privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

-

சகாயம் விசாரணை
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம்

சகாயம் : அதிகார வர்க்க சட்டவாதப் போலி போர்வீரன்!

துரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் எனப்படும் இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புடைய கிரானைட் கொள்ளையை விசாரித்து வரும் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயத்துக்கு இரண்டாவது கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுவும் வழக்கம்போல ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது கொலை மிரட்டல் வழக்கு என்னவானது என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சகாயத்தைக் கிரானைட் கொள்ளைக் குற்றவாளிகள் கொலை செய்ய முயலுவதாக திருச்சி சிறைக் கைதிகள் பேசிக்கொண்டதாக அவரது குடும்பத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், முறைப்படி அரசிடம் அவருக்குப் பாதுகாப்புக் கோரியதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் துணிச்சலாகத் தனது கடமையில் கண்ணாகப் பணியாற்றுவதைப் போன்ற தோற்றம் முதலாளிய ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார். அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்வதா, இல்லை அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற முட்டாள்தனமென்று சொல்வதா? விரைவிலேயே தெரிந்துவிடும்!

இதையே வேறு கோணத்திலும் பார்க்கலாம். நெல்லையில் வேளாண்துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகிய இருவர் அடுத்தடுத்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கர்நாடகா, கோலாரில் அரசு நிர்வாகப் பணி அதிகாரி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கேரளாவில் இன்னொரு அதிகாரி இரு மகன்களோடு கொல்லப்பட்டார். பீகாரில் ஊழலுக்கு எதிராகப் போராடிய பொறியாளர்கள் மஞ்சுநாத் சண்முகம், சத்யேந்திர துபே ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மராட்டியத்தில் தகவலறியும் சட்டத்தின் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயன்ற சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் சிலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இவையெல்லாம் ஒருசில எடுத்துக்காட்டுகள்தாம். உ.பி., ம.பி., அரியானாவையும் ஆந்திராவையும் சேர்த்தால