privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

-

ரம்பம் முதல், போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி. தமிழக கிளைமாக்சில் வீரம் காட்டும் போலீசு போல அப்போதாவது சொரணையுடன் கொதிப்பார்கள் என்று பார்த்தால், ‘அம்மா, நீங்கப் போய் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று பயபக்தியுடன் மன்றாடுகின்றனர் போலிகள்.

ஜெயாவும் போலி கம்யூனிஸ்டுகளும்
போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி.

இதுகுறித்து கருத்து சொன்ன சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன், “ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்” என்று சொன்னார். இந்தக் கருத்து குறித்துதான் நாம் இங்கே பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் இக்கருத்தை இதற்கு முன்னரும் பலரும் பல சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தினமலர் பத்திரிகை, ‘சோவியத் யூனியன் ஆகிறதா தமிழ்நாடு?’ என்று ஒரு தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இலவசப் பொருட்களை நிறைய வழங்குவதாலும், அரசாங்கமே நிறைய தொழில்களை நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் தமிழ்நாட்டை சோவியத்துடன் ஒப்பிட்டு எழுதி ‘அபாயம் எச்சரிக்கை’என்றது தினமலர். அதன் இறுதியில், ‘இதற்கு எல்லாம் காரணம் ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்துவதுதான்’ என்று முடித்திருந்தனர். அதே போல அம்மா விசுவாசத்தில் முதல் இடத்தில் இருக்கும் தினமணியும் தனது தலையங்கங்களில் ஜெயா ஆட்சியில் செய்யப்படும் தவறுகளெல்லாம் யாரோ தவறாக வழிநடத்தியவை என்றே பயபக்தியுடன் குறிப்பிடும்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு கடைசி நேரத்தில் கடும் தொந்தரவு தந்தார் ஜெயலலிதா. விழாவை நிறுத்தப் பார்த்தார். பிரபாகரன் படங்கள் வைக்க தடை விதித்தார். விழா முடிந்த உடனேயே முற்றத்தின் சுற்றுச்சுவரை காவல்துறையை ஏவி தடாலடியாக இடித்துத் தள்ளினார்.

நியாயமாகப் பார்த்தால் தமிழ்த் தேசியவாதிகள் இதற்காக வெகுண்டு எழுந்து ஜெயலலிதா அரசை உண்டு, இல்லை என்று செய்திருக்க வேண்டும். ஆனால் மாவீரன் நெடுமாறனோ, “இந்த கொடுஞ்செயலை ஈழத் தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது” என்று ஆவி எழுப்புதல் கூட்டத்தில் பேசுவதைப் போல பேசினார். இடிப்பதற்கு துணை போன ஜேசிபி எந்திரங்களை ஆசை தீருமட்டும் கண்டித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சீமானோ, ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்று ஒரே அடியாக போட்டார். நெடுமாறனும் பிறகு இதேக் கருத்தை கூறினார். அதாவது முற்றத்தை இடித்தது மத்திய உளவுத்துறையின் சதி வேலையாம். அந்த சதிக்கு ஜெயலலிதா இரையாகி விட்டாராம். மொத்தத்தில் முற்றம் இடிப்பில் ஜெயலலிதாவை, மத்திய உளவுத்துறை தவறாக வழிநடத்திவிட்டது என்கிறார்கள் இவர்கள்.

சோ-ஜெயா
‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’

இவர்கள் மட்டுமா… ‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’ என்று சசிகலா நடராஜனும், ‘மன்னார்குடி மாஃபியா கும்பல் அ.தி.மு.க.வை ஆக்கிரமித்து ஜெயலலிதாவை தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று சோ கும்பலும் சொல்லி வருகின்றனர். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதே பாட்டைப் பாடுகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் கூட ஊடகங்கள் மீது சகட்டுமேனிக்கு அவதூறு வழக்காக போட்டுத் தாக்கினார். டி.வி.யில் செய்தி வாசித்த பெண் மீது எல்லாம் வழக்கு. ரிமோட்டை கையில் வைத்து அந்த டி.வி. செய்தியைப் பார்த்தற்காக பொதுமக்கள் மீது வழக்குப் போடாததுதான் பாக்கி. ஆனால் அதற்குக் கூட ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. ’முதல்வரை சில சக்திகள் தவறாக வழிநடத்துகிறார்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் ‘தப்பா வழிநடத்துறாங்க… தப்பா வழிநடத்துறாங்க’ என்று கூக்குரலிடுகிறார்களே… அவ்வளவு டம்மிபீஸா ஜெயலலிதா? மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையா? ஜெயலலிதாவுக்கு என்று சொந்தப் புத்தி இல்லையா? ஒரு அப்பாவிப் பெண்ணை, படித்த பெண்ணை அதிகார வர்க்கமும், கிச்சன் கேபினட்டும் வழி நடத்தித்தான் ஜெயாவின் பாசிச நடவடிக்கைகள் வெளிப்பட்டனவா?

நேற்றைக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்த கத்துக் குட்டிகள் கூட இதைக் கேட்டு சிரிப்பார்கள். ஒருமுறை முடிவு செய்துவிட்டால் யார் பேச்சையும் கேட்க மாட்டார் இந்த அம்மையார். இதனால்தான் ஜெயாவை ஆதரிக்கும் தீவிர பார்ப்பனியவாதிகளோடு கூட அவருக்கு சில நேரங்களில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. சு சாமி, குரு மூர்த்தி, தினமலர், சோ என்று ஜெயாவின் முழு அரசியல் வாழ்க்கையிலும் அதை பார்க்கலாம்.

ஜெயா - தான்தோன்றித்தனம்
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது.

யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது. அமைச்சர்களை தூக்கி கடாசுவது முதல், கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது வரையும் எதிலும் மற்றவர்களின் கருத்தை கேட்கக் கூட மாட்டார். நிலைமை இப்படி இருக்க ஜெயலலிதாவை ஏதோ ஓ.பி.எஸ். ரேஞ்சுக்கு இறக்கி வைத்து, ‘கேட்பார் பேச்சுக் கேட்டு நடப்பதாக’ சொல்வது கேட்பதற்கே அயோக்கியத்தனமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஒரு திணிக்கப்பட்ட தலைவர். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் திடீரென எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் இழுத்து வரப்பட்டவர். கட்சியின் அணிகளிடையே பணியாற்றி கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் கழகம் என கீழிருந்து மேலாக வந்தவர் அல்ல. நேராக மேலே திணிக்கப்பட்டவர். ஓட்டரசியல் அதிகாரத்தை சுவைப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கூட ஜெயலலிதாவுக்கு தெரியாது. கருணாநிதிக்கு இப்போது கூட தமிழ்நாட்டின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களின் பெயர் தெரியும்; அவர்கள் குறித்த வரலாறு தெரியும். ஆனால் ஜெயலலிதாவுக்கோ, தமிழ்நாட்டின் வட்டார நிலைமைகள், பகுதி வாரியான பிரச்னைகள் கூட தெரியாது. தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் பெயராவது தெரியுமா என்பது கூட சந்தேகமே.

இத்தகைய சூழலில்தான் ஜெயா தனது ஆட்சியை அதிகார வர்க்கம், பார்ப்பன சாணக்கியர்கள், உளவுத் துறை, கார்ப்பரேட் முதலாளிகள் முதலிய குழுக்களை வைத்து நடத்துகிறார். இதனால் இவர்கள் ஜெயாவை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பொருளல்ல. இத்தகைய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கும் ஜெயாவின் நலனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு வேளை நடைமுறை சிக்கல்கள் என்ற அளவில் வேண்டுமானால் அவர்கள் ஆலோசனையை ஜெயா ஏற்கலாம்.

கட்சி அணிகளை வைத்து சமூகத்தோடு தொடர்பு கொள்ள முடியாத ஜெயா அதிகார வர்க்கத்தை வைத்து மட்டும் தொடர்பு கொள்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி பகிரங்கமாக நடக்கிறது. ஒரு வகையில் உலகின் எல்லா பாசிஸ்டுகளின் ஆட்சியும் இப்படித்தான் இருந்திருக்கிறது. துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்து கொண்டு குண்டுகளை வைத்திருக்கும் திமிரில்தான் பாசிஸ்டுகளின் வீரம் அடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா : இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்து சாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன?

அடிப்படையில் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டுதான் ஜெயா இன்றும் செயல்படுகிறார். அதற்கு நேற்றைய ஆடு கோழி பலி தடைச் சட்டம் முதல் இன்றைய சிதம்பரம் கோவிலை தீட்சிதருக்கு கொடுத்தது வரை சான்றுகள் இருக்கின்றன. கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன? தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் என்று ஜெயாவை இன்றும் இராம கோபாலன் போற்றுவதற்கும் என்ன காரணம்?

