privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாமங்காத்தா: அண்ணா ஹசாரேவை 'என்கவுண்டர்' செய்த தல!

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

-

மங்காத்தா வினவு

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ள H.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விட வில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும். திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது. முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோ இப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகை முரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான் என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

  1. பெங்களூரு : தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னிலை வகிக்கும் நகரம் பெங்களூரு. இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம், அதிகாரிகள் பாலியல் தொல்லை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 125 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த பெண்கள் அமைப்பினர், பிபிஓ மற்றும் ஐ.டி. துறைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும், அதனால் மன அமைதி பாதிக்கப்பட்டு பல்வேறு விளைவுகளுக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளனர். தொல்லைகளுக்கு உள்ளாகும் பெரும்பாலான பெண்கள் போலீசில் புகார்கள் தர மறுக்கின்றனர். இதற்கு அதிக சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு பெண்கள் மவுனம் சாதிப்பதாக அமைப்பினர் குறை கூறுகின்றனர்.

    • ஸ்ஸ’ஸ’ ரொம்ப கண்ணை கட்டுதோ, யப்பா இந்த விமர்சனத்திற்கு யாராவது கோணார் விளக்க உரை இருந்தால் கொஹஞ்சம் கொடுங்கப்பா! என்னமோ சொல்றாங்க ஆன என்ன சொல்றாங்க..????

  2. இன்று காலையிலேயே மஙகாத்தா சம்பந்தமாக ஒரு மொக்கைப்பதிவை உம்மிடம் இருந்து எதிர்பார்த்தேன்..ஆனால் வழக்கத்தை விட இது பயங்கர மொக்கை தம்பி..

  3. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? ./////

    படுகொலையாளி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், தூக்கு தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் உங்களை போல தானே எல்லோரும் இருப்பார்கள்.

      • supera sonnenga karuppu… vimarsanam nu perla ippudi mokkai pota nammalala kandipa thanga mudiyaathu… mankatha padam partha ellorum ketavan mathiri vimarsanam panniorukaaru,athu oru cinema cinema va cinemava mattum pakanum.. atha vittu anna hasarey ithula enga irunthu vanthaaru… kodumai pa ithu…

  4. இது ஒரு நல்ல படமா?
    இந்த படத்தப் பத்தி இவ்வளவு பெரிய விமர்சனமா?
    வெட்டியாக இப்படி எழுதினால் உங்கள் போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்களா?
    வடிவேலுவை விட மோசமான காமெடி பீசுங்கடா நீங்க.
    இதுக்கு மேல பேசினா, உன்னோட பதிவை பத்தி வாதம் செய்ய சொல்லுவே. நீ எழுதறதே ஒரு குப்பை. அதை சென்னை மாநகராட்சி வண்டியை வச்சு தான் அள்ளனும்.

    ஆனா உண்மைய ஒத்துக்கொனும். நாடு கேவலமாக தான் இருக்கிறது.

    ஆனால் அதை உன்னால் மட்டும்தான் எழுதி திருத்த முடியும்ன்னு நினைக்கிற பார்த்தியா?. பிரேம்ஜி காமெடியப் பார்த்து சிரிக்க சொல்ற மாதிரி இருக்கு.

    வினவுக்கு நன்கொடை வேணுமா? சைதாப்பேட்டை நிழற்கொடைக்கு அருகில் உள்ள குப்பை தொட்டியில் ரூபாய் ஐந்து லட்சத்தை vaithullen. போய் எடுத்துக் கொள்ளவும்.

    • supper aa சொன்னிங்க போங்க,

      இவனுங்க செய்றது பொலப்பத்த எவனோ எதயோ பிடிச்சு என்னமோ பண்ணுன கதையா இல்ல இருக்கு……

  5. 1.பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண் கிடைப்பார்கள் என்ற சொல்லுக்கு கை தட்டும் ரசிகனின் மனதில் பணம் உயர்ந்த இடத்தில் இருப்பதைப் போலவே பெண்ணை கேவலமாக பார்க்கும் மனோபாவமும் இருக்கிறதே ! அது பண்புரீதியாக மாறி வந்துள்ளதா ? இல்லைதானே ! பெண் ஒருத்தி காதலிப்பதற்கு ஆணிடம் அவள் காணும் பணம்தான் முன்நிபந்தனை என்பது அப்ரோச் பண்ணி தோற்ற ஆண்களின் மனநிலை. இந்த ஆணாதிக்க வக்கிர முடிபு காலந்தோறும் இருந்துதானே வருகிறது. அதன் வெளிப்பாடுதானே கைதட்டல்.
    2. ஒருத்தனை அல்லது ஒருத்தியை காதலிப்பது சமூக எதார்த்தமல்ல என்று சொல்ல முடியுமா ? நாட்டின் பெரும்பான்மை மக்களது காதல் இப்படி ஒருத்தி அல்லது ஒருத்தனை மையமாக வைத்துதானே இருக்கிறது. விதிவிலக்காக இருக்கும் அஜீத் போன்றவர்களை சமூக நடப்பாக காட்ட முடியுமா ? அல்லது தமது இணைக்கு வெளியே மனதால் காதலிக்கும் நபர்களைப் பெற்றிருப்போர் எல்லோரும்தானே. அவர்கள் எப்போதும் தமிழ் உலகில் இல்லாமலா இருந்தார்கள்? எல்லோரும் ராமன் அல்லது கண்ணகி என்று இருப்பது பத்தாண்டுகளில் காலாவதி ஆகிவிட்டது என்பதை எப்படி சொல்கிறீர்கள்? பணத்திற்காக காதலிப்பது என்று முடிவுசெய்து வந்தவன் என்றால் நீங்கள் சொல்வதை ஓரளவு ஏற்கலாம்.

    • சிங்கம் கிளம்பிடுச்சேய்ய்ய்ய்…

      சிங்கத்திற்கு சிறியவனின் பதில் இதோ –

      1) காதல் என்பதன் மேல் இருப்பதாகச் சொல்லப்பட்ட ‘புனித’ பிம்பம் எதார்த்தத்தில் போலியாகக் கூட அவ்வாறு சொல்லிக் கொள்ளத் தேவையில்லை எனும் நிலைக்கு அடைந்துள்ளதா இல்லையா? எதார்த்தத்தில் அப்படியெல்லாம் ஒரு ‘புனிதக் காதல்’ எந்தக் காலத்திலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் சொல்லும் ‘பெண்ணைக் கேவலமாகப் பார்க்கும்’ காலங்காலமான மனோபாவம் எதார்த்தத்தில் இருந்தாலும் திரையில் தோன்றும் எம்.ஜி.ஆர் / or some XXXXX தாய்க்குலத்தை போற்றுவதாகத் தானே வரும். அந்த வகையில், இனிமேலும் அப்படியொரு முகமூடி தேவையில்லை என்று சொல்லும் மங்காத்தா <>> ஒரு பண்பு மாற்றம் தானே?

      2) உங்கள் கேள்வியே குழப்புவதால் எனது பதிலும் குழப்பலாம் #டிஸ்கி.

      நீங்களே “விதிவிலக்காக இருக்கும் அஜீத் போன்றவர்களை” என்று சொல்லி விட்டு நீங்களே – “தமது இணைக்கு வெளியே மனதால் காதலிக்கும் நபர்களைப் பெற்றிருப்போர் எல்லோரும்தானே. அவர்கள் எப்போதும் தமிழ் உலகில் இல்லாமலா இருந்தார்கள்?” என்று சொல்கிறீர்களே… யாருமே உங்கள் கேள்வியை படிக்கமாட்டார்கள் என்று முடிவே கட்டி விட்டீர்களா?

      போகட்டும்… காதல் என்பது குறித்து சமூக எதார்த்தம் Vs இலக்கிய / நாடக / திரைப்பதிவுகளும். ஒன்றாகத் தான் இருந்ததா? காதல் என்பது வர்க்கம் சாராத அப்பழுக்கற்ற உணர்வு என்றா சொல்கிறீர்கள்? அப்படி இல்லை. ஆனால், இதிலும் ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். காதலுக்கும் பொருளாதாய அடிப்படை தான் இருக்கிறது. இது ஒரு எதார்த்த உண்மை. இதில், நாம் போற்றத்தக்க அம்சம் என்பது ஒரு குறுகிய காலத்துககாவது காதலிக்குக் கிடைக்கும் ஜனநாயக உரிமை என்பது தான். வெகு சிலரிடத்தில் அது தொடரக்கூட செய்யலாம்… அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆனால், இந்த சமூக எதார்த்ததின் குரல்வளையின் மீது நின்று கொண்டு தான் பார்க்காமலே காதல் முதல் பாடிகார்ட் காதல் வரை தமிழ் சினிமாவில் வளைத்து வளைத்து பூச் சுற்றினார்கள்.

      அது காதலைப் பற்றியும் அதன் புனிதம் குறித்தும் நடுத்தர வர்க்க அல்பைகளின் அலைபாய்ச்சல். சொந்த வாழ்க்கையில் துணையைத் தேடுவதில் படு கவனத்துடன் வர்க்க, சாதி ஒப்புமைகள் பார்க்கும் இதே அல்பை தான் திரையிலோ அல்லது இலக்கியத்திலோ தூய காதலைத் தேடித் திரிந்தது. அதே நடுத்தர வர்க்கத்திலிருந்து இன்று கிளம்பி இருக்கும் ஐந்திலக்க அம்பிகளின் காதல் குறித்த அவதானம் என்னவென்று அறிய வேண்டுமெனில் நீங்கள் ஈ.சி.ஆர் ரோட்டுக்குச் செல்லலாம். அல்லது காஃபி பப்புகளில் பார்க்கலாம். இந்த புதிய ரக மிடில் கிளாஸ் மாதவன்களின் இன்றைய ட்ரென்ட் தான் மங்காத்தாவில் வரும் காதல்.

      ஆனால், உழைக்கும் வர்க்கத்தில் இந்தப் போலிப் பூச்சுகளை நீங்கள் காண முடியாது. ஆனா பாரு ஆகாட்டி அத்துட்டு போயிட்டே இரு என்கிற மேம்பட்ட ஜனநாயகத்தை நீங்கள் அங்கே காணலாம். என்பதுகளின் நடுத்தரவர்க்க இளைஞனைப் போல் காதலுக்காக உருகுவதற்கோ மருகுவதற்கோ அவர்களிடம் நேரம் இருப்பதில்லை. கைவிட்டுப் போன காதலியை எண்ணி தாடி வளர்க்கும் பித்துக்குளித்தனம் இருப்பதில்லை.

      நீங்கள் அந்த எண்பதுகளின் இளைஞனை உங்களில் இருந்து விரட்டியடித்து விட்டு மங்காத்தாவைப் பார்த்தால் இந்த விமர்சனம் புரியவரலாம்.

      • எளியரிலும் எளிய நான் மணியிடமிருந்து பதில் இது..
        1. முதலில் நான் எண்பதுகளின் இளைஞனல்ல – மனதாலும் கூட• கைவிட்டுப் போன காதலை நினைத்துப் பார்ப்பது காலத்துக்கு ஒவ்வாத ஒன்று என்றோ அல்லது அது நடுத்தர வர்க்க மனநிலை என்றோ கருதுவது என்ன வகையில் நியாயம். அடிப்படை வர்க்கத்தை சேர்ந்தவர் தமது காதல் நிறைவேறாமல் போனதைப் பற்றி நினைத்து தாடி வளர்த்தால் அது நடுத்தர வர்க்க உணர்ச்சியாக மாறி விடுமா ? அதுதானே விமர்சனம் மூலம் கட்டுரையாளர் சொல்ல வருவது. நிற்க இரண்டாவது கேள்வியை படிப்பீர்கள் என்றுதான் எழுதினேன். மனதால் பிறரை எண்ணாத காதலனோ காதலியோ நம் சமூகத்திற்கு புதுசா என்பதுதான் கேள்வி. அஜீத் அதையும் தாண்டி இருக்கிறார்.
        2. முதற் கேள்வியில் எங்குமே காதலின் புனிதத்தை பற்றி நான் சொல்லவில்லை. பணம் இருந்தால் ஆயிரம் பொண்ணு கிடைப்பாள் என்பதற்கு பணத்தின் உயர்வு நவிற்சி மட்டும் இங்கு பயன்படவில்லை. அதற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள பெண்ணும் இருக்கிறாள். அவளை எள்ளலாக பார்ப்பதும் உள்ளது. மேலும் காசு கொடுத்தா சந்தைல பொண்ணு தானா சிக்குவா என்ற அப்ரோச் பண்ணி தோற்ற ஒருதலைக் காதலனின் ஆணாதிக்க அவதூறுதான் தெரிகிறது எனக் கருதுகிறேன்.

        • //கைவிட்டுப் போன காதலை நினைத்துப் பார்ப்பது காலத்துக்கு ஒவ்வாத ஒன்று என்றோ அல்லது அது நடுத்தர வர்க்க மனநிலை என்றோ கருதுவது என்ன வகையில் நியாயம்.//

          அவ்வாறு தாடியைச் சொரிந்து கொண்டு அலைவது எவ்வகையில் நியாயம் என்று நீங்கள் சொல்லலாமே? எங்காவது உழைக்கும் வர்க்கத்தினரில் இம்மாதிரி பித்துக்குளித்தனங்களைக் கண்டிருக்கிறீர்களா? சில கிராமங்களில் கூட அத்துக் கட்டுவது என்கிற மேம்பட்ட ஜனநாயகம் இருக்கும் போது, நீங்கள் இன்னமும் லைலா மஜ்னு காலத்திலேயே சஞ்சரிக்கிறீர்களே…? இதன் நியாயத்தை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

          //மனதால் பிறரை எண்ணாத காதலனோ காதலியோ நம் சமூகத்திற்கு புதுசா என்பதுதான் கேள்வி.//

          நீங்கள் ஒரே கேள்வியில் இரண்டு முரண்பட்ட நிலையை எடுக்கிறீர்கள். ஒன்று காதல் புனிதம் என்று சொல்கிறீர்கள். அது தோல்வியில் முடிந்தால் தாடியும் பீடியும் குடியும் மேண்மை என்கிறீர்கள். அதாவது டிப்பிக்கல் தேவதாஸ்… அடுத்து, மனதால் என்னுவது சாதாரணம் தானே என்கிறீர்கள்.. இந்த முரண்பாடான நிலையை நீங்கள் எடுப்பதற்கான அடிப்படை என்ன?

          அஜித் எதையும் தாண்டவில்லை. உடனடியாக நீங்கள் பக்கத்தில் இருக்கும் காஃபி ஷாப்புக்கு ஒரு பத்து நாட்கள் தொடர்ந்து செல்லவும்.

          இன்னொரு விஷயம்.. உணர்ச்சிகள் / உணர்வுகள் விஷயத்தில் நடுத்தரவர்க்கத்துத் தடுமாற்றமும், உழைக்கும் மக்களிடையே நிலவும் எதார்த்தத்தோடு பொருந்திப் போகும் பண்பும் ஒன்றல்ல என்பதை நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்…

          //முதற் கேள்வியில் எங்குமே காதலின் புனிதத்தை பற்றி நான் சொல்லவில்லை//

          தென் வாட் ஈஸ் திஸ்? ===> “கைவிட்டுப் போன காதலை நினைத்துப் பார்ப்பது காலத்துக்கு ஒவ்வாத ஒன்று என்றோ அல்லது அது நடுத்தர வர்க்க மனநிலை என்றோ கருதுவது என்ன வகையில் நியாயம்”

          அது புனிதமோ வெங்காயமோ இல்லையென்றால் என்னாத்துக்கு நினைத்துப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? தூக்கிக் குப்பையில் போட்டு விட்டு போக வேண்டியது தானே?

          • அய்யா மன்னார்சாமி
            அறுத்துக்கட்டுவது மேம்பட்ட ஜனநாயக வடிவமாகவே இருந்தாலும், ஒரே காதல் என்பது பாசிசமாகி விட்டதா என்ன? காதலையும் திருமணத்தையும் கட்டுரை போல குழப்பி அடிக்கலாமா அன்பரே
            உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் அதுவும் குறிப்பாக காதல் போன்ற இயல்பான விசயங்களில் நடுத்தர வர்க்கத்திற்கு தடுமாற்றமாக இருக்கும்தான். ஒரே காதலி என்பதில் தடுமாற்றம் இருப்பதில்லை. பெரும்பான்மை உழைக்கும் மக்களிலும் இது பொருந்தும் என நினைக்கிறேன். அஜீத் ஒன்றும் உழைக்கும் வர்க்கம் இல்லைதானே. இதில் உதிரியின் கலாச்சாரத்தை காதலைத்தானே வெளிப்படுத்துகிறார்.
            இந்த உதிரிகளின் காதலை வியந்தோத முடியுமா என்ன‌
            ம‌றக்க முடியாத காதலை மனதில் வைத்திருப்பவன் நடுத்தர வர்க்கமாகும் கெமிஸ்டிரி தான் புரியவில்லை. விளக்கினால் நன்றாக இருக்கும்.

            • நான்மணி அவர்களே,

              முதலில் ஒன்றைச் சொல்லுங்கள் “காதல் மாறவே மாற முடியாத உணர்ச்சியா? மறக்கவே முடியாத காதல் என்று ஒன்று உள்ளதா?”

              ஆம் என்பது உங்கள் பதிலானால் நாம் தொடர்ந்து விவாதிக்கலாம். இல்லை என்றால் உங்களின் இத்தனை நேர விவாதமும் அஸ்திவாரம் இல்லாமல் விழுந்து விடும்.

              முதலில் இதை பைசல் பண்ணிட்டு மற்றவற்றை பின்னால் பார்க்கலாம்.

              கடைசியாக,

              //அஜீத் ஒன்றும் உழைக்கும் வர்க்கம் இல்லைதானே. இதில் உதிரியின் கலாச்சாரத்தை காதலைத்தானே வெளிப்படுத்துகிறார்.
              இந்த உதிரிகளின் காதலை வியந்தோத முடியுமா என்ன‌ //

              அஜிதின் பாத்திரம் உழைக்கும் வர்க்கத்தை பிரதிபலிப்பதாக நான் சொல்லவில்லை. நான் சொன்னது – “புதிய ரக மிடில் கிளாஸ் மாதவன்களின் இன்றைய ட்ரென்ட் தான் மங்காத்தாவில் வரும் காதல் ” நீங்கள் மேலே சொல்லியிருக்கும் வாக்கியத்தின் இரண்டாம் பகுதியைத் தானே இத்தனை நேரமாக நான் பேசுகிறேன்.

              விவாதம் எங்கே வந்தது? நீங்கள் சொன்ன – // கைவிட்டுப் போன காதலை நினைத்துப் பார்ப்பது காலத்துக்கு ஒவ்வாத ஒன்று என்றோ அல்லது அது நடுத்தர வர்க்க மனநிலை என்றோ கருதுவது என்ன வகையில் நியாயம்.//

              இதை முதலில் விளக்குங்கள் – அல்லது மேலே இருக்கும் எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

              • மாறாத காதல் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாமே மாறக் கூடியதுதான். ஆனால் மறக்க கூடிய காதலுடன் கூடவே மறக்க முடியாத காதலும் இருக்கத்தான் செய்கிறது. அம்மா வை எப்படி மாற்றி யோசிக்க முடியாதோ அது மாதிரி அது. சில காலச் சூழ்நிலைமைகளில் அதனை நீங்கள் மறக்கலாம், அல்லது மறப்பது போல பாவிக்கலாம். உதாரணமாக த்ரிஷா வை ஏமாற்றும் அஜீத் ஐ பொறுத்தவரை அது வெறும் கத்தரிக்காய். ஆனால் த்ரிஷா க்கு ?! தெரிந்து தோற்பதற்கும் தேவையில்லாமல் தோற்பதற்கும் காதலில் நிரம்பவே வித்தியாசம் உண்டு.
                இதில் உதிரியின் காதலை வியந்தோத முடியாது என்பதை நீங்களே பேசுவதாக ஒப்புக்கொண்டதால் சொல்கிறேன். நாம் பேச வேண்டியது நவீன தொழிற்துறை மற்றும் சேவைத்துறையின் பாட்டாளி வர்க்க காதல் எப்படி இருக்கும் என்பது பற்றித்தான். அது சோசலிச சமூகத்தில் எப்படி மாறும் என்பது வரை பேசலாம். மங்காத்தா வழங்கும் காதல் திடீர் பணக்கார ரவுடிகளின் காதல். பேட்டைக்கு ஒருத்தனாக வலம் வரும் இக்கதாநாயகர்களின் காதலை எப்படி வியந்தோத முடியும் ?
                தேவதாஸ் வகை தாடி வளர்க்கும் காதலை நக்கலடிப்பது காதலில் சிக்கியவர்களை நக்கலடிக்கும் குரூரம் போல தெரிகிறது. நமது நாட்டில் சாதி மதம் போன்ற நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்துதான் காதல் வளர வேண்டியிருக்கிறது. ஆகவே காதல் தன்னளவில் ஜனநாயகத்தன்மையுடன்தான் தோன்றுகிறது. வளரவும் செய்கிறது. அந்தப் போராட்டத்தின் ஊடாக வளரும் காதல் தோற்பது என்பது போராட்டத்தின் தோல்விதான். போராடியவர்கள் தாம் தோற்றதை நினைத்துப் பார்ப்பது வெறும் சென்டிமெண்டா என்ன?

