privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவில் கடைகள் - மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

-

மிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களுக்கும் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இனி ஆலயங்களுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது. மேலும் இந்து சமய வளர்ச்சிக்கு சம்பந்தப்படாத கொள்கையுடையவர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் கோவில் வளாகங்களில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்மேலும் இந்துக் கோவில்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர்களை விமர்சித்து பேசுவது அவர்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும், அப்படி பேச விரும்புவோர் பிற அரசு நிலங்களிலோ அல்லது தனியார் இடங்களிலோ கூடிப் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தின் கொரடச்சேரிக்கு அருகில் கண்கொடுத்த வனிதம் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்றில் தி.க. தலைவர் வீரமணி தலைமையில் திராவிட விவசாயிகள் மற்றும் பகுத்தறிவு குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நாத்திக கருத்துகள் பேசப்பட்டதாகவும், இதனால் மனம் புண்பட்டுவிட்ட உள்ளூர் மக்களின் சார்பாக முதல்வருக்கு இந்துமத வெறியர்கள் ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் என்ற பெயரில் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதனை ஏற்று ஜெயலலிதா இந்த உத்திரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த திருமண மண்டபங்களில் நடக்கும் விழாக்களில் மது, மாமிசம் போன்றவற்றை பரிமாறக் கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏறத்தாழ 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரக்கூடிய கோவில்களின் எண்ணிக்கை மட்டும் 234. பெரும்பாலும் இக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளன. இவற்றில் வருமானம் கோடிகளைத் தாண்டும் பெருங்கோவில்கள் பல உள்ளன. கோவிலுக்கு சொந்தமான பல வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான இடங்கள் நீண்ட கால குத்தகைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை நகரின் மையப்பகுதிகளில் உள்ள மயிலாப்பூர் பார்த்தசாரதி மற்றும் கபாலீசுவரர் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாகேஸ்வர ராவ்-க்கு சொந்தமான அமிர்தாஞ்சன் கம்பெனி, மயிலாப்பூர் கிளப், பாரதிய வித்யா பவன் மற்றும் பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் பள்ளி போன்ற பார்ப்பன முதலைகள் பலரும் பல பத்தாண்டுகளாக வாடகை சல்லிப்பைசா தராமல் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களாகும். சிதம்பரம் தீட்சிதர்களோ தில்லை நடராசனின் விளைநிலங்களை சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் பார்க்காமல் பல ஏக்கர்களை பிளாட்டுகளாக தங்கள் பெயருக்கு மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

ஜெயேந்திரன்

இப்போதும் கோவில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு செய்த போது முறையான வாடகைகள் அரசுக்கு வந்து சேரவில்லை என்பது தெரிய வந்ததுடன், கோவில் சொத்துக்களை பார்ப்பன மற்றும் ‘உயர்’சாதி தர்மகர்த்தாக்கள் திருடி விற்றதும் தெரிய வந்துள்ளது. திருடியவர்கள் அனைவருமே ஆத்திகர்கள்தான். தற்போது இந்தக் கொள்ளையில் பிற ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் திடீர் பணக்கார ரவுடிகளும் இணைந்துள்ளனர்.

சொத்துக்களை கைப்பற்றுவதற்காக திருவாடுதுறை ஆதினத்தில் பெரிய ஆதீனம் மீது சின்ன ஆதீனம் நடத்திய கொலை முயற்சி, காஞ்சி சங்கராச்சாரிகளின் பாலியல் முறைகேடுகள், கொலைகள், ஊழல்கள் போன்றன சந்தி சிரித்து நாறுகின்றன. மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவும் இதில் லேட்டஸ்டு வரவுகள். தங்களது வருமானம் போய்விடும் என்று தெரிந்தவுடன் சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைப்பதை எதிர்த்து தீட்சித பக்தர்கள் தீவிரமாக போராடியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக பார்க்க முடிந்தது. அதே தீட்சிதர்கள் பக்தன் தட்டில் போடும் காசுக்கேற்ப தீபாராதனையையும், திருநீற்றையும் சுருக்கியதைப் பார்த்து எந்த பக்தனின் மனமும் சுருங்கவில்லையே. அது ஏன்?

