privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

-

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி!

ங்குத் திரும்பினாலும் கான்ட்ராக்ட், CL என்ற பெயரில் தினம்தோறும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைத்தாலே வேலை இல்லை. போனஸ், பிஎஃப், இ.எஸ்.ஐ போன்ற சட்ட உரிமைகளை இந்த நாட்டில் முதலாளிகள் தங்களின் மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை. இது போன்ற எண்ணற்ற முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டின் நீதிமன்றம், போலிசு,ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவரும் துணை நிற்கிறார்கள்.இதனை எதிர்த்து  தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் போராடும் போதெல்லாம் ஊடகங்களும் தன் பங்குக்கு அதனைக் கண்டு கொள்வதேயில்லை, அல்லது திரித்து செய்திகளை முதலாளிகளுக்கு சார்பாக வெளியிட்டு, போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகின்றன.

இந்நிலையில்தான் துவண்டு போகும் தொழிலாளர்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி  வருகின்றன புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி –யின் தலைமையிலான புரட்சிகர தொழிற்சங்கங்கள்.

அந்த வகையில் ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில்  பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக  உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை  உற்பத்தி செய்துவரும் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் (லிட்) எனும் ஆலை ஓசூர் சிப்காட்-1 பகுதியில் இயங்கி வருகிறது. சுமார் 15- ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வாலையில் அவுஸ்கீப்பிங், கார்டன், பாண்டரி போன்ற இடங்களை  பராமரிக்க 6- பெண்கள் உள்ளிட்ட  மொத்தம் 20- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து பராமரித்து  வருகின்றனர். இவர்கள் கடந்த 13 – ஆண்டுகளாக இங்கே அற்ப கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர்’2010 முதல் போராடி தங்களின் உரிமைகளைப் பெற உறுதிப்பூண்டு தங்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யில் சங்கமாக இணைத்துக்கொண்டார்கள். ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு  சட்டப்படி நியாயமாக வழங்கவேண்டிய போனஸ், காலணி, உள்ளிட்ட உரிமைகளை கேட்டனர். 12- ஆண்டுகளாக கூலி உயர்வு போனஸ், காலணி கொடுக்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை திருடித் தின்று கொழுத்த நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துப் போராடியதால் வேறுவழியின்றி போனஸ் மற்றும் கூலி உயர்வை அளித்தனர்.

கல்லியறிவற்ற,பின்தங்கிய வறிய ஏழைகளான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவ்வாலையில் மலக்குழியை கழுவுகின்றனர். அதிகாரிகள் மென்று துப்பும் சுவிங்கம் –குப்பைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு அகற்றும் வேலைகளை செய்கின்றனர். கேண்டீனில் உணவு கிடையாது. புல்வெளியில் அவ்வப்போது படமெடுக்கும் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துகளிடமிருந்து தப்பித்தாலும் கான்ட்ராக்ட் சூப்பர்வைசர் ரவுடி முனீரிடமிருந்து தப்பிக்கவே முடியாது. மலக்குழியின் துர்நாற்றத்தையே சகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், வாயைத் தொறந்தாலே கெட்டவார்த்தைகளில் பேசும் ரவுடி முனீரை சகித்துக் கொள்ள முடியாது அன்றாடம் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

வேறு தொழில் ஏதும் தெரியாத இந்த அப்பாவித் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட கடந்த ஜுன் மாதம் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு ரூ 50-ஐ மட்டும் கூலி உயர்வாக அறிவித்துவிட்டு ஆகஸ்ட் – 1-ம் தேதி முதல் 5- பேருக்கு வேலை இல்லை என திடீரென்று திமிராக அறிவித்துவிட்டான் நயவஞ்சகன் விக்டர் பிரசாத்.

யார் இந்த விக்டர் பிரசாத் ?

கொடிய விசமுள்ள நச்சுப்பாம்பை நல்லப்பாம்பு என்று சொல்வதைப்போல ‘மனித வள மேம்பாட்டு அதிகாரி’ என்ற போர்வையில் இவ்வாலையில் புகுந்தான் விக்டர்  பிரசாத். தொழிலாளர்களையும்,தொழிற்சங்கத்தையும் ஒழித்துக்கட்ட எண்ணற்ற தாக்குதல்களை தொடுத்து வருகிறான்.

