privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

-

முன்னுரை:

சில்லறை வர்த்தகத்தில்  தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில்  அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை. அப்படி வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்? 2007ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரை அமெரிக்காவில் வால்மார்ட் பெற்ற ஏகபோகத்தின் விளைவுகளை விரிவாக தெரிவிக்கிறது. அதன் விலை குறைப்பு ரகசியமும், உழைப்புச் சுரண்டலும், உற்பத்தியாளர்கள் மீதான அதன் ஆதிக்கமும், உலகெங்கும் விரிந்திருக்கும் அதன் சாம்ராஜ்ஜியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

வால்மார்ட் நிலைபெற்றுவிட்டால் படிப்படியாக இந்தியாவில் இருக்கும் 4 கோடி வணிகர் குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். சில்லறை வணிகர்களை நம்பி வாழும் சிறு உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழிக்கும். இந்தியாவின் சில்லறை வணிகத்தின்  பிரம்மாண்டமான சந்தை மதிப்பை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியை உணராமல், அதை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என்பதாக நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

வினவு

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.

வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் (2007) அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால், கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.

இந்தக் கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.

ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.

அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.

மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

வால்மார்ட்

ரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.

உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.

இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.

இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.

70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

வால் மார்ட் ! மலிவு விலையில் மரணம் !!
2010ல் வால்மார்ட் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.

இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.

1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சியின் மர்மம்

வால்மார்ட்
வால்மார்டின் வளம் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.

இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.

உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.

உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….

ஏகபோகத்தின் வீச்சு

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%  என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.

இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.

தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.

அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.

இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.

உழைப்புச் சுரண்டல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.

அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.

தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

________________________________________________

புதிய கலாச்சாரம், 2007.

________________________________________________

ஆங்கில மூலம்

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

  1. நாட்டை சுரண்ட காத்திருக்கும் மண்ணு மோகன் சிங்கிற்கு செருப்படி தந்தாலும் திருந்த போவதில்லை. வினவின் கட்டுரையை முன்னமே எதிர்பார்த்தேன். வசக்கம்போல் அட்டகாசமான கட்டுரை இம்முறை infograph எல்லாம் போட்டு அசத்தி இருக்கிறது

  2. படிக்கும் போதே மனதை நடுக்கும் கொடூரங்கள்!

    ஏகபோக ஆதிக்கத்தை அடைந்து லாபம் சம்பாதிப்பதை வகுத்துக் கொள்வதுதான் போட்டிச் சந்தையில் (free market) செயல்படும் ஒரு நிறுவனத்தின் நீண்ட கால திட்டமாக இருக்கும்.

    ஏகபோக நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் மீதும், தொழிலாளர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதோடு, மக்களின் நுகர்வை தம் தேவைக்கேற்ப ஆட்டுவித்து நிகர்நிலை அரசாங்கங்களாக செயல்படுகின்றன.

    பிற நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று மக்களை கொன்று குவித்து கொள்ளை அடித்துச் சென்ற பழங்கால போர் வெறி பிடித்த மன்னர்களுக்கு இணையானவை இந்த பன்னாட்டு நிறுவனங்கள்

    • அதியமான்,

      வால்மார்ட் மலிவு விலையில் விற்கும்போது இந்திய சிறுவணிகர்கள் என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கூறினால் உபயோகமாக இருக்கும்.

      • சிறு வணிகர்களை அழிப்பதெல்லாம் அத்தனை சுலபமல்ல. வால்மார்ட் ஸ்டோர்களை இயக்க மிக பெரிய இடம் தேவை. இந்திய நகரங்களில் இடத்தின் விலை மற்றும் வாடகை மிக மிக அதிகம். அமெரிக்கா போல் இங்கு இடமும் இல்லை. எனவே ரிலையன்ஸ் ஃப்ரெஸ் அளவு கூட வால்மார்டால் ஜெயக்கமுடியுமா என்பது சந்தேகம் தான். ஜெர்மனியில் வால்மார்ட் தோல்வியே கண்டது..

        வால்மார்ட்டின் நிகர லாபம் (operating profit margin as a percentage of sales turnover) வெறும் 3 சதவீதம் தான். என்னவோ கொள்ளை லாபம் சம்பாதிப்பது போல் இங்கு பில்டப். விலைவாசியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த சுட்டியை முழுசா படித்து பார்க்கவும்.

        • //சிறு வணிகர்களை அழிப்பதெல்லாம் அத்தனை சுலபமல்ல.//

          ரிலையன்ஸ் பிரஷ் போன்ற உள்ளூர் பெருநிறுவனங்களை சில்லறை வியாபாரத்தில் அனுமதித்தது முதல், பலத்த பாதிப்புக்கு உள்ளாகி போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் இருக்கும் சிறு வணிகர்களைப் பார்த்து ‘இவர்களை சீக்கிரத்தில் அழித்து விட முடியாது’ என்று பாராட்டுவது குரூரமானது.

          அடுத்தடுத்து இடிகளைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுவதுதான் free marketன் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் பாதை.

          சந்தை என்பது வெறும் பொருட்களை விற்கும் வாங்கும் இடம் மட்டுமில்லை, அதில் உயிருள்ள மனிதர்களின் வாழ்க்கையும் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாத பொருளாதார முறைதான் நீங்கள் சொல்லும் free market பொருளாதாரம்.

          1. விவசாயத்தைத் துடைத்து எறிந்த பிறகு கிராம்ப புற மக்களுக்காக தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்
          2. நெசவுத் தொழிலை அழித்தொழித்த பிறகு நெசவாளிகளுக்காக கஞ்சித் தொட்டி வைப்பது
          3. சிறு வணிகர்களையும் அழித்த பிறகு அவர்களுக்கு சூப்பர் மார்கெட்டுகளில் மூட்டை தூக்கும் வேலை திட்டம்
          4. அரசு பள்ளிகளை சீரழித்த பிறகு தனியார் பள்ளிகளில் இடம் ஒதுக்கி ‘கல்வி பெறும் உரிமை’ சட்டம்

          என்று உலகை ‘உயர்த்தும்’ free market பொருளாதாரம் யாருக்குத் தேவை!

          மக்களுக்காக பொருளாதார வளர்ச்சியா, பொருளாதார வளர்ச்சிக்காக மக்களா?
          என்ன நடந்தாலும் எத்தனை பேர் பலியானாலும் நமது கோட்பாடும், கொள்கையும் சரி என்று தூக்கிப் பிடிப்பதுதான் முக்கியமா?
          (free market செயல்பாடுகள் மூலம் கோடி கோடியாக சம்பாதிப்பவர்களை கூட புரிந்து கொள்ளலாம்)

          • //ரிலையன்ஸ் பிரஷ் போன்ற உள்ளூர் பெருநிறுவனங்களை சில்லறை வியாபாரத்தில் அனுமதித்தது முதல், பலத்த பாதிப்புக்கு உள்ளாகி போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் இருக்கும் சிறு வணிகர்களைப் பார்த்து ‘இவர்களை சீக்கிரத்தில் அழித்து விட முடியாது’ என்று பாராட்டுவது குரூரமானது.///

            என்ன பலத்த போராட்டம் ? என்ன பெரிய குரூரம் ? சும்மா உட வேண்டாம். ஜோதிஜி சொன்னதை படிக்கவும். நான் அளித்த விரிவான சுட்டிகள் எதையும் படிப்பதில்லை என்ற மூடிய மனம் கொண்டவர் நீங்க. அமெரிக்காவில் ஏழை தொழிலாளார்கள் மற்றும் மக்கள் பண்டங்களை மலிவாக வாங்க வால்மார்ட் வழிவகுத்துள்ளது. அதன் நிகர லாபம் 3 சதம் மட்டுமே. வால் மார்ட் இல்லாவிட்டால், அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியிருக்கும். இதனால் அங்கு ‘அழிந்த’ சிறு கடைக்கார்கள் ஒன்னும் பட்டினி கிடந்து சாகவில்லை. மாற்று தொழிலில் ஈடுப்படுகின்றனர். ட்ராக்டர் வந்த போது ஏர் உழுபவர்களும், விசை தறி வந்த போது கைதறி நேசவாளர்களும் இதே போல் பாதிக்கப்பட்டனர். அதனால், மாறுதல்களை கூடாது என்று தடுத்து வைத்திருந்தால், விலைகளை எப்படி குறைத்து எப்படி உற்பத்தியை பெருக்குவதாம் ?

