privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பெண்களுக்கு எதிரான வன்முறை - தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

-

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்க விபரங்கள்:

1. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

130218-trichy-poster

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் திருச்சியில் பேரணி-பொதுக்கூட்டம் என்பதை மையமாக வைத்து பிரச்சார இயக்கம் எடுக்கப்பட்டது. நகரம் முழுவதும் மையமான இடங்களில் சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 40,000 பிரசுரம் தயாரித்து நகரம், புறநகர் என அனைத்து பகுதியிலும் விநியோகிக்கப்பட்டது.

வன் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

பெண்களை போகப் பொருளாய்
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமை பண்பாட்டை அறுத்தெறிவோம்!
மறுகாலனியாக்க கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம்,போதை,நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

சினிமாக்கள்,பத்திரிக்கைகள்,விளம்பரங்கள்
இணையம்,செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள்
போலிசு-இராணுவம்-அதிகாரவர்கமே!

பாலியல் துன்புறுத்தல்களை
அவமானமாக கருதி முடங்கிக் கொள்ளாமல்
ஆணாதிக்கப் பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவோம்!

சட்டத்தை கடுமையாக்குவது
தூக்கு தண்டனை என்பது பம்மாத்து!
இந்த அரசமைப்பு துறைக்குள்ளேயே
தீர்வு என்பது ஏமாற்று!

போன்ற முழக்கங்கள் பிரசுரத்திலும், சுவரெழுத்துகளிலும் பயன்படுத்தப்பட்டது இது ஆண்களிடம் விவாதத்தையும், ஆதரவையும் பெற்றது.

நகரம், புறநகரங்களில் தெருமுனைக்கூட்டங்கள், வேன்பிரச்சாரம், ஆட்டோபிரச்சாரம், சுவரொட்டி பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், கருத்துக் கேட்பு, ஆலைகள், கல்லூரிகள், விடுதிகள்,  அலுவலகங்கள், பேருந்துநிலையம், இரயில்பயணிகளிடம், கடைவீதி, குடியிருப்புகள் என மக்கள் குவிந்துள்ள அனைத்து பகுதிகளிலும் மேற்க்கண்ட வழிமுறைகளில் கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மைய நிகழ்ச்சியாக நகரின் முக்கிய பகுதியில் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சி நகரின் மைய சந்தையான காந்திமார்கெட்டில் பேரணி துவங்கி முக்கிய பகுதிகளான பெரியகடைவீதி, தேரடிபஜார், என்.எஸ்.பி.ரோடு,  அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. வழிநெடுக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியை கவனித்தனர். பெண்கள் மீதான தொடர்ச்சியான பாலியல் செய்திகள் பற்றி தெறிந்திருந்ததும் அதற்கான தீர்வை பல்வேறு ஊடகங்கள், அறிவுஜீவிகள் பெண்கள் மீதே பழிபோட்டது பற்றியும் தெரிந்து இருந்தனர்.

ஆனால் இத்தகைய குற்றங்கள் பெருகவும், தொடரவும் முதல் எதிரி இந்த அரசுதான் என்பதை விளக்கும் விதமாக பேரணியில் பல்வேறு காட்சி விளக்க பதாகைகளும், கார்ட்டூன்களும் உணர்வுபூர்வமான முழக்கங்களும் பயன்படுத்தப்பட்டதை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தையும் அவர்களுக்குள்ளே விவாதத்தையும் தூண்டியதை பார்க்க முடிந்தது. இதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்வலத்தின் இருபுறமும் சில தோழர்களை சிவில் உடையில் வரச்செய்து மக்கள் பேசிக் கொள்வதை கேட்க சொல்லப்பட்டது.

