privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

-

செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை

 கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல்  பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.

குழு உறுப்பினர்கள்

1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உ
ரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை

4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,

5.            ரிராகவன், வழக்கறிஞர்,

6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,

7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,

8.            ம. லயனல் அந்தோணிராஜ்

____________________________________________________

2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள்,  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை,  குற்ற எண்கள்.300, 459, anan& 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா!

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.

கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில்சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி  ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.”

“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா  டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :

பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி.  கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி.   கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.

காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக  இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி.  அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.”

“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் சாதியினர் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை முழுஅளவில் ஒத்துழைக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தரை தளம்  உலர்வதற்குள் தேவர் பேரவை என எழுதி வைத்ததுடன் அந்த இடத்தில் மலம் கழித்து அசிங்க படுத்தி சென்றனர். இது வெளியில் பல பேருக்கு தெரியாது. போலீசிடம் சொல்லியதுடன் நகராட்சியில் மூலம் அகற்றினோம்.”

“சம்பவ தினத்தன்று போலீஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வஜ்ரா வாகனத்தில் தண்ணியே இல்லை. அதை பயன் படுத்தாமல் போலீசாரே தீ வைத்துக் கொளுத்தினர். பொது மக்களுடைய பைக், கார் போன்றவற்றை போலீசாரே அடித்து சேதப்படுத்தினர். ஆய்வாளர் சிவக்குமார் இரண்டு கையிலும் துப்பாக்கி வைத்து மக்களைப் பார்த்து சுட்டுள்ளார். ஆறு பேரை படுகொலை செய்ததோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 1000 பேர் மீது வழக்குப் போட்டு கிடைப்பவரை கைது செய்வதற்காக கிராமம், கிராமமாக மக்களை அச்சுறுத்த தேடுதல் வேட்டை செய்கிறது. மக்கள் காடுகளிலும், வயல்வெளிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். பரமக்குடி நகரத்தில் தியாகி இமானுவேல் குருபூஜைக்காக வைத்த பிளக்ஸ் பேனர்கள்; அனைத்தையும் போலீசு கிழித்து கையிலே வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை வழக்கிலே சேர்த்து கைது செய்ய கிராமங்களுக்கு செல்கிறது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வலுவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது சாதி மோதல் கிடையாது. சாதி வெறியோடு தலித் மக்கள் மீது நடத்திய போலீஸ் தாக்குதல். இந்த படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.”

வழக்கறிஞர் முத்துக்கண்ணன் கூறும் பொழுது, “போலீஸ் தான் கலவரத்தைத் தூண்டியது. காலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் 50 பேர் தான் சாலை மறியல் செய்தனர். போலீஸ் நினைத்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை, லத்தி சார்ஜை தவிர்த்திருக்கலாம். சசிகலா நடராஜனின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. தேவர் சாதிக்காரர்களை கூப்பிட்டு பேசியிருக்கிறார். குருபூஜை நடத்தக்கூடாது என்று போலீசை தூண்டிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது சாதிக்கலவரமாக சித்தரிக்க போலீஸ் முயல்கிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைக் கூட சாதி வெறியோடு போலீஸ் எட்டி உதைத்திருக்கிறது. ஆறு பேரில் சிலரை காட்டுமிராண்டித் தனமாக போலீசு; அடித்தே கொன்றிருக்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆணையர் செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன், டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.

சிவா, வடிவேல் ஆகியோர்கள் கூறும் பொழுது, “பகல் 12 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மாலை ஆறு மணி வரை நீடித்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும் நான்கு பேர்கள் பிணமான பிறகு கூட அவர்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீசு மீது தொடர்ந்து கல் எறிவதும் தாக்குவதும் பிறகு பின்வாங்குவதும் என்று மூர்க்கமாக மக்கள் போராடினார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு ஊர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தலித் மக்கள் மீது நடந்த அநியாய தாக்குதல்”.

பரமக்குடியில் நகர காவல்நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பசுமலை  கூறும் பொழுது ஆப்பநாடு மறவர் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் தொடர்பான சொத்துப் பிரச்சனையை பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம்” என்ற செய்தியைச் குறிப்பிட்டு தொடர்ந்து நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்கள் குருபூஜையை நடத்துவது போல் பெரும் ஆதரவு பெறும் இமானுவேல் குருபூஜை வருடா வருடம் கூட்டம் அதிகமாகி அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காகவும் கிராம வாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வர வேண்டும் என்று சம்பவத்திற்கு முன்பே குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். இமானுவேல் குருபூஜையை தடுக்க வேண்டுமென்று போலீசும், தேவர் சாதியினரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் இதற்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவருக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால் காழ்ப்புணர்ச்சியுடனே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்”.

மாவட்ட ஆட்சியர் அருணாராய் சம்பவ இடத்திற்கும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் அன்று முழுவதும் வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கோ காயம்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கோ மாவட்ட ஆட்சியர் எந்த ஆறுதலும் நேரில் சென்று கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜெயபால் என்ற இளைஞனை  மனித நேயமற்ற நிலையில் இறந்த நாயை தூக்கிச் செல்வது போல் போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்என்றார்.

பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில், இராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 10 நபர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கு லத்தியால் தாக்கப்பட்டதால் 9 காயங்கள ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் என்பவருக்கு 13 காயங்கள் எலும்பு முறிவுடன் சோந்து ஏற்பட்டுள்ளது. முகம், உடம்பில் முழுவதும் காயங்கள் உள்ளது. இதர நபர்களுக்கு லத்தியால் அடித்த காயங்கள் உடம்பில் முக்கிய பகுதிகளில் உள்ளன.

இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 70) அவரைச் சந்தித்தோம், “சம்பவத்தன்று நானும் இருந்தேன். ஐந்து முக்கு சாலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஜான்பாண்டியனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது. அக்டோபர் 30 அன்று தேவர் குரு பூஜையில் இப்படி நடப்பீங்களா எனக் கேட்டேன். இந்நிலையில் நாளா பக்கமும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டனர். சிவக்குமார்நீங்க என்னடா பெரிய விழா நடத்துறீங்க என்று கேவலமாக பேசினார்.” அதற்கு நான் அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கார் எங்க சாதி தான், ஜெகஜீவன் ராம் எங்க சாதி தான், பல மொழி தெரிந்த மாயாவதி எங்க சாதி தான் என வாக்குவாதம் செய்தேன்.”

“திடீரென்று போலீஸ் லத்தியால் அடித்து மக்களை துரத்தினர். டுப் டுப் என துப்பாக்கியால் சுட்டனர். நான் ஓடி அருகில் இருந்த படிக்கட்டில் ஏறி மறைந்து கொண்டேன். மக்களை அடித்து விரட்டி விட்டு வந்த போலீசார் என்னைப் பார்த்துவிட்டனர். சட்டையைப் பிடித்து இழுத்து வாடா மாப்பிள்ளை சட்டமா பேசுற என கொடூரமாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெரிய கம்பால் ஒரே போடாக என இடது காலில் போட்டார் பெருவிரல் நசுங்கி இரத்தம் வழிந்தது தலையில் ஒரு அடி அடித்தார். புருவத்தில் இருந்து ரத்தம் வந்தது. சுற்றியிருந்த காவலர்கள் ஆளாளுக்கு கடுமையாக தாக்கினார்கள். வெயிலில் கால் சுடுது செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டேன் அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கு எதுக்குடா செருப்பு பள்ளப்பயலே என அசிங்கமாக திட்டினார். கீழே விழுந்த வாட்ச்ஐ எடுக்கவிடவில்லை.”

“பிறகு போலீசார் காவல்நிலையத்தில் அடைத்து ஏண்டா பள்ளப்பயலே உங்களுக்கு குருபூஜை கேட்குதா என்று  தாக்கினர்தண்ணி தவிக்குது தண்ணீர் கொடுங்க அவசரமா யுரின் போகனும் எனக் கேட்டேன் போடா என விரட்டினா. சிவக்குமாரும், எஸ்.ஐ.யும் வெளியே போனவுடன் ஏட்டு ஒருவர் தண்ணீர் கொடுத்தார். சட்டை, பனியனில் இரத்தம் காய்ந்ததால் நாற்றம் எடுத்ததால் அனைத்தையும் கழற்றிவிட்டு டவுசருடன் இருந்தேன் அப்போது மதியம் சுமார் 2 மணி இருக்கும். அப்போது சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.20 மணிக்கு தான் இராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னைப் போல் அடிபட்ட பலரும் இதுபோல் தான் நடத்தப்பட்டனா. என்னை அடித்த இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று சொல்லியதுடன் உன் சட்டையை கழற்றி ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சொன்னேன். காவல்நிலையத்தில் அடைபட்ட போது நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து என்ற பாரதியார் வரிகளை நினைத்துப் பார்த்தேன்.

காயம்பட்ட 22 வயதான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் கூறுகையில் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் மதியம் இரண்டு மணி முதல் மாலை 3.15 வரை தொடர்ந்து காவல்துறையினர் தாக்கினர். நான் உட்பட பலரும் அடிபட்டு 1 ½ மணி நேரம் சுடும் வெயிலில் கிடந்தோம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது வேதனையில் துடித்தோம். தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

காயம்பட்ட பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த குமார் கூறுகையில் எனக்கு கைகளில் போலீசார் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 3.00 மணிக்கு 20 போலீசார் நான் காய்கறி வாங்க கடைக்கு சென்ற போது அடித்தனர். நான் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவன்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபால் வயது 20 மஞ்சூரைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாண்டி கூறும் பொழுது என் மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டவன். மருமகள் நிறைமாத கர்ப்பிணி, கூலி வேலை செய்து தான் பிழைக்கிறோம். குருபூஜைக்குச் சென்றவன் பிணமாக வந்தான். பத்திரிக்கையில் அவன் நடந்து வருகிற போட்டோவும் இருக்கிறது. அவன் பிணமாக போலீசார் தூக்கி வருவதும் இருக்கிறது. அரசு கொடுத்த இழப்பீடை திருப்பித் தரப் போகிறேன். என் மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும். பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம். என் மகனின் மார்பில் பாய்ந்த குண்டால் என் கை உள்ளே போகிற அளவுக்கு மார்பில் குழியாக இருந்தது. கீழே இருந்த சதையை எடுத்து அதில் வைத்து அழுத்தினேன். என் மகன் நான்கு பேர்களை ஒரே நேரத்தில் அடிக்கும் வலிமை உடையவன்.  அவனை கொன்று விட்டார்கள். நாங்கள் விடமாட்டோம்”.

பல்லவராயனேந்தல் ஊரைச் சார்ந்த கணேசன் வயது 55 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவர் மனைவி கூறும் பொழுது என் கணவா குருபூஜைக்கு போகவில்லை. என் மகனுக்கு 15-ம் தேதி திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக பரமக்குடி சென்றார். அநியாயமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். ஆடு, மாடு வைத்துள்ளோம் அதை எல்லாம் பட்டியில் அடைப்பதற்கு வந்துவிடுவேன் என்று போனார். பந்தகால் நட்டுப் போனவர் மகன் திருமணத்திற்கு வரவில்லை. போலீஸ் இப்படி அநியாயமாக கொன்றுவிட்டது. மணப்பெண்ணை பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்பதற்காக என் கணவர் விருப்படியே  குறித்த தேதியில் திருமணத்தை நடத்தினோம்”.

காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவருடைய அண்ணன் மனைவி கூறும் பொழுது போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். தேவர் குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண  செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது”.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புறவழிச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

இளையான்குடியில் தியாகி இமானுவேல் பேரவை சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறும் பொழுது புறவழி சாலையில் குருபூஜைக்காக பகைவரை வென்றான் கிராமத்து மக்கள் சார்பில் பேனர் வைத்தோம்.  அதிகாலையில் சிலர் தியாகி இமானுவேல் படத்தின் தலையை கிழித்துவிட்டனர். இதற்காக நாங்கள் போலீசிடம் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. குருபூஜைக்கு செல்வதற்காக இந்திரா நகரில் 50 வாகனங்களில் நாங்கள் தயாராக இருந்தோம். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் போலீஸ் அனுமதி மறுத்தது. இந்நிலையில் இளையான்குடி புறவழிச்சாலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கரைக்குடி மக்கள் சுமார் 27 பேர் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. இளங்கோவன் எந்த அறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட்டார். ஆனந்த் என்ற +2 படிக்கும் மாணவன் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தான். பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடினர். போலீசாரே ஆனந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்பந்தமாக 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.”

“நாங்கள் கூட்டமாக சென்று துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினீர்கள் என்று டி.ஸ்.பி.இளங்கோவனிடம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நான் தான் சுட்டேன் என்று சொன்னார். பிறகு யாரையும் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் கடுமையாக பேசினோம். இத்தனை வருடம் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொன்னோம். டி.ஸ்.பி. மறவர் இனத்தைச் சேர்ந்தவர் நயினார் கோவில் அருகில் உள்ள சாதி ஆதிக்கம் மிகுந்த அக்கிரமேசி ஊரைச் சேர்ந்தவர். இவர் தேவர்களுக்கு சாதகமாக சாதி உணர்வோடு நடக்கிறார்.

ஆனந்தினுடைய தாயார் செல்லம்மாள் ‘’என் மகன் டியூசன் போனான் அநியாயமாக போலீஸ் சுட்டுவிட்டனர். தற்பொழுது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்’’.என்றார்.

பகைவரை வென்றான் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும் பொழுது நாங்கள் வைத்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசோடு போராட்டம் நடத்தியதால் குருபூசைக்கு கிளம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் நாங்களும் பரமக்குடி போயிருப்போம். இந்த விழாவை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதை சீர்குலைக்கவே பேனர் கிழிப்பு காவல்துறையும் துணை போகிறது. இளையான்குடியில் துப்பாக்கி சூடே இல்லை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. டி.எஸ்.பி.இளங்கோவன் மருத்துவர்களிடமும் குண்டடிபட்ட ஆனந்தின் பெற்றோர்களிடமும் பேசி சரிகட்ட முயற்சிக்கிறார். தியாகி இமானுவேல் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். எங்களின் நியாயமான இக்கோரிக்கையை அமைப்பு பாகுபாடு கட்சிப் பாகுபாடு இலலாமல் அனைவரும் ஆதரிக்கின்றனர்”.

மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

                11.09.2011 அன்று மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் காளியம்மாள் என்ற முதல்நிலை காவலரிடம் புகாரைப் பெற்று 38 நபர்கள் மீது குற்ற எண்.459/ 2011 yஇ.த.ச 147, 148, 188, 341, 322, 336, 353, 307 & 3 (1) தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகரில் குருபூஜைக்கு வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், புகார்தாரரான காளியம்மாள் என்ற தலித் பெண் காவலரை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேற்படி சம்பவத்தைப் பற்றி நாங்கள் விசாரித்த பொழுது மதுரை சிந்தாமணியில் இருக்கும் முனியாண்டி மகன் துரைப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் சொன்னது “11.09.2011 அன்று காலை 11 மணிக்கு புலியூர் என்ற ஊரிலிருந்து திறந்த வேனில் குருபூஜைக்கு வந்தவர்களை அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் சண்முகம் அடித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் பாட்டம் கிராமத்தில் இருந்து குருபூஜைக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணியைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளும் அப்போது இருந்தனர். திடீரென சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போலீசாரும் லத்தியால் கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். பால்குடம் எடுக்க வந்த பெண்கள், மற்றவர்களும் கூட ரத்தம் சொட்ட சொட்ட சிதறி ஓடினர். இச்செய்தியை சண்முகநாதன் வாக்கி டாக்கி மூலம் குருபூஜைக்கு வந்தவர்கள் காவலர்களை தாக்குகிறார்கள். பேருந்துகளை அடித்து நொறுக்கிறார்கள் என்று பொய்யாக தகவல் சொன்னதால் ஜீப்பின் கதவு திறந்த நிலையில் வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டார். ஜெயப்பிரகாஷ் என்ற 19 வயது இளைஞர் தொடைப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார். அவரைத் தூக்க முயற்சித்த பாலசுப்பிரமணி என்ற இளைஞர் விலாவில் குண்டடி பட்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சேர்வை இனத்தவர்களுக்கு பகை உள்ளது.இதில் சேர்வை சமுகத்திற்கு ஆதரவாக பல வழக்குகளில் எஸ்.ஐ.. சண்முகநாதன  செயல்பட்டுள்ளார்.

“ஆய்வாளர் கஜேந்திரன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் வேலை பார்த்த போது வெங்கடேச பண்ணையாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வெங்கடேச பண்ணையாருக்கும் பள்ளர் சமூகத் தலைவர் பசுபதி பாண்டியனுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் பள்ளர் சமூகத்தின் மீது எப்போது விரோத மனப்பான்மையில் செயல்படுபவர். ஜீப்பை விட்டு இறங்கி துப்பாக்கியால் சுட்டதும் நல்ல நிலையில் வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று தனக்கு காயம்பட்டதாக நாடகம் ஆடி மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார். மேலும் காளியம்மாள் என்ற பெண் காவலரிடம்  புகார் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டுள்ளார். காளியம்மாள் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். சிந்தாமணியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு உறவுக்காராகள். சம்பவத்தன்று குருபூசைக்கு வந்தவர்களோடு பேசியதுடன் அனைவருடனும்  சேர்ந்து கரும்புச்சாறு வாங்கி குடித்தார். தடியடி ஆரம்பித்தவுடன் மற்ற பெண் காவலருடன் சென்றுவிட்டார். ஆனால் உண்மைக்கு மாறாக காளியம்மாளை யூனிபார்முடன் இழுத்து மார்பகங்களை பிடித்து அமுக்கி மானபங்கம் செய்ததுடன் அவரை கீழே தள்ளிவிட்டு உயிர் தலத்தில் காலால் மிதித்தனர் என்று வக்கிரமாக சாதி வெறியுடன் புகார் பதிவு செய்துள்ளனர். அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் உள்ள பெயர்கள் அனைத்தையும் புகாரிலேயே எழுதி பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவே எஸ்.ஐ. சண்முகநாதன் அவனியாபுரத்தில் அனுமதி பெற்று வைத்த ரேடியோவை நிறுத்துமாறும் கூட்டமாக இருப்பதை தடுத்தும் இடையூறு செய்தார். இச்சம்பவத்திற்கும் ஜான்பாண்டியன் கைது செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மப்டி போலீசார் தான் பேருந்து மீது கல்வீச்சு நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் 09.09.2011 அன்று பழனிக்குமார் என்ற +1 மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.09.2011 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பரமக்குடியில் 11.09.2011 அன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று கூறினார்”.

