privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி

-

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 3

ந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன். ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல் கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான்.

சங்கராச்சாரி
இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திரன்தான்.

விரிக்கப்பட்டிருந்த ஆன்மீக கடைகளிலேயே ஈஷா யோகா கடை தான் பெரிய கடை. மொத்தம் 11 அரங்குகள். ஆனால் ஆடித் தள்ளுபடி கிடையாது, “பிக்ஸ்ட் ப்ரைஸ்” தான். தொண்டர்கள் என்கிற பெயரில் இளவயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பலவகையான ஆடுகள் ஜக்கியிடம் சிக்கியிருந்தன. இதுவரை பிடிபடாவிட்டாலும் ஜக்கியும் ஒரு நித்தி தான், எனவே இந்த பிடிபடாத நித்தியிடம் நமக்கென்ன வேலை என்று அடுத்த ஸ்டாலை நோக்கி நகர்ந்தோம், ஆனால் வேலியில் போன ஓணானை எடுத்து விட்டுக்கொண்ட கதையாக, நம்மை போகவிடாமல் தடுத்து இழுத்தனர் ஜக்கியின் ஆடுகள்.

“”நீங்க inner engineering course படிக்கலாமே” என்றார் அந்த பெண்.

உண்மையான எஞ்சினியரிங் படித்தவனுக்கே வேலை இல்லாத போது இது என்னடா இன்னர் என்சினியரிங்” என்று அதைப் பற்றி விசாரித்தோம்.

“யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை தான் இன்னர் என்சினியரிங் கோர்ஸ் சார், இதை படித்தால் பட்டம் கிடைக்கும்” என்றார்.

“சரி இதற்கு ஏன் எஞ்சினியரிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டால், நமது உடலே ஒரு பொறியியல் அமைவாக இருப்பதால் அந்த பெயரை வைத்துவிட்டார்களாம்.

பக்கத்து ஸ்டாலில் கிளிப்பச்சை நிறத்தில் பழைய ஜெட்லி பட யூனிபார்மை அணிந்து கொண்டு நின்ற ஞானோதயம் யோகா குழுவினர், “அந்த யோகா வேற, எங்க யோகா வேற” என்று 4000 ரூபாய் மதிப்புள்ள தமது யோகா பாக்கேஜ்களை வெறும் 3,999 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். தனது பொருள் மற்றதிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பதில் ஈஷாவினர் ஸ்டீவ் ஜாப்ஸ் ரகம் போலும்.

“எஞ்சினியரிங் கோர்ஸ் எல்லாம் இருக்கட்டும் ஜக்கி வாசுதேவைப் பற்றி உங்களிடம் சில கேள்விகளை மட்டும் கேட்க வேண்டுமே” என்றோம்.

“கேளுங்கள்” என்றார் அந்த பெண்.

“அரசுக்கு சொந்தமான வெள்ளியங்கிரி மலையை சட்டத்திற்கு புறம்பாக ஜக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே..” என்று கேள்வியை துவங்குவதற்குள்ளாகவே “இந்த கேள்விக்கு நான் பதில் கூற முடியாது, நீங்க மேடத்தை பாருங்க” என்று வேறு ஒரு பெண்ணை கை காட்டியதுடன் அவரே அந்த மேடத்திடம் அழைத்துச் சென்றார். அந்த மேடம் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்பார் போலிருக்கிறது. கொலையே செய்தாலும் சிரித்தவாறு இருக்கும் ஜெசூட் பாதிரிகள் கூட இந்த விசயத்தில் ஜக்கி கோஷ்டியினரிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

அருகில் சென்றதும் “யெஸ் சார்” என்றார் அதே புன்னகையுடன்.

“சில கேள்விகள் கேட்க வேண்டும்” .

“கேளுங்க” என்றார் சிரித்துக் கொண்டே.

“ஜக்கி வாசுதேவ் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறதே அதற்கெல்லாம் என்ன பதில்” .

“என்ன.. தெளிவா சொல்லுங்க” சற்று தடுமாறினார்.

“நித்தியானந்தாவை போலவே ஜக்கி மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறதே, ஆசிரமத்தில் சில கொலைகள் கூட நடந்திருப்பதாக கூறுகிறார்களே” என்றதும் முகத்தில் வழிந்து கொண்டிருந்த புன்னகை சடாரென்று மறைந்து பேயறைந்தது போலானார்.

“எந்த அடிப்படையில் அப்படி சொல்றீங்க” .

“பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்களே அதை வைத்து தான்” .

“பத்திரிகைகள் பலவும் எழுதும் அண்ணா, அதுக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியுமா” .

sri-saradha-ashram“சரி அதை விடுங்க சட்டத்திற்கு புறம்பாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே அதற்கு என்ன பதில் சொல்றீங்க?”

“அண்ணா இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” .

“ஜக்கியை பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னா எதுக்கு அவரோட இவ்வளவு பெரிய படத்தை இங்கே மாட்டி வசிருக்கீங்க, அவர் சொல்றதை எல்லாம் எதுக்கு எங்களை கேட்கச் சொல்றீங்க” .

“அவர் சொல்றதை எல்லாம் நீங்க கேட்கணும்னு நாங்க சொல்வில்லை. யோகாவுக்கு மட்டும் தான் வரச்சொல்கிறோம்” என்றார்.

“அப்படின்னா எதுக்கு ஜக்கியோட படத்தை மாட்டியிருக்கீங்க?”

“அண்ணா தயவு செஞ்சி நீங்க போங்கண்ணா ப்ளீஸ், நீங்க யோகாவுக்கும் கூட வர வேண்டாம்” .

“வாங்க வாங்கன்னு நோட்டீஸ் அடிச்சி கூப்பிடுறீங்க வந்து ஒரு கேள்வியை கேட்டதுமே போங்க போங்கன்னு விரட்டுறீங்களே எப்படி மேடம்” என்றதும் அவர் அடுத்த வாடிக்கையாளரிடம் யோகவை விற்க போய்விட்டார்.

வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி இன்னொரு புறம் தன்னை பெரிய இயற்கை பற்றாளர் போல காட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளை விற்பதற்கும் ஒரு ஸ்டாலை போட்டிருக்கிறார். நடிகன்டா!

அடுத்த கடை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடையது. அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு ஈராக் மதத்தலைவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் ரவிசங்கர் கடையில் அறிவுரை பெற உள்ளூரில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஆனால் பானரில் மட்டும் hands up பொசிசனில் சிரித்து கொண்டிருந்தார். ஈயே இல்லாத கடையில் நமக்கு மட்டும் என்ன வேலை என்று அங்கிருந்து கிளம்பினோம்.

ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, யோகா, மருத்துவம், என்று சகல சரக்குகளையும் கலந்துகட்டி தள்ளிக்கொண்டிருந்த ஜக்கி, இஸ்கான், வேதாத்ரி, அமிர்தானந்த மயி போன்ற ஆன்மீக கம்பெனிகளிடையே கடுமையான நான்குமுனை போட்டி நிலவிக்கொண்டிருந்ததை கண்கூடாக காண முடிந்தது. நாம் கேள்வியேபட்டிராத மடங்களின் பெயர்களில் எல்லாம் காவி உடை கசங்காத ‘ஆன்மீகவாதிகள்’ அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு அரங்கில், கும்பமேளாவிற்கு வரும் அகோரிகளின் படங்களை மாட்டி ஒரு பெண் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார், “இவங்களை பத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்ல எல்லாம் தப்புத் தப்பா சொல்றாங்க. சரியான விஷயங்களை தெரிஞ்சிக்கிறது முக்கியம். இவங்க நம்ம போல சாதாரணமானவங்க கிடையாது. சின்ன வயலிருந்தே இறைவனோட ஐக்கியப்பட்டு இருப்பவங்க. அவங்க உடலை ஒரு பொருட்டா மதிக்கறதில்லை அதனால, உடல்மீது துணி இருப்பதோ இல்லாததோ உணர்வதில்லை. அவங்க போதை மருந்து அடிக்கிறாங்கன்னு அவதூறு சொல்றாங்க. அந்த மருந்தை நாம அடிச்சா அது போதை தரலாம். ஆனா, ஆண்டவனோட இணைந்திருக்கிற அவங்களை ஒண்ணும் செய்யாது.

அவங்க செத்த பொணத்தை சாப்பிடறாங்கன்னா அதுக்கும் காரணம் இருக்கு. அவங்க எல்லா பொணத்தையும் சாப்பிடறது இல்ல. சில பேரு செத்த பிறகு அவங்களுக்கு முக்தி கிடைக்கணும்னு இறைவன் கட்டளைப்படி அந்த பொணத்தை மட்டும் தேடி சாப்பிடுவாங்க.