மக்கள் பேசியவற்றில் ஆதரவு கருத்தும், எதிர்பு கருத்தும் வெளிபட்டது. அவைகளில் சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

  • இவர்கள் எல்லோரையும் திட்டுவார்கள் என்பது தெரியும்
    இப்போது ஆண்களையும் திட்ட துவங்கிவிட்டனர்.பெண்களின் ஆபாச உடைகளை பேசாமல்
    ஆண்களை குறை சொல்வது என்ன நியாயம்!
  • டாஸ்மாக்கை எப்படி இவர்களால் ஒழிக்க முடியும்!
  • ம.க.இ.க போராட்டம் நியாயமானதாகவே இருக்கும் ஆனால் இவர்கள் நக்ஸலைட்டுகள்
  • தீவிரவாதத்தை ஒழிக்க அரசுக்கு எதிராக பேசினால் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் இணையதளம் விசயத்தில் அரசுதான் சீரழிவை உண்டுபண்ணுகிறது.
  • ஆணும்,பெண்ணும், சிலம்பாட்டம் ஆடிக்கொண்டே சென்றதை பார்த்த பெண்கள் இவர்கள் அமைப்பில் தற்காப்பு கலைகள் எல்லாம் கற்று தருவார்கள் போலிருக்கே என பேசிக்கொண்டனர்.
  • இவர்களுடைய புதிய ஜனநாயக புத்தகம் விளம்பரம்,ஆபாசம் இல்லாமல் நக்கீரன்,ரிப்போர்ட்டர் போல இல்லாமல் சரியான அரசியல் பேசும் பத்திரிக்கையாக நட்த்துகின்றனர்.
  • பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறுகின்றனர் ஆனால் ஆண்களும் பெண்களால் அடிமைப்படுத்தப்படுகின்றனர். பொய்யான புகார் கொடுத்து சிக்கவைக்கின்றனர் –ஆண்களில் சிலர்.
  • செல்போனை இளைஞர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்.
  • யாருக்கும் ஓட்டுப்போடாதே என சொல்லும் கம்யூனிஸ்ட்டு இவர்கள்.
  • அது என்ன ம.க.இ.க/பெ.வி.மு –என்ன அது ஒன்னும் புரியலையே!

மக்கள் ஆங்காங்கே தெரிவித்த கருத்துக்களை மேலே தொகுத்துள்ளோம்.

பேரணி சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் சில நிமிடங்களில் பொதுக்கூட்டம் துவங்கியது.

பொதுக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர். ஆதவன் தலைமையேற்று நடத்தினார். இந்த பேரணி –பொதுக்கூட்ட தேவைபற்றியும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள்,வன்கொடுமைகளுக்கு யார் காரணம் முதல் குற்றவாளி யார் என்பதை அடையாளப்படுத்துவதற்கே மக்கள் இக்கயவர்களை எதிர்த்து போராட முன் வரவேண்டும் என தலைமை உரையில் பேசினார்.

அதனை தொடர்ந்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா இன்றைய சூழலில் பெண்கள் படும் சிரமங்களையும் அவர்கள் சந்திக்கும் பல்வேறு இன்னல்களையும் கணவன், மகன், தந்தை அனைவரும் பெண்ணை படுத்தும் பாட்டை சாடினார். வெளியில் நடக்கும் பாலியல் ரீதியான பல்வேறு குரூர பார்வை, குதர்க்க பேச்சு, இடிப்பது, உரசுவது மூலம் பெண் படும் அவஸ்தைகளை வெளிப்படுத்தி இத்தகைய தொல்லைகளில் இருந்து விடுபட ஆணாதிக்க திமிரையும் இதனை பாதுகாக்கும் அரசையும் எதிர்த்து போராட வேண்டும் என வேண்டுகோள்விட்டார்.

ஆணாதிக்க திமிரை ஒழித்துக்கட்டுவோம் என்ற தலைப்பில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புசங்க சிறப்புதலைவர் தோழர்.தர்மராஜ் பேசினார். கடுமையான தண்டனை மூலம் இத்தகைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றால் இந்த உலகில் உள்ள மனிதர்களை சரிபாதியான ஆண்களை தண்டிக்க வேண்டும். பெண்களை காமுகர்கள் துன்புறுத்துவது மட்டும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆண்களில் பலரும் தான் சாப்பிட்ட தட்டை மட்டுமல்ல, தன்னுடைய எச்சில் கையை கழுவகூட தண்ணீரை கொண்டு வரசொல்வது, கைதுடைக்க துண்டு கேட்பது முதல் ஒவ்வொரு விசயத்திலும் பெண்களை தமது எடுபிடிகளாக பார்ப்பதும் அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவதும் என்ன நியாயம்?