இது போக கருணாநிதி மற்றும் திமுக மேல் உள்ள தனிப்பட்ட பகையால்தான் அவர் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். அண்ணா நூலகத்தை மாற்ற முனைந்தார். சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கை நள்ளிரவில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். இதிலிருந்து தெரிவது என்ன? ஜெயாவைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட ஆசை விருப்புகள் மட்டுமே வழி நடத்துகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் நலனோடு ஒத்திசைவதால் அதிகார வர்க்கம், பார்ப்பன ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜெயாவை ஆதரிக்கின்றன.

அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஆணைகள் பிறப்பிப்பது மட்டுமே. புகழ் வெளிச்சம், அதிகாரம், மேட்டுக்குடிப் பின்னணி எல்லாம் இணைந்து, துவக்கத்தில் இருந்தே கட்டளைகள் பிறப்பிக்கும் நபராக ஜெயலலிதா இருந்தார். யாருக்கும் கீழ்படிந்து அவருக்கு பழக்கம் இல்லை. தான் சொல்வதை ஏற்காதவர், காலில் விழுந்து வணங்காதோர், சுயமரியாதை உள்ளோர் அனைவரையும் கட்சியை விட்டு, பதவியை விட்டு தூக்கினார். தன் சொல்லை மறுப் பேச்சுக் கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இவை அனைத்தும் ஒரு சர்வாதிகரிக்குரிய பண்புகள். ஆனால் இவற்றைதான் ஜெயலலிதாவின் தைரியம் என்று வர்ணிக்கிறார்கள், ஊடக மற்றும் அறிஞர் சொம்புகள்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்குவது, வாரம் ஒருமுறை மாவட்டச் செயலாளரையும், மாதம் ஒரு முறை மந்திரியையும் மாற்றுவது, ஒரு துளி மையில் கையெழுத்திட்டு 8 லட்சம் அரசுப் பணியாளர்களை வேலையை விட்டுத்தூக்குவது… போன்றவை தைரியமான செயல்களாம். என்றால், இப்போது இடதுசாரிகளை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதையும் கூட நாம் தைரியப் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அரசியலில் இருப்போருக்கு அவர்கள் ஓட்டுக்கட்சியே ஆனாலும் குறைந்தபட்சமாவது மக்களிடம் பயம் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் பயம் இல்லாதவர்தான் ஜெயா. இல்லையேல் எட்டு இலட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காரியத்தை குலோப் ஜாமூன் சாப்பிடுவது போல செய்ய முடியுமா?

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி
இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்?

இருப்பினும் இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்? ஜெயலலிதா 91-96ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தபோது பேயாட்டம் போட்டாரே… அதை ஒரு எடுத்துக்காட்டாக சிலர் சொல்லக்கூடும். அதாவது அப்போது சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை சூழ்ந்துகொண்டு தவறாக வழிநடத்திவிட்டனர்’ என்று சோ, குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லவும் செய்தார்கள்; இப்போதும் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதற்கு காரணம், ‘இதுபோன்ற சூத்திரக் கூட்டத்தை கூட வைத்திருப்பதால்தான் கெட்டப்பெயர். நம்மவாளை உடன் வைத்துக்கொண்டால் எல்லா மொள்ளமாரித்தனத்தையும் நாசூக்காக செய்யலாம்’ என்பது அவர்களது அக்கறையின் பின் மறைந்திருக்கும் சேதி.

மேலும் விபத்தால் முதல்வரான ஜெயா அதற்கு வழியேற்படுத்திய அதிமுக கட்சியை சசிகலா கும்பலின் சாதிய செல்வாக்கை வைத்தே ஒரு அடியாட் படை போல உருவாக்க முடிந்தது. கட்சியை நடத்த ஊழல் பணமும், அரசியல் செல்வாக்கிற்கு இந்த அடியாட்படையும் அவருக்கு தேவையாக இருந்தன. இவையெல்லாம் சசிகலா அவரை தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் என்று சொல்வது அபாண்டம். அது உண்மையெனில் ஜெயா அரசியலுக்கே வந்திருக்க முடியாது. முதலமைச்சர் எனும் அதிகாரத்தை சுவைக்கும் வாய்ப்பை விரும்பும் நபர் அதை தக்கவைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விதி. அதிலும் அதிமுக எனும் அடிமைகள் கட்சியை புரட்சித் தலைவரிடமிருந்து சீதனாமாகப் பெற்றவருக்கு அது கூடுதல் நிபந்தனையும் கூட.

இதை விடுத்துப் பார்த்தாலும் நிஜமாகவே அப்போது மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை ஆட்டுவித்தது என்று தீர்மானகரமாக சொல்ல முடியாது. ஏனெனில் எப்போதுமே ஒரு சர்வாதிகரிக்கு அருகில் இருப்பவர்கள், அவர்களது மனமறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். ஜெயலலிதாவின் மனதில் என்ன இருக்கிறது என்று படித்து அதற்கு இசைவாகவே சுற்றியிருப்பவர்கள் கருத்துச் சொல்வார்கள். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒருபோதும் இவர்கள் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். இது  சசிகலா கும்பலுக்கும் பொருந்தும், சோ கும்பலுக்கும் பொருந்தும். ஆகவே சுற்றியிருப்பவர்கள் தவறாக வழி நடத்தினார்கள் என்பதை எப்போதும் ஏற்க முடியாது. மேலும் இந்த வழிநடத்துதலும், ஜெயாவின் மனக் கிடக்கையும், ஆளும் வர்க்கத்தின் நலனும் எந்த வேறுபாடின்றியும் ஒன்று சேர்ந்திருந்தன. ஒரு வேளை இவற்றில் ஏதாவது சிறு முரண்பாடு வந்தால் இறுதி முடிவை ஜெயாதான் எடுப்பார்.

இப்படி இருக்க திரும்பத் திரும்ப ’ஜெயலலிதா தவறாக வழிநடத்தப்படுவதாக’ சொல்வதன் காரணம்தான் என்ன? ஏனெனில், ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுகின்றனர். இது ஜெயாவை ஆதரிப்போர், எதிர்ப்போர் இருவருக்கும் பொருந்தும். உண்மையைச் சொன்னால் உள்ளே போக வேண்டியிருக்கும் அல்லது அம்மாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதனால் ஜெயலலிதா மூக்கிலேயே குத்தினாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ’தவறாக வழிநடத்தியவரை’ தேடுகின்றனர். ’அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. என்னைத் தூண்டிவிட்டதும் நான் தான், மூக்கில் குத்தியதும் நான் தான்’ என்று பலமுறை அந்தம்மாவும் நிரூபித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், தமிழினவாதிகளும் மறுபடியும், மறுபடியும் அந்த அரூப பாத்திரத்தை நோக்கி அம்புவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஜெயா நல்லகண்ணு
‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததை மறந்துவிடக்கூடாது.

இந்த ஊடகங்களோ விஜயகாந்த் கிடைத்தால் மட்டும் நோண்டி நொங்கெடுக்கிறார்கள். அவர் அதிகம் படிக்காதவர். சுலபத்தில் டென்ஷன் ஆக்கலாம். என்ன கேட்டாலும் எதையோ ஒரு பதிலை அடித்துவிடுவார். ஜெயலலிதாவிடம் இப்படி கண்டதையும் கேட்டால் அவர் ‘அடித்து’விடுவார். அதனால் விஜயகாந்த்தை துரத்திப்பிடித்துக் கேட்பவர்கள்; கருணாநிதியிடம் எதையும் தயக்கமின்றி கேட்பவர்கள், மம்மியிடம் மட்டும் பம்முகிறார்கள். ஜெயலலிதாவின் பிரஸ்மீட்டில் மட்டும் பத்திரிகையாளர்களின் குரல்வளை வயிற்றுக்கும் கீழே போய்விடுகிறது. அவர்களின் மூளையே விமர்சனக் கேள்விகளை சுயதணிக்கை செய்துவிடுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது மட்டும்தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம். அவர் முதல்வராக இல்லாத நிலையிலும் கூட அவரிடம் எதிர்மறை கேள்விகளை கேட்டுவிட முடியாது. ஆக, ஜெயலலிதா தெளிவான, தீர்மானமான கருத்துக்களை கொண்டுள்ளார். அவர் பார்ப்பன பாசிசத்தை தனது சித்தாந்தமாக வரித்திருக்கிறார். அதை உடைத்துப் பேச வக்கற்றவர்கள் யாருக்கும் பிரச்சினை இன்றி காற்றில் கத்தி வீசுகின்றனர்.

இதில் வினோதம் என்னவெனில், சொந்த சரக்கு இல்லாத கிளிப்பிள்ளை என ஜெயலலிதாவை குறிப்பிடும் இவர்கள்தான் ‘அம்முதான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும்’ என்பதில் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததையும், ‘தமிழ் பிரதமர்’ என்று குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவதையும் மறந்துவிடக்கூடாது. எனில் இவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது.

