privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேசம், தேசபக்தி... அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!

தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!

-

ளுங்கட்சியும், அதிகார வர்க்கமும் தமது தவறுகளை யாரும் கேள்வி கேட்க முடியாதபடி மூடி மறைத்துக் கொள்வதற்கு, தமது அத்துமீறல்களை நியாயப்படுத்துவதற்கு தேச பக்தி, தேச பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற பித்தலாட்டத்தனமான கருத்தாக்கத்தை முன்வைப்பதைத் தற்காலத்தில் பல வழக்குகளில் நாம் காண முடியும். இராணுவம், போலீசு துறைகளில் நடக்கும் ஊழல்களையோ, மோசடிகளையோ, போலி மோதல் கொலைகளையோ கேள்வி கேட்பது தேசத்தின் பாதுகாப்பையே கேள்வி கேட்பதாக மிகைப்படுத்தப்பட்டு வாயடைக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளையோ, நீதிபதிகளின் நடத்தையையோ கேள்வி கேட்கமுடியாதபடி, அவற்றுக்கு ஒரு புனிதம் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ற வாய்ப்பூட்டுச் சட்டத்தை நீதிபதிகள் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். நாட்டின் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்களைக் கேள்விகேட்டால் தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவன், நக்சலைட்டு என்ற முத்திரையைக் குத்திவிடத் தேசபக்த மோசடியாளர்கள் தயங்குவதில்லை. இந்த இந்திய தேசியம் என்பதே அடிப்படையில் மோசடியானது. நியாயமான, தர்க்கபூர்வ அறிவின் இடத்தை இந்த தேச பக்தி மோசடி கருத்துக்கள் ஆக்கிரமித்து வருவதை எடுத்துக்காட்டும் இன்னொரு சான்றுதான் தேவயானி விவகாரம்.

தேவயானி கோப்ரகடே
மோசடி கிரிமினல் குற்றமிழைத்திருக்கும் தூதரக அதிகாரி தேவயானி, புதுதில்லி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்படுகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றி வந்த தேவயானி அமெரிக்க போலீசால் கைது செயப்பட்டு, போலீசு நிலையக் கொட்டடியில் ஆடை களையப்பட்டுச் சோதனையிடப்பட்டதை இந்திய நாட்டிற்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாக ஊதிப் பெருக்கியதன் மூலம், சதியில் சிக்க வைக்கப்பட்டவராக, குற்றமற்றவராக தேவயானி நம் முன்னே நிறுத்தப்படுகிறார். இந்தப் பிரச்சினையை “இந்தியா எதிர் அமெரிக்கா” என்றவாறு முன்நிறுத்தியதன் மூலம், தேவயானி செய்திருக்கும் சட்டவிரோத மோசடிகளும் அவர் தனது (முன்னாள்) வீட்டுப் பணியாளர் சங்கீதாவிற்கு இழைத்த அநீதிகளும் இந்திய மக்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியாதபடி மூடிமறைக்கப்படுகின்றன. இந்த தேசபக்தி நாடகத்தின் இன்னொருபுறத்தில் தேவயானியால் பாதிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சங்கீதா, தேவயானி மீது அமெரிக்க போலீசிடம் புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காகப் பேராசையும் கிரிமினல்புத்தியும் கொண்ட சதிகாரியாக, திருடி யாக, சி.ஐ.ஏ. உளவாளியாக மக்களிடம் காட்டப்படுகிறார்.

தேவயானி தன்னுடன் சங்கீதாவை அமெரிக்காவிற்குக் கூட்டிச் செல்ல விசா பெறுவதற்காக, “அந்நாடு வீட்டு வேலையாட்களுக்கு வரையறுத்துள்ள குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி சங்கீதாவிற்கு மாதமொன்றுக்கு 4,500 அமெரிக்க டாலர்கள் சம்பளம் தரப்படும்; வார விடுமுறை வழங்கப்படும்; சங்கீதா வாரமொன்றுக்கு 35 முதல் 40 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்; அவரது மருத்துவச் செலவு ஈடு செய்யப்படும்” என்றவாறு ஒரு வேலை ஒப்பந்தத்தைத் தயார் செய்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் அளித்ததோடு, விசாவிற்கான நேர்காணலில் இதனையே அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடமும் சொல்லுமாறு சங்கீதாவையும் பயிற்றுவித்திருக்கிறார். சங்கீதாவிற்கு விசா கிடைத்து இருவரும் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் செல்வதற்குச் சற்று முன்னதாக, “அவருக்கு மாதம் ரூ 25,000 மட்டுமே சம்பளம் தரப்படும்; கூடுதல் நேர வேலைக்கு மாதம் ரூ 5,000 போட்டுத் தரப்படும்” என வேறொரு ஒப்பந்தத்தில் சங்கீதாவிடம் கையெழுத்துப் பெற்றுள்ளார், தேவயானி. முதல் ஒப்பந்தம் விசா பெறுவதற்காகப் போடப்பட்ட மோசடி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

சங்கீதா ரிச்சர்ட்
தூதரக அதிகாரி தேவயானியால் கொத்தடிமை போல நடத்தப்பட்ட வீட்டுப் பணியாளர் சங்கீதா ரிச்சர்ட்

அமெரிக்கா சென்ற பிறகோ, இரண்டாவது ஒப்பந்தப்படியும் தேவயானி நடந்து கொள்ளவில்லை. தேவயானியின் வீட்டில் வேலை செய்வதையொட்டி சங்கீதாவிற்கு வழங்கப்பட்டிருந்த பிரத்யேகமான கடவுச் சீட்டைப் பறித்துக் கொண்டதோடு, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை, இடையே எந்த ஓய்வுமின்றி வீட்டு வேலைகளைச் செயுமாறு சங்கீதா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஓய்வு – ஒழிச்சலில்லாத வேலை, எதிர்பார்த்த சம்பளமும் கிடைக்கவில்லை என்ற நிலையில், வார விடுமுறையின் பொழுது தன்னை வேறு வேலை பார்க்க அனுமதிக்குமாறு சங்கீதா கோரியதை, தூதரகச் சட்டங்களைக் காட்டி தேவயானி மறுத்திருக்கிறார். இதன் பிறகு தன்னை இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பி விடுமாறு சங்கீதா கோரியதையும் தேவயானி புறக்கணித்திருக்கிறார். இந்த நிலையில்தான் சங்கீதா கடந்த ஜூனில் தேவயானியின் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதன் பின் ஜூலையில் அமெரிக்க வழக்குரைஞர்கள் மற்றும் இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் முன்னிலையில் சங்கீதாவிற்கும் தேவயானிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பொழுது சம்பள பாக்கியாக 10,000 அமெரிக்க டாலர்களும், தனது கடவுச் சீட்டைத் திருப்பித் தருமாறும் கோரினார், சங்கீதா. இதற்கு மறுத்து விட்ட தேவயானி, தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி சங்கீதாவிற்கு இந்திய அரசின் மூலம் வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டை முடக்கினார். சங்கீதா தனது வீட்டிலிருந்து வெளியேறிய பொழுது கைபேசியையும் 200 அமெரிக்க டாலர்களையும் திருடிச் சென்றதாகக் குற்றஞ்சுமத்தி, அவர் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடர்ந்தார். அந்நீதிமன்றத்தின் மூலமாகவே தன் மீது சங்கீதா அமெரிக்காவில் வழக்கு போடுவதற்குத் தடையுத்தரவும் பெற்றுக் கொண்டார்.

தேவயானியின் தந்தையும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே தனது செல்வாக்கின் மூலம் இந்தியாவிலிருந்த சங்கீதாவின் குடும்பத்தை போலீசைக் கொண்டு கண்காணிக்கவும் மிரட்டவும் செய்தார். சங்கீதாவின் கணவர் ரிச்சர்ட், “தனது மனைவியை தேவயானி கொத்தடிமை போல நடத்துவதாக”க் குற்றஞ்சுமத்தி, டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இக்குற்றச்சாட்டுகள் அந்நிய மண்ணில் நடந்தவை எனக் கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்த அந்நீதிமன்றம், சங்கீதா மீது போடப்பட்டிருந்த திருட்டுக் குற்றச்சாட்டு வழக்கில், இந்தக் ‘குற்றம்’ அதே அந்நிய மண்ணில் நடந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு கொள்ளாமல், சங்கீதாவின் மேல் பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது. பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளின் கடந்த காலத்தை ஆராய்ந்து தீர்ப்பு கூறும் நீதித்துறை, தேவயானி விவகாரத்தில், அவர் மகாராஷ்டிராவில் நடந்த ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழலில் பயன் அடைந்தவர்; அக்குடியிருப்பில் முறைகேடாக வீடு பெற்றவர் என்பதைக் கண்டு கொள்ளவேயில்லை. நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டைக் காட்டி சங்கீதாவை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புமாறு கோரியது, இந்திய அரசு.