            ஆனால் இந்தியா இன்னும் ஏழை நாடுதான். இங்கு சிறு வணிகர்கள் சிறிய அளவில் (50 கிராம் அளவில்) பண்டங்களை, கடனில் தங்களுக்கு நன்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பது சகஜம். இதை எந்த ரிலையன்ஸ் ஃப்ரெஸ்சாலும் செய்யவே முடியாது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு. இடமும் வேறு. வால்மார்ட்டாலும் முடியாது என்பதெ நிஜம்.

            மாசி, எம்மை ஏட்டு சுரைக்காய் என்று சொன்னீர்கள். அப்பவே திருப்பி பேசியிருக்க வேண்டும். உங்கள விட எனக்கு அனுபவ அறிவு மிக அதிகம். நீங்கள் தோல் துறையில் மட்டும் தான் அனுபவம். எனக்கு பல பல துறைகளில், பல பல ஊர்களில், பல ஆண்டுகள் அனுபவம். வறுமை பற்றியும், ஏழை தொழிலாளர்களின் நிலை பற்றியும் நன்கு அறிவேன்.

            வணிகர்கள் பற்றியும் தெரியும். மற்வை பிறகு..

            //1. விவசாயத்தைத் துடைத்து எறிந்த பிறகு கிராம்ப புற மக்களுக்காக தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்///று உலகை ‘உயர்த்தும்’ free market பொருளாதாரம் யாருக்குத் தேவை!////

            first of all you are ignorant of what real free market means nor what socialism means. our agriculture is plagues by fragmented farms using obsolte technology and methods and inhibited by lack of formal credit and investments (unlike other sectors like textiles, etc) ; all this due to lack of ‘free market’ like in Canada or Europe. ok. get this first. hence the crisis in farming, esp in cotton and esp in W.India. (and not in TN or Punjab).

            • //என்ன பலத்த போராட்டம் ? என்ன பெரிய குரூரம் ?//

              ரிலையன்ஸ் பிரஷ், மோர் என்று பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வந்த பிறகு மளிகைக் கடை நடத்தும் சிறு வணிகர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்று புள்ளிவிபரம் ஏதாவது இருக்கிறதா? அவர்களது விற்பனை எவ்வளவு குறைந்தது? எத்தனை பேர் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டியிருந்தது? எத்தனை பேர் தொழிலை விட்டு கூலி வேலை செய்யப் போக வேண்டியிருந்தது?

              free marketல் இதை எல்லாம் யார் கணக்கு எடுத்து நிவாரணம், வழிகாட்டல் கொடுப்பார்கள்?

              //சும்மா உட வேண்டாம். ஜோதிஜி சொன்னதை படிக்கவும்.//

              படித்து விட்டேனே!

              // நான் அளித்த விரிவான சுட்டிகள் எதையும் படிப்பதில்லை என்ற மூடிய மனம் கொண்டவர் நீங்க.//

              விரிவான சுட்டிகளை சுருக்கமாக ‘தமிழில்’ நீங்கள் சொன்னால் உபகாரமாக இருக்கும். நீங்கள் படித்ததை எல்லோருக்கும் புரியும் படி எழுதினால் எனக்கு மட்டுமில்லை, என்னைப் போன்ற பலருக்கு உதவியாக இருக்கும்.

              // அமெரிக்காவில் ஏழை தொழிலாளார்கள் மற்றும் மக்கள் பண்டங்களை மலிவாக வாங்க வால்மார்ட் வழிவகுத்துள்ளது. அதன் நிகர லாபம் 3 சதம் மட்டுமே. வால் மார்ட் இல்லாவிட்டால், அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியிருக்கும்.//

              மேலே வினவு கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது. வால் மார்ட், மக்கள் பண்டம் வாங்குவதை எப்படி சீரழித்திருக்கிறது என்பதை விளக்குவது இந்தக் கட்டுரையின் முக்கியமான பகுதி.

              //இதனால் அங்கு ‘அழிந்த’ சிறு கடைக்கார்கள் ஒன்னும் பட்டினி கிடந்து சாகவில்லை. மாற்று தொழிலில் ஈடுப்படுகின்றனர்.//

              எத்தனை பேர் வேறு தொழிலில் ஈடுபட்டார்கள்? தலைமுறைகளாக செய்து வந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்குப் போக அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது? free marketல் ஏதாவது நிறுவனம் அப்படிப்பட்ட சேவைகளை வழங்க வாய்ப்பிருக்கிறதா?

              அறிவும், அனுபவமும் பெற்றிருந்த தொழிலை விட்டு அறிமுகமில்லாத தொழிலில் திறமை குறைவான கூலி வேலைக்குத்தானே அவர்கள் போக முடியும்?

              //ட்ராக்டர் வந்த போது ஏர் உழுபவர்களும், விசை தறி வந்த போது கைதறி நேசவாளர்களும் இதே போல் பாதிக்கப்பட்டனர். அதனால், மாறுதல்களை கூடாது என்று தடுத்து வைத்திருந்தால், விலைகளை எப்படி குறைத்து எப்படி உற்பத்தியை பெருக்குவதாம் ?//

              மாறுதல்களை தடுத்து நிறுத்தக் கூடாது. புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஏர் உழுபவர்களுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் முழு ஈடுபாட்டுடன் தொழில் நுட்பம் அவர்களுக்காக வர வேண்டும். அவர்களை அழித்து வால்மார்ட் லாபம் ஈட்டுவதற்காக தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படக் கூடாது.

              //ஆனால் இந்தியா இன்னும் ஏழை நாடுதான். இங்கு சிறு வணிகர்கள் சிறிய அளவில் (50 கிராம் அளவில்) பண்டங்களை, கடனில் தங்களுக்கு நன்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பது சகஜம். இதை எந்த ரிலையன்ஸ் ஃப்ரெஸ்சாலும் செய்யவே முடியாது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு. இடமும் வேறு. வால்மார்ட்டாலும் முடியாது என்பதெ நிஜம்.//

              நீங்கள் நிஜம் என்று பேசிக் கொண்டிருப்பதோடு, அப்படி சிறு வணிகம் செய்யும் கடைக்காரர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், வருமானம் எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதையும் பாருங்கள்.

              //மாசி, எம்மை ஏட்டு சுரைக்காய் என்று சொன்னீர்கள். அப்பவே திருப்பி பேசியிருக்க வேண்டும். உங்கள விட எனக்கு அனுபவ அறிவு மிக அதிகம். நீங்கள் தோல் துறையில் மட்டும் தான் அனுபவம். எனக்கு பல பல துறைகளில், பல பல ஊர்களில், பல ஆண்டுகள் அனுபவம். வறுமை பற்றியும், ஏழை தொழிலாளர்களின் நிலை பற்றியும் நன்கு அறிவேன்.//

              அவ்வளவு தெரிந்தும் நீங்கள் predatory பன்னாட்டு நிறுவனங்களை அவர்கள் மீது அவிழ்த்து விடுவதை ஆதரிப்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

              1. வால்மார்ட் இந்திய சந்தைக்குள் வராவிட்டால் அமெரிக்காவில் யாரும் பட்டினியால் செத்து விடப் போவதில்லை.
              2. வால்மார்ட் இந்திய சந்தைக்குள் அனுமதிக்கப்படுவதன் மூலம் லட்சக் கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள். அதற்கு free market அளிக்கும் மாற்று என்ன?
              3. வால்மார்ட் வராமல், தேவைப்படும் தொழில் நுட்பத்தை நமது மக்களுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்த ஏன் நம்மால் முடியவில்லை?