                • //ஆனால் மறக்க கூடிய காதலுடன் கூடவே மறக்க முடியாத காதலும் இருக்கத்தான் செய்கிறது//

                  கல்வெட்டு கல்வெட்டு 🙂

                  //தேவதாஸ் வகை தாடி வளர்க்கும் காதலை நக்கலடிப்பது காதலில் சிக்கியவர்களை நக்கலடிக்கும் குரூரம் போல தெரிகிறது. நமது நாட்டில் சாதி மதம் போன்ற நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையை எதிர்த்துதான் காதல் வளர வேண்டியிருக்கிறது. ஆகவே காதல் தன்னளவில் ஜனநாயகத்தன்மையுடன்தான் தோன்றுகிறது. வளரவும் செய்கிறது. அந்தப் போராட்டத்தின் ஊடாக வளரும் காதல் தோற்பது என்பது போராட்டத்தின் தோல்விதான். போராடியவர்கள் தாம் தோற்றதை நினைத்துப் பார்ப்பது வெறும் சென்டிமெண்டா என்ன?//

                  ஆம். உண்மை தான். தேவதாஸ் டைப் காதலில் சிக்கியவர்களை கிண்டலுடன் தான் பார்க்க முடிகிறது என்னால்.

                  இடையில் நீங்கள் சொன்னதோடு எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..

                  ஆனால், //போராடியவர்கள் தாம் தோற்றதை நினைத்துப் பார்ப்பது வெறும் சென்டிமெண்டா என்ன?//

                  இதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், இதை இங்கே விவாதிக்கும் எண்ணம் இல்லை. அவ்விவாதம் இந்தப் பட விமரிசனம் என்கிற பதிவில் நோக்கத்தைக் கடந்தது என்பது என் கருத்து. வேறு சந்தர்பத்தில் பார்க்கலாம் 🙂

                  • இந்த விவாத்தின் முடியையும் அடியையும் இன்னமும் படிக்கவில்லை, இருந்தாலும் கல்வெட்டில் ஒரு துண்டு போட்டு வைக்கும் வரலாற்றுக்கடமையை யாருமே இல்லாத கடையாக இருந்தாதே ஆத்தனும் எனும்போது இங்கே ஆத்தாமல் இருக்க முடியுமா???

                    @@@@@@@@அந்தப் போராட்டத்தின் ஊடாக வளரும் காதல் தோற்பது என்பது போராட்டத்தின் தோல்விதான். @@@@@@@@@

                    @@@@@@@@@ போராடியவர்கள் தாம் தோற்றதை நினைத்துப் பார்ப்பது வெறும் சென்டிமெண்டா என்ன? @@@@@@@@@

                    @@@@@@@@@ ஆனால் மறக்க கூடிய காதலுடன் கூடவே மறக்க முடியாத காதலும் இருக்கத்தான் செய்கிறது@@@@@@@@@

                    காதலில் எதற்காக போராட்டம் நடைபெறுகின்றது என்பது புரியவில்லை.. என்ன இலக்கை வைத்து போராட்டம் இங்கே நடக்கின்றது?

                    ஆனாலும் ஏதோ ஒரு போராட்டம் நடைபெறுகிறது என்றே வைத்துக்கொள்வோம்…

                    வெற்றியும் தோல்வியும் போராட்டத்தோடு இணைந்த ஒன்று. வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி, ஒரு சினிமாவுக்கு சுபம் போடுவதைப்போல என்ட் கார்டு போட்டு கிளம்பிவிடுவதுதான் போராட்டத்தின் லட்சணமா? வெற்றயடைந்தால் வெற்றியை தக்கவைக்கவும், நெறி பிறழாமல் தெடரவும் தொடர்ந்து போராட வேண்டும்…

                    போராட்டத்தில் தோற்றுப் போனால் ஏன் தோற்றோம் என்று ‘மறக்காமல்’ பரிசீலித்து அந்த அனுபவத்தை தொகுத்து மீண்டும் அதே தவறு நிழலாமல் போராட்டத்தை தொடரவேண்டும்… அரசியலே தெரியாத சாதாரண மக்களே இவ்வாறுதான் வாழ்க்கை நடத்துகின்றனர் எனும் போது கம்யூனிஸ்டுகளுக்கு இதிலெல்லாம் லெக்சர் தேவையா என்ன?

                    யதார்தம் இவ்வாறு இருக்கும் போது அது என்ன ””’மறக்கவே முடியாத காதல் ””’ எதுக்காக மறக்கனும்? நல்லா நினைவு வச்சிருந்து அடுத்த்தபா காதலிக்கும் போது ஏதோ போராட்டம்னீங்களே (அது என்னான்னு தெரீல) அதுல ஜெயிக்குற வழியை பார்ப்பதுதான் அறிவியல்.

                    • இடையில் வந்தாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணத்திற்கு நன்றி கேள்விக்குறி அண்ணே
                      எண்டு கார்டு போட வேண்டாம் என்பதுதான் என் வாதம். மன்னார்சாமி அண்ணன்தான் அடுத்த படத்துக்கு டிக்கட் வாங்கணும்கிறாரு. நீங்க கூட கடைசியா அதைத்தான் சொல்றீங்க• எனக்கு அந்த படத்த ரெண்டாவது வாட்டி பாக்குறது கொஞ்சம் பிடிச்சிருக்கலாம். இல்லைன்னா அந்தப் படமே சமூக வாழ்வில் எங்காவது தலை காட்டுமானு தேடல் துவங்கலாம். # வரலாற்றுக் கடமை முக்கியமல்லவா ?.

                      அடுத்த‌ போராட்டம் என்ப‌து கூட‌ ந‌ப‌ர்க‌ளுக்கான‌ திட்ட‌த்தில் உள்ள‌தைப் பொறுத்து மாறுப‌டும்தானே ! முத‌ல் போராட்ட‌மே முடியாத‌ போது அடுத்த‌ போராட்ட‌த்தை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு அஜெண்டா ஆக்க‌ முடியாதுதானே ! இதை நீவிர் ஒத்துக் கொண்டால் த்ரிஷா வின் தோல்வியை ஏற்றுக்கொள்ள‌ முடியாது # ம‌றுப‌டியும் முருங்கை ம‌ர‌மா ?

                    • நோ நோ நோ … யு காட் மீ ராங்….. போராட்டத்தை கைவிடக்கூடாது படிப்பினைகளுடன் அடுத்த கட்டத்துக்கு முன்னேற சொன்னேன் … ஆனா அதுக்கு முன்னால இந்த போராட்டம் போராட்டம்னு சொல்றீங்களே அது என்னான்னு கேட்டேன்

                    • போராட்டம் எப்போதுமே அடுத்த கட்டத்துக்கு மாறிக் கொண்டுதானே இருக்கும். மன்னார்சாமி அண்ணன் எப்பவுமே வரம்புகள் தாண்டியதா நெனைச்சிக்கிட்டு ஒதுங்கிய பிறகும் சளைக்காமல் போராடும் உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

                      போராட்டம் போராட்டம் னு சொல்றீங்களே அது என்ன என்ற கேள்வி புரியுது. கொஞ்சம் யூ டர்ன் எடுத்து லெப்ட்ல அப்டியே ஓரமா பிடிச்சு பாருங்க புரியும்ன நெனைக்கேன்.

                    • இல்லிங்க மணி, நானும் தேடிப் பாத்தேன்.. நீங்க சொல்ற போராட்டம் எதுன்னு புரியல… எனக்கோசுரம் ஒரே ஒரு தபா சொல்லுங்களேன், அது என்ன போராட்டம்? என்ன இலக்கு?

  6. 3. கிருஷ்ணா ஸ்வீட்சுக்கு பிள்ளையார் இலவசம் என்பதை ஏற்கும் பக்தனுக்கும் மங்காத்தா பார்த்த ரசிகனுக்குமான உறவாக என்ன சொல்ல வருகிறீர்கள் ?
    4. அண்ணா ஹசாரே வுக்காக போராடியவர்கள் மங்காத்தா போனார்கள் என்ற அடிப்படையில் எழுதி உள்ளீர்கள். ஆனால் இதனை பருண்மையாக இவர்கள்தான் மறுநாளும் போனார்கள் என்ற அடிப்படையில் சொல்ல வில்லை.
    5. சூதாட்டத்திற்கான பணத்தைத்தானே இருவரும் கொள்ளை அடித்தார்கள். இதை எப்படி தவறு என்ன சொல்ல முடியும்?
    6. பணத்தை எப்படியாவது அடையலாம் அதற்கு நட்போ காதலோ ஒரு பொருட்டல்ல என சமூகம் கருதுவதுதான் படம் ஓட காரணம் என்றால், மதுரையின் நட்பை முன்வைத்து வந்த சுப்ரமணியபுரம் வகை படங்கள் வெற்றி பெற என்ன காரணம் ?
    7. ஒரு காதலில் நிற்பதாலே அதனை ஏகபத்தினி விரதம் என்று பார்ப்பது சரியல்ல• சில உறவுகள்தான் ஓரளவு கச்சிதமாக பொருந்துகிறது. அது சித்தப்பா, மாமா, தாத்தா, சகோதரி, நண்பன், சகோதரன், நண்பி, காதலன், காதலி என எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஒன்றுக்கு மேல் இருந்தால் பரிசுத்தமற்றவர் என பெயர் வருமோ எனப் பயந்து இருப்பவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. இன்னொன்றையும் உனக்கு பிடித்திருப்பதுதான் காலத்தின் கட்டாயம் எனக் காலம் கூட கோர முடியாதுதானே
    8. கடைசியாக கடைசிவரை புரியாத ஒன்று அண்ணா வின் அரசியலிற்கும் மங்காத்தாவின் கலை உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பு.

