privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

-

திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் விற்பனைக் குழு சார்பில் 26-5-2013 அன்று காலை 10 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம், SRC ரோடு, சிந்தாமணி காலை காய்கறி மார்க்கெட் எதிரில் அமைந்துள்ள சுருதி திருமணமஹாலில் தோழர் சேகர் தலைமையில் வாசகர் வட்டம் கூட்டம் நடை பெற்றது. 100-க்கும் மேலான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்ட கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய தோழர் சேகர் பேசுகையில் இன்றைய பத்திரிக்கை உலகில் 2 வகையான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன, அதில் ஒரு வகை முதலாளிகள் நலனுக்காக வெளிவருகின்றன. அவர்களின் விளம்பரத்தை நம்பியே பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. மற்றொன்று போலீசு தரும் பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துகின்றன. அதையும் மீறி மக்கள் பிரச்சினைகளை எழுதினாலும் அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ எழுதுவதில்லை. உதாரணத்திற்கு தக்காளி ரூ 45-க்கும், சின்ன வெங்காயம் ரூ 80-க்கும், இஞ்சி ரூ.250 க்கும் விற்பனை செய்வதை பற்றி எழுதுகிறார்கள். அதற்கு, இந்த அரசு விவசாயத்தை தனியார்மயமாக்கி, விவசாயத்தையே ஒழிக்கும் வேலை செய்வதை பற்றியும், உற்பத்தியான பொருள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது என்பதையும், உலக அளவில் தேவையில்லாத பொருள்தான் நமது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்பதையும், விவசாய உற்பத்தி பொருள், விலை குறைய வேண்டும் என்றால், அரசு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், விவசாயத்தை தனியார்மயமாக்கும் கொள்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.

இதே போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை கல்விக் கட்டணம் என்ற பெயரில் உறிஞ்சுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் துறை அதிகாரிகளும், இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி பணத்தை சுருட்டுகிறார்கள் என பத்திரிக்கைகள் எழுதுகின்றன. ஆனால் இதற்கு காரணம் கல்வி தனியார் மயமானது தான் என்பதையும், கல்வி அரசு மயமாகும் போதுதான், கல்வி கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் எழுதுவதில்லை. கல்வி முதலாளிகளை, அரசாங்கத்தை பகைத்துக் கொண்டால் தமது வருமானம் குறையும் என்று அஞ்சி அவர்கள் உண்மையை எழுதுவதில்லை.

புதிய ஜனநாயகம், அரசு பின்பற்றும் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் தான் கல்விக் கொள்ளை, விலைவாசி உயர்வுகளுக்கு காரணமென்றும், இந்த அரசை எதிர்த்து போராடுவதன் மூலமே மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் உண்மையை எழுதுகிறது. புதிய ஜனநாயகம் மக்கள் பத்திரிக்கையாக உள்ளது, புதிய ஜனநாயகம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று தனது உரையை முடிவு செய்தார்.

வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர், புதிய ஜனநாயகத்தில் ஆபாசமுமில்லை, விளம்பரமும் இல்லை, செய்தி ஆவணமாகவே இருக்கிறது என்றார். 1983-ல் ஈழப்போராளிகளைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் வந்த கட்டுரையின் நிலைப்பாடு இன்றைக்கும் மிகப் பொருத்தமாகவே இருக்கிறது. அந்த வகையில் நமது பத்திரிக்கை உலகில் முடிசூடா மன்னனாக விளங்குகிறது என்றும் கூறினார்.

மற்றொரு வாசகர் நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், ஒருமுறை புதிய ஜனநாயகம் ஒன்று வாங்கி படித்ததாகவும், அதில் ஜெயலலிதாவின் உருவத்தை பற்றி வித்தியாசமாக வரைந்து வெளியிட்டதை பார்த்து ஆச்சர்யப்பட்டதாகவும், இந்த அளவு தைரியமானவர்கள் யார் என்று சந்தேகப்பட்டதாகவும், பின்னர் தோழர்கள் அறிமுகமானதும் தொடர்ந்து பத்திரிக்கை படித்து வருவதாகவும், INTUC, AITUC உட்பட பல சங்கத்திலிருந்தாகவும் பின்னர் அவற்றை விட்டு விலகிவிட்டதாகவும் கூறினார்.