ஜெயாவை யாரோ சிலர் தவறாக வழி நடத்துவது இருக்கட்டும். முதலில் ஜெயாவை விமரிசிக்க நினைத்தாலே உங்களுக்கு சிறுநீர் கழியும் உண்மையைச் சொல்வீர்களா?

–    வழுதி

  1. நகைச்சுவையோடு நிறைய உண்மை நடப்புகளைக் கூறும் கட்டுரை. ஒரு வேளை ஜெயலலிதா(நமக்கு)போதாத காலத்தில் பிரதமராகி விட்டால் என்ன ஆகும் என்று நினத்தாலே பேதியாகிறது.

    ஆனால் ஒரு விஷயம்.

    “இல்லையேல் எட்டு இலட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காரியத்தை குலோப் ஜாமூன் சாப்பிடுவது போல செய்ய முடியுமா?”

    இப்படி செய்வதற்கு முன் அரசு ஊழியர்கள் தலை கால் புரியாமல் ஆடிய ஆட்டமும், செய்த பின் பெட்டிப் பாம்பாக, ஒழுங்காக (இதுதான் முக்கியம்) வேலை பார்த்ததும் உலகம் அறிந்தது. இப்போது நிலைமை பழைய படி. எந்த அலுவகத்திலாவது காலை சரியான நேரத்திற்கு வருகிறார்களா ? TNEB தலமையகத்தில் அவர்கள் வேலை செய்யும் அழகை ஒரு சில மணி நேரம் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது.

  2. ஜெயாவைப் பற்றி எவ்வளவுதான் எழுதி காரி துப்பினாலும் அவருக்கு ஒளிவட்டம் கட்டுபவர்கள் அதை வலது கையினாலேயே துடைத்து கொண்டு மீண்டும் அதே வேலைப் பார்க்க சென்று விடுவர்.

    சொரணையற்றவர்கள்! சுயமரியாதை இழந்தவர்கள்!

  3. தமிழக அரசு ஊழியர்கள் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டுவந்ததற்காக, முந்தைய ஜெயா ஆட்சியால் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்கள் தமது தொழிற்சங்க உரிமைகளைக் கேட்டு நின்ற ஒரே காரணத்திற்காகவே ஜெயா அரசால் கைது செய்யப்பட்டனர். அதிரடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மாறாக, அரசு ஊழியர்கள் பெஞ்ச் தேய்ப்பதை, அனைத்துவிதமான மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை ஜெயா உள்ளிட்டு அனைவருமே ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. முதலாளித்துவம், குறிப்பாக மறுகாலனியாக்கம் இப்படிபட்ட அதிகாரவர்க்கத்தைத்தான், அரசு ஊழியர்களைத்தான் விரும்புகிறது. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
    இதுவொருபுறமிருக்க ஜெயா ஆட்சியின் அதிரடியாக வேலைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு இலட்சம் மட்டுமே. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல எட்டு இலட்சம் அல்ல.

  4. என்னுடைய பதிவில் நான் எழுதியிருக்கும் ‘ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்?’ என்ற பதிவையும் படியுங்கள்.

  5. ஜெயலலிதாவுக்கு ‘தோன்றிய’ பிரதமர் ஆசை எதிர் விட்டமாக மோடியின் கனவுடன் முரண்படுவதால் ஜெயலலிதாவுக்கு தமது தோள்கள் அவசியம் என்று கருதி கூட்டணிக்கு முயன்றுள்ளனர், இடதுசாரிகள். ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசை இருந்தது என்பதே கூட ஒரு கற்பனை தான். சி.பி.எம்., சி.பி.ஐ கணக்குப்படி ஒரு வேளை தேர்தலுக்குப் பிறகு தோன்றும் புதிய நிலைமையில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் அதிர்ஷ்டம் அடித்தால் கூட எத்தனை நாளுக்குத் தான் பிரதமராக இருக்க முடியும்? ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்கு மேல் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? இதனை ஜெயலலிதா விரும்புவாரா? அதன் பிறகு அவரால் திரும்பவும் மாநில முதல்வர் பதவிக்கு திரும்ப முடியுமா? அதற்கு முன்னுதாராணம் தான் உள்ளதா? அவாள் மொழியில், கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு உள்ளூர் குளத்தில் குளிப்பதை ஜெயலலிதா தான் விரும்புவாரா? ( செத்துப்போன முன்னாள் பாஜக தலைவன் பைரோன் சிங் செகாவத்துக்கு கடந்த வாஜ்பாய் ஆட்சியில், துணை ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. பதவி காலம் முடிந்த பின்னர் பைரோன் சிங் செகாவத் மாநில முதல்வர் பதவிக்கு ஆசை பட்ட போது இந்த உவமை பைரோன்சிங் செகாவத்துக்கு பாஜக தலைமையால் நினைவூட்டப்பட்டது )

    அப்படியானால், ஜெயலலிதாவுக்கு தேசிய அரசியலின் விழைவு தான் என்ன? தனது கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிக் கொண்டிருக்கும் கர்நாடக நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்கின் கயிறை அறுத்தெறிய வேண்டும் என்பதல்லாமல் வேறென்ன இருக்க முடியும்? இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்தால் முதலுக்கே மோசமாகி விடும் ஜெயலலிதாவுக்கு. அதனால் தான் ஊருக்கு முன்னே அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டார். ஜெயலலிதாவின் இந்த பயணத்துக்கு இடதுசாரிகள் பொருத்தமற்ற செருப்புகள். காங்கிரஸாவது அதன் பெருச்சாளி தலைவர்கள் செய்த பாவத்திற்காக தண்டிக்கப்பட்டது. இடதுசாரிகளோ, எந்த பாவமும் செய்யாமல் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காதலி கைவிட்டதால் தமது முகத்தை கண்ணாடியில் பார்த்து காறு துப்பும் ஒருதலை காதலனை போன்ற நிலைமையில் இருக்கிறார்கள், தமிழக இடதுசாரிகள்.

    • // தனது கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிக் கொண்டிருக்கும் கர்நாடக நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்கின் கயிறை அறுத்தெறிய வேண்டும் என்பதல்லாமல் வேறென்ன இருக்க முடியும்? //

      ஜெ வின் நோக்கத்தை இப்படி சுருக்க முடியுமா என தெரியவில்லை. இவ்வளவுதான் நோக்கம் என்றால், காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பார். மத்திய அரசு, கர்நாடக அரசு இரண்டும் காங்கிரஸ் கைவசம் உள்ளபோது அவர்கள் வழக்கை முடித்து வைத்திருப்பார்கள். இந்த ஆசை காட்டி காங்கிரஸ் அதிமுகவோடு கூட்டணி வைக்க முயன்றாதாக கழுகு, குருவி என யாரோ கிசு கிசு எழுதியதாக நினைவு. தேர்தலில் அடி வாங்கினாலும், வழக்கு நிச்சயம் முடிந்திருக்கும் என நினைக்கிறேன். தமது வழக்கு என்பதையும் மீறி, ஜெ வுக்கு கலைஞர் குடும்ப வழக்குகள், மத்தியில் அதிகாரம், முடிந்தால் பிரதமர் பதவி, அல்லது துணைப்பிரதமர் பதவி என பெரிய கனவுகள் இருக்க சாத்தியமுண்டு.

      • பல கட்சிகளுடன் இணைந்த கூட்டணியின் பிரதமராக இருப்பது மிகவும் கேவலமான பொழப்பாக இருக்கும்; அதனை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்ற எண்ணத்திலே கருத்தை தெரிவித்தேன். ”Better to reign in Hell, than serve in Heaven” – இது Paradise Lost -ல் மில்டன்.

        • நீங்கள் சொல்வது போலவும் இருக்கக் கூடும்.

          எனது கிளி ஜோசியக் கணிப்பு படி மோடி பிரதமராகவும், ஜெ துணைப்பிரதமாரகவும் வர வாய்ப்புண்டு (இது எனது கணிப்பு மட்டுமே. விருப்பம் அல்ல). அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் அது எவ்வளவு நாள் தாங்கும் என்பதும் நிச்சயமில்லை. அம்மாவே இதை கவிழ்க்கக் கூடும். அப்படி நடந்தால் ஐயா ஆட்சியில் பங்கு பெறவும் சாத்தியமுண்டு.

          எப்படியோ, நாம் சொல்வதெல்லாம் யூகங்கள் தானே! எதிர்காலம் பதில் சொல்லட்டும் 🙂

  6. நீங்கள் சொல்வதை வைத்து சிந்தித்தால், நமது முதல்வர் ஏதோ தீய சக்தியால் ஏவி விடப்பட்ட அரக்கி போன்றல்லவா தெரிகிறது.

    • சந்தேகமே இல்லாமல் ஜெயா ஒரு அரக்கிதான், அதிலும் முழுமையான தீயசக்தியான அரக்கி.

