privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?

ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?

-

ற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா?” என்ற பட்டிமன்ற வாதங்களைக் கேட்டு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் ரசிகர்களைப் போல, “ஜனநாயகத்தை வெறுப்பதில் விஞ்சி நிற்பவர் மோடியா, லேடியா?” என்று பட்டிமன்றம் நடத்தினாலும், நாம் முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி நடத்தும் அமைச்சரவைக் கூட்டம் : கையில் சாட்டை இல்லாதது ஒன்றுதான் குறை!

அன்றாடம் தமிழகச் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “உள்ளே ஜனநாயகம் இல்லை” என்று புலம்பியபடியே வெளியே வருகிறார்கள். பிறகு, மறுநாள் உள்ளே போகிறார்கள். மீண்டும் வெளியேற்றம், மறுபடியும் புலம்பல். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற ஊரறிந்த உண்மையை அறிவிப்பதற்காகவே தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஜனநாயகத்தை வெறுப்பதில் மோடியைக் காட்டிலும் லேடிதான் விஞ்சி நிற்பதாக வாசகர்கள் எண்ணக்கூடும். மோடியின் குஜராத் மாடல் ஜனநாயகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அப்படி ஒரு முடிவுக்கு வருவது நியாயமல்ல.

குஜராத் சட்டமன்றத்தை மோடி எப்படி நடத்தினார் என்பது பற்றி மாத்ருபூமி இதழின் (ஜே.எஸ்.மனோஜ், ஏப்ரல், 4, 2014) அகமதாபாத் நிருபர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மோடியின் குஜராத்தில் சட்டசபை ஆண்டுக்கு 29 நாட்கள்தான் நடந்திருக்கிறதாம். இந்தியாவிலேயே இதுதான் குறைவு. 20 முதல் 25 நாட்கள் வரை நடக்கும் ஒரு பட்ஜெட் கூட்டத் தொடர், ஓரிரு நாட்கள் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடர், அவ்வளவுதான். அரை நாள் மட்டுமே சட்டமன்றம் கூடிய அமர்வுகளும் உண்டு. ஒரு கூட்டத்தொடரின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமே நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளை மதிப்பது என்ற வார்த்தையே மோடியின் அகராதியில் கிடையாது. மோடி மேடையில் பொளந்து கட்டுவாரே தவிர, எதிர்க்கட்சிகளை விவாதங்கள் மூலம் அவர் எதிர்கொள்ளமாட்டார். அந்த வேலையை சபாநாயகர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பினால், சபாநாயகர் அவர்களைக் கூண்டோடு வெளியேற்றுவதன் வாயிலாக மோடியின் கருத்தை நிலைநாட்டி விடுவார். எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நீக்கம் செய்வது குஜராத் சட்டமன்றத்தில் வழக்கமான நடைமுறை என்கிறார் மனோஜ். இது குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால்தான் விஞ்சி நிற்பது மோடியா, லேடியா என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

அம்மா சல்யூட்
அம்மாவின் முன் “கையது கொண்டு மெய்யது பொத்திக் கொள்ளும்” பாக்கியம் பெற்ற தமிழக அமைச்சர்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதும் அங்கே வழக்கமான நிகழ்வு என்கிறார்கள் பத்திரிகை நிருபர்கள். தலைமை தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கை மீதுகூட அங்கே விவாதம் நடந்ததில்லையாம். கூட்டத்தொடரின் கடைசி நாளில்தான் அந்த அறிக்கை அவையில் வைக்கப்படும். பொதுவாக கடைசி நாளான வெள்ளிக்கிழமைகளில் சட்டமன்றம் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஒத்தி வைக்கப்படும். எனவே, தணிக்கையாளர் அறிக்கையின் மீது எந்த விவாதமும் நடக்காது.

