privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் !

பார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் !

-

ஜூனியர் விகடன்“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என்று கருணாநிதி உதிர்த்ததை வைத்து அழகிரியின் வாயில் ஏதாவது பிடுங்கி பரபரப்பு ஏற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் தொங்கிய நாக்குகளுடன் காத்திருந்தன. போலவே “தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல” என்று அழகிரி கூற பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு அரசியல் அக்கப்போரை அவிழ்த்து விட்டுவருவது நீங்கள் அறிந்ததே. இது குறித்து தனியாக எழுதுவோம்.

இங்கே சங்கர மடத்திற்கு ஆதரவாக துண்டு போட்டு கச்சேரி நடத்தும் ஜூனியர் விகடனை மட்டும் பார்ப்போம். அழகிரியின் சங்கர மட டயலாக்கிற்கு பதிலடியாக இன்று வந்த ஜூவியின் முதல் கட்டுரை,         “கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது” என்று தலைப்பில் வந்திருக்கிறது.

இட ஒதுகீட்டை கிண்டல் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் பயன்படுத்தும் வார்த்தை “கோட்டா”. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இருந்து சென்னை ஐஐடி வரை இட ஒதுக்கீட்டில் பயில வந்தால் கோட்டா மாணவர்கள் என்று கிண்டல் செய்வார்கள். இதனாலேயே பல பிற்படுத்தப்ட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பார்ப்பனத் திமிரன்றி வேறல்ல. இதையே ஜூவியும் பூணூல் பாசத்துடன் தலைப்பில் வைத்திருக்கிறது.

“சங்கர மடமா இது?” என்பது கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வாயில் அடிக்கடி உதிரும் வார்த்தைகள். இப்போதும் இது சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. தி.மு.க-வில் அந்த வார்த்தை ஏற்படுத்திய கொந்தளிப்பை விட, சங்கர மடத்து பக்தர்கள் தரப்பிலும் அது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது”…. என்று ஆரம்பிக்கிறது ஜூவியின் சங்கர மட பஜனை.

திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் துருப்பிடித்த நிலையிலாவது கருணாநிதியிடம் அவ்வப்போது வெளிப்பட்டால் பார்ப்பன பத்திரிகைகளும், சங்க பரிவாரங்களும் துள்ளிக் குதிக்கும். கருணாநிதியை இந்து விரோதி என்று ஓயாமல் பிரச்சாரம் செய்யும். அப்படியும் ‘இந்துக்களை’ ஒன்றும் மாற்ற முடியவில்லை. சரிபாதிப்பேர் அதிமுகவிற்கு ஓட்டு போடுவது போல மீதி பாதிப் பேர் திமுகவிற்கு போடுகிறார்கள். இருந்தாலும் கருணாதியை இந்து விரோதி என்று சித்தரிப்பதற்காக பார்ப்பன பத்திரிகைகள் எப்போதும் இரத்த வெறி பிடித்து காத்திருக்கின்றன என்பதற்கு ஜூவியின் இந்த கட்டுரை நோக்கமே போதுமானது.

அடுத்து ஒரு விபச்சா விடுதியில் ரெய்டு என்றால் புரோக்கர்கள் மத்தியில் கூட கொந்தளிப்பு ஏற்படாது. இதெல்லாம் அவர்களது அன்றாட வாழ்வில் சகஜம். கிட்டத்தட்ட விபச்சார விடுதிக்கு இணையான மதிப்பை பெற்றிருக்கும் சங்கர மடத்தில் அதன் பக்தர்களிடம் கொந்தளிப்பு என்று சித்தரிப்பதற்கு பொய்யை உரக்க பேசும் கொழுப்பு வேண்டும். சங்கர ராமன் கொலை, அனுராதா ரமணன் மூலம் நிரூபிக்கப்பட்ட ஜெயேந்திரனது காம வக்கிரங்களுக்குப் பிறகு சங்கர மடம், காமாட்டி புராவிற்கு இருக்கும் மரியாதையைக் கூட பெறவில்லை.

சுட்டுப் போட்டாலும் பார்ப்பனத் திமிரை விடாத சில பார்ப்பனர்களும், சங்க பரிவாரங்களில் இருக்கும் சில கருப்பு பார்ப்பனர்களையும் தவிர சங்கர மடத்தை காஞ்சிபுரத்து நாய் கூட எட்டிப் பார்க்காது. ஆனால் ஜூவி தனது இதயத்தில் வைத்து அரற்றுகிறது. என்ன இருந்தாலும் நூல் பாசம் அல்லவா!

காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்ற பீடிகையுடன் ஒரு ஜந்துவை தேடிப்பிடித்து அந்த ஜந்து தத்துப்பித்தென்று உளறியதை வைத்து இரண்டு பக்கத்தில் சங்கர மடத்தின் இமேஜை ஜாக்கி வைத்து தூக்க நினைக்கிறது ஜூவி. இந்த வளசை ஜெயராமன் இந்து முன்னணி ஜந்துவா, ஏதேனும் ஆன்மீக பிசனஸ் மாமாவா நமக்கு தெரியாது. ஆனால் இத்தகைய புரோக்கர்களெல்லாம் ஜூவியின் நிபுணர் கருத்துரை வாத்திய பதவியை ஊதி நிறைவேற்றுகிறார்கள் என்பதிலிருந்து விகடனின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.

ஜெயேந்திரன் - மோகன் பகவத்
சங்கர மடத் தலைவர் ஜெயேந்திரன் – ஆர்.எஸ்.எஸ் மடத் தலைவர் மோகன் பகவத்

இனி இந்த ஜந்துவோ இல்லை மாமாவோ ஊளையிட்டிருப்பதை கொஞ்சம் பார்ப்போம்.

“சங்கர மடம் என்பது பாரம்பரியம் மிக்கது. காஞ்சி மகா பெரியவர் சந்திசேகரேந்திரர், ஹொய்சால வம்சத்தைசத் சேர்ந்த கன்னடப் பிராமணர், ஜெயேந்திரர், திருவாரூரைச் சேர்ந்த தமிழர். பாலப் பெரியவரான விஜயேந்திரர், தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர். மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் எந்த உறவும் கிடையாது.” வளசை ஜந்து இப்படி கூறியிருப்பதில் பார்ப்பன நரித்தந்திரம் எப்படி ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

சங்கர மடத்தில் ஸ்மர்த்த பார்ப்பன பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே சங்கர் சாரியாக வர முடியும். இதைத் தவிர அருந்ததியினரோ, வன்னியரோ, நாடாரோ எவரும் வர முடியாது என்பது மட்டுமல்ல கப்படிக்கும் சங்கர் சாரிகளை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் கூட கிடையாது. மேலும் இந்தப் பிரிவு பார்ப்பனர்களிலிருந்து யாரை சங்கர் சாரியாக கொண்டு வருவது என்பது பட்டத்தில் இருக்கும் சங்கர் சாரியின் முடிவு. மாறாக சங்கர மட பக்தர்களாக உள்ள பார்ப்பனர்கள் கூட கூடிப்பேசி ஜனநாயக அடிப்படையில் எல்லாம் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் சங்கர் சாரிகளை தெரிவு செய்ய முடியாது.

தி.மு.கவில் கூட கருணாநிதி முன்மொழியும் ஸ்டாலினை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் தெரிவு செய்ய முடியும். சங்கர மடத்தில் அப்படியெல்லாம் இல்லை. எல்லாம் சீனியர் சாரி முடிவுப்படிதான் நடக்கும். எனவே வாரிசுரிமையை கவுட்டுக்கிடையில் ஒளித்து வைத்துக் கொண்டு ஆடும் சங்கர மடம்தான் ஆகப்பெரிய ஜனநாயக விரோத அமைப்பு. அதிலும் இன்ன பிரிவில் பிறந்த பார்ப்பனர்களைத் தவிர யாரும் வர முடியாது என்று ஒரு விதியை இன்று வரையிலும் அமல்படுத்தி வரும் அநாகரீகமான மடம். இது சங்கர மடத்திற்கு மட்டுமல்ல இன்ன பிற மடங்கள், ஆதீனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

“சங்கர மடத்தில் பட்டத்துக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மடங்களிலும் இருந்து சதஸ் நடத்தி, அதில் முதல் மாணவராகத் தேறியவர்தான் ஜெயேந்திர். அதற்கு பிறகுதான் அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அதே போல இந்தியாவில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட பரீட்சையில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தவர்தான் பாலப் பெரியவர் விஜயேந்திரர்.”- இது வளசை அடுத்து விடும் காமடி கப்சா.

