privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

-

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆதார் அட்டை கேட்டு நீதிமன்ற அவமதிப்பு செய்யும் நிறுவனங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கோரிக்கைப் பேரணி – மனு அளிப்பு !

“ஆதார் – மக்களின் அதிகாரம்; ஊழலை ஒழிக்கும் வழி; உங்கள் பணம் உங்கள் கையில்”, என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது மத்திய அரசு. ஆதார் அட்டை பெறுவதற்கு மக்கள் தங்கள் புகைப்படம், கைரேகை, கருவிழி படம் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆதார் அட்டை இருந்தால்தான் அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, பள்ளி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து அரசு மானியங்களும் உரியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், பெயர், முகவரியுடன் குற்றவாளிகளின் அங்கமச்ச அடையாளங்கள் மற்றும் புகைப்படத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளும் போலீசைப் போல, ஒவ்வொரு குடிமகனின் புகைப்படம், இரு கைரேகைகள், கை அமைப்பு, விழிப்பாவை, முக அமைப்பு, குரல் போன்ற தனித்துவம் வாய்ந்த அடையாளங்களை அளந்து (Bio-metric) பதிவு செய்து, அவற்றைக் கணினியால் அடையாளம் காணத்தக்க தரவுகளாக மாற்றித் தொகுத்து வைப்பதே ஆதார். ஆதார் என்பது மக்களின் கையில் அளிக்கப்பட்டிருக்கும் அட்டை அல்ல. சங்கேத எண்களில் விண்ணில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குடிமக்களின் அடையாளம்.

ஒரு குடிமகனின் அடையாளத்திற்கான நிரூபணமாக ரேசன் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற சுமார் 15 ஏற்பாடுகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் போது, பயோமெட்ரிக் அட்டைக்கான அவசியம் என்ன? மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும். அந்த வகையில் ஆதார் அடையாள அட்டை அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது, கருவிழி கைரேகை எடுப்பது தனிநபர் சுதந்திரம், சமத்துவத்திற்கு எதிரானது.

அது மட்டுமின்றி, ஆதார், நாட்கிரிட், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், “இ.பேமென்ட் சிஸ்டம்” போன்ற பலவும் உலக வங்கியின் மின்னணுவியல் நிர்வாகத்துடனும், நேட்டோவின் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெருமளவில் மக்கள் கொந்தளிப்புகளைச் சந்தித்து வரும் கிரீஸ், எகிப்து மற்றும் அமெரிக்க வெறுப்பில் குமுறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டை விவரங்கள், அமெரிக்க அரசிடம் கையளிக்கப்பட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, ஆதார் என்பது அமெரிக்கக் கண்காணிப்புக்கு இந்தியக் குடிமக்களை ஒப்புக் கொடுக்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையாகும். ( பார்க்க: புதிய ஜனநாயகம், நவம்பர் 2013)

மையப்படுத்தப்பட்ட சுரண்டல் மற்றும் கண்காணிப்புக்கான ஆயுதம் என்ற காரணத்தால் அதற்கெதிராக நாமும் வேறு சிலரும் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 23.09.2013-ம் தேதியன்று கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எதற்கும் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இருப்பினும் திருச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர், வங்கிக் கணக்கு, பள்ளி மாணவர்களிடம் ஆதார் அட்டை எண் கேட்டு நிர்ப்பந்திக்கிறார்கள். ஆதாரை குறுக்கு வழியில் மக்களிடம் திணிக்க சதித்தனமாக முயற்சிக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அதனை அறிவித்து திருச்சி நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டினோம். சுவரொட்டிகளை ஒட்டும் போதே மக்கள், “நல்ல காரியம் செய்தீர்கள். போஸ்டரை அங்கே ஒட்டுங்கள். இங்கே ஒட்டுங்கள்”, என்று நமக்கு இடம் காட்டி பேராதரவு தந்தார்கள். இது வரை 80-க்கு மேற்பட்டோர் நம்மை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் ஆதாரை ஏன் அரசு திணிக்கிறது என்பதை விளக்கி உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலையும் கொடுத்தோம். கேஸ் நிறுவனங்களிடமும், பள்ளிகளிலும் உச்சநீதிமன்ற உத்தரவை காட்டி பின்பற்ற சொன்ன போது அந்நிறுவன அதிகாரிகள் சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.