அது மட்டுமல்ல, குஜராத் அரசின் 15 முக்கியமான துறைகளை மோடி தன்வசம் வைத்திருந்தார். இருந்தாலும், சட்டமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் மோடி பதில் சொல்ல மாட்டார். துறையின் துணை அமைச்சர்கள்தான் பதில் சொல்வார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் மோடி தனது அறைக்குப் போய் விடுவார். அவையின் எஞ்சிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் செயல்வீரர் என்பதால் அனாவசியமாகப் பேசுவதில்லை போலும். ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் மூன்றே முறைதான் பேசியிருக்கிறார். அவற்றில் இரண்டு இரங்கல் செய்திகளை வாசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. அனல் மின்நிலையம் நிறுவுவது முதல் பஸ் ஸ்டாண்டு கக்கூசு அமைப்பது வரையிலான எல்லா அறிவிப்புகளையும் அம்மாதான் வெளியிடுகிறார். பாராட்டி மேசையைத் தட்டும் ஒரு வேலையை மட்டும்தான் அமைச்சர்கள் செய்கிறார்கள். அந்த அளவுக்கு எல்லாப் பொறுப்புகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார் அம்மா.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மொத்தம் 22 நாட்கள் நடைபெற்றுள்ள பேரவையில் 110-ம் விதியின் கீழ் 41 அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா படித்திருக்கிறார். விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் மீது விவாதம் நடத்த முடியாது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செய்வதாகவும், என் மீது வசை பாடுவதற்கும் மட்டும் தடை இல்லாத அந்த விதி என்ன தலைவிதியா என்று கேட்கிறார் கருணாநிதி. ஆயினும் என்ன, லேடி சட்டமன்றத்துக்கு வந்து அறிக்கையாவது படிக்கிறாரே!

03-4-modi-hard-work

“மோடி நாடாளுமன்றத்துக்கே வருவதில்லையே” என்று கேட்ட காங்கிரசு நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், “சில நாட்கள் முன்புதானே வந்தார். நீங்கள் அவரைத் தரிசிக்கவில்லையா?” என்று திருப்பிக் கேட்டார் சுஷ்மா. “தரிசிப்பதற்கு அவர் என்ன கடவுளா?” என்றார் கார்கே. அவர் கிண்டலுக்கு கேட்டாலும் உண்மை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் செய்ததைப் போல, மோடி தனது ஹோலோகிராமை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புண்டு.

குஜராத் மாடலை நாடாளுமன்றத்தில் உடனே முழுமையாக அமல்படுத்த முடியாத காரணத்தினால்தான் மோடிக்கு எதிராக இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்க முடிகிறது. குஜராத் சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்குத் தனிச் சிறப்பான கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த உறுப்பினரும் மாநிலம் தழுவிய விசயங்கள் குறித்தோ, அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள் குறித்தோ கேள்வி எழுப்ப முடியாது. மாநிலத்தில் நடந்த தற்கொலைகள் அல்லது பாலியல் வன்முறைகள் எவ்வளவு என்பன போன்ற கேள்விகளுக்குக்கூட அங்கே அனுமதி கிடையாது; உறுப்பினர்கள் தத்தம் தொகுதிப் பிரச்சினைகள் பற்றி மட்டும்தான் கேட்கலாம் என்று குறிப்பிடுகிறார் மாத்ருபூமி கட்டுரையாளர்.