      ஜெயாவைக் குறித்து இப்படி வேறு யார் மேலோ பழி போட்டு அவர்நல்லவர் போலப் பலரும் பேசுவதுதான் விந்தையாக இருக்கிறது. இக்கட்டுரை உண்மைநிலையை சரியாகக் கூறுகிறது.

  7. //ஜெயலலிதா மூக்கிலேயே குத்தினாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ’தவறாக வழிநடத்தியவரை’ தேடுகின்றனர். ’அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. என்னைத் தூண்டிவிட்டதும் நான் தான், மூக்கில் குத்தியதும் நான் தான்’ என்று பலமுறை அந்தம்மாவும் நிரூபித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், தமிழினவாதிகளும் மறுபடியும், மறுபடியும் அந்த அரூப பாத்திரத்தை நோக்கி அம்புவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.// அருமை…

    //இந்த ஊடகங்களோ விஜயகாந்த் கிடைத்தால் மட்டும் நோண்டி நொங்கெடுக்கிறார்கள். அவர் அதிகம் படிக்காதவர். சுலபத்தில் டென்ஷன் ஆக்கலாம். என்ன கேட்டாலும் எதையோ ஒரு பதிலை அடித்துவிடுவார். ஜெயலலிதாவிடம் இப்படி கண்டதையும் கேட்டால் அவர் ‘அடித்து’விடுவார். அதனால் விஜயகாந்த்தை துரத்திப்பிடித்துக் கேட்பவர்கள்; கருணாநிதியிடம் எதையும் தயக்கமின்றி கேட்பவர்கள், மம்மியிடம் மட்டும் பம்முகிறார்கள். // பார்ப்பன அடிமைத்தனம் என்று கூட சொல்லலாம்.

  8. ஜெவிடம் (உச்ச)நீமன்றமே பம்மும் பொழுது இந்த ஊடகங்களோ எம்மாத்திரம்

  9. இருந்தாலும் வெஙகடேசனுக்கு ஜெயா மேல் இவ்வளவு காட்டம் கூடாது! (…..மோடி பிரதமராகவும், ஜெ துணைப்பிரதமாரகவும் ????????……) ஜெயா எங்கும், யாருக்கும் இரண்டாவதாக இருக்க விரும்பமாடார்! ஒரு வேளை மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காவிடால், காங்கிரசும், காம்ரேடுகளும் அல்லாத நாலாவது அணியில் ஜயா, மாயா, மம்தா சுழற்சி முறையில் பிரதமராகலாம்! ஆர் எஸ் எஸ் ஆசி இவர்களுக்கு உண்டு! பின்னணியில் ஆளப்போவது அவர்கள் தானே!

  10. ” யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது. அமைச்சர்களை தூக்கி கடாசுவது முதல், கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது வரையும் எதிலும் மற்றவர்களின் கருத்தை கேட்கக் கூட மாட்டார் ”

    ” அதனால்தான் தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி பகிரங்கமாக நடக்கிறது. ”

    இந்த கட்டுரையின் ஆரம்ப கேள்விக்கான பதில் மேலே குறிப்பிட்ட இரண்டு பாராக்களிலேயே இருப்பதாக தோன்றுகிறது !

    அய்யா ஆட்சியில வாயை திறந்தா எதுகை மோனையில மழுப்பல் பதில், இல்லேன்னா கட்சி பத்திரிக்கையில கட்டம் கட்டின செய்திதான் வரும். ஆட்சி பலம் இல்லாத சிறுதெய்வங்களை (!) என்னதான் சீண்டினாலும் மக்கள் மன்றத்தை சாட்சிக்கு அழைத்து அழுவதைதான் அவர்களால் செய்ய முடியும் ! அம்மா ஆட்சியில வாய் திறந்தா அவதூறு வழக்குல்ல பாயும் ?! அதுக்கு வாய்தா மேல வாய்தா வாங்க எல்லாராலும் முடியுங்களா ?!

  11. உண்மையை எதிர்கொள்ள அஞ்சி ஓடும் பாசிஸ்ட்கள் ….மோடி மச்சான் …பாப்பக்கா ஜெயா…

    பழைய பேட்டிகள் தான்…

    மோடி: https://www.youtube.com/watch?v=QHS_eSoOBzg

    ஜெயா: https://www.youtube.com/watch?v=jSEQEXpLCyA

    ஜெயாவின் உடல் மொழியும் முகபாவனையும் உண்மையை கூறும். பேட்டியின் இறுதியில் காலர் மைக்கை கழற்றும் வேகமென்ன…. முகபாவனை என்ன …அருமை. அவரின் அகங்காரம் முகபாவனையில் தெரியும்…

  12. எஙகள் பகுதி அ.தி.மு..க பிடமுகர் சொல்லும்(பிரமிக்கும்)
    வசனம்: “அம்மா ” மாதிரி யாராலும் இஙிலீசில் பேச முடியாஅதாம்…அடி ஆத்தா

  13. ஜெயலலிதா சசி – சோ கும்பல்களால் வழி நடத்தப்பட்டாலும் எல்லாவற்றையும் அறிந்தே ஜெயலலிதா செயல்படுகிறார் ,

  14. இன்னும் வினவு மேல அவதூறு வழக்கு போடலயா இனையத்துல எழுதுனா போட மாட்டாங்களா தெரியல ,அம்மா மேல பயம் இல்லயா உங்களுக்கு இப்பல்லாம் டீ கடைல கூட ஜெயா வ விமர்சனம் பன்ன முடியாது அங்கினா எவனாது கட்சி காரன் பாத்துட்டு பொலிஸ் ல கம்ளைன்ட் பன்னிறுவான் அப்புராமா ஏட்டையா வூட்டான்ட வந்து நிப்பாரு ஜெயாவ விமர்சனம் பன்னாம பாத்துக்கதான் பொலிஸ் டிபார்ட்மென்ட் டூட்டி மத்ததெல்லாம் அப்புறம் தான் வினவின் தைரியமான விமர்சனதுக்கு பாராட்டுகள்

    • Fact is nobody other than hardcore blog readers are aware of “Vinavu” site.

      In Tamilnadu, people as such do not read much. Their reading is restricted to Kumudam, Vikatan or writings by Sujatha. So not many know about Vinavu.

      Only when Vinavu becomes a published political magazine, JJ will take action.