அகோரிகள்
அகோரிகள் பற்றிய உண்மைகள்

கும்பமேளாவில கலந்து கிட்டு அவங்க குளித்த தண்ணீரில் குளிக்க நிறைய மக்கள் கூடுவாங்க. நாம எல்லாம் கங்கையில குளிச்சா நம்ம பாவங்கள் கரைஞ்சு கங்கை அழுக்காகிடும். அகோரிகள் குளிச்சாங்கன்னா, அந்த கங்கை சுத்தமாகிடும்” என்றார். இது தெரியாமத்தான் கங்கையை சுத்தம் செய்ய உமா பாரதி அமைச்சரா போட்டு பல நூறு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறது மோடி அரசு. நூறு அகோரிங்கள பிடிச்சுப் போட்டு அன்றாடம் கங்கைக்குள்ள குதிக்க வெச்சா தானா சுத்தமாக போகுது.

“இன்னும் சில பேரு இவங்களால என்ன பலன்னு கேக்கிறாங்க. இவங்கதான் நம்ம நாட்டுக்கே பாதுகாப்பு. அன்னிய படையெடுப்பு வரும் போது இவங்க முன்னணியில் இருந்து சண்டை போடுவாங்க. அதைப் பார்த்து மக்களும் தைரியமா சண்டை போடுவாங்க” என்றார்.  இதன்படி இனி இராணுவத்தை கடாசிவிட்டு அகோரிங்கள மட்டும் அதிகம் உருவாக்கி பயற்சி கொடுத்தால் இந்தியா அமெரிக்காவிக்கே பெப்பே காட்டும் போல.

அடுத்தது, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (ISKON) குழு. இவர்களுடைய பக்தி நூல்களில் உள்ள படங்களை எல்லாம் குழந்தைகள் பார்த்தால் ஒருவேளை பயப்படக்கூடும். அவை கடவுள் படங்கள் என்று கூறப்பட்டாலும் வேற்றுகிரகவாசிகளை போலவே விகாரமாக இருக்கும். இதன் ஸ்தாபகர் பிரபுபாதா கூட அப்படி தான் இருப்பார். அவர் இப்போது உயிருடன் இல்லை.

நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான் என்று இந்த இந்து கம்பெனிகள் அனைத்தும் எவ்வளவு வெளிப்பூச்சு பூசிக்கொண்டாலும் அரங்கிற்குள் ஒரே அடிதடி ரகளை தான். “மற்ற ஆன்மிக சரக்குகள் எல்லாம் சரியானவை அல்ல, பிரபுபாதா தான் கடவுளை அடைவதற்கான சரியான வழியை காட்டியுள்ளார்” என்று கூறினார்கள். “மற்ற ஹிந்து அமைப்புகள் எல்லாம் ஹிந்து தர்மத்தை காக்கவில்லை, ஹிந்து மக்களை சரியாக வழி நடத்தவில்லை, பிரபுபாதா வெறும் நாற்பது ருபாயை வைத்துக்கொண்டு, நன்கொடையாக கிடைத்த ஒரு பயணச்சீட்டில் அமெரிக்காவிற்கு போய் சேர்ந்தார். குடியும் கூத்துமாய் சீரழிந்து கிடந்த அந்த ஹிப்பிகளை எல்லாம் சொற்பொழிவுகளின் மூலமும், பஜனையின் மூலமும் நல்லவர்களாக மாற்றியதோடு தனது சீடர்களாகவும் மாற்றினார்” என்றார் அங்கிருந்த தொண்டர். பிறகு “பார்ப்பனர்கள் எப்படி வேத காலத்திலிருந்து அறிவாளிகளாகவும், வேதங்கள் அறிந்தவர்களாகவும் இருந்தனர்” என்று பார்ப்பன அடிமைத்தனத்தை போற்றிப் புகழ்ந்தார். பார்ப்பன அடிமைப்புத்தி கீழிருந்து மேலே வரை வைரஸ் போல தாக்கியிருக்கிறதே என்கிற வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தோம்.

அடுத்து, அய்யாவழி ஸ்டால். அய்யா வைகுண்டர் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு அய்யா வழிபாடே முழுமையாக பார்ப்பனமயமாகியிருக்கிறது. “அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து தானே இந்து மதத்திலிருந்து வெளியே வந்தார்” என்றோம் அந்த ஸ்டாலில் இருந்தவரிடம்

amirtha“அப்படியில்லை நீங்கள் தவறாக படித்திருக்கிறீர்கள். அவர் அதையெல்லாம் ஏற்றுக் கொண்டார்” என்று அதிர்ச்சி கொடுத்தார். மேலும் “பத்து அவதாரங்களும் அவர் தான், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் அவர் ஏற்கனவே பாடல்களாக பாடியுள்ளார்” என்று கூறி சில பாடல்களையும் பாடினார். மட்டுமின்றி கொஞ்சம் கூட சிரிக்காமல் “இந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்ததும் அவர் தான்” என்றார். வள்ளலார் பற்றி பேசிய போது, “வள்ளலார் எல்லாம் உண்டு களித்து உறங்கிய ஒரு சாதாரண மனிதர்” என்றும், “எங்கள் அய்யா தான் கடவுளின் அவதாரம்” என்றும் கூறிக்கொண்டிருந்த போது “இன்னொரு அய்யாவழிக்காரர் வந்து இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசினால் இந்து தர்மத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று அவரை அமுக்கினார். பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த அய்யா வழிபாட்டையும் பார்ப்பனியம் செரித்து விழுங்கிவிட்டது.

“எட்டும் இரண்டும் பத்து” என்ற தலைப்பில் வள்ளலாரின் படம் போட்டு தனியாக ஒரு மடம் இருந்தது. “நீங்க தனியா யோகா எல்லாம் படிக்க வேண்டாம். வாழ்க்கையே ஒரு யோகமாக இருந்தா போதும். ஜோதி மார்க்கமா இறைவனை தரிசிக்கலாம்னு உலகத்துக்கு சொன்னவர் வள்ளலார். எல்லோரும் ஞானம் பெறலாம் என்பதுதான் இதற்கு பொருள். இந்த உண்மையை மத்தவங்க எல்லாம் வெளியே சொல்றது இல்லை. ரகசியமா வைச்சிக்கிறாங்க” என்றார்.

“அப்போ, அங்க ஈஷா யோகோ, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்ற கடைகளில் யோகா பேக்கேஜ் வாங்க சொல்றாங்களே” என்று கேட்டால்,

“அதெல்லாம் தேவையே இல்லை. அவங்க எல்லாம் வியாபாரத்துக்காக இப்படி செய்றாங்க.”

அப்போதுதான் அந்த கடையில் ஞானசற்குரு சிவ செல்வராஜ் என்பவரின் படம் மாட்டியிருப்பதைப் பார்த்தோம். அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை, “இவை போன்ற ஞான ரகசியங்களை மேலும் விரிவாக தெரிந்து கொள்ள படித்து அறிந்து கொள்ள, ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளிய ஞான நூற்கள்” என்று 25 தமிழ் நூல்கள், 3 ஆங்கில நூல்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஜக்கி, ஸ்ரீஸ்ரீ போல பன்னாட்டு வலைப்பின்னல் அமைக்க முடியாத உள்ளூர் வியாபாரி இவர் என்று புரிந்து கொண்டு நகர்ந்தோம். யார் கண்டது, அடுத்த கண்காட்சியில் இவரும் கூட சர்வதேச பிரபலமாக ஆகியிருக்கலாம். மைனர் நித்தியெல்லாம் குருவாக உலாவரும் போது ஞானசற்குருவுக்கு என்ன குறைச்சல்?

அடுத்து அம்மா அமிர்தானந்தமாயியின் அரங்கிற்கு சென்றோம். அங்கிருந்தவர் ஆன்மீக சிரிப்புடன் வரவேற்றார். அம்மாவைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்த வாக்கியங்களை நம்மிடமும் கொட்டத் தயாரானார். அதற்குள் “எங்களுக்கு தெரியாத சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க சார்” என்றோம்.

“சொல்லுங்க சார் என்ன கேள்வி”.

“அம்மா அமிர்தானந்தமயி ஒரு சாமியார் தானே?”

“ஆமாம்.”

“வெறும் சாமியாரா அல்லது கடவுளின் உருவமா?”

