privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

-

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கிலடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சீமான், வைகோ, பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் முதலான தமிழின ஆர்வலர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக ஜெயவிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

கோயம்பேட்டில் நடக்கும் வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களும், திரைத்துறையினரும் கூட இப்படித்தான் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து பேசி வருகிறார்கள். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மூவர் தூக்கை ரத்து செய்ய போராடுவதற்கு பதில் இப்படி ஜெயலலிதாவிடம் விசேடமாக கோரிக்கை வைப்பது சரியா? கேட்டால் இது மூவரது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதில் நமது மான அவமானத்தை பார்க்க்க் கூடாது என்றும் நியாயப்படுத்துகிறார்கள்.

மூவரையும் தூக்கில் போடவேண்டுமென்று எப்போதும் பேசி வரும் ஜெயாவிடம் எதை எதிர்பார்த்து இந்தக் கோரிக்கை? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று திமிராக பேசிய இந்த நரி எப்படி தீடீரென்று பரியாக முடியும்?

தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜெயாவே தனது முகம் இதுதான் என்று காட்டியிருக்கிறார். தமிழின ஆர்வலர்கள் வெட்கப்படாமல் அதை பார்ப்பார்களா?

மூவர் தூக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் பாசிச ஜெயா வெளியிட்ட அறிவிப்பு: (நன்றி: தினமணி)

“1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.  இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள்.  27.10.1999 அன்று மேதகு தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை  உயர்  நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த மேதகு ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர்  கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் அவர்கள் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார்.  அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.  இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.  இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப் பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மேலும் பேரறிவாளனின் தாய் திருமதி அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார்.  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட  மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து முதல்வராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  ஆனால் 2000-ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த இதே கருணாநிதி தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.  அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்து விட்டு, இன்று  ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா?  அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை எனக் கருதுகிறேன்.

உச்ச  நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநரோ ஃஅல்லது குடியரசுத் தலைவரோ தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.  இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும்.   அமைச்சரவையின் அறிவுரைப் படி ஆளுநர் அவர்களால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவர் அவர்களாலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்த வித அதிகாரமும் தமிழக முதலமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என  1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது.

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்த நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.  இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத்  தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.  உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.”

இதுதான் ஈழத்தாயின் கருணை கொப்பளிக்கும் அறிக்கை!

தனக்கு அதிகாரமில்லை என்பதை சட்டபூர்வமாக மெனக்கெட்டு சொல்லியிருக்கிறார். அதிலும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், புதிய சூழ்நிலை, ஆதாரங்கள் இருப்பின் அதை மறு ஆய்வுக்குட்படுத்துமாறு சம்பந்தப்ட்டவர்களோ, வேறு யாரோ குடியரசுத்தலைவரிடம் கோரலாம் என்பதையும் கூறியிருக்கிறார். அந்த வேறு யாரோவில் ஏன் புரட்சித் தலைவி இல்லை? ஏன் தமிழக அரசு இல்லை?

கருணாநிதி அமைச்சரவை கருணை மனைவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது நிஜம்தான். அதனால் இன்று தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணாநிதி கோருவது பித்தலாட்டம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஈழப்பிரச்சினையில் கருணாநிதியின் துரோகத்தை ‘புரிந்து’ கொண்டு அவரை எதிர்த்தவர்கள்தானே வைகோவும், சீமானும், பெரியார் தி.கவும்? அதனால்தானே ஈழத்தின் எதிரி ஜெயாவை அவர்கள் தேர்தலில் ஆதரிக்கவும் செய்தார்கள். அந்த அடிப்படையில்தானே ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? அதை ஏற்பதில் என்ன பிரச்சினை?

இந்த நெடிய அறிக்கையில் முதலமைச்சரான தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட நிலையிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்பதை சிலர் கூறுகிறார்கள். அதற்கு நம்பூதிரிபாடு, சி.என்.அண்ணாத்துரை போன்றோர் முதலமைச்சராக இருந்த போது நடந்த வரலாற்றினையும் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

தனக்கு அதிகாரமில்லை என்பதை இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லும் பாசிச ஜெயலலிதா மூவர் தூக்கிலடப்படுவதும் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூட ஏன் சொல்லவில்லை? தனக்கு அதிகாரமில்லை என்றாலும் மூவர் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஏன் கூறவில்லை?

இல்லை குடியரசுத் தலைவருக்கு தமிழக போராட்ட நிலைவரங்களை அறிக்கை மூலம் தெரிவித்து அவரது முடிவை மறு ஆய்வு செய்யுமாறு ஏன் கோரவில்லை? இதற்கு கூட அதிகாரமில்லையா, இல்லை மனமில்லையா? காவிரிப் பிரச்சினையில் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இன்று வரை கருநாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதினாலொன்றும் அரசியல் சட்டப்பிரச்சினைகள் வந்துவிடவில்லை. அதே போல மூவரை தூக்கில் போட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது என்றும் அதனால் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாமே?

கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும், அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதடியதாகட்டும் அந்த ஈடுபாடு இந்த மூவர் மீதான உயிர் குறித்து ஏன் இல்லை? புதிய சட்டசபை அலுவலகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்று மக்கள் பணத்தோடு விளையாடும் ஜெயலலிதா மூன்று பேரின் உயிர் குறித்தும் அதேமாதிரிதான் விளையாடுகிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

மேலும் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு வந்த கோரிக்கைகளை அவர் பத்திரிகைகள் மூலம்தான் அறிந்து கொண்டாராம். அன்றாடம் பல்வேறு ஊர்களில், கல்லூரிகளில் நடக்கும் போராட்டங்களும், ரயில் மறியலும் குறித்து உளவுத் துறை போலீசு அவருக்கு சேதி சொல்லவில்லையா?

மூவரையும் தூக்கில் போட வேண்டுமென்று முந்தாநாள் வரை நரம்பு புடைக்க பேசியவரிடம் ஏன்தான் இந்த தமிழின ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை? 2000-ஆம் ஆண்டு  கருணாநிதி கூட கருணை மனுவை நிராகரிக்குமாறு சொல்தவற்கு பாசிச ஜெயாவின் மீதான பயம்தான் முதன்மைக் காரணம். அதுவே பின்னர் சீமானைக் கைது செய்வதற்கும் காரணமாக இருந்தது. பாசிச ஜெயா தலைமையிலான பார்ப்பனக் கூட்டத்திற்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி ஈழம் தொடர்பான விவகாரங்களில் நடந்து கொண்டார் என்பது ஊரறிந்த விசயம்.

ஆக பாசிச ஜெயா ஒரு போதும் ஈழத்திற்காகவோ, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவோ குரல் கொடுக்க மாட்டார். இனியாவது தமிழின ஆர்வலர்கள் தமது கோரிக்கைகளை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வைத்து போராடட்டும். சொல்லப் போனால் இந்த மூவரையும் எப்படியாவது தூக்கில் போட வேண்டும் என்று குறியாக இருப்பவர்தான் இந்த பாசிச ஜெயா. நம்மைக் கொல்ல வரும் கொலைகாரனிடமே நம்மைக் கொல்ல வேண்டாமென்று மன்றாடுவது என்ன வகை அரசியல்?

இன்னும் ஆதாரம் வேண்டுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதைப் பாருங்கள்:

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”

– புரட்டுத் தலைவி ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் 23.10.2008)