இதுவும் அப்பட்டமான பொய். செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி கும்பகோணம் டவுண் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது அப்போதைய சங்கர் சாரியால் அழைத்து வரப்பட்டு பின்னர்தான் இந்து மத புரட்டு தத்துவங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு பந்தயக் குதிரை போல தயார் செய்தார்கள். ஜெயேந்திரனுக்கு காம சூத்திரா சாத்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது.  குமுதம் உரையாடல் ஒன்றில் பெரியார்தாசன் இந்த ஜெயேந்திரனிடம் ஒரு உபநிடதத்தின் பெயரைச் சொல்லி அர்த்தம் கேட்ட போது பேந்தப்பேந்த முழித்தவர்தான் இந்த ஜெயேந்திரன். பாலப் பெரியவா என்று உசிலைமணி போல இருக்கும் விஜயேந்திரனை தமிழ்த் திரைப்படங்களில் வரும் பயில்வான் ரங்கநாதனைப் போல ஒரு குஸ்திக்காரன் என்று வேண்டுமானால் அழைக்கலாமே ஒழிய வெறு ஒரு எழவும் அந்த குண்டுவுக்குத் தெரியாது.

தி.மு.க-வைப் போல கோட்டா சிஸ்டத்தில் எல்லாம் பதவி வழங்கும் வழக்கம் சங்கர மடத்திலும், வேறு எந்த மடத்திலுமே கிடையாது என்று இந்த வளசை ஜெயராமன் அவிழ்த்து விடுவதை விடுங்கள், அதை ஒரு பத்திரிகை இரண்டு பக்கங்களில் வெளியிட வேண்டுமானால் அது பார்ப்பன நரித்தந்திரமே அன்றி வேறல்ல. மதுரை ஆதீனம் தனது வாரிசாக நித்தியை நியமித்த போது ஆதீனங்களின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கியவர்கள் இந்த சங்க பரிவாரங்கள்.

அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? உயிரோடிருக்கும் தலைவர் சாவதற்கு முன் அடுத்த தலைவர் இன்னார் என்று உயில் எழுதி வைத்து விட்டோ இல்லை உயிரோடிருக்கும் போது கைகாட்டி விட்டோதான் செய்வார். மற்றபடி இந்தியாவில் இருக்கும் எந்த ஸ்வயம் சேவக் குஞ்சுகளும் வாக்களித்து தமது தலைவரை தேர்வு செய்ய முடியாது. ஹெட்கேவார் எனும் முதல் தலைவர் கோல்வால்காரை கைகாட்ட, இவர் தேவரசைக் கைகாட்ட, பின்னர் தேவரஸ் ஏவரையோ கைகாட்ட தற்போது இந்த கைகாட்டி தத்துவத்தின்படி மோகன் பகவத் எனும் சம்சாக்கடை சேட்டு போல தோற்றத்திலிருக்கும் ஒருவர் தலைவராக இருக்கிறார். இவர்தான் சமீபத்தில் பெண்கள் முழு அடிமைத்தனத்தில் இருந்தால் யாரும் ரேப் செய்யமாட்டார்கள் என்ற தத்துவத்தை உதிர்த்த மகான்.

பிறப்பின் அடிப்படையில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்து மதத்திலும், இந்து மதத்தின் வருண தருமத்தை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் மடங்களிலும், ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களிலும்தான் ஜனநாயகம் என்பது துளிக்கூடக் கிடையாது. இல்லையேல் ஜெயேந்திரன் போன்ற மன்மதக் கொலைகாரர்களெல்லாம் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்ன?

பார்ப்பன பத்திரிகையான விகடன் குழுமத்திலும் வாசன் மகன், பாலசுப்ரமணியன், பாலசுப்ரமணியனின் மகன் சீனிவாசன் என்று வாரிசுரிமை அடிப்படையில்தான் பத்திரிகையின் சொத்துரிமை மட்டுமல்ல கருத்து சொல்லும் உரிமையும் செயல்பட்டு வருகிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் தி.மு.கவை திட்டுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இதனால் தி.மு.கவை நாம் ஆதரிப்பதாக பொருள் இல்லை. உண்மையில் எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்கள்தான் தி.மு.கவின் மக்கள் விரோத, முதலாளி ஆதரவு பாத்திரத்தை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தி வருகின்றன.

ஜூவி தனது கட்டுரையின் முடிவில்,” வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வது என்பது இதுதானா?” என்று முடித்திருக்கிறது.

உண்மைதான். மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்புவது ஜூவிதான்.