privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!

-

அமெரிக்கக் கொள்ளைக்காக புரட்சித்தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி !
படம் – தெஹெல்கா

ஓட்டுக்கட்சித் தலைவர்களை தெய்வமாகப் பார்க்கும் பக்த மனப்பான்மைக்கும், அதே தலைவர்களை தமது வியாபார நலன்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனப்பான்மைக்கும் இடையேயான கள்ளக்காதலின் விகாரமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள். இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற காசில் தூக்கியெறியப்படும் எலும்புத் துண்டுகள் என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவையே பன்னாட்டுக் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வகைசெய்யும் அட்சய பாத்திரங்களாகவும் விளங்குகிறது.

இந்தவகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியுடன் போட்டியில் முந்துவதற்கு, ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்களில் முக்கியமானது மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் (மடிக்கணினி) வழங்கும் திட்டம்.

கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டு 9,12,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 70 லட்சம் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கணினிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் எல்காட் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக 9,12,000 மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் ஜூன் 4, 2011 அன்று வெளியிட்ட டெண்டரின்படி – லினக்சு (LINUX) மற்றும் விண்டோசு (Windows Starter Edition) இயங்குதளங்கள், விண்டோசுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் ஆண்டிவைரஸ் மென்பொருள் ஒரு ஆண்டு உரிமத்துடன், 320 GB ஹார்ட் டிரைவ், 1.3 மெகாபிக்சல் ஒளிபடக் கருவி (Webcam), Wi-Fi வலையிணைப்பு வசதி, 8X டிவிடி எழுதி (DVD Writer) போன்ற வசதிகளுடன் கணினி வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கணினிக்கு 15,000 ரூபாய் வரை விலை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இருப்பதால் செலவு 10,000 ரூபாய் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது வெளிச் சந்தையில் சுமார் 2000 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. இதனோடு சேர்த்து, லினக்ஸ் இயங்குதளத்தை இரட்டைத் துவக்க முறையில் (Dual boot) அளிப்பதால், கணினி பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் உள்ளடக்குவதாக இருக்கும். மேலும், அலுவலகத் தேவைக்கான மென்பொருட்களையோ கல்விக்கான மென்பொருட்களையோ தனியே காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், எல்காட் நிறுவனம் தனது ஜூன் 4-ம் தேதியிட்ட டெண்டரில் திருத்தங்கள் செய்து ஆகஸ்டு 20-ம் தேதி  மறுடெண்டர் ஒன்றை வெளியிட்டது. மாற்றியமைக்கப்பட்ட டெண்டரில் லினக்ஸ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மைக்ரோசாப்டு விண்டோஸ் (Full Edition) மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டார்ட்டர் எடிஷனை விட சுமார் 5000 ரூபாய் விலை கூடுதலானது. விண்டோஸ் இயங்குதளத்தின் அதிக விலைக்கு ஈடு கொடுக்க முதல் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான கருவிகள் சிலவற்றை இரண்டாவது டெண்டரில் எல்காட் நீக்கிக் கொண்டது.  இவ்வாறு நீக்கப்பட்டவை – வெப்கேம் மற்றும் Wi-Fi வசதி, கூடவே 320 GB ஹார்ட் டிரைவ் 160 GB ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.

“விண்டோஸ் தான் பயன்படுத்த எளிதானது. லினக்ஸ் கற்றுக்கொள்வது கடினம்” என்று விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்திப் பழக்கமாகி விட்டவர்களுக்குத் தோன்றலாம். முதன்முதலில் கணினி பயன்படுத்த போகும் மாணவர்களுக்கு இவை இரண்டையுமே கற்பதற்கு சம அளவிளான உழைப்பும் முயற்சியுமே தேவை. அது மட்டுமல்லாமல், லினக்ஸ் போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்களை பள்ளிகளிலும் அரசு அலுவலங்களிலும் எந்தச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முன்மாதிரி ஏற்கனவே சில இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளவிலும் சில நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

2007-ஆம் ஆண்டு கேரள அரசு, எதிர்கால கணினித் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் தனது தகவல் தொடர்பு கொள்கையில் ‘அரசுத் துறைகளில் சுதந்திர கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவித்தது. கணினி அறிவை மக்களிடையே பரப்பவும், மென்பொருள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் வழிகாட்டலாக அந்தக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் எல்காட் நிறுவனம், 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.டி உமாசங்கரின் வழிகாட்டலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பஞ்சாயத்துகளிலும், பள்ளிகளிலும் கட்டற்ற சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்து மைக்ரோசாப்டின் ஆதிக்கத்தை உறுதியாக வெளியேற்றியது. 30,000 அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் லினக்சில் பயிற்சி பெற்றனர். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 400 கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்துகிறது.

லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை

மேற்சொன்ன “முன்மாதிரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில் லினக்சு மட்டும்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், வைரஸ் தொல்லை இல்லாத பயன்பாட்டுச் சூழலையும் ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்” என்று கணினித் துறைசார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wi-Fi,  வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும். மட்டுமல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் வைரஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மடிக்கணினிகளை வாங்கும் ஏழை மாணவர்கள் மேல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் வாங்க வேண்டிய சுமையும், தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்ஸ்களை செய்ய வேண்டிய சுமையும் விழுகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தின் தன்மையின் படியே, தொடர்ந்த பயன்பாட்டில் அது தனது இயங்கு திறனை இழந்து விடுமென்பது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, மாணவர்களின் கல்வி உதவிக்காக என்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பொருள் தீராத தலைவலியாக மாறப் போவது தான் எதார்த்தமான உண்மை. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் விண்டோஸைக் கட்டிக் கொண்டு மாரடிக்கப்போகிறார்கள். இதில் பழுது பார்க்கும் செலவும் ஆண்டி வைரஸ் மென்பொருட்களின் லைசென்ஸுகளை புதுப்பிக்கும் செலவும் வேறு மாணவர்களின் தலையில் இறங்கப் போகிறது.

ஈழத்தாயின் மனதையே மாற்றி விடுமளவிற்கு ஜூன் 4க்கும் ஆகஸ்டு 20க்கும் இடையில் என்ன தான் நடந்திருக்கும்?  அதைச் சொல்வதற்கு முன் மைக்ரோசாப்டு விண்டோஸ் இயங்கு தளத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது, லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள்தான் பரவலான மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழி என்று ஏன் சொல்கிறோம் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ணினித் துறையில் மென்பொருட்களை வணிக முறையில் கொள்ளை லாபம் வைத்து விற்பதற்கு  மைக்ரோசாப்டு முதலான முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கண்டுபிடித்த உத்திதான் closed source எனப்படும், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருள் உரிம முறை. மென்பொருள் விற்பவர்கள் பைனரியை மட்டும் வாங்குபவருக்கு கொடுத்து விட்டு, மூலநிரல் வடிவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதன் மூலம் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ச்சியாக பணம் கறக்கும் உத்தியை வளர்த்தெடுத்தனர். இதன் மூலம் கணினித் தொழிலில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்டன.

1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.

இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.

இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.

ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம்  அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.

1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில்  மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.

இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு  தளமாகவும் கிடைக்கிறது.

டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.