மக்கள் ஓரளவு கல்வியறிவும், விபரமும் பெற்றுள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு தூரம் ஆண்டவன் சொத்தை ஆட்டையைப் போடும் பார்ப்பனீய ‘உயர்’சாதி இந்துக்கள் 100 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள். இப்படி தமிழக கோவில்களை அறங்காவலர்கள் என்ற பெயரில் இவர்கள் சுருட்டிய ஊழல்கள் வந்து நாறவே இதனை கட்டுப்படுத்த முயன்ற ஜஸ்டிஸ் கட்சியின் பனகல் அரசரது ஆட்சியில் 1924-ல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இந்துக் கோவில்களை பராமரிப்பது மற்றும் அதன் வருமானம், கணக்கு வழக்குகளை முறையாக நிர்வகிப்பது போன்றவை அதன் பணிகளாகும்.

பெரியார்

இந்து அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகு ஆலயங்களை பராமரிப்பது முறையாக நடைபெற்றது. இறைவனின் பெயரால் முறைகேடான தரிசனங்கள் மற்றும் அர்ச்சனைகளுக்காக பார்ப்பனர்களால் அதுவரை வசூலிக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. ஏழை பக்தனும் பெரிய ஆலயங்களுக்குள் செல்வதும், சமமான முறையில் இறைவனிடம் வழிபடுவதும் சாத்தியமானது.

இன்றோ இந்து அறநிலையத் துறை ஆர்.எஸ்.எஸ்-ன் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தின் கடைகளுக்கு வரும் ஒவ்வொருவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதை நிரூபித்தால் தான் உள்ளே வரலாம் எனில் அது சர்வாதிகார நடைமுறை அல்லவா?  கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடத்தும் பொது நிகழ்ச்சியையும் தடை செய்வது அடிப்படை ஜனநாயக உரிமைக்கும், மதச்சார்பற்ற அரசு என்பதற்கும் எதிரானதல்லவா?  கோவில் சொத்து கொள்ளையை அம்பலப்படுத்த முன்வருபவனை நாத்திகன் என்று முத்திரை குத்தி விட்டாலே கொள்ளையடிப்பது எளிதாகி விடும் இல்லையா?

கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் பக்தனின் பக்தியை விட நேர்மையாக நடந்து கொள்ளும் நாத்திகன் பேசும் இறை மறுப்பு கொள்கை யோக்கியமானதில்லையா? என்பதை நேர்மையான பக்தர்கள் தான் பரிசீலிக்க வேண்டும். பழனி முருகனின் நவபாஷண பின்புறத்தை ஒட்டச் சுரண்டியதும் அர்ச்சகர்களாக இருந்த பார்ப்பன பக்தர்கள் தானே.  அரசு கண்காணிப்பில் இருக்கையிலே திருடும் இவர்கள் இந்து முன்னணி கோருவது போல ஒரு சுயேச்சையான இந்து நிர்வாகத்தின் கீழ் வரும்பட்சத்தில் எப்படியெல்லாம் திருடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நீசபாஷை எனச் சொல்லியே தேவாரம் கண்டெடுத்த தில்லை நடராசனின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரத்தை பாட விடாமல் தடுத்த பார்ப்பனக் கும்பலை விரட்டி தேவாரம் பாட வழிவகுத்தவர்கள் நாத்திகர்கள்தான். அதே கோவிலின் உட்பிரகாரங்களில இரவு நேரங்களில் சீட்டாட்டம், சாராயம், பெண்கள் என அரங்கேற்றியவர்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்த தீட்சித பக்தர்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரி முதல் தேவநாதன் வரை அனைவருமே கருவறையை பள்ளியறையாக, பார் ஆக மாற்ற எள்ளளவும் பயப்படாதவர்கள். இதைவிட கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடக்கும் மாமிச விருந்து எந்த வகையில் மோசமானது. கண்ணப்ப நாயனார் தந்த பன்றி மாமிசத்தை புசித்தவர்தானே சிவபெருமான் என்பதையும் பக்தர்கள் சிறிது யோசிக்க வேண்டும்.