              //first of all you are ignorant of what real free market means nor what socialism means. our agriculture is plagues by fragmented farms using obsolte technology and methods and inhibited by lack of formal credit and investments (unlike other sectors like textiles, etc) ; all this due to lack of ‘free market’ like in Canada or Europe. ok. get this first. hence the crisis in farming, esp in cotton and esp in W.India. (and not in TN or Punjab).//

              free market பற்றி நான் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லுங்கள், புரிந்து கொள்கிறேன்.

              free market என்பது ஒரு மாயை என்று நீங்கள் படித்திருப்பீர்கள். வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் உருவாவதே free marketக்கு எதிரானது என்பது தெரிந்திருக்கும். free market நிலவும் ஒரு சந்தை (பொருள், இடம்) நீங்கள் குறிப்பிட முடியுமா?

              நீங்கள் சொல்லும் கனடாவிலும், ஐரோப்பாவிலும் free market நிலவுகிறது என்றால்

              1. ஒவ்வொரு பொருள் வாங்க/விற்க எண்ணிலடங்கா விற்பனையாளர்களும், வாங்குபவர்களும்
              2. பொருள் உற்பத்தி, தேவை பற்றிய ‘அனைத்து’ விபரங்களும் எல்லோருக்கும் எல்லா நேரமும் தெரிந்திருக்கிறது

              என்று பொருள். (இதுதான் free marketன் வரையறை). அப்படித்தான் இருக்கிறதா?

              • //நீங்கள் சொல்லும் கனடாவிலும், ஐரோப்பாவிலும் free market நிலவுகிறது என்றால்

                1. ஒவ்வொரு பொருள் வாங்க/விற்க எண்ணிலடங்கா விற்பனையாளர்களும், வாங்குபவர்களும்
                2. பொருள் உற்பத்தி, தேவை பற்றிய ‘அனைத்து’ விபரங்களும் எல்லோருக்கும் எல்லா நேரமும் தெரிந்திருக்கிறது

                என்று பொருள். (இதுதான் free marketன் வரையறை). அப்படித்தான் இருக்கிறதா?

                // அதியமான் இதுக்கு மட்டும் பதில் சொல்லமாட்டார். ப்ரி மார்க்கெட் என்பது புலனறிவுக்கு புலப்படாதா ஒரு வகைப்பட்ட ஜோசியம் போன்றது. இது பற்றி மேலும் புரிந்து கொள்ள ஞான் 3 வருடங்களுக்கு முன்பு எழுதி இன்னும் முற்றுப்பெறாத எனது பின்வரும் பதிவை படியுங்கள்.

                • 100 % perfect and pure free market இன்னும் எங்கும் சாத்தியமில்லை. மேலும் information asymmetry பற்றியும் உங்களுக்கு தெரியும். ஆனால் இதைவிட சிறந்த அமைப்பு ‘சோசியலிச பாணி’ திட்டமிடல் என்றால், அதை தான் பல பாணிகளில் உலகெங்கிலும் முயற்சி செய்து பெரும் தோல்வியையும், அழிவையும் பார்த்தாசே. இந்தியாவில் 91 வரை ‘திட்டமிடல்’ மற்றும் அரசு கண்ட்ரோல் (இந்த முதலாளிகளை கட்டுபடுத்த, லாபத்தை அரசு எடுத்துக்கொள்ள) பலமாக செய்து சீரழந்த வரலாறை பார்க்கவும். 98 சதவீத உச்சபட்ச வருமான வரி விகிதம் இருந்த 70கள். மாசி : நீங்க மீண்டும் அதை தான் முன்மொழிகிறீர்கள். சரி, அதை மீண்டும் அமலாக்கி பாருங்க. பிறகு புரியும்.

                  கணக்குபிள்ளை அகமது : உம்மை போன்ற ‘மேதைகளுக்கு’ பதில் சொல்லும் அளவு எனக்கு ஞானம் இல்லை.

                  • //100 % perfect and pure free market இன்னும் எங்கும் சாத்தியமில்லை. மேலும் information asymmetry பற்றியும் உங்களுக்கு தெரியும். ஆனால் இதைவிட சிறந்த அமைப்பு ‘சோசியலிச பாணி’ திட்டமிடல் என்றால், அதை தான் பல பாணிகளில் உலகெங்கிலும் முயற்சி செய்து பெரும் தோல்வியையும், அழிவையும் பார்த்தாசே. // இப்போத்திலிருந்து அதியாமான் மாத்தி மாத்தி பேசுவது ஸ்டார்ட் ஆகும் பாருங்கள்.

                    1) கொஸ்டின் நம்பர் ஒன்னு, சோசலிசத்துக்கு முந்தி சில நூறு வருசம் முன்ன ஒரூவான முதலாளித்துவம் இன்னும் ஒரேயொரு ப்ரி மார்கெட் வடிவத்தைக் கூட உருவாக்கிக் காட்டவில்லை. உருவானதெல்லாம் உலக யுத்தமும், சுரண்டலும், பெரும்பான்மை மக்களை வறுமையில் சீரழிக்கும் அதியமானுக்கு பிடிக்காது என்று அவரே சொல்லிக் கொள்ளும் முதலாளித்துவமே ஆகும். ஆனா நம்ம அதியமான் ஜோசியம் பாத்து சொல்லுவாரு அது சிறந்த அமைப்புன்னு நாமும் வரும் ஆனா வாராதுன்னு நம்பிக்கிட்டு இருக்கனும் இல்லையா?

                    2) “இதைவிட சிறந்த அமைப்பு ” என்று சொல்லும் அவர் – இந்த அமைப்பு சிறப்பில்லை என்று அம்பலமானால் ப்ரி மார்க்கெட்டுதான் சூப்பர். ஆனா நீங்க சொல்வது ப்ரி மார்கெட் இல்லை எனவே முதலாளித்துவத்தை பிழை சொல்லாதீர்கள் என்பார். ஆனால் மண்ணில் ஒரு மக்கள் அரசை நடத்தி காட்டி, அதுவும் இரண்டு நாடுகளில் உலக மக்கள் தொகையில் ஒரு பெரும் பங்கின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் காட்டிய சோசலிச முறையின் பழைய தவறுகளை சரி செய்து நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி வாய்திறக்க மாட்டார். அவருக்கு தெரிஞ்சது எல்லாம் ப்ரி மார்கெட், இது ப்ரி மார்கெட் இல்லை அப்புறம் கடசியா இந்தியா ஒரு சோசலிச நாடு. அவ்வளவுதான்.

                  • //100 % perfect and pure free market இன்னும் எங்கும் சாத்தியமில்லை.//

                    எப்போதுமே எங்கேயுமே சாத்தியமில்லை என்பதுதான் அறிவியல். அப்படி இருக்கையில் அதைப் பற்றி ஏன் பேசுகிறோம்?

                    நடைமுறையில் ஆலிகார்க்கிகளும், மோனோபோலிகளும்தான் கூட்டு வைத்துக் கொண்டு சுற்றுச் சூழல் சீரழிவு, மனித துயரம், போர்கள் போன்றவற்றுக்கு வழி வகுக்கிறார்கள்.

                    //மேலும் information asymmetry பற்றியும் உங்களுக்கு தெரியும்.//

                    ஆமாம். அதனால்தான் நீங்கள் கனவு காணும் free market சொர்க்கம் நடைமுறையில் சாத்தியமில்லாதது. முதலாளித்துவம் போதிக்கும் சுயநல நோக்கம் மற்றும் பேராசையால் சமூகம் செலுத்தப்படும் போது அழிவும், துன்பமும், சீரழிவும்தான் மிஞ்சும் என்கிறேன்.

                    //ஆனால் இதைவிட சிறந்த அமைப்பு ‘சோசியலிச பாணி’ திட்டமிடல் என்றால், அதை தான் பல பாணிகளில் உலகெங்கிலும் முயற்சி செய்து பெரும் தோல்வியையும், அழிவையும் பார்த்தாசே.//

                    தோல்வி பார்த்தாச்சு, சரி. ‘அழிவு’ என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவில் ஏற்பட்ட சீர்கேடுகளும், உலகெங்கிலும் நடந்து வரும் குழப்பங்களும்தான் அழிவு.