அப்பாவி மக்களை குண்டுவைத்துக் கொல்வதும், துப்பாக்கியால் சுடுவதும் பயங்கரவாதம் என நாம் அறிவோம். அதுபோல் உழைத்து பிழைப்பதைத் தவிர வேறு எதையும் அறியாத இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து வயிற்றிலடிக்கும் இவனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றழைப்பதுதான் பொருத்தம். அந்தளவிற்கு  மிகவும் கொடியவன்தான்  இந்த விக்டர்பிரசாத்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றிலடித்த இந்தக் கொடூரனுக்கு முதலாளித்துவப் பயங்கரவாதிக்கு மாதச்சம்பளம் ரூ1,50,000. ஆலையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது, தொழிலாளர் ஒற்றுமையைப் பிளக்க கருங்காலிகளை ஆசைக்காட்டி உருவாக்குவது,  இது போன்ற வேலைகளை செய்வதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் (HR) முக்கியமான வேலையாகும். அப்படிப்பட்ட வேலைகளை செய்துவரும்  மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி விக்டர் பிரசாத் தூண்டுதலின் பேரில்தான கான்ட்ராக்ட்காரன் 5- பேரை வேலை  நீக்கம் என்று அறிவித்தான்.

ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்க மறுத்த பு.ஜ.தொ.மு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களையும்  அணிதிரட்டி உடனடியாக ஆலைவாயில் முன்பு 10.08.2011 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை திரளான உள்ளுர் மக்கள் ஆதரவுடன் நடத்தின. இதனைக் கண்டு அரண்டுப்போன நிர்வாகம் உடனே பேச்சுவார்த்தைக்கு  முன்வந்தது.

அதன்பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  வேலை நீக்கத்திற்குப் பதிலாக சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 4- நாட்கள் மட்டும் வேலையிழப்பு என்று தொழிலாளர்கள் ஒப்புதலுடன் பேசிமுடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையைவிட்டு  நீக்கப்படுவதை தொழிலாளர்கள் தங்கள் வர்க்க ஒற்றுமையைப் பேணி, பு.ஜ.தொ.மு-ன் வழிக்காட்டுதலின்படி உறுதியாக நின்றுப் போராடி முறியடித்தனர். இழப்பை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டனர். இதனால், ஆப்பறைந்த குரங்குப்போல திகைத்து நின்றான் விக்டர் பிரசாத்.

இந்நிலையில் ஒப்புக்கொண்ட விசயங்கள், பேச்சுவார்த்தை மரபுகள் அனைத்தையும் மீறி திடீரென்று தடாலடியாக விக்டர் பிரசாத்தும், கான்ட்ராக்ட்காரனும் இணைந்துக் கொண்டு சங்க முன்னணியாளர்கள் 4-பேரையாவது  கட்டாயமாக வேலையை விட்டு நீக்கியே  ஆக வேண்டும் என்று முடிவெடுத்து செப்டம்பர் 12 –தேதி அதன்படியே அறிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தொழிலாளர்கள் ஆலையினுள்ளே உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

அதனடிப்படையில் 14.09.2011 அன்று மாலை 5-மணிக்கு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு மறுநாள் 15.09.2011 அன்று காலை 10-மணிக்கு இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, ஆட்குறைப்புக்கான  நியாயமான காரணங்கள் எதுவும் நிர்வாகத் தரப்பில் முன்வைக்கப்படவில்லை. மாறாக, சங்கம் சேர்ந்ததற்குதான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாக அம்பலமானது. ஆதாரம் இல்லாததால் கான்ட்ராக்ட்காரன் பேச்சுவார்த்தையின் இடையிலே எழுந்து ஓடிவிட்டான். அதனால் விழிப்பிதுங்கி நின்ற நிர்வாகம் இறுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்கப் போராட்டத்திற்கு பணிந்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பேணிப் பராமரித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஊன்றி நின்று வெற்றியை சாதித்துக் கொடுத்தது புரட்சிகரத் தொழிற்சங்கமான பதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைமை. இது ஓசூர் வரலாற்றிலே அதுவும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநீக்கத்திற்கு எதிரான, உரிமைக்கானப் போராட்டத்தில் பெற்ற வெற்றி என்பது இதுவரை யாரும் சாதித்திராத முன்னுதாரணமிக்கப் போராட்ட அனுபவமாகும். மேலும், இந்த அனுபவம் பிற ஆலையில் கொத்தடிமைகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு ஒளிவிளக்காகவும் திகழ்கிறது என்பதே எதார்த்தமாக உள்ளது.