கணினித் துறையைப் பொறுத்த வரை கணினி இயங்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிறுவனம் மற்ற எல்லா மென்பொருட்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெறுகிறது. உதாரணமாக, விண்டோசு இயங்குதளம் பயனர் கணினிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுவதால், அதில் பயன்படுத்தப்படும் அலுவலக மென்பொருட்கள், தகவல் பகிர்வு மென்பொருட்கள், நிரல் உருவாக்க கருவிகள் சந்தைகளிலும் மைக்ரோசாப்டு தனது ஏகபோக ஆதிக்கத்தை பரப்ப முடிகிறது.

இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கணினி நிறுவனங்களை போட்டி இயங்குதளங்கள் நிறுவி கணினிகளை விற்கக் கூடாது என்று மிரட்டுவது (சொன்னதைக் கேட்கா விட்டால், விண்டோசு உரிமத் தொகையை 4 மடங்காக ஏற்றி விடுவேன்!), அரசாங்கங்கள் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த முயற்சிக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணையுடன் அந்த அரசுகளின் மீது அழுத்தம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்ற எதுவும் கைகொடுக்காவிட்டால், இலவசமாகவே விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து விடுவது. இயங்குதளத்தை இலவசமாகக் கொடுப்பதன் மூலம், பிற பயன்பாட்டு மென்பொருட்களில் கொள்ளை லாபம் அடித்துக் கொள்வது என்று சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள அயராது பாடுபடுகிறது மைக்ரோசாப்டு.

அமெரிக்க அரசு வியட்நாம் அரசை 3 லட்சம் விண்டோசு உரிமங்கள் வாங்க கட்டாயப்படுத்தியதையும், துனீசியா நாட்டில் அந்நாட்டு அதிபரின் மனைவி நடத்தும் சமூக சேவை நிறுவனத்துக்கு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி அளித்ததன் (விண்டோசு உரிமங்கள் அளித்ததன்) மூலம் அரசுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மைக்ரோசாப்டு மாற்றிக் கொண்டதையும் கடந்த ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தின.

இந்தியாவைப் பொறுத்தளவில் மைக்ரோசாப்ட் அத்தனை சிரமப் படத் தேவையே இல்லை. இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் அமெரிக்கா கண்ணைக் காட்டினால் கடலில் கூட பாய்ந்து விடத் தயாராக இருக்கும் போது அவர்களுக்குக் கவலையென்ன. கடந்த ஜூலை மாதம் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவிருக்கிறதல்லவா? அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதிய ஜூ.வி ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு பத்திரிகைகள் என்னவோ பக்கத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போல, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லிப்ட் ஏறிப் போய் அம்மாவைப் பார்த்தார்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா சொன்னதை கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டு போனார்கள்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

சீமான் போன்ற புதிய கோமாளிகள் முதல் பழம் பெருச்சாளிகளான தமிழனவாதக் குழுக்கள் வரை ‘ஈழம் காத்த தாயே…’ என்று ஆரம்பித்து விதவிதமான ‘அம்மா’ புகழ்பாடி ஊரெல்லாம் சுவரொட்டி அடித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.

அந்தச் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னதை ஜெயலலிதா கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார் என்பதுதான் நடந்ததுள்ளது. இதைத் தான் இந்த மடிக்கணினி டெண்டர் மாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன.   இதன் மூலம் 5 ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமானம் 3000 கோடி ரூபாய் மைக்ரோசாப்டுக்கு டீச்செலவுக்குச் சரியாகப் போகும் சிறுதொகையாக இருக்கலாம், ஆனால், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருளில் பயிற்றுவிக்கப்படும் தமிழ்நாட்டின் மாணவர்களும் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு சமூகமும் எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கு கப்பமாக கட்டப் போவது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களான சுமையாக இருக்கப் போகிறது.

இது ஒருபக்கமிருக்க, ஒரு நாட்டு அரசின் டெண்டரைக் கூட தலையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருப்பதும், இறையாண்மை மாநில உரிமையெல்லாம் கிழிந்த காகிதமாக பறக்கவிடப்படுவதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘புரட்சித் தலைவி’  அசைக்க முடியாத இரும்புப் பெண்மணி என  தினமலர்-இந்து-தினமணி-துக்ளக்குகள் கட்டி வந்த கதையும் அம்பலமாகியிருக்கின்றது

கவர்ச்சித் திட்டங்கள் ஊரை ஏமாற்றும் எத்து வேலைகள் தானென்றும், இவையெல்லாம் மக்களின் தாலியறுத்த காசில் எறியப்படும் எலும்புத்துண்டுகளென்றும் நாம் சொல்லி வந்தோம். கருணாநிதி பத்தடி பாய்ந்தால் அம்மா பதினோரடியாவது பாய வேண்டுமல்லவா? எனவே இதிலும் அம்மா ஒருபடி மேலே செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அமெரிக்காவிலிருந்து கழுதை விட்டைகளை இறக்குமதி செய்து மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார்.

_________________________________________________________

குமார்
தகவல்மூலம் – The Deadly Microsoft Embrace (தெஹெல்கா)

________________________________________________________________

  1. வர வர உன் காமிடிக்கு அளவே இல்லாமப்பொச்சூப்பா…

    //ஹிலாரி கிளின்டன் – ஜெ சந்திப்பில் நடந்தது இதுதான்… தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி சொன்னதை ஜெ கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார்//

    இப்படி எல்லாம் யோசிக்க உனக்கு யார்ரா சொல்லிக்கொடுத்தா?

    ஹிலாரி கிளின்டன் என்ன மைக்ரோசாப்ட்டின் பிராண்ட் அம்பாஸீடரா?

    //இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wஇ-Fஇ, வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும்.//
    வை பை யும், வெப் கேமிராவும் படிக்கிற பையனுக்கு எதுக்கு, இவை இரண்டும் அத்தியாவைசியப் பொருள் இல்லை..

    • Pஐய

      வர வர உன் காமிடிக்கு அளவே இல்லாமப்பொச்சூப்பா.

      ஹிலாரி கிளின்டன் என்ன மைக்ரோசாப்ட்டின் பிராண்ட் அம்பாஸீடரா?இல்லையா பின்னே!!

      வை பை யும், வெப் கேமிராவும் படிக்கிற பையனுக்கு எதுக்கு, இவை இரண்டும் அத்தியாவைசியப் பொருள் இல்லை..

      படிக்கிற பையன் கள் வைபை வெப்கேமிரா பன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவது.

      • வை பை-யிண் மூலம் கம்பி இல்லாது இன்டெர்னெட் இணைப்பினை பயன்படுத்தலாம், அது அந்த வை பை எல்லை வரையே பயன்படுத்தமுடியும், இது ஆடம்பர கோட்டல்கள், மால்கள் மற்றும் துபாய், தோகா, மற்றும் லண்டன் போன்ற விமானநிலையஙளில் உள்ளன, பிஸினஸ் பீப்புள் விமானத்தில் பயணம் செய்யும் போது முக்கியமான விசயஙளுக்காக இன்டெர்னெட் இணைப்பினை இதன் மூலம் உபயோகப்படுத்துவது எளிதாகிறது…

        இதை ஏன் விளக்குகிறேன் என்றால் எங்கெல்லாம் நெட்நொர்க் மூலமாகவோ, டெட்டா கார்டு மூலமாகவோ இன்டெர்னெட் இனைப்பை பெறமுடியாத பட்சத்தில், இது உதவும்..