                    இந்தியாவும் (1947ல்), சீனாவும் (1949ல்) கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தேசிய அரசு ஏற்படுத்தின. சீனா, இந்தியாவை விட உள்நாட்டுப் போரில் பெரும் அழிவுகளை சந்தித்திருந்தது.

                    சோசியலிச பாணி திட்டமிடலை முழுமையாக செயல்படுத்திய சீனா, முதலாளித்துவ அமைப்பிற்கு உறுதி சேர்க்க அரசுத் துறையை ஊறுகாய் போல பயன்படுத்திக் கொண்ட இந்தியாவை விட 1980ல் சமூக குறியீடுகளில் (குழந்தைகள் ஆரோக்கியம், பெண் கல்வி, சுகாதார வசதிகள்) வெகுவாக முன்னேறியிருந்தது.

                    சரி செய்யப்பட்டு மீள் செயல்படுத்தப்பட வேண்டியது சோஷலிசம்தான் என்பது புரிகிறது அல்லவா?

                    //இந்தியாவில் 91 வரை ‘திட்டமிடல்’ மற்றும் அரசு கண்ட்ரோல் (இந்த முதலாளிகளை கட்டுபடுத்த, லாபத்தை அரசு எடுத்துக்கொள்ள) பலமாக செய்து சீரழந்த வரலாறை பார்க்கவும். 98 சதவீத உச்சபட்ச வருமான வரி விகிதம் இருந்த 70கள்.//

                    அதுதான் கோளாறே! முதலாளிகள் லாபம் சம்பாதிக்க லைசன்ஸ்/கோட்டா கொடுத்து, பிறகு வரியாக திருப்பிக் கொடு என்று கேட்டால் தர மாட்டார்கள்தான்! பொறுப்பாக இருந்திருந்தால் 1980கள் வரையிலான சீனா போல இந்தியாவும் சிறந்திருக்கலாம்.

                    //மாசி : நீங்க மீண்டும் அதை தான் முன்மொழிகிறீர்கள். சரி, அதை மீண்டும் அமலாக்கி பாருங்க. பிறகு புரியும்.//

                    அதையே ஏன் அமலாக்க வேண்டும்? டாடாவும் பிர்லாவும் அம்பானியும் கொள்ளை அடிப்பதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?

              • //ரிலையன்ஸ் பிரஷ், மோர் என்று பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வந்த பிறகு மளிகைக் கடை நடத்தும் சிறு வணிகர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்று புள்ளிவிபரம் ஏதாவது இருக்கிறதா? அவர்களது விற்பனை எவ்வளவு குறைந்தது? எத்தனை பேர் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டியிருந்தது? எத்தனை பேர் தொழிலை விட்டு கூலி வேலை செய்யப் போக வேண்டியிருந்தது?///

                அதை வினவு மற்றும் நீங்க தான் சொல்லனும். அல்லது வணிகர் சங்கள் தான் அளிக்க வேண்டும். நடைமுறையில் பெரிய ‘அழிவு’ எதுவம் நடந்தாக தெரியவில்லை. இல்லாவிட்டால் இன்னேறம் வணிகர் சங்கம் தொடர் போராட்டம் நடத்தியிருக்கும். திருவான்மியூர் ரிலையன்ஸ் ஃப்ரெஸ் மூடப்பட்டது ! கட்டுபடியாகவில்லை அவங்களுக்கு.

                சரி, இப்ப இந்த 51 சத முதலீட்டை அரசு அனுமதிக்க முயலாமல் இருந்திருந்தால், இந்த விசியம் பற்றி ஒரு விவாதம், எதிர்ப்பு, இருந்திருக்காது. அப்ப ரிலையன்ஸ் ஃப்ரெஸ் ,மோர் நிறுவனங்களினால் ‘அழிந்த’ வணிகர்கள் யார் ? ஏன் இதுவரை போராட்டம், எதிர்ப்பு எதுவுமில்லை ?

                • //அதை வினவு மற்றும் நீங்க தான் சொல்லனும். அல்லது வணிகர் சங்கள் தான் அளிக்க வேண்டும். நடைமுறையில் பெரிய ‘அழிவு’ எதுவம் நடந்தாக தெரியவில்லை. இல்லாவிட்டால் இன்னேறம் வணிகர் சங்கம் தொடர் போராட்டம் நடத்தியிருக்கும். திருவான்மியூர் ரிலையன்ஸ் ஃப்ரெஸ் மூடப்பட்டது ! கட்டுபடியாகவில்லை அவங்களுக்கு.//

                  ‘சொல்லணும், தெரியவில்லை, தொடர் போராட்டம் நடத்தியிருக்கும்’ இவ்வளவு முக்கியமான பிரச்சனையில் ஊகமாகவே பேசுவது சரியில்லை. வினவு ரிலையன்ஸ் பிரஷ் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். (https://www.vinavu.com/2008/09/24/reliance/)

                  //சரி, இப்ப இந்த 51 சத முதலீட்டை அரசு அனுமதிக்க முயலாமல் இருந்திருந்தால், இந்த விசியம் பற்றி ஒரு விவாதம், எதிர்ப்பு, இருந்திருக்காது. அப்ப ரிலையன்ஸ் ஃப்ரெஸ் ,மோர் நிறுவனங்களினால் ‘அழிந்த’ வணிகர்கள் யார் ? ஏன் இதுவரை போராட்டம், எதிர்ப்பு எதுவுமில்லை ?//

                  ‘ஏதோ நம்ம தலைவிதி இப்படி ஆயி போச்சு’ ‘ஏழரை நாட்டு சனி நடக்கிறது, சனி பெயர்ச்சிக்குப் பிறகு சரியாகிப் போகும்’ என்று முடக்கப்பட்டிருக்கும் மக்களின் எண்ணப் போக்கு ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.

                  இதை சரி செய்ய வினவு போன்ற தளங்களில் தொடர்ந்து எதிர்க் குரல் எழுப்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று கூடி போராடுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது.

                  • //தொடர் போராட்டம் நடத்தியிருக்கும்’ இவ்வளவு முக்கியமான பிரச்சனையில் ஊகமாகவே பேசுவது சரியில்லை. வினவு ரிலையன்ஸ் பிரஷ் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்கள். (https://www.vinavu.com/2008/09/24/reliance/)///

                    இது எனக்கும் தெரியும் மாசி. இது 2008 பதிவு. நான் சொன்னது அதன் பிறகு, கடந்த இரு ஆண்டில் ஏன் போராட்டம் எதுவும் நடக்கவில்லை ? காரணம் தேவையே எழவில்லை. அதாவது இவர்கள் பயந்தது போல் ஒரு பாதிப்பும் இல்லை.

                    • //ஏன் போராட்டம் எதுவும் நடக்கவில்லை ? காரணம் தேவையே எழவில்லை. அதாவது இவர்கள் பயந்தது போல் ஒரு பாதிப்பும் இல்லை.//

                      இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வை. கொஞ்சமாவது உயிர் இருந்தால் போராடும் உந்துதல் இருக்கும், முற்றிலும் ஒழிக்கப்பட்டவர்கள் என்ன போராடுவது! கூடவே, போராட்டம், உரிமை போன்ற சொற்களை கெட்ட வார்த்தை போல கட்டமைத்து விட்டது கடந்த 20 ஆண்டுகள் நியோ லிபரலிசத்தின் வெற்றி.

                      கஷ்டத்துக்கு உள்ளாகுபவர்கள், தமது தலை விதியை நொந்து கொண்டு வேறு வழியில் வாழ்க்கையை பார்க்கப் போய் விடுவதுதான் வாடிக்கையாகியிருக்கிறது. போராட்டத்துக்கு மக்கள் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

  3. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்.
    அங்கே ஒரு அராஜக பிக்-பாக்கெட்.
    அதன் பெயர் வால்மார்ட்.
    அமெரிக்கர்களின் 99% ஜேபிகளில்
    கண்முன்னேயே கத்தரிபோட்டு
    களவாடிய பின்பு,
    இதோ
    இந்தியாவுக்கும் வந்துவிடலாம்.
    கோவணங்களை இறுக்கிக்கொள்ளுங்கள்.
    ஏனென்றால்
    கொட்டைகள்கூட களவாடப்படலாம்!

