோயில் இருந்தது. அந்தக்கோயில் எதிரில் இரட்டை இலை சின்னத்தை ரோஜாப்பூவாலேயே வடிவமைத்திருந்தார்கள். நான் உங்க வீட்டுப்பிள்ளை என்ற பாடல் மைக் செட்டில் பாடிக் கொண்டிருந்தது. அன்று ஜெயலலிதா அம்மா இலவச அரிசியை வழங்குகிறாராம்.

ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!
டாஸ்மாக் கடை

இப்படி இலவசமாக வழங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது, இவர்களுக்கு? பாண்டியன்களின் உயிரையும் கூடவே அவர்களது குடும்பத்தினரின் உயிரையும் காவுகேட்டுதான் இன்று இலவசங்கள் வழங்கப்படுகிறது. இந்தப்பக்கம் டாஸ்மாக் மூலமாக சுரண்டி அந்தப்பக்கம் இலவசங்களாக அள்ளிக் கொடுக்கிறார்கள், ஏதோ தங்கள் வீட்டுப் பணத்திலிருந்து  கொடுப்பதுபோல. தாலியைப் அறுத்துவிட்டு லேப்டாப்பும் டிவியும் கொடுப்பது எதற்கு?

மகளிர் காவல் நிலையங்களுக்குச் சென்றால் குடித்துவிட்டு பிரச்சினை செய்யும் கணவர்களைப் பற்றிய புகார்கள்தான் முக்கால்வாசி இருக்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களோ அல்லது புதுப்பட ரிலீசோ எதுவாயினும் குடித்துவிட்டு நடுரோட்டில் கலாட்டா செய்யும் இளைஞர்களைப் பற்றிய செய்திகளே அடுத்த நாள் செய்தித்தாளை ஆக்கிரமிக்கின்றன. இது ஏதோ சேரிக்களில் வாழும் பாண்டியன்கள்தான் இப்படி செய்வதாக எண்ணாதீர்கள்.

பல பன்னாட்டு நிறுவனங்களில், டார்கெட்டை எட்டியதற்கோ அல்லது டீம் அவுட்டிங் என்ற பெயரிலோ வெளியில் எங்காவது ரிசாட்டுக்கு அழைத்துச் சென்று தங்கள் பணியாளர்களுக்கு தண்ணி பார்ட்டி வைப்பதும் ஒரு பெரும் கலாச்சாரமாகவே உள்ளது. கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்த புதியவரானாலும் வெகு எளிதாக,  எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் குடிக்கப் பழகி விடுகிறார்கள். இந்தக் கும்பலில்  குடிக்காமல் இருந்தால் தனித்து விடப்படுவோம் என்பதே இவர்கள் சொல்லிக்கொள்ளும் சாக்கு.  இதனை சோஷியல் ட்ரிங்கிங் என்றும் அடைமொழி கொடுத்து அந்தஸ்து தேடிக் கொள்கிறார்கள்.

தனியார்மயத்தினால் வந்த கலாச்சார சீர்கேடு என்றே இதனைச் சொல்லலாம். குடிப்பழக்கத்தால் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களுக்காக மதுக்கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் இணைய வேண்டிய நடுத்தரவர்க்கம்  இப்படி  குடியில் மயங்கி கிடப்பது பெரும் சோகம்தான். இதற்கு நமது கூகிள் பஸ் – ட்விட்டரில் வழிந்தோடும் குடிபுராணமே எடுத்துக்காட்டு.

வெள்ளிக்கிழமை இரவானாலோ அல்லது விடுமுறை தினங்களிலோ வெகு டீசண்டான(!) நமது ட்விட்டர் / பஸ்ஸூலகில் பொங்கி வழிவது டாஸ்மாக்தானே! உள்ளூரோ வெளியூரோ நட்பை துவக்குவதற்கு பாட்டில்தானே பாலமாக இருக்கிறது, அது பிரபலமான இலக்கிய குருஜியாக இருந்தாலும் சரி, இல்லை சினிமா பதிவரானாலும் சரி பதிவுலகம் கூட போதையுலகம்தானே?

ஒன்றும் அறியாத குழந்தையும்கூட  மடிவது மனதை பிசையவில்லையா? ஆரம்பத்தில் அந்த வயதான அம்மா சொன்னது போல, ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள்  குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவனோடு மல்லு கட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களென்றால் நினைத்துப்பாருங்கள். நரகமயமாக அல்லவா இந்த வாழ்க்கை இருக்கிறது?

வல்லரசு நாடென்பது  மக்களின் பிணங்களின் மீது நிற்பதுதான் போலிருக்கிறது. அன்றாடம் குடியினால் பெருகும் இந்தப் பிணங்களைப் பார்த்தாவது உயிருடன் இருக்கின்ற மனிதர்களுக்கு தெளிவு வரவேண்டும். இதை குடிப்பழக்கம் நல்லதல்ல என்ற புத்திமதியால் திருத்திவிட முடியாது. டாஸ்மாக் கடைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் அணிதிரண்டு அடித்து நொறுக்கும் போதுதான் இதற்கு காரணமாக அரசை அசைக்க முடியும். செல்வியின் துயரமான தீக்குளிப்பு கோருவது அதைத்தான்.

______________________________________________________________

வினவு செய்தியாளர்
________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: