privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

-

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா? “பீகார் மாநிலத்தை லல்லு பிரசாத் யாதவ் ஆண்டதால்தான் சீரழிந்து கிடந்தது. 15 ஆண்டுகளாக அவர் நேரடியாகவும், அவரது மனைவி ராப்ரி தேவி மூலமாகவும் புரிந்த கொடுங்கோலாட்சியின் மூலம் ஒற்றை மனிதராக  பீகார் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருங்கச் செய்தார். 2005-ல் முதல்வரான நிதீஷ் குமாரின் தலைமையிலான நிர்வாகத்தில் மாநிலம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே வளர்ச்சி வீதம் அதிகமான மாநிலமாக பீகார் மாறியிருக்கிறது….” என்றெல்லாம் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. அந்த அலையில் மிதந்து 2010-ல் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் இரண்டாவது முறையாக கூடுதல் பெரும்பான்மையுடன் முதலமைச்சரானார்.

அப்படி லல்லுவிடம் இல்லாதது, நிதீஷ் குமாரிடம் என்னதான் இருக்கிறது? அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது? அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பலர் பல விதமாக விடை காண முயற்சித்தார்கள். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தல், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல, சொத்து குவித்த அரசு அதிகாரிகளிடமிருந்து சொத்துக்களைப் பிடுங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்படியான ஆட்சியை நிறுவினார். ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசத்தை இரும்புக் கரத்துடன் ஒடுக்கி சட்ட ஒழுங்கை மேம்படுத்தினார். எனில் பீகார் எப்போது சிங்கப்பூர் போல முன்னேறிய மாநிலமாக மாறப் போகிறது என்ற ஒரே கேள்விதான் எஞ்சியிருக்கிறது

இந்த முன்னேறங்களுக்கு உண்மையில் என்ன அடிப்படை என்ற மர்மம் சமீபத்தில் வெளியானது. முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன் வந்து அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேதிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டதுதான் அவரது ‘சாதனை’களின் ரகசியம்.

11.11.11 அன்று 11 மணி 11 நிமிடத்துக்கு தவறுகள் செய்த 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையைப் பிறப்பித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 2001 முதலே தனது அரசியல் வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை இது போன்று  வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதிகளில்தான் தான் எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுத்து ஆவணங்களில் கையொப்பமிட்டாராம். 2004-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், 2005-ல் கையொப்பமிட பொருத்தமாக எதுவும் கிடைக்காததால் அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் தவற விடப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்தியிருந்தால் பீகார் இதற்குள் வல்லரசின் வல் மாநிலம் ஆகியிருந்திருக்கும். பாழாய்ப் போன ஜனநாயக முறைகள் அதை தவிர்த்து விட்டன.

3-3-2003ம் 1-1-2011ம் அவருக்கு மிகவும் லாபகரமான நாட்களாக அமைந்த நாட்களாம்.

நிதீஷ் குமார் 11 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து இட்ட அதே நேரத்தில் 11.11 மணிக்கு தீர்ஹூத் வனப்பகுதி ஆணையர் எஸ் என் ராஜூ அந்த ஊர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு ஆலமரக் கன்றை நட்டார். “அந்த மரக் கன்றிலிருந்து வளரும் மரம் 400 முதல் 500 ஆண்டுகள் உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் நிதீஷ் குமார் கூறினார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த நாளாக அது அமைந்து விட்டது.

பீகார் மக்கள் மூச்சு விட மறந்து அற்புதங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி சவுபே இன்னும் ஒரு படி மேலே போய் 11.11.11 அன்று 11.11 மணிக்கு பீகாரில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் 18 வயது வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், திருமண நிதி உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை பின்பற்றி நிதீஷ் குமாரும் பீகாருக்கு திறமையான தலைமையை வழங்கியிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.

— பச்சை நிறம்தான் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை என்று அடையாளம் கண்டு பச்சை நிற உடைகளை உடுத்த ஆரம்பித்து கட்சியினரையும், அரசு துறைகளையும் பச்சை நிறத்துக்கு முதலிடம் கொடுக்க வைத்து

— யானைகளுக்கு கஜபூஜை நடத்தினால் நாடு சுபிட்சம் பெறும் என்று நாடெங்கிலும் உள்ள கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று யானை முகாம் நடத்தி

— அன்னதானம் அளித்தால் கடவுளரின் மனம் குளிர்ந்து மக்கள் எல்லோரும் உழைக்காமலேயே கற்பக விருட்சத்தின் கீழ் தமக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நாடெங்கிலும் கோயில்களில் இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்து

தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திய புரட்சித்தலைவி அம்மாவின் உதாரணத்தையும்

— ஆட்சியைப் பிடிப்பதற்கு 13 வயது குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோதிடம் பார்த்து நடந்து கொண்ட மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமாராவின் வழியையும்

— பல விதமான யாகங்கள், வழிபாடுகள், விரதங்கள் மூலம் தேவர்களின் ஆசீர்வாதம் பெற்று தென் மாநிலங்களில் முதன் முறையாக தனது கூட்டணி கட்சி பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவின் எடுத்துக்காட்டையும்

— தேய்பிறையாகப் போனதால் முதலமைச்சராக பதவி ஏற்பதையே 10 நாட்கள் தள்ளிப் போட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முன் உதாரணத்தையும்

கவனமாக ஆராய்ச்சி செய்து நிதீஷ் குமார் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.

இனிமேல் பீகாரின் முன்னேற்றத்தை ஆயிரம் லாலுக்கள் வந்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது, இன்னும் 12-12-2012 என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதி வரவிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டு நிதீஷ் குமார் பீகாரை உலகிலேயே முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் காட்டுவது என்பது கடைசியில் ஜோசியத்தின் கையில்தான் இருக்கிறது என்றான பிறகு இனி இந்தியாவுக்கு ஏது தோல்வி!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: