privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

-

ந்திய வங்கிகள் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்த 406 வாராக் கடன் கணக்குகளின் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

24 வங்கிகளில் உள்ள இந்த 406 வாராக் கடன் கணக்குகளின் மதிப்பு ரூ 70,300 கோடி. இந்த கணக்குகளோடு வெளியிடப்படாத பிற வாராக்கடன் கணக்குகளையும் சேர்த்தால் இந்திய பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு செப்டம்பர் 2013-ல் ரூ 2.36 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மார்ச் 2008-ல் ரூ 39,030 கோடியாக இருந்தது.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 4.95 லட்சம் கோடி. 5 ஆண்டுகளில் வாராக் கடன்களின் மதிப்பு 1.97 லட்சம் கோடி மட்டுமே அதிகரித்தது என்றால் மீதி என்ன ஆனது? ஒன்று, வசூலிக்க முடியவில்லை என்று வங்கிகள் கை விட்டு விடுகின்றன அல்லது கடனாளிகளுக்கு புதிய கடன்களை கொடுத்து பழைய கடனை சரி செய்து கொள்கின்றன, வாராக் கடனாக இருந்தது இப்போது புது கடனாக மாறி விடுகிறது.

இவ்வாறு 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் வசூலிக்க முடியாததாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ 2.04 லட்சம் கோடி. புதுக் கடன் கொடுத்து திருப்பி வரக் கூடிய கடன்களாக மாற்றப்பட்ட வாராக் கடன்களின் மதிப்பு ரூ 3.25 லட்சம் கோடி.

முதலாளி
ஓவியம் – முகிலன்

தொழில் முனைவு, வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் கார்ப்பரேட்டுகள், தமது முந்தைய திட்டங்களில் குவித்த லாபத்தில் ஒரு பகுதியை (ரூ 1,000 கோடி என்று வைத்துக் கொள்வோம்) மூலதனமாக போடுகின்றன. எஞ்சிய பகுதிக்கு வங்கியில் கடன் (ரூ 9,000 கோடி என்று வைத்துக் கொள்வோம்) வாங்கிக் கொள்கின்றன. இதற்கு மேல் குஜராத் போன்ற இடங்களில் மோடி பாணியில் குறைந்த விலையில் நிலம், மின்சாரம், வரிச்சலுகை என்று வளைத்துப் பொடுகின்றன. அதாவது, இவர்கள் கொடுக்கும் ‘வேலை வாய்ப்பு’, ‘வளர்ச்சி’ அனைத்துமே யாரிடமிருந்தோ எடுத்த பணத்தில் நடைபெறுகின்றன. உண்மையில் தொழிலாளர்களின் உபரி உழைப்பை சுரண்டி லாபத்தை குவித்து தம்மை வளர்த்துக் கொள்வதுதான் அவர்களது நோக்கம்.

சந்தை சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தமது திட்டத்தில் வெற்றியடைந்தால் லாபத்தை எடுத்துக் கொண்டு, வளர்ச்சிப் பணி என்ற பெயரில் மக்களை ஏமாளியாக்கி, தமது கொள்ளைக்கு வசதி செய்து தரும் நாட்டை விற்கும் மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும் அடுத்த மாநிலத்துக்கு அல்லது இன்னொரு நாட்டிற்கு தமது அடுத்த சுற்று சுரண்டலை நடத்த போய் விடுவார்கள்.

தோல்வியடைந்தால் புதுப்பிக்கப்பட்ட கடன்கள், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், வாராக் கடன்கள் என்று வங்கிகளை மொட்டையடித்து நாமம் போட்டு விடுவார்கள். என்ன நடந்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கை ஆடம்பரத்துக்கோ, ஏற்கனவே குவித்து வைத்த மூலதனத்துக்கோ எந்தக் கேடும் வருவதில்லை.

வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள சில நிறுவனங்களை பார்த்தால் அந்த உண்மை தெரியவரும். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷரில் ஆரம்பித்து, வகை வகையான பெயர்களில் கடன் கொடுக்காமல் மோசடி செய்திருக்கும் முதலாளிகள் சொந்த வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

  • கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
  • வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
  • எலக்ட்ரோதெர்ம் இந்தியா –  ரூ 2,211 கோடி
  • ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
  • ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
  • எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
  • சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
  • இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
  • ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
  • ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
  • வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி

ஏப்ரல் 18, 2014 நிலவரப்படி இந்திய வங்கித் துறையில் மொத்த வைப்புத் தொகை அளவு ரூ 78.69 லட்சம் கோடி, கொடுக்கப்பட்டிருக்கும் கடன்களின் மதிப்பு ரூ 60.36 லட்சம் கோடி. இவற்றில் சுமார் 10% வாராக் கடன்கள் என்று பாரிசைச் சேர்ந்த சிந்தனை குழாம் மதிப்பிட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 2015 வாக்கில் 14% ஆக உயரும் என்று ஃபிட்ச் என்ற தர நிர்ணய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழலில் 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று வானத்தையும் பூமியையும் புரட்டிப் போட்ட பத்திரிகைகள் இந்த பகற்கொள்ளையை பற்றி இரண்டு பத்தி செய்தி மட்டும் வெளியிட்டு விட்டு மோடியின் ‘வளர்ச்சி’ புராணம் பாடஆரம்பித்து விட்டன.