        வெப்-கேமிரா வீடியோ சாட் செய்ய உதவும், இப்பொ சொல்லுஙள், இவை இரண்டும் மாணவர்களுக்குத் தேவையா..

        இன்டெர்னெட் இனைப்பு எப்பொழுது ஒரு சூப்பர்விசனுடன் (பெற்றோர் அல்லது ஆசிரியர்) இறுப்பது நலம்..

        • பையா தம்புடு. நீ கொஞ்சம் வளர வேண்டும். குறைந்தது நிப்பிள் வைத்த பாட்டிலில் பால் குடிப்பதில் இருந்து டீ கிளாஸ் அளவுக்காவது முன்னேறு. ஹிலாரி கிளின்டன் என்னும் சீமாட்டி முடி வெட்டிக் கொள்வதற்கா இந்தியா வந்தார்.

          மாணவர்களுக்கு வெப்காம் இருந்தால் உலகில் யாருடனும் பேசலாம், கருத்துகளை பகிரலாம், அறிவு வளர்க்கலாம். அதை வைத்து தவறு செய்பவர்கள்தான் அதிகம் என்று ஏன் உங்கள் குறுக்கு புத்திக்கு மட்டும் தோன்றுகிறது.

          • //பையா தம்புடு. நீ கொஞ்சம் வளர வேண்டும். குறைந்தது நிப்பிள் வைத்த பாட்டிலில் பால் குடிப்பதில் இருந்து டீ கிளாஸ் அளவுக்காவது முன்னேறு.//

            //ஹிலாரி கிளின்டன் என்னும் சீமாட்டி முடி வெட்டிக் கொள்வதற்கா இந்தியா வந்தார்.//

            பாருஙக மக்களே முடி வெட்டிக் கொள்வதற்கா இந்தியா வந்தாராம்..ஒரு வேல பேருக்கேத்தமாதிரி((நான்கடவுளில்லை)) புல்லா கஞ்ஞால தான் இறுப்பாரோ??

            ஒக்கேன்னா நான் டீ கிளாஸுக்கு முன்னெறுறது இருக்கட்டும்..முதலில்நீர் கஞ்ஞா அடிச்சுட்டு உளறுவதினை விட்டுவிட்டு..கொஞசம் பிரிகேஜி படிக்க விண்ணப்பிக்கவும்..பிரிகேஜி அசெஸ்மெண்ட் தேர்வில் வெற்றி பெர என் வாழ்த்துக்கள், ஏபிசிடி, 1 டூ 10 மற்றும் 5 கலர்ஸ் அய்டென்டிபிகேசன் ஒன்லி..

        • வை-பை ஏர்போர்ட்டில் மட்டும் பயன்பட்வது அல்ல. எங்கள் வீட்டில் வயர்லெஸ் மேடம் மூலம் வை-பை பயன்படுத்தி ஒரே சமயம் பல கணினிகளை இயக்குகிறோம். பள்ளிழகல்லூரிகளும் வளாக வைபை இணைப்பு தர முடிய்ம். பல கல்லூரிகளில் உள்ளது.

    • கட்டற்ற மென்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு இந்தக் கட்டுரை உதவியாக இருக்கும். நன்றி.

      @Paiya
      //ஹிலாரி கிளின்டன் என்ன மைக்ரோசாப்ட்டின் பிராண்ட் அம்பாஸீடரா?//

      அப்படித்தான் தெரிகிறது. தெஹல்கா கட்டுரையை படித்து பாருங்கள். (http://www.tehelka.com/story_main50.asp?filename=Ws101011MICROSOFT.asp). அந்தக் கட்டுரையிலிருந்து

      “The proximity of the Clintons and the Gates is well known to the world and needs no explanation. Hillary Clinton has often endorsed Microsoft’s views on piracy and curtailing open source software to protect Intellectual Property Rights (IPR). Microsoft employees alone contributed close to $1,30,000 to Hillary’s presidential campaign while giving just half that amount to Obama’s campaign. And the revelations of WikiLeaks only show how the US has been forcing governments across the world to buy expensive Microsoft licences,” says Peter Gabriel, an online free software activist.

      //வை பை யும், வெப் கேமிராவும் படிக்கிற பையனுக்கு எதுக்கு, இவை இரண்டும் அத்தியாவைசியப் பொருள் இல்லை..//

      கணினி மற்றும் இணைய வசதி மூலம் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெருக்கும் சாத்தியங்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரு கல்விநிறுவன வலையமைப்பை உருவாக்கி (EduNet) அதன் மூலம் பல் துறை வல்லுனர்களையும் பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வழி செய்யும் திட்டங்களுக்கும் இவை தேவைப்படும்.

      அன்புடன்,
      மா சிவகுமார்

  2. இந்தத்தகவலை அறியத்தந்தமைக்கு முதலில் நன்றிகள்.

    தகவற் தொழிநுட்ப உலகின் அரசியல் குறித்தும் கட்டற்ற மென்பொருட்களை ஏகாதிபத்திய எதிர்ப்பாக முன்னிறுத்துவது குறித்தும் வினவு பேசுவதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுவது போதாது. இடதுசாரி, மார்க்சிச அடிப்படையில் போராடும் அமைப்பைச்சார்ந்தவர்கள் தகவற் தொழிநுட்ப உலகின் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் அங்குள்ள மாற்றுச்சக்திகளோடு இணைந்து போராட முற்படுவது வரவேற்கத்தக்க விடயம்.

    நன்றி. வாழ்த்துக்கள்.

  3. லினக்ஸ் இயங்குதளம்.

    இலவச மென்பொருள் பற்றி இன்னும் சிறிது விளக்கவும்.மேலும் “வினவு” லினக்ஸ்

    யில்தான் இயங்குகிறதா.லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை

    இருக்கும்போது விண்டோஸ் எதற்கு?

  4. ஐயோ சாமி… காமெடிக்கு அளவே இல்லையா?? நல்ல வேலை ஹிலாரி பேச்சுக்கு ஜெயலலிதா ஒதுக்கிட்டங்க… இல்லாங்கட்டி மைக்ரோசாப்ட் சார்பா i ஒபாமா சென்னைக்கு வந்து ஜெயலலிதா கிட்ட கேட்டிருப்பாரு… 🙂

    ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் ஹிலாரி சோனியா, மன்மோகன், எஸ்.எம் கிருஷ்ணா ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்..அப்படினா அதுக்கான காரணங்கள் பின்வாறு இருக்குமோ…

    சோனியா – அணைத்து மதிய அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முட்டை மற்றும் சத்துணவுக்கு பதில் மெக் டொனல்ட் பர்கர் போட சொல்லி இருப்பார்.. (அவர் ஸ்கின்னரிடம் தேர்தல் நிதியாக வாக்களர்களுக்கு கொடுக்க 30000 சுட்ட பர்கர் வாங்கி இருக்கிறார்..)

    மன்மோகன் – அனைத்து அமைச்சரவை கூட்டங்களிலும் மினரல் வாட்டருக்கு பதில் கோகோ-கோலா வைக்க சொல்லி இருக்கலாம்… அப்படியே அல்லா இச்கூல்லையும் கோக் வெண்டிங் மிசின் வக்க சொல்லிருப்பாரு… ( என்ன முஹ்டார் கென்ட் கிட்ட சுமார் 40000 கோக் பாட்டில் தேர்தல் நிதியாக வாங்கி இருப்பாரு….)