கொந்தளித்த மக்களை ஆதாருக்கு எதிரான போராட்டத்திற்கு அணிதிரட்டினோம். 16.12.2013-ம் தேதி காலை 10 மணிக்கு பொதுமக்களும் மாணவர்களும், அரசு ஊழியர்களும், தோழர்களும் என 200-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வாசலில் கூடியவுடன் வந்து வினவிய போலீசாரிடம் நமது கோரிக்கையை விளக்கினோம். “எங்க குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எண் கேட்டு ஸ்கூல்ல டார்ச்சர் பண்ணுறனுங்க, நாங்க கேள்வி கூட கேக்க முடியல, நீங்களாவது கேளுங்க” என்று கூறினார்கள்.

வழக்கறிஞர்கள் முன்னால் செல்ல விண்ணதிரும் முழக்கங்களுடன் அணி வகுத்த பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ-யிடம் நாம் கோரிக்கை மனு அளித்தோம். அதில், “நாங்கள் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாதென்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றமே ஆதார் தேவையில்லை யென்று உத்தரவிட்ட பின்னரும் சில நிறுவனங்களில் கட்டாயப்படுத்துகின்றனர். நீங்கள் புதிதாக உத்தரவு எதுவும் போடத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி எந்த நிறுவனமும் ஆதார் எண் கேட்கக்கூடாது என்றும் அதை மதிக்காமல் ஆதார் அட்டை கேட்டு மக்களை வதைக்கும் நிறுவன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்த சுற்றறிக்கைப் பற்றி பத்திரிக்கையிலும் டி.வியிலும் நீங்களே அறிவியுங்கள்”, என்று கோரினோம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுகின்றவர்கள் பற்றி குறிப்பாக கூறும்படி கேட்ட கலெக்டரிடம் நம்முடன் வந்த மக்கள் சில பள்ளிகளையும், கேஸ் நிறுவனங்களையும் குறிப்பிட்டார்கள்.

எதிரில் அமர்ந்திருந்த முதன்மை மாவட்ட கல்வி அலுவலரை அழைத்த கலெக்டர், “ஆதார் அட்டை கேட்கக் கூடாதென்று ஏற்கனவே நான் உத்தரவிட்டானா, இல்லையா? இனிமேல் எந்த பள்ளியிலாவது ஆதார் அட்டை கேட்டால் உங்களை தொலைத்து விடுவேன்”என்று மிரட்டினார். முதன்மை கல்வி அலுவலரும், “அப்படியே ஆகட்டும் அம்மா”, என்று பம்மினார்.

பின்னர் கேஸ் நிறுவனங்களையும் அழைத்து உத்தரவிட வேண்டுமென்று நாம் கோரியவுடன் கலெக்டர், “கேஸ் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே என்னால் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. நீங்கள் அவர்களுக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுங்கள்”, என்று நமக்கு ஐடியா கொடுத்தார். நாம் அவரிடம், “இந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதி என்ற வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவோரை தடுக்கும் அதிகாரம் கலெக்டராகிய உங்களுக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டிய போது, “அரசின் ஒரு துறை மீது அரசு அதிகாரியான நான் நடவடிக்கை எடுப்பது எளிதில்லை. என்னால் இயன்றவரை செய்கிறேன். என் கைகள் கட்டப்பட்டுள்ளது.”என்று நழுவினார். “நாங்கள் கொடுக்க வேண்டிய மனுவை கொடுத்துவிட்டோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் களத்தில் எழும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்”, என்று கூறி எச்சரித்து வந்தோம்.

“ஆதார் வாங்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் 408 ரூபாய். வாங்கியவருக்கு கேஸ் சிலிண்டர் 1080 ரூபாய்”, என்று அச்சிட்ட முழக்க அட்டையை ஜெராக்ஸ் எடுக்க நாம் சென்றோம். அதனைப் படித்த ஜெராக்ஸ் எடுக்கும் பெண், “ஏங்க நான் ஆதார் அட்டை வாங்கி கேஸ் கம்பெனியில கொடுத்துட்டேனே, எனக்கு கேஸ் சிலிண்டர் இனிமேல் 1080 ரூபாயா? ஆதார் அட்டையும் வாங்கி பணமும் அதிகமாக தருகிறேனே, அரசாங்கம் என்னை லூசாக்கிடுச்சே”, என்று புலம்பினார்.