முந்தைய ஜெயா ஆட்சியில் கிடா வெட்டு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு, கடுமையான எதிர்ப்புகள் வரவே அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது. இப்போது அதையே மெதுவாகவும், நாசூக்காகவும் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார் ஜெயா. சாதி எதிர்ப்பாளர்களின், பகுத்தறிவாளர்களின், முற்போக்காளர்களின், பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் கூட்டம் கூடும் உரிமையை இந்த உத்திரவு பறிக்கிறது. தங்களுக்கு பிடிக்காதவர்களை அதிகாரிகளும், இந்துமத வெறியர்களும் இணைந்து நாத்திக முத்திரை குத்துவதும் இந்த உத்திரவு மூலம் எளிதானதாக மாறுகிறது. அந்த வகையில் கோவிலில் நடக்கும் கொள்ளைகளைப் பற்றி முன்னர் அஞ்சலட்டை மூலமாக பெட்டிஷன் போட்ட சங்கர் ராமன் போன்றவர்களை இனிமேல் சங்கராச்சாரி ஆள் வைத்து கொன்றெல்லாம் சிறைக்கு போக வேண்டிய அவசியமில்லை. சங்கர ராமனை நாத்திகன் என நிரூபித்தாலே சங்கராச்சாரிக்கு போதுமானது.

சங்கராச்சாரி, தேவநாதன்
கருவறை பள்ளியறையாக – சங்கராச்சாரி, தேவநாதன்

இந்து அறநிலையத் துறையானது மறுமணத்தை கோவில்களில் நடத்த அனுமதிப்பதில்லை. கோவில்களில் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழிபடுவதற்கு ஏகப்பட்ட சிறப்பு முன் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. கலைச் சிற்பங்களை ஆராய வரும் ஆய்வு மாணவர்களோ அல்லது கலை ரசிகர்களோ இனி தங்களை இந்துக்கள் என நிரூபித்தாக வேண்டி வரும். பல இந்துக் கோவில்கள் பௌத்த, சமண வழிபாட்டுத்தலங்களை கைப்பற்றி மாற்றப்பட்டதுதான் என்பது போன்ற ஆய்வுகளை இந்துமத வெறியர்கள் போலவே பாசிச ஜெயா அரசும் விரும்பவில்லை. இனி அந்த ஆய்வுகளுக்கெல்லாம் இடமில்லை.

ஏற்கெனவே இந்துசமய அறநிலையத் துறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது அவர்கள் நாத்திகர்களாக இருக்க கூடாது என்றும், பிற மதங்களை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது என்றும் விதி இருக்கிறது. ஆனால் தற்போது ஆலயங்களுக்கு சொந்தமான வேறு இடங்களில் இருக்கும் கடையை வாடகைக்கு எடுப்பவரின் பக்தியின்மை எப்படி அங்கு சரக்கு வாங்க வரும் பக்தனின் மன உணர்வை புண்படுத்தும் என்பதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் விளக்கவில்லை. வாங்கும் சரக்கு தரமாகவும், விலை மலிவாகவும் இருக்கிறதா என்றுதான் யாரும் பார்க்க முடியுமே தவிர, கடைக்காரன் நாத்திகனா, கிறிஸ்தவனா என்றெல்லாம் பார்த்து யாரும் சரக்கு வாங்குவதில்லை.

அதே போல கிறிஸ்தவ, முசுலீம் வியாபாரிகள் யாரும் தாங்கள் இந்து மதத்தை சாராதவர்கள் என்பதற்காக கோவிலுக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தருவதற்கு மறுப்பதில்லை. அதே போல கோவில் நிலங்களில் பயிர்செய்யும் விவசாயி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அது எந்த வகையில் பக்தனின் மன உணர்வை பாதிக்கும் எனத் தெரியவில்லை. அப்படி விளைந்து வருவதை பக்தர்கள் யாரும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறிக்கொண்டு இருக்க முடியாது.