வேறு ஒரு வாசகர், திருச்சி சித்தார் வெசல்ஸ் நிறுவனத்தில் இளைஞர் ஒருவர் முதலாளியின் லாப வெறியால் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதை கண்டித்து தீக்குளித்து இறந்து போன செய்தியை CITU காரர்களும் தனது பத்திரிக்கையில் போட்டிருந்தனர். புதிய ஜனநாயகத்திலும் இச்செய்தி வெளிவந்தது. அதை படித்த CITU தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத்தை காட்டி, CITU -காரர்களை நோக்கி, ‘ நீயும் எழுதியுள்ளாய்’ ஆனால் புதிய ஜனநாயகத்தில் வந்த உண்மை செய்தியை பாருங்கள் என கோபம் கொப்பளிக்க வெகுண்டு எழுந்து தொழிலாளர்கள் பற்றி பேசியதாக கூறினார்.

தருமபுரி கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அம்பலப்படுத்தி கட்டுரை வந்திருந்தது. அதைப்படித்த அக்கட்சியின் தொண்டர் ஒருவர் இவ்வளவு விசயம் தெரிந்த பின்னர் இந்த கட்சியில் இருக்க விரும்பவில்லை என விலகிக் கொண்டார் என ஒரு வாசகர் கூறினார். இப்படி பலரும் புதிய ஜனநாயகத்தின் அனுபவத்தை விளக்கி பேசினார்கள்.

வாசகர் வட்டத்தின் முடிவில் இந்தியா VS பாகிஸ்தான், இந்தியா VS சீனா பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன் சிறப்புரை நிகழ்த்தினார்.

தோழர் காளியப்பன்

கடந்த ஜனவரி மாதத்தில் வடமேற்கு எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு அதில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டதாக வந்த தகவல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ், பாஜக தலைவர்களும் பிறரும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆத்திரமுற்றனர். இக்குற்றச்சாட்டு குறித்து சர்வதேச விசாரணை நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் கருத்தை பிரதமர் நிராகரித்தார். துண்டிக்கப்பட்ட இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இந்திய இராணுவம் பத்து பாகிஸ்தான் இராணுவத்தினரின் தலைகளையாவது கொய்து வரவேண்டும் என்று ஆவேசத்துடன் முழங்கினார் பாஜகவின் சுஷ்மா சுவராஜ். அதுபோலவே மே 13-ம் தேதி சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்துவிட்டதாக எழுந்த புகார் மீதும் இதே பாணியில் கூச்சலிட்டனர் ஓட்டுக்கட்சிகள். இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்ற சீன இராணுவத்தின் கருத்து சரியே என்று ஓர் இந்திய அதிகாரி சொன்னதை யாரும் காதில் வாங்கவில்லை.

china-india-warகடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலிய மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 94% இந்தியர்கள் பாகிஸ்தானையும், 84% இந்தியர்கள் சீனாவையும் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுவதாகக் கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடு, முஸ்லீம்கள் எதிரிகள், சீனா இந்தியாவை ஆக்கிரமித்த நாடு, இப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கத்தில் செயல்படும் நாடு என்ற கருத்து மிக வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டு சாதாரண இந்தியர்கள் வரை அவர்களது இரத்தத்தில் கலந்து பகையுணர்ச்சியாக வளர்ந்துள்ளது. 1947-ல் பிரிட்டிஷ் அரசு மத ரீதியில் இந்தியாவைப் பிரித்தது, பின்னர் காஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரமித்தது, 1962-ல் இந்திய சீனப்போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானையும் சீனாவையும் பகை நாடுகளாக்கருதும் மனோநிலையை ஆர் எஸ் எஸ், பாஜகவும் பிறரும் தொடர்ச்சியாக வளர்த்து வருகின்றனர்.