நம்மிடம் பெற்ற உச்சநீதிமன்ற உத்தரவு நகலை கேஸ் வாங்கும் நிறுவன அதிகாரியிடம் காட்டி பலரும் விவாதித்துள்ளனர். அவ்வாறான சமயத்தில் பொதுமக்களில் ஒருவர் , “சார் எங்களுக்கு வேலையிருக்கு. நீங்க வேற சும்மா பேசி நேரத்தை விணாக்காதீங்க” என்று அரசாங்கத்தின் வக்கீலாக பேசியதை நம்மிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அவரிடம், “ஆதார் பற்றி மட்டுமல்ல, இந்த அரசைப் பற்றியும் அதன் மக்கள் விரோத தன்மை பற்றியும் நம் மக்களுக்கு புரிய வைத்து விட்டால் அவர்களும் நம் போராட்டத்தில் கைகோர்ப்பார்கள் ” என்று நம்பிக்கையூட்டினோம்.

மக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தற்போதே சில கேஸ் ஏஜன்சியில் நாளைக்கு உங்களுக்கு மானியம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல என்று நழுவுகின்றனர். நிர்ப்பந்திப்பதை தவிர்த்துள்ளனர்.

நமது போராட்ட செய்தி அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வந்தது. அத்துடன் இன்றைய தொலைக்காட்சி மற்றும் பண்பலைகளில் ஆதார் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. மக்களில் ஒருவர் கூட ஆதாரை ஆதரிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மக்களிடம் ஏற்படும் இந்த விழிப்புணர்வு வெறுமனே தங்களை வீணாகத் தொல்லை செய்யும் ஆதாருக்கெதிரானதாக மட்டுமில்லாமல் தங்களை உளவறியும் அரசின் பாசிச கொள்கைக்கெதிரானதாகவும் வளரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
PHONE: 94875 15406

முழக்கங்கள்

அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!
ஆதார் அட்டை கட்டாயமென்று
சொல்லுகின்ற அரசுக்கு
எதிராக அணிதிரள்வோம்!

ஆதார் என்பது அதிகாரமல்ல,
மக்களை ஒடுக்கும் ஆயுதம்
மானியத்தை வெட்டுவதற்கு
மத்திய, மாநில அரசுகளின்
முன்னேற்பாடு, கூட்டுசதி

எஸ் பாண்டு ஊழலிலே
2 லட்சம் கோடி ரூபாய்
நிலக்கரி ஊழலிலே
10 லட்சம் கோடி ரூபாய்
சுருட்டிய மன்மோகனே
அமெரிக்க அடிமையே
மானியம் உங்க அப்பன் சொத்தா?

மத்திய அரசே, மாநில அரசே,
கைரேகையும் கண்விழி படமும்
ஏண்டா நாங்க கொடுக்கணும்
நாங்க என்ன உங்களை போல
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக் கூட்ட தலைவர்களா?

மத்திய அரசே, மாநில அரசே,
மாவட்ட ஆட்சித் தலைவரே,
ஆதார் அட்டைக்கு எதிராக
HRPC போட்ட வழக்கில்
கட்டாயம் இல்லையென்று
உச்சநீதிமன்றம் போட்ட
உத்தரவை மதித்து நட

உச்சநீதிமன்றத்தின்
உத்தரவை அவமதிக்கும்
அதிகாரிகளை கைது செய்!

விடமாட்டோம்! விடமாட்டோம்!
மத்திய அரசும் மாநில அரசும்
மக்களை வதைக்க விடமாட்டோம்!
HRPC விடமாட்டோம்!
அங்க மச்சம் அடையாளம்
அதிகாரி கேக்குறான்.
அரசாங்கம் கேக்குறான்.
மக்களை அக்யூஸ்ட் ஆக்குறான்.
மானியத்தை வெட்டப் போறான்.

எதிர்கட்சி, ஆளும் கட்சி
அல்லக் கைகள் எவனுமே,
வாயைக் கூட திறக்கல,
ஏன்னு கேள்வி கேக்கல,
எல்லாக் கூட்டு களவாணியும்
மக்களை வதைக்க விடமாட்டோம்.