    எஸ்.எம் கிருஷ்ணா – நீங்கள் பயணம் செய்யும் அணைத்து நாடுகளிலும் மைக்ரோசாப்ட், பர்கர், கோக் மற்றும் லிஸ்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிராண்ட்-களுக்கும் விளம்பரம் செய்ய வேண்டும்.. அதுக்கு கூலியாக அமைச்சரவை மாற்றத்தின் பொது உங்கள் இலாகா பறிக்கப்படாது என்ற உறுதி தரப்படும்…

    • பின்னே எதுக்கு வந்தாருன்னு நீங்க சொல்றீங்க!

      சோனியா, மன்மோகன், எஸ்.எம் கிருஷ்ணா, ஜெயா ஆகியோரின் உடல்நலம் விசாரிக்க வந்திருப்பாரோ

      • கிலின்டன் மகலுக்கு மாப்பிலை பார்க வந்திருப்பார். அதான் சோனியா, மன்மோகன், எஸ்.எம் கிருஷ்ணா,ஜெயா பார்த்து விசாரிக்க வந்திருப்பாரோ

  5. வணிகக் கொள்ளையர்களுக்கு மட்டுமே தொழில்நுட்ப அருமை தெரியும் என்பது போலவும், அப்படியே அதை அனைவருக்கும் சேவை நோக்கில் எவரும் கொடுத்துவிட்டால், சேவை எனும் முகமூடியை மட்டுமே அணிந்து, கொள்ளையைத் தொடரும் அற்ப நாய்களின் முகங்களில் நன்றாக அறைந்துவிட்டது கட்டுரை.

    குமாருக்கு ஆயிரம் வந்தனங்கள்.

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  6. //வை பை யும், வெப் கேமிராவும் படிக்கிற பையனுக்கு எதுக்கு, இவை இரண்டும் அத்தியாவைசியப் பொருள் இல்லை..//

    — FOR THE STUDENTS TO SELL THE LAPTOPS IN SECOND HAND.

  7. ரூம் போட்டு யோசிப்பனுங்களோ ??? ஒரு வேலை இவருக்கு தெரிஞ்சது விண்டோசும், லினக்சும் , இன்னும் மேக் ஓஸ், Gஓக்லெ ஓஸ் எல்லாம் தெரியாது போலும்… விண்டோசில் லினக்சும் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க டூல்ஸ் உண்டு, VMWஆர் போன்ற டூல்கள்… சரி தான் லினக்ஸ் பழக பயங்கர கஷ்டம், ஆனால் பல வேலைவாய்ப்புகள் எல்லாம் விண்டோசில் தான், அதனை மறந்து விட கூடாது !!!

  8. தமிழக அரசு இலவசமாக எதையாவது வழங்கும் திட்டம் என்றாலே ஊழல் உருவாகிவிடுகிறது. முதல் வேலையா இந்த இலவசங்களை நிறுத்தினாலே போதும். மடிக்கணனி வழங்குவதும் வெட்டி செலவு தான். அந்த பணமும் கடன் வாங்கி தான் செலவு. பற்றாகுறை பட்ஜெட் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மொதல்ல, அரசு பள்ளிகளில் பாடங்களை ஒழுங்கா, நல்ல முறையி சொல்லிகொடுக்க, ஆசிரியர்களை செம்மைபடுத்தினாலே போதும். அவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் வேலை திறன் அதிகரிப்பு, தேவை. அதை செய்யாமல், இந்த இலவசங்கள் எல்லாம் வேஸ்ட். அரசு பள்ளி கல்வி அமைப்பின் இருக்கும் ஊழல்களை (ஆசிரியர்கள் தேர்வு, மாற்றல்கள், காண்ட்ராக்டுகளில்) மொதல்ல ஒழிக்காமல் மத்ததெல்லாம் வேஸ்ட். அதை பற்றி விழிப்புணர்வு கூட இல்லை.

    உமா சங்கர் போன்ற நேர்மையாளர்களை பந்தாடிய அரசுகள். லினக்ஸை தூக்கியதற்க்கு காரணம் இன்னும் சொல்லவில்லை. ஊழல் இருக்கவே வாய்ப்பு. சசி கும்பலின் ’லீலைகள்’ இருக்க வாய்பு உண்டு.

    சரி. ஆனால் ////ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம் அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், //////

    இது மென்பொருள் துறையில் ஒரு பகுதியில் மட்டும் தான் சாத்தியம். ஹார்ட்வேரில் மற்ற இதர துறைகளில் சாத்தியமில்லை. எனவே சும்மா ஓட்டாதீங்க. இந்த விசியத்தில் மைக்கோரோசாஃப்ட் ஊழல் செய்திருக்கலாம். ஆனால் அதன் windos OSஅய் கள்ள பிரதி எடுத்து, கிரே மார்க்கெட்டில் விற்பது இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகளில் மிக மிக அதிகம். காப்பி அடிப்பது இங்கு ஒரு குடிசை தொழில். எனவே அவர்களும் பல ‘வழிகளில்’ இறங்கி உட்டதை பிடிக்கும் வேலையை நம்மிடம் இருந்தே ’தொழில்’ கற்று கொண்டு இங்கு கைவரிசையை காட்டுகிறார்கள்.

    • அதியமான்,

      //இது மென்பொருள் துறையில் ஒரு பகுதியில் மட்டும் தான் சாத்தியம். ஹார்ட்வேரில் மற்ற இதர துறைகளில் சாத்தியமில்லை.//

      ‘மென்பொருள் துறையிலும் சாத்தியமில்லை’ என்றுதான் லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள் முதிர்ச்சியடையாத 1990களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு ‘லினக்ஸ் கம்யூனிஸ்டுகளின் சூழ்ச்சி’ என்று மிரட்டினார்கள் (2000ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில்), எதுவும் இந்த கட்டற்ற மென்பொருள் உருவாக்க முறையின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

      இன்று லினக்ஸ், சர்வர்களில், மொபைல் போன்களில் (ஆண்ட்ராய்ட்), பயனர் கணினிகளில் (உபுண்டு) சக்கை போடு போடுகிறது. உலகத்தின் முன்னணி வெப்சர்வராக அப்பச்சே வளர்ந்திருக்கிறது. போஸ்ட்கிரெஸ்கியூஎல் டேடாபேஸ் ஆரக்கிளுக்கும், மைக்ரோசாப்டு சர்வருக்கும் ஈடு கொடுக்கிறது.

      ஆண்டுகள் போகப் போக தடுத்து நிறுத்த முடியாதபடி கட்டற்ற மென்பொருட்கள் வெற்றி நடை போட்டு வருகின்றன.

      //இந்த விசியத்தில் மைக்கோரோசாஃப்ட் ஊழல் செய்திருக்கலாம்.//

      ஊழல் செய்வதுதான் அவர்களின் business model. இதைப் பற்றிய விபரங்களை anti trust சுட்டிகளில் படித்துப் பாருங்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் மோனோபோலி நிலையை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நிறுவனம்.