    • 3) பதிவிலிருந்து… //இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார்//

      4) சில கம்பெனிகளிலேயே டிக்கெட் ஸ்பான்ஸர் பண்ணாங்க. ரெண்டாவது… மாயாஜால் போறவன் அண்ணாவை எதிர்த்தால் தான் அதிசயம். ஒன்னாந்தேதி மாயாஜால்ல 81 ஷோவுமே ஃபுல். 🙂

      5) ரெம்பக் கஸ்டம்ங்க… கொள்ளையடித்து ராபின் ஹுட் மாதிரி மக்களுக்கா கொடுத்தார்கள்? ‘ஆயிரம் பொண்ணுங்களுக்காகத்’ தானே பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கு என்று அஜித்தே படத்தில சொல்றாரு..

      6) மதுரையின் நட்பை வைத்தல்ல – பொறுக்கித்தனதை ரசித்ததாலேயே சுப்பிரமணியபுரம் ஓடியது. நட்பை ரசிக்கவென்று படம் ஒடுவதாக இருந்தால் உன்னைச் சரணடைந்தேன் பிச்சுக்கிட்டு ஓடியிருக்கனும் 🙁

      7)கேள்வி புரியலை.

      8) பதிவிலிருந்து — //அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

      //

      • மன்னார்சாமி அண்ணே
        இன்னும் மூன்றாவது கேள்விக்கு அதாவது மங்காத்தாவுக்கும், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இலவச பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு என்னானு புரியவே இல்லீங்க• எனக்கு புரியற மாதிரி கொஞ்சம் வெளக்க முடியுமா ?
        மாயாஜால் போனவங்க எல்லாமே அண்ணாவுக்கு கொடி பிடிச்சவுங்க என எப்படி சொல்கிறீர்கள். பிடிக்கவில்லைனா சொல்றீங்க என என்ட்ட திரும்ப கேக்க கூடாது ?
        சூதாட்டப் பணத்தை கொள்ளையடித்த்து பற்றி சொன்னது ராபின் ஹூட்டுக்காக அல்ல• சூதாட்டம் என்பதே முதலாளித்துவ பொருளாதாரத்தின் உலகளாவிய தன்மை அல்லவா .? அதனை எதிர்ப்பதுதானே சரியானது?
        பொறுக்கித்தனத்தால்தான் படம் ஓடினாலும் இந்த அளவுக்காவது நட்பும் இருக்கத்தானே செய்கிறது. இன்னும் உதாரணத்திற்கு சில படங்கள் உள்ளன‌
        ஒரு காதலில் தொடர்ந்து இருப்பதால் அது ஏக பத்தினி விரதமல்ல• இன்னொன்றும் பிடிக்க வேண்டும் (முன்னது தோற்கையில்) என கட்டாயமாக்கவும் முடியாது. தொடர்ந்து தோற்றதிலே இருப்பவர்கள் தேங்கிப் போனவர்களும் அல்ல என்பதுதான் என் வாதம்.
        கடைசி கேள்விக்கு டபாய்ச்சுட்டீங்களே அண்ணே

  7. “அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை?”

    வீட்ல சாவு விழுந்தாலே 10 நாள் துக்கம் அனுசரிச்சிட்டு, அடுத்து கசப்பு தல ந்னு சொல்லி அசைவம் சாப்பிடறது நம்ம வழக்கம்.

    முதல் நாள் போராட்டத்துக்கு போயிட்டு அடுத்த நாள் சினிமாக்கு போவதில் என்ன தப்பு இருக்குன்னு தெரியல ?

    “நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?”

    ஆண்டவன் விலை மதிப்பற்றவன் என்பதாக பொருள் கொள்ளுங்க சார்….

  8. இவ்வளவு நாளா கிராமம்/குப்பத்து ரவுடியை கதாநாயகனாக காட்டினார்கள். இப்போது நடுத்தர வர்க்க ரவுடியை கதாநாயகனாக காட்டுகிறார்கள். கிருஷ்ணா ஸ்வீட்சில் இனிப்பு சாப்பிடுகிறவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள், மேட்டுக்குடியினர்கள் என்று சொல்வதை கண்டிக்கிறேன். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒருவர் அங்கு இனிப்புகள் வாங்கி சாப்பிடு முடியாதா என்ன? நான் அங்கு இனிப்புகள் வாங்குவது உண்டு. சில சமயம், அவர்கள் விலையுயர்ந்த பெட்டியில் கொஞ்சம் இனிப்பு வைத்து அதிக விலைக்கு விற்பதை பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த பெட்டி தேவை இல்லாததாலும், விலைக்கு ஏற்ற பொருளாக இல்லாதலும், அதை வாங்க மாட்டேன்.

    பல சமயம் நீங்கள் மிகைப்படுத்தி யோசித்து, நிலை தடுமாறி இன்னொரு முலைக்கு போய்விடுகிறீர்கள்.

  9. “அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை?”

    படத்தில், கதையில் கெட்டவனை ரசிப்பது வேறு. இதே அஜித் நிஜத்தில் கிரிக்கெட் சூதாட்டம் செய்தால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    • ஆமாம். அஜித் தனது வருமானத்தை வெளிப்படையாக சொல்லி வருமானவரி கட்டி வருகிறார் என்று மக்கள் நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களைப் போலவே???

  10. Shame on vinavu…I m quitting today from seeing this site.
    All these days i thought u r not in favour of any actor when you abused Rajini,Vijay.

    I thought you have some sort of communism & good mentality in that..

    But Never expected you also go behind any actor as you did now..

    SO you also follow parcism going behind an actor and calling “thala”..

    Dont ever talk about Rajinikanth… He is earning money with his hardwork..
    DOnt you feel ashamed of abusing him??

    If you are a supporter of ajith, why you are abusing other actors.??
    It means you look like die hard fan of an actor..
    Shame on you again..

    God bye..

  11. அருமையான பதிவு.
    நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறிப்போன மனித மனங்களுக்கு நியாயம், அநியாயம், நேர்மை, வாழ்க்கை முறைமைகள் போன்றவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் மங்கிப் போகும் குழப்பமான மனநிலை ஏற்பட்டிருக்கிறது.
    இதை அருமையாக வெளிப்படுத்துகிறது கட்டுரை. இவ்வளவு நுட்பமான மாறுதல்களுக்குள்ளான சமூக ‘மனிதனின்’ பிரக்ஞையை விளக்க முயலும் முயற்சி தான் அன்னா ஹசாரேவையும், மங்காத்தாவையும் இணைக்கும் வரிகள்.
    எழுதியவரின் பெயர் (அல்லது அடைமொழி) வெளியிடுங்கள். வினவு என்று பொத்தாம் பொதுவாக இருப்பதை விட இது கட்டுரையாளர்களை, எழுத்தின் சாயலை உணர்வதற்கு உதவி செய்யும்.

  12. வினவின் இரட்டை வேடம் :

    ௧)எந்திரன் படத்தை கேவலமாக விமர்சித்தது ..ரஜினியை கேவலமாக திட்டியது .. கலாநிதி மாறன் தயாரிப்பு
    ௨)மங்காதாவின் புகழ் பாடுவது ..கருணாநிதி குடும்ப தயாரிப்பு ..வெளியீடு .

    சந்தேகம் உறுதியானது …

    அப்போ கருணாநிதி குடும்பத்தின் மீது பாசிச வினாவுக்கு என்ன விசுவாசம் , அக்கறை …?

    ஜெயாவை பாசிச என விமர்சனம் செய்வதை எண்ணி வினவு வெட்கப்பட வேண்டும் ..
    நான் ஜெயாவின் ஆதரவாளனும் இல்லை , கருணாநிதியின் கையாளும் இல்லை ..

    இதனை நாள் வினவின் மீது வாய்த்த மதிப்பு , இந்த பதிவின் மூலம் நாறிவிட்டது …

    தைரியம் இருந்தால் இதை வெளியிடவும் ..

    • ஸ்ஸ்ஸப்பாஆஆஆ….. மொதல்ல விமர்சனத்த படிச்சீங்களா உண்மை? மங்காத்தாவின் புகழ் எங்கே பாடப்பட்டுள்ளது?

      • tholare…indha pathivu ennamo Mankathava padathai paarka thoondum vilambaram maari iruku..

        vinavu adhai thanake uriya baaniyil anna hazare udan kalanthu solliruku avlo thaan ..

        idhe vinavu indha padathai edutha Dayanidhi alagiri, udhayanidhi pathi oru pathivum idhu varaikum varalaye…

        indha padathai edutha panam avanga enna nyayama vivasayam senja sambarichaanga..illa vinavu thaanam pannucha..

        ipadi oru kedu ketta valiyil sambathicha panathula edutha padatha pathi pesuradhe thappu….

      • தோழரே … இது நெசமா மங்காத்தா படத்தின் விளம்பரம் மாதிரி தானே தெரியுது ..
        அழகிரி ஊரே அடிச்சு சம்பாரிச்ச காசுலே வந்த படம் தான இது ..இதை பத்தி பேசுறதே தப்பு ..இதுல ஒப்பிடு வேற …கன்றாவி ..

        இது வரைக்கும் அழகிரி அண்ணனை பற்றியும் ஸ்டாலின் அண்ணனை பற்றியும் வினவில் எதுவம் வந்ததாக தெரிலையே … 🙂

        • கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாக்க எப்படி தெரியும்னேன்… போயி திமுக என்கிற கேட்டகிரியில் கிளிக்கி பாருங்க.. இல்ல மேலே சர்சு பாக்சில் தேடிப்பாருங்க.