இப்படி அடுத்தடுத்து சங்கீதாவைப் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கைகளை எடுத்துவந்த இந்திய அரசு, இன்னொருபுறம் அமெரிக்க போலீசால் கைது செயப்பட்ட தேவயானியைப் பிணையில் எடுப்பதற்கான முழுத்தொகையையும் – 2,50,000 அமெரிக்க டாலர்கள் – தானே முன்வந்து செலுத்தியது. பிணையில் வெளிவந்த அவருக்கு ஐ.நா.விற்கான இந்தியத் தூதரக அதிகாரியாகப் பதவி உயர்வு அளித்து, அதன் மூலம் அவரை நீதிமன்ற விசாரணையிலிருந்து பாதுகாத்தது.

நியூயார்க் ஆர்ப்பாட்டம்
வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி நியூயார்க் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இந்தியத் தூதரக அதிகாரிகள் தமக்கிருக்கும் அதிகாரம் மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவது புதிய விவகாரமல்ல. அமெரிக்காவின் இந்தியத் தூதரகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவந்த பிரபு தயாள் மீது அவர் தனது வீட்டில் வேலை செய்த சந்தோஷ் பரத்வாஜைப் பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, 2,50,000 அமெரிக்க டாலர்களைத் தண்டத் தொகையாக இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து அவரைக் காப்பாற்றியது இந்திய அரசு. இந்த கிரிமினல் பேர்வழிதான் தற்பொழுது ஐ.நா.விற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று நீனா மல்ஹோத்ரா என்ற அதிகாரி மீதும் அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட, அந்த வழக்கிலும் 6 கோடி ரூபாயை இந்திய அரசே தண்டத் தொகையாகச் செலுத்தியிருக்கிறது.

உள்ளூரில் வேலை செயும் வீட்டுப் பணியாளர்களின் நிலையைவிட, வெளிநாடுகளில் தூதரக அதிகாரிகளின் வீடுகளின் வேலைசெயும் பணியாளர்களின் நிலை பரிதாபகரமானது. இந்தியத் தூதரக அதிகாரிகள், அரபு நாடுகளின் ஷேக்குகளைப் போலவே தமது வீட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டைப் பறித்துக் கொள்கின்றனர்; வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்லும்போது, இந்தப் பணியாளர்கள் சங்கீதாவைப் போலத் தப்பித்து விடாமல் தடுக்க, அவர்களை வீட்டின் நிலவறைக்குள் தள்ளிப் பூட்டி வைத்துவிட்டுச் செல்வதைக் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றிச் செய்வதாகக் கூறுகிறார், பத்திரிகையாளர் சாய்நாத். இந்திய அரசு, தமது தூதரக அதிகாரிகளை இத்தகைய கிரிமினல் குற்றங்களுக்காக ஒருபோதும் தண்டித்ததில்லை என்பது மட்டுமல்ல, அமெரிக்க நீதிமன்றங்கள் அவர்களுக்கு அபராதம் விதிக்கும்போது, அவர்களுக்கான அபராதத் தொகையை நம்முடைய வரிப்பணத்திலிருந்து கட்டி அவர்களைப் பாதுகாப்பதை அரசாங்கத்தின் கடமையாகவே ஆக்கி வைத்திருக்கிறது. மறுபுறம் பாதிக்கப்படும் சங்கீதா போன்றோரின் குரல்வளையை நெறிக்கிறது.

இப்பிரச்சினையை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதித்த முன்னாள், இந்நாள் தூதர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுத்துறையினரும், “எல்லா இடங்களிலும் இப்படித்தானே நடக்கிறது” என நியாயப்படுத்தியதோடு, “வேலைக்காரிக்குக் குறைவான சம்பளம் கொடுத்தது பெருங்குற்றமா?” எனத் திமிர்த்தனமாகக் கேள்வி எழுப்பினார்கள். மற்ற நாட்டுத் தூதரக அதிகாரிகள் பலர் இவை போன்ற அத்துமீறல்கள், மோசடிகளில் ஈடுபட்டிருப்பதைப் பட்டியல் போட்டு, அவர்களையெல்லாம் கைது செய்யாத அமெரிக்க அரசு தேவயானியை மட்டும் கைது செய்ததைப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் காட்டித் தேசபக்தியைத் தூண்டிவிட எத்தனித்தார்கள்.