ஆறுமுகச் சாமி
தில்லையில் தமிழில் பாட போராட்டம் – ஆறுமுகச் சாமி

எனவே கோவில் சொத்துக்களை ஏப்பம் விட்ட பார்ப்பன வியாபாரிகளை, நில அபகரிப்பு முதலைகளை காப்பாற்றவும், இனி தங்களில் ஒருவரே இதனை ஏப்பம் விடவும் பார்ப்பன பாசிச ஜெயாவும், இந்துமத வெறியர்களும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது. கோவில் கொள்ளைக்கு மட்டுமின்றி பாஜக அடுத்த தேர்தலின் மூலம் நாட்டை கொள்ளை போடவும், தனது பாசிச கூட்டாளி மோடியை முன்னிறுத்தவும், தான் பேரம் பேசவும் ஜெயாவுக்கு இந்தக் கூட்டணி உதவும்

இந்து மத வளர்ச்சிக்கு உதவுவது என்ற அரசின் நோக்கம் மதச்சார்பற்ற அரசு என்ற அதன் சொல்லிக் கொள்ளும் வடிவத்துக்கு எதிரானது. இப் பிரச்சினை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள கி.வீரமணி, சார்வாகம் போன்றவற்றை பின்பற்றிய பழைய நாத்திகர்கள் ராமனுக்கு மந்திரியாக இருந்தார்கள் என்றும், நாத்திகம் என்பது இந்து மதம் ஏற்றுக் கொண்ட ஒன்றே என்றும் கூறியுள்ளார். அதாவது இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவரும், இல்லாதவரும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சுயமரியாதை திருமணச் சட்டமே இந்து சமய திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தம்தான் என்பதையும் கூறி,  ஆகவே கோவில் திருமண மண்டபங்களில் தங்களையும், சுயமரியாதை திருமணங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வீரமணி சொல்வது போல நாத்திகமும் இந்து மதத்தின் அங்கம் எனக் கூறி உரிமை கோருவது மதம் மற்றும் அரசை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது. அல்லது நாத்திகம் பேசுபவர்களெல்லாம் இந்துக்கள் என்று அவர்களது அணியில் சேருவதற்கு வழி செய்கிறது. கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயகக் உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

கருவறைக்குள் சூத்திரன் வந்தால் தீட்டு என்று கூறும் பார்ப்பனீய இந்துமதம் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 206 சூத்திர மாணவர்களை சாதித் தீண்டாமையின் பெயரால் கோவிலுக்கு வெளியே நிறுத்தியிருக்கிறது. மரபு என்ற பெயரில் உச்சநீதி மன்றம் வரை அதை நியாயப்படுத்துகிறது. பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராடிய காரணத்தால் இனி அந்த அர்ச்சக மாணவர்களும் நாத்திகர்களாகத்தான் அறிவிக்கப்படுவார்களோ?

ஏதாவது கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு இனி இந்து போலிசார்தான் வரவேண்டும் என்று விதியை மாற்ற முடியுமா? இல்லை அம்மாவட்டத்திற்கு ஒரு எஸ் பி முசுலீமாக இருந்துவிட்டால் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? கடவுளுக்கு வெட்டியாக செய்யப்படும் அபிஷேகத்திற்கு வரும் பாலை கறந்தவர்களில் நாத்திகர்கள் யார், ஆத்திகர்கள் யார் என்று பிரித்தறிய முடியுமா? கோவில் கட்டிடங்களை பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கும் இந்த அளவு கோல் பொருந்துமா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமை துவங்கி பெண்களின் சம உரிமை வரை நாத்திகர்கள் பலர் போராடியிருக்கிறார்கள். பெரியாரது இயக்கம், கம்யூனிச இயக்கமின்றி இன்றைய தமிழகத்தில் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எந்த உரிமையும் கிடைத்திருக்காது. அந்த வகையிலும் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்காக போராடி உரிமை வாங்கிக் கொடுத்தவர்கள் நாத்திகர்கள்தான்.

எனவே அறநிலையத்துறை அறிவித்திருக்கும் இந்த இந்துமதவெறி உத்திரவை ரத்து செய்வதற்கு நாம் போராட வேண்டும்.

– வசந்தன்.

மேலும் படிக்க