தான் சம்பாதிக்கின்றோம் என்ற கர்வமும் பெண் வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு சும்மா பொழுதை கழிக்கிறாள் என கருதுவதும் எவ்வளவு ஆணாதிக்க பார்வை!

குழந்தைகளை 1மணி நேரம் ஆண்களால் பராமரிக்கவோ,அதன் சேட்டைகளை பொருத்துக்கொள்ளவோ முடியாது, ஆனால் பெண்களின் உழைப்பை சாதாரனமாக பார்ப்பது அற்பத்தனமானதாகும்.

தான் போட்டு கழட்டின ஜட்டி, பனியனை கூட துவைக்க முடியாமல் பெண்களிடம் தள்ளிவிடுவது இவை எல்லாம் ஆணாதிக்க திமிரே ஆகும்.

இத்தகைய ஆண்கள் தான் பெண்களின் உடை ஆபாசமாக உள்ளது என குறை கூறுகின்றனர். தெருவில் சுற்றும் நாய்கூட தன்னுடைய துணையை தேடும் போது முறையாக சமிச்சைகள் கொடுத்து அனுமதி பெறுகிறது.

ஆனால் அவள் உடையை பார்த்து எனக்கு உணர்ச்சிவசியப்பட்டு மேலே விழுந்து குதறுகிறேன் என்பவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்!

4வயது குழந்தையிடமும், 70வயது பாட்டியிடமும் என்ன ஆபாசத்தை பார்த்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பார்கள் என புரியவில்லை.

கற்பழிக்க வரும் காமவெறியர்களிடம் அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி இருந்தா டெல்லி பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என R.S.S மற்றும் இந்துமத துறவிகள் கூறுகின்றனர். காமுகர்கள் அண்ணன், தங்கை, தாய், மகள் உறவை பார்ப்பார்களா?

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் இந்த பக்த கோடிகள் முதலில் தமது கடவுள்களுக்கு புத்திமதி சொல்லி திருத்தட்டும், வன்புணர்ச்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண் இனத்தையும் அடிமைப்படுத்தும் இந்த ஆணாதிக்க திமிரை ஒவ்வொரு ஆண்களும் விட்டொழிப்பது முக்கிய பணி என பேசினார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய ம.க.இ..க மாநில இணைச்செயலாளர் அவர்கள் பேசும்போது மறுகாலனிய தாக்குதலில் தினம்,தினம் பாதிக்கப்பட்டு வருகிறோம். உலகமகா கிரிமினல் மன்மோகன்சிங் மொத்த நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்க துடிக்கிற செயலின் ஒரு பகுதிதான் பெண்கள் மீதான தாக்குதல்களும் ஆகும்.

பார்ப்பனர்களும்,வட மாநில பொருக்கி சாமியார்கள் அம்மணமாகவும், பார்ப்பனர்கள் அரை நிர்வாணமாக ஊருக்குள் சுற்றுவது ஆபாசமாக படவில்லையா. பெண் தனது வசதிக்காக உடை உடுத்தினால் ஆபாசம் என்பது பித்தலாட்டமாகும்.

இத்தகய பெண்கள் மீதான வன்புணர்வை அதிகார வர்க்கத்தால் தான் அதிகமாக நடக்கிறது. உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி வர்மா கமிசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சாலையோரத்தில் வசிக்கும் சிறுமிகளைக்கூட டெல்லி போலீஸார் விட்டுவைக்க வில்லை. அவர்களை பற்றி வெளியே பேசினால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வர்மா போன்ற உயர்ந்த பதவியில் இருந்தவர்களே பேசும்போது போலீசு, இராணுவம்,அரசு யோக்கியதை எப்படிபட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். இத்தகைய ஆணாதிக்க திமிரையும், சினிமா, செல்போன், இணையம், பத்திரிக்கைகளையும் அதனை பரப்பும் இந்த அரசையும் எதிர்த்து மக்கள் போராடுவதும் தன்னை தொந்தரவு செய்யும் பொறுக்கிகளை உடனடியாக எதிர்த்து போராடுவதும் தான் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் என்பதை விளக்கி பேசினார்.

