privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?

கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?

-

ராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கிறார். முன்னர் பாஜகவின் தலைவராகவும் தற்போது மோடி அரசாங்கத்தில் மூத்த அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.

நிதின் கட்காரி
நிதின் கட்காரி

இவரது படுக்கை அறையில் ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிக்கப் பட்டதாக செய்தி வெளிவந்தாலும், முக்கியமாக யார் வைத்தார் என்ற தகவல் சிபிஐ, ரா, ஏன் சிஐஏ-வுக்கே கூட தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். அப்பேற்பட்ட விசயத்தை, இந்தியாவில் வேறு எந்த ஊடகங்களிலும் நீங்கள் படிக்க முடியாத தகவலை வினவு கண்டுபிடித்து கூறுகிறது.

முதலில் இந்த தகவலை வெளியிட்ட பத்திரிகை சண்டே கார்டியன். தற்போது பாஜகவில் செய்தித் தொடர்பாளராக இருக்கும் எம்.ஜே அக்பர்தான் இந்த பத்திரிகையை தொடங்கியவர். இப்போது அவர் இந்த பத்திரிகையில் இருந்து விலகி விட்டாலும், இந்நாள் பா.ஜ.க காரர் முன்னாளில் ஆரம்பித்த பத்திரிகையில் பா.ஜ.க எதிர்ப்பு செய்தி வராது என்று நம்புவோம்.

“இது உண்மையல்ல, முற்றிலும் ஊகம் மட்டுமே” என்று உடனே டிவிட்டரில் நிதின் கட்காரி மறுத்து விட்டார். அனேக பாஜக தலைவர்களும் இது குறித்து உதடுகளை திறக்க மறுக்கிறார்கள். சுப்ரமணிய சாமி மட்டும், “இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சதி” என்று சுடச்சுட பதில் அளித்திருக்கிறார். இதிலிருந்தே சு சாமிக்கும் வைத்தது யார் என்று தெரியும், அதை மறைக்க வேண்டிய அவசியமும் தெரியும் என்பதெல்லாம் புரிகிறது. ஒரு வேளை சாமி சொன்னதுதான் உண்மை எனும் பட்சத்தில் பாஜக தலைவர்கள் எல்லா தொலைக்காட்சி கேமராக்களையும் வரவழைத்து அறம் பாடி பற்ற வைத்திருப்பார்கள்.

மற்ற விலைவாசி பிரச்சினைகளையெல்லாம் திசைதிருப்பிவிட்டு காங்கிரசு மேல் கவனத்தை குவிப்பதற்கு இதைவிட பெரிய உதவி கிடைக்காது. அப்படி செய்யவில்லை, மட்டுமல்ல, உடன் மூடி மறைக்கவே முயன்றிருக்கின்றனர் என்பதிலிருந்தே சு.சாமியின் கருத்து, ஒரு காரியவாதக் கிறுக்கனின் சதித்தனம் கொண்ட உளறல் என்பது தெரிகிறது. இதனால் காங்கிரசு கூட்டணி யோக்கியர்கள் என்பதல்ல.

கட்காரி லேசுப்பட்ட ஆசாமி அல்ல, முக்கியமான தலைவர், ஆர்.எஸ்.எஸ் உடன் நெருக்கமாக இருப்பவர், பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு தொடர்புடையவர், எனவே காங்கிரசு அரசுதான் திட்டமிட்டு வைத்திருக்கும் என்று வாதிடுகிறார் சாமி. கட்காரி தேர்தலில் வெற்றி பெற்று இந்த துறையில் அமைச்சராகி, எண் 3 தீன் மூர்த்தி லேன் குடியிருப்பில் தங்குவார் என்பதெல்லாம் தெரிந்தால்தான் அவரது படுக்கையறையில் தேர்தலுக்கு முன்கூட்டியே  சரியாக வைக்க முடியும். இன்று பதவியில் இல்லை என்றாலும் காங்கிரசு கட்சி தனது செல்வாக்கின் மூலம் படுக்கையறையில் வைக்க ஏற்பாடு செய்திருக்கும் என்றெல்லாம் சாமி வாதிடக் கூடும். ஆனால் அதை பாஜக வே கடுமையாக மறுக்க வேண்டியிருக்கும்.

ஒட்டுக் கேட்டல்கட்காரி விவகாரத்தில் ஒட்டுக் கேட்புக் கருவி இருப்பது தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டதாக சண்டே கார்டியன் கூறியிருக்கிறது. பிறகுதான் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங், “ மோடியின் அமைச்சர் ஒருவருக்கே இதுதான் நிலைமை, என்றால் கடுமையாக  விசாரித்து பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிப்பது அரசின் கடமை” என்கிறார். இவர் காலத்தில் அமைச்சர்களது மின்னஞ்சல் கூட அமெரிக்காவின் பார்வைக்கு போனது குறித்து இதே சிங் மவுனமாக இருந்தது வேறு கதை.