  4. இந்த பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு… ஏதோ இந்திய நலனுக்கு மட்டும் எதிரானதாக இல்லை என்பதே எனது நிலை… உலகில் இருக்கும் பெரும்பாலான உழைக்கும் விவசாயிகளையும், தொழிலாளர்கள் வலை பின்னலின் (Network) மூலம் ஒடுக்குவதற்கே பயன்படும்… மேலும் மக்களின் நலனுக்கு எதிரான பிடி ரக காய்கறிகளை சந்தையில் புழக்க விடுவதற்கு பயன்படும்…

    இப்போது கரும்பு ஒரு டன்னுக்கு 1100 ரூபாய் கேட்கும் விவசாயிகள்… யாரிடமும் கொல்முதல் விலை கேட்க முடியாமல்… தற்கொலை செய்து கொள்ள வேண்டி இருக்கலாம்…

    நண்பர் அதியமான் காட்டியிருக்கும் டைம்ஸ் ஆப் ஹிந்தியா போல் பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்போர் எப்போதும் மக்கள் விரோத வேலைகளுக்கு ஆதரவாகவே இருந்து கொண்டு இருக்கிறார்கள்… அது அணு உலையாக இருந்தாலும் சரி, சமச்சீர் கல்வியாக இருந்தாலும் சரி, ஈழ மக்கள் படுகொலையாக இருந்தாலும் சரி… இவர்கள் மக்கள் விரோதிகளின் பக்கமே நியாயம் பேசுவார்கள்…

    இப்படி மக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் காலனியாதிக்க அடிமை இந்திய அரசுகள்… ஒரு நாள் இவர்கள் மோசடி பங்காளிகள் திருமலை திருப்பதி, ஸ்ரீரங்கம், தி.கேணி, தில்லை, மதுரை சுந்தரேசன் இல்லம் போன்ற ஆன்மீக பெருங்கடைகளையும்… தாரை வார்க்கட்டுமே… அன்றும் டைம்ஸ் ஆப் ஹிந்தியா போன்றவர்கள்… முதலாளி நியாயம் பேசுவார்களா?

    • ////நண்பர் அதியமான் காட்டியிருக்கும் டைம்ஸ் ஆப் ஹிந்தியா போல் பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்போர் எப்போதும் மக்கள் விரோத வேலைகளுக்கு ஆதரவாகவே இருந்து கொண்டு இருக்கிறார்கள்///

      :)))) இந்த கூகுள், ஃபேஸ்புக், இண்டெல், அய்.பி.எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உங்களை போன்றவர்கள் தொடர்ந்த ‘ஆதரிக்கிறார்களே’ ? உங்களை அப்ப என்னவென்று அழைக்கலாம் ?

      • அதியமான் புத்திசாலித்தனமான கேள்வி கேட்டீர்கள் ஆனால், இந்த டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கையையே காசு கொடுத்து வாங்கி படிக்கும் உங்களை அப்ப என்னவென்று அழைக்கலாம் என்று கேட்டிருந்தால் அது அதிபுத்திசாலித்தனமான கேள்வியாக மாறியிருக்கும். ஜஸ்ட் மிஸ்யாயிடுத்து 🙁

      • //இந்த கூகுள், ஃபேஸ்புக், இண்டெல், அய்.பி.எம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை உங்களை போன்றவர்கள் தொடர்ந்த ‘ஆதரிக்கிறார்களே’ ? உங்களை அப்ப என்னவென்று அழைக்கலாம் ?//

        இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டுக்காரன் நன்றாக மந்திரம் ஓத தெரிந்தவன் என்பதால், இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளிநாட்டுக்கு சேவை செய்ய வழங்கப்படும்.

        கேரளா “பத்மநாப சாமி கோவில்” உட்பட…………

  5. மக்களை சென்றடைய வேண்டிய பதிவு. முடிந்தால் ஒவ்வொரு பதிவரும், இதை அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கலாம்

  6. இந்த சில்லறை வர்த்தர்கர்கள் யோக்கியதை தெரிந்து கொள்ளுங்கள்
    . கள்ளக்கடத்தல் , கலப்படம், போலி சரக்குகள், அதிக விலைக்கு விற்றல்,வரி ஏய்ப்பு , தொழிலாளர்களை ஓட்ட ஓட்ட சுரண்டுதல், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பொருள்களை வாங்கி அதிக விலைக்கு விற்றல்.தொழிலாளர்களை கொடுமை படுத்துவது , நுகர்வோரை ஏமாற்றுவது என அனைத்தையும் செய்யும் இவர்களை எப்படி ஒரு ஆதரிப்பது எப்படி ஒரு கம்யூனிஸ்ட் சொல்ல முடியும்.உங்களோடு விவாதிக்க தயாராக உள்ளேன்

    • இதுதான்யா முதலாளித்துவம். சில்லறை வர்த்தகர்கள் மட்டுமா அரசே இந்த யோக்கியதையிலதான் ஓடிக்கிட்டு இருக்கு.

  7. செய்தி :
    இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு…

    சில தகவல்கள்:
    1 . ஸ்டார் பக்ஸ் என்னும் காபிக்கடை நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கிடைக்க, 2 லட்சம் அமெரிக்க டாலர்களை 2011 முதல் அறையாண்டில்மட்டும் நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு கொடுத்திருக்கிறது

    2 . சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்திய சட்டங்களை திருத்தியமைத்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க , 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இடைத்தரவுக்கு செலவு செய்திருக்கிறது.

    3 . இந்தியாவில் சந்தையைப் பெருக்கிக்கொள்ள டவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும், தொலைதொடர்பு துறை வர்த்தகத்தில் நுழைய AT & T நிறுவனமும், நிதி சேவைத்துறையில் நுழைய ப்ருடென்சியல் பைனான்சியல் நிறுவனமும், புதிய வங்கிகள் துவங்க மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், காப்பீட்டு சட்டங்களையே மாற்றியமைக்க நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி அமெரிக்க சட்ட இடைத்தரகர்கள்மூலம் காய்களை நகர்த்தி வருகின்றன…

    4 . இவை மட்டுமல்ல, போயிங், பைசர், இன்டெல், அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனம் என ஏராளாமான நிறுவனங்கள் அமெரிக்க இடைத்தரகர்கள் வழியாக, அமெரிக்க அரசின் மூலமாக இந்தியச் சட்டங்களை திருத்தியமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்… அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்…

    இவற்றின்மூலமெல்லாம் இந்தியாவை ஆள்வது வெறும் ஜனநாயக(?) அரசல்ல, கார்பொரேட்டுகள் வழிநடத்துகிற ஒரு மக்கள்விரோத அரசுதான் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

      • இந்த 51 சத முதலீட்டுக்கான் அனுமதியை பாராளுமன்றம் அனுமதிக்காவிட்டால் ஒன்னும் குடி முழுகிவிடாது. அனுமதித்தாலும் பெரிய மாற்றம் வந்துவிடாது. எனெனில், இந்திய சில்லரை விற்பனை துறையின் தன்மை அப்படி பட்டது. வீண் பயங்கள். ஒவ்வொறு முறையும் அன்னிய முதலீட்டு அனுமதிக்க்ப்படும் போது இதே போல் ‘எதிர்ப்புகள்’ ; பின்பு அர்த்தமில்லாமல் போகிவிடும் வாடிக்கை. உற்பத்தி துறையில், சேவை துறைகளில், வங்கி மற்றும் இன்ஸுரன்ஸ் துறைகளில் அனுமதி அளிக்கப்பட்ட போதும் பெரிய எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள். கடந்த 20 வருட வரலாற்றை மீண்டும் பார்க்கவும். ரிலையன்ஸ் ஃப்ரெஸ் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வினவு எழுதியதையும் மீண்டும் பார்க்கவும்..

        • //ஒவ்வொறு முறையும் அன்னிய முதலீட்டு அனுமதிக்க்ப்படும் போது இதே போல் ‘எதிர்ப்புகள்’ ; பின்பு அர்த்தமில்லாமல் போகிவிடும் வாடிக்கை. //

          அதியமான் கருத்துக்களில் முரன்ப்பட்டாலும் இந்திய அரசின் ஜனநாயக எதார்த்தத்தை கோடிட்டு காட்டிவிட்டார்.