      //ஆனால் அதன் windos OSஅய் கள்ள பிரதி எடுத்து, கிரே மார்க்கெட்டில் விற்பது இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற வளரும் நாடுகளில் மிக மிக அதிகம். காப்பி அடிப்பது இங்கு ஒரு குடிசை தொழில்.//

      அந்தக் குடிசைத் தொழிலை தடுத்து நிறுத்தியிருந்தால், இன்றைக்கு விண்டோஸ் இந்தியா, சீனாவில் இல்லாமல் போயிருக்கும். (சீனாவில் ரெட் லினக்சு பிளாக் லினக்சு என்று சொந்தமாக தேசிய மென்பொருள் உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்).

      //எனவே அவர்களும் பல ‘வழிகளில்’ இறங்கி உட்டதை பிடிக்கும் வேலையை நம்மிடம் இருந்தே ’தொழில்’ கற்று கொண்டு இங்கு கைவரிசையை காட்டுகிறார்கள்.//

      அவர்களிடமிருந்துதான் நம்ம ஆட்கள் தொழில் கற்றுக் கொள்கிறார்கள் என்பதே சரியாக இருக்கும்.

      மா சிவகுமார்

      • //அந்தக் குடிசைத் தொழிலை தடுத்து நிறுத்தியிருந்தால், இன்றைக்கு விண்டோஸ் இந்தியா, சீனாவில் இல்லாமல் போயிருக்கும். ///

        என்ன சொல்ல வர்ரீங்க மா.சி ? காப்பி அடிக்கும் கள்ளத்தனத்தை நியாயப்படுத்துகிறீர்களா ? 1980களில் (அன்றைய விலைவாசியில்) ஒரு பி.சி சுமார் 80 ஆயிரம் விற்றது. போக போக விலை சரிந்தது, capacity உயர்ந்தது. பி.சி விலையில் விண்டோஸின் பங்கு குறைவு தான். வளர்ந்த நாடுகளில், இப்படி கள்ளதனமாக யாரும் செய்வதில்லை. முடியவும் முடியாது. அதே போல் தான் இங்கும் இருக்க வேண்டும். கள்ளத்தனத்தை இதில் ‘நியாயப்படுத்தினால்’ பிறகு எல்லா விசியங்களிலும் நியாயப்படுத்தலாமே ? நீங்க தயாரித்து நடத்தும் மென்பொருள் சேவை பண்டத்தையும் ஒருவன் கள்ளத்தனமாக உங்க source codeய் காப்பி எடுத்து, போட்டி நிறுவனம் நடத்தி, உங்களை விட குறைந்த விலைக்கு தொழில் செய்யதால் எப்படி இருக்கும் ? கள்ளதனம் நம் அடிப்படை நேர்மையை குலைக்கிறது. விண்டோஸை சட்டபடி எல்லோரும் வாங்க முன்வந்தால், படிப்படியாக விலை குறைந்திருக்கும். (mass sales usually reduces costs).

        மைக்ரோசாஃப்ட் மென்பொருள் வேண்டாம் என்பவர்கள் லினிக்ஸ் மற்றும் இதர மென்பொருள்களை உபயோகிக்க தடை இல்லையே. லினிக்ஸ் பற்றிய கருத்துகள், வெறும் கருத்துகளே.

        Anti-trust சட்டங்களே விவாதத்துக்கிரியனதான். IE அய் இலவசமாக அளிக்க கூடாது என்றது அச்சட்டம். இது conttroversial ஆனது. மற்றபடி விண்டோஸ் உருவாகாவிட்டால், பி.சி புரட்சி இந்த அளவு சாத்தியாமியிருக்காது.

        ///ஊழல் செய்வதுதான் அவர்களின் business model.///

        இல்லை. பொதுப்படுத்தப்பட்ட மிக தவறான கோணம். இது உண்மையாக இருந்தால் இன்னேறம் இத்தனை வளர்ந்திருக்க முடியாது. ஊழல் செய்தே பெரும் நிறுவனமாக வளரவே முடியாது.

        //அவர்களிடமிருந்துதான் நம்ம ஆட்கள் தொழில் கற்றுக் கொள்கிறார்கள் என்பதே சரியாக இருக்கும்./// இல்லை. வளர்ந்த நாடுகளில் இந்த அளவு ஊழல் இல்லை. அரசு எந்திரம் இத்தனை மோசம் இல்லை. மேலும் மாட்டிக்கொண்டால் தீர்ந்தார்கள். இங்கு போல் வாய்தா வாங்கி, பிறகு வழக்கை ஒன்னும் இல்லாமல் செய்ய முடியாது.

        • @அதியமான்,

          கணினி மென்பொருள் துறை பற்றி மிகவும் மேம்போக்காக பேசுகிறீர்கள். நாம் நேரிலும் ஒருநாள் இதைப் பற்றி விபரமாக பேசலாம்.

          //காப்பி அடிக்கும் கள்ளத்தனத்தை நியாயப்படுத்துகிறீர்களா ?//

          இல்லை. நானும் காப்பி அடிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

          அப்படி காப்பி அடிப்பது தடுக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் யாரும் ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து விண்டோஸ் வாங்கியிருக்க மாட்டார்கள். மாற்று இயங்கு தளங்கள் தளைத்திருக்கும். விண்டோசுக்கான சந்தையே இல்லாமல் போயிருந்திருக்கும்.

          மக்கள் காப்பி அடித்து பயன்படுத்துவதால் தமது ஆதிக்கத்தை மைக்ரோசாப்டு நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது.

          //நீங்க தயாரித்து நடத்தும் மென்பொருள் சேவை பண்டத்தையும் ஒருவன் கள்ளத்தனமாக உங்க source codeய் காப்பி எடுத்து, போட்டி நிறுவனம் நடத்தி, உங்களை விட குறைந்த விலைக்கு தொழில் செய்யதால் எப்படி இருக்கும் ?//

          எங்கள் நிறுவனம் செய்யும் மென்பொருளை எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கட்டற்ற மென்பொருள் உரிமத்தின் அடிப்படையில்தான் கொடுக்கிறோம். எங்கள் source code எடுத்து போட்டியிட முன்வருபவர்களை வரவேற்கிறோம்.

          வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும், நகல்கள் செய்து இன்னொரு இடத்தில் பயன்படுத்தவும் முழு உரிமை இருக்கிறது. அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

          //கள்ளதனம் நம் அடிப்படை நேர்மையை குலைக்கிறது. விண்டோஸை சட்டபடி எல்லோரும் வாங்க முன்வந்தால், படிப்படியாக விலை குறைந்திருக்கும். (mass sales usually reduces costs).//

          விண்டோஸ் இல்லாமல் போய் மாற்று இயங்குதளம் (லினக்சு முதலானவை) இந்தியாவில் ஏற்பட்டிருக்கும்.

          //மைக்ரோசாஃப்ட் மென்பொருள் வேண்டாம் என்பவர்கள் லினிக்ஸ் மற்றும் இதர மென்பொருள்களை உபயோகிக்க தடை இல்லையே. லினிக்ஸ் பற்றிய கருத்துகள், வெறும் கருத்துகளே.//

          ஆம். பைரேடட் பதிப்புகள் என்ற உத்தியின் மூலம் மைக்ரோசாப்டு தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

          //Anti-trust சட்டங்களே விவாதத்துக்கிரியனதான். IE அய் இலவசமாக அளிக்க கூடாது என்றது அச்சட்டம். இது conttroversial ஆனது. மற்றபடி விண்டோஸ் உருவாகாவிட்டால், பி.சி புரட்சி இந்த அளவு சாத்தியாமியிருக்காது.//

          விண்டோஸ் உருவானதால், மைக்ரோசாப்டின் கொலைவெறி வணிக உத்திகளால் மென்பொருள் துறை கடுமையாக பின்னடைந்தது. கட்டற்ற மென்பொருள் முறையில் செயல்படும் கணினி வல்லுனர்களால்தான் இன்று நீங்கள் பார்க்கும் மின்னஞ்சல்கள், இணையம், வேர்ட்பிரஸ், விவாதத் தளங்கள், விக்கிபீடியா, போன்றவை சாத்தியமாகியிருக்கின்றன.