“தேவயானியின் மாதச் சம்பளம் 4,120 அமெரிக்க டாலர்கள்தான் எனும்பொழுது அவரால் எப்படி சங்கீதாவுக்கு 4,500 டாலர் சம்பளம் தர முடியும்?” என இக்கும்பல் அதிமேதாவித்தனமாக வாதம் செகிறது. குறைந்தபட்ச சம்பளம்கூடத் தர முடியாதபோது வீட்டுக்கு எதற்கு வேலையாள் வைத்துக்கொள்ள வேண்டும்? அதற்காக அடுக்கடுக்கான பொய்களை ஏன் அவிழ்த்துவிட வேண்டும்? அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலையையும் நடத்திவரும் பெரும் செல்வந்தரான தேவயானியின் கணவர் அகாஷ் சிங் ரத்தோரின் வருமானத்திலிருந்து இந்தச் சம்பளத்தைக் கொடுக்கவிடாமல் தேவயானியைத் தடுத்தது எது? இப்படி எதிர்க்கேள்விகளை எழுப்பும்பொழுதுதான், தேவயானி வகையறாக்களின் உண்மை சொரூபம் வெளியே தெரிகிறது. பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சத்யபிரதா பாலும் ஐ.நா.விற்கான இந்தியத் தூதர் பிரபு தயாளும், “சங்கீதாவிற்குத் தனது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து, சோறு, துணிமணி கொடுத்து, மருத்துவச் செலவுகளுக்கெல்லாம் காசு கொடுத்து, இதற்கு மேல் சம்பளமும் கொடுத்திருக்கிறார், தேவயானி. எனவே, அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளமே அதிகம்தான்” என வீட்டு வேலையாட்கள் மீது இந்திய மேல்தட்டு வர்க்கம் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்த்தனர். மேலும், “சங்கீதாவை இந்தியாவிலிருந்துதான் தேவயானி கொண்டு வந்தாரே தவிர, அமெரிக்கத் தொழிலாளர் சந்தையிலிருந்து பெறவில்லை” எனக் கூறி, சங்கீதாவை தேவயானி கொத்தடிமையாக நடத்தியதை நியாயப்படுத்தவும் முயன்றார், பிரபு தயாள். போபால் விஷவாயு விபத்தில் இறந்துபோனவர்களுக்கு அதிக நட்ட ஈடு கேட்டு அமெரிக்காவில் நடந்த வழக்கில், “ஒரு இந்தியக் குடிமகனின் உயிர், ஒரு அமெரிக்கனின் உயிருக்கு ஈடு கிடையாது” எனப் பச்சையாக இனவெறியோடு தீர்ப்பு எழுதினார்கள், அமெரிக்க நீதிபதிகள். அந்த நச்சுக் கருத்தை, “ஒரு இந்திய வேலைக்காரி ஒரு அமெரிக்கத் தொழிலாளிக்கு ஈடாக முடியாது” என வழிமொழிகிறது தேவயானியை ஆதரிக்கும் இந்திய அதிகார வர்க்கம்.

வலது கம்யூ. கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்.
அமெரிக்காவைக் கண்டித்து தேசபக்தி ஊளையிடுவதில் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன் வலது கம்யூ. கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்.

தேவயானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட செய்தி வெளிவந்த மறுநாளே வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி ‘இடதுசாரி’ போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து வண்ண ஓட்டுக்கட்சிகளும் அமெரிக்காவிற்குப் பாடம் புகட்ட வேண்டும் எனப் பெருங்கூச்சல் போட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்திய அரசு புதுதில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை அப்புறப்படுத்தியது; அமெரிக்கத் தூதரகங்களில் வேலை பார்க்கும் அமெரிக்க அதிகாரிகள் அனுபவித்து வந்த பல்வேறு சட்டவிரோத சலுகைகளையும், தூதரக வளாகத்தினுள் இயங்கி வந்த கேளிக்கை விடுதிகளையும் இதுகாறும் அனுமதித்து வந்த மைய அரசு, தற்பொழுது அவை அனைத்தையும் நிறுத்தச் சொல்லியது. அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்திய ஆளுங்கும்பலின் அமெரிக்க எதிர்ப்பு வீரம், இந்தக் கண்துடைப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்லவில்லை.