          ஒரு சில ஆதரவும் பெருவாரியான எதிர்ப்பும் இருந்தாலும் நேரடி அந்நிய முதலீட்டை தடுக்கமுடியாது என்பது தான் வேதனையான விசயம். முதலளிகளுக்கான ஆட்சியில் மக்களின் எதிர்ப்பார்ப்பு காகித கப்பல் போல் மூழ்கும்.

          • //ஒரு சில ஆதரவும் பெருவாரியான எதிர்ப்பும் இருந்தாலும் நேரடி அந்நிய முதலீட்டை தடுக்கமுடியாது என்பது தான் வேதனையான விசயம். ///

            அன்னிய முதலிடு அனுமதிக்கபட்டிருக்காவிட்டால் இந்தியா இன்னேறம் திவாலாகி, நம் ரூபாயின் மதிப்பு 10000க்கு சரிந்து, வறுமை மிக மிக அதிகமாக, இந்த உரையாடல் இன்று இங்கு சாத்தியமாகியிருக்காது. பார்க்கவும் :

            http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
            1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

            • ////ஒரு சில ஆதரவும் பெருவாரியான எதிர்ப்பும் இருந்தாலும் நேரடி அந்நிய முதலீட்டை தடுக்கமுடியாது என்பது தான் வேதனையான விசயம். ///

              அன்னிய முதலிடு அனுமதிக்கபட்டிருக்காவிட்டால் இந்தியா இன்னேறம் திவாலாகி, நம் ரூபாயின் மதிப்பு 10000க்கு சரிந்து, வறுமை மிக மிக அதிகமாக, இந்த உரையாடல் இன்று இங்கு சாத்தியமாகியிருக்காது. பார்க்கவும் :

              http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
              1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

              // தகவல் உபயம்: அதியமானோட பக்கத்துவீட்டு ஜோசியக்காரர், ஒரு முக்கிய நிருபர் மற்றும் அதியமானோட சொந்த மூளை.

        • அதியமான் இங்க ஒன்னு ஆகாது, குடி முழுகிடாது என்று எதாவது ஆதரத்தோடு சொன்னால் தேவலாம், ஏன்னா கட்டுரை வால்மார்ட் தனது சொந்த நாடான அமெரிக்காவுக்கு எப்படி ஆப்படித்தது என்பதை விவரிக்கிறது, அதற்கு இணைய வெளி முழுக்க ஆதாரம் கொட்டிக்கிடக்கிறது.

          நம்மூரை போல அமெரிக்காவில் இருந்த சிறு வணிகர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அங்கே அப்படியாவதற்கு 40 வருடமானதென்றால் இந்தியாவுக்கு 20 வருடங்கள் போதும். கோக்-பெப்சி வந்து 10 வருடங்களில் உள்ளூர் குளிர்பான நிறுவனங்களின் நிலை என்ன? ஏன் அவர்களெல்லாம் இந்திய முதலாளிகள் இல்லையா? அவர்களுக்காக உங்க லிபரடேரிய மணம் இறங்காதா..

          இது தவிர கட்டுரை இன்னமும் பல தகவல்களை பேசுகிறது அதை பற்றியாவது பதில் சொல்ல முயற்சிக்கலாம்.. அதைவிடுத்து இடம் கிடைக்காது, ஒன்னும் ஆகாது என்று ஜோசியம் சொல்றீங்களே… என்னமோ இந்த கம்பெனியெல்லாம் காலி மனையிலதான் கட்டப்போற மாதிரி… கப்புன்னு ஒரு தியேட்டரையோ கலியாண மண்டபத்தையோ இல்ல மெகா மார்ட்டு போன்ற கம்பெனியையோ வாங்கி கபால்னு தன்னோட கடையா மாத்திப்புடுவாங்க… பார்லி சாப்ட் டிரிங்க்சு கோகோகோலா ஆன கதை, ஹட்சு போன் காணாம போன கதை இதெல்லாம் உங்களுக்கு தெரியவே தெரியாதா?

  8. வால்மார்ட் மலிவு விலையில் விற்கும்போது இந்திய சிறுவணிகர்கள் என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை கூறினால் உபயோகமாக இருக்கும்.

    அது லாபம் மட்டுமே…நன்மை எப்படி தரும்…

  9. ஒவ்வொருமுறையும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கப் படும்போதும் வேலைவாய்ப்பு, சகாய விலை கிடைக்கும் என்றுதான் பசப்புகிறது. ஆனால் அனுபவமோ அதற்கு நேர்மாறனவைகள். நாட்டின் சரிபாதி மக்கள் செத்தால்தான் சிலருக்கு சொரணை வரும் என்றால் அதற்கு நம் என்ன செய்ய முடியும்.
    சிறு உடைமையாளர்களை ஒழித்து பாட்டாளிகளை அதிகப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவம் தனது எதிரியை பலப்படுத்திக்கொண்டிருக்கிறது. மார்க்சின் அனுமானம் சரி.

  10. என்ன எழுதுவது என்றே தெரியாமல் மலைத்துப் போய்விட்டேன். என்னவொரு நுணுக்கமான தகவல்கள். நிச்சயம் நண்பர் சொன்னது போல இதை அத்தனை இடங்களிலும் பயன்படுத்தி விடுகின்றேன்.

    திருப்பூரில் வால்மார்ட் ஓப்பந்தம் என்பது ஆட்களுக்கு வேலை கொடுப்பதற்காக மட்டுமே. வால்மார்ட் ஒப்பந்தங்களை வைத்து நான் பார்த்த வரைக்கும் எவரும் முன்னேறியதாக இல்லை. நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மை. ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் புதுப்பிக்க அங்கே தான் செல்ல வேண்டும். வரும் போது பத்து செண்டு குறைத்துள்ளார்கள் என்று சொல்வதும் வாடிக்கை.

    மற்றொன்று வால் மார்ட் இந்தியாவில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம்மவர்கள் ரிலையன்ஸ் ப்ரெஷ்க்கே அல்வா கொடுத்து விட்டார்கள். தாக்கு பிடிப்பது கடினம் என்றே நினைக்கின்றேன். முடிந்த வரைக்கும் போராடிப் பார்ப்பார்கள். அதற்குள் பாதி சிறுவணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை. அதற்கு மிஞ்சி அவர்களால் நிலைக்க முடிந்தால் அதுவும் ஆச்சரியமே. அதுவும் 83 நகரங்களில் மட்டுமே செயல்படும் என்றால் அதன் தாக்கம் எங்கெங்கு பிரதிபலிக்கும். அதனைப் பற்றி தகவல்கள் இல்லையே?

    அதியமான் சொன்னது போல இவர்கள் விரும்பும் அளவுக்கு இந்த நகரங்களில் இடம் கிடைக்குமா? இல்லை முட்டுச்சந்துக்குள் இவர்களால் தொழில் பண்ண முடியுமா?

    இந்த கட்டுரை அளித்த வினவுக்கு நன்றி என்ற சொல்லை விட வேறு வார்த்தைகளை தேடிக் கொண்டு இருக்கின்றேன்.

    அளவில்லா வியப்புடன்

    ஜோதிஜி

    • //மற்றொன்று வால் மார்ட் இந்தியாவில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை// நம்பிக்கை பற்றிய பிரச்சினையல்ல இது என்று நினைக்கிறேன். கடவுள் இருக்கான் பாத்துக்குவான் என்று சும்மா இருந்து விடுகிறோமா என்ன? வால் மார்ட் வந்தா நிக்காதுப்பா என்று நம்பிக் கொண்டு இருக்க சிறு வியாபாரிகளுக்கு வணிகம் ஒன்றும் பொழுதுபோக்கோ அல்லது மத நம்பிக்கையோ அல்லவே?