மேற்படி சம்பவம் தொடர்பாக அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்த போது. பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் சொன்னது

மண்டல மாணிக்கத்தில் ஆரம்பத்தில் நாடார், செட்டியார், முதலியார், பண்டாரம், அருந்ததியர் ஆகியோர் வீடு வாசல் நிலங்களோடு வாழ்ந்து வந்தனர். சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் மறவர் சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் மண்டல மாணிக்கத்தில் குடியேறி பல்வேறு வகைகளில் மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரித்து பெரும்பான்மையாக மாறிவிட்டனா. இக்கிராமத்தோடு இணைந்தது தான் பள்ளப்பச்சேரி கிராமம். 2004-ம் ஆண்டு மில்லுக்கு வேலை செய்யச் சென்ற பள்ளர் சமூகத்து பெண்களை  மறவர்கள் தாக்கினர். பிறகு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போலீசாரே எங்களை அழைத்துச் சென்று மண்டல மாணிக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போதே மறவர் சாதியினர் எங்களை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். போலீசையும் தாக்கினர். இதற்கு போலீசே மறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.”

“பள்ள்பச்சேரி கிராம மக்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் மறவர்கள் இருக்கும் மண்டல மாணிக்கம் பக்கம் சென்று தான் பேருந்தில் செல்ல முடியும். எங்கள் இளைஞர்கள், பெண்கள் சென்றால் கிண்டல் செய்வார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து பேச முடியாது, வெளியிலும் சொல்ல முடியாது. அரசு விடுதியில் பள்ளர் சாதி மாணவர்களை துன்புறுத்துவார்கள். இதனால் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைக்குளம் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காவல்நிலையத்தில் கூட பெரும்பான்மை போலீசார் இப்பகுதி மறவர் சாதியினரே இதனால் எங்களுக்கு எந்த காலத்திலும் நீதி கிடைக்கவில்லை.”

“ஜனவரி 2011-ல் சிறையில் இருந்து வந்த ஜான்பாண்டியன் எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது மாடியில் இருந்து மறவர் சமூகத்தினர் கல்லெறிந்து வாகனங்களை தாக்கியதுடன் இருவரை கத்தியால் குத்தினர். மேலும் எங்கள் பள்ளப்பச்சேரி ரிசர்வ் ஊராட்சி தொகுதியாகும்  எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் மறவர் சாதியினர் அங்கு வாழக்கூடிய குமரன் என்ற அருந்ததியினரை மிரட்டி வேட்பு மனு தாக்கல் செய்து பஞ்சாயத்து தலைவராக ஜெயிக்க வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் தரையிலே உட்கார்ந்திருப்பார், மறவர்சாதி துணைத் தலைவர் நாற்காலியிலே அவரதுமகன் உட்கார்ந்திருப்பார். டீ வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளை தலைவர் தான் செய்வார் வாடா, போடா என்று தான் கூப்பிடுவார்.  மற்றொரு பாப்பாபட்டி, கீரிப்பட்டி இது மண்டல மாணிக்கத்தில் இரட்டை டம்ளர்  இன்றும் உள்ளது”.

இப்படி நாள்தோறும் அஞ்சி வாழ்கின்ற சூழலில் 09.09.2011 அன்று முத்துராமலிங்கபுரத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க எங்கள் ஊரில் இருந்து பலர் சென்றனர். பபூன் காமெடி முடிந்ததுடன் பல இளைஞர்கள் ஆற்றுப் பாலத்தை கடந்து திரும்பி ஊருக்கு ஐந்து பேர், நான்கு பேர் என்று வந்து கொண்டிருந்தனர். பின்பு இரு சிறுவர்கள் சற்று தூரமாக வந்த போது வேலியில் மறைந்திருந்த 10 பேர் மண்டல மாணிக்கம் மறவர்கள் பழனிக்குமார் என்ற 16 வயது சிறுவனை தலையில் வெட்டிக் கொன்றனர். கொலைக்கு முதல் நாள் மறவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தேவர் வாழ்க என்பதற்கு கீழே யாரோ ஒன்பது என்று எழுதிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். போலீசார் எங்களை விசாரித்தனர். அந்த கட்டிடப் பகுதியில் மறவர் சாதி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவார்கள் நாங்கள் அங்கு செல்லவே முடியாது இரவிலும் அவர்களே அங்கு மது அருந்துவர். நாங்கள் யாரும் எழுதவில்லை என்று போலீசாரிடம் சொன்னோம். அன்று இரவு தான் பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அச்சிறுவன் பார்ப்பதற்கு 10 வயது போல தோற்றம் தான் இருக்கும் இமானுவேல் சேகர் குருபூஜையை தடுக்கும் நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது.

பள்ளபச்சேரி தங்கராஜ் கூறும் பொழுது அன்று இரவு நான் குண்டாற்றை தாண்டி வரும் பொழுது கத்தும் குரல் கேட்டது. அப்போது ‘’கதையை முடிச்சாச்சு இமானுவேல் சேகரன் விழா எப்படி நடக்குது பார்ப்போம்’’ என்று சொல்லிக் கொண்டே கருவேல மரங்களில் சென்று மறைந்தனா. பழனிக்குமார் தலையில் வெட்டுபட்டு கீழே கிடந்தான்”.

கொலையுண்ட பழனிக்குமாரரின் பெற்றோர்கள்     தங்கவேல், புவனேஸ்வரி, கூறும் போது எனக்கு நான்கு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை எனது இரண்டாவது மகன் பழனிக்குமார் என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. நன்றாக படிப்பான் பள்ளிக்கூடத்தில் 301 மார்க் எடுத்திருக்கிறான். இவன் படிப்பை அடையாளமாக வைத்து தான் ஆனைகுளம் அரசு பள்ளியில் எங்கள் ஊர் மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மற்ற மூன்று பிள்ளைகளும் சிறுவர்கள் படிக்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது சார்பு ஆய்வாளர்  வழிவிட்டான் எழுதினார். கொலை செய்தவர்களுடைய பெயரை நாங்கள் சொல்லியும் எழுதாமல் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தொpயாத பத்து மர்ம நபர்கள் என்று எழுதிக் கொண்டார். மறவர் சாதி என்பதால் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். நாங்கள் சொன்னதில் நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்”.

                பள்ளபச்சேரி இருளப்பன் கூறும் பொழுது எங்கள் ஊருக்கு தனி ரோடு கேட்டு பல வருடங்களாக மனுக் கொடுத்திருக்கிறோம். அரசு அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் மறவர்கள் இடத்திற்கு நாங்கள் செல்லுகின்ற கட்டாயம் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் சமுதாய ரீதியாகவே ஜான்பாண்டியன் வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அ.தி.மு.க.வில் உள்ள மறவர்கள் நாங்கள் நினைத்ததை முடித்துக் கொடுத்த தாயே என ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்”.

அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை

பரமக்குடி துப்பாக்கி சூடுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழக முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.காவல் துறையினா் தாங்களே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மூலம் சம்மபவத்தை குறிப்பிட்டுள்ளனா்.

பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி சம்பவத்தில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துக்கொண்டார்.பரமக்குடி ஆய்வாளா் சிவக்குமார் தனது புகாரில் தாசில்தாரிடம் எழுத்துபூர்வமாக உத்திரவு பெற்று துப்பாக்கி சூடு நடத்தினோம் என்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசிவிட்டு உங்களை போனில் தொடர்பு கொள்கிறேன் என்றுசொன்னார். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி காவல் ஆய்வாளார் சிவக்குமாரை சந்திக்க முயன்ற போது அவர் வெளிப் பணிக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பின் அவருடைய செல் எண் 8056697999 –ல் தொடர்பு கொண்ட போது வேறு ஒருவர் எடுத்து மீட்டிங்கில் இருப்பதாகவும் நான் தகவல் சொல்லி விடுகிறேன்.உங்களோடு பேசுவார் என்றார்.ஆய்வாளர் சிவக்குமார் தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி டி.எஸ்.பி.கணேசன் அவர்களை சந்திக்க முயன்ற போது அவர் மாமல்லபுரத்திற்கு மாறுதல் ஆகிவிட்டதாக பரமக்குடி போலீசார் தொரிவித்தனர்.

இளையான்குடி தாசில்தார் மணி அவர்களிடம் விசாரித்தபோது, “இளையான் குடி புறவழிச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீசார் கூறுகிறார்கள்.ஆனால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார்.சம்பவத்தில் ஆனந்த் என்ற மாணவன் காயம்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.”

நிழற்படங்கள்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________________________________

மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.

1.            தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

2.            செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.

3.            மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர்  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.

4.            பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.

5.            தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.

6.            பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு  வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.

7.            ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.

8.            அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.

பரிந்துரைகள்:

1.            பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

2.            இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.

3.            சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

4.    மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ராஜபக்சே செய்த கொலைகளுக்கும் ஜெயா செய்த கொலைகளுக்கும் எண்ணிக்கையில் வேண்டுமென்றால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் ஒன்றுதான்.

    • ஆனால் ‘ராஜபக்ஷேவை’ தூக்கில் ஏற்றுவோம் என்று கங்கணம் கட்டி செய்லபடும் இங்கிருக்கும் எவரும், ‘ஜெயாவை’ பற்றி வாய்திறக்கவில்லையே? ‘கடல் கடந்து’ தமிழன் செத்தா மட்டும் தான் ஒருமித்த குரல் வருமோ?

  2. இது ஒரு முழுமை அடையாத விசாரணை அறிக்கை என்பது என் கருத்து.. முழுமை அடையவில்லை என்றுதான் சொல்கிறேனே தவிர அரைவேக்காட்டு அறிக்கை என்று அகோரத்தாண்டவம் ஆட விரும்பவில்லை… காரணங்கள் கீழே…

    ஒரு சாரர் வாக்கு மூலங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன…
    அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை என்று போட்டு விட்டு, வெறும் ஒற்றை வினாடி தொலை அழைப்புகளின் மறுமுனை பதில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன…
    சம்பந்தப்பட்ட மறவர் குல மக்களின் வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கவில்லையா…?
    பழனி குமார் கொலையில் பழனி குமாரின் பெற்றோரால் குற்றம் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படும் நபர்களை விசாரிக்க முயற்சிக்கவில்லையா?
    ஜான் பாண்டியன் கருத்தறிய முயன்றீர்களா…
    இறந்ததிலும், காயம்பட்டதிலும் (காவல் துறையினர் உட்பட) பள்ளர் இனத்தவர் எத்தனை பேர்… பள்ளரள்ளதவர் எத்தனை பேர் என்ற விவரம் இல்லையே ஏன்?

    மேலும்….

    வழக்கறிஞ்சர்கள் சொல்வதை எப்படி நம்புவது… வழக்கறிஞ்சர்கள் ஒரு கட்சி சார்பாக பேசுபவர்கள் ஆயிற்றே…இந்த விடயத்தில் வழக்கறிஞ்சர்கள் எந்த கட்சி?
    ஓய்வு பெற்ற நீதி பதிகள், ஆசிரியர்கள், IAS , IPS , இன்ன பிற சமூக ஆர்வலர்களை குழுவில் சேர்க்கவில்லை ஏன் ?
    இந்த உண்மை அறியும் குழுவில் மறவர் குல உறுப்பினர்கள் எத்தனை பேர்? பள்ளர் இனத்தவர் எத்தனை பேர்? பள்ளரல்லாத தலித் எத்தனை பேர் ? இரு பிரிவும் சாராதவர்கள் எத்தனை பேர் ? போன்ற விவரங்கள் இல்லையே ஏன்?

    • கேள்விகள் நியாயமாக உள்ளன. ஆனால் கடந்த கால நிழவுகளை கருத்தில்கொண்டால் இந்த குழுவின் பரிந்துரைகளில் தான் தீர்வு வந்து முடியும் என்று உங்களுக்கும் தெரியும் ‘மனிதன்’ அண்ணே…!!!

      • பொன்ராசு சார் மிக்க நன்றி… இந்த குழுவின் பரிந்துரைகள் பெரும்பாலும் சரியானவை என்று எனக்கு தெரியும்… ஆனால் இந்த விசாரணை அறிக்கையை இப்படியே எடுத்துகொண்டு பாசிச்டுக்களிடம் சென்றால் வந்து விழும் வினாக்களை தான் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்… இந்த கேள்விகள் நிச்சயம் விசாரணை குழுவுக்கு உபயோகப்படும்… அடுத்த முறை இது போன்ற கேள்விகளுக்கு இடமின்றி நியாயங்களின் அறிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து செல்ல இது எள்ளளவேனும் உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது… மற்றபடி சில சண்டாளர்கள் குறிப்பிடுவது போல நான் பாசிச்டுக்களுக்கு கொடி பிடிப்பவன் அல்ல…

        • தெளிவா வாங்க திரு மனிதன் அவர்களே. தேவையே இல்லாமல் கடினமான சொற்களை பயன்படுத்த வேண்டியதா போயிற்று. இடையில் இருபாலருக்கும் புரிதல் செய்த பொன்றாஜிற்கு மிக்க நன்றி.

          • தேவையே இல்லாமல் கடினமான சொற்களை பயன்படுத்த வேண்டியதா போயிற்று என்று நீங்கள் சொல்வதிலிருந்து உங்கள் பெருந்தன்மை புலப்படுகிறது… நன்றி சண்டாளர் அவர்களே…

    • இந்த விசாரணனை அறிக்கை இந்தக் கால வரம்பில் இந்த அளவே போதுமானதாக உள்ளது.
      1. அரசு தரப்பின் அலட்சியமான மற்றும் பொறுப்பினைத் தட்டிக்கழிக்கும் போக்கை அவர்களது பதிலின் வாயிலாக அறிக்கை படிப்பவருக்கு உணர்த்துகிறது.
      2. தேவர் சாதியினர் நேரடி மோதலில் சிவிலியன்களாக மோதாதபோது அவர்களிடம் விசாரிப்பதும், பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் இல்லாதபோது அவர்களிடம் கருத்துக் கேட்பதும் வகுப்பில் வருகைப்பதிவேட்டில் பெயர் கொடுப்பது போன்ற ஏற்பாடு அல்ல•
      3. ஜான் பாண்டியனது கருத்து இல்லாத காரணத்துக்காக இந்த அறிக்கை நிராகரிக்கப்படாது என கருதுகிறேன்.
      4. பழனிக்குமாரின் பெற்றோர் பெயர் குறிப்பிட்டும் போலீசு பெயரெழுத மறுத்த பிறகு அதனை விட நேரில் குற்றவாளிகளை சந்தித்தால் மாத்திரம் உண்மையான செய்தி என்ன கிடைக்கும்.

      5. செத்தவர்களில் மற்றும் போன வழக்கறிஞர்களில் எத்தனை பேர் பள்ளர், எத்தனை பேர் மறவர் என்பதில் இருந்து உண்மையை அளக்க முடியாது. ஏற்றுக்கொண்ட அரசியல்தான் அதை தீர்மானிக்கிறது. அது போலவே நீதிபதிகள், ஐஏஎஸ் இருந்துதான் உண்மை வருமென்றால் அந்த உண்மையை நினைத்தாலே பயமாக இருக்கிறது.
      6. வழக்கறிஞர்கள் மாத்திரமல்ல எல்லோருமே ஒரு சார்பாகத்தான் பேசுகிறோம். அது உண்மையின் பக்கமா அல்லது பொய்யின் பக்கமா என்ற கேள்வியினூடாக தெரிந்தவர்களுக்காகவா தெரிந்தவனாக இருப்பினும் உண்மையின் பக்கமா என்பதும் எழுகிறது. இதில் உண்மையை காணத் தெரியாத குழு அதற்காக போய் இப்படி ஒரு சுருக்க அறிக்கையை முன்வைக்க முடியாது.

    • இந்த உண்மை அறியும் குழுவில் மறவர் குல உறுப்பினர்கள் எத்தனை பேர்? பள்ளர் இனத்தவர் எத்தனை பேர்? பள்ளரல்லாத தலித் எத்தனை பேர் ? இரு பிரிவும் சாராதவர்கள் எத்தனை பேர் ? போன்ற விவரங்கள் இல்லையே ஏன்?

      Manithan, Ithaivida purukkithanamaka yaarum ketka mudiyaathu..

  3. வாக்குகளுக்காகவே வாழ்க்கை நடத்தும் நம் அரசியல் விபச்சாரிகள் ஆதிக்க சாதிகளுடன் கூட்டுக்கலவி செய்து குறைபிரசவத்தில் ஈன்ற பிள்ளைகள்தான் இந்த பரமக்குடியின் பிணங்கள். உதிரம் சொட்ட சொட்ட பிணம் சுமந்துவந்த இந்த காக்கிகள் ஆளும்வர்க்கத்தின் வெட்டியான்கள். உரிமை என்பது குருபூசைகளில் இல்லை. காலம் காலமாய் எந்த மதத்தில் நாயுக்கும் கேவலமாய் நக்கிபிழைக்கும் இந்த வாழ்க்கையை கொடுத்தார்களோ அந்த மதம் என்னும் பிணம் தின்னும் பேய்களை கொன்றொழித்தால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும்.

  4. திரு மாமனிதன் அவர்களே இந்த பரமக்குடியில் இறந்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்துகொண்டவர்கள். அவர்களுக்கு தீராத வயிற்று வலி. இந்த வினவு குழுவினர் விற்பனைக்காக இப்படி திருத்தி எழுதுகிறார்கள். மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு ஊறுகாயும் தயிர் சாதமும் தயாராக உள்ளது சென்று சாப்பிடுங்கள்.

    • ஊறுகாய் தயிர் சாதத்துக்கு சரி வராது… அந்த ஊறுகாயை வைச்சி ஒரு கட்டிங் வேணா போடுவேன்… அப்புறம் தயிர் சாதத்துக்கு சைடு டிஷா ஒரு வஞ்சிரையோ, இல்லை இறந்தும் புகழோடு ருசிக்கும் கருவாடோ கிடத்தல் சொல்ல மாலை சந்தோசம் தான்…

      அப்படியே ஏன் என் வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்க கூடாது…?

      • //ஒரு சாரர் வாக்கு மூலங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன…
        இறந்தது ஒரு சமுதயத்தினர் மட்டுமே…
        //அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை என்று போட்டு விட்டு, வெறும் ஒற்றை வினாடி தொலை அழைப்புகளின் மறுமுனை பதில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன…

        தலைமை சொல்லாமல் எப்படி அவர்களால் பதில் சொல்ல முடியும்?.அதனால்தானே மறுப்பு சொல்லி இருக்கிறார்கள்.

        //சம்பந்தப்பட்ட மறவர் குல மக்களின் வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கவில்லையா…?

        முயற்சி செய்திருக்கலாம்…
        //பழனி குமார் கொலையில் பழனி குமாரின் பெற்றோரால் குற்றம் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படும் நபர்களை விசாரிக்க முயற்சிக்கவில்லையா?
        அதில் நான்கு பேர் கைது செய்தாயிற்று, இருவர் தலை மறைவு.
        //ஜான் பாண்டியன் கருத்தறிய முயன்றீர்களா…
        ஏன் சி பி ஐ வைத்து நடராசனிடமும், மற்றையோரிடமும் விசாரனை செய்ய அரசு ஆணை செய்ய கூடாது?