மேலும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றரின் வீட்டிலும் ஒட்டுக் கேட்பு மற்றும் இதர உளவுக் கருவிகள் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. அப்போது இன்று பாஜக கடைபிடிக்கும் மவுனத்தை அன்று மன்மோகன் சிங் கடைபிடித்தார். இன்று மவுனத்தை கடைபிடிக்கும் சுஷ்மா சுவராஜ் அன்று காங்கிரசு அரசை கண்டித்து பேசியிருக்கிறார்; அப்போது சால்ஜாப்பு சொன்ன காங்கிரசு தலைவர்களை கண்டித்து அமைச்சர்களின் சுதந்திரம், உரிமை என்னானது என்றெல்லாம் தேசபக்தி பொங்க பேசியிருக்கிறார். அதே பொங்கல் இன்று ஊசிப்போய் நீர்த்துப் போய் டங்கலானது ஏன்?

இந்த ஒட்டுக் கேட்பு கருவி மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தும் அதி உயர் தொழில்நுட்பக் கருவி என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஆகவே இது நமது ஏட்டையா போலிசு நிறுவனங்களுக்கு கிடைக்கவோ,தெரிந்திருக்கவோ வாய்ப்பில்லை. அதே நேரம் ரா, இராணுவ புலனாய்வு போன்ற உயர் நிறுவனங்களுக்கு தெரியாமல் இருக்காது.

இது வரை தரவுகள், வாக்குமூலங்களை பார்த்து விட்டோம். இதன்படி ஒட்டுக் கேட்பு கருவியை மோடியின் நலனுக்காக இந்திய உளவுத் துறையோ இல்லை அமெரிக்க நலனுக்காக அவர்களோ வைத்திருக்க வேண்டும். இப்படி ஒன்று வைக்கப்படவே இல்லை என்று கட்காரி சொல்வது பொய் என்பது பாஜக பிரமுகர்கள் அமைதி காப்பதிலிருந்தே தெரிகிறது.

பெரியண்ணனின் கண்காணிப்புஅமெரிக்கா ஒட்டுக் கேட்டுத்தான் இந்திய அரசு மற்றும் பாஜக அமைச்சர்களை தெரிந்து கொள்ளவோ, கண்காணிக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்று, வால்மார்ட்டை உடன் அனுமதி, பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை விடு என்று ஒரு பேசிக் மாடல் செல்பேசியில் சொன்னாலே மோடியின் பரிவாரபடை அனுமன் சேவையாக முடித்து விடும். எனினும் அமெரிக்கா கண்காணிப்பு என்பது சாகச நடவடிக்கையாக இல்லாமல் சம்பிரதாயமான நடவடிக்கையாக மட்டும் இருக்கும்.

மோடியோ, பாஜகவோ, அவர்களது  மூலமான ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ அடிப்படையில் ஜனநாயகத்தை அனுமதிக்காத பாசிச கட்டுமானங்களை கொண்டு கட்சி, அரசியல் நடத்தும் பிரிவினர் என்பதால் இங்கே இப்படி அவர்களுக்குள்ளேயே ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதன்படி மோடி தன்னை நிலை நிறுத்தவும், அதிகாரத்தை கேள்வியின்றி ஏற்கச் செய்வதற்கும் அவரது சகபாடிகளை கண்காணிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

இறுதியில் அமெரிக்கா மற்றும் மோடி இருவரது நலனுக்காகவும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு ரா மற்றும் சிஐஏ கூட்டுத் தயாரிப்பாகவும் இந்த ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்டிருக்கலாம்.

ஆக இறுதியில் நமது நீதிமன்றம் கூறும் தீர்ப்பு என்ன? சந்தர்ப்பசாட்சியங்கள், சூழ்நிலைகள், வாதப்பிரதிவாதங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் இந்த ஒட்டுக் கேட்பு கருவி மோடியின் காதுகளுக்கே அதிகம் தேவைப்படுகிறது. அதை சரியாக செய்ய முடியாமல் சொதப்பியது எப்படி என்றே மத்திய அரசின் அதி உயர் உளவுத்துறையினர் இனி யோசிப்பார்கள். அதுதான் பாஜகவின் மௌனத்திற்கு காரணம்.

பாசிஸ்டுகள் தமது நிழலைக் கூட கண்டு அஞ்சுவார்கள் என்பது பொன்மொழி. இந்த பொன்மொழிக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது என்பதோடு நமது நீதிமன்ற நடைமுறைகள் முடிவுக்கு வருகிறது. சொந்தக்கட்சிக்காரனுக்கே இதுதான் நிலைமை என்றால் எதிர்ப்பவர்களின் கதி என்ன? கதியை வெல்ல நினைப்போர் மக்கள் நீதிமன்றங்களில் போராட வேண்டும்.