எதிர்க்கட்சிகளின் நிலைமையாவது பரவாயில்லை. பா.ஜ.க. உறுப்பினர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது. சொந்தமாக கேள்வி கேட்க அவர்களுக்கு அனுமதி இல்லை. மண்டபத்தில் எழுதிக் கொடுத்த கேள்வியைத்தான் அவர்கள் கேட்கவேண்டும். 2007-ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தபோது ஒரு கேலிக்கூத்து நடந்தது. குஜராத் போலீசின் சாதனைகளைப் பதிலாகச் சொல்வதற்குத் தகுந்த மாதிரி பா.ஜ.க. உறுப்பினர்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும் என்பது மோடியின் திட்டம். சொந்தமாக கேட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடும் என்பதால், சட்டமன்ற கேள்வித்தாள் படிவங்களை, குஜராத்தின் எல்லா மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி, “வெற்றுப் படிவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ க்களின் கையெழுத்தை மட்டும் வாங்கி அனுப்பவும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். கேள்வியை நாமே எழுதிக் கொள்ளலாம் என்பது மோடியின் திட்டம். ஆனால் ஒரு முட்டாள் போலீசு அதிகாரி, அந்தப் படிவத்தை காங்கிரசு எம்.எல்.ஏ.விடமும் கொடுத்துக் கையெழுத்து கேட்கப்போக, குட்டு உடைந்து சிரிப்பாச் சிரித்து விட்டது.

அது குஜராத் கதை. இப்போது மோடி பிரதமர் ஆகிவிட்டபடியால், எம்.பி.க்களின் கதி என்ன என்று பார்ப்போம். சமீபத்தில் மோடி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திக்கும் புகைப்படம் ஒன்றை பத்திரிகைகளில் பார்த்தபோது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாவுக்கு முன்னால் ஓ.பி. முதலான அமைச்சர்கள் எப்படி “கையது கொண்டு மெய்யது பொத்தி” அமர்ந்திருப்பார்களோ, அப்படியே இருந்தது. ஒரு வேறுபாடு, அமைச்சர்களைக் காட்டிலும் 2 அடி உயரமான மேடையில் ஒரு ஆதீனத்தைப் போல அமர்ந்திருந்தார் மோடி. அமைச்சர்கள் பள்ளிப் பிள்ளைகள் போல அட்டென்சனில் நின்று பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விசயத்திலும் லேடியை விஞ்சி விட்டார் மோடி.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்ற முறையில் முஸ்லிம்களைக் காட்டிலும் மோடியால் வெறுக்கப்படும் எதிரி – ஜனநாயகம். ஆர்.எஸ்.எஸ்-ல் ஜனநாயகம் கிடையாது. அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மோடியும்கூட இந்த தேசத்தின் மீட்கும் பொறுப்பை இறைவன் தன் மீது சுமத்தியிருப்பதாகத்தான் கூறிக் கொள்கிறார். மீட்பர்கள் எனப்படுவோர் மற்றவர்களைவிட இரண்டடி உயரத்தில் அமர்வது தானே ஹிந்துப் பண்பாடு. தானே மீட்பன் என்பது இந்த உலகத்துக்கே தெரிய வேண்டுமென்பதற்காகவும், அமைச்சர்களின் மண்டையில் இருக்கக்கூடிய ஆணவ மலத்தை அகற்றும் நோக்கத்துடனும் மேற்படி காட்சியைப் பிரதமர் அலுவலகம் சார்பில் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார் மோடி.

மேற்படி நேர்காணல் ஒன்றில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம், “நீங்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன?” என்று மோடி கேட்டிருக்கிறார். தான் மாணவர் சங்கத்தில் செயல்படத் தொடங்கியதிலிருந்து அவர் விளக்கத் தொடங்க, “உங்கள் பயோ டேட்டாவெல்லாம் எனக்குத் தெரியும்; நீங்கள் சாதித்ததை மட்டும் சொல்லுங்கள்” என்று மோடி மடக்கவே, வாய் குழறித் தடுமாறியிருக்கிறார் சொல்லில் வல்லவரான சுப்ரீம் கோர்ட் வக்கீல் ரவிசங்கர் பிரசாத். இது ஒரு மூத்த அமைச்சரின் நிலைமை என்றால் சாதா எம்.பி.க்களின் நிலை பற்றி சொல்லத்தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் அமைச்சர்களுடைய கார் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரையும் மோடிதான் நியமிப்பார்; எல்லா அமைச்சக அதிகாரிகள் நியமனம், மாற்றல் ஆகியவற்றையும் மோடி தான் தீர்மானிப்பார். இது குஜராத் மாடல் பற்றிய ஏற்கெனவே தெரிந்த செய்தி. தற்போது டில்லியிலும் அதே கதைதான். அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றல் தொடர்பானவற்றைத் தீர்மானிப்பது உள்துறை அமைச்சகம் என்று சொல்லப்பட்டாலும், மோடிதான் அனைத்தையும் முடிவு செய்கிறார். கையெழுத்துப் போடுவது மட்டுமே ராஜ்நாத் சிங்கின் வேலை. அவரது கையெழுத்துகூட இல்லாமல் சில நியமனங்கள் நடந்திருப்பது பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரசார் கேள்வி எழுப்பியதற்கு, “நான் ரொம்ப பிசி; அதனாலத்தான் கையெழுத்து போட முடியலை” என்றார் ராஜ்நாத் சிங். அவையே சிரித்தது. பா.ஜ.க. எம்பி.க்கள் மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