இறுதியாக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி வந்திருந்த 700க்கும் மேற்ப்பட்ட தோழர்கள், பொதுமக்கள் பிற அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தன்னிடமுள்ள ஆணாதிக்க சிந்தனையை விட்டொழிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.

ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். சீனிவாசன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

மக்களிடையே இந்த அரசுதான் இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ற விவாதம் துவங்கியுள்ளது.

தகவல்
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு – திருச்சி.

2. புதுவை பேரணி, பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் 22.02.2013 அன்று புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் பழனிச்சாமி பேரணியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். சுதேசி மில்லிலிருந்து புறப்பட்ட பேரணி கம்யூனிச ஆசான்களின் பட பதாகைகளும், செங்கொடிகளும் பிடித்து முழக்கமிட்டவாறு லெனின் தெரு வழியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தது.

பொதுக்கூட்டத்தை பு.ஜ.தொ.மு மாநில துணைச் செயலர் தோழர் அனந்தகுமார் தொடங்கி வைத்தார். சிறப்புரை நிகழ்த்திய பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் கலை பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய முதல் குற்றவாளி இந்த அரசுதான், அரசு அதிகாரிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? ரானுவம், போலிசு, அரசியல்வாதிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? எனவே பெண்கள் மீது நடத்துகிற பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க இந்த அரசு தகுதியற்றது. எனவே இந்த அரசை ஒழிக்காமல் இப்பிரச்சனைக்கு  தீர்வு காண  முடியாது, என்று பேசினார்.

இறுதியாக பேசிய மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள், தனிவுடைமையின் தோற்றமும்,பெண்ணடிமையின் தோற்றமும், நிலவுடைமையின் ஆணாதிக்கப் பிடியும் எவ்வாறு பெண்ணை அடிமையாக்கியது என்பதும், இச்சமுதாயத்தையே மறு உற்பத்தி செய்கிற வல்லமை கொண்ட பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிற நிலவுடைமை ஆணாதிக்கத் திமிரை ஒழிக்காமல், பெண்களை போகப்பொருளாய், நுகர்வுப்பண்டமாய் நடத்தும் ஏகாதிப்பத்திய சீரழிவு கலாச்சாரத்தை தகர்க்காமல் பெண்களுக்கு விடிவு இல்லை! என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக ம.க.இ.க-வின் மைய்ய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி சாலையில் சென்ற பொதுமக்களையெல்லாம் நிற்க வைத்தது.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட பொதுமக்களின் கருத்து:

  • ஒவ்வொரு பேச்சும் கலைநிகழ்ச்சியும் நல்ல கருத்தாக இருந்தது. இந்த கலைநிகழ்ச்சி மூலம் சொல்லுகிற கருத்து பயனுள்ளதாக இருந்தது.
  • இந்த கலைநிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கிராமத்தில் நடத்தினால் மக்கள் விழிப்புனர்வு அடைவார்கள்.
  • நான் எப்போதும் இந்தமாதிரி பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை நல்லா இருந்தது.
  • கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆணாதிக்கத்தை மாற்றணும், கொஞ்சம் டைம் ஆகும்.
  • நீங்கள் தொடர்ந்து நிதி வசூல் செய்து அடிக்கடி புதுவை பகுதியில் இதைமாதிரி நடத்தினால் மக்களுக்கு விரைவாக விழிப்புணர்வு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி 100% நல்லா இருக்கு.
  • வன்கொடுமைகளை நல்லா எடுத்துச் சொன்னிங்க.
  • அடிக்கடி இந்தமாதிரி பொதுக்கூட்டம் நடத்தினால் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தும்போது ”புதிய ஜனநாயகம்” பத்திரிக்கையில் பதிவு செய்து புதுவை முழுவதும் கொடுங்கள்.
  • இந்த நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கள் 75% ஏற்கக்கூடியதாக இருந்தது.
  • ஜெயலலிதா சொன்னப்படி போலிசுக்கு ’தனி’ சலுகை, மக்களுக்கு தனி சலுகை  இந்த கருத்து நல்லா சொன்னிங்க.
  • மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகமாக வரவைக்க வேண்டும்.
  • பெண்களை பற்றி விழிப்புணர்வு வரும்வகையில் இந்த நிகழ்ச்சி எனக்கு உதவியாக இருந்தது.
  • பொதுவாக இந்த நாட்டில் நடக்கும் அத்தனை அநியாயம்களையெல்லாம் சுட்டிக்காட்டி பேசினார்கள் சிறப்பு.
  • பத்திரிக்கை செய்தியை மட்டும் பேசக்கூடாது. மற்ற விசியங்களையும் பேசவேண்டும்.