ஈழப்பிரச்சனையில்கூட சீனாவும் பாகிஸ்தானும் ராஜபக்சேவை ஆதரிப்பதால் இந்தியாவின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க தனி ஈழத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும், இதுவே சிறந்த இராஜதந்திரம் என்று நெடுமாறன், வைகோ உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் பேசுவதன் மூலம் தனி ஈழத்திற்கான நியாயத்தை விட பாகிஸ்தான், சீனா எதிர்ப்பையே தமிழக மக்கள் மத்தியில் அழுத்தமாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்புக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய விரிவாக்க நோக்கம் முக்கியக் காரணம். ஆனால் அன்றைய சீன எதிர்ப்பிற்கும், போருக்கும் முக்கியக் காரணம் கம்யூனிசக்கொள்கை பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதே.

india-pakistan-warமுஸ்லீம்கள் இந்தியாவை மதரீதியில் துண்டாடி விட்டார்கள் என்பதாகவே ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல் இன்றும் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மை யாதெனில் அன்று வளர்ந்து வந்த முஸ்லீம் தரகு முதலாளிகளான இஸ்பானி, சர் ரபியுதீன் ஆதம்ஜி, சர் அப்துல்லா ஆரூண் போன்றவர்கள் தங்கள் சுரண்டல் நலனுக்காக ஜின்னா தலைமையில் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தனர் என்பதேயாகும். பிர்லா போன்ற இந்துத் தரகு முதலாளிகள் சிலரும் கூட பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தனர். 1947 அதிகார மாற்றத்திற்கு முன்னிருந்தே இந்திய இந்துத்தரகு முதலாளிகள் அகண்ட பாரதக் கனவைத்தாண்டி இந்துமாக்கடல் பகுதியையும், பசிபிக்கடல் பகுதியையும் ஆக்கிரமிக்கும் வெறியிலேயே இருந்தனர். 1945–ல் இந்தியாவைக் கண்டறிதல் என்ற நூலில் நேரு வெளிப்படையாகவே எழுதினார். ‘ உலகின் குவிமையமாக இப்போது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி உள்ளது. எதிர்காலத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதி குவிமையமாக மாறக்கூடும். இந்தியா பசிபிக் பெருங்கடல் பகுதி அரசாக இல்லாத போதிலும் தவிர்க்க இயலாதவாறு அங்கு இந்தியா முக்கிய செல்வாக்கு செலுத்தும். இந்தியப்பெருங்கடல் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியா முதல் மத்தியக் கிழக்குப் பகுதி வரை பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இந்தியா வளரும். இதன் விளைவாக சிறு சிறு தேசிய அரசுகள் இல்லாமல் போய்விடும். அவை கலாச்சார சுயாட்சிப் பகுதியாக நீடிக்கலாமே தவிர சுயேச்சையான அரசியல் அதிகாரம் கொண்ட அரசுகளாக நீடிக்க முடியாது’ என்றார் நேரு.