          மத்தபடி வினவு என்ன விமர்சனம் எழுதினாலும், அந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லமுடியாத மொக்கை கூட்டம் இதுபோல புலம்புவது வாடிக்கை
          ரஜினியை விமர்சனம் செய்தால் கமல் ரசிகன்
          அதிமுகவை விமர்சனம் செய்தால் திமுக ஆளு
          ஆர்எஸ்எஸ் ஐ விமர்சனம் செய்தால் பாகிஸ்தான் தீவிரவாதி

          போங்கய்யா…………

          • ஊசி அண்ணே … நான் நடிகர்களை நடிகர்களாக தான் பாக்கணும்குறேன்…
            நான் ரசிகனாக இருந்தால் இதுக்கு பதிலே எழுதியிடுக மாட்டேன் ..

            என் ஆதங்கம் என்னனா ஒரு நடிகரை மட்டும் குறிப்பிட்டு தாக்கி விட்டு …அதே மற்றொரு நடிகரின் படத்தை சமூக செய்திகளோடு ஒப்பிடகூடாதுங்குறேன் …

            இங்கே ரஜினியா இருந்தாலும் சரி , கமலா இருந்தாலும் சரி ..

            நான் ரஜினியை பற்றி வினவு விமரிச்ததை தவறாக சொல்லலே ..

            அதே நேரத்தில் ரஜினியை படத்தில் மட்டும் ரசி , நேச வாழ்கையில் கொண்டாடதே என்னும் வினவின் கருத்து சந்தோசமே …

            ஆனால் மற்றொரு நடிகரின் படத்தை நம் வாழ்க்கையோடு ஒப்பிடுவது நியாயமா ..

            சிந்தியுங்கள் …சிந்தித்து என் மீது தப்பிருந்தால் திருப்பியும் திட்டலாம் 🙂

            • உண்மை, இதுக்கு பேருதான் பல்டி… மாறன் குடும்பத்தை திட்டினார்கள் ஆனால் கருணாநிதி குடும்பத்தை திட்டவில்லை என்று வாய் கூசாமல் புளுகிவிட்டு இப்போ பல்டி அடிப்பது கேவலமா இருக்கு….

              @@@ரஜினியை படத்தில் மட்டும் ரசி , நேச வாழ்கையில் கொண்டாடதே என்னும் வினவின் கருத்து சந்தோசமே …@@@

              இது வினவு கருத்தா..வெளங்கிடும்….நீங்க தலைப்பை மட்டும் படிச்சிட்டு பின்னூட்டம் எழுதுற பார்ட்டி போல, அதான் இப்படி மானாவாரியா பினாத்துறீங்க
              மங்காத்தாவை வினவு ஒரு கேடுகெட்ட படம் ஏன் ஒரு தறிகெட்டு ஓடுகிறது என்று இன்றைய சமூக நிலைமைகளை கொண்டு விளக்கியிருக்கின்றனர்.. இதையெல்லாம் புரிஞ்சுக்க கொஞ்சமாவது முயற்சி பண்ணனும். அட்லீஸ்டு பின்னூட்டங்களில் அதை வழி மொழிந்தவர்களையாவது படிக்கனும் அதைவிட்டுப்போட்டு லூசுத்தனமா கருணநிதி குடும்ப பாசம்னு உளரினா அதுக்கு பேருதான் விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாத கோழைத்தனம்..

              @@@ஆனால் மற்றொரு நடிகரின் படத்தை நம் வாழ்க்கையோடு ஒப்பிடுவது நியாயமா ..@@@

              இதுவரைக்கும் வினவு சினிமா பதிவு ஒன்னேஒன்னையாவது படித்ததுண்டா? தெரியாமத்தான் கேக்கறேன், கருத்து சொல்றதுக்கு முன்னால சரியாத்தான் எழுதறோமான்னு கொஞ்சூண்டு உழைப்பு கூட செலுத்த முடியாத நீங்க எந்த துணிச்சலில் விவாதத்துக்கு வற்றீங்க?????

      • உண்மை, உங்கள் ஆதங்கம் நியாயமானதே! நான் தான் கட்டுரையை சரியாக புரிந்துப் படித்திருக்கவில்லை. மேற்கண்ட மறுமொழிக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

  13. ரொம்ப நீண்ட பதிவு !

    ஆனால் வரிக்கு வரி உண்மை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதுதான் வாழ்க்கையில் அடிநாதமாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

    முதலாளித்துவம் சொல்வதும் அதுதான். முதலிடுவது நான், அதனை எப்படி வேண்டுமானாலும் பெருக்க எனக்கு உரிமை உண்டு.

    அதுவே சமூகத்தில் நுகர்வு வெறியை தூண்டுகின்றது. அப்போதுதான் பண்டங்களின் விற்பனையும், அதன்மூலம் லாபமும் பெருகும்.

  14. ஒரே நேரத்தில் ஒரு பெண்ணை காதலிக்கவும் முடியும் மற்றொரு பெண்ணை காமக்கிழத்தியாகவும் வைத்துக் கொள்ள முடியும் என ஆண்களின் பார்வை மாறியிருப்பது காதலின் உணர்ச்சியில் ஏற்பட்ட மாற்றமல்ல• அது ஆணாதிக்க திமிரின் பச்சை வடிவம். கலாச்சார சீரழிவு. இதனை சரி என ஏற்க வேண்டும் என்பதற்காக சாதாரண மக்களின் ஜனநாயக பூர்வமான அறுத்துக்கட்டும் திருமண முறையை இழுப்பது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது மன்னார்சாமி அண்ணே

    காபி ஷாப் க்கு போற வயசு லேது

    • நான் இரண்டையும் வேறு படுத்திக் காட்டியிருக்கிறேன். சரியாகப் படியுங்கள் மணி சார்.

      //அது காதலைப் பற்றியும் அதன் புனிதம் குறித்தும் நடுத்தர வர்க்க அல்பைகளின் அலைபாய்ச்சல். சொந்த வாழ்க்கையில் துணையைத் தேடுவதில் படு கவனத்துடன் வர்க்க, சாதி ஒப்புமைகள் பார்க்கும் இதே அல்பை தான் திரையிலோ அல்லது இலக்கியத்திலோ தூய காதலைத் தேடித் திரிந்தது. அதே நடுத்தர வர்க்கத்திலிருந்து இன்று கிளம்பி இருக்கும் ஐந்திலக்க அம்பிகளின் காதல் குறித்த அவதானம் என்னவென்று அறிய வேண்டுமெனில் நீங்கள் ஈ.சி.ஆர் ரோட்டுக்குச் செல்லலாம். அல்லது காஃபி பப்புகளில் பார்க்கலாம். இந்த புதிய ரக மிடில் கிளாஸ் மாதவன்களின் இன்றைய ட்ரென்ட் தான் மங்காத்தாவில் வரும் காதல்.

      ஆனால், உழைக்கும் வர்க்கத்தில் இந்தப் போலிப் பூச்சுகளை நீங்கள் காண முடியாது. ஆனா பாரு ஆகாட்டி அத்துட்டு போயிட்டே இரு என்கிற மேம்பட்ட ஜனநாயகத்தை நீங்கள் அங்கே காணலாம். என்பதுகளின் நடுத்தரவர்க்க இளைஞனைப் போல் காதலுக்காக உருகுவதற்கோ மருகுவதற்கோ அவர்களிடம் நேரம் இருப்பதில்லை. கைவிட்டுப் போன காதலியை எண்ணி தாடி வளர்க்கும் பித்துக்குளித்தனம் இருப்பதில்லை
      //

      முதலில் சீரழிவை எங்கே ஏற்கச் சொன்னேன்? மங்காத்தாவில் அஜித் காதலைக் குப்பையில் வீசுவதும், உண்மையான காதல் கைகூடாமல் போனவர்கள் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வேறு துணையை தேடுவதும் வேறு வேறு. முந்தைய நிலை பச்சை அயோக்கியத் தனம் என்றால், பிந்தையது தான் அறிவுப் பூர்வமானது. துரோகமிழைத்து ஏமாற்றுவதும், ஏமாந்தவர்கள் வேறு துணையை நாடுவதும் கூட சாராம்சத்தில் வேறு வேறு தானே? இதை எனது மொழியறிவுக்குட்பட்ட அளவில் சொல்லியிருக்கிறேன்.

      எதாவது பாத்து போட்டுக் குடுங்க சாரே 🙁

  15. கிண்டல், நக்கல், எள்ளல் எல்லாமும் கலந்து கட்டி, சமூக கண்ணோட்டத்தோடு மங்கத்தாவின் இரண்டாவது பாதி மாதிரி (!) எகிறி அடிக்கிறது.

    எங்களை மாதிரி ஆட்கள் கொஞ்சம் புரிந்து கொள்வது சிரமம் தான். நாங்கெல்லாம் டல் ஸ்டூடண்ட். ஆசிரியர் எழுதுகிற கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ள, மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். பொறுமையாக விவாதிக்கவேண்டும். எங்களை மாதிரி ஆட்கள் தான் இங்கு அதிகம். இவர்களை மனதில் கொண்டு கட்டுரையின் ஆசிரியர் எழுத வேண்டுமாய் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறேன். அதற்கு மேலே சில பின்னூட்டங்களே சாட்சி! 🙂

    • வாங்க•. விசயத்துல எதாவது சொல்வீங்கனு பார்த்தா, எஸ்கேப் ஆகிறீங்களே.. காதல பத்தி சொல்லுங்க‌

    • நான் வழி மொழிகிறேன்…
      கட்டுரையை இப்படி கரடு முரடாக எழுதினால் சொல்ல வருவது யாருக்கும் போய்ச்சேராமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்….

  16. வினவு மற்றும் பின்னூட்டம் இடும் தோழர்களுக்கு, பார்பன பாசிஷ்டுகளின் பத்திரிக்கை பிரதிநிதி தினமல(ம்)ர் இன்று “ராஜிவ் கொலை சொல்லாத கதை” என்கின்ற தலைப்பிட்ட செய்தியில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தற்கொலை செய்து கொண்ட செங்கொடியின் மரணத்தை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளார் அதாவது “இலங்கையில் இனஅழிப்பு போராட்ட சீசன் முடிந்து இப்போது அனைத்து தமிழினவாதிகளும் மூன்று தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யச் சொல்லி போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்” என்று அப்பட்டமாக அண்டப் புழுகை புழுகியுள்ளான்.