“கடவுளின் அவதாரம் தான் அம்மா.”

sankarachari“சரி அவர் தான் கடவுள் என்றால் கடவுளுக்கு எதற்கு எஞ்சினியரிங் காலேஜ், ஸ்கூல், கோடிக்கணக்கில் பணம் எல்லாம்” என்றதும் ஒரு கணம் திகைத்து நின்றார். பிறகு ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு “எல்லாம் மக்களுக்காக தான், மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தான் அம்மா எல்லாவற்றையும் செய்கிறார்” என்றார்.

“சரி மக்கள் படிப்பதற்கு என்றால் சும்மா படிக்க வைக்கிறாரா பீஸ் வாங்குகிறாரா?”

“பீஸ் தான்.”

“கடவுளுக்கு எதுக்கு பீஸ், ஃபிரீயா படிக்க வைக்கலாமே” என்றதும் கொஞ்சம் டென்ஷன் ஆனார்.

“சார் இங்கே ஆன்மீகத்தை பற்றி மட்டும் பேசுங்க, வேற விஷயங்களை பேசணும்னா எங்களோட சென்னை ஆபீஸ் விருகம்பாக்கத்தில் இருக்கு அங்கே போய் கேளுங்க” என்றார்.

“என்ன மேடம் ஒருத்தர் படத்தை காட்டி இவர் தான் கடவுள்னு சொல்றீங்க, நீங்க சொல்றதை கேட்கிற நாங்க சரி கடவுளுக்கு காசு எதுக்குங்கன்னு ஒரு கேள்வியை கேட்டா இங்கே பதில் சொல்ல முடியாது, எங்க ஆபீசுக்கு வந்து கேளுங்கிறீங்க, பதில் சொல்ல முடியலைன்னா எதுக்கு இப்படி மார்க்கெட்டிங் பன்றீங்க” என்றதும்.

“சார் உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது நீங்க எதுவானாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கங்க” என்றார். சரி எல்லா பிராடு கம்பெனியும் இப்படி தான் பேசும் போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு மேலே நடந்தோம்.

அடுத்து வந்தது வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை. “உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் சார்” என்றோம் ஸ்டாலில் நின்றிருந்தவரிடம்.

“நாங்க கொடுக்கிற பயிற்சி இப்போ அண்ணா யுனிவர்சிடில ஒரு பாடமாவே ஆகியிருக்கு, இதுக்கு பட்டம் இருக்குங்க. எங்களுடையதில் மூன்று பிரிவுகள் இருக்குங்க ஒன்னு தியானம், இரண்டு உடற்பயிற்சி, மூணு காயகல்பம்” என்று விரிவான விளக்கம் அளித்தார்.

“சரிங்க சார் இதனால என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீரும்?”

“என்ன பிரச்சினைகள்னு சொல்லுங்க.”

“உதாரணத்திற்கு இப்போ மின்கட்டணம் உயர்ந்துகொண்டே போகுது, விலைவாசி அதிகரிக்கிறது. இதை எல்லாம் மூச்சு பயிற்சியின் மூலம் எப்படி சரி செய்ய முடியும்?”

மற்றவர்களை போல இவர் சளைக்கவில்லை, டென்ஷனும் ஆகவில்லை உடனடியாக பதிலளித்தார்.

“மின்கட்டணம் உயர்வதற்கு யார் காரணம், நீங்க தான் காரணம். எதுக்கு அளவுக்கு அதிகமா கரண்ட் யூஸ் பன்றீங்க, குறைவா பயன்படுத்துங்க. அல்லது அதுக்கு ஏத்தமாதிரி பொருளாதாரத்தை அதிகமா ஈட்டிக்கொள்ளுங்கள். அதிகமான நேரம் வேலை செய்ங்க, முடியலைன்னா அளவை குறைச்சிக்கங்க. எட்டு இட்லி சாப்பிடுறீங்கன்னு ரெண்டு இட்லியை குறைச்சிக்கிடுங்க. பிரச்சினை வெளியே இல்லை நம்மகிட்ட தான் இருக்கு, நாம தான் இப்படி எதையாவது அட்ஜெஸ்ட் செஞ்சிக்கனும்” என்றார். நாம் அவரிடம் தர்க்கம் எதுவும் செய்யாமல் ஒரு புதிய மாணவனை போல கேட்டுக்கொண்டிருந்தோம்.

பிறகு வேதாத்ரி மகரிஷியை பற்றி கூறினார். “அவர் 24 முறை அமெரிக்காவுக்கு போனார், ” என்று அதை 24 முறைக்கு மேலேயே சொல்லியிருப்பார்.

“சரிங்க ஏன் எல்லா சாமியார்களும் அமெரிக்காவுக்கே போறாங்க. இந்த நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்காங்க அவங்களுக்கு ஆன்மீகத்தை போதிக்கலாமே” என்றோம்.

“அமெரிக்காவிலிருக்கும் சீடர்கள் அழைக்கும் போது தட்ட முடியுமா அதற்காக தான் போனார். மற்றவர்கள் எல்லாம் எதற்கு போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

அமெரிக்காவிற்கும், பெருநகரங்களுக்கும் போகும் மகரிஷிக்கள் ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் வருவதே இல்லையே என்று கேட்டதும், அவங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எகத்தாளமாக கேட்டார். சரிதானே, ஆன்மீக பிசினெசில் ஏழைகளுக்கு இடமில்லையே!

கண்காட்சியில் ஆங்காங்கே சங்கராச்சாரியின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன, மேலும் அவர் தான் இந்த விழாவை துவக்கி வைத்துள்ளார். நாம் சில கடைக்காரர்களிடம் பேசினோம்.

“என்னங்க இதை இந்து ஆன்மீக கண்காட்சின்னு சொல்றீங்க ஆனா ஜெயேந்திரர் மாதிரி கிரிமினல் கேஸ்ல மாட்டினவரை எல்லாம் வச்சு விழாவை துவக்கியிருக்கீங்க, அதோட அவர் படத்தையும் அங்கங்கே தொங்க விட்ருக்கீங்களே” என்றதற்கு

“அவா தான் அதை பன்னான்னு இன்னும் ப்ரூப் ஆகலையே, இருந்தாலும் இப்படி செய்திருக்கப்பிடாது தான். எல்லாத்திலயும் ஃபிஃப்டி ஃபிஃப்டி தான் இருக்கா, பாதி பேர் ஆதரிக்கிறா, பாதி பேர் எதிர்க்கிறா. இதுல நாம என்ன செய்ய முடியும்” என்றார்.

jayendrasaraswathiswamyvr4மற்றொருவர் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோட முடிவு குருமூர்த்தி இருப்பார்,அவராண்ட கேளுங்க” என்றார்.

“அப்படின்னா இதுல உங்களுக்கு பங்கில்லையா” என்றோம்.

“நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“அவரை அழைத்தது தவறு என்பதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா?”

“அதை பத்தி இப்போ பேச முடியாது” என்று கிளம்பினார்.

அடுத்து சிருங்கேரி மடத்தில் உள்ளவரிடம் பேசினோம்.

“நீங்க சொல்றது சரி தான், ஆனா என்ன பண்றது யாரை அழைக்கலாம் கூடாதுன்னு தீர்மானிக்கிறவங்க பெரிய ஆட்களாக இருக்காங்க” என்றார்.

“அவரை அழைத்ததை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“உடன்பாடு இல்லை தான்.”

“அப்படின்னா நீங்க இதை எதிர்க்க வேண்டாமா?”

“நான் எப்படி சார் எதிர்க்கிறது” என்றவர், “இல்லை இன்னும் முடிவு தெரியாத பிரச்சினையை பற்றி நாம பேச முடியாது” என்று நழுவினார்.

இந்து ஆன்மீக சேவை வழங்கும் இத்தகைய ‘உத்தமர்’களைக் கொண்டு நடத்தப்படும் ஆன்மீக சேவைக் கண்காட்சி இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நகர்ந்தோம்.

(தொடரும்)

– வினவு செய்தியாளர்கள்.

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2  வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1 ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

  1. வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி இன்னொரு புறம் தன்னை பெரிய இயற்கை பற்றாளர் போல காட்டிக்கொள்வதற்காக மரக்கன்றுகளை விற்பதற்கும் ஒரு ஸ்டாலை போட்டிருக்கிறார். நடிகன்டா!

    • Hello Brother,
      I live in nearby village called Mullangadu, these things are spread by Christian Missionaries who are having a tough time after Isha has come. The so called land is farm land and Isha has planted many trees and built a beautiful temple are all classes of people. Earlier there where discrimination and Missionaries were exploiting this. If you come here you can see churches in all villages.

