Wednesday, May 7, 2025
முகப்புசெய்திஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்

ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
கைபேசி 94432 60164

நாள் : 20-11-13

வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,

அன்புடையீர் வணக்கம்,

தங்களின் மேலான கவனத்திற்கு,

ஆதார் அட்டைக்கு எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையமும் வேறு சிலரும் தொடுத்த வழக்கில் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அரசு மான்யங்கள் எதற்கும் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்திரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு இந்த இடைக்கால உத்திரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திலும் வேறு சில இடங்களிலும் கேஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, பள்ளி மாணவர்களிடம் ஆதார் அட்டை எண் கேட்டு நிர்பந்திக்கிறார்கள்.

இந்த வழக்கில் “ஆதார் அட்டை என்பது கட்டாயமில்லை. விரும்பியவர்கள் எடுக்கலாம். மக்கள் நலத்திட்டங்களுக்கோ வங்கி கணக்குகளுக்கோ வேறு எதற்குமோ கட்டாயமில்லை என நாங்கள் தொடுத்த வழக்கில் தனது எதிர் வாதுரையில் மத்திய அரசும், ஆதார் நிறுவனமும் கூறியுள்ளது.” ஆனால் சதித்தனமாக மத்திய அரசு ஆதாரை குறுக்கு வழியில் மக்களிடம் திணிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். இவ்வாறு கேட்கும் இடங்களில் அவற்றை எழுத்து மூலமாக வாங்கி எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடுக்கிறோம்.

ஆதார் அட்டையின் அபாயத்தை பற்றி புரிந்து கொள்ளாத மக்கள் மத்திய அரசின் இந்த இரட்டை வேடத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.

அரிசி, சக்கரை, பருப்பு, மண்ணெண்ணெய், சிலிண்டர், கல்வி கட்டணம், மின்கட்டணம் போன்ற அனைத்து அரசு மான்யங்களும் பொருளாக கொடுத்தால் தான் மக்களுக்கு சரியாக போய் சேரும். வங்கியில் பணமாக கொடுத்தால் கந்து வட்டிக்காரனுக்கும் டாஸ்மாக் கடைக்கும் தான் போகும்.

  • உங்கள் பணம் உங்கள் கையில், மத்திய அரசு போட்டால்தான் வரும். போடா விட்டால்?
  • ஆதார் என்பது குடி மக்கள் அனைவரையும் கிரிமினல்களாக கருதி வேவு பார்த்து ஒடுக்கும் முயற்சி
  • ஆதார் என்பது அரசு மான்யங்களை வெட்டுவதற்கான முன் ஏற்பாடு
  • ஆதார் என்பது போராடும் அனைவரையும் அடையாளம் கண்டு நசுக்குவதற்கான முயற்சி
  • ஆதார் என்பது மையப்படுத்த பட்ட சுரண்டல் மற்றும் கண்காணிப்புக்கான ஆயுதம்.

என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

23-9-2013 அன்று ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றம் உத்தரவின் நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.

எங்கள் அமைப்பின் சார்பில் மக்களின் அச்சத்தை போக்க சுவரொட்டி அடித்து ஒட்டி வருகிறோம் . தங்கள் பகுதியிலும் இதே வாசகத்தை பயன்படுத்தி சுவரொட்டி ஒட்டுவதற்கு முயற்சிக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு

உச்சநீதிமன்ற உத்தரவு நகல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

சுவரொட்டி

சுவரொட்டி