  15. 1954 இல் தமிழகத்தில் குலக் கல்வி ஒழிக்கப் பட்டு,மதிய உணவுடன் கூடிய இலவசக் கல்வித் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டதால், கல்வியையே மூலதனமாகக் கொண்டு சுகபோக வாழ்க்கையும்,அரசியல் செவாக்குடனும் (இராஜாஜி),தமிழகத்தை எல்லாத் துறையிலும் அடக்கி ஆண்டு கொண்டிருந்த தமிழகப் பிராமணர்களின் ஆதிக்கம் முறியடிக்கப் பட்டது.சாமி என்று அழைத்துக் கொண்டிருந்தவன்,”என்ன அய்யரே” என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டான்.மேலாண்மை பொன்னு சாமி அவர்களின் நாவலில் உள்ள ஒரு பகுதியை படித்தால் உண்மை புறியும்.அக்கிரகாரத்துக்கு கீரை விற்க அங்கு நுளைய முடியாது.அக்கிரகாரம் ஆரம்பிக்க 21 அடிகளுக்கு முன்பே,ஒரு கோடு வரையப் பட்டிருக்கும்.கீரை கொண்டு செல்லும் மற்ற சாதிப் பெண்கள் அந்தக் கோட்டில் கீரையை வைத்து விட்டு பின் புறம் திரும்பிக் கொள்ள வேண்டும்.பின்பு அக்கிரகாரத்துப் பெண்கள் அந்தக் கோட்டிற்கு வந்து, கீரையில் தண்ணீர் தெளித்து எடுத்துக் கொண்டு,காசைத் தரையில் போட்டுச் செல்வார்கள் .அவர்கள் போனபின்புதான் கீரை விற்கும் பெண் திரும்பி காசை எடுத்துச் செல்லவேண்டும்.ஆண்கள் யாரும்(சிறுவர் கூட) அந்தப் பக்கம் போகக் கூடாது.இந்த நிலை தமிழகத்தில் காமராஜரின் கல்விக் கொள்கையினால் முறியடிக்கப் பட்டது. “Aryans met their Waterloo at Tamil Nadu in India.” இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகவும்,அன்று அகில இந்திய அளவில்,இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முடிவு செய்யும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்த இராஜாஜி அவர்கள் காமராஜரால் 1954 குலக் கல்வி ஒழிப்பின் மூலம் வீழ்த்தப் பட்டார்.உள்ளூர் செல்வாக்குப் போனபின்,இராஜஜி அவர்கள் அகில இந்திய ரீதியில் செல்வாக்கை இழந்து,செல்லாக் காசாகிவிட்டார்.இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அந்த ஆரியரின் உள்ளங்களிலும்,மத்திய அரசின் அதிகாரவர்க்கத்தில் இருந்த ஆரியர்களின் உள்ளத்திலும் நெருப்பாகப் பற்றிக் கொண்டது.”அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனின் வாரிசுகள் தமிழகத்தில் மண்டியிடவேண்டியதாயிற்றே” என்பது இன்றுவரை அவர்கள் மனதில் எறிதழல் ஆகிவிட்டது. இந்து ஊடகம் கருப்புக் காக்கை என்று கூட காமராஜரை அநாகரிகமாக சித்தரித்தது. அப்படி இழந்த செல்வாக்கை மீட்க, இன்றுவரை தமிழகத்தில் அந்த ஊடகங்களும், அந்த லாபியும் இயன்றவரை முயன்று கொண்டிருக்கின்றனர்.அதை மறைமுகமாகத் தக்கவைத்து,வெற்றியும் அடைந்து கொண்டுமிருக்கின்றனர்.அந்த நாணயத்தின் ஒரு பக்கம்தான் ஜெயலலிதாவின் எழுச்சி.ஜெயா வழிநடத்தப் படுகிறார் என்பது புறியாத புதிர் அல்ல.வழி நடத்துவது யார் என்பதும் புறியாதது அல்ல.ஆரம்பத்தில் மாண்டியா மாவட்டத்திலிருந்து நடிப்பதற்காகச் சென்னைக்கு வந்த ஜெயாவின் குடும்பத்தினரை எம்ஜியாருக்கு அறிமுகப் படுத்தியது பிராமணரான வொய்ஜி.மகேந்திரனனின் அப்பாவான வொய்ஜி.பட்டு அவர்கள்தான்(ஆரூர்தாஸ்,தினத் தந்தி).அதுவரை எம்ஜியாரின் பக்கமே செல்லாது,சிவாஜியை வைத்து வீரபாண்டியக் கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த பிராமணர் B.R. பந்துலு அவர்களைச் சரிக்கட்டி,1965 இல் எம்ஜியாரையும் ஜெயாவையும் இணத்து,தமிழனின் திரை மோகத்தை மூலதனமாக்கி,ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரமாண்டமாகத் தயாரிக்கப் பட்டு வெளியிடப் படும் போதே ஜெயாவுக்கான அரசியல் நுளைவுக்கு அடித்தளம் அமைக்கப் பட்டுவிட்டது.அதுவரை எம்ஜியாருடன் அதிகமாக நடித்த ஆரியர் அல்லாத சரோஜாதேவியை எந்த அரசியல் மேடைக்கும் அவர் அழைத்துச் சென்றதில்லை. ஆனால் ஜெயாவை அரசியல் மேடைகளுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்.1968 இல் நாகர் கோவில் எஸ்எல்பி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டம் ஒரு எடுத்துக் காட்டு.காரணம் அவருக்கு,அவரின் தமிழக முதல்வர் கனவுக்கு தமிழக தினமணி,தினமலர் போன்ற ஊடகங்களின் தயவு தேவைப்பட்டது. இந்த எம்ஜியாரின் நகர்வை ஓட்டுவங்கி அரசியல் பிழைப்பு நடத்திய அன்றய அண்ணாத்துரையின் தலைமையிலான திமுக கண்டுகொள்ளவில்லை.இது ஒருபுரம்.1967 இல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்,தன்னுடைய பரம எதிரியும்,தன்னை குலுக்கபட்டர் என்று வருணித்த அண்ணாத் துரையுடன், தன்னுடைய செல்வாக்கில் மண் அள்ளிப் போட்ட காமராஜரைத் தோற்கடிக்க ஒரு முறையற்ற கூட்டணியை அமைத்தார்.தமிழக வரலாற்றில் அன்றுதான் சந்தர்ப்பவாத கூட்டணிக் கலாச்சாரத்துக்கு, இராஜாஜியும் அண்ணாத்துரையும் வித்திட்டனர்.அதன்பின்பு கருணாநிதியின் காலத்தில், அவர் செய்த தவறுகளும், சருக்கல்களும், சந்தர்ப்பவாதங்களும், மத்திய அமைசகத்தில் இருந்த அந்த லாபியால் கருணாவிற்கு எதிராகவும் எம்ஜியாரை வளர்ப்பதற்காகவும், இந்திராவின் காலத்தில் பயன்படுதப்பட்டது.அதில் வெற்றியும் கண்டது.புகழ் விரும்பி எம்ஜியாருக்கு அகில இந்திய சிறந்த நடிகர் விருதும் கொடுத்து, பகை அரசியலை வளர்த்தது.தமிழகத்தில் கருணாநிதி மது விலக்கை இரத்து செய்துவிட்டு தமிழனின் குடியைக் கெடுத்துவிட்டார் என்று எழுதிய தமிழக ஊடகங்கள்,1974 இல் அவராலேயே திரும்பவும் மறுபடியும் அமுல் நடத்திய மதுவிலக்கை,திரையில் கூட மது குடிப்பதுபோல் வேடமிடாத புரட்சித்தலைவர், 1977 இல் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை மறுபடியும் இரத்து செய்தார்.ஆனால் தமிழக ஊடகங்கள் எம்ஜியாரை சத்திய புத்திரனாகத்தான் மக்களிடம் படம்பிடித்துக் காட்டின. எம்ஜியாரும் வளர்ந்தார்.கூடவே ஜெயாவுக்கும் எம்ஜியாருக்கும்,நெருக்கம் வளர்ந்தது.ஜெயா கொள்கை பரப்பு செயலராக பதவி கொடுக்கப் பட்டு,அன்றய பொதுவுடமையாளரான சோலை என்பவரால் அறிக்கை தயாரிக்கப் பட்டு,எம்ஜியாரின் ஆசியுடன் அதிமுக மேடையில்,சினிமா வசன பாணியில் ஒப்பித்தார்.தமிழகத்தில் உள்ள தின மணி,இந்தியன் எஃஸ்ப்ரெஸ், ஆனந்தவிகடன், கல்கி,துக்ளக் சோ,தினமலர்,இந்து ஆகிய ஊடகங்களும் ஜெயாவை அன்றே தேவதையாக்கி புளகாகிதமடைந்தனர்.இது ஒருபுறம் இருக்க, இந்திய அதிகாரவர்க்கத்தில் இருந்த அந்தலாபி, தமிழர்களுக்கென்று தனியாக ஈழம் அமைந்தால்,தமிழகத்தை தங்களின் விருப்பப் படி ஆட்டிவைக்க முடியாது என்பதாலும்,தமிழகத்தில் தங்களது இனத்தவரின் உறுதித்தன்மை காஷ்மீரத்து பண்டிட்டுகள் போல் ஆகிவிடும் என்பதாலும்,அக்கோரிக்கைக்கு எதிரான வழிகாட்டுதலை மத்திய அரசில்,நட்பு நாடு என்ற தவறான மந்திரத்தினால், மத்திய ஆட்சியாளரை வழிநடத்தினர்.விளைவு என்ன என்பது யாவரும் அறிந்ததே.இராஜிவ் மரணத்தினால் ஜெயா முதல்வர் ஆனார்.அன்றிலிருந்து அரசியலில் இன்றுவரை ஜெயா மத்திய அதிகாரவர்க்கத்தில் உள்ள லாபியாலும்,ஊடகங்களின் வழிகாட்டுதல் செய்திகளாலும்,பஜாகாவில் உள்ள ஒரு குறிப்பிட சக்தியாலும்,வழிநடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் ஆட்சியில், சாதியின் அதிகார மையங்களை ஊக்குவித்து, ஒரு சாதிய போட்டியை உறுவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.இதுவும் அவர் சார்ந்த லாபியின் வழி காட்டுதலே.நெய்வேலி நிருவனத்தின் பங்குகளை மத்திய அரசு, மாநில அரசுக்கு விற்கலாம் என்று தனக்கு அந்த மத்திய அமைச்சகத்தின் அதிகாரி வழிகாட்டினார் என்று ஜெயாவே வாய் திரந்தார்.அந்த அளவில் கூட மத்தியிலுள்ள அந்த லாபி ஜெயாவின் மீது அக்கரை கொண்டுள்ளது.ஈழக் கொள்கையில் ஜெயா நடந்து கொள்வதும் லாபியின் வழிகாட்டுதலே.இராஜிவ் கொலையாளிகளின் விடுதலையிலும், சேது சமுத்திரத் திட்டம், சிதம்பரம் கோவில் அர்ச்சகர்கள் வழக்கு,சமச்சீர் கல்வி ஒளிப்பு எல்லாமுமே அந்த லாபியின் வழிகாட்டுதல்படிதான் நாடகம் நடக்கிறது.சட்டசபைத் தீர்மானகளின் பின்னணியில்கூட லாபியின் கரம்தான் உள்ளது.கருணாநிதியின் தவறுகளை, சந்தர்ப்பத்துக்குத் தக்க பயன்படுத்தி, அந்த லாபி ஜெயாவுக்குச் சாதகமாக்கி ஜெயாவை வளர்க்கிறது என்பதுதான் உண்மை.1974 இல் மாநில சுயாட்சி கேட்ட கருணாநிதியை பிறிவினைவாதி என்று கூறி, அதையும் ஒரு காரணமாக்கி,அவரின் ஆட்சியைக் கலைத்த மய்ய அரசில் உள்ள அந்த லாபி, இன்று அவர்களின் ஜெயாவை விட்டு மாநில சுயாட்சி பற்றி பேச வைத்திருக்கிறது.ஊழல் வழக்குகளிலிருந்து ஜெயாவை காப்பாறுவது அந்த லாபிதான்.அவரின் ஊழலைப் பெரிதுபடுத்தாதும் அந்த லாபியின் ஊடகங்கள்தான்.கருணாநிதியக் காரணம் காட்டி தமிழரின் அடையாளமான திருவள்ளுவரின் உறுவத்திற்கு ஜெயா பச்சைத் துணியால் முக்காடு போட்டதும் அந்த லாபியின் இன அடையாள அளிப்பின் ஆசையே.ஊடகவியலாரின் பேட்டியில் பதில் சொல்ல முடியாது ஜெயாவால்.மத்திய அரசின் முதல்வர்கள் கூட்டத்தில் எழுதிக் கொடுத்த வாசகத்தை மட்டும்தான் வாசிக்கத் தெறியும்.அவருக்கு வாதிடத் தெறியாது.அவர் படித்த ஆங்கிலம் கான்வென்ட் ஆங்கிலம்.அது பெரிமேசன் படிப்பதற்க்கும்,தனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெறியும் என்று தம்பட்டம் அடிக்க மட்டுமே பயன் பெறும். கருத்துக்கள் செறிந்த அரங்கில் வாதிட பயன்படாது.சொத்துக் குவிப்பு வழக்கில் கூட “நான் நேரில் ஆஜராக மாட்டேன்.” என்றும், “கேள்விகளை முன்கூட்டியே எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றும் அடம் பிடித்தார் ஜெயா என்பதைலிருந்து இவரின் திறன் என்னவென்பது புறிந்திருக்கும்.அப்படி கேள்விகளை எழுதிக் கொடுத்திருந்தால், ஜெயா மத்திய அமைச்சகதின் அவருடைய லாபியிடம் பதிலை வாங்கி அனுப்பியிருப்பார். 2000 ஆண்டு போராட்டம், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    • உண்மையான பதிவு.
      பள்ளிப்பருவத்திலிருந்தே நான் ஒன்றை கவனித்து வந்துள்ளேன். எனது பார்ப்பன நண்பர்கள் திமுகவை ஜென்ம விரோதியாக ஆக்ரோஷமாக விமர்சிப்பார்கள். அதையே ஜெயலலிதா செய்தால் அரசியல் சாணக்கியம் என்றும் அவர் திறமை வேறு யாருக்கு வரும் என்றும் புகழ்வார்கள். என்னை பார்ப்பனன் என்று அவர்கள் நினைத்ததினால் அவர்களின் திராவிட வெறுப்பு குணாதிசயங்களை மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. வெளியே என்ன தான் நடுநிலையாளர்களாக அவர்கள் வேடம் போட்டாலும், அவர்களின் உள்வட்டத்துக்குள் சென்று பார்க்கும்போது திராவிட கட்சிகளை, குறிப்பாக திமுகவை, கருணாநிதி, திருமாவளவன், இவர்களை பற்றி அவர்கள் எந்த அளவுக்கு கேவலமாக பேசுவார்கள் என்பது எனக்கு தெரியும். கூட இருந்து பார்த்தவன் நான். வாய் கூசும், கேட்டவர்களின் காதுகள் கூட கூசும். அந்த அளவிற்கு அசிங்கமாகவும் கேவலமாகவும் சித்தரிப்பார்கள். சில சமயம் மிக சுலபமாக இட்டுக்கட்டியும் பேசுவர். வரலாற்றை அவர்களுக்கு தகுந்தாற்போல மாற்றி சொல்வர். எத்தனையோ முறை நான் அவர்களிடம் உண்மையான வரலாற்றை விளக்க வேண்டியதாயிற்று.