      Isha has started a Rural school where our village children are studying for free. They provide quality education.

      If you don’t believe all this, I request you to kindly visit the place before believing all media bullshits propagated by Christian Missionaries.

      • @Vellingirisamy

        Mullangadu?! Sir I have visited the village for 10 days for NSS camp, we even built a small temple. we used to enjoy tea for 50 paisa at that time. After finishing work(?) everyday we used to go the Siruvani river and had fun! Our adventure is to walk from your village to Temple through river.

        Good old memories! And such beautiful/peaceful place on earth!

      • //வெள்ளயங்கிரி வனப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டிவீழ்த்தி சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜக்கி…//

        கூகிள் மேப்ஸ் (Maps)ல் “Isha Yoga Centre Velliangiri Foothills” என்று தேடவும், பின் திரையில் இடது மூலையில் “satellite” க்ளிக் செய்யவும்…நம் ஜாக்கியின் வன ஆக்கிரமிப்புச் சாம்ராஜ்யம் தெரியும்….

      • Velliangirisamy,

        You are factually wrong ( The so called land is farm land ) – No, it belonged to forest department. From iruttupallam till karumbukattu pathi there are farm lands. even karumbukattu pathi is a tribal settlement. Encroachment of land even in those areas started by outsiders long back. I remember a BJP lady called sasikala ( if my memory is correct) had few acres of land near the main road which leads to vala bathrakali temple.. Even that was said to be encroachment done long back.. But however, from that point till isha, it is purely forest.

        The land acquired by isha was previously used by thanikandi pathi – a tribal village. The tribals did farming and used it as grazing land for their cattles. but the ‘farming’ done by tribals are not to be confused with conventional farming done outside. They never disturbed the forest ecology. They harvested pullarisi (a type of wild millet) and stuffs like that. And that too maanavaari..

        I know the tug of war between Bethestha group and isha (paul dinakaran vs jaggi). I also know Bethastha was built on enchroached land (belonged to nallur pathi) But that does not justify Jaggi’s illegal business there. Both are equally criminals..

      • Velligangirisamy,

        Adding to my previous argument, even if we take your logic “farm lands” are correct, how would you justify errecting mammoth constructions and structures in a farm land right in the middle of a forest?

        However my friend, I recommend you an article which came in savukku some time back on this matter. He did exposed the illegal encroachment done by Jaggi & co with concrete evidences.

        • what happened you backed up and now accepting its farm land? Savukku sankar was working for his paymasters PDK & Missionaries. Why can’t savukku sankar talk about 5000 acres encroached by christian institutions. Which is happening wayback from 1980’s ? Why nobody opens up on that? There is institution with about few thousand students where elephants pass thru regularly?!!

          • Parthiban, haven’t you seen the double quote on farm lands mentioned in my comment? Grow up kid 🙂

            No one supports Paul Dinakaran Or any other criminal fake god men like Shankaracharya, Nithi, Sri Sri and other thugs like them.. OK?

            You cannot justify your criminality by pointing fingers on others OK?

            get a life kid

  2. Very very interesting, Good work Vinavu!!! In my early 20s I too visited Rama Krishna Mutt and made a small contribution to them. I lately got matured just after 3 years and have become an atheist. These fanatics will not change and this is they way to expose them. I hope some one who is now reading your reporter’s critical questions (and the shallow responses from these morons) will re-consider their views on religion and become aware of the reality – just like how it happened to me.

  3. இந்த மாதிரி ஆசாமிகளோடு சங்காத்தம் வைத்துக்கொள்ளாமல் கபாலீஸ்வரர் கோவில், கேசவப் பெருமாள் கோவில், நாலாயிரம், தேவாரம் என நிறுத்திக் கொள்வாருமுண்டு!

    • Venkatesan,

      மன்னிக்கவும், இவ்வாறாக ‘சங்காத்தம்’ வைத்துக் கொள்ளாதவர்களும் ஒரு வகையில் மதத்தின் ஆன்மீகத்தின் அடிப்படையில் நடக்கும் கொள்ளைகளுக்கும் ஆத்மீக சுரண்டலுக்கும் உடன்பட்டுப் போகிறவர்கள் ஆகிறார்கள் – தங்களை அறியாமலே.

      வெறுமனே அமைதியான பங்கேற்பு எப்படி குற்றமாகலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. நாஜிசம் கொலைகள் புரிந்த போது எல்லா ஜெர்மானியர்களும் அந்த வெறியாட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் வெறுமனே அமைதியான ஜெர்மானியர்களாக மட்டுமே இருந்தார்கள். இளவரசனைக் கொன்ற போது எல்லா வன்னியர்களும் பாட்டாளி மக்கள் கட்சியாக இருக்கவில்லை, அவர்கள் வெறுமனே அமைதியான வன்னியர்களாக மட்டுமே இருந்தார்கள்.

      இந்த ’அமைதியும்’ ‘ஒதுங்கிப் போதலும்’ தான் ஒரு குறிப்பிட்ட சமூகத் திரளின் நம்பிக்கை அல்லது அடையாளம் சார்ந்து நிகழும் வன்முறைகளுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.

      எனவே, உங்கள் நம்பிக்கையின் புனிதத்தை காப்பாற்றிக் கொள்ளவாவது உங்களைப் போன்றவர்கள் வெளிப்படையாக வந்து இந்த அயோக்கியர்களைக் கண்டிக்க வேண்டியது அவசியமாகிறது.

      இல்லையே நான் தான் இதில் பங்கேற்கவில்லையே, சாத்தியமான எதிரான கருத்தைக் கூட தெரிவித்து இருக்கிறேனே என்று நீங்கள் வாதிடலாம். வன்முறை புறநிலையில் தொட்டறியத்தக்க அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போது அமைதியான பங்கேற்பின் வெறும் கருத்து பௌதீகமான வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெறும் கருத்து என்ற அளவில் இருப்பதில் பயனில்லையே?

      சொந்த சாதி அல்லது சொந்த மதத்தின் இழிவுகளை மற்றவர்களை விட கடுமையாக சாடி எதிர்ப்பதும் முறியடிக்க தோள் கொடுப்பதும் அடிப்படையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஒரு வேளை உங்கள் அமைதியான பங்கேற்பின் எதிர்காலத்தைக் (ஒருவேளை இருந்தால்) காப்பற்றவும் கூட அது ஒரு முன்நிபந்தனை அல்லவா?

      • மன்னாரு,
        வினவு மறுமொழியாளர்கள் பலரைப் போலன்றி, மத ரீதியான எனது தனி மனித உரிமையை உள்ளடக்கி மறுமொழி சொன்னமைக்கு நன்றி.

        வேறொரு பதிவில், பல்வேறு படிநிலைகளில் மனிதர்கள் நிற்கிறார்கள் என்ற என் புரிதலை சொல்லி இருந்தேன். தன்னளவில் வன்முறையற்று இருப்பது ஒரு படிநிலை. நீங்கள் இரண்டாம் படிநிலையில் வன்முறையை எதிர்ப்பது பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.

        நீங்கள் சொல்லும் கோணம் சரியென்று தோன்றுகிறது. “உங்கள் அமைதியான பங்கேற்பின் எதிர்காலத்தைக் காப்பற்ற” என்பது நல்ல உந்துசக்தி. மேலும், இந்த அமைதியான பங்கேற்பு, ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்றும், அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்க என்றும் தோன்றுகிறது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

        கருத்து இவ்வாறு இருப்பினும், செயலேதுமின்றி இருப்பதற்கு தன் வேலை முடிந்தால் போதும் என்ற சுயநலமும், சும்மாக் கிடக்கும் எருமைமாட்டுத்தனமும் காரணம். இந்த பிரச்சனையை ஆன்மீக-இந்துமத விஷயங்கள் என்ற அளவில் சுருக்க முடியாது. பல்வேறு சமூக பிரச்சனைகளிலும் நான் உட்பட பலரும் இப்படித்தான் இருக்கிறோம். கருத்தளவில் எதிர்ப்பு என்றவாறு.