குஜராத் மாடல் ஜனநாயகத்தின் இன்னொரு சிறப்பம்சம் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு அமைச்சர் பெருமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை. மோடியால் இதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் மட்டும்தான் ஊடகங்களிடம் பேசலாம். மற்றபடி அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் ஊடகங்களிடம் வாய் திறக்கக்கூடாது; மோடியும் பேசமாட்டார். ஆதீனம் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து அருள்வாக்கு சொல்லுவார். அதன் மீது நிருபர்கள் கேள்வி கேட்கக் கூடாது. ஊடகங்களை கையாளும் விசயத்திலும் மோடிக்கும் லேடிக்கும் மில்லி மீட்டர் கணக்கில்தான் இடைவெளி இருப்பதால் யார் முந்துகிறார்கள் என்பதை ஊனக்கண் கொண்டு நம்மால் மதிப்பிட முடியவில்லை.

நீதிமன்றத்தை அவமதிப்பதில் அம்மாவின் சாதனைகளைப் பற்றி தமிழ் வாசகர்களுக்கு விளக்கத்தேவையில்லை. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் புலம்பியிருந்தார். மோடியும் இந்த விசயத்தில் சளைத்தவரல்ல. அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்காக கண்டனத்துக்குள்ளாவது குஜராத்தில் ரொம்ப சகஜமான விசயம் என்று கூறியிருக்கிறார் பிரபல வழக்குரைஞர் (காலம் சென்ற) முகுல் சின்ஹா. சாலைப்பணியாளருக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்த அம்மாவைப் போலவே, குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதை எதிர்த்தும், முஸ்லிம் மாணவர்களுக்கான கல்விச் சலுகைகளை எதிர்த்தும் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியவர் மோடி. பத்து ரூபாய் பிரச்சினைக்குப் பத்து கோடி செலவு செய்து சுப்ரீம் கோர்ட்டு வரை போவதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. குஜராத் படுகொலை வழக்குகளில் நீதிமன்றத்தை மோடி கேலிப்பொருளாக்கிய விசயம், அம்மாவின் மகளிரணி நடத்திய அரைநிர்வாண நடனம், கஞ்சா கேஸ் ஆகியவை பற்றி நாடறியும் என்பதால், அவற்றை இங்கே விளக்கவில்லை. சொத்துக்

குவிப்பு வழக்கில் நீதிபதி முதல் அரசு வழக்குரைஞர் வரையில் அனைவரையும் ஓட ஓட விரட்டியவர் ஜெயலலிதா. இருந்தபோதிலும் அம்மா நீதித்துறையை மதித்தார் என்று கட்ஜு கூறியிருப்பதால், இந்த விசயத்திலும் நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை.

அம்மா தன்னுடைய அமைச்சர்கள் அனைவரையும் உளவுத்துறையை வைத்துக் கண்காணிப்பதைப் போலவே, குஜராத் மாடலிலும் கண்காணிப்பு உண்டு. தற்போது கட்காரி வீட்டில் உளவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதை என்ன சொல்லி சமாளித்தாலும், குஜராத் மாடல் டெல்லியில் வேலை செய்யத் தொடங்கி விட்டது என்பது கட்காரிக்குப் புரியாமல் இல்லை. மேற்படி விவகாரத்துக்குப் பின்னர் தன்னைச் சந்திக்க வரும் விருந்தினர்கள் பலரை, வீட்டுக்கு வெளியில் கண்காணிப்பில்லாத இடங்களில் காரை நிறுத்தச் சொல்லி, அங்கே அவர்களைக் கள்ளக்காதலர்கள் சந்திப்பது போல கட்காரி சந்திக்கிறார் என்கின்றன ஊடகங்கள்.

கோரிக்கை எவ்வளவு நியாயமாக இருந்தாலும், தனது சொந்தக் கட்சிக்காரர்களே அந்த கோரிக்கைக்காகப் போராடினாலும், மோடி சகித்துக் கொள்ளமாட்டார். குஜராத்தில் மோடி அரசு மின் கட்டணத்தை ஒரே அடியாக நான்கு மடங்கு உயர்த்தியதை எதிர்த்து, பா.ஜ.க.வின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் போராட்டம் நடத்தியது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பா.ஜ.க.வின் உள்ளூர்த் தலைவர் ஜீத்தாபாய் பட்டேலை வளைத்துப் போட பார்த்தார் மோடி; அவர் மசியவில்லை.

உடனே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து, 300 டிரான்ஸ்ஃபார்மர்களை அகற்றியது மோடி அரசு. ஆனாலும், விவசாயிகள் விட்டுக் கொடுக்கவில்லை. உடனே ஜீத்தாபாயின் வீடு மாநகராட்சியால் இடித்துத் தகர்க்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ. – விடுதியில் ஒற்றை அறையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சங்கத்தின் அலுவலகம் இரவோடு இரவாக காலி செய்யப்பட்டது. அலமாரிகளையும், புத்தகங்களையும் தூக்கி எறிந்த அவர்கள், கோல்வால்கர், ஹெட்கேவார் படங்களையும் எறிந்து விட்டார்கள்” என்று பேட்டியளித்திருக்கிறார் ஜீத்தாபாய்.

“நான்தான் அரசு” என்று கூறிய பதினான்காம் லூயியைப் போல, மோடியும் நான்தான் குஜராத் என்று சொல்பவர்” என்கிறார் ஜே.பி. இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிரிஷ் படேல். பா.ஜ.க. அரசு என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அடுத்த 30 நிமிடங்களுக்குள் அதனை மோடி அரசு என்று திருத்தி வெளியிட்டதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

“எனக்கு நான்தான் போட்டியாளன். ஏனென்றால் நான் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகமானது. மோடி 16 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அவர் ஏன் 18 மணி நேரம் வேலை செய்யக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். மோடியிடமிருந்து மக்கள் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய சாதனைகளை நானேதான் முறியடிக்க வேண்டியிருக்கிறது” என்று மோடி ஒரு பேட்டியில் கூறியிருப்பதைக் காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆகார் படேல். என்னே தன்னடக்கம்!

“உங்கள் அன்புச் சகோதரி நாளொன்றுக்கு 22 மணி நேரம் உழைக்கிறார்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க. பொதுக்குழுவில் மிகுந்த தன்னடக்கத்துடன் அம்மா உரையாற்றியிருக்கிறார். அந்த உரையை மோடி கேட்டதில்லை போலும். இன்றைய தேதியில் லேடி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 25 மணி நேரம் உழைக்கக் கூடும். மோடியால் 24 மணி நேரத்துக்கு மேற்பட்ட உயரத்தைத் தொட்டு அம்மாவை விஞ்ச முடியுமா என்ன, பார்த்து விடுவோம்!

– தொரட்டி
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________