__________________________________________________

    – புதிய ஜனநாயம் செய்தியாளர், ஓசூர்.
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. விக்டர் பிரசாத் ஒரு phd ஹோல்டிங் டாக்டர் என்று அவரது சுய குறிப்பு பார்த்து தெரிந்துகொண்டேன்… மனித வள மேம்பாட்டு துறையின் ஆராய்ச்சி படிப்புகளை படித்து தேர்ந்த ஒரு பெரும் பட்டதாரி இப்படி கொடூரமாக நடந்துகொள்ளுகிறார் எனபது கசப்பான ஒரு செய்தியாகவே உள்ளது…

    டாக்டர் விக்டர் பிரசாத் வெறும் கடந்த எட்டு மாதங்களாகத்தான் கமாஸ் க்ரூப்பில் வேலை செய்கிறார்… ஆகவே 12 வருட கால பிரச்சினைகளுக்கு பிரசாத் எப்படி காரணம் ஆக முடியும்?

    மற்றபடி கமாஸ் குரூப் ஒரு ருசிய எம்.என்.சி… ருசியன் க்ரூப்ஸ் எல்லாமே இப்படித்தான் தொழிலாளர்களை நசுக்குகின்றன… ருசிய வெளக்கெண்ணையின் இலட்சணத்தை வெளிச்சமிட்டு வெளிச்சந்தைக்கு காட்டுகிற ஒரு விவரமான மற்றும் விவகாரமான பதிவு….

    • //டாக்டர் விக்டர் பிரசாத் வெறும் கடந்த எட்டு மாதங்களாகத்தான் கமாஸ் க்ரூப்பில் வேலை செய்கிறார்… ஆகவே 12 வருட கால பிரச்சினைகளுக்கு பிரசாத் எப்படி காரணம் ஆக முடியும்?//
      12 வருட கால பிரச்சினைகளுக்கும் பிரசாத்தான் காரணம் என்று யாரும் இங்கே சொல்லல.
      ஆனால் இவனுனுங்க எல்லோரும் நல்லப் பாம்புதான்.

  2. இந்த நிறுவனம் செய்யும் ரவுடிதனம் முதல் முறை அல்ல…

    கடந்த 2010 பிப்ரவது மாதம் தொழிற் சங்கம் வைத்த காரணத்தால் வேலை நீக்கம் செய்த தொழிலாளர்கள் மீது நாய் விட்டு கடிக்க அனுப்பியது காமாஸ் வெக்ரா நிர்வாகம்…

    போராட்டம் செய்த தொழிலாளர்கள் கடிக்க வந்த நாய்களை பிடித்து கட்டி வைத்தனர்… இந்த செய்த அனைத்து ஊடங்களிலும் வந்த ஒன்றே…

    அப்போது மேலாளர்களாக இருந்த இருவரின் பெயர்களோடு சுவரொட்டிகள் ஓசூர் முழுவதும் ஒட்டபட்ட அம்பலபட்டனர்… இப்போது விக்டர் பிரசாத்…

    அந்த போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர்கள் புஜதொமுவே…

  3. 1) ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒற்றுமை+புரட்சித் தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-ன் வழிக்காட்டல் இந்த இரண்டின் பலத்தால், இன்று… நிர்வாகத்தின் ஆட்குறைப்பு- அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களை பிளவுப்படுத்திட திட்டமிட்ட நிர்வாகத்தின் சூழ்ச்சியும் முறியடிக்கப்பட்டது. இது ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு ரோல்மாடலானப் போராட்டம் என்பதும்.உண்மைதான்! இருப்பினும் இது தற்சமய வெற்றியே. ஆனால் மீண்டும் அடிப்பட்ட பாம்புப் போல் விஷத்தை கோரமாக நிர்வாகம் கக்கும் உஷார்.! ஏனென்றால், இந்த புரட்சிப் புத்தகத்தின் செய்தியாளர் இந்த செய்திக்குறிப்பிலே தவறாமல் ஒரு உண்மை விவரத்தை சொல்லியிருக்கிறார். அந்த விவரத்திலிருந்தே இந்த தொழிலாளர்கள் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது கவணித்துப் பார்த்தால் நன்றாக விளங்கும். அது என்னவென்றால்…முதலில் சங்கநிர்வாகிகளைக் அழைத்துப் பேசி ஒரு சமரசத்திற்கு வந்தான் .அதன்பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பி ஒருமாதமும் கழிந்த நிலையில், மீண்டும் ஏற்கனவே முடித்தப் பிரச்சினையையே திரும்பவும் கிளப்பியிருக்கிறான். அதுக்குத்தான் இப்ப தாசில்தார் வரை சென்றும் பருப்பு வேகாமல் பிரச்சினை ஒருவழியாக முடிந்துள்ளது. மீண்டும் அடிப்பட்ட பாம்பு படமெடுக்கும். தொழிலாளர்களே, எப்போதும் தடிக்கம்புகளுடனே இருங்கள். வாழ்த்துக்கள்!
    நன்றி!
    -இராமன்,பெங்களூர்.