        //இறந்ததிலும், காயம்பட்டதிலும் (காவல் துறையினர் உட்பட) பள்ளர் இனத்தவர் எத்தனை பேர்… பள்ளரள்ளதவர் எத்தனை பேர் என்ற விவரம் இல்லையே ஏன்?

        இறந்தவர்கள் எல்லோரும் பள்ளர் இனத்தவர்தான், காவல்துறையினர் எத்தனை பேர் அடிபட்டது போல் நடித்தார்கள் என்று வேண்டுமானால் கணக்கு எடுக்கலாம்.அடிபட்ட வண்ணார் இனத்தவர் ஒருவரின் வாக்குமூலத்தை படிக்க வில்லையா?

      • பாவம் டாஸ்மாக்கில் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் இங்க வந்து கேட்கபடாது. பதில் சொன்னா புரியாதுமா. எப்படி எப்பயாவது போதையா இல்லை எப்பவுமே போதையா. சைடு டிஷுக்கு பரமக்குடி பக்கம் போனா உங்க ஜெயா சுட்ட பிணங்கள் இருக்கு. ரெடியா

  5. சிறப்பான கட்டுரை, இது அரசாங்கமே நடத்திய அத்துமீறல். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எதர்க்காக இந்த காட்டுமிரன்டித்தனம்.

  6. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.

  7. இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்…. படுகொலைகள் திட்டமிட்டு அரசாங்கம் செயதது தான் ,அதற்கு சாட்சிதான் பரமக்குடியில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் சொல்கின்றன … இத்தனை பேரை பொய் வழக்கு போட்டு துன்புறுத்தும் போலீஸ்… அந்த சுவரொட்டி அடிப்படையில் ஒருவரையாவது கைது செய்ததா?

    இது ஆரம்பம் தான் மற்ற மக்களுக்கும் ஒருநாள் ஏதோ ஒரு அடிப்படையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் அப்போது நிச்சயம் மற்ற சமுதயத்தினரை போல பார்த்துகொண்டிருக்காது, வேடிக்கை பார்க்காது இந்த தலித் சமுதாயம் … ம‌ற்றவர்களுக்காகவும் போரட வரும்.. அதுதான் அவர்களது குணம்…

  8. கர்நாடக ப.ஜ.காவின் ஊழல் பெருச்சாளி ஒருவருக்கு கூட வினவில் பாலோஅப் கட்டுரை வந்தது. ஆனால் பரமக்குடியில் ஒரு இனத்திற்க்கெதிராக அரசே கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத சம்பவத்தை பற்றி ஒரே கட்டுரையோடு விட்டது வருத்தமாக இருந்தது.

    இப்போது தாமதமாக வந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோடு வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

  9. தேவரை 9 என்று எழுதியதால் அந்த மாணவன் கொல்லப் பட்டானாம். இங்கு இணையத்தில் பலர் தேவரை 9,பால்பிறழ்ந்தவர் என்று குறிப்பிட்டு பேசுகின்றனர்.அவர்களை ஏன் இந்த கண்மணிகள் ஒன்றும் செய்யவில்லை? ஒருவேளை அந்த அளவிற்கு அறிவு வளரவில்லையோ? ஆக, பழனிகுமார் கொலை என்பது ‘இமானுவேல் குருபூஜையை’ நிறுத்த ஒரு சாக்கு. இது பொய் அல்ல. சென்ற வருடமும் இதே போல குருபூஜை தொடங்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு தேவேந்திரர் கொல்லப் பட்டார்.

    • அட.. எல்லாம் இருக்கட்டும். தேவரை பார்தால் 9 மாதிரி இருக்கா என்ன? எனக்கு அப்படி தோனலை.

      • ஒட்டுமொத்த கலவரத்தின் மூலக்காரணம் ‘தேவர் ஒரு 9’ என்று தொடங்கியதால் தான் அதுகுறித்து இங்கு குறிப்பிட நேர்ந்தது. மற்றபடி ‘கார் வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்போ யார் வச்சிருக்கான்னு’ ஆராய்ச்சி பண்ணவேண்டியது என்னுடைய வேலை அல்ல ‘கவுண்டபெல்’ அண்ணே…!!!

  10. புரட்சிக்கர அமைப்பை சேர்ந்தத் தோழர்கள் ஆளும்வர்க்கத்தை எதிர்த்து சுவரொட்டி ஒட்டினார்கள் என்று வெளியேவரமுடியாத் அளவுககு கேஸ் போட்டு உள்ளே தள்ளியது காவல் துறை.”நாங்கள்நினைத்ததை முடித்து கொடுத்த தாயே”-என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அது பொய்யாக இருந்தால் ஏன் காவல் துறை போஸ்டர் ஒட்டியவர்களை இன்னும் கைது செய்யவில்லை.மேற்கண்ட போஸ்டர் குறித்து ஜெயலலித்தா ஏன் பதில் அளிக்கவில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியோ?
    அ.தி.மு.க.வினரே இதில் ஜெயலலிதாவிற்கு பங்கு உள்ளது என்பதை வெளிப்படையாக்கூறியுள்ளனர்.மேலும் ஜெயலலிதாவின் மெளனமும் அதை ஏற்றுக்கொண்டது.பிறகு ஏன் உங்கள் பரிந்துரையில் 7 பேரின் சாவிற்கு காரணமான ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்றுக் கூறவில்லை.

  11. இந்த தலித் விரோத கொடூரத்திற்கு தேவர் சீமான், தா.பாண்டியன் என்ன கூறுகின்றனர்?
    தலித் தமிழன் இல்லையோ? இவர்களெல்லாம்தான் இன்று பொதுவெளியில் மனித உரிமை பேசி திரிகின்றனர். காலக்கொடுமை

    • உங்கள் கருத்துக்கு சம்பந்தம் இல்லாதது தான். இருந்தாலும் கூறுகிறேன். சீமான் தேவர் அல்ல. நாடார். மதம் மாறிய நாடார். செபாஸ்டியன் சைமன் என்ற சீமான் ஒரு நாடார்.

  12. நாட்டில் நான்கில் ஒருவரான தலித் தமிழகத்தில் இப்படி நாயினும் கேவலமாக அரசாலேயே நடு ரோட்டில் சுடப்படுவது அவர்கள் பள்ளர் பறையர் அருந்ததியர் என்று பிரிந்து அவர்களுக்குள் ஒற்றுமை இன்றி இருப்பதே.

  13. ஒப்புக்கொள்ளுங்கள்! இந்த ஆறு பேரின் மரணம் தேவையான
    முக்கியத்துவத்துடன் கவனிக்கப் படவில்லை என்று. அதற்கு காரணம்
    என்னவென்று நாம் அனைவருக்குமே தெளிவாக தெரியும்.
    “இதே வேறுயாருக்கும் நடந்திருந்தால்?” என்ற கேள்வியே பதிலை கொண்டுள்ளது.

    தலித் அப்பாவி மக்களுக்கு “இன்றைய” தேவை என்ன என்று அக்கறையுடன் அறிவுடன்
    விழிப்புணர்த்தி அவர்களை முன்னேற்ற தவறி, விரோத உணர்ச்சியை மீண்டும் மீண்டும்
    விதைத்து மக்களை பலி கொடுத்தல் சரியா?

    “வீரம்” என்ற சந்தர்ப்ப உணர்ச்சியை காட்டி பெருமை பீத்திக்கொள்ளும் வெற்று எதிரிகளிடம் உங்களை பலி கொடுக்கவா மண்ணில் பிறந்தீர்கள். உங்கள் எதிரிகளே உங்களை கை கூப்பி வணங்கும் நிலைக்கு வர இதுவரை என்ன முயற்சி செய்திருக்கிறீர்கள். எவ்வளவு நாளைக்கு சண்டை போடுவது? உங்களை திசை திருப்ப நீங்களே அனுமதிக்கலாமா?

    “அவனை போல நானும் செய்வேன்” – வேண்டாம், அது உங்கள் இன்றைய தேவை அல்லவே அல்ல மெளனமாக உழைத்து கல்வி , தகுதி , திறம், பொருளாதாரம் , நற்பண்புகளில் ஒட்டு மொத்தமாக மேம்பட்டால் கௌரவ காற்று எந்த வேலியையும் ஊடுருவி உங்களிடம் வராதோ?

    இது மற்றொரு உபதேசம் அல்ல, மற்றொரு பார்வை. இது சாத்தியம் இல்லை என்று கூறுபவனை தூக்கி எறியுங்கள்.

    மேலும் உங்களை நசுக்கும் எந்த இனமும் இந்த மண்ணில் ஒட்டு மொத்தமாக
    வெகு சிறப்பாக வாழ்ந்து விடவில்லை. வெளியில் காண்பதெல்லாம் வெற்று ஆர்பாட்டங்கள் மட்டுமே.

    எளியவனை கண்டு இகழ்வதும், நசுக்குவதும் வலியவனை கண்டு ஏங்குவதும், ஆராதனை செய்வதும் மனித இனத்தின் சாபகேடுகள். (அதுவும் இங்கே மிக மிக அதிகம்)

    சிறந்தவன் என்றால் மொத்த உலகத்திற்கே சிறந்தவனாக இரு, இல்லை என்றால் வாயை மூடிக்கொள் எளியவனை நசுக்காதே!!!