          மைக்ரோசாப்ட் போன்ற வணிக நிறுவனங்களின் கையில் விடப்பட்டிருந்தால் இணையம் என்ற சாத்தியத்தின் கழுத்தை நெரித்து 1990களிலேயே கொன்றிருப்பார்கள்.

          இது பற்றிய விபரங்களை கூகிளிட்டுத் தேடிப் பார்க்கவும்.

          • //விண்டோஸ் உருவானதால், மைக்ரோசாப்டின் கொலைவெறி வணிக உத்திகளால் மென்பொருள் துறை கடுமையாக பின்னடைந்தது. //

            no masi. not many will agree. MS is not such a villain as you make them to be.

            //அப்படி காப்பி அடிப்பது தடுக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் யாரும் ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து விண்டோஸ் வாங்கியிருக்க மாட்டார்கள். மாற்று இயங்கு தளங்கள் தளைத்திருக்கும். விண்டோசுக்கான சந்தையே இல்லாமல் போயிருந்திருக்கும்.///

            Fine. that is the way of real free market. but i disagree with your above projections. until 90s, MS and IBM compatible machines were selling hugely than the costlier Apple. anyway, the principle is the best and cheapest product should win.

            ///மக்கள் காப்பி அடித்து பயன்படுத்துவதால் தமது ஆதிக்கத்தை மைக்ரோசாப்டு நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது.////

            how ? sorry. i disagree. MS officical version is used by large and medium companies. only the Small companies and individuals use the pirated version. until late 90s, the first group had a very very large market share for all OS market in India.

        • ***** மற்றபடி விண்டோஸ் உருவாகாவிட்டால், பி.சி புரட்சி இந்த அளவு சாத்தியாமியிருக்காது. *****

          ஆப்பிள் புரட்சி அதை சத்தியப்படுத்தியிருக்கும்! மேலும் லினக்ஸ் அதிகமாக வளர்ந்திருக்கும்.

    • ///மடிக்கணனி வழங்குவதும் வெட்டி செலவு தான். அந்த பணமும் கடன் வாங்கி தான் செலவு. பற்றாகுறை பட்ஜெட் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மொதல்ல, அரசு பள்ளிகளில் பாடங்களை ஒழுங்கா, நல்ல முறையி சொல்லிகொடுக்க, ஆசிரியர்களை செம்மைபடுத்தினாலே போதும்.///

      this following is an excellent article regarding this :

      http://swaminomics.org/?p=2069
      Steve Jobs’ idea of education choice in US through vouchers and competition is equally valid for India

      ….Can the problem be sidestepped by using computers and electronic teaching aids? No, says Jobs. “I’ve helped with more computers in more schools than anybody else in the world, and I am absolutely convinced that is by no means the most important thing. The most important thing is a person. Computers are very reactive but they’re not proactive; they are not agents.”

      How do we create a system with good, motivated teachers? Jobs has a clear answer: we need competition between schools in attracting students and teachers, not unaccountable government schools with a lockhold on government funding.

  9. அனைவரும் அவசியமாகப் படிக்க வேண்டிய
    கட்டுரை..குறைந்தபட்சம் இனியாவது நாம் உபுண்டு(ubuntu) போன்ற கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்த முயற்சிப்போம்…

    கட்டுரையாளர் குமாருக்கு நன்றிகள்….

  10. லினக்ஸ் பற்றி அரைகுறையாய் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், எம்.எஸ்ஸை விட்டுவிட்டு லினக்ஸ்க்கு மாறலாமே எனும் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது கட்டுரை. மட்டுமல்லாது கட்டற்ற எனும் சொல்லிலிருக்கும் அரசியலுக்காக அதை ஊக்குவிக்கவும் செய்யலாம்.

    • வின்டோசில் இருந்து லினக்சுக்கு மாறிக்கொள்வது சிராமான காரியம் இல்லை.

      1.உபுண்டு நிகழ் வட்டு ஒன்றினை (ஒரு வசதிக்காக உபுண்டுவை சொன்னேன். எந்த வழங்கலையும் பயன்படுத்தலாம்) தரவிறக்கி அதனை உங்கள் கணினியில் Boot செய்து பாருங்கள். Live session இல் உங்கள் வன்பொருட்கள் எல்லாம் இயங்குகின்றனவா என்று சோதித்துக்கொள்ளலாம்.

      2. வன்பொருட்கள் எல்லாம் இயங்கினால் நீங்ன்கள் லினக்சை நிறுவத்தயாராகலாம். இல்லாவிட்டால், இன்னுமொரு லினக்ஸ் பயனைரைத் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினை குறித்துப் பேசுங்கள்.

      3. லினக்சை நிறுவிய பிறகு, நீங்கள் உங்கள் கணினியில் அன்றாடம் செய்யும் பணிகளைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அப்பணிகளை லினக்சில் செய்வதற்கு என்னென்ன மாற்று மென்பொருட்களை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதை இன்னுமொரு லினக்ஸ் பயனரிடம் கேட்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

      4. அம் மாற்று மென்பொருட்களை நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருட்கள் பழகக்கடினமானவையாக இருந்தால் இணையத்தில் தேடிப்பாருங்கள் ஏராளமான வழிகாட்டிக் கையேடுகள் கிடைக்கும்.

      5. எந்தப்பிரச்சினை ஏற்பட்டாலும் சந்தேகம் ஏற்பட்டாலும் இணையத்தில் தேடுங்கள். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். பொதுவாக இணையத்தில் உங்கள் பிரச்சினைக்கான தீர்வு எவாராலாவது எழுதப்பட்டிருக்கும்.

  11. அதியமான், வசதியா ஹிலாரி, பில்கேட்ஸ் தொடர்பை, இத்தகைய கார்ப்பரேட் அரசு கை கோர்த்த உறவுகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதைப் பற்றி மறந்துட்டீங்க.
    முறையான கார்ப்பரேட்டுக்காக கொடி பிடிக்கும் நீங்கள், இந்த அரசு – கார்ப்பரேட் கை கோர்ப்பில் கிடைக்கும் கட்டற்ற அதிகாரம் எதிர்கால சந்ததியினரிடம் லாபம் பார்க்கும் அளவுக்கு ‘தொலை’நோக்கோடு வளர்ந்திருப்பதை முறையானதுதான் என்று நினைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா ? அப்படி ஹிலாரி வழியாக அதிகாரம் செலுத்தும் இந்தக் பில்கேட்ஸின் அதிகார எல்லை எந்த நியாயங்களை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

    கட்டற்ற பணம் + கட்டற்ற அதிகாரம் + சுயநல லாபவெறி இவை இணைந்த இடத்தில் நியாயமாவது, புடலங்காயாவது.

    • //வசதியா ஹிலாரி, பில்கேட்ஸ் தொடர்பை, இத்தகைய கார்ப்பரேட் அரசு கை கோர்த்த உறவுகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதைப் பற்றி மறந்துட்டீங்க.///

      இல்லை. நான் இந்த அனுமானத்தை ஏற்க்கவில்லை. ஜெவை சந்திக்க்கும் போது இது போன்ற ஒரு ‘டீலை’ பேசும் அளவுக்கும் அவர் ஊழல்வாதியல்ல. ஆனால் இந்தியாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன விற்பனை அதிகாரிகளும், எல்காட் அதிகாரிகளும், சசி குமபலும் திட்டமிட்டு இதை செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

      இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அரசு காண்ட்ராக்டுகளை அடைய கமிஸன் / லஞ்சம் அளிக்கும் முறை பல பத்தாண்டுகளாக உள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நாடுகளில் ஒழுங்காகவும், இந்தியா போன்ற நாடுகளில் அதே நேர்மையை கடைபிடிக்காமல் அல்லது முடியாமல், கமிசன் அளிப்பதும் நடக்கிறது. மின் இணைப்பு வாங்க, ஒரு தொழில் துவங்க, அல்லது மூட, அரசு அதிகாரிகளிக்கு லஞ்சம் அளிக்காமல் இங்கு சாத்தியமில்லை. எனவே எல்லோரும் இந்த ‘விளையாட்டை’ விளையாடுகின்றனர்.

  12. @Paiya,
    நான், 2000ஆம் ஆண்டு வாக்கில் விண்டோசின் தலைவலி தாங்க முடியாமல், லினக்சுக்கு மாறினேன். கடந்த 10 ஆண்டுகளாக விண்டோசு பக்கம் திரும்பவேவில்லை.

    இப்போது உபுண்டு 11.10 பதிப்பில் (இன்று காலை 11.04லிருந்து 11.10க்கு upgrade ஆனது, ஆமாம் தானாகவே இணைய வழியாக-இலவசமாக புதிய பதிப்பு கிடைத்து விட்டது), இதை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

    மாற்றம் எதுவுமே கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும், ஆனால் நிச்சயம் பலனும் பல மடங்காக கிடைக்கும். லினக்சுக்கு மாறினால் என்னென்ன ஆதாயம் என்று இங்கே போய் பாருங்க http://whylinuxisbetter.net/

  13. லினக்ஸ் ஐ பல பேர் சேர்ந்து வடிவமைக்கவில்லை லினஸ் டோர்வால்ட் என்ற அதை வடிவமைத்த பின்லாந்த் தை சேர்ந்தவரின் பெயரில் தான் இவ்வாறு அழைக்கப் படுகிறது. லினக்ஸ் மேதாவிகளுக்கானது. அது குறிவைத்ததும் பெரிய நிறுவனங்கள் தான். ஆனால் மைக்ரோசாப்ட் கடைசி மனிதனிடம் வந்தது. ஒன்றை கண்டுபிடிப்பவனுக்கு அதற்கான விற்பனை உரிமை இருக்கத் தானே செய்யும். அது குரோமியம் அல்ல கூகிள் க்ரோம். இந்த லினக்ஸ் கும்பல்தான் விண்டோசுக்கு எதிராக ஏராளமான வைரஸ்களை பரப்பி வருவதும் உண்மை .இதுல என்ன ம சீமான் இழுக்கப் பட்டார்

  14. //லினக்ஸ் ஐ பல பேர் சேர்ந்து வடிவமைக்கவில்லை//

    லினஸ் டோர்வால்ட்ஸ் கூட நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார் 🙂 லினஸ் வெளியிட்ட ஆரம்ப பதிப்புகளுக்குப் பிறகு ஒவ்வொரு வெளியீடும் பலரது பங்களிப்பில்தான் வெளிவருகின்றன. தற்போது லினஸ் ஒருங்கிணைப்பையும், தலைமையையும் அளிக்கிறார்.

    http://oreilly.com/catalog/opensources/book/appa.html என்ற லினக்ஸ் பற்றி விவாதத்தைப் படித்துப் பாருங்கள்.

    //லினக்ஸ் மேதாவிகளுக்கானது. அது குறிவைத்ததும் பெரிய நிறுவனங்கள் தான்.//

    நீங்கள் சொல்வது தவறு! பெரிய நிறுவனங்களும் லினக்சை எடுத்துக் கொண்டன. லினக்ஸ் அமெரிக்காவில் இயங்கும் ஐபிஎம் முதல் தமிழில் எழுதும் எழில் வரை அனைவரின் தேவைகளுக்கும் கிடைக்கிறது (இலவசமாக, கட்டுப்பாடுகள் இன்றி, மூல நிரலுடன்).

    //ஆனால் மைக்ரோசாப்ட் கடைசி மனிதனிடம் வந்தது. ஒன்றை கண்டுபிடிப்பவனுக்கு அதற்கான விற்பனை உரிமை இருக்கத் தானே செய்யும்.//

    மைக்ரோசாப்ட் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள், உரிமை வைத்துக் கொள்வதற்கு?

    //அது குரோமியம் அல்ல கூகிள் க்ரோம்.//

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

    குரோமியம் (http://www.chromium.org/Home) என்ற கட்டற்ற மென்பொருளின் அடிப்படையில்தான் கூகுள் குரோம் உருவாக்கி வெளியிடப்படுகிறது.

    //இந்த லினக்ஸ் கும்பல்தான் விண்டோசுக்கு எதிராக ஏராளமான வைரஸ்களை பரப்பி வருவதும் உண்மை //

    நீங்கள் சும்மா சேற்றை அள்ளி வீசுகிறீர்கள். ஆதாரம் கொடுக்கவும்.

    • கட்டுரையின் தொடர்ச்சியாக உங்கள் மறுமொழிகள் மூலம் நிறைய அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி.

    • மா. சிவகுமார்,

      லினக்ஸ் ஐ முன்னிறுத்தி நீங்கள் தொடர்ச்சியாக வாதிட்டு தகவல்களை வழங்கிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.

      • சிவகுமாரை ஊக்குவிக்கும் தங்களுக்கும் நன்றி 🙂 சிலர் என்னதான் உண்மையை எடுத்துச் சொன்னாலும், தங்களுக்கு சரியெனப் படுவதை விடாப்பிடியாகக் கொள்வர். இங்கு வாதிடும் சிலர் அவ்வாறே..

  15. பத்தரிக்கை செய்தி : ஹிலாரி லிபிய பயணம். இந்த பயணம் இருதரப்பு உறவை வலுப்படுத்தவும், தேசிய இடைக்கால கவுன்சிலுக்கு அமெரிக்காவின் ஆதரவை தெரியப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கத்தரிக்காய் செய்தி : ஹிலாரி லிபிய பயணம்… தன்னோடு ஐந்து கூடை நிறைய அமெரிக்காவில் தயார் செய்யப்பட்ட பிட்சா பர்கர் கோக் போன்ற உணவு பொருட்களும் , ஆறு கூடைகள் விண்டோஸ், மேக் ஒஎஸ் போன்ற மென் பொருட்களும் (cd ) கொண்டு சென்று பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீலிடம் கொடுத்து லிபியா முழுவதும் கூவி கூவி விற்க சொல்லி இருக்கிறார்… இதன் மூலம் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய காலனியாதிக்க ஆதிக்க வெறி வர்க்க பேதம் காரல் மார்க்ஸ் கம்யுனிசம் சோஷலிசம் இந்துத்வா பாசிசம் இன்ன பிற சேர்த்துக்கொள்ளவும்…

    • மனிதனுக்கும்,கொசுவுக்கும் என்ன வித்தியாசம்? கொசு கடியை கூட தாங்கலாம். ஆனால் ‘மனிதனோட’ கடியை தான் தாங்கமுடியல….!!! 🙂

      • \\மனிதனுக்கும்,கொசுவுக்கும் என்ன வித்தியாசம்?\\

        கொசுவின் கடியிலிருந்து தப்பிக்க தேவை வலை.
        மனிதனின் கடியில் இருந்து தப்பிக்க தேவை மூளை… (கொஞ்சம் மூளையை உபயோகித்து பதிவு எழுதுங்கப்பா…)

    • …அண்ணா ஹஜாரே கோமாளி பார்ப்பன பாசிச ஜெயா, இன்னும் நிறைய இருக்கே தல!

