மக்கள் மன்றத்தில் தொடர்வோம்!
உலகம் கடவுளுக்குள் அடக்கம்
கடவுள் மந்திரங்களுக்குள் அடக்கம்
மந்திரம் பார்ப்பானுக்குள் அடக்கம்…
இப்படியான நாட்டில்,
நீதிமன்றமும் வாதப்படியா நடக்கும்
வேதப்படியே நடக்கும்!
பீனல் கோடுகள்
பூணூல் கோடுகளுக்குள் அடக்கம்,
உச்சநீதிமன்றம்
தீட்சிதன் முன்குடுமிக்குள் அடக்கம்,
சுப்பிரமணியசாமி பிரிக்கும் காற்றின்
எடைக்கு எடை
தீர்ப்புகள் கிடைக்கும்!
தீட்சித கழிப்பறைகள்
தில்லி வரைக்கும்!
தில்லைவாழ் அந்தணரும்
தில்லிவாழ் அந்தணரும்
ஸ்தலத்தில் வேறு
சிதம்பர ரகசியத்தில் ஒன்று!
சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும்
கோத்திரத்தில் வேறு,
ஆத்திரத்தில் ஒன்று
அதுதான் தமிழினப் பகை!
தமிழாண்டு தை மீது
ஆரியச் சித்திரை திணிப்பு,
தமிழக தொடக்கப் பள்ளிகளில்
ஆங்கில வழி நுழைப்பு,
செம்மொழி நூலகம் அழிப்பு
மெல்ல மெல்ல கோயிலில
அரசு அறநிலையை
பார்ப்பனக் குருக்களின்
பொருள் நிலையாக்க அரிப்பு,
எனும் ஆர்.எஸ்.எஸ் பாம்பின்
கொழுப்பு!
அவாளும் அம்மாவும்
சேர்ந்து வாங்கிய
சிதம்பரம் (கோயில்) தீர்ப்பு!
பொதுச்சொத்து
வழக்கம் போல் ‘பிரம்மதேயமாகிறது‘
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும்
போராடும் நந்தன்களை
வழக்கம்போல வாசல் மறிக்கவும்
‘ஜோதியில்‘ எரிக்கவும்
காத்திருக்கிறார்கள்
உச்சநீதிமன்ற தீட்சிதர்கள்!
வழி மறிக்கும்…
நந்திக்கும், பார்ப்பன தொந்திக்கும்
பணிவதில்லை நந்தன்!
வழக்கம்போல்…
தன்னுடல் திரியாக்கி
தன்மானம் ஒளியாக்கி
உரிமைக்காக
மக்கள் மனதில்
தணலாகிறார்கள் நந்தன்கள்!
இடக்கால் தூக்கிக் காட்டி
களவு போன கொலுசை
இடக்கையால் குறிப்பு காட்டி,
எழுவகை தாண்டவம் ஆடிய
இறைவா,
இனி தீட்சிதத் தாண்டவம்
கண்டு நடுங்கிடாய்…
திருவடியின் கணக்குகாட்டி
மீண்டும் ‘நிவேதனங்கள்‘
‘சுவாகா‘ ஆகலாம்…
சிவகாமி அம்மையின்
சேலை கணக்கு
தீட்சிதன் குவார்ட்டரில் கரையலாம்…
அர்த்தயாம பூஜைக்கு பின்
அவாள் அடிக்கும் கூத்தில்
ஆடல் வல்லானே
அஞ்சி நடுங்கலாம்…
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,
அமைச்சர், நீதிபதிகள் என
அவரவரின் வசூலுக்கும்
வரவேற்புக்கும் ஏற்றபடி
எந்நேரமும் உன்மேல்
பாவத்தின்
பாரமிறங்கலாம்…
உனக்கான உண்டியலை
தனக்கான தட்டாக்கும்
தீட்சித அபிஷேகத்தில்
நீ மூச்சு திணறலாம்…
அனைத்தினும்,
உழைக்கும் மக்களின்
உதடுகள் தழுவிய தமிழை
தடுக்கும் தீட்சித கொடுங்கரந்தன்னில்
அகப்பட்டுக் கொண்டதாய்
கலங்கிட வேண்டாம் நடராச…
மானங்கெட்டவர்க்கு
சுப்பிரமணிய சாமி…
மானம் உள்ளவர்க்கு
ஆறுமுகச்சாமி…
தமிழும், தமிழக மக்களின் உரிமையும்
நின் தில்லையம்பலத்திலே
காட்சி தரும் வாய்ப்பை
கண்ணுறுவாய் நீயும்…
எரித்து சாம்பலாக்க
இனி நந்தனின் வாரிசுகள்
நாயன்மார்கள் அல்ல,
நக்சல்பாரிகள்!
எதிர்த்துப் போராடி
இயற்பகை முடிப்பார்கள்!
– துரை.சண்முகம்