privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

-

ல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், நிர்வாக அலுவலகங்கள் என்று சமூகத்தில் உள்ள பெருவாரியான முக்கியமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுது. முக்கியமா பள்ளிகளில் நடக்கும் தீண்டாமை மிகவும் கொடுமையானது. சாதிய கட்டுமானங்களோட இருக்கும் கிராமத்தில் பெற்றோர்களே சாதிய பாகுபாட்டோடதான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், தூண்டுதலாகவும் பள்ளியில் வேலை செய்பவர்கள் இருந்தால் பிள்ளைகளின் மனநிலையில ஏற்படும் விளைவு மிகவும் கொடுமையானது. அப்படி ஒரு பள்ளியில் நடந்த அவலம் தான் இது.

சாதி வெறிதமிழக மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு கிராமத்து நடுநிலைப் பள்ளியில் வேலை செய்தவருதான் அலுவலக உதவியாளர் (பியூன்) சண்முகம். இவர் முக்குலத்தோர் பிரிவில் வரும் சாதியை சேர்ந்தவர். அந்தப் பள்ளியில் வேலை செய்த தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவங்க. ‘மேல்’ சாதி என்ற இறுமாப்போடு தலித் ஆசிரியர்களை மதிக்க மாட்டார் இந்த சண்முகம். அது மட்டும் இல்லாது ‘கீழ்ச்’ சாதி மாணவர்கள், ‘மேல்’ சாதி மாணவர்கள் என பாகுபாடு பார்த்து பழக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், மாணவர்கள் யார், யாரு கூட பழக்கம் வச்சுக்கனும் என்பதை தீர்மானிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.

எந்த குறையும் இல்லாமல் சண்முகம் அவருக்கு உண்டான வேலையை முறையாக செய்வார். கூடவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு தமிழ், கணக்கு என்று ஆரம்ப பாடம் நடத்துவார். ஆனால் சாதியை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களை நக்கல் செய்து நடந்துக் கொள்ளும் குருர புத்திக்காரர். தோட்டக் கலை ஆசிரியர் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர், ஒரு அப்பாவி. அவரிடம் சண்முகம் “இந்தாய்யா நீ அந்த ஆறாம் வகுப்பு கட்டிடத்துக்குத் தானே போறே, அப்புடியே இந்த அட்டவணையை அந்த வகுப்புல கொடுத்துடு” என்று உத்தரவிடுவார். ஆசிரியர்களுக்கு உதவி செய்யும் அலுவலக உதவியாளர் வேலை இங்கு தலை கீழாக இருக்கும். இதை ஒரு ஏளனத்தோடு செய்வார் சண்முகம்.

எங்கள் பள்ளியில் சைவ வெள்ளாளர் ஒருவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒரு பொறுக்கி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரக்கூடியவர். அப்படிப்பட்ட அயோக்கியனுக்கு சாதியால் உயர்ந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக கீழ்படிந்து வேலை செய்வார் இந்த சண்முகம். ஆனால் அதன் பிறகு வந்த தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு ஒரு தலித் என்பதால் ஏதாவது வேலை சொன்னால் “இப்பதானே சொல்லிருக்கிங்க, செய்றேன் பொறுங்க ஏன் பறக்கறீங்க’’ என்று எதிர்த்து பேசுவார்.

ஒரு முறை தேர்வின் போது ஆதிக்க சாதி மாணவர்களிடம் முன்கூட்டியே வினாத் தாளை எடுத்துக் கொடுத்து “கேள்விகளை குறித்துக் கொண்டு நல்ல மதிப்பெண் எடுங்க. ஏன் மதிப்பெண் குறைவா வாங்கிட்டு இந்தாள் கிட்ட கைகட்டி நிக்கணுமா” என்று கூறினார். “பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச… தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்” என்று அங்கலாய்த்துக் கொள்வார். இதில் மாணவர்கள் மீதான அபிமானம் போல சாதிவெறி வெளிப்படும்.