        இந்து மத விஷயம் என்று பார்த்தால், இந்த ஜக்கி போன்ற வியாபாரிகள் மீது எரிச்சல் வந்தாலும், அது முழு வெறுப்பு என்ற நிலையை இன்னும் எனக்கு எட்டவில்லை. “ஒழிஞ்சு போறான் போ” என்ற மனநிலை தான் உள்ளது. மாறாக, நீங்கள் குறிப்பிடும் பௌதீக ரீதியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு விஷயத்தில் தோன்றியுள்ளது. திருமால், ஈசன் கோவில்களில், இம்மதங்களில் ஈர்ப்போடு வந்துள்ளோர் இடையே ஜாதி, வர்க்கம் போன்ற வேறுபாடுகள் இன்றி தொண்டர் குழாம் என்ற வகையில் ஒருமித்து நிற்க வேண்டும் என்பது. அவ்வகையில், இரண்டு விஷயங்கள் எனக்கு கவனம் பெறுகின்றன. ஒன்று, அனைவரும் அர்ச்சகர் ஆவதென்பது. இரண்டாவது, நாலாயிர கோஷ்டியில் இத்தகு வேறுபாடின்றி அனைவரும் சேர முடிவது. உதாரணமாக, காஞ்சி பேரருளாளன் முன்பு, “இமையோர் தலைவா, மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என ஓதும் பக்தி இன்பம் பார்ப்பனருக்கு மட்டுமே என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. பாவிகள். இந்த வரியை பாடியருளிய நம்மாழ்வார் பார்ப்பனர் கிடையாது. கோஷ்டியில் பாட பார்ப்பனர் மட்டும். என்ன கொடுமை சரவணன்.

        மன்னாரு. சரி சொல்லுங்கள். மேலே சொன்ன விஷயங்களில் பௌதீக ரீதியாக நான் என்ன செய்ய பரிந்துரைக்கிறீர்கள்?

        • வெங்கடேசன்,

          நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மாற்றுத் தரப்பை திறந்த மனதோடு பரிசீலக்க உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் பரஸ்பரம் உதவிக் கொள்ள முடிவது ஒன்று மட்டுமே இணைய விவாதங்களில் சாத்தியம் என்று நினைக்கிறேன். எனவே பரிந்துரையை விடுத்து மேலே பேசுவோம்.

          நீங்கள் வைத்திருக்கும் வாதங்களின் சாரத்தை நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன்.

          1) ஹிந்து மதத்தின் உள்ளார்ந்த வரம்புகளுக்கு உட்பட்டு எல்லா மக்களையும் சமமாக பாவிக்கும் நிலை ஒன்றுக்காக நீங்கள் ஏங்குகிறீர்கள் (உங்களது இறுதி பத்தியை நான் இப்படித் தான் புரிந்து கொள்கிறேன் – தவறெனில் திருத்துங்கள்)

          2) அடுத்து தனிப்பட்ட மாற்றத்துக்கான உங்களது படிநிலை விளக்கம் குறித்தானது (பழைய விவாதங்களையும் வாசித்தேன்)

          அடிப்படையில் இந்து மதம் என்று சொல்லப்படுவது வழமையான ”மதம்” என்கிற வரையரைக்குள் அடங்காத ஒன்று. ஆபிரஹாமிய அல்லது பௌத்த அல்லது ஜைன மதங்களோடு இந்து மதத்தை ஒப்பிட முடியாது. ஒரு குறிப்பான ஆன்மீக கோட்பாடோ விளக்கங்களோ இதில் இல்லை.

          ஆனால், இதுவே இந்து மதத்தின் சிறப்பு என்று இப்போது சொல்கிறார்கள். பலவகையான சிந்தனை மரபுகளை உள்ளடக்கியது இந்து மதம் என்றும் அதில் நாத்திகம் கூட உள்ளடக்கம் தான் என்று சொல்கிறார்கள் – அது தனி ஒரு விவாதத்திற்கு உரியது. ஜெயமோகன் போன்றவர்கள் இப்படிச் சொல்பவர்கள். இப்போதைக்கு எனது தரப்பு விளக்கமாக ஜெ வகையறாக்கள் சொல்வது பச்சைப் புளுகு என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். ஏன் என்பதை வேறு சந்தர்பத்தில் விவாதம் எழுந்தால் பேசுவோம்.

          கொஞ்சம் கடுமையான வார்த்தையில் சொன்னால், பிச்சைக்காரனின் எச்சில் தட்டு போல் போனது வந்தது எல்லாவற்றையும் (சிந்தனை, மதம், முரண்பாடான ஆன்மீக கருத்துக்கள்) கலந்து போட்ட இந்த அமைப்பை ஒட்டுமொத்தமாக கட்டிப் பிணைப்பது எது?

          அவ்வாறான ஒரு பிணைப்பை இந்து மதம் உண்டாக்கியிருக்கும் சமூக ஒழுங்கை குறிப்பிடலாம். ஒரு படிநிலையான சமூக அடுக்கு ( உனக்கு கீழே ஒருவன் மேலே ஒருவன் – கீழே இருப்பவனை அடக்கு மேலே இருப்பவனிடம் அடங்கிப் போ). இந்த படிநிலை அமைப்பை நியாயப்படுத்தும் கருத்துக்கள் என்று வரும் போது இந்து மதத்திற்குள் இருக்கும் எல்லா வகை சிந்தனை மரபுகளும் ஒன்று படுவதை நீங்கள் கவனிக்கலாம்.

          இடையில் ஒரு சிறிய விளக்கம், இன்றைக்கு இந்து மரபு என்று சொல்லப்படும் பல சிந்தனை மரபுகள் வரலாற்று ரீதியில் வேத எதிர்ப்பு மரபாக இருந்துள்ளது. பின்னர் அந்த சிந்தனை மரபுகளுக்குள் ஊடுருவி படிநிலை சமூக அமைப்பை நியாயப்படுத்த தேவையான அளவு அதைக் கலப்படம் செய்து திரிபு படுத்தியுள்ளனர். உதாரணம் சித்தர் மரபு. இன்றைக்கு யார் சித்தர்கள் என்று வகைப்படுத்துவதிலேயே குழப்பம் உள்ளது. சிவனுக்கு நாமாவளி பாடியவர்களையும் உள்ளடக்கி அவர்களும் சித்தர்கள் தான் என்றொரு பட்டியலை நம் கையில் கொடுக்கிறார்கள். இதை மறுக்கும் தரப்பும் உள்ளது “அண்டத்தில் உள்ளதை பிண்டத்திலும், பிண்டத்தில் உள்ளதை அண்டத்திலும்” காண்பதைக் கடந்த எதையும் மறுப்பவர்கள் உளர். அவர்கள் சாதியை எதிர்க்கிறார்கள், பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்கள், சடங்கு சம்பிரதாயங்களை எதிர்க்கிறார்களாய் உள்ளனர். இது ஒரு உதாரணம் மட்டுமே; இது குறித்து நீங்கள் விளக்கமாக வாசிக்க டி.டி கோசாம்பி, ரோமில்லா தாப்பர், ராகுல் சங்ருத்யாயன் போன்றோரின் நூலகளை வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

          பார்ப்பனியம் என்று மார்க்சியர்கள் சொல்வதன் பின்னேயுள்ள புரிதலும் பெரியரியவாதிகள் சொல்வதன் பின்னேயுள்ள புரிதலுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. பார்ப்பான் = பார்ப்பனியம் என்று எளிமையான ஒரு விளக்கம் பெரியாரியவாதிகளிடம் உள்ளது. நாங்கள் குறிப்பிடும் பார்ப்பனியம் என்பது குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களைக் குறித்தானது அல்ல. மேலே நான் குறிப்பிட்ட படிநிலை சமூக ஒழுங்கையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் சித்தாந்தத்தையும் தான்.

          ஆக, நீங்கள் விரும்பும் வகையில் இந்து மதத்தின் உள்ளார்ந்த வரம்புகளுக்கு உட்பட்டு எல்லா மக்களும் சமமாக பாவிக்கப்படும் நிலை வருமா?

          வராது. ஏனெனில் அப்படி ஒரு நிலை வர வேண்டுமெனில் இந்து மதம் என்கிற ஒன்று நிலவுவதற்கே ஆதாரமான படிநிலை சமூக ஒழுங்கு உடைந்தாக வேண்டும். அது கட்டிடத்தை தாங்கி நிற்கும் அஸ்திவாரத்தைத் தகர்ப்பதற்கு ஒப்பானது. எனில் இந்து மதத்தின் இருப்பே நொறுங்கிப் போய் விடும்.

          ஆக நீங்கள் விரும்பும் வகையில் சமூகத்தில் Egalitarian நிலை உருவாகவே இந்து மதம் இல்லாதொழிந்து போவதை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது.