      இதையே தான் வடஇந்திய ஊடகங்கள், பார்ப்பன ஊடகங்கள் செய்கின்றன.
      இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட ராஜா, கனிமொழி, கருணாநிதி இவர்களை மட்டும் தான் வடஇந்திய ஊடகங்கள் தாக்குகின்றன. அந்த ஊழலில் காங்கிரசுக்கு முக்கிய பங்கு உள்ளதையும், ஊழலின் மூலம் பயனடைந்த டாடா ரிலையன்ஸ் ஆகிய பண முதலைகளின் பெயர் வெளியே வராமல் மழுங்கடிக்கபடுகிறது. இவர்களுக்கு எப்போது தேவைப்படுகின்றதோ, அப்போது (திமுகவை விமர்சிக்கும்போது மட்டும்) வைகோ, சீமான், நெடுமாறன், தமிழருவி மணியன், நடராசன், ராமதாஸ், தாபா ஆகியோரை முதல் பக்க செய்தியாக்குவர். அதே சமயம் ஜெயாவை பகைக்கும் நேரம் இவர்கள் அனைவரையும் காமெடி பீசுகளாக சித்தரிக்கப்படுவார்கள்.

      நான் திமுக, கருணாநிதியை புத்தன் இயேசு காந்தி என்று சொல்லவில்லை. அதே சமயம் இந்த பார்ப்பன லாபி மிக திறமையாக இவர்களை மாட்ட வைத்துள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். டான்சி தீர்ப்பை பார்த்தால் இவர்களின் இரட்டை நிலை நிரூபணமாகிவிடும். தவறு செய்தது நிரூபணமாகிவிட்டது. அதனால் அவர்களாகவே முன்வந்து அந்த நிலத்தை திருப்பி தந்துவிட வேண்டுமாம். திருடிய நிலத்தை திருப்பி ஒப்படைத்ததானால் அவர்களுக்கு தண்டனை இல்லையாம்.
      2011 தேர்தலின்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி வரும், திறமையான ஆட்சி வரும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று என்னென்ன சவடால் விட்டார்கள். இதில் ஒன்றாவது நிகழ்ந்ததா? ஆனால் ஊடகங்கள் இதை பார்த்தும் பாராமுகமாக இருப்பார்கள். ஆனது ஆகட்டும், கிழவியை தூக்கி மனையில் உட்கார வை என்பது போல இப்போது தமிழர் பிரதமாகும் நேரம் வந்தாயிற்று என்று இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசுகின்றன.

    • //தமிழர்களுக்கென்று தனியாக ஈழம் அமைந்தால்,தமிழகத்தை தங்களின் விருப்பப் படி ஆட்டிவைக்க முடியாது என்பதாலும்,தமிழகத்தில் தங்களது இனத்தவரின் உறுதித்தன்மை காஷ்மீரத்து பண்டிட்டுகள் போல் ஆகிவிடும் என்பதாலும்..///

      பார்ப்பனர்கள் தமிழர்களுக்கெதிராக இயங்கியதும், திராவிட, பெரியாரியத்தின் மீதுள்ள வெறுப்பை, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் காட்டி, பழி தீர்த்துக் கொண்டதும் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவர்களை விட மோசமாக, தமிழர்களுக்குக் கூட இருந்தே குழி பறிக்கும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள்( உதாரணமாக மலையாளிகள்) இயங்குகிறார்கள் என்பதை பற்றி ஏன் யாரும் பேசத் தயங்குகிறார்கள். திராவிடம், பெரியாரிசம் என்ற மாயை தமிழ்நாட்டுத் தமிழர்களை இன்னும் பிடித்து ஆட்டுவதால் தான், அவர்கள், பார்ப்பனர்களின் தமிழின வெறுப்பு செயல்களை விமர்சிக்குமளவுக்கு, தமிழரல்லாத திராவிட எச்சங்களின் தமிழின எதிர்ப்புச் செயல்களை, தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுக்கும் செயல்களையும், அதைச் சுட்டிக்காட்டும் ஈழத்தமிழர்களின் வாயை அடக்கும் செயல்களில் ஈடுபடுவதைப் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எவரும் பேசுவதைக் காணோம். இதற்குக் காரணம் திராவிட, பெரியாரிய இயக்கங்களின் தலைவர்களும், ஆர்வலர்கலிலும் பெரும்பாலானோர் தமிழரல்லாத திராவிடர்கள் அது மட்டுமல்ல, அவர்கள் தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் தமது கைகளில் வைத்துள்ளனர்.

      நாம் தமிழர் என்று தமிழர்களைத் தமிழர்களாக ஒன்றுபடுமாறு குரல் கொடுக்கும் சீமான் போன்றவர்களை இணையத்தளங்களில் தூற்றுகிறவர்களும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தான். இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கும், ஈழ விடுதலைக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு ஆதரவாக இயங்குபவர்கள், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் (உதாரணம் ‘இனம்’ திரைப்படம்) மலையாளிகள் தானே தவிர பார்ப்பனர்கள் அல்ல.

      அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொது எனக்கு இந்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. சென்னையில் தி,நகரில் கூடுதலான, பழச்சாறு விற்கும் கடைகளினதும், உணவகங்களினதும் உரிமையாளர்கள் பெரும்பாலும் மலையாளிகள் தான். அதில் கூலி வேலை செய்பவர்கள் நலிந்த, கிராமப்புற தமிழ்ச் சிறுவர்கள். ஒருநாள் மாலை, நேரம் எட்டு மணியளவில் தமிழர்களின் கடை எதையும் காணாததால், ஒரு மலையாளி கடையில் Juice அருந்திக் கொண்டிருந்த போது, தி,நகர் பேருந்து நிலையத்தின் சுவரில் மே 17 இயக்கத்தினர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெரீனாவில் நடக்கும் போராட்டத்தை அறிவிக்கும் சுவரொட்டியை ஒட்டி விட்டு, போய் சில நிமிடங்களில், கடையில் கல்லாப்பெட்டியில் இருந்தவர் (மலையாளி), தலையைத் திருப்பி, கண்ணால் சைகை காட்டியதும், கடையில் வேலை செய்யும் தமிழ்ச் சிறுவன் ரோட்டைக் கடந்து போய், ஈரம் காயாமலிருந்த சுவரொட்டியை, அப்படியே நுனியில் பிடித்து இழுத்து கீழே போட்டு விட்டு, ரோட்டைக் கடந்து, போன வேகத்திலேயே திரும்பி வந்ததை நான் என் கண்ணால் கண்டேன் (முன்பும் அப்படிச் செய்திருப்பான் போல் தெரிகிறது). அதில் பரிதாபம் என்னவென்றால், அந்த தமிழ்ச்சிரறுவன் தனது முதலாளி சொன்னதைச் செய்தான், அந்த சுவரொட்டியில் என்ன இருந்தது என்பதை அவன் படித்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். ஆனால் அந்தசு சுவரில் வேறு பல சுவரொட்டிகள் அப்படியே பத்திரமாக இருந்தன. இந்த சம்பவம் எதைக் காட்டுகிறதென்றால் அதாவது மலையாளிகளின், அல்லது தமிழ்நாட்டில் தமிழரல்லாத திராவிட எச்சங்களின் தமிழ் எதிர்ப்பு, அடிமட்டத்து மக்களிடம் தொடங்கி அதிகாரவர்க்கம் வரையும் உண்டு, ஆனால் அதைப் பற்றி பேச அன்பன் போன்ற தமிழர்கள் தயங்குகிறார்கள் அது ஏன் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

      • வியாசா ,

        எம் தமிழர் உலகம் முழுதும் பரவி உள்ளனர்.

        உன் மாதிரியான குறுகிய வெறி பிடித்த “மூடர்” களால் தான் எம் தமிழ் இனம் துன்பம் அடைகின்றது.

        ஆந்திரர்,மலையாளி எப்படி தமிழகத்தில் பிழைக்கின்றனரோ அது போல தான் எம் தமிழரும் இந்தியா முழுவதும் பரவி உள்ளனர்.

        தமிழகத்தில் வாழும் பிற இனத்தவரை இகழும் நீ வெளிநாட்டில் போய் என்னத்துக்கு அவர்களீன் வாழ்ஆதாரங்களை நீ அகதி என்ற பெயரில் சுரண்டி சாப்பிடுர ?

        //நாம் தமிழர் என்று தமிழர்களைத் தமிழர்களாக ஒன்றுபடுமாறு குரல் கொடுக்கும் சீமான் போன்றவர்களை இணையத்தளங்களில் தூற்றுகிறவர்களும் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தான். //

      • இதையும் சேர்த்து விமர்சிக்கலாமே
        இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

        • 1.இராஜிவ் கொலையாளிகளில் நளினிக்கு மட்டும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கும் போது,சேலையை வரிந்து கட்டிக் கொண்டு ருத்திர தாண்டவம் ஆடியும்,கணவனின் மீது சோனியாக் காந்திக்கு பக்தி இல்லை என்று கூறிய இந்த செல்வி? ஜெயா பிரதமரானால் ஈழம் மலருமா?
          2.முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது மக்கள் மடிவது சகஜம் என்று கூறிய சீமானின் எஜமானி பிரதமரானால் ஈழம் மலருமா?
          3.தோழியர் செங்கொடி தீக்குளித்தவுடன்,முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின்தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரிக்கை எழுந்தவுடன்,முதலில்,”மத்திய உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நான் நடப்பேன்” என்று அடம் பிடித்தார் ஜெயா.ஆனால் அழுத்தம் அதிகமானவுடன் எனக்கு அதிகாரமில்லையென்றார்.மீண்டும் அழுத்தம் அதிகமானது. தமிழக அமைசரவைக்கு தூக்குத் தண்டனை இரத்து அதிகாரமிருந்தும்,அதைச் செய்யாமல்,தமிழகச் சட்டமன்ற தீர்மானம் இயற்றி,அதை மத்திய உள் துறைக்கு அனுப்பிவிட்டு, பொறுப்பைத் தட்டிக் களித்தார். இப்படி தீர்மானம் இயற்றியவர்,அந்த மூவரின் தண்டனைக் குறைப்பு வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் வரும் போது,தனது வழக்கரிஞரை விட்டு எதிர் வழக்காடினார்.இப்படிப் பட்ட இரட்டை வேடதாரியின் இரட்டை இலை மலர்ந்தால் ஈழம் கிடைக்குமா? சீமானுக்கே வெளிச்சம்.
          4.உச்சநீதி மன்றத்திலும் தமிழக வ்ழக்கரிஞர்,அவர்களின் தண்டனைக் குறைப்பிற்கு மைய அரசு வழகறிஞருடன் கை கோர்த்தார்.இப்படிப் பட்ட ஜெயாவின் இரட்டை இலை மலர்ந்தால் ஈழம் கிடைக்குமாக்கும்.
          5.இதையும் மீறி உச்சநீதி மன்றம் தண்டனையைக் குறைத்தது.அவர்கள் ஏற்கனவே 22 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்ததால்,தற்போதைய ஆயுள் தண்டனை விடுதலைச் சட்டத்தின் படி,அதற்குப் பொருப்பான அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்புக் கூறியது.அரசியல் சட்ட விதிகளின்படி, ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலைச் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க முடியாது.அது முழுக்க முழுக்க மாநில அரசின் உறிமை.இபொழுது மைய்ய உள்துறை ராஜிவ் கொலையாளிகளின் விடுதலையை நேரடியாக மறுக்கவியலாது,அது உச்சநீதிமன்றதை நாடியிருக்கிறது என்பதே அதற்குச் சான்று.அப்படியிருக்க ஜெயா,”மூன்று நாட்களுக்குள் முடிவு அறிவிக்கவில்லை என்றால், நானே விடுதலை செய்து விடுவேன்” என்று மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்து, புதிய வழிகாட்டுதலை ஏன் செய்தார்?உள்துரைக்கு அதிகாரம் இல்லை இன்று தனது வழக்கறிஞரின் வாயிலாக இன்று வாதாடும் ஜெயா, அன்று ஏன் அவர்களுக்கு அனுப்பினார்? தமிழக மக்களை ஏமாற்றத்தானே? உள்துறையிலுள்ள அவரின் லாபியாளர்களுக்கு வழக்குமன்றத்தை நாட 3 நாள் அவகாசம் போதும் என்பதை ஜெயா அறிவார். இதுவரை அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப் பட்ட மாநில உறிமையை இந்தத் தருணத்தை வைத்து இந்த ஆரியக் கூட்டம் உச்ச நீதி மன்றத்தின் துணையுடன்,பறிக்க ஜெயா வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார் என்பதைத்தானே இதுகாட்டுகிறது. ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யாமல் தடுத்துவிட்டு, சீமான் போன்ற முடாள்களை நம்பவைத்து தமிழகத்தில் ஜெயா அரசியல் இலாபமும் தேடுவதற்கும், மய்ய அரசில் உள்ள ஆரிய லாபிகளுக்கு,மாநிலங்களின் அதிகாரத்தை பறிப்பதற்கான சந்தர்ப்பம் கொடுக்கவும் ஜெயாவும் அவரது லாபியும் சேர்ந்து நடத்தும் நாடகம் அல்லாமல் வேறு எது.இப்படிப் பட்ட ஜெயாவின் இரட்டை இலை வெற்றிபெற்றால் தமிழ் ஈழம் மலருமா?
          6.முதல் நாள்வரை நளியின் விடுமுறைக்கான விண்னப்பத்தை,”அவர் வெளியே வந்தால் சட்டம் ஒழுங்கு குறையும் என்று வாதிட்ட ஜெயா,உச்ச நீதிமன்ற தீர்ப்புவந்தவுடன் அவரையும் இந்த மூன்று பேருடன் விடுதலை செய்வேன் என்று அறிவித்து,நளியின் விடுமுறை விண்ணப்பத்திலும் மண்ணையள்ளிப் போட்டு,தன் விருப்பத்தை நிரைவேற்றிக் கொண்டார் ஜெயா.இப்படிப் பட்ட இரட்டை இலை வென்றால் ஈழம் மலருமா? சீமானுக்குத்தான் வெளிச்சம்.
          7.முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த இரட்டை இலை, ஈழம் மலர அனுமதிக்குமா? பழ.நெடுமரங்களுக்குத்தான் வெளிச்சம்.