தகவல்
பு.ஜ.தொ.மு—புதுச்சேரி
தொடர்புக்கு:9488778940

3. உசிலம்பட்டி பொதுக்கூட்டம்

  • பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் !
  • ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
  • மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20.02.2013 அன்று மாலை 6 மதியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர்.குருசாமி, சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டம் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் கோ.நாகராசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டன்ர். கூட்டம் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தோழர் குருசாமி உரையில் பாலியல் வல்லுறவுக்குக் காரணம் அப்பெண்களின் ஆடைதான் காரணம் என்று பேசுவதுதான் ஆணாதிக்கம் என்று இந்த பகுதி மக்களின் நடைமுறை எதார்த்தத்திலிருந்து விளக்கினார். பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனையை கடுமையாக்குவது என்பது புண்ணுக்கு மருந்து போடுவது போல அது நோயைக் குணப்படுத்தாது, நோயைக் குணப்படுத்த வேண்டுமானால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராக அனைவரும் நக்சல்பாரிகள் தலைமையில் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர்.நாகராசன் தனது சிறப்புரையில் புராதனபொதுவுடமை சமூகத்திலிருந்து ஆண்டை அடிமைச் சமுதாயத்தில் உருவான சொத்துடைமைப் பாதுகாக்க என்று அரசு தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் நிறுவனமாக அரசுதான் முக்கியப் பாத்திரமாக உள்ளது என்பதை புராணகதைகளிலும், மன்னர் காலத்திலும், அதைத்தொடர்ந்து பண்ணையார்கள் முதல் இன்று மறுகாலனியாக்கம் ஏற்படுத்தும் தாக்கம் வரை சொல்லி விளக்கினார்.

குறிப்பாக செல்பேசி, இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்ற ஊடகங்களும், அரசின் டாஸ்மாக் கடைகளும் ஒரு ஆணாதிக்கச் சிந்தனை உள்ள சராசரி மனிதனை பெண்களை வல்லுறவு செய்யும் மிருகமாக மாற்றுகிறது என்று விளக்கியது படிப்பறிவு இல்லா மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இந்தப் பகுதியில் இந்த பாலியல் வன்முறைகளை கண்டித்து எந்த ஒரு ஓட்டுக்கட்சி அமைப்புகளும் பேசாத நிலையில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியும் தலைநகர் டெல்லியில் நடந்த மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், மக்கள் திரளாக அமைப்பாக போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இறுதியாக நடந்த ம.க.இ.க-வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வரும் இந்த சூழலில் “நாங்க ஆம்பளைங்க” என்ற பாடல் மக்களிடம் மனதில் ஆணாதிக்கம் உறுத்தலைப் பாடல் மூலம் கேட்டது மிகவும் உற்சாகமாக இருந்து என்று பலரும் கருத்து கூறினர்.