          நான் இன்னமும் வெங்கடேசன் ஆகிய உங்களின் தனிப்பட்ட இறை நம்பிக்கையையும், இந்து மதத்தையும் வேறு வேறாகத் தான் பார்க்கிறேன் என்பதை வலியுறுத்துகிறேன். எனவே, அய்யோ மதமே போன பின்னே என்னால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை எப்படி இரசிக்க முடியும் என்று நீங்கள் தடுமாறத் தேவையில்லை – ஒரு வேளை அப்படி ஒரு நிலை வந்த போது உங்களால் மேலும் அதிகமாக இரசிக்க முடியுமோ என்னவோ 🙂

          இரண்டாவது அம்சமான படிநிலை குறித்தும் என்னிடம் சொல்வதற்கு சில உள்ளது… இப்போதைக்கு வேலை நெருக்கடி. முடிந்தால் இன்றோ அல்லது நாளையோ அது பற்றிய எனது மறுமொழியை அளிக்க முயல்கிறேன்.

          -/ மன்னாரு

          • ஏம்பா, மறுமொழி 6 இல் ரெண்டு வரி தானே எழுதினேன். அதுக்கு இவ்வளவு பஞ்சாயத்தா? கோழி ஊருல எங்க சுத்தினாலும் கிச்சனக்கு இழுத்துட்டு வந்து குருமா வெக்கர மாதிரி, இந்து மதம் பத்தி என்ன சொன்னாலும், விவாதத்தை ஒரே புள்ளிக்கு நகர்த்தறீங்க!

            சுருக்கமாக சில கருத்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய எனது பார்வைகளை துண்டு, துண்டாக மற்ற விவாதங்களில் சொல்லி உள்ளேன். இந்து மதத்தை ஒன்று இணைக்க வேண்டும் என்பது என விருப்பம் அல்ல. அது ஒரு சந்தக்கடை. அவரவர் விரும்புவதை எடுத்துக்கொண்டு நகர வேண்டியது தான். வேறு உதாரணம் சொன்னால், அது ஒரு பொது விளையாட்டு மைதானம். மூலைக்கு ஒன்றாக கோலி, கபடி, கிரிக்கட் என விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டுகளை ஒன்று சேர்த்து ஒரே விளையாட்டாக மாற்ற வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஒரு குழுவினர், மற்றொரு குழுவினருடன் அடித்துக்கொள்ளாமல் விளையாட வேண்டும். அவ்வளவுதான். ஒருவருக்கு எதில் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதில் சேர்ந்து விளையாட வேண்டியது. . ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலும் ஈர்ப்பு வரலாம். ஒரு விளையாட்டில் ஈர்ப்பு ஏற்பட்டு விளையாட வந்தவரை, சாதி, வர்க்க ரீதியில் discriminate செய்யக் கூடாது என கருதுகிறேன். நீ இந்த ஜாதி, அதனால நீ பால் பொருக்கி போடு; நீ ஏழை, அதனால கீப்பர் வேலை பாரு; நீ ஒசந்த ஜாதி, போய் பேட்டிங் பண்ணு என்ற நிலை நீங்க வேண்டும். முற்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது பற்றிய கருத்து அல்ல இது. எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விருப்பம்.

            இந்துமதம் தொடர்பாக தற்சமயம் நீண்ட விவாதம் செய்ய வேலைப்பளு ஒத்துழைக்கவில்லை. வினவு விவாதங்களில் மறுமொழிகளை பேசவோ, எழுதவோ அதிக நேர எடுக்காவிட்டாலும், இந்த விவாதங்கள் intellectually draining என உணர்கிறேன். எனது தொழிலும் இதே வகையானது என்பதால் இரண்டையும் ஒரு சேர செய்ய இயலுவதில்லை. இதன் காரணமாக விவாதங்களை பலமுறை தொங்கலில் விட வேண்டி வருகிறது. மன்னிக்கவும், மன்னாரு.

            நீங்கள் சொன்னதில் ஒரு விஷயம் புரியவில்லை.

            // நான் இன்னமும் வெங்கடேசன் ஆகிய உங்களின் தனிப்பட்ட இறை நம்பிக்கையையும், இந்து மதத்தையும் வேறு வேறாகத் தான் பார்க்கிறேன் //

            // இந்து மதம் இல்லாதொழிந்து போவதை முன் நிபந்தனையாக கொண்டிருக்கிறது. //

            இந்து மதம், எனது தனிப்பட்ட இறை நம்பிக்கை இரண்டையும் பிரித்து விட்டு, முதலாவதை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரியா? இதன் பொருள் என்ன? இந்து மதத்தை ஒழிப்பது என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? உதாரணமாக, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் இந்து மதத்தை சார்ந்தது என்பது பொதுவான கருத்து. நீங்கள் இந்து மதத்தை அழிக்கும் போது, இந்தக் கோவிலை என்ன செய்வீர்கள்? இடித்து விடுவீர்களா? அல்லது பூஜை, புனஸ்காரம் எல்லாம் நிறுத்தி விட்டு தொல்லியல் துறை அருங்காட்சியகம் என்ற ரீதியில் ஏதாவதா? தனி மனித இறை நம்பிக்கை என்ற வகையில் இறைவனை கர்த்தர் என்றும், அல்லா என்றும் மட்டும் தான் வணங்க அனுமதி தருவீர்களா? வலங்கை ஆழி, இடங்கைச் சங்கமுடையானாக வணங்க எனக்கு உரிமை கிடையாதா?

            • //நீங்கள் சொன்னதில் ஒரு விஷயம் புரியவில்லை//
              //இந்து மதம், எனது தனிப்பட்ட இறை நம்பிக்கை இரண்டையும் பிரித்து விட்டு, முதலாவதை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரியா? //

              இதில் முரண்பாடு ஏதும் இல்லை. சொல்லப் போனால், உங்கள் மறுமொழியின் துவக்கத்தில் நீங்களே இதற்கான பதிலையும் சொல்லி விட்டீர்கள் 🙂

              //அது ஒரு சந்தக்கடை. அவரவர் விரும்புவதை எடுத்துக்கொண்டு நகர வேண்டியது தான். வேறு உதாரணம் சொன்னால், அது ஒரு பொது விளையாட்டு மைதானம்//

              நீங்களே குறிப்பிடும் “சந்தைக்கடையான” ”பொது விளையாட்டு மைதானம்” ஆகிய இதை இணைப்பது எது என்பது குறித்து தான் நான் விளக்க முற்பட்டேன். பல வகையான நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை செயற்கையாக இணைக்கும் புள்ளி ஒன்று உள்ளது. அது தான் சமூக கட்டுமானம் குறித்த ஒரே விதமான கண்ணோட்டம்.

              அது பின்னூட்ட விவாதங்களில் விளக்கிச் சொல்லும் வரம்பைக் கடந்தது என்பதை நானும் உணர்கிறேன். இதே பொருள் குறித்து அம்பேத்கர் நிறைய எழுதியிருக்கிறார். வாய்ப்பிருந்தால் அவற்றைத் தேடிப் படிக்க முயற்சித்துப் பாருங்கள்.

              ஒரே சின்ன உதாரணம் உங்கள் பரிசீலனைக்காக. சிதம்பரம் கோயிலில் ஆறுமுக சாமியின் வழிபாட்டு உரிமையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் அல்லவா? அதைத் தடுப்பது எது? அந்த உரிமையை எது தடுக்கிறதோ அதுவே இந்து மதத்தின் ஆன்மா என்கிறேன். நாங்கள் ஆறுமுக சாமியின் வழிபாட்டு உரிமைக்காக போராடியவர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. சொல்லப் போனால் “எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விருப்பம்.” என்று நீங்களே குறிப்பிடும் உங்கள் எதிர்கால விருப்பத்திற்கான நிகழ்கால உதாரணம் இது அல்லவா?

              நான் ஆன்மா என்று குறிப்பிடுவதை அகற்றிய பின்னும் நிச்சயமாய் இருக்கப் போகும் உங்கள் தனிப்பட்ட உரிமையின்பாற்பட்ட செயல்பாடு குற்றவுணர்வின்றி தொழிற்படுவதற்கே நான் சொல்வது தான் முன்நிபந்தனை. வேறு சந்தர்பத்தில் இது பற்றி விரிவாக விவாதிப்போம்.

              கடைசியாக – //வலங்கை ஆழி, இடங்கைச் சங்கமுடையானாக வணங்க எனக்கு உரிமை கிடையாதா?//

              எனது பதில் – why not? தாராளமாக உள்ளது!

