ப்ளஸ் டூ தேர்ச்சி : மண் பூரிக்கும் மலர்கள் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள்!
- துத்திப் பூக்களின்
எளிமையும், ஈர்ப்பும்
எங்கள் மாநகராட்சி
அரசுப்பள்ளி மாணவர்கள்
பாதைகள் மறிக்கும்
முட்களைத் தாண்டி
வெற்றிக்கொடி கட்டிய
வேலிப் பூக்கள்!
- புலர் பொழுதின் ஊக்கம்
விடிவானின் அமைதிப் பேரழுகு
எங்கள்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
வசதிகள் குறைவு
எனினும், நூலாம் படைகள் தாண்டி
ஓட்டை, உடைசல்களுக்கிடையே
மங்கியத் தாழ்வாரங்களை
ஒளிபூசி உயிர்ப்பிக்கும்
சூரிய மலர்கள்
எங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
- மினுக்கும் கவர்ச்சி இல்லை…
மீடியாக்களின் பீற்றல் ஒளி இல்லை…
ஆடம்பர விளம்பரமில்லை…
அருகிய ஈரத்தில்
இறுகிய மண்பசையில்
கிடைத்த வாய்ப்பில்
முளைத்த விதைகளாய்
எழுந்த மணிகளே…
அரசுப்பள்ளி மாணவர்களே!
உங்கள் தேர்ச்சியில்
உவக்கும் கிழக்கும்!
- கட்டாய நன்கொடை இல்லாமல்,
களவாட பல ட்யூசன் இல்லாமல்,
உறவாடும் உழைப்பின் தரத்தால்
கல்வித் தரத்தை களத்தில் மலர்வித்த
அரசுப்பள்ளி ஆசிரியர்களே…
உங்கள் மகத்தான சாதனைக்கு
மக்களின் மனதினிய வாழ்த்துக்கள்!
– துரை.சண்முகம்