    • தோழர் ஜோதிஜி,

      கருர் நிறுவனங்களுக்கு வருடம் சுமார் 200 கோடிகளுக்கு மேல் வால்மார்ட் ஆர்டர் உள்ளது. (home textiles and made ups). திருப்பூரிலும் பின்னலாடைகளுக்கு அவர்களின் ஆர்டர் இருக்கும். (ஒரு கட்டத்தில் கரூர் ’இக்கியாவையும்’, ’வால்மார்ட்டையும்’ நம்பியிருந்தது !) சரி, உங்க நிறுவனத்துக்கு, ஒரு 20 கோடி ரூபாய்க்கு வால்மார்ட் ஆர்டர் வந்தால் வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்களா ? அல்லது தென் இந்தியாவின் Chief Merchandiser for Walmart என்று ஒரு வேலை கொடுத்து, வருசம் 100k USD கொடுத்தா வேண்டாம் என்பீர்களா ? நண்பா, உங்களை பத்தி நல்லா தெரியும். சொல்லுங்க ?

      வினவு கட்டுரையில் பல முக்கிய தகவல்கள் விடுபட்டுள்ளன. முக்கியமாக வால்மார்ட்டின் Operating profit margin of 3 % of sales turnover which is the lowest possible in that industry..

  11. A well research article on Walmart. As, US is in the grip of recession, and importing most of consumer products from china and other countries at lower prices and making huge profits, the U.S govt through its agents in India like Manmohan singh, chidambaram, monteq singh, Kapil sibil etc., wants to gain monopoly in consumer sector through Walmart. As opposition to walmart by the people there is increasing, the company is desperate to gain foothold in India, , where the growing upwardly mobile middle classes have money to splurge. While there is benefits for urban elites, the entry of walmart will create massive unemployment, displacement. Are there intervening political forces apart from parliamentary political parties who will voice their opposition decisively?-srinivasan sundaram

  12. Dear Vinavu
    The subject is very simple to understand. From 60s to 90s the developed world was a class apart because technology was with them and they were in a safe heaven. The rise of China has changed the scenario .. from Digital cameras to machine tools everything was made in huge volumes .This technology adaptation by china made a huge dent(hole) in the developed worlds profits. So they are having a stagnation in their domestic markets their dominance is being challenged by “value for money” products from the rising powers.The result : the developed world wants to survive by opening up shops in the third world. It is a CRISIS MANAGEMENT PROGRAM of the developed world.
    we do not have any good health care policy,worst govt hospitals,no proper roads,no funds for govt schools , BUT WE NEED 51% FDI IN RETAIL ? NO MEANING! WE WILL ALLOW 100% FDI IN RETAIL . NO ISSUES ! ONLY WHEN OUR CHILDREN HAS A DECENT EDUCATION ,A DECENT HEALTHCARE , A DECENT INFRA FOR OUR PEOPLE . THEN WE SHALL COMPETE WITH THEM HEAD ON. WITHOUT STREGTHENING OUR INFRA AND PEOPLE HOW STUPID IS ALLOWING FDI IN RETAIL. COMMON SENSE IS THERE MEANS WE ALL CAN UNDERSTAND . NO NEED VINAVU TO TELL ALL THESE . BUT TIMES OF INDIA AND OTHER LEADING PAPERS ARE BRAIN WASHING OUR COMMON SENSE.
    Regards
    GV

  13. Walton’s family fortune
    List of Walton’s family fortune as of March, 10, 2010 published by Forbes.
    Jim Walton US$20.7 billion[2]
    Christy Walton and family US$22.5 billion[2]
    Alice Walton US$20.6 billion[2]
    S. Robson Walton US$19.8 billion[2]
    Ann Walton Kroenke US$3.2 billion[1]
    Nancy Walton Laurie US$2.7 billion[1]
    John Walton US$2.5 billion
    Total: US$92 billion

  14. அதிசயம், ஆனால் உண்மை. என்ன ஆச்சு வினவு, அண்ணாச்சிகளுக்காக வக்காலத்து வாங்குற?
    சிறு வணிகர்கள் எல்லாம் ———— அவனுங்கள காப்பாதலேன்னா என்ன குடியா முழிகிடும்?

    • ஆம், பனியாக்களை இப்ப வினவு ‘ஆதரிக்கும்’ வினோதம் !!

      Dominated by banias, small shopkeepers are notorious for cheating customers through adulteration and fiddled weighing scales. They are also notorious for evading sales tax and income tax. That’s why the bania is widely despised (although it is wrong to tarnish all with the same brush).

      Yet we have the astonishing spectacle of several political parties and state governments supporting the crorepati bania against foreign retailers, whose alleged crime is that they will lower prices so drastically as to wipe out small shopkeepers. If indeed, foreign retailers will reduce prices dramatically–a highly exaggerated hope-this would be a fabulous blessing for the aam admi, struggling with inflation. So, politicians who oppose foreign retailers are promoting the aam bania against the aam aadmi. This is all phrased in socialist rhetoric, but amounts to backing rich traders against poor consumers.

      Why does this happen? Because politicians always woo vote banks and financiers. Baniasconstitute a highly organized vote bank (totaling 50 million in last week’s bandh). They are also political financiers, and not of the BJP alone. That’s why they are wooed even by supposed leftists.

      • அடட்டட்டே அண்ண்ணுக்கு இண்ணா அற்ற்ற்ற்ற்றீவு.., இத்தனை நாளாக சிறு/நடுத்தர விவசாயி, சிறு முதலீட்டாளர்கள்,சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவாகத்தான் வினவு எழுதியிருக்கிறது, அத்தகயைவர்களுள் முன்னாள் ‘தொழிலதிபரான’ அதியமானும் ஒருவர். ஆனால் அவருக்கு மட்டும் இது இன்னமும் தெரியவே தெரியாதாம்…..

        நம்பீபீபீபீபீபீபீட்ட்ட்ட்ட்டோம்ம்ம்ம்…………….

  15. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டுக்காரன் நன்றாக மந்திரம் சொல்லத் தெரிந்தவன் என்பதால், இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் வெளிநாட்டுக்காரன் சேவை செய்ய வழங்கப்படும்.

    கேரளா “பத்மநாப சாமி கோவில்” உட்பட…………

    இதற்கு சொம்பு தூக்கிகள் சம்மதிப்பார்களா ?

  16. அதியமான் ஒருவனின் தொழில் சிந்தனைகளும் அவன் பார்க்கும் சமூகத்தை எப்படி மதிப்பீடுகின்றான் என்பதுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது.

    நான் மட்டுமல்ல.

    வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து நமக்கு வேலை தருகின்றார்கள் என்றால் திறமைசாலிகள் பயன்படுத்திக் கொள்ளத்தான நினைப்பார்கள். ஆனால் வினவு தளத்தில் சொல்லி உள்ளதைப் போல 23 சதவிகிதம் அளவுக்கு குறைத்து கூலிக்கு மாரடிக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

    உங்களுக்கு திறமை இருந்தால் உள்ளூர் வாய்ப்புகள் மூலம் மேலே வரத்தானே செய்வீர்கள்.

    நிச்சயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வால்மார்ட் ஒப்பந்தம் என்றால் எடுத்து செய்து இருப்பேன். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் நான் மட்டுமல்ல எவருமே செய்ய மாட்டார்கள். கையெடுத்து சீனா பக்கம் போயிடுப்பா என்று தான் விரட்டுவார்கள்.

    நீங்கள் சொல்வதில் சில நியாயங்கள் உள்ளது.

    அதை ஏற்றுக்கொள்வதில் சிரமமும் உண்டு.

    ஆனால் உங்கள் பார்வை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை உய்விக்க வந்த உத்தமர்கள் என்பதாக சொல்வது தான் இங்கு பகிர்ந்து கொள்ளும் தோழர்களுக்கு எரிச்சலை உருவாக்குகின்றது என்று நினைக்கின்றேன்.

    இந்த ரெண்டு சுட்டியைப் படித்துப் பாருங்க.

    நான் சொல்ல வருவதை நீங்களே புரிந்து கொள்வீங்க. மொத்தம் ஒன்பது பகுதிகள். இப்போது தான் இரண்டு பகுதிகள் வெளியாகி உள்ளது. எதிர்காலத்தில் சென்னையில் நீங்க காசு இருந்தாலும் சாப்பாட்டுக்கு அலையப் போறீங்க. இங்கே நானும் அப்படித்தான அலையப் போகின்றேன் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

    உங்கள் பார்வையில் இது அதிகப்படுத்தப்படும் பயமுறுத்தல்கள் என்றே சொன்னாலும் அதையும் கடக்க வேண்டுமே?