கார்ப்பரேட் சூதாட்டத்துக்கு கடன்
கார்ப்பரேட் சூதாட்டத்துக்கு கடன்

இந்த கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தி, ஸ்பான்சர் வாங்கி, ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்திய அண்ணா ஹசாரே, மம்தா பானர்ஜியுடன் கூட்டணி ஒத்து வராமல் ஒதுங்கியிருக்கிறார்; அவரது அரசியல் சீடர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதில் மும்முரமாக இருக்கிறார்; அண்ணா ஹசாரேவின் இலக்கிய மற்றும் காந்திய சீடர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும். ஆனால் இந்த உத்தமர்கள் யாரும் கார்ப்பரேட் முதலாளிகள் அடித்திருக்கும் இந்த பகல் கொள்ளை குறித்து வாயை திறப்பதில்லை. காரணம் இவர்களது வாழ்வே அந்த வராக் கடன் முதலாளிகளின் தயவில்தான் நடக்கிறது.

கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் ஃபிளெக்ஸ் பேனரில் கட்டி அவமானப்படுத்துவதன் மூலம் வங்கித் துறையை பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும், வேண்டுமென்றே கடனை கட்டாமல், அவற்றை வாராக் கடனாக ஆக்கியிருக்கும் முதலாளிகளின் பெயரைக் கூட வெளியில் விடாமல் அவர்களது கௌரவத்தை காத்து வருகின்றன.

வங்கி ஊழியர்கள் சங்கம்தான் இந்த ரகசிய பட்டியலை கைப்பற்றி வெளியிட்டிருக்கிறது. “ரூ 1 கோடிக்கு அதிகமாக கடன் கட்டாமல் வைத்திருப்பவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்” என்றும், “வேண்டுமென்றே கடன் கட்டாமல் வைத்திருப்பதை குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும்” என்று வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. கருப்பு பணம் இருப்பதாகவும் அதை அடுத்த ஃபிளைட்டில் கொண்டு வரப்போவதாகவும் வீரம் காட்டும் புலிகள் எவையும் இந்த வராக் கடன் கொள்ளை முதலாளிகள் குறித்து மௌனவிரதம் இருக்கின்றன. சட்டபூர்வ கடனையே வாங்க முடியாதவர்கள், சட்ட விரோத கருப்பு பணத்தை கொண்டு வருவார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம்.

கந்து வட்டி போட்டு மக்களை சுரண்டும் தனியார் வங்கிகளைப் பொறுத்த வரை கடந்த 4 ஆண்டுகளில் (2009 முதல் 2013 வரை) வாராக் கடன்களின் மதிப்பு ரூ 46,231 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆனால், “பொருளாதார வளர்ச்சி 9%-லிருந்து 5% ஆக குறையும் போது கடன்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்படுவது இயல்பானதுதான்” என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கொச்சார். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனிநபர் கடன்களில் பிரச்சனைகளை சந்திக்கவில்லை, கார்ப்பரேட் கடன்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது,  தனிநபர்கள் கடன் கொடுக்க வேண்டியிருக்கும் போது குண்டர்களை அனுப்பி, சொத்தை பறிமுதல் செய்து வசூலித்து விடும் வங்கி, கார்ப்பரேட்டுகளின் கடன்களை வாராக்கடனாக காட்டி மழுப்புகின்றது. மேலும் தனியார் வங்கிகளின் வராக்கடன்கள் என்பது அவைகளின் பினாமி தொழில்கள் மற்றும் முதலாளிகள் நலனுக்காகவும் திசை திருப்பப்படலாம். இல்லையென்றால் தமது பணம் வரவில்லை என்று இவர்கள் ஓய்ந்து போக மாட்டார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தின் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் மந்திரவாதியாக அமெரிக்க நிதி நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனோ, “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்திருப்பது கவலை தரக்கூடியதுதான். ஆனால் அது சரியாகி விடும் என்று நம்புகிறேன்” என, ‘நம்பிக்கைதானே எல்லாம்’ என்று சீரியசாகவே அசடு வழிந்து தனது எஜமானர்களுக்கு தொண்டு செய்கிறார்.

‘பொருளாதார சுணக்கமும், உயர் வட்டி வீதங்களும் சேர்ந்து நிறுவனங்கள் கடன்களை திரும்பி செலுத்துவதை கடினமாக்கியிருப்பதால் வாராக் கடன்கள் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றன’ என்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். அதாவது பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்து, வட்டி வீதம் குறைவாக இருந்தால் இவர்கள் தொழில் முனைவு செய்து கடன் கட்டி பொறுப்பாக நடந்து கொள்வார்களாம். இல்லை என்றால், கடன் வாங்கி நாமம் போடுவார்களாம்.

இதுதான் முதலாளிகள் நாட்டை வளர்க்கும் லட்சணம். இந்த முதலாளிகளுக்காகத்தான் மோடியும், காங்கிரசும், ஜெயாவும், திமுகவும் கட்சி நடத்துகின்றன. இத்தகைய கட்சிகள்தான் தேர்தலை தீர்மானிக்கின்றன. அந்த தேர்தலில் நீங்கள் ஓட்டு போடுவதைத்தான் ஜனநாயக கடமை என்று ஊடகங்கள் சாமியாடுகின்றன.

ஆக சுற்றி வளைத்து ஏன் பேச வேண்டும்? மல்லையா போன்ற மங்காத்தா முதலாளிகள், மக்கள் சேமித்த அரசு வங்கிப் பணத்தை, கடனாக பெற்று நாமம் போடுவதற்குத்தான் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள், சரிதானே?

மேலும் படிக்க