  17. மனித சமூகத்திற்கு தவறான விசயங்களை முன்வைக்கும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும், அது திரைப்படமாக இருந்தாலும் சரி அல்லது தனிமனித கருத்துக்களானாலும் சரி, விமர்சித்தே ஆக வேண்டும்.

    கட்டுரை நீளமாக இருந்தாலும், புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சிரமமாக இல்லை.

    தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  18. அருமையான திரை விமரிசனம். வெங்கட்பிரபு டீம் என்கிற இந்த மொக்கை கூட்டம் நடுத்தர வர்க்கத்தின் கண்ணோட்டத்தை தான் எப்போதுமே பிரதிபலிக்கிறது. சென்னை 600028 அதற்கு துவக்கம். இது அதன் உச்சம். உலகமயமாக்கல் உருவாக்கியிருக்கும் நுகர்வு வெறி பிடித்த நடுத்தர வர்க்கத்திற்கு துளியும் சமூக அக்கறை கிடையாது. காதல், நட்பு துவங்கி தேசம் வரையிலான அதனுடைய அனைத்து உறவுகளும் காரியவாதம் என்கிற இழையிலேயே கோர்க்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தனக்கு சமூக அக்கறையும், தேசப்பற்றும் இருப்பதாக காட்டிக்கொள்வதற்கு தான் கிரிக்கெட், மெழுகுதிரி, அன்னா ஹசாரே எல்லாம்.

    நடுத்தர வர்க்கத்தின் காரியவாத கண்ணோட்டத்தை அம்பலப்படுத்த இந்த திரைப்படம் மிகப்பொருத்தமானது. அதை மிக அருமையாக இந்த விமரிசனம் செய்திருக்கிறது. கிருஷ்ணா ஸ்வீட்ஸில் துவங்கி அன்னா ஹசாரே அவரை அனைத்து ஒப்பீடுகளும் மிகப்பொருத்தமானவை. இது பெரும்பாண்மை சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தை பிரதிபலிக்கும் கலை. இதை அவசியம் பு க வில் வெளியிடுங்கள்.

  19. வில்லத்தனமா அல்லது ஹீரோத்தனமா என்பதில் அடங்கும் ரசிகனது மனம் ஒன்றிலிருந்து இன்னொன்றை ரசிக்க விரைகையில் ரசிகனது ரசிகத்தனம் கலாப்பூர்வமாகத்தானே உள்ளது படைப்பை ஒப்புநோக்கையில்.
    லட்சுமி ராயை ரசிக்கும் ரசிகன் காதலி அல்லது மனைவிக்கு அவளை ஏற்றுக்கொள்வானா எனக் கேட்டுப் பாருங்களேன்.?
    பழைய ஜெயகாந்தனின் நாவல் ஒன்றில் தனது கணவனை வாத்தியார் எம்ஜியாராக பாவிக்கும் கதாநாயகி ஒருத்தி வருவாள். சில நேரங்களில் சில மனிதர்கள் என நினைக்கிறேன். இது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கதை எனக் கருதுகிறேன்.
    லட்சுமி ராயை பிடித்திருக்க காரணம் ரசிகனுக்கு பலான படத்திற்கு தனி தியேட்டர் அல்லது படம் தேவையில்லாமல் எல்லாம் ஒரே இடத்தில் ஷாப்பிங் மால் போல கிடைப்பதுதான்

    • நமது உறவினர் அல்லது தெரிந்தவர் ஒருவன் நல்லவனாக நடிக்கிறான் என்றால் அவன் கெட்டவன் என்று சாதரணமாக சொல்லுவோம்.ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக எம்ஜியார் நல்லவனாக பல் படங்களில் நடித்தார் .ஆனால் மக்கள் அவரை நல்லவன் என்றே நம்பினார்கள்.ஒரு நல்லவன் நல்லவனாக நடிக்க வேண்டியதில்லை.
      நமக்கு வேண்டாதவருக்கு ஒரு நோய் வந்தால் அவன் செய்த பாவம் என்பார்கள்.ஆனால் எம்ஜியாருக்கு 1984 இலே ஒரு கோடி ரூபாய் நோய் வந்தது என்றால் எவ்வளவு பெரிய பாவங்கள் அவர் செய்திருக்க வேண்டும் .
      இந்த காம கொடூரனை நல்லவன் என்று நம்பும் மடமை எங்ஙனம் வந்தது?

    • மறக்க முடியாத காதல்,
      மறக்க முடிந்த காதல்,
      பார்க்காமலே காதல்,
      கடசீல சொல்லும் காதல்,
      கடசீ வரைக்கும் சொல்லாத காதல்
      காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் காதல்
      காதலையே தியாகம் செய்யும் காதல்
      ஒருதலைக் காதல்
      முக்கோணக் காதல்
      முற்றும் கோணலாகிப்போன காதல்….
      .
      .
      .
      .
      கடவுள் முரளி வாழ்க 🙂

      #No-Tengshan-Phuleees இந்த வீடியோவை பாத்து ரிலாக்ஸ் ஆவுங்க

  20. “குடிப்பது எனது உரிமை ”
    அண்ணா ஹசாரே வை கண்டுபிடித்து அவர் புகழ் வளர்த்து ஆதரிக்கும் Times of India இந்திய இளைங்கர்களை “குடிக்கும் உரிமை பெற”” போராட அழைக்கிறது !!
    http://timesofindia.indiatimes.com/its-my-life/campaign.cms
    (This is the first in a series of Times campaigns against irrational and outdated laws.)
    This is about respect and liberty. This is about standing up to the arbitrary and autocratic exercise of power. This is about telling the neta class,
    “It’s My Life.
    If You Can’t Help, At Least Don’t Hinder.”
    அரசியல் சாசன சட்டம் குடிப்பதை தடை செய்கிறது
    Aricle 47 of the Constitution says,
    “The State shall regard the raising of the level of nuitrition and the standard of living of its people and the improvement of public health as among its primary duties and, in particular the State shall endeavour to bring about prohibition of the consumption except for medical purposes of intoxicating drinks and of drugs which are injuririous to health.”

    According to Article 37, Directive Principles of State Policy are not enforceable by any court but they are nevertheless fundamental in the governance of the country and “it shall be the duty of the State to apply these principles in making laws.”

  21. ஓருவேளை வினவு,விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பாதரோ….இந்த அராட்டு அராட்டுராரு

  22. வினவுவை என்கவுனட்ர் செய்ய் ஷ்ரேயா கோஷலின் குரல் போதும், மங்காத்தா அஜித் தேவையில்லை.தல ரசிகர்களை விட வினவு படத்தை ரசித்து ரசித்து பார்த்திருப்பது புரிகிறது.ஆபாசம் ஆபாசம் இது என்று ஆபாசத்திற்கு ஆபாசமாக விளக்கவுரை எழுதி மகிழும் ஒரு moralist எழுதியது போல் உள்ளது விமர்சனம்.இதற்கும் நடிகையின் ஆபாசத்தினைக் கண்டிக்கிறோம் என்று பக்கம் பக்கமாக ‘ஆபாச’ புகைப்படம் வெளியிடுவது வேறுபாடு இல்லை. பார் அவள் உடலழகை ஆபாசமாக காட்டுகிறாள்,
    பார் இப்படி ஆடை விலகியுள்ளது, அப்படி விலகியுள்ளது என்று எழுதி வாசகர் கவனிக்காவிட்டாலும் ஆபாசத்தை திட்டிக் கொண்டே ரசிக்க சொல்லிக் கொடுப்பது போல் மங்காத்தை ரசிக்க சொல்லிக் கொடுக்கிறது உங்கள் விமர்சனம்.வெங்கட் பிரபு நிச்சயம்
    இதை விரும்பிப் படிப்பார்.

    மங்காத்தா பார்த்து ரசித்தவர்கள் காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டோம்,எங்களுக்கு காசு கொடுப்பவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் யோக்கியர்களாக இருக்க வேண்டும் என்று விதிமுறை வைத்தா இணையத்தில் உண்டியல் குலுக்குகிறீர்கள்.இல்லை உங்களுக்கு ஆதரவும் தரும் புர்ச்சியாளர்களெல்லாம் கிருஷ்ணா ஸ்வீட்டில் எதுவும் வாங்குவதில்லையா.புர்ச்சியாளர்களுக்கு எல்லாமே ஜாலிதான் அன்னாவானாலும் சரி வினவானாலும் சரி மங்காத்தாவானாலும் சரி.வினவு ஆதரவு புர்ச்சியாளர்கள்
    gillete உபயோகிப்பத்தில்லையா இல்லை பியுட்டி பார்லர் போவதில்லையா.வினவிற்கு காசு கொடு, தல நடிப்பை ரசி.இதுதான் புர்ச்சி பண்பாடு.
    ஆனால் தல நடிப்பதை ரசித்ததை பகிரங்கமாக எழுதாதே.சேகுவாரா படம் போட்ட டிஷ்ர்ட்டுடன் போனால் மக்டோனல்ட் கடையில் விடமாட்டேன் என்றா சொல்கிறான்.
    இல்லை எக்ஸ்பிரஸ் மால்களில் சேகுவாரா படம் போட்ட டிஷர்ட் கிடைப்பதில்லையா.
    அன்னா ஹசாரே வாழ்க, மருதையன் வாழ்க தல அஜித் வாழ்க – எல்லாவற்றையும் என் ஜாய் பண்ணத் தெரிய வேண்டும்.ஷ்ரேயா வரும் ஜாய் அலுக்காஸ் விளம்பரம் முதல்
    மங்காத்தாவில் வரும் காட்சிகள் வரை. என் ஜாய் பண்ணிய பின் புர்ச்சி விமர்சனம் எழுத வேண்டும்.எதற்கும் புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரத்தை மக்டோனல்டிலும்,டொமினோ பிஸாவிலும் இலவசமாக வாசலில் நின்று கொடுத்துப் பாருங்கள், கூடவே வினவில் இணைய உண்டியல் பற்றிய நோட்டிசையும். அதில் கொஞ்சமாவது காசு தேராதா.