    • சபரி. இதைத் தான் கு(று)ரு பூசைகள் பற்றிய முந்தய பதிவில் நாயாகக் கத்திப் பார்த்தேன்.கடைசி வரை விதண்டா வாதம் தான் பதிலாகக் கிடைத்தது. தலித் மக்களும் இது போன்ற முட்டாள் தனங்களை தொடர வேண்டாம் ஒரு முட்டாள் தனத்துக்கு இன்னொரு முட்டாள் தனம் பதிலாக இருக்க முடியாது. தலித் மக்களின் கல்வி,பொருண்மிய முன்னேற்றமே தேவை இக்கணம்

      • அப்போ ‘இமானுவெல் குருபூஜையில்’ படிக்காத,எந்தவேலையும் செய்ய்யாத,வாழ்வில் முன்னேறவேண்டும் என்ற அக்கறை இல்லாத,ஐ.டி போன்ற துறைகளில் பண்புரியாத,அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத,முற்போக்கு சிந்தனை அற்ற தேவேந்திரர்கள் மட்டும் தான் கலந்துகொள்கிறார்கள் என்று சொல்லவருகிறீர்களா?

    • எல்லாம் சரி நண்பர் சபரி அவர்களே. எத்தனை பேரால் இளையராஜா ஆகிவிட முடியும். இப்படி தானே நண்பரே புலம் பெயர்ந்த தோழர்கள் முன்னேறி இருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதையுடன் வாழும் உரிமைக்காக முன்னேறிய பிறகும் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். படிப்பது, பொருளாதாரதில் தன்னிறைவு பெறுவது, வெண்டக்காய் தின்று புத்தியை வளர்த்துக்கொள்வது, ரத்தம் சொட்ட சொட்ட வெட்டினாலும் திருப்பி தாக்கும் பழி உணர்ச்சியே இல்லாமல் இருப்பது இதற்க்கு எல்லாம் தயார். ஆனால் நாயிற்கும் கீழே இருக்கும் இந்த தீண்டாமை எனும் விஷத்தை ஒழிக்க முடியுமா. சுயமரியாதை இல்லாத கல்வி, சொத்து இதெல்லாம் ராஜா போன வெளிக்கி மாதிரி நண்பரே. போட்டிக்காக மட்டும் இல்லை உண்மையாகவே குருபூசைகள் ஒரு இனத்தின் உரிமையை தீர்மானிப்பது இல்லை. மாறாக எந்த மதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை சங்கிலியால் கட்டி பிணைதுள்ளதோ அதனை உடைத்தெறிய ஒரு வழி சொல்லுங்க நண்பரே

      • பிரியமான ஆளன்(சண்ட வேண்டாம்),
        புலம் பெயர்ந்த தோழர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியவில்லை
        என்று யார் சொன்னது?
        IT போன்ற துறைகளில் திறமையான தலித் இளைஞர்கள் இன்று சுயமரியாதையுடன்
        வாழ்ந்து வருவது நிதர்சன உண்மையா இல்லையா?

        மதம் அல்ல உண்மை பிரச்சனை.
        “தேவை” என்று வந்து விட்டால் இந்த சுயநல மனிதகூட்டம் யார்
        காலிலும் வந்து விழ தயாராக இருக்கும். மதமாவது, சாதியாவது.
        சாமர்த்தியமான வழியில் இவர்களை வெல்வது சாத்தியமே என்ற நம்பிக்கையை தகர்க்க வேண்டாம்.

  14. காந்திதேசம், காந்தி காலத்தின் மனநிலையில் இருந்து மாறவில்லையே.இங்கிலாந்து.பிரான்சு, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து. ஆகியநாடுகள் வெவ்வேறு மொழியைக்கொண்டிருந்தாலும். மனிதப்பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் ஒன்றை ஒன்று பின்பற்றி எப்படி நாகரீகமாக நடக்கின்றனவோ. அதேபோல இந்தியா, பாக்கிஸதான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ்.போன்றநாடுகளும் ஒரே சீரில் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம் அநாகர்ரீகத்திலும். உடை. பண்பாடு. உணவு. குப்பை. சாதி.வன்முறை எல்லவற்றிலும் ஒன்றுபட்டு நிற்கிறன.

    திருத்த நினைப்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமமானது.

    • குறிப்பாக காந்தியின் வருணாசிரமக் கோட்பாடுகளில் இருந்து மாறவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விசயம்.

  15. இந்த குருபூஜை எல்லாம்நாட்டுக்குத் தேவையா??நான் தலித்துகளை மட்டும் சொல்லவைல்லை…தேவர் குருபூஜையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்..

    இதனால் வீண் பதற்றம், கணப்பொழுதில் கலவர பூமியாகிவிடும் கொடுமை எல்லாம்நடந்து விடும்..அக்கியூஸ்ட் எல்லாம் கிளீன்னா அப்ஸ்காண்டு ஆகியிருப்பான், ஆனா செத்தவென் எல்லாம் பாவம்…

    மொத்ல்ல எந்த வெங்காயமும் குருபூஜை கொண்டாடக்கூடாதுன்னு சட்டம் போடனும்..

    • அது என்னங்க ? சுந்தரலிங்கம் பேருல போக்குவரத்த ஆரம்பிச்சா மாத்திரம் போக்குவரத்துக்கழகத்த எல்லாம் அரசுப் போக்குவரத்துக்கழகமா மாத்த சொல்வீங்க• தலித் ஒருத்தர் பேரால மாவட்டம் அமைச்சா பேசாம ஊர் பேரால மாவட்டம் அமைக்க சொல்வீங்க• நல்லா இருக்கே உங்க நியாயம்

    • அட .,கரெக்ட்டா சொன்னீங்க பாஸ் .. அப்படியே அந்த விநாயகர் ஊர்வலத்தையும் நிறுத்தினாத் தான் நாடு உருப்படும் ..

  16. வருணத்தால் என்றோ விதைக்கப்பட்ட நஞ்சு விதை.

    நஞ்சு முளைத்து, பூத்து, காய்த்து, கனிந்து, விழுந்து, மீண்டும் தன்னைச் சுற்றியே முளைத்து…
    இதுதான் வருணத்தின் அறுவடை.

    பூச்சிகள் கூட பூச்சிக்கொல்லி மருந்துக்கு பலியாகிவிடாமல் இருக்க, தங்கள் அணுக்களில் மாற்றம் செய்துகொண்டன.
    நாம் மனிதர்கள். இந்த விஷத் தெளித்தலைப் புரிந்து கொண்டு, நம்மை நாம் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

    நம் வியர்வையை, நம்மையறியாமலேயே திருடிக்கொள்ளும் கும்பலை வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாக, நம்மை நாமே வெட்டிக்கொள்ள திசை திருப்பி விட்டுவிட்டு,
    மேசை மீது தாளம் போட்டு வேடிக்கை பார்ப்பவர்களை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம்.

    நம்முள் தேவை ஒரு மரபணு மாற்றம்!!

  17. தலீத் மக்களின் மீது நடத்தப்படும் இந்த மனிததன்மையற்ற படுகொலைக்கு காரணம் சாதி தான்.இந்த சாதி பிரிவுதான் பணமும்,பொருளும்,நிலமும் அதிகமாக வைத்து இருக்கும் பணக்காரர்களையும்,பண்ணைக்காரர்களையும் இனம் காணுவதற்கு தடையாக இருக்கிறது.
    என்றைக்கெல்லாம் தன்னுடைய சொத்துக்கும்,ஆதிக்கத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இந்த ஒரு சில உடைமை சமுகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதல்லாம் சாதி வெறி அரசியல் உதவும்.தேவர் சாதியை சேர்ந்தவர்கள் எல்லோரும் உடைமை சமுகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்? இல்லை.அதில் இருக்கும் சில பண,பண்ணை முதலைகள்,உழைப்பாளர்களை சுரண்டி கொழுக்கும் கூட்டம் தான் தன்னுடைய சுரண்டலை மூடி மறைக்க சாதி வெறியை தூண்டியும்,அதை எப்பொழுதும் இருக்கும் படியும் செய்கிறது. இதற்கு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த உயர்சாதிகாரர்களும் பலியாகிவிடுகிறார்கள்.சாதி என்பதே பண்ணையார்களின்,ஜமிந்தார்களின் ஆளுமைக்கு உள்ள நிலப்பிரபுத்துவ சமுகத்தை மறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தை அழிக்க முதலாளிகள் வர மாட்டார்கள். ஏன்னென்றால் அவர்களின் லாபச்சுரண்டல் தொழிலாளிவர்க்கத்தை போராடவைத்துள்ளது. தொழிலாளர்களையும்,உழைப்பாளர்களையும்,விவசாயிகளை பிரித்து வைப்பதில் சாதி என்ற ஆயுதம் முதலாளிகளுக்கும் உதவுகிறது.
    நிலப்பிரபு சமுகத்தை ஒழிப்பதன் மூலம் தனக்குதானே சவக்குழி தோன்றிக்கொள்கிறோம் என்று கடந்தகால புரட்சியின் மூலம் புரிந்துக்கொண்டுள்ளது முதலாளித்துவம். அதனால் தான் நிலைத்து நிற்க நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துக்கொண்டுள்ளது.
    இந்தியாவில் சாதி என்பதே லாபத்தின் குறியீடு,சுரண்டலின் குறியீடு தான். இந்த சாதியை ஒழிக்கவேண்டும் என்றால் உழைக்கும் மக்களாய் அணி திறள்வதை தவிர வேறு வழி இல்லை. ஓட்டு பொறிக்கி அரசியலை புறக்கணித்து புரட்சிகர அரசியல் இயக்கங்களில் தலீத்துகள் சேர முன்வரவேண்டும்.