இன்னொருபுறமோ, இந்தத் திடீர் அமெரிக்க ‘எதிர்ப்பு’ நடவடிக்கைகளுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்வது போல, “அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நாள்தான் தனது வாழ்நாளில் இனிமையான, மறக்க முடியாத நாள்” என அறிக்கை விட்டார், பிரதமர் மன்மோகன்சிங். இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவிடமிருந்து விமானங்களை வாங்குவதற்கான 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பாலியில் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாட்டில் அமெரிக்கா சொன்னபடி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பிய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, அந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்தி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.

தேவயானி விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சவுண்டுவிடும் பார்ட்டிகள், இந்திய நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் வேட்டு வைக்கும் இது போன்ற மையமான பிரச்சினைகளை ஏன் கண்டு கொள்வதில்லை என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், அப்பொழுதுதான் இந்தக் கும்பல் முன்தள்ளும் தேச பக்தியின் மோசடித்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். அமெரிக்க அரசு இந்திய மக்களை உளவு பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த காங்கிரசு கட்சிக்கும், அது குறித்து மௌனம் சாதிக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் தேசத்தின் சுயமரியாதை பற்றிப் பேச ஏதாவது யோக்கியதை இருக்க முடியுமா? தேவயானி கைது செய்யப்பட்டதை வியன்னா தீர்மானங்களுக்கு எதிரான நடவடிக்கை எனப் பக்கம்பக்கமாக எழுதிக் குவிக்கும் அறிஞர் பெருமக்கள், துபாய் கடல் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீது அமெரிக்கக் கப்பற் படை சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காமல் – அதில் ஒருவர் இறந்து போனார், மூன்று பேர் படுகாயமுற்றனர் – மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டது ஏன்? சிங்கப்பூர் கலவரத்தில் கைது செயப்பட்டுள்ள 35 தமிழகத் தொழிலாளர்களிடம் சிங்கப்பூர் சட்டதிட்டங்களை மதித்து நடக்குமாறு இந்தியத் தூதர் அறிவுரை கூறினாரே, அதே அறிவுரையை இந்திய அரசு தேவயானியிடம் ஏன் சொல்லவில்லை?

இக்கும்பல் முன்நிறுத்தும் தேசம், தேசபக்தி என்ற சொற்களுக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் தங்கள் நலனே தேசிய நலன், தமது வளர்ச்சியே தேச முன்னேற்றம், தமக்கு ஏற்படும் அவமானமே தேசிய அவமானம் என்று ஆளும் வர்க்கங்கள் சாதிக்கின்றன. இதிலிருந்து சாதாரண உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? நமக்கும் ஆளுங்கும்பல் முன்தள்ளும் இந்தியத் தேசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்; அல்லது தேசியம் என்பதே கிரிமினல்தனம் என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

– திப்பு.
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

  1. தேவயாணி-சங்கீதா விவகாரத்தை எங்கிருந்து தொடங்குவது?

    தேவயாணிக்காக தொடங்குவதாக இருந்தால் இந்திய தூதரக அதிகாரிகள்-அரச உத்தியோகத்தவர்களுக்காக தொடங்க வேண்டும்.

    சங்கீதாவுக்காக இருந்தால் நாளாந்தம் கிராமத்திலிருந்து பட்டணத்தை நோக்கி பிழைப்புதேடி வருகிற லட்சக்கணக்கான ஏழை ஆண் பெண் தொழிலாளர்களுக்காகத் தொடங்க வேண்டும்!

    ஆகவே இங்கு அமெரிக்க-இந்திய அரசியல் உறவுகள் பற்றித் தான் ஆய்வு செய்ய வேண்டும். இந்திய அரசியலில் ஊழல் இல்லாத அரசியல் இருந்தால் தான் ஆச்சரிப் படவேண்டும்.ஆகவே அதையும் தவிர்ப்போம்.

    இறுதியாக இந்திய-அமெரிக்க அரசியல் உறவு பற்றியது.

    ஏதோ இந்திய அரசியல்வாதிகள் ஊழலும் கள்ள கையெழுத்தும் போடுகிறார்கள் என்றால் மற்றைய நாட்டு அரசியல்வாதிகள் என்ன புனிதமானவர்களா? அகப்படாதவரைக்கும் புனிதர்கள் தான்
    அகப்பட்டால் ராஜினாமா அல்லது தற்கொலை.தற்கொலைக்கு தயங்கினாராக இருந்தால் கொலை. இதை நிறைவேற்றுவதற்கும் “அலுகோசுகள்” என்கிற உளவுப்படை உண்டு. இதுவும் வினவு வாசகர்களுக்கு அநேகமாகத் தெரியும்.

    அறிவுத்துறையினரை பணம் கொடுத்தே வாங்க முடியுமென கருதுகிறது இந்த முதாலித்துவமும்-அதற்கு அரசனாக இருக்கிற ஏதாதிபத்தியங்களும்.வர்க்கப் போராட்டத்தின் வீச்சு இவர்களை இறுதியில் புதைகுழிக்கே இழுத்துச் செல்லும்.

    கடைசி உதாரணம். உண்மையை சொன்னதாற்காக முப்பதுவருடம் சிறை தண்டணை விதிக்கப்பட்ட “மானிங்”.அறுபது வருடங்களாவது விதிக்கப்பட வேண்டுமென காத்திருக்கிற ஆனால் அகப்படாமல் நழுவிக் கொண்டிருக்கிற “சினோடன்”.

    இரட்டை கோபுரத்தாக்குதலில் சவுதிஅரேபிய தீவிரவாதிகளின் பாத்திரம் ஒரு துணைப்பாத்திரங்களே!.இதில் அலுகோசுகளின் பாத்திரமே கதாநாயகர்களுக்குரிய பாத்திரம். இந்தியமக்கள்-இந்தியாவின் கலாச்சாரம் அதன் பலவீனமான பக்கங்கள் என்பவற்றை இவர்களே கூடுதலாக அறிந்து வைத்துள்ளார்கள்.

    அமெரிக்க இந்திய உறவு ஆளும்வர்கத்திற்கான முரண்பாடு. இது இந்திய தொழிலாளவர்கத்தின் சிந்தனையை திசை திருப்புவதற்காக கூடா இருக்கலாம்…. தேவயாணி-சங்கீதா விவகாரம்.

  2. ஓர் பெண்மணி தேவைக்கு அதிகமாக தட்டில் போட்டு உணவை வீனாக்குவாராம் .
    அவரது கணவன் கண்டிதானாலும் கண்டுகொள்ளமாட்டராம் . பக்கத்துக்கு வீட்டுக்கு விருந்துக்கு போனார்களாம் . அங்கேயும் அந்த பெண்மணி அவ்வாறே செய்தாராம் .
    ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் ஒரு அரை விட்டானாம் . எங்க வீட்டுல சாப்பாட்ட வீனடிதா இப்படிதான் என்றானாம்

    இப்போது அந்த கணவன் கைகொட்டி ரசித்து சொன்னானாம் , செஞ்ச தப்புக்கு நல்ல தண்டனை
    நம்ம வீடு மாதிரியே எல்லா இடமும் இருக்காது

    • தேவயானி கைது செய்யப்பட்டதை வியன்னா தீர்மானங்களுக்கு எதிரான நடவடிக்கை எனப் பக்கம்பக்கமாக எழுதிக் குவிக்கும் அறிஞர் பெருமக்கள், துபாய் கடல் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீது அமெரிக்கக் கப்பற் படை சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காமல் – அதில் ஒருவர் இறந்து போனார், மூன்று பேர் படுகாயமுற்றனர் – மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டது ஏன்? சிங்கப்பூர் கலவரத்தில் கைது செயப்பட்டுள்ள 35 தமிழகத் தொழிலாளர்களிடம் சிங்கப்பூர் சட்டதிட்டங்களை மதித்து நடக்குமாறு இந்தியத் தூதர் அறிவுரை கூறினாரே, அதே அறிவுரையை இந்திய அரசு தேவயானியிடம் ஏன் சொல்லவில்லை?

      கட்டுரைய முழுக்க படிச்சுபோட்டுக் கருத்து சொல்லுங்கண்ணா…

Leave a Reply to mao பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க