      • 🙂 இந்த வார்த்தைகள் எல்லாம் இல்லாட்டி பதிவு விருவிருப்பா இருக்காதுன்னு நினைக்கிறார்களோ என்னவோ… பொதுவா கோஷங்களை எழுத்தில் கொண்டு வந்தா இப்படி தான்… 🙂

  16. http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91

    “”முதல்வரைப் பத்தி நானும் ஒரு மேட்டர் சொல்லட்டுமா வே…” என, கூறியபடி, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.
    “”தாராளமா சொல்லுங்க பா…” என்றார் அன்வர்பாய்.
    “”அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சமீபத்துல சென்னை வந்தப்ப, முதல்வரை, அமெரிக்கா வர அழைப்பு விடுத்தாங்க வே… அப்ப, முதல்வரும், “சரி’ன்னு சொன்னாங்க… இது, மரியாதைக்காக முதல்வர் சொல்லிருக்காங்கன்னு தான், அதிகாரிகள் நினைச்சாவ…
    “”ஆனா, அதுக்கப்பறம் ரெண்டு பேருக்கும் இடையில தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துட்டு இருந்துச்சு வே… அதுல, முதல்வர், அமெரிக்கா போறது உறுதியாயிருக்கு…
    இந்தப் பயணம் அடுத்த மாசம் இருக்கலாம்னு பேச்சு அடிபடுது… ஏன்னா, இது சம்பந்தமா, சென்னையில இருக்கற அமெரிக்க தூதரக அதிகாரிகளோட, முதல்வரோட அதிகாரிகள் தினமும் விவாதிச்சிட்டு இருக்காங்க வே…””விசா’ எடுக்கறது, அமெரிக்காவுல முதல்வர் கலந்துக்கற நிகழ்ச்சிகள் என்னென்னு இறுதி செய்யறது போன்ற வேலைகள் எல்லாம் மும்முரமா நடந்துட்டு இருக்கு வே…” எனக் கூறிவிட்டு, அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

  17. “”அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சமீபத்துல சென்னை வந்தப்ப, முதல்வரை, அமெரிக்கா வர அழைப்பு விடுத்தாங்க வே… அப்ப, முதல்வரும், “சரி’ன்னு சொன்னாங்க… இது, மரியாதைக்காக முதல்வர் சொல்லிருக்காங்கன்னு தான், அதிகாரிகள் நினைச்சாவ…
    “”ஆனா, அதுக்கப்பறம் ரெண்டு பேருக்கும் இடையில தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துட்டு இருந்துச்சு வே… அதுல, முதல்வர், அமெரிக்கா போறது உறுதியாயிருக்கு…
    இந்தப் பயணம் அடுத்த மாசம் இருக்கலாம்னு பேச்சு அடிபடுது… ஏன்னா, இது சம்பந்தமா, சென்னையில இருக்கற அமெரிக்க தூதரக அதிகாரிகளோட, முதல்வரோட அதிகாரிகள் தினமும் விவாதிச்சிட்டு இருக்காங்க வே…””விசா’ எடுக்கறது, அமெரிக்காவுல முதல்வர் கலந்துக்கற நிகழ்ச்சிகள் என்னென்னு இறுதி செய்யறது போன்ற வேலைகள் எல்லாம் மும்முரமா நடந்துட்டு இருக்கு வே…

  18. லினக்ஸ் ஐ பல பேர் சேர்ந்து வடிவமைக்கவில்லை லினஸ் டோர்வால்ட் என்ற அதை வடிவமைத்த பின்லாந்த் தை சேர்ந்தவரின் பெயரில் தான் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

    He onlydeveloped Linux Kernal

  19. regarding free computer, or laptop, this article written….Why un_necessarily you mention “Seemaan”?

    In your blind eye, from your deaf ear, may say the “Seeman Made vital role between Jayalalitha and Microsoft Corp.

    Un_necessary comparison…….Even blind people won’t write this….

    You have to change your way of writing…Ok…!

    Write the information only related to article and corresponding “Title”.

    stupid work…Fee shame to writ like this…..

  20. Bu vinavu, As a Linux user and opensource activist, I strongly oppose communism. Why Linus Torvalds moved to America? What about Richard Matthew Stallman? They all are advocates of freedom and liberty while completely opposed to communism.

    Don’t be double standard. A rule for you and another for others. Communism stinks! Freedom rocks!!!

    • Working together is a good thing, isn’t it? The ideal of unity of purpose, is critical to communist expressions of their own goals. But maybe the only thing we should be fearing in this picture is the gun—the spectre of state coersion to attain that unity.

      **If people work together through freedom, that’s another matter entirely.**

      Thus it can be said to be both “communist” and “free-market”—at least from a certain point of view.

      –From the link you provided.

      //ES: It’s not a devil’s advocate. It’s just, I’ve heard, some people come out and say, “You know, that Richard Stallman guy, he’s a Communist!”, and “That’s his religion!”.

      RS: Well, they’re wrong.

      ES: Are you a Communist?

      RS: No. [testifying] I am not now, nor have I ever been… [Laughter]

      ES: OK, all right.

      RS: But I won’t name names of anyone else who might be, because that’s against my principles.

      ES: So it’s not un-American computing.

      RS: **No this [is] American computing. This is about freedom. That’s why we use so many quotes from the founders of our country.**

      MB: But how would you respond to someone who say, “That’s a, that’s a very socialist viewpoint, that we all have this software, that we share it together…”

      RS: No, it’s not.

      MB: “We give it to each other, to each according to his needs…”

      RS: Yes, but it’s not socialist or Communist because those have to do with centralized ownership of things. We’re not talking about centralized anything. It’s about individual freedom.//
      -Interview with Richard M Stallman (founder of GNU movement)
      http://www.pigdog.org/interviews/stallman/interview_with_stallman3.html

      Note that there is a clear tone against communism

  21. @Enfield,

    http://www.brainyquote.com/quotes/quotes/a/aynrand163204.html

    “Contradictions do not exist. Whenever you think you are facing a contradiction, check your premises. You will find that one of them is wrong.” — Ayn Rand

    1. We find that Free Software Movement which works on the basis of “From each according to their ability, To each according to their need” is a grant success amidst the tyranny of software patents, copyright law suits and corporate rivalry.

    On the other hand

    2. We have been told/taught/preached that Communism wrecked havoc on the lives of people in Soviet Union, China and other countries.

    Either of the premises are wrong. You decide!

Leave a Reply to மா சிவகுமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க