இந்திய தரகுமுதலாளிகளுக்கு இருந்த விரிவாக்க நோக்கம் பாகிஸ்தான் தரகு முதலாளிகளுக்கும் இருந்தது. இவ்விரு சுரண்டல் கூட்டத்தின் ஆக்கிரமிப்பு வெறிதான் காஷ்மீரை பங்கு போடும் போராக மாறி இன்று வரை இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பகையுணர்வை வளர்க்கும் அடிப்படையாக நீடிக்கிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் மேலாதிக்க வெறிதான் 1971-ல் பங்களாதேஷ் பிரிவினை, 1974-ல் இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கிம் இணைப்பு எனத்தொடர்ந்தது. இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்றதும், கொலைகாரன் ராஜபக்சேவுக்கு துணை போவதும் இதற்குத்தான். அண்டை நாடுகள் மீதான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும்தான் மூச்சுவிடாமல் வல்லரசுக் கூச்சலிட்டு போலி தேசிய வெறியை மக்கள் மத்தியில் கிளப்புகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்த பிற்போக்கு சியாங்கேஷேக் ஆட்சி வீழ்த்தப்பட்டு 1949-ல் மாபெரும் மக்கள் சீனக்குடியரசு உருவானது. சிதைந்துபோன உள்நாட்டுப்பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதிலேயே முழு கவனம் செலுத்திய சீன அரசு மிகக்குறுகிய காலத்திலேயே மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது. எல்லா வகையான சுரண்டலும், சமூகக்கேடுகளும் அகற்றப்பட்டன. ‘சீன மக்களின் நேர்மை எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதது. சீன மக்களின் கண்ணியம், அமைதி, மனித இயல்பின் அடிப்படைப் பண்புகள் இவை சீன தேசியத்தன்மை மட்டுமல்ல; புரட்சியால் ஏற்பட்ட மாற்றங்களுமாகும். சோசலிசம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இதோ ஒரு சாட்சி சீனா’ என 1957-ல் சீனாவுக்குப்பயணம் செய்த அறிஞர் டி.டி கோசம்பி சீனப்புரட்சி பற்றிய கட்டுரையில் எழுதினார்.

china-india-nathulaசீனப்புரட்சியின் சாதனைகள் உலகம் முழுவதுமுள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் ஊக்கத்தையளித்தது. அதே நேரத்தில் ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளான அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது. கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதற்கு சர்வாதிகாரிகளுக்கு உதவுவது என்பதை அமெரிக்கா தனது கொள்கையாகவே பிரகடனம் செய்தது. எனவே சீனாவை எப்போதும் போர்ச்சூழலில் இருத்துவதற்கு அமெரிக்கா ஏராளமான சதிவேலைகளை அரங்கேற்றத்தொடங்கியது. உதட்டில் சோசலிசத்தை உச்சரித்த நேரு செயலில் அமெரிக்காவின் கைப்பாவையாக சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவது, கம்யூனிஸ்டுக்கட்சியை தடை செய்வது என கம்யூனிஸ்டு எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வடமேற்கு, வடகிழக்கு எல்லையில் சீனாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் நேரு. எல்லைப் பிரச்சனையை பேச்சு வார்த்தையில் தீர்த்துக் கொள்ள சீனப்பிரதமர் சூயென்லாய் எடுத்த முன்முயற்சிகளை நேரு நிராகரித்தார். ஆனால் இதே கால கட்டத்தில் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மியான்மர் (அன்று பர்மா) ஆகிய எல்லா அண்டை நாடுகளுடனும் எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்த்துக்கொண்டது சீனா. 1962 அக்டோபர், நவம்பரில் நடந்த போரில் இந்தியா அவமானகரமாகத் தோற்றது. உலகமே வியக்கும் வண்னம் சீனா ஒருதரப்பாகப் போர்நிறுத்தம் அறிவித்து எல்லையிலிருந்து பனிரெண்டு மைல் பின்வாங்கிச்சென்றது.

கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை இறுதிவரை மூர்க்கமாக நடத்திய பிரிட்டிஷ் எழுத்தாளர் பெர்னாட்ஷா ‘வெற்றிபெற்று முன்னேறிய இராணுவம், தானே போரை நிறுத்திய வேறொரு உதாரணத்தை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. சீனர்கள் நியாயமாகவும், தன்னடக்கமாகவும் நடந்து கொண்டனர். நான் வியப்புக்குள்ளாதைப் போலவே உலகமும் வியப்புக்குள்ளானது. ஏனெனில் போர் தவிர்க்கப்பட வேண்டும் என்ற தெளிவான வலுவான நோக்கத்திற்காக தாம் கஷ்டப்பட்டு தியாகம் செய்து பெற்ற வெற்றியை தியாகம் செய்யும் உன்னத நடவடிக்கையினை சீனர்கள் மேற்கொண்டனர்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அன்று குடியரசுத்தலைவராக இருந்த இராதாகிருஷ்ணன் நேருவின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். ‘சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சூயென்லாய் முன்வைத்த யோசனைதான் இரு நாடுகளுக்கும் நல்லது ’ என இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலாளராக இருந்த கேபிஎஸ் மேனன் குறிப்பிட்டார். இப்படி வம்படியாக இந்தியாதான் சீனா மீது போர் தொடுத்தது என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் நக்சல்பாரிப் புரட்சியாளர் பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ்.