புஜ செய்தியாளர், உசிலம்பட்டி

4. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

  • திருச்சி ஜீயபுரத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பொறுக்கி கைது!
  • செய்தி ஊடகங்கள் மற்றும் ம.க.இ.க வினர் கண்களில்படாமல் குற்றவாளியை பாதுகாத்த போலீசு!
  • அரசுதான் முதல் குற்றவாளி என்பதற்கு திருச்சியில் நேற்று(18.02.2013) நடந்த சம்பவமே சாட்சி!

பெண்கள், குழந்தைகள், முதியோர் என தொடர்ச்சியாக காமவெறியர்களால் குதறப்படுவதும், கொளுத்தப்படுவதும், அமிலத்தால் கருக்கப்படுவதும் நாள்தோறும், பொழுதுதோறும் நடந்தேறி வருகிறது.

அரசும் அவர்களின் துதிபாடிகளும், “சட்டம் கடுமையாக்கணும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கனும், ஆண்மை நீக்கணும்” என பிதற்றுவது கேலிக்கூத்தானது என ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கம் செய்து வருகின்றன. இத்தகைய காம கொடுரன்களை பாதுகாப்பதும் அவர்களின் வெறிச்செயலை தூண்டிவிடும் செல்போன், இணையதள சீரழிவுகள், சினிமா பொறுக்கித்தனங்கள், குடிக்கவைத்து மதிகெடுக்கும் டாஸ்மாக்குகள் இவற்றை ஊக்குவிக்கும் இந்த அரசும்தான் முதல் குற்றவாளி என்பதை நிருபிக்கும் வகையில் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி அருகே உள்ள ஜீயபுரம், கம்பரசம்பேட்டையை சேர்ந்த ஜாபர் அலி (வயது 19) என்பவன் 4 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வெறித்தனத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால் அச்சிறுமி கடும் வலியால் துடித்ததை கண்ட பெற்றோர் அக்குழந்தையிடம் உண்மையை தெரிந்துச் சென்று சம்மந்தபட்டவன் மீது காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதனை ரகசியமாக வைத்திருந்த காவல்துறை சாதாரண வழக்குகளின் கீழ் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முயன்றனர். இப்பிரசனை சம்பந்தமாக ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு., பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக நீதிமன்றத்தில் ஒன்று திரள வழிகாட்டப்பட்டது. தொடர்ச்சியாக பிரச்சார வேலைகளின் காரணமாக சோர்வுற்று இருந்தாலும் கைக் குழந்தைகளுடன் செல்வது சிரமமாக இருந்தாலும் இத்தகைய பொறுக்கிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற உத்தேசத்துடன் செருப்பு, அழுகிய முட்டை, மாட்டுச்சாணம் ஆகியவற்றுடன் நீதிமன்றத்தில் குழுமினர் தோழர்கள். தினசரி பத்திரிக்கைகள் முதல் ஊடகங்கள் வரை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை காத்திருந்தும் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்திற்க்கு கொண்டுவரவில்லை. இதற்கிடையே தோழர்களை நீதிமன்றத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்று உதவி ஆணையர் மிரட்டும் தொனியில் பேசினார். தோழர்கள் வழக்கறிஞர்களின் பதிலடியால் பின்வாங்கினர்.

நேரம் கடந்தது. நீதிபதியிடம் சென்ற நமது வழக்கறிஞர்கள் “குற்றவாளியை நீங்கள் வீட்டில் பார்க்கக் கூடாது. நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியதும் நீதிபதி ஏற்றுக் கொண்டு செய்கிறேன் என ‘தலையாட்டினார்’ ஆனால் இரவு 8 மணி ஆகியும் கொண்டுவரவில்லை. இதன் பின் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், தோழர்கள் திரண்டு போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், நீதிமன்ற வழியை மறித்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.

“சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் நாளை காலை 6 மணிக்குதான் ஆஜர்படுத்துவோம்” என பத்திரிகைகள் முன் பேட்டியளித்தனர் காவல் துறையினர். இதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றோம்.