  23. காதலை தூக்கியெறியும் பொருளாக ஆண்கள் பார்ப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அதில் காதலை மாத்திரம் தூக்கி எறியவில்லை. த்ரிஷாவின் பெண் என்ற அடையாளத்தையும்தான் தூக்கி எறிகிறார் அஜீத். இளக்காரமாக இருப்பதால் தானே இது நடக்கிறது. இந்த ஆணாதிக்க நடவடிக்கைக்கு குடை பிடிக்க முடியாதுதானே. காலம் அப்படி எல்லாம் ஒன்றும் மாறி விடவில்லை. 90 களின் இளைஞர்களது கனவு அது. எதார்த்த்த்தில் இன்னும் நிறைய ஆண்டுகளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் மாத்திரமே காதலிப்பதுதான் பெரும்பான்மை சமூகத்தில் காணக் கிடைக்கும். அதில் உடைப்பை ஏற்படுத்தும் கலகக்காரர்களை பின்நவீனத்துவ ஆதரவாளர்கள் வாழ்த்துவார்கள். அந்த வகையில் இந்தப் படம் அராஜகத்தை கோருவதும் அவர்களுக்கு பிடித்திருக்கும்.
    பித்துக்குளித்தனமான காதலால் சாதாரண ஓலை வீட்டிலிருந்து மாடி வீடு வரை தேவதாசுகளால் நிரம்பி வழிகிறது தேசம். அஜீத் போன்ற காரியவாதிகளுக்கோ செட்டியார் போன்ற மாமனார்கள்தான் தேவை. ஆசைக்கு லட்சுமிராயுடன் படுக்கை, ஆஸ்திக்கு கிராமத்து மாமனாராக ஏதாவது செட்டியார் சிக்கினால் வரதட்சிணை என்ற பெயரில் ஆட்டையப் போடுவது என்ற இரண்டு விழுமியங்களுக்கு இடையில் நிற்பவர்கள்தான் நடுத்தர வர்க்க சிட்டி சிட்டிசன் கள். அவர்கள் பெரும்பான்மை சமூகமல்ல•

    • மங்காத்தா திரைப்படத்தில் அஜித் (தன்னுடைய காதலை அல்ல) த்ரிஷாவின் காதலை தூக்கி எறிவதற்கு காரணமாக காட்டப்பட்டது பணமா? ஆணாதிக்க திமிரா?

      • ஆணாதிக்கம் பத்தி பேசும் கனவான்கள் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு பிகரை செட பண்ணி ஒரு நாள் தள்ளுங்க பாப்போம்!!பர்சு ஓட்டையாக்கி போனப்புரமும் பெண்ணியம் பெசுரீங்கலான்னு பாப்போம்!

  24. தொகுப்பாக‌,
    1. ஆணாதிக்க வக்கிரம் பணத்தால் மாற்றீடு செய்யப்பட்டால் அதனை கால மாற்றம் எனக் கொள்ளுதல் சரியா ?
    2. ஒருவனை ஒருத்தி அல்லது ஒருத்தியை ஒருவன் காதலிப்பதும், காதல் கைகூடாத போது அதனை எண்ணி வருந்தியபடியே இருப்பதும் கால மாற்றத்துக்கு ஒவ்வாத ஒன்றா ?
    3. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இலவச பிள்ளையாருக்கும் மங்காத்தா பார்க்க போனவனுக்குமான உறவு என்ன ?
    4. மங்காத்தா போன ஐடி செட் எல்லாம் அண்ணா ஹசாரே ஆதரவாளர்களே என்பது எவ்விதம் ?
    5. சூதாட்டத்திற்கான பணத்தை கொள்ளையடித்த போலீசு நல்லவரா கெட்டவரா ? சூதாட்டம் கெட்டதா நல்லதா ? எது முதன்மையான குற்றம் ?
    6. மதுரையின் பொறுக்கித்தனத்துடன் வரும் நட்பு பணத்தை மீறி சில இடங்களில் இருப்பது பணம்தான் எல்லாம் என்ற ஏ கிளாஸ் மாயையை சுக்குநூறாக்கி விடுகிறதே ஏன் ?
    7. பத்தாம்பசலி தேவதாசு காதலில் இருந்து தாடி வளர்ப்பவர் இன்னொரு காதலில் சிக்க முடியாவிட்டால் அவர் பத்தாம் பசலியா ? பழைய சமூகத்தின் விழுமியங்களை அவர் கொண்டுள்ளாரா ? எனில் புதிய சமூகத்தின் விழுமியம்தான் என்ன ?
    8. அண்ணாவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி என மங்காத்தா எதை முன்னிறுத்துகிறது ?

    • 1. ஆணாதிக்க வக்கிரம் பணத்தால் மாற்றீடு செய்யப்பட்டால் அதனை கால மாற்றம் எனக் கொள்ளுதல் சரியா ?
      சரியாகாதுதான், அப்படி செய்யப்பட்டிருப்பதாக விமர்சனத்தில் எங்கும் சொல்லப்படவில்லையே…….மேலும், இரண்டையும் சேர்த்துதான் இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளது. படத்திலும் ஒன்றிர்கு மாற்றாக மற்றதை வைக்கவில்லை, மாறாக இரண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆணாதிக்க வக்கிரம், பணம்)

    • 2. ஒருவனை ஒருத்தி அல்லது ஒருத்தியை ஒருவன் காதலிப்பதும், காதல் கைகூடாத போது அதனை எண்ணி வருந்தியபடியே இருப்பதும் கால மாற்றத்துக்கு ஒவ்வாத ஒன்றா ?

      ஒருவனை ஒருத்தி அல்லது ஒருத்தியை ஒருவன் காதலிப்பது தவறல்ல மாறாக அது கைகூடாத சமயத்தில் அதைப்பற்றி அச்சமயத்திற்கு வருந்துவது இயல்பானதே……மாறாக வருந்தியபடியே இருப்பது கால மாற்றத்திற்கு அல்ல எக்காலத்திற்கும் தேவையில்லாத ஒன்றாகும்.

    • கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இலவச பிள்ளையாருக்கும் மங்காத்தா பார்க்க போனவனுக்குமான உறவு என்ன ?

      //இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். //

      கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இலவச பிள்ளையார் Vs விநாயக்கின் பணவெறி பற்றிதான் குறிப்பாக விவாதிக்கப்படுள்ளது. மாறாக இலவச பிள்ளையார் Vs மங்காத்தா பார்க்க போனவனுக்குமான உறவு பற்றி சொல்லவில்லை.

      • 4.மங்காத்தா போன ஐடி செட் எல்லாம் அண்ணா ஹசாரே ஆதரவாளர்களே என்பது எவ்விதம் ?

        மங்காத்தா போன/போகாத பெரும்பான்மையான ஐடி செட் எல்லாம் அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் என்பது உண்மைதானே……சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் அதுவே பெரும்பான்மையானதாகிவிடாதே….நீங்களே சொல்லுங்கள்

    • 5.சூதாட்டத்திற்கான பணத்தை கொள்ளையடித்த போலீசு நல்லவரா கெட்டவரா ? சூதாட்டம் கெட்டதா நல்லதா ? எது முதன்மையான குற்றம் ?

      கேள்வி கேக்கனுமேனு கேக்கறிங்களானு நினைக்கிறேன்

      6. மதுரையின் பொறுக்கித்தனத்துடன் வரும் நட்பு பணத்தை மீறி சில இடங்களில் இருப்பது பணம்தான் எல்லாம் என்ற ஏ கிளாஸ் மாயையை சுக்குநூறாக்கி விடுகிறதே ஏன் ?
      புரியல

    • 8. அண்ணாவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி என மங்காத்தா எதை முன்னிறுத்துகிறது ?

      /ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக./

      மற்றும் பெரிய மாடி வீட்டில் வசிப்பவன் கக்கூசில்லாதவன் ரோட்டிலோ அல்லது தண்டவாளத்திலோ ககூஸ் போகும்போது அதைத் திட்டுபவனின் எண்ணமும்,அவனைப் போன்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஹசாரேவுக்காக விளக்குப்பிடிப்பதற்குமான உறவை முன்னிறுத்துகிறது.

      அதுபோல இங்கு ககூஸ் தனக்காக – விளக்கு பிடித்தல் நாட்டுக்காக.

  25. அப்துல் காதரும் அம்மாவாசையும்///
    .
    .
    அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் தொடர்பு உண்டு சாமியோவ்!!ஏன்னா அமாவாசை கழித்து மூன்றா பிறை பாத்துதானே ரம்சான் கொண்டாடுறாங்க?

  26. அட வினவு கோலிவுட்டின் கோமாளியாக ஆனது ஏன்?உண்டியல் காசு தீர்ந்துடுச்கோ?

  27. Mankatha is just a film. A differnt film breaking the stereotypes. Why do you make this as an issue and take it as the sole representative of today’s culture! Seeing the film or liking it doesn’t mean I am accepting the concepts portrayed in that film. Come out of the film once you are out of the theater. Film is for entertainment and relaxation. It is just a film and don’t expect to learn or receive some message out of it. Grow up.

    • hi trichy….

      this post is not making an issue, it just giving the conscious to the people that the so called morality and ethics of the common man are keep on dimming.u accepted that its out of all stereotype of movies, thats what the post has been published.and one more think u cant leave the film jst like that as an entertainment,since it makes great impact in day today life of people.can u tell me one place thats not having any impact of movies???….so u pls grow and think evrything in that aspect.

      • ‘u cant leave the film jst like that as an entertainment,since it makes great impact in day today life of people.can u tell me one place thats not having any impact of movies’

        haha..Well said. It makes great impact ! Yes, it does on those who put their brain aside.

        Well.. Then, Adults only films, films with full of violence and vengence, physcho and horror films must have had an impact on all those who take the film for their personal development.

        Finally, I agree with you. As long as people take the film seriously and follow the actors blindly/consciously, I have nothing to say.

        I wish to stay like this. Don’t wanna grow up and let the vinavu stay as it is.

  28. இந்த மாதிரியான மொக்கை பதிவு போடுறவுங்களுக்கெல்லாம் சரியானபடி தண்டனை கொடுத்தாத்தான் ஆத்தா மனசு குளுரும்..