சீனப்போர் முடிந்தபிறகு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுக்கூட்டத்தில் பேசிய நேரு ‘சீனாவுடனான பிரச்சனை வெறும் பிரதேசம் தொடர்பான பிரச்சனை என்பதற்கு அப்பால் கூடுதலான விஷயங்கள் உள்ளன’ என்றார். அந்தக்கூடுதலான விஷயங்கள் என்ன என்பதை இந்திராகாந்தி வெளிப்படையாக உடைத்தார். ‘சீனப்பிரச்சனை பிரதேசத்திற்கானது அல்ல, ஆனால் சித்தாந்த ரீதியிலானது, அரசியல் ரீதியானது’ என்றார் இந்திரா. எனவே கம்யூனிசத்தை ஒழிக்கவும், சீனாவை முடக்கவும் ஏகாதிபத்திய முதலாளிகளின் கைக்கூலியாக நின்று நடத்தியதுதான் நேருவின் சீனப்போர். இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டுத்தான் சீனாவை எதிரியாகச் சித்தரித்தனர்.

china-india-armyமாவோ மறைவிற்கு பின் 1980-களில் டெங் கும்பல் முதலாளித்துவப் பாதையைப் புகுத்தியது. இன்று முற்று முழுதான முதலாளித்துவ நாடாக சீனா சீரழிந்த நிலையில் எந்தத் தரகு முதலாளிகளுக்காக சீனாவை எதிரி என்று பிரச்சாரம் செய்தார்களோ அதே சீனாவில் இன்று டாடா, டிவிஎஸ் என சுமார் அறுபது முதலாளிகள் மூலதனமிட்டு தொழில் நடத்துகின்றனர். அண்மையில் இந்தியா வந்த சீனப்பிரதமர் லீ கெகியாங் அடுத்த மூன்று ஆண்டுகளில் முன்னூறு சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவிருப்பதாகவும், இந்திய சீன வர்த்தகம் 55 இலட்சம் கோடியாக உயரும் எனவும் கூறியிருக்கிறார். தூரத்தில் இருக்கும் உறவுக்காரரை விட அண்டை வீட்டுக்காரனே அதிகம் உதவுவான் என்று சீனப்பழமொழியை எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்று இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளி சீனாதான். அதே போல பாகிஸ்தான் பரமவிரோதி என்று கூப்பாடு போடப்படும் நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் அதிகரித்திருக்கின்றன. உதாரணத்திற்கு கச்சா பருத்தி ஏற்றுமதி மட்டும் கடந்த ஆண்டில் 313% உயர்ந்திருக்கிறது. அதேபோல பாகிஸ்தான் பங்குச்சந்தையில் இந்திய முதலீடும் உயர்ந்திருக்கிறது.

முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். மூலதனத்திற்கும், சுரண்டலுக்கும் கம்யூனிசம்தான் எதிரி. எனவே தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையை மூடிமறைக்கவும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, கடும் ஏற்றத்தாழ்வு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பவும், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கவும் சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் மூச்சுவிடாமல் பிரச்சாரம் செய்கின்றன. இந்த உண்மைகளையும், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி மோசடிகளையும் அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை உயிர்மூச்சாகக் கொண்டு வெளிவரும் நமது புதிய ஜனநாயகம் இதழைப் போர் ஆயுதமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியது நமது இன்றைய கடமை.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி :
பு.ஜ முகவர்,  திருச்சி