ஆனால் திருட்டுத்தனமாக இரவு 10 மணிக்கு மேல் நீதிபதி வீட்டிற்குள் அழைத்து சென்று ‘தேசியத் தலைவரை’ பாதுகாப்பாக கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர். போலீசுடன் நீதிபதியும் கூட்டுசேர்ந்து மோசடியாக ஏமாற்றி உள்ளனர்.

இத்தகைய பேடித்தனத்தை தவிர வேறு எதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் மத்தியில் காமக்கொடுரன்களை கண்டிப்பதும், தண்டிப்பதுமே மக்களிடம் விழிப்புணர்வும், தைரியமும் ஏற்படுத்தும். குற்றவாளிகள் திருந்தவும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் இத்தகைய மாற்றம் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கும் இந்த அரசையும் அவர்களின் கைத்தடிகளையும் எதிர்த்து போராடுவதே நமது முதல்பணியாக உள்ளது.

தொடர்ந்து போராடுவோம்! சமூகமாற்றத்தை நோக்கி முன்னெடுத்து செல்வோம்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு.,
திருச்சி.

5. ஓசூர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற முழக்கத்தின்கீழ் ஓசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து மாபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை 17.02.2013 மாலை 5 மணிக்கு ஓசூரில் எழுச்சியுடன் நடத்தின. ராயக்கோட்டை சாலையிலிருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி தலைமையில் தொடங்கிய பேரணி விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டு மக்கள் குழுமியிருக்கும் முக்கிய சாலைகள் வழியாக சென்று ராம்நகர் அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடை அருகே முடிவடைந்து பொதுக்கூட்டம் தொடங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் செல்வி, தோழர் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்தபோது கிடைத்த அனுபவங்களை தொகுத்து சிற்றுரையாக பேசினர். இவர்களைத் தொடர்புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜ் சிறப்புரையாற்றினார். இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்தனர். நிதி தந்தும், தொடர்புகொள்ள தங்களின் முகவரி அளித்தும் சென்றனர்.

6.  திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக் கூட்டம்.

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.”, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 25.02.13 அன்று மாலை 6 மணிக்கு பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் மாவட்ட இணை செயலாளர் தோழர் வி கந்தர் தலைமை தாங்கினார். தலைமையுரையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கமாக இருந்துகொண்டு இது போன்ற அரசியல் பிரச்சாரங்களை செய்ய வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்தும், காவல் துறையினராலேயே பெண்கள் சீரழிக்கப்படுவதை கோடிட்டுக்காட்டி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், சமூக பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே பெண்கள் வேலைக்கு செல்கின்றனரே ஒழிய பெண் விடுதலை, சுதந்திரம் என பேசப்படுவது அனைத்தும் முதலாளித்துவ பொய் பிரச்சாரமே என்று பதியவைத்தர். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து பெண்களை போகப்பொருளாக்கி சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிஸ் அதிகாரிகளே பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை விளக்கினார். தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதியே புலம்பியுள்ளதை எடுத்துரைத்து, இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியாது .ஆகவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும், உடனடி தீர்வாக எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றதோ அங்கேயே பொறுக்கிகளை செருப்பால் அடிப்போம் என்றும், நிரந்தர தீர்வாக நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாகவும், சீரழிவு கலாச்சாரத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக்கூட்டம், இனணப்பு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் கணேஷ்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.