  4. நான் ஏற்கனவே, நிரந்திரத் தொழிலாளியாக இருந்தவன். எனது கம்பெனி மூடப்பட்டுள்ளதால் இப்போது நான் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி. என் முதலாளி இ.எஸ்.ஐ, பி.எஃப், ஐ.டி கார்டு போன்ற எதுவும் யாருக்கும் தருவதில்லை. இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பினால் போலிஸ் தொல்லை. நான் உண்மையைப் பேசி வீடு வந்தும் சேர்ந்துவிடுகிறேன். என்னுடன் வேலைபார்க்கும் மற்றவர்களுக்கும் இதே கதிதான். சில நேரங்களில் அவர்களுக்கு ஏதாவது நட்டுக்கிச்சின்னா எங்களை அப்படியே கூப்பிட்டுச் சென்று விடியும் வரைக்கும் வச்சிருந்துவிட்டு விடிந்தப் பிறகு சரி உங்க முகவரியை குறிப்பிட்டுவிட்டு போங்க என்று அனுப்பிவிடுவார்கள். இந்த விசயத்தை நான் புதிய ஜனநாயக தோழர் ஒருவரிடம் கூறினேன். அவர் கூறியபடி சங்கம் சேர்க்க முயற்சித்தேன். ஆனால், தொழிலாளர்கள் இதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆயிரக்கணக்கில் உள்ள நிரந்திரத் தொழிலாளர்களே உண்ணாவிரதம் எல்லாம் இருந்துப் போராடிப் பார்த்து ஒன்னும் நடக்கல. நாம் சங்கம் சேர்ந்துப் போராடினால் அவ்வளவுதான். இந்த வேலையும் இல்லாமல் வீட்டுக்கப் போகவேண்டியதுதான் என்று ஒதுங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு சொற்பமான சிலரை மட்டும் திரட்டி ஒரு காரியத்தை செய்தேன். அதன் பிறகுதான் , இப்ப நான் வேலை செய்யும் கம்பெனியில் உள்ள எல்லா ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கும் இ.எஸ்.ஐ, பி.எஃப், ஐ.டி கார்டு, ஷு, சீருடை, கிளாக்(கம்பெனிக்குள் வேலை செய்யும்போது ஃபோர்க்லிப்டில் அடிப்பட்டு, பாம்புக்கடித்து, கூரையிலிருந்து விழுந்து செத்த தொழிலாளர்கள் ஏராளம். நானே இதுவரை மூன்றுப் பிணத்தைப் பார்த்துள்ளேன். அதற்கு எந்த நீதியும் கிடையாது. அதற்கும் இன்னைக்கு விடிவாக ரேகையை பதிவுசெய்யும்படி கிளாக் வந்துள்ளது.) எனக் கிடைத்துள்ளது. என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்த நன்றிக் கெட்ட தொழிலாளர்கள் இதைப் புரிந்துக்கொள்ளாமல் சுயநலமாக உள்ளனர். ஓட்டி(ஓவர் டைம்) போயிடுச்சி என்று கவலைப்படுகின்றனர்.(ஓட்டி என்றால் இரண்டு, மூன்று சிப்ட் வேலைப் பார்க்கவேண்டும் அதற்கு இரட்டிப்பு சம்பளம் எதுவும் கிடையாது.) இவர்களை நம்பி என்ன செய்யமுடியும். கமாஸ் வெக்ட்ராவில் வேண்டுமானால் அங்கு படிப்பறிவில்லாத அப்பாவி மக்களாக இருந்தபோதிலும் அவர்களிடம் நன்றி விசுவாசம் உள்ளது. ஆனால் இங்கு அப்படி இல்லை. விரக்தியில் தொழிலாளர்கள் மீதான எரிச்சலில் நானும் நாளடைவில் அந்த புதியஜனநாயகம் நண்பரை சந்திப்பதை நிறுத்திக் கொண்டேன். அவர் வலிய வந்து என்னை சந்தித்தபோதிலும் நான் பொய்யானக் காரணத்தை சொல்லி சொல்லியே புறக்கணித்துவிட்டேன். இப்போது குற்ற உணர்வாக உணர்கிறேன். சில குடும்பப் பிரச்சினைகளை முடித்துவிட்டு விரைவில் அவரை சந்திப்பேன். புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு நன்றி!- நாகிரெட்டி.