  29. //தி இஸ் மை fucking மணி//
    இதில் money என்பதை ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கலாம். அதுவும் அதற்கு முந்தய வார்த்தயயும் சேர்த்து படித்தால் இன்னும் விவகாரமாக இருக்கிறது 😀
    ஒரு விவேக் காமெடியில் வருவது போல “மணி மணி மணி” 😛

  30. உங்களுக்கு காலைல ஒன்னுக்கு சரியா வராததுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும், அண்ணா ஹசரேவும் தான் காரணம், இதை எதிர்த்து சமுதாய விழிப்பு உணர்ச்சி வரமாதிரி புரட்சியா ஒரு பதிவு எழுதுங்க தோழரே!. நாங்க எல்லாம் சொம்போட ரெடியா இருக்கறோம்.

    • உண்மைதான் அமேரிக்கா காரனால்தான் இங்கு மினரல் வாட்டர் என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்க முடியாததன் காரணத்தால் ஒன்னுக்கு சரியா வர மாட்டேன்கிறது.

      அடுத்து அண்ணா ஹசாரே போராட்த்தை கண்விழித்து போரடியாதால் உடம்பில் நீர் வற்றி ஒன்னுக்கு வரலை.

  31. ஒரு மொக்க படத்துக்கு இவ்வளவு ரகளையா? கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமடி போல, திருப்பி… திருப்பி… அதையே கமெண்ட்ல சொல்லிகிட்டு இருக்காங்க…

    திருடனாய் பார்த்து, திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாதுனு… தலைவர் பாடினதுதான் இங்கயும் சரி வரும்…

    பசையான சம்பளம் வாங்குறவங்க, அப்படிதான் இருப்பாங்க… நம்ம சொன்னாலும், அவன் திருந்த போறதில்ல…

    ஆனா… அன்னா ஹாசாரே… போராட்டம்… மங்காத்தா… எல்லாம் டைம் பாஷ்க்குத்தான்… காசு நிறைய இருக்குறவன், அப்படித்தான் இருப்பான், அவனுக்கு எப்படி போராட்ட உணர்ச்சி வரும்… அது உண்மைய கஷ்டப்பட்டு உழைக்கறவங்களுக்கு வருவது…

  32. என்ன ரஜினி பாடுபட்டு சம்பாதிதாரா? போங்கடாங்க…….
    அருமையான ஆரய்ச்சி செய்து எழுதியுள்ள கட்டுரை. வர வர வின்வு கட்டுரை எல்லாம் பின்னி பெடலெடுக்குது. அதுவும் க்ரிஷ்னா சுவீட்டு சூபெர் உதாரனம்.

    மக்களே! வெளினாட்டில் திரைப்படதுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு பற்றிய தெளிவு இருக்கு ஆனா இஙக இல்ல.

  33. /வினவுவை என்கவுனட்ர் செய்ய் ஷ்ரேயா கோஷலின் குரல் போதும், மங்காத்தா அஜித் தேவையில்லை/.ஷ்ரேயா வரும் ஜாய் அலுக்காஸ் விளம்பரம் முதல்
    மங்காத்தாவில் வரும் காட்சிகள் வரை. என் ஜாய் பண்ணிய பின் புர்ச்சி விமர்சனம் எழுத வேண்டும்.//
    EXCELLENT

  34. எப்போதும் வினவில் வரும் கட்டுரைகளுக்கு எதிராகவே என்னிடம் விவாதிக்கும் என் நண்பர் முதல்முறையாக வினவின் கட்டுரையை பாராட்டி எனக்கு அனுப்பிய செய்தி

    நண்பரே! வினவில் வந்த cinema விமர்சனங்களிலே மிகச் சிறந்த விமர்சனம் மங்கத்தா படம்தான் என்று நான் சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில் சம கால அரசியலை குறிப்பாக அன்ன ஹசாறேவை இணைத்த விதம் அருமை. பணம் பணம் பணம் வேறென்ன வாழ்க்கையில் இருக்கிறது? அதனால்தான் நான் உங்களிடம் பேசும்போது சொன்னேன் இந்த மாதிரி படம் எடுத்திருக்கவே கூடாது என்று. ஆனால், எடுத்த அளவில் அதன் முழு impact நம் மீது படர விட்டிருப்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.ஒரு வகையில் சொல்லப் போனால் இது வேறு வழியில்லாமல் பணத்திற்காக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நம்மை போன்ற சராசரிகளின்(!?) மன அவஸ்தையா இந்தப் படம் என்று இந்த விமர்சனம் யோசிக்க வைத்தது, நன்றி வினவுக்கும் உங்களுக்கும்.

  35. பணத்தை மையமாக வைத்தே எதையும் பார்க்க வேண்டும் என்பது இன்று நேற்றல்ல சொத்துடைமைச் சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பழமொழிகளும்கூட இருக்கின்றன. மாறிவரும் இன்றைய உலகச்சூழலில் பணத்தின் முக்கியத்துவம் மேலும் தீவிரமடைந்துவருகிறது. பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பது நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒரு பண்பாய் உருப்பெற்று வருகிறது. அதனால்தான் பணத்திற்காக எல்லாவகையான செயல்களையும் மக்கள் செய்ய முனைகிறார்கள்.

    நாம் எதையெல்லாம் தவறு என்று நினைத்து வந்தோமோ அவை எல்லாம் இன்று நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் விளைவுதான் இன்றை சமூகத்தில் நாம் காணும் பல குற்ற நிகழ்வுகள். குற்ற நிகழ்வுகளையே இரசிக்கும் அல்லது ஆராதிக்கும் மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். இது ஏதோ தனி நபர்களால் உருவாக்கப்படுவதில்லை. இன்றைய சமூக அமைப்பு இத்தகைய போக்கிற்கு வித்திடுகிறது.

    படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இதைவெளிப்படுத்தும் ஒரு படமாக மங்காத்தா வந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்தப் புரிதலிலிருந்தே வினவின் மங்காத்தா விமர்சனத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்.

    அன்னா ஹசாரே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற ஒப்பீடுகள் இங்கே தேவைதானா என்பதை புரிந்து கொள்வது சற்று கடினம்தான். ஆனால் உங்களுக்குள் இருக்கும் உங்களை யார் என்று உரசிப் பாருங்கள். உண்மை பளிச்சிடும்.

    நன்றி!

  36. எப்படி இப்படி பெரியதொரு கட்டுரையினை உங்களால் வடிவமைக்க முடிகிறது வினவு…? நீங்க கிரேட் போங்க!

  37. பஙகு சந்தை சுதட்டம் தான். அப்படியனால் சொதது வியாபரமும் சுதட்டம் தான்.

  38. தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன…

    hahahaha idha paarthale theriyuthu indha gimbal Gaandu pudichu alayara gumbalnnu… enda ungala idhellam kudikka vendamnnu LCD vangavendamnu yaaru sonna… kovil annadhanamna linea mundi adichikittu ofuvaanunga aana adhe saamiyayum hindu madathayum thttuvaanunga… enna double standards!!!!

  39. 2009 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கமும் சென்னை ஐஐடியும் சேர்ந்து மாணவர்களுக்காக 500 ரூபாயில் லேப்டாப் உருவாக்குவதாகவும், அவை 2010ல் விநியோகத்திற்கு வரும் என்றும் கூறி அந்த லேப்டாப் மாடல் ஒன்றை அப்போதைய அமைச்சர் மாண்புமிகு அர்ஜீன்சிங் வெளியிட்டு பல்லைக் காட்டினார். அதற்குப் பின் 2010ல் லேப்டாப் வரவில்லை…அதற்குப் பதிலாய் அடுத்த மாண்புமிகு கபில்சிபல் வந்தார்….உற்பத்திச் செலவு 500 இல் இருந்து 5000 ஆகி விட்டதாகவும் இந்த லேப்டாப்புகள் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விநியோகத்திற்கு வரும் என்றும் கூறி மறுபடியும் அதே மாதிரி ஒரு ஃபங்ஷன் வைச்சு இவர் பல்லையும் லேப்டாப்பையும் காட்டினார்…இப்போது அவர்கள் குறிப்பிட்ட காலமும் கடந்து சென்று வெகுநாளாகி விட்டது…குறைந்தபட்சம் அது என்ன கதியில் இருக்கிறது என்றும் கூட அறிவிப்பு கிடையாது…அவர் உயர்கல்வி அமைச்சர்…தயாரிப்பு நம்ம ஊர் ஐஐடி…இதுதான் இவங்களோட உண்மையான லட்சணம்….இதென்ன அமெரிக்காவின் ஏதாவதொரு துறைக்குக் கொடுத்த வாக்குறுதியா என்ன….இவர்கள் விழுந்தடித்து நிறைவேற்ற…அல்லது பதில் சொல்ல…சாதாரண மக்களுக்கான திட்டங்கள் தானே…இதுதான் இவர்களது அக்கவுண்டபிளிட்டி…வெங்காயம்…வெளக்கெண்ணெய்….

  40. “அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?”

    whats the *****ng ur talking?

    எதிலும் குறை மட்டுமே கானும் வினவு ஒழிக..

    “வினவு” pls learn to appreciate good things.

  41. “”இந்திய பயனாளர்களுக்கென இயங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கையை யாரும் கணிக்கவில்லை. ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு தர அதிகரிப்பாக மாறவில்லை. தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.”””

    சாட்சாத் உங்கள் வரிகள்தான், உங்களோட இன்னொரு கட்டுரையில் இருந்து சுட்டேன், உங்களுக்கும் நல்லா பொருந்துது இல்ல! வினவு சுயவிமர்சனம் செய்து பாக்க நேரம் சரி இல்லயா?
    யாருக்காவது மாற்று கருத்து இருந்தா பதில் எழுதுங்க!!!!!!!!!!!!!!!!

  42. the article writer should do a movie as a hero and also a director then he ll realize how is the film making, just blabbering is not at all help us, just u try once and tell how is it

    foolish article

  43. yellamay maelirunthu adi marathai vetturaavan thaney ?-kalai ulaham–thaney puyal -yenna pannuraha -namma ouru talai .pattali.anna hasaray .sysyan.thalay super anti corruption ??? speakerrs.

Leave a Reply to sirajkcinayath பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க