    உங்க பசங்களே எதிர்காலத்தில் உங்க விமர்சனங்களை படித்துவிட்டு ஏம்ப்பா இப்படி இந்த பன்னாட்டு(பன்னாடை) நிறுவனங்களுக்கு சப்போர்ட் செய்து எழுதுன என்று கொல்லப் போறாங்க?

    http://www.4tamilmedia.com/special/news-review/2237-2011-12-03-18-41-02

    http://www.4tamilmedia.com/special/news-review/2280—-2

    • நீங்க என்னதான் லிங்க் கொடுத்தாலும் அறியாமல் இருப்பவர்தான்கள் தெரிந்து கொள்வார்கள். எதிர் கொள்கை உள்ளவர்களை மாற்ற முடியாது.

    • ///எதிர்காலத்தில் சென்னையில் நீங்க காசு இருந்தாலும் சாப்பாட்டுக்கு அலையப் போறீங்க. இங்கே நானும் அப்படித்தான அலையப் போகின்றேன் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.///

      இல்லை ஜோ. இதெல்லாம் சும்மா பூச்சாண்டி. 70களில் இந்தியா பெரும் பஞ்சம் அடைந்து, அனைவரும் மடிவர் என்று அதற்க்கு 20 வருடங்களுக்கு முன்பு ‘ஆதாரபூர்வமாக’ ஒரு குழு வாதாடியது.

      சரி, ஆனா நான் கேட்ட நேரடி கேள்விக்கு நேரடி பதில் சொல்லாம நல்லா மழுப்பறீங்க தல. இப்ப வால்மார்ட் ஆர்டர் கட்டுபடியாகவில்லை அதானால் எடுப்பதில்லை. கட்டுபடியாச்சுனா இப்பவும் எடுப்பீக. மற்றவர்களும் தான். அது ஒன்றும் பாவம் இல்லை. மாற்றாக சரியான செயல் தான். அமெரிகாவில் அவர்கள் மிக குறைந்த சம்பளம் தான் தருகிறார்கள். ஆனால் லாபமும் மிக மிக குறைவாக ( 3 சதம் தான்) வைக்கிறார்கள். economomics of scaleம் அவர்கள் பாணி. இது அவர்களின் பிஸினஸ் மாடால். ஆனால் இதன் மூலம் பல பத்து கோடி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பயன் அடைகிறார்கள் என்பதே முக்கியம். மலிவாக வாங்க முடிகிறது. consumer is the most important person in the free market. நான் அளித்த டைம்ஸ் சுட்டியை முழுசா படியுங்க.

      இந்த கூகுள், இண்டெல், கேட்டர்பில்லர், கிரண்ட்ஃபோஸ் மற்றும் பல நூறு பன்னாட்டு ‘பன்னாடை’ நிறுவனங்கள் உள்ளன. எல்லாரும் வில்லன்களா என்ன ? ஒரு சில செய்யும் தவறுகளுக்காக எல்லா நிறுவனங்களையும் ஒரே தட்டில் வைப்பது விவேகமல்ல.

  17. அதியமான்.
    கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை எனபது போல் வால் மார்ட்,டெசோ போன்ற அந்நிய நிறுவனங்களை அழைத்து வருகிறார்கள்.இவர்கள் வரவேண்டும் என டாடா,அம்பானி மற்றும் அதியமான் தவிர யார் அழுதார்கள்.

    வணிகம் என்பதே பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்க்கும் பணிதானே.இந்தியாவில் இப்போது உற்பத்தியாகும் பொருட்கள் விநியோகிக்கப் படாமல் தேங்கி கிடக்கின்றனவா.வால் மார்ட் வந்துதான் அதை நமக்கு வாங்கி தர வேண்டுமா.

    விலைவாசி குறையும்,வேலைவாய்ப்பு பெருகும் என சமாதானம் சொல்வீர்கள் தெரியும்.பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக online வர்த்தகம் [இதற்கு தமிழ் சொல் என்ன என யாராவது சொன்னால் மிக்க நன்று] ஊக வணிகம்,பெட்ரோல் விலை நிர்ணய கொள்ளை இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு விலைவாசி குறையும் என்று நம்ப சொல்லாதீர்கள்.

  18. அதியமான் சார்,

    எங்க வீட்டுல அடுத்து கல்யாணம் நடத்த வேண்டியிருக்கு. குறைந்தபட்சம் ஆறு பவுன் தங்கம் வாங்கணும். மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆறு பவுன் வாங்கினேன், கிராம் 836 ரூ விலையில. இப்போ ஒரு 1000, 1100 இருந்தாப் பரவாயில்லதானே? அது ஏன் சார் 2700க்கு எகிறி நிக்குது? என்னை மாதிரி ஏழை பாழைங்க எப்படி வாங்க முடியும்? எங்களுக்கு அதுக்கான தகுதி இல்லையா??

  19. ஆதாரமில்லாத தகவல்கல் , திரிக்கப்பட்ட உன்மைகல் …. அனுபவமில்லத எழுத்து.

    ஏதும் அரியதவர்கலை ப்ரைன் வாஷ் செய்ய ஒரு முயர்சி, இந்த கட்டுரை.

  20. Vinavu folks, pl delete the unnecessary comments given by few of them in between interesting thought processes between Adiyaman, Masi, others. Healthy arguments. We cannot assume every thing will go smooth after WM inducted. I understand, but we have to try only then we can comment on it. Is it not? I have few questions

    1) Your article talks about the 10 Crore small merchants affected due to WM. What about remaining 90C benefiaries (consumers + farmers + others)? Even this 10C merchants will not die, they have other options always, but ofcourse it will be very difficult initially. Do you think all US citizens are fools to allow the WM grow like this and still supporting it? they are supporting since they are enjoying the benefits

    2) Clearly WM will open its stores only in Metro+big cities initially (at least 3 -5 yrs). In this period, if we see the ‘drastic collapse’ as projected here happened to those few laksh merchants in these cities, then we can really fight to stop/close the WM shops. Clearly, govt. can take over any time the entire WM network. Is it not? Pl don’t say govt supports capitalism, so they will not do. Its the same story even now – but why your are fighting? they will anyway try to bring WM

    3) can u tell the readers in few lines, in simple terms the the exact problem lying now which cause the inflation so high, veg., grociers costing so high. Is it due to farmers, big merchants, small merchants, govt policies(if so what are they?)? and what is the alternate solution you are proposing?

    I don’t bother about all other products except food,medicines which are vital anytime to the society. Pl reply on these two areas

  21. […] அழிந்து போகின்றனர் என்பது உலகளாவிய அனுபவம்  அமெரிக்காவின் வால்மார்ட் கால் […]

  22. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காத மாநிலங்களிலும் கொள்முதல் செய்ய, கிடங்கு அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லை என மத்திய அரசு புதிய விளக்கம் அளித்து உள்ளது.

    http://puthiyathalaimurai.tv/central-government-gives-new-description-for-foreign-direct-investment-in-retail-trade

    அது போதாதா… சிறு தொழில் நிறுவனங்களை ஆசை காட்சி மொட்டை அடித்த பின் அண்ணாச்சி கடைக்கு சரக்கு வராது, அண்ணாச்சிக்கு பதிலாக வால்மார்ட் தான் வந்தாகனும்.

    அம்மா வால்மார்ட்-யை வர விட மாட்டேன் என்று சொன்னார் என இந்தியாவுக்கே கொள்ளி வைக்க உதவுவதாக கலைஞர் ஐயா கொடுத்த விளக்கத்தை விட மன்மோகன் சிங் அரசின் விளக்கம் அதிர்ச்சி கொடுக்க வாய்ப்பில்லை. மன்மோகன் அண்ட் கோ கடைந்தெடுத்த கார்ப்பரேட் எந்திரம் என்பதை தான் நாடு பார்த்து வருகிறதே….

Leave a Reply to K.R.அதியமான் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க