  18. தமிழர் நாட்டின் வரலாறு தெரியாதோருக்கு இது தலித் பிரச்சனை. தமிழர் பற்றியும் தமிழின வரலாறு பற்றியும் அறிந்த்தவர்களில், தமிழர் அல்லாதோர் சற்று நடுங்குகின்றனர்; தமிழர் மண் பற்றி அறிந்தோரோ சற்று புருவம் உயர்த்தி ஆழ்ந்து நோக்குகின்றனர். நடுங்குவோர் ஆரிய-திராவிடர்.புருவம் உயர்த்தி பார்ப்போர் இம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் இணையில்லா பற்றும் பாசமும் கொண்ட தமிழினச் சான்றோர்.
    ஆம் .. இது ஆரிய-திராவிடருக்கும் தமிழினத்திற்கும் இடையே நடக்கும் மீண்டெழுதலின் முதற்போர். தமிழர் மண்ணிலே மூவேந்தர்களையும் முற்றிலும் ஒழித்து தமிழினத்தையே ஒடுக்கி தமிழர் மண்ணை சூறையிட்டு, இன்றும் தமிழர் மண்ணை ஆண்டுகொண்டிருக்கும் ஆரிய-திராவிட தெலுங்கு விஜய நகர கூட்டணிக்கும் தமிழினத்திற்கும் இடையே நடுக்கும் மண்ணுரிமைப்போரே இன்று இவ்வடிவம் கொண்டுள்ளது. அன்று முதல் இன்றுவரை தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு குற்றேவல் புரிந்த அதே கள்ளர்-மறவர்களே இன்றும் தமிழினத்தை ஒடுக்கும் கருவிகளாக ஆரிய-திராவிடரால் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த ஆரிய-திராவிடர்கள் தமிழினத்தை ஒடுக்க எவ்வாறு கள்ளர்-மறவர்களை இன்று வரை யன்படுத்தி வருகிறார்கள் என்பதை வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தெளிவாய் விளங்கும்.

    1. மூவேந்தர்களை வீழ்த்த தெலுங்கு-விஜய நகர கூட்டணிக்கு பேராதரவாய் இருந்தோர் கள்ளர்-மறவர் மற்றும் அகமுடையார்களே. அக்காலத்திலே இம்மொவருக்கும் இடையே இன்றுள்ளதுபோல எவ்வித உறவும் கிடையாது. அதனால் தான் இவர்களால் தெளுங்கர்களுக்குப்பின் ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பாளையங்கள் விட்டுகொடுக்கப்பட்டன.(எனவே தான் அரசகுடிகளுக்கு எதிரான குடிகள் என்று இவர்கள் அழைக்கப் பட்டனர்.)

    2. 1890-களில் ஆடு திருடிய மறவர்களுக்கும், பறிகொடுத்த நாடார்களுக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரில் ஆரியர்கள் கள்ளர்-மறவர்களை பின்னின்று இயக்கி தமிழினத்தை ஒடுக்கினர்.

    3. 1957-இல் ஈகியர் இம்மானுவேல் தேவேந்திரர் முத்துராமலிங்கத்தின் குற்றேவல் படையினால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போரிலே கள்ளர்-மறவர்களுக்கு ஆரிய-திராவிடர்கள் உறுதுணையாய் இருந்தனர்.

    4. 1980-களில் மள்ளர்களுக்கும் கள்ளர்-மறவருக்கும் இடையே நடந்த மண்ணுரிமைப்போரிலே இதேபோல்தான் காவல் துறையில் உள்ள கள்ளர்களைக்கொண்டே கள்ளர்களுக்கு துப்பாக்கிகள் கொடுத்தும் , மள்ளர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தியும் தமிழினம் ஒடுக்கினார்கள் தெலுங்கு வடுகர்கள்.

    1995-இல் கொடியங்குளம் போரிலே காவல் துறையைச் சேர்ந்த 1000- கும் மேற்ப்பட்ட கள்ளர்களும் சென்னை அழகு செக்யூரிட்டி என்ற கள்ளரால் நடத்தப்படும் நிறுவனத்தில் பணி புரிந்த கள்ளர்-மறவர்கள் காவல் துறை சீருடை அணிந்தும் , தமிழர் மண்ணின் மைந்தர்களான மள்ளர்களின் மேல் பெரும் போர் புரிந்தனர். இங்கு தமிழினம் ஒடுக்க கள்ளர்-மறவர்களை இயக்கியது ஆரிய கூட்டம்(ஜெயலலிதா).

    1998-களில் நடந்த விருதுநகர் , ராஜபாளையம் போரிலே தமிழின மல்லர்களுக்கு எதிராய் நடந்த போரிலே கள்ளர்-மறவர்களுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் தெலுங்கர்களே(ராஜூக்கள்). அவர்களை இயக்கியவர்கள் தெலுங்கு திராவிடர்களே(கருணாநிதி)..

    2011- பரமக்குடி போரிலே அதே கள்ளர்-மறவர்களை காவல் துறையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான மள்ளர்கள் எட்டு போரை சுட்டுக்கொன்றது ஆரிய கூட்டமே. இங்கும் தமிழினத்தை ஒடுக்க இவ்வாரிய-திராவிடர்கள் பயன்படுத்தியது கள்ளர்-மறவர்களையே.

    மேலே குறிப்பிட்ட அத்தனை போரிலும்(சிவகாசி போர் தவிர்த்து) ஆரிய-திராவிட தெலுங்கு விஜயநகர கூட்டணி தமிழினம் ஒடுக்கியது கள்ளர்-மறவர் கொண்ட குற்றேவல் படை கொண்டே.

    மேலே குறிப்பிட்ட அத்தனை போர்களிலும் இன்னும் சொல்லாமல் விட்டவற்றிலும் மள்ளர்கள் மட்டுமே தனித்து நின்று போர் புரிந்து உள்ளனர். பறையர்களோ அல்லது தெலுங்கு அருந்ததியர்களோ ஒருவர்கூட பங்கு கொண்டது இல்லை.பலியானதும் இல்லை. இது வரலாறு. ஏனைய சகோதர தமிழ்ச் சாதிகளுக்கும் மள்ளர்களுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் பறையர்களுக்கும் மள்ளர்களுக்கும்.
    ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் உருவானபோது தோன்றிய பட்டியல் சாதிகளுக்கான(SC) பிரிவில் மள்ளர்களும் சேர்க்கப்பட்டதனால் ஏனைய தமிழ்ச் சாதிகளிடம் இருந்து மள்ளர்கள் தந்திரமாய் பிரித்தாளப் பட்டனர்.
    தமிழின உறவுகளே .. தமிழினப் பகைவர்களும் துரோகிகளும் கூறுவதுபோல் இது ஒன்றும் தலித்துகளின் பிரச்சனை இல்லை. மூவேந்தர்களான மள்ளர்களுக்கும் தமிழினப் பகைவருக்கும் இடையே நடக்கும் மண்ணுரிமைப்போரே. உலகையே வெல்லும் ஆற்றல் கொண்ட தமிழினப் படை படைத் தலைவன் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆரிய-திராவிடரை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட வலிமை கொண்ட மூவேந்தர் படையை இந்த ஆரிய திராவிடர் கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகளைக்கொண்டு காலைச் சுற்றச் செய்து உள்ளார்கள். ஆரிய-திராவிடர் எனும் யானை வேட்டைக்குப் புறப்பட வேண்டிய தமிழர் படையை கள்ளர்-மறவர் எனும் சாரைப் பாம்புகள் சுற்றிக்கொண்டிருப்பது தமிழினத்தின் பெருங்கேடே. தமிழர் தாயகம் மீண்டால் தான் தமிழீழமென்ன உலகெங்கும் தமிழினம் தலை நிமிரும். மூவேந்தர் படை எழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது மீண்டாளத் துடிக்கும் தமிழனின் துடிப்பு.

    • ஜான் பாண்டியனுக்கு ஒன்னுனா ஏன் சே.கு.தமிழரசனோ,தொல்.திருமாவோ,கிருஷ்ணசாமியோ களத்தில் வரிந்துகட்டிகொண்டு இறங்கமாட்டேன் என்ற ஆதங்கம் உண்டு. ஆனால் அதன் பிண்ணனியில் இப்படிபட்ட ஒரு வரலாற்று சுவடு இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. தோழரே, இந்த குறிப்புகள் எங்கிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன என்று கூறவாம்.

      • தோழர் பொன்ராசு,BC, MBC பிரிவுகளில் உள்ள சாதிகள் எல்லாம் ஒரே சாதிகள் அல்லவே.அதேபோல்தான் பட்டியல் பிரிவில் உள்ள சாதிகளும்.எப்படி வன்னியர்களும் தெலுங்கு வடுகர்களும் MBC பிரிவில் இருந்தாலும் தொடர்பு இல்லையோ அதேபோல்தான் பட்டியல் பிரிவில் உள்ள மள்ளர்களும் தெலுங்கு அருந்ததியரும் .கள்ளர்களுக்கு நாடார்கள் பெண் கொடுப்பார்களா? பெண் எடுப்பார்கள? ஒருபோதும் மாட்டார்கள்.அதேபோல் தான் மள்ளர்களும் பறையர்களும் பேசும் மொழியைத் தவிர வேறெந்த உறவும் இல்லை.ஐயா தேவ ஆசிர்வாதம் அவர்கள் மல்லர்களைப் பற்றிய வரலாட்ற்றை எழுதியவர். ஆனால் நான் இங்கு கொடுத்த தகவல்களை யாமே தொகுத்தோம் தமிழின நலன் கருதி.