              இந்த அளவில் விவாதத்தை நான் நிறுத்திக் கொள்கிறேன். வாய்ப்பிருக்கும் போது தொடருவோம். எனக்கும் நெருக்கியடிக்கும் வேலை தான் 🙁

            • நன்று, மன்னாரு. வேறொரு சமயம் விரிவாக பேசுவோம். அதற்கு ஏதுவாக எனது பார்வைகளை பதித்து வைக்கிறேன். உங்கள் கடைசி பதிவு, இந்த பதிவு இரண்டும் அந்த விவாதத்துக்கு துவக்கப் புள்ளியாக உதவும். நீங்கள் அம்பேத்கர் போன்ற பேராளுமைகளின் தோள்களில் நின்று பேசுகிறீர்கள். நான் சொந்த சரக்கை எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லி விடுவோம்.

              — நீங்கள் ஆன்மா என எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அது அழிக்கப் பட வேண்டும் என்பதில் எனக்கு பூரண சந்தோஷம், சம்மதம். புழு, பூச்சி, குப்பை, சத்தை நிரந்த அரிசியை சமைத்துத் தின்னும்போது, எனக்கே எழும் அருவருப்பு; மேலும், சுற்றி இருப்போர் வேறு அதில் புழு உள்ளது என கூவிக் கொண்டு இருக்கிறார்கள். நிம்மதியாக ஒரு வாய் சோறு தின்ன முடிவதில்லை. இம்மலங்களை நீக்குவதில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் உதவிக்கு உள்ளார்ந்த நன்றி.

              — இந்து மதங்களை இணைக்கும் ஆன்மா என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அது அழிந்தாலும் இந்து மதம் என்ற ஒன்று இருக்கும். தற்காலத்திலேயே அப்படித்தான் உள்ளது. இந்த மதங்கள் தத்துவார்த்த விளக்கங்களால் அன்றி, மொக்கையான பல காரணங்களால் இணைந்துள்ளன. “பிள்ளையாருக்கும் சுண்டல், பெருமாளுக்கும் சுண்டல்” போன்ற நடைமுறைகள்; “ரெண்டு பேரும் மாமன்-மச்சான்” போன்ற புராணக் கதைகள்; ஒரு விளையாட்டு விளையாடுபவர், வேறொரு விளையாட்டும் விளையாட, அந்த விளையாட்டை விளையாடுபவர் வேறொரு விளையாட்டு விளையாட, என ஒரு சங்கிலிப் பிணைப்பு. இந்த மொக்கைக் காரணங்கள் இந்து மதம் என்ற ஒரு அவியலை நிலைக்கச் செய்யும்.

              — இந்து மதத்தின் ஆன்மா என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்களோ, அதை இந்து மதத்தில் இருந்து நீக்கிவிட்டாலும், அந்த ஆன்மா வேறொரு உடல் தாங்கி நிலைக்கும். அது தனித்தியங்கிக் கொண்டுள்ளது. சிதம்பரம் பிரச்சனையை தீர்த்தால், அதன் உடனடி விளைவாக தருமபுரி பிரச்சனை தீர்ந்துவிடும் என நான் கணிக்கவில்லை.

              மேலே சொன்னவற்றில் சில விஷயங்களில் நாம் வேறுபடுகிறோம் என நினைக்கிறேன். இவற்றை பின்னர் விரிவாக விவாதிப்போம், மன்னாரு. இப்போது அவரவர் தொழிலைப் பார்ப்போம்! 🙂

              ——————————————-

              “உதாரணமாக, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் இந்து மதத்தை சார்ந்தது என்பது பொதுவான கருத்து. நீங்கள் இந்து மதத்தை அழிக்கும் போது, இந்தக் கோவிலை என்ன செய்வீர்கள்? இடித்து விடுவீர்களா?.”

              நேரடி பதில் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் 🙂

              • இப்போதைக்கு Pending வைக்கக் கூடாது என்பதற்காக

                //நேரடி பதில் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்//

                இல்லை. இடிக்க மாட்டோம் என்பதே எனது பதிலாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். 🙂

                Just for the record, இடிக்க மாட்டோம். நாங்கள் தலிபான்கள் அல்லவே 😉

                மீண்டும் சந்திப்போம்.

        • வெங்கடேசன்,

          ஒரு மனிதனுக்கு பல கட்டங்களில் தான் மாறுதல் ஏற்படுமா? அவ்வாறு தான் ஏற்பட முடியுமா?

          முதலில் உங்களைச் சுற்றிலும் உள்ள சமூக ஏற்றத்தாழ்வை அங்கீகரித்து, அதனால் கொஞ்சமாவது மனச் சலனம் ஏற்பட்டு, இந்தப் புறநிலை எதார்த்தத்தில் ஏதேனும் மாற்றமும், அந்த மாற்றத்தில் பங்கேற்க உங்களுக்குள் அகநிலையில் மாற்றமும் ஏற்பட வேண்டும் என்கிற அளவுக்கு நீங்கள் சிந்திப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

          ஏனெனில், தான் பிறத்தியாரின் தோளில் உட்கார்ந்து கொண்டு (நேர் பொருளில் இல்லாவிட்டாலும் கூட) பிறரின் உழைப்பைத் திருடித் தின்கிறோம் என்ற அடிப்படை உண்மைகூட விளங்காதவர்கள் நிறைந்த ஒரு சமூக பொருளாதாரப் பிரிவினைச் சேர்ந்தவர் ( சாதியை மனதில் வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை) என்கிற முறையில் நீங்கள் சிந்திக்கும் ஜனநாயகப்பூர்வமான திசை தனிப்பட்ட முறையில் பாராட்டுதலுக்குரியது.

          நாம் விஷயத்துக்கு வருவோம்.

          வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் விதிகள் குறித்து ஒரு அறிவியலாளர் என்கிற முறையில் பள்ளிக்கூடத்தை மட்டுமே பார்த்த என்னை விட உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். புதிதாக அவை குறித்து உங்களுக்குப் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. எனினும், இங்கே நீங்கள் ஏற்கனவே அறிந்த சில அடிப்படைகளை சமூகத்தின் மேலும் அதன் அங்கமாக இருந்து அதனோடு உறவாடி வினை புரிந்து கொண்டிருக்கும் நம்மேலும் பொருத்தி விளக்க மட்டுமே முற்படுகிறேன்.

          எந்த ஒரு பொருளும் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறிச் செல்லும் இயக்கம் தான் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றினுள்ளும் தான் இருக்கும் நிலையில் இருந்து அடுத்ததற்கு அடுத்த நிலைக்குச் செல்வதற்கான இயக்கம் உள்ளும் புறமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு பொருள் முந்தைய நிலையிலிருந்து அடுத்ததாக மாற நிகழும் இயக்கமே அதன் அப்போதைய தன்னிலை. என்றாலும் இடைக்கட்டத்தில் நிகழ்வதை அளவு மாற்றமாகவும்(quantitative changes), அதன் உச்சமாக நிகழ்வதைப் பண்பு மாற்றமென்றும் (qualitative change) கொள்ளலாம். அது அதற்குப் பின்னரும் தொடரும்.

          ஒரு மனிதன் தன்னைச் சுற்றிலும் உள்ள சமூக இயக்கத்தின் கோளாருகளை உணரும் பட்சத்திலேயே அவன் அதை நிவர்த்தி செய்யத் தக்க வினையை ஆற்றும் அடுத்த நிலையை அடைவதற்குத் தேவையான அளவு மாற்றம் நிகழ்ந்து விட்டதாகவே கொள்ள முடியும். அதற்கு மேலும் வினையாற்றுவதிலிருந்து விலக்கு கோருவதென்பது ஒன்று ஏதேனும், புறநிலை அச்சத்திலிருந்தோ, கோழைத்தனத்தினாலோ, அல்லது சந்தர்பவாதத்தினாலோ தான் இருக்க முடியும்.

          நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த ஒட்டு மொத்த சமூகத்தின் கீழ்நிலையில் நசுங்கிச் சாகிறவர்களின் உழைப்பைச் சுரண்டியே வாழ்கிறோம். இதை உணரும் கணத்திலேயே அதை மாற்றக் களமிரங்க வேண்டிய (அதாவது செயலின்மையிலிருந்து செயலுக்கு ) பண்பு மாற்றம் (qualitative) ஏற்பட்டாக வேண்டும். இந்த மாற்றம் கட்டங்களில் நடக்காது. தண்ணீர் 99 டிகிரி வரை திரமாக இருக்கும் 100 டிகிரி அடைந்ததும் ஆவியாக வேண்டும். சமூகம் முழுக்க கப்பியிருக்கும் இழிவை புரிந்து கொள்ளும் கணத்தில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருப்பது சாத்தியமற்றது – 99 டிகிரி எல்லைக் கோட்டை கடந்தாகி விட்டது.