  5. அதிகாரிகள் மென்று துப்பும் சுவிங்கம் –குப்பைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு அகற்றும் வேலைகளை செய்கின்றனர்// இது தகவல் தொழில்நுட்பத் துறையிலும் உண்டு. கொஞ்சம் கூட அறிவற்ற படித்த முட்டாள்கள் அவர்கள். இதை அகற்றும் தொழிலாளியும் மனிதன் தான் என்ற உணர்வற்ற காட்டுமிராண்டிகள்.

  6. //அதன் பிறகு சொற்பமான சிலரை மட்டும் திரட்டி ஒரு காரியத்தை செய்தேன். அதன் பிறகுதான் , இப்ப நான் வேலை செய்யும் கம்பெனியில் உள்ள எல்லா ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கும் இ.எஸ்.ஐ, பி.எஃப், ஐ.டி கார்டு, ஷு, சீருடை, கிளாக்(கம்பெனிக்குள் வேலை செய்யும்போது ஃபோர்க்லிப்டில் அடிப்பட்டு, பாம்புக்கடித்து, கூரையிலிருந்து விழுந்து செத்த தொழிலாளர்கள் ஏராளம். நானே இதுவரை மூன்றுப் பிணத்தைப் பார்த்துள்ளேன். அதற்கு எந்த நீதியும் கிடையாது. அதற்கும் இன்னைக்கு விடிவாக ரேகையை பதிவுசெய்யும்படி கிளாக் வந்துள்ளது.) எனக் கிடைத்துள்ளது. என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்த நன்றிக் கெட்ட தொழிலாளர்கள் இதைப் புரிந்துக்கொள்ளாமல் சுயநலமாக உள்ளனர்//

    கம்பெனியில் நடக்கும் அத்துமீறல்களை தொகுத்து ஒரு புகார் கடிதமாக(தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று) எழுதி, தொழிலாளர் துறை, கம்பெனி நிர்வாகம்,ம.உ. ஆணையம்,நீதித்துறை ஆகிய இடங்களுக்கு தாங்கள் மனுப் போட்டதன் அடிப்படையில் அவன் உஷாராகி தற்போது சில சில்லறை வேலைகளை செய்து முறைப்படுத்தியுள்ளான். இதற்கே தாங்கள் மாபெரும் வேலை செய்துவிட்டதாக கருதி தொழிலாளிகள் வரமாட்டார்கள் என அலுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் நிரந்திரத் தொழிலாளியாக இருந்தபோது இருந்தப்பிரச்சினை வளர்ந்து இன்னைக்கு நீங்கள் ஒப்பந்தத் தொழிலாளி. இன்னைக்கு ஒப்பந்தத் தொழிலாளியாக இருக்கும்போதாவது உங்களிடம் உள்ள தேவையற்ற அச்சத்தை தூக்கியெறிந்துவிட்டு சக தொழிலாளிகளோடு ஐக்கியப்பட்டு அவர்களைத் திரட்டுங்கள்.

    //விரக்தியில் தொழிலாளர்கள் மீதான எரிச்சலில் நானும் நாளடைவில் அந்த புதியஜனநாயகம் நண்பரை சந்திப்பதை நிறுத்திக் கொண்டேன். அவர் வலிய வந்து என்னை சந்தித்தபோதிலும் நான் பொய்யானக் காரணத்தை சொல்லி சொல்லியே புறக்கணித்துவிட்டேன். இப்போது குற்ற உணர்வாக உணர்கிறேன். சில குடும்பப் பிரச்சினைகளை முடித்துவிட்டு விரைவில் அவரை சந்திப்பேன்.//

    நாட்டுப்பிரச்சினை என்ன உலகப் பிரச்சினையையே மார்க்சியத்தால் தீர்க்கமுடியும் என்பதால் அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் அந்த தோழர் உங்கள் குடும்பப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லமாட்டாரா?என்ன! தாமதம் வேண்டாம் உடனே, அவரை சந்தியுங்கள். தோழராக உயருங்கள்!

Leave a Reply to ஊரான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க