    • THIS THEORY WAS CONSTITUTED BY AN EX REVENUE OFFICER MR. DEVA ASIRVADAM. THE THEORY

      STIPULATES THAT DEVENDRAS ARE DESCENDENTS OF MUVENTHERS AND PARIAHS ARE EYINERS.

      I HEREBY BRING FORTH A POINT THAT NADARS ALSO CLAIM AS DESECENDENTS OF MUVENTHERS.

      THIS WAS ARTICULATED BY NADAR PROFESSORS. AN ESSAY CAME IN 1979ISSUE OF

      DINAMANIKATHIR POINT THAT ATHITHA NADARS OF KAYAMOZHI VILLAGE, TIRUCHENDUR

      TALUK SUFFIX THE CHOLA SURNAME ADTHITHAN. ALSO TELUGU COMMUNITIES NAIDUS, REDDYS

      AND ARUNTHATHIYARS ARE VANTHERIGAL. IT IS REGRETTABLE THAT DEVENDERS OPPOSE

      INTERNAL RESERVATION OF 3%. MR. GURUSAMY CHITAR OF COIMBATORE SAYS THAT PERIYAR

      E.V.RAMASAMY WHO CATEGORISE BRAMIN INVASION OF TAMIL NADU 3000YEARS BACK OMITED

      TELUGU INVASION THAT HAPPENED 400YEARS BACK BECAUSE HE WAS ALSO KANNADA BALIJA

    • DEAR MR. MUVENTHER

      IT HAS BECOME A FASHION THAT EVERY COMMUNITY CALLS ITSELF AS A ROYAL CLAN.TAMIL SPEAKING UPPERCASTE VELLALAS EARLIER CALLED THEMSELVES AS VELIRS ANCIENT FUEEDAL CHIEFS. LATER POETS LIKE KANNADASAN, NEELAPADMANATHAN ECT IN THEIR WRITTINGS
      OBSERVE THAT KALLAS ARE THE DESECENDENTS OF CHOLAS AND MARAVAS ARE DESCENDENTS OF
      PANDYAS.THERE ARE MANY SURNAMES AMONG KALLARS BEARING CHOLA CHIEFTAINS AS MALAVARAYAR, KALINGARAYAR, THONDAIMAN, ETRANDAR.THEN TILL 20TH CENTURY TIRUNELVELI MARAVAS WERE ADDRESSED AS PANDYANS.

      LATER REVENUE OFFICER CALLED DEVA ASIRVADAM CAME WITH THE THEORY THAT PALLARS
      ARE MALLARS AND RELATED TO MUVENTHERS. EVERY CASTE WANTS ITSELF AND DECLARE THAT
      IT IS A RULING CASTE. THIS NEW ASSERTION AMONG PALLARS CREATE VIOLENT DISTURBANCES IN SOUTHERN DISTRICTS. THERE ARE MORE THAN 1.5 TAMIL POPULATION ARE OF TELUGU ORGIN.CALLING THEM AS OUTSIDERS AND VATUKAR WILL ONLY BRING HATRED AMONG CASTE.
      SO FAR HUNDREDS OF PEOPLE ARE CILLED IN SOUTHERN DISTRICTS CASTE VIOLENCE. DEVENDER BROTHERS SHOULD TREAT ARUNTHATHIYARS AND PARIAHS EQUALLY AND DESIT
      FROM SUCH FASCIST NEO NAZI THEORIES.THEY SHOULD CONSTITUTE TOWARDS WORKING CLASS UNITY

  19. மூவேந்தர்//
    இந்த மாதிரி எல்லாம் எழுத எப்படிதான் உங்களால் முடியுதோ.ஒடுக்கப்படும்,அடக்கம்படும் வர்க்கங்களுக்கு ஆதரவாக தம் கருத்துகளை சொல்வதை விட்டு, ஆரிய-திராவிடம்,தெழுங்கன் என்று பைத்தியகாரதனமாக சொல்லி ஒரு சில ஆதிக்க __________ முன்னேற்றுவதற்கும்,அவர்களின் கீழ் மற்றவர்களை அடியாட்கள் ஆக்குவதற்கும் சொல்லும் சொல் தான் “ஆண்டப்பரம்பரை” என்ற இழிந்த வார்த்தை. உலகத்தில் வாழ்ந்த அனைத்து அரசர்களும்,நிலப்பிரபுக்களும் பெரும்பான்மையாக இருந்த அடிமைகளை சுரண்டிகொழுத்த இரத்த உறிஞ்சி,மனித தன்மையே இல்லாத மிருகங்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

    • நண்பரே அறியாமையில் கிடந்து உழலாதீர்கள். பெரும்பான்மை இனம் என்பதுவே ஆண்ட இனம். சிறுபான்மை ஒருக்காலும் ஆள முடியாது. உங்களின் அடிமைத் தனத்தைப் பார்த்தால் நீங்கள் பறையர் போல் தோன்றுகிறது. மூவேந்தர்கள்(மள்ளர்கள்) வீழ்வதுவரை தமிழினம் சொத்து சுகத்தோடு வளமொடுதான் வாழ்ந்தது. கோவில் ஊழியர்களாக பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்றோரே மள்ளர் அரசர்களால் பணியில் அமர்த்தப்பட்டனர். பின்னாளில் ஆரியர்கள் இவ்விடங்களை ஆக்கிரமிக்க , ஏனைய தமிழ் சாதிகள் கோவிலில் இருந்து படிப்படியாக வஞ்சகமாக வெளியேற்றப்பட்டனர். எமது தமிழர் மண்ணில் யாம்(மள்ளர்) இருக்கும் வரை மன்னுரிமைப்போர் நடந்துகொண்டேதான் இருக்கும். யாம் மேண்டேலும் போது மீண்டும் எமது முன்னோர்களின் நினைவிடங்களில் (கோவில்) பண்டாரம்,பறையர், வேளார்(குயவர்) போன்ற தமிழரையே பணியில் அமர்த்துவோம். இது நடக்கும்.நம்புங்கள் . சொல்வது எம்மண்டலமும் கொண்டருளும் பெருமாள்(பெருமை மிக்க மள்ளர்) .

    • தோழர் ,
      மேலும் தமிழர் பற்றி அறிய தவறாது பாருங்கள் “மீண்டெழும் தமிழர் வரலாறு”. ஒவொரு புதன் கிழமையும் இரவு 9PM- 9:30 PM.

      http://www.youtube.com/watch?v=8cikBUslznY&noredirect=1
      u Tube லும் காணலாம்… அனைத்து பாகங்களும்.(1-8 till now)

  20. பூச்சிகள் கூட பூச்சிக்கொல்லி மருந்துக்கு பலியாகிவிடாமல் இருக்க, தங்கள் அணுக்களில் மாற்றம் செய்துகொண்டன. நாம் மனிதர்கள். இந்த விஷத் தெளித்தலைப் புரிந்து கொண்டு, நம்மை நாம் உணர்ந்துகொள்ள வேண்டாமா?

  21. (வினவு தோழர்கள் கவனத்திற்கு :- இது சம்மந்தம் இல்லாத பதிவு என்றாலும் இதனை முடிந்தால் தனியாக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் – நன்றி )
    தோழர்களே , பதிவர்களே, பார்வையாளர்களே ,,

    ஒரு அவசியமான மற்றும் அவசரமான செய்தி. இன்று காலையில் பாரத் இஞ்சினியரிங் கல்லுரியில் (சேலையூர் – சென்னை) கடைசி ஆண்டு மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக கூறி ஏமாற்றிய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம் மற்றும் வகுப்பு பிறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் உணர்வுள்ள சில தமிழக மாணவர்களும் பங்கேற்றனர். குறைந்த பட்சம் 500 மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் ஆசிரியர்கள் மூலம் சமரசம் பேசிய நிர்வாகம், மாணவர்கள் அதற்கும் மட்டுப்படாததால், ஒரு சில புல்லுருவிகளை மாணவர்கள் மத்தியில் ஊடுறுவ விட்டு மாணவர்களில் முன்நின்றவர்களை வீடியோ படம் எடுத்தது. பின்னர் அதில் சில புல்லுறுவி மாணவர்களை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டது நிர்வாகம். போராட்ட மாணவர்கள் உடனடியாக கோபம் கொண்டு அந்த புல்லுறுவிகளை விரட்டியடித்தனர்.

    நிர்வாகம் எந்த ஊடகத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சமீபத்தில் கிடைத்த செய்தி. ஆத்திரத்தின் உச்சத்தில் போராடிய மாணவர்களில் முன்நின்ற மாணவர்களை தனியாக அழைத்துப் போய் இரும்புக்குழாயால் அடித்து தாக்கியிருக்கிறது நிர்வாகம். இது குறித்து வெளியே செய்திகள் வராதவாறு அமுக்க முயற்சிக்கிறது.

    இவ்விசயத்தை பரவலாக்குமாறு தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்போம்..

    • ஜெகத்தை காக்கும் இரட்சகரின் கல்லூரி அல்லவா இது… மாணவ சமுதாயத்தினரின் மீது கட்டவிழ்த்தப்படும் காலிகளின் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்… ஜெயா டிவி செய்தி வெளியிட்டுவிட்டது… மற்ற ஊடகங்களையும் முடுக்குங்கள்… ஊடக பலத்தாலே இதை தோலுரிப்போம்…

  22. சமீபத்திய செய்தி:

    தற்போது 150 மாணவர்களை சிறைபிடித்து கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள.

    வெளியே போலீஸ் கூட்டம் நிற்கிறது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

Leave a Reply to K.N பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க