SAMSUNG SAMSUNG

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய பொதுக்கூட்டம்

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.’’, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 18.02.13 அன்று மாலை 6 மணிக்கு செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணை செயலாளரும், திருவள்ளுர் மாவட்ட செயலாளருமான தோழர் ம. சி. சுதேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், இன்றைய மறுகாலனியாக்க சூழலானது, எதை குறித்தும் கவலைப்படாமல், நுகர்வதை மட்டுமே வாழ்வின் நோக்கமாக கருதும் தலைமுறையை உருவாக்கியுள்ள இந்த முதலாளித்துவத்தை வேரறுக்க பெரியரியத்தாலோ, தமிழ் தேச விடுதலையினாலோ சாத்தியமில்லை, நக்சல்பாரி பாதையே மாற்று என்று பேசினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ், கற்பு என்பது இச்சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் தான் என கற்பிக்கப்பட்டுள்ளதையும், பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்னுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், ஆணாதிக்கமே கோலோச்சுவதை உதரணங்களுடன் எடுத்துரைத்தார். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று என்பதை கடைநிலை ஏட்டு முதல், உயர் போலிஸ் அதிகாரிகள் வரை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கிரிமினல்களின் பெயர்களை வாசித்து அதை ஆதாரங்களுடன் விளக்கினார். இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காததோடு, பணிஉயர்வு வழங்ப்பட்டுள்ளதையும் அம்பலப்படுத்தினர். இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து விடமுடியும் என நம்புவது முட்டாள்தனம் என்பதையும், நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, குறிப்பாக “ஏன்னா நா ஒரு ஆம்புள” என்ற பாடல் உழைக்கும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.

எந்த நேரத்திலும் மழை பெய்யும் என மேகம் மிரட்டிய போதும், என்ன ஆனாலும் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதாக தோழர்கள் உறுதி பூண்டிருந்ததால், திட்டமிட்டபடி கூட்டம் நடத்தப்பட்டது. இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என ஏறக்குறைய 250 பேர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை வாசகங்கள்:

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப் பொருளாய்,
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பாட்டை அறுத்தெறிவோம்!

ஆபாச வக்கிரங்களைக் கடை விரித்து
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும்
ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

மறுகாலனியாக்கக் கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம், போதை, நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கிப் பேணுகின்ற
பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி
முடங்கிக் கொள்ளாமல்,
ஆணாதிக்கப் பொறுக்கிகளை
அடையாளம் காட்டுவோம்! அடித்து நொறுக்குவோம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களில்
முதல் குற்றவாளிகள் போலீசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள் பத்திரிகைகள் விளம்பரங்கள்
இணையம் செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

சட்டத்தை கடுமையாக்குவது – தூக்குத் தண்டனை என்று பம்மாத்து!
இந்த அரசமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெறியாட்டங்களுக்கு காரணமான
நிலவுடைமை – பார்ப்பனிய சாதி ஆணாதிக்கத்தையும்
மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும்
பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே
பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

7. தருமபுரி புதிய ஜனநாயகம் செய்தியாளர் அனுப்பிய தகவல்

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பாக பேருந்துகளிலும், பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்து பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

pennagaram-notice

மார்ச் 1, 2013 அன்று மாலை 5 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது

தலைமை : தோழர் சிவா, வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
சிறப்புரை : தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழக  மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

notice

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
தொடர்புக்கு: 99433 12467

  1. ” போராட்டம் எங்கள் உயிர் மூச்சு என்ற வரலாற்று நாயகர்கள் யாரடா?
    அது நகசல்பாரிகள் தானடா ”

    என்ற வரிகளுக்கு இணங்க புரட்சிகர நகசல்பாரி அமைப்புகளின் பேரணி-பொதுக்கூட்டங்கள் துடிப்புடன் இருக்கிறது.
    புரட்சிகர வாழ்த்துகள்!

  2. தோழர்கள் அனைவருக்கும் உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்!

    பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய பிரச்சாரம்!”
    போராட்டத்தின் தொடர்ச்சியாக உழைக்கும் பெண்கள் தினமான (மார்ச் 8)இன்று மாலை பல்லாவரத்தில் பெ.வி.மு சார்பாக தெருமுனைக்கூட்டம் நடத்தவிருக்கிறது என அறிகிறேன்.

    மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் என்பது ஏதோ ஒரு பெண்கள் கொண்டாடும் விழா என்ற அளவில் ஊடகங்கள் வெட்டி சுருக்கும் காலக்கட்டத்தில் அத்தினம் ஆணாதிக்க சமூகத்தின் அடித்து துவைக்கும் போராட்டத்தின் ஒரு அங்குமாக அனுசரிப்பது புரட்சிகர அமைப்புகள் மட்டும் தான்.

Leave a Reply to பகத் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க