privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!

அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!

-

வால்மார்ட்-வேலை-நிறுத்தம்ன்பது வால்மார்ட் கடைகளில் பணி புரியும் 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வியாழக் கிழமை அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். தென் கலிபோர்னியாவில் உள்ள கடைகளைச் சேர்ந்த இந்த ஊழியர்கள் உட்பட 250 பேர் பிகோ ரிவைரா என்ற இடத்தில் உள்ள கடைக்கு முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

“உரிமைகளை கேட்பதற்கான உரிமைக்காக வேலை நிறுத்தம்”, “பழிவாங்குவதற்கு எதிரான வால்மார்ட் வேலை நிறுத்தம்” போன்ற பதாகைகளை ஊழியர்கள் பிடித்திருந்தனர்.

“பிரச்சனைகளை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தின் பழி வாங்கும் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்கிறார் பிகோ ரிவேரா வால்மார்ட் ஊழியர் எவ்லின் குரூஸ்.

வால்மார்ட், லாபம் சம்பாதிப்பதற்காக

  • குறைவான கூலிக்கு ஒப்பந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது,
  • வேலை செய்த நேரத்தை பொறுத்து மட்டும் சம்பளம் கொடுப்பது
  • தேவையான எண்ணிக்கையை விட குறைவான ஆட்களை வேலைக்கு வைத்திருப்பது. அதன் மூலம் ஒருவரை இரண்டு ஆள் வேலை செய்ய வைப்பது

போன்ற கடுமையான சுரண்டல் நடவடிக்கைகளை பின்பற்றுகிறது.

உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான வால்மார்ட், ‘தொழிலாளர்கள் யூனியன்களில் ஒன்று சேர்ந்து விடக் கூடாது’ என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை வட அமெரிக்காவில் நிறுவனப்படுத்தியிருக்கிறது.

OUR வால்மார்ட் (வால்மார்ட்டில் கௌரவத்துக்கான நிறுவனம்) என்ற அமைப்பு கடந்த ஒரு ஆண்டாக வால்மார்ட் ஊழியர்களை யூனியனில் திரட்ட முயற்சித்து வருகிறது. அதன் உறுப்பினர்கள் வால்மார்ட் கடைகளில் பணிச்சூழலை மேம்படுத்த போராடியதோடு, வால்மார்ட் ஆண்டு பங்குதாரர் கூட்டத்தின்போது அங்கு ஒன்று கூடி  தமது கோரிக்கைகளை முழங்கினார்கள்.

வால்மார்ட் நிர்வாகம்

  • OUR வால்மார்ட் அமைப்புடன் சேர்ந்து செயல்படும் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது
  • நேர அடிப்படையில் சம்பளம் பெறுபவர்களின் வேலை நேரத்தை குறைப்பது
  • OUR வால்மார்ட் அமைப்புடன் பேசக் கூடாது என்றும் அப்படி பேசினால் வால்மார்ட் கடையே மூடப்பட்டு விடும் என்று ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்வது

என்று பலவிதமான முறைகளில் ஊழியர்களை அச்சுறுத்தியிருக்கிறது. தொழிலாளருக்கு எதிரான அத்தகைய முறையற்ற நடவடிக்கைகள் குறித்து 20 புகார்கள் அமெரிக்க தேசிய தொழிலாளர் நல வாரியத்திடம் வால்மார்ட் ஊழியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

OUR வால்மார்ட் அமைப்பில் சேர்ந்த பிறகு தனது வேலை நேரம் 30 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார் மோனிக் என்ற பிகோ ரிவேரா வால்மார்ட் ஊழியர். ஐந்து குழந்தைகளுக்கு தாயான மோனிக், “எட்டு மணி நேரத்துக்கான சம்பளத்தை வைத்துக் கொண்டு ஒரு பில் கூட அடைக்க முடியாது, வாழ்க்கை மிக மிக கடினமாகியிருக்கிறது” என்கிறார்.

வேலை நிறுத்தம் நடந்த அதே நாளில் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 வால்மார்ட் தொழிலாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தொழிலாளர்களை சந்தித்தனர். யூனியன் அமைப்பது, உரிமைகளுக்காக போராடுவது குறித்து  விவாதித்த தொழிலாளர்கள். UNI வால்மார்ட் குளோபல் யூனியன் அலையன்ஸ் என்ற அமைப்பை தொடங்கினர்.

இன்னொரு பக்கம் செபடம்பர் மத்தியிலிருந்து வால்மார்ட் கான்ட்ராக்டரான  ரோட்லிங்க்  நிறுவனத்தின் வால்மார்ட் கிடங்கு ஊழியர்கள் 30 பேர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். சுகாதாரமான பணியிடம், சம்பள உயர்வு, முறைப்படுத்தபட்ட வேலை நேரம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றர்.

வால்மார்ட் மற்ற பெரு நிறுவனங்களை போலவே நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளாமல், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கிறது. அதன் மூலம் குறைந்த சம்பளம், போதுமான வசதிகள் மறுப்பு, வேலை நிரந்தரமின்மை போன்ற கொள்கைகளை தடையின்றி கடைப்பிடிக்க முடிகிறது.

  • வேலையிடத்தில் கடும் வெப்பம் அல்லது வாட்டும் குளிரை தாங்க வேண்டியிருக்கிறது
  • தூசுகளும் வேதி பொருள் துகள்களும் நிரம்பிய காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கிறது
  • 100 கிலோவை விட அதிக எடையுள்ள பெட்டிகளை ஆயிரக்கணக்கான முறை சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது.
  • வேலைக்கு வரும் போது எத்தனை மணி நேரம் வேலை இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயம் இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடலாம், சில சமயம் 16 மணி நேரம் வரை கூட நீளலாம்.
  • தொழிலாளர்கள் பணியில் காயமடைதல், பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு நடவடிக்கைகள், தட்டிக் கேட்கும் ஊழியர்கள் மீது சட்ட விரோதமான பழி வாங்கும் நடவடிக்கைகள் என்று கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இந்த ஊழியர்கள்.

என்கின்றது இந்த ஊழியர்களுக்கான கூட்டமைப்பு.

கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 1, 2012) வேலை நிறுத்தம் செய்யும்  ஊழியர்களுக்கு ஆதரவாக 650 பேர் இல்லினாய்ஸில் உள்ள வால்மார்ட்டின் வினியோக மையத்திற்கு அணிவகுத்து சென்றனர். 17 பேரை கைது செய்து அடக்கு முறையை ஏவியது போலீஸ். பின்வாங்காத  போராட்டக்காரர்கள் சாலையில் உட்கார்ந்து கிடங்குக்குள் வண்டிகள் போய் வருவதை தடுத்து நிறுத்தினர்.

வால்மார்ட்டின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக “நம்மால் எதிர்த்து நிற்க முடியும் என்று இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இது ஒரு இயக்கத்தின் இறுதிக் கட்டம் இல்லை, இதுதான் ஆரம்பம்” என்கிறார் OUR வால்மார்டை அமைப்பின் டான் ஷ்லாடமன்.

வால் மார்ட் இந்தியாவில் கொண்டு வரபோகும் வேலை வாய்ப்புகளைப் பற்றி நம்ம ஊர் அறிவுஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் போது  வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள்  தமது போராட்டங்களின் மூலம் இந்திய மக்களுக்குஉணர்த்துகின்றனர்.

படிக்க