          சீமான் சாமியோவ்!இரட்டை வேடம் இரட்டையிலை.சரியான பொருத்தம் போங்கோ!

      • ஒரு லட்சம் கோடி உலக வங்கி கடனை அடைத்து ஒரு லட்சம் கோடி உலக வங்கியில் வரவு வைத்துள்ளாராம் நரேந்திர மோடி என்று சீமான் ஒரு மேடையில் சொல்லும் போது

  16. மிக அருமையான மறுமொழி! அன்பனின் கருத்துக்கள் தமிழக அரசியல் வரலாற்றை அப்படியே வடித்திருக்கிறது! இதில் பெரும்பகுதி வரலாறு,நடந்த நாடகங்கள் அனைத்தையும் கண்டவன் நான்!
    தமிழ்னாடு சிலரின் சதிவலையில் சிக்கி மீண்டும் அடிமையாகிறது என்பதே உண்மை! இன்று தமிழக அரசில் முக்கிய பதவிகளில் தமிழன் எவன் இருக்கிறான்? கேரளாவிலோ, கர்னாடகத்திலோ இதுநடக்குமா?

  17. Anavathin..Uchiyil..Yerkkanave…Nindru/Adi…Adangiya..Varalatrai//Jaya..marandhu..Vittu…Varthia/Arikkaipppor…Nadathi..Arasiyal …….Sunami..Vellathil..MOOLKIPPONA…Avarai…KAIkoduthu..Thooki..vittathu…CPM/CPI/DMDK..Illaatha…Nilaiyil…Pala…thokuthikalil…Petririndha..Vetri..kalai…Ilzhkka..pokiraar…PRIME..Minister…KANAVU.Digital…Bannerkaload…Mudindhu…Vittathu.??CM..Pechil..Suruthi..Kurandhu…Vittathe…Idhai..Kaattukirathu….AMMA..Vai..PIRATHAMAR…AKKUVOM…ENDHA…AMMAVAI?????Puriyamal..Pulambum…Nilayil…Alum..Katchi…

  18. இந்த விவாத மேடை,ஜெயாவையும் அவரை வழிகாட்டும் கூட்டத்தைப் பற்றியது.அவர் சார்ந்த கூட்டத்தினர் எந்த நோக்கத்துக்காக இப்படி வழிநடத்துகிறார்கள் என்பதைத்தான் பதிவு செய்துள்ளேன்.அதுவும் இராஜிவ் காந்தியின் கொலைக்கு,மத்தியிலுள்ள இந்த லாபியின் வழிகாட்டுதலின்படி ஈழத்துக்கு அமைதிப் படை அனுப்பியது, ஒரு காரணமாகியது.இராஜிவின் கொலையியால் பயனடைந்தது ஜெயா என்பதனால்தான் நீங்கள் கட்டம் கட்டியிருக்கும் கருத்தைக் கூறினேன். அதற்குப் பதிலளிக்கலாமே.இந்த விவாதம் தமிழனுக்கு எதிரான எல்லா சக்திகளைப் பற்றியது அல்ல.இந்த நிலையில் குறிப்பிட்ட விவாதத்தை திசை திருப்ப நினைப்பது,ஜெயாவையும் அவரை வழி நடத்தும் கூட்டத்தினரையும், அவர்கள் தமிழ் இனத்துக்குச் செய்யும் சண்டாளத்தனத்தை மறைக்க முயலும் ஒரு செயலாகும் என்றுதான் கருதப் படும். தமிழர்களை திராவிட எச்சங்களின்பால் திசை திருப்பிவிட்டுவிட்டால்,ஆரிய எச்சங்கள் தமிழ்கதில் எக்காளமாக ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் போலும்.இங்கு ஜெயராம் என்ற நடிகர் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்டதுடன்,தமிழகத்தை விட்டு வெளியேறியதாகத் தகவல் உள்ளது.மெட்ராஸ் கஃபே தமிழகத்தில் திரையிடமுடியாமலே முடக்கப் பட்டது.இன்று இனம் திரைப் படம் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளது மட்டுமன்றி லிங்குசாமியை வீதியில் நின்று புலம்பும் அளவு நிலையேற்படுத்தப் பட்டுள்ளது.ஆனால் காலமெல்லாம் தமிழ் இனத்தை எல்லாப் பக்கத்திலும் வஞ்சித்துக் கொண்டு இருக்கும் சோ.ராமசாமிகளையும், சுப்பிரமணிய சாமிகளையும், ராஜபக்ஷேக்களிடம் விருந்து உண்டு மகிளும் மௌன்ட் ரோடு மகாவிஷ்ணாகிய இந்து ராமையும் சூஷ்மா ஸ்வராஜையும் உணரச் செய்ய முடியவில்லையே.ஏன்?இந்தியாவின் நான்கு தூண்களிலும் அப்படிப் பட்ட அளவற்ற வலிமையையும் பாதுகாப்பையும் இந்திய அரசியல் சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.இது பற்றி பிற பதிவுகளில் நான்”மத்தியில் அதிகாரவர்க்கத்தின்(பாராளு மன்றத்துக்கு அல்ல) கையில் அதிகாரம் குவிக்கப் பட்ட இந்திய அரசியல் அமைப்பு ஏற்பட்டதே இந்தக் கூட்டதினரின் ஆட்டத்தை உறுதி செய்வதற்காகத்தான்” என்று பதிவு செய்துள்ளேன்.நீங்கள் குறிப்பிடும் திராவிட எச்சங்கள்தான் ஒன்றிணைந்த தமிழகத்தில் இந்தியாவிலேயே 1921 இல் சாதிய பிரநிதுத்துவ சட்டம் இயற்றி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கொண்டுவந்தது.1938 இல் இந்த திராவிட எச்சங்கள்தான்,ஆரிய எச்சங்களால்(vedic religion) ஏற்படுத்தப் பட்ட தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது.ஆனால் ஆரிய எச்சம் 1952 இல் என்ன செய்தது? குலக் கல்வி முறை ஏற்படுத்தப் படவில்லையென்றால் அக்கிரகாரத்தவருக்கு யார் சிறைப்பார்கள்.யார் மலம் அள்ளுவார்கள் என்ற வியாக்கியானத்துடன்(மயிலைக் கூட்டத்தில் அன்றய தமிழக முதல்வர் இராஜாஜி) குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததுடன்,12000 கிராமத்திலுள்ள பள்ளிகளையெல்லாம் இழுத்து மூடியது.திராவிட எச்சங்களின் தவறுகளை எழிதில் முறியடிக்க முடியும்.ஆனால் ஆரிய எச்சங்களின் கழுத்தறுப்பை எழிதாக முறியடிக்க முடியாது.சீமானைப் பற்றிய கருத்துக்கு எனது பதில்,”அவர் திராவிட எச்சங்களை சாடும் பொழுது,இங்குள்ள ஆரிய எச்சங்களைத் தமிழராக்கிக் கொண்டிருக்கிறார்.” என்பதுதான்.மலையாளிகள் கடை வைத்து இருக்கிறார்களாம்.திருவனந்த புரத்திலும்,பெங்களூரிலும் அம்மாநில மொழியினரை விட தமிழர்கள்தான் அதிகமான கடை வைத்துள்ளனர் என்பதை இவர் அறிவாரா?

  19. யாழ்-வெள்ளாள வியாசா ,

    நீ பஞசம் பொழைக்க யாழ்பாணம் ஓடுவ !,வெளிநாட்டுக்கு அகதியா ஒடுவ !, ஆனா அடுத்தவன் இங்கு வந்தால் ஒனக்கு நோவுதா ?

    viyasan said://நிலங்களை இழந்த வேளாளர்கள் தான், தமிழ்நாட்டை விட்டு, யாழ்ப்பணத்தில் குடியேறிய யாழ்ப்பான வெள்ளாளர்கள்// feed back 96.1.1.1
    https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#respond

    viyasan said://ஆனால் அவர்களை விட மோசமாக, தமிழர்களுக்குக் கூட இருந்தே குழி பறிக்கும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள்( உதாரணமாக மலையாளிகள்) இயங்குகிறார்கள்//

Leave a Reply to Venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க