          ஒரு ரேப்பிஸ்ட் நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொள்வேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா வெங்கடேசன்? அதன் பொருள் என்ன? போன மாதம் பத்து பேரை வல்லுறவு செய்தேன், இந்த மாதம் ஒன்பதாகவும், அடுத்த மாதம் எட்டாகவும் குறைத்துக் கொள்வேன், இப்படியே அடுத்த பத்து மாதங்களில் ரேப் செய்யாமல் இருப்பேன் என்று சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

          ஒரு உதாரணமாகவே இதைச் சொல்கிறேன்.

          உங்கள் மறுமொழிகளில் தொனிக்கும் ஜனநாயகத்தின் குரல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், கயர்லாஞ்சியும், விதர்பாவும், தண்டகாரன்யாவும், தண்ணீருக்குத் தவிக்கும் டெல்டா விவசாயிகளும்.. இன்னும் இன்னும் நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கங்களின் சுகவாழ்வுக்காக தங்களது உழைப்பைக் கொடுத்து விட்டு சொற்ப காசுகளில் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைக் கூட ஒடுக்கிக் கொள்ளும் ஏராளமான மனிதர்களின் நிலை உங்கள் மனதில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால் தான் உங்களை ஒத்த வர்க்க நிலைமைகளில் வாழ்கிறவர்களின் தடித்தனம் உங்களிடம் தென்படவில்லை.

          என்றாலும், தயக்கத்தை எப்படி உடைப்பது எங்கேயிருந்து துவங்குவது என்ற குழப்பம் எல்லோரையும் போல் உங்களுக்கும் இருக்கலாம். அது இணைய விவாதங்களின் வரம்பைக் கடந்தது என்பதோடு உங்கள் தீர்மானங்களை உங்களால் தான் சிறப்பாக கையாள முடியும் என்றும் கருதுகிறேன்…

          நீங்கள் தில்லியில் இருப்பதாக முன்னர் எங்கோ எழுதியிருந்த நினைவு… முடிந்தால் வார இறுதிகளில் நோய்டாவின் அட்டா மார்க்கெட், கூர்காவ்னின் சந்து பொந்துகள், புராணா தில்லியின் ஜூம்மா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று வாருங்கள்… உங்கள் தயக்கம் ஒருவேளை உடையலாம்.

  4. இன்னும் 50 வருடத்தில் , கருப்பு சட்டை போட்ட “பெரியாரின்” அடியார்கள் இந்த ஆன்மிக கண்காட்சியில் பங்குபெறுவார்கள்.”பெரியாரிசம்” என்ற மதம் ஹிந்து மதத்தில் இருந்து பிரிந்து வந்த மதம்.

    • பெரியாரின் அடியார்கள் கலந்து கொள்வர்களா?
      நிச்சயம் வருவார்கள் குடுமியை ஆட்டு ஆட்டுன்னு அட்ட நிச்சயம் வருவார்கள்

  5. vinavu hippocrates, i will answer for your ISHA SADGURU question,, you should show your oratory skills to matched persons, not to kids!!!! well ISHA cut trees violated rules, but ultimately for “greater good” it has transformed the lives of millions through yoga and spiritual at the cost of some trees.. Imagine your naxals, maoist attack unarmed civilians in their operations unexpectedly or sometimes targer civilians who are commoners too and justify it as for “greater good” according to your naxals in fighting against “evil capitalist” who some innocent lives might be lost…

    • இந்த விஷயத்தை உங்களை மாதிரி சீடர்கள் சொன்ன பெரிசா எபஃக்ட் இருக்காது. “சட்ட விரோதமாத்தான் கட்டிடம் கட்டி இருக்கோம், இப்படி செய்யறது லோக க்ஷேமத்துக்காகக்தான்” அப்படின்னு சத்குருவையே வெளிப்படையா ஒரு அறிக்கை உடச் சொல்லுங்க!

      அப்படியே, அவரோட மகாமுத்ரா இயற்கை உணவகத்துல முப்பது ரூபாய்க்கு சாப்பாடு போட சொல்லுங்க! முன்னூறு, நானூறுன்னு வெலை கொடுத்து லோகத்துல எவ்வளவு பேரால சாப்பிட முடியும்?

    • Mr. David Bill… Isha people should have placed the so-called matched persons in the stall instead of putting kids to play around. I don’t know who taught you can cut down trees to do yoga and preach a religion. You knowingly or unknowingly compared your beloved Sadguru with Naxals and Maoists, this shows how matured are you to speak about what is mentioned in this article.

  6. //Vellingirisamy – “The so called land is farm land and Isha has planted many trees and built a beautiful temple are all classes of people. ”
    david bill- well ISHA cut trees violated rules, but ultimately for “greater good” it has transformed the lives of millions through yoga and spiritual at the cost of some trees.//
    ஏண்டாப்பா பக்தர்களா…, ஏன்… ஜக்கிக்கு வக்காலத்து வாங்க இவ்வளவு குழப்பம்? ஒருத்தன் நாட்டாருன்குறான் , ஒருத்தான் தாண்டுணாருங்காறான் …!

    • சி.டி விற்பனை கலை கட்டி இருக்குமே!
      நித்தி சி.டி.யா, கொக்கா?

  7. mr.vijay…. That stall persons are to explain yoga related and give answers on that, they least expect some street-corner shouting rebeeelss, questioning alleged regularizations,if you want to question the law breach of ISHA rather frivolous act, talk to their legal spokesman and report his reply that would be apt, or file Right to information paper,or do you have solid evidence sue them and bring them down.. this is some silly.. That analogy, is lot sensible than vinavu people making in their posts,

  8. For the so called aethiests & the pseudo secularists hinduism is an easy punch bag. If you people have real guts you should take on Muslim fundamentalism which is the most evil thing around the world. You people know very will your life will not be spared if you take such issues. Even read the other communist says about it.

    T.n. Gopalan தொடரும் இந்துமுன்னணிக் கொலைகள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை…மதுரை வழக்கறிஞர் ராஜகோபாலன் எனக்கு நல்ல பழக்கம்…மிக இனிமையானவர்…இப்போது கொல்லப்பட்ட வேலூர் வெள்ளையனும் அப்படிப்பட்டவர்தானாம்…அவர் மீது குற்றச்சாட்டு ஏதும் கிடையாதாம்…ஆடிட்டர் ரமேஷ் குறித்தும் பெரிதாகப் புகாரில்லை..மத முரண்பாடுகளுக்காகக் கொலை செய்வதென்பது சுத்த காட்டுமிராண்டித்தனம். இதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் என்னை நீண்ட நாளாக உறுத்தும் விஷயம் இதுதான்: கொல்லப்படுபவர் ஒவ்வொருவருமே மிகக் கடுமையாக பிற மதத்தினரை அதுவும் இஸ்லாமியரை விமர்சிப்பவர்கள். ஒரு பக்கம் இவர்களைப் போன்றோர் கன்னா பின்னாவென்று பேச இன்னொரு பக்கம் தௌஹீத் போன்றோர் பதிலடி கொடுக்க சூழல் என்னாவது.. பேச்சு சுதந்திரம் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்குவதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? செய்யவேண்டாமா? அதுவும் மோடி ஆட்சி செய்யும் நிலையில் இந்துத்துவாவினர் மதம் பிடித்து ஆடாததுதான் ஆச்சரியம்…மகிழ்ச்சிதான் என்றாலும் எத்தனை காலம் என்ற கவலை இருக்கிறது…மாவட்டத்திற்கொரு குடிமக்கள் கண்காணிப்புக்குழு அமைத்து, மத நிந்தனை செய்வோர் எவராயிருந்தாலும் அது குறித்து ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தலாம் என நினைக்கிறேன்
    12 hrs · 12

  9. அய்யாவழி மதம் பார்பனர்களுக்கு மற்றும் பார்பன இந்து மதத்திற்கும் எதிராக குமரி நாடார்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் ஆகும். அய்யாவழி மதத்தை இந்து மதம் என்று சொல்லி அழிக்க, அரவிந்தன் நீலகண்டன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற நாடார்களை கொலைவெறியோடு வெறுக்கும் பிள்ளைமார்களால் இது முன்னெடுக்கப்படுகிறது. இந்த அய்யாவழி மதத்தை அழிக்கும் செயலுக்கு சு.ப.உதயகுமார் போன்ற அய்யாவழி மக்களே துணைபோவது வேதனை.

  10. those who believe in all these nonsense just visit isha, and all empty churches around Isha. missionaries are having a tough time converting poor people around the villages. they have bought several thousands of acres and built churches are on the verge of losing business.

Leave a Reply to nagaraj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க