எங்க பள்ளியில் ஒரு பெண் ஆசிரியர் இருந்தார். அவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்தான். மிகவும் தைரியமானவர். சண்முகத்துக்கு பயப்பட மாட்டார். அவருடன் மாணவிகள் நெருக்கமாக பழகுவார்கள். அவர் ஒருவர்தான் பெண் என்பதால் சில மாணவிகள் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். டீச்சர் சாப்பாடு கொண்டு வரும்  பாத்திரத்தையும் சேத்து குளத்துக்கு கொண்டு போய் கழுவுவார்கள். இதை பொறுத்துக் கொள்ள சண்முகத்தால் முடியாது. மாணவிகளை தனியாக கூப்பிட்டு திட்டுவார். “அவ யாரு? நீங்க யாரு? அவளுக்கு போய் நீங்க தட்டுக் கழுவறதா? கொஞ்சம் கூட வெட்கமா இல்ல? வீட்டுக்கு போங்க. உங்க அப்பாருகிட்ட வந்து சொல்றேன்” என்று மாணவிகளை ஏதோ செய்யக் கூடாத தப்பு செய்து விட்டது போல மிரட்டுவாரு. மாணவிகள் இயல்பா சாதி வேறுபாடு இல்லாம இருக்குறது கூட சண்முகத்துக்கு பொறுக்காது.

சாதி இறுமாப்பினால் அவர் ஒரு தலைமை ஆசிரியருக்கு உண்டான மிடுக்குடன் நடந்து கொள்வார். வெவ்வேறு சாதி மாணவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சினேகமாக இருந்தால் பழகினால் இவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. “இங்க வாங்க என்ன ஒட்டிக்கிட்டேதான் பொறந்திங்களா, பிரிஞ்சு இருக்க மாட்டிங்களா, ஒருத்தன் செய்றதத்தான் இன்னொருத்தன் செய்வீங்க, அவன் மாடு மேய்ப்பான் நீயும் மாடு மேய்க்கப் போறியா. போய் படிக்கிற வேலையை பாருங்க” என்று அவர் செய்யும் அட்வைஸில் சாதி வாசம் தெரியும்.

“வாட மாப்பிள்ளை, என்ன மருமகளே, வீட்டுல உங்க அப்பாரு இருக்காரா, என்ன குழம்பு இன்னைக்கு ஒங்க வீட்டுல. மாமா கேட்டேன்னு கொஞ்சம் வாங்கிட்டு வா” என்று மாணவர்களை முறை சொல்லி கூப்பிட்றதும் உரிமையோடு நடந்துக்கற விதமும் ஊர்க் காரங்களுக்கும் இவருக்கும் அதிக நெருக்கம் போல் காட்டிக் கொள்வார். அதனால் இவர் பற்றிய புகார்களை ஊரில் முக்கியமாக கருதப்படும் யாரிடம் சொன்னாலும் எடுபடாது. ஊர் காரவங்களுக்குள்ளும் சாதி பாகுபாடு இருக்கும். ஆனால் ஆசிரியர்களிடம் அதை காட்டிக் கொள்ளாமல், “அவருக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் நீங்க கொஞ்சம் அனுசரிச்சு போங்க சார்! இன்னும் ரெண்டு மூனு வருசத்துல ரிட்டேர் ஆயிருவாரு” என்று சமரசமா பேசுவாங்க.

பள்ளிக்கூடத்துலயும் ஊருலயும் சண்முகத்துக்கும் ஊருக்காரங்களுக்கும் பெரிசா ஒன்னும் வித்தியாசம் இருக்காது. இதுல அவங்ககிட்ட பஞாசாயத்துக்கு போன என்ன பெருசா நடந்துர போகுது. வீட்ல பெத்தவங்க பிள்ளைங்க கிட்ட நடந்துக்குற லட்சணம் கேக்கவே ஆத்திரமா இருக்கும். “கைகாலல்லாம் பாரு வெள்ள வெள்ளையா பறையவீட்டு புள்ள மாதிரி புட்டாங்காச்சு போயிருக்கு, இங்க வா எண்ணைய தடவுவோம். பறச்செரிக்கி கணக்கா தலையப் பாரு எவ்வள பேனு, ஈறுன்னு, பறபுத்தி சிறுபுத்தின்னு அவந்தான் நக்கி நக்கி சாப்புடுவான் ஒனக்கென்ன வந்துச்சு எழுந்து போய் கைய கழுவு, என்னடா ஒங்கப்பாரு பறையோட்டு கலருமாரி செக்கச் செவேல்ன்னு சட்டத்தச்சு போட்ருக்கான்”னு பக்கது வீட்டு கொழந்தையில இருந்து எல்லா குழந்தைகள் கிட்டேயும் பேச்சோட பேச்சா சாதிவெறி எனும் பிசாச மனசுல ஒட்டவச்சுருவாங்க.

என்னதான் படிச்சுட்டு தாழ்த்தப்பட்டவங்க ஆசிரியரா பதவி அதிகாரத்துல இருந்தாலும் சாதிண்ணு வரும் போது அதிகாரத்துக்கு மதிப்பில்லாம போகுது. ஊர்க் காரங்களும், சண்முகமும் ஒரே சாதின்னு சொல்லிக்கிட்டாலும் அவர்களுக்கு இடையிலும் வேறுபாடு இருந்துச்சு. ஏரியா வேறவேற என்பதாலும் திருமண முறையில் இருவரும் வெவ்வேறு பழக்கத்தை கடைபிடப்பதாலும் இருவரும் ஒன்றல்ல என சொல்வார்கள். இருந்தாலும் தாழ்த்தப் பட்டவங்கன்னு வரும்போது அவர்களுக்கு எதிரா ஒண்ணு கூடிருவாங்க.

நான் மேல குறிப்பிட்டவை 80-90-களில் நடந்தவை. சமீபத்தில் அந்த கிராமத்துக்கு பக்கத்து ஊர்ல தெரிந்த நண்பருக்கு வீடு வாடகைக்கு வேணுன்னு தேடிட்டு போனோம். அப்பதான் அந்த ஏரியா புதுசா அங்கொண்ணும் இங்கொண்ணுமா வீடுகளோட உருவாயிட்டு இருந்துச்சு. வாடகை கொறச்சலா இருக்குமேன்னு அந்த பக்கம் தேடினோம். எதுவும் தென்படல. புதுசா ஒரு வீடு கட்டிட்டு இருந்த எடத்துல ஒரு பெரியவரு நின்னாரு. அவருட்ட கேக்கலாம்னு கிட்டக்க போனா, அது நம்ம பள்ளிக்கூட சண்முகம்.

அவருக்கு எங்களை அடையாளம் தெரியல, “நீங்க எந்த ஊரு? உங்களுக்கு என்ன வேணும்?”னு கேட்டார். விசயத்த சொன்னதும், ”நீங்க என்ன ‘ஆளுங்க’ இந்த ஏரியாவுல தாழ்த்தப் பட்டவங்களுக்கு எடம் விக்கவும் மாட்டாங்க, வாடகைக்கு வீடு தரவும் மாட்டாங்க, நான் நல்ல விசாரிச்சுட்டுதான் இங்க எடம் வாங்கி என் பொண்ணுக்காக வீடு கட்டுறேன். நீங்க என்ன ஆளுங்கன்னு தெரிஞ்சுகிட்டா இங்க ஒரு வீடு இருக்கு, போய் பாருங்கப்பான்னு சொல்லலாம். இல்ல இங்கெல்லாம் கெடைக்காதுப்பான்னு வெவரத்த சொல்லலாம். உங்களுக்கு அலைச்சல் இல்லாம போகும் அதனாலதான் கேட்கிறேன்”னு சொல்லிக்கிட்டே “தண்ணி குடிக்கிறீங்களா” என்றார்.

“உங்களுக்கு எங்களை தெரியல, ஆனா எங்களுக்கு உங்களை தெரியும். உங்க கையால தண்ணிக் குடிச்சாலே அது பாவம்”ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டோம்.

– சரசம்மா

(சம்பவம் உண்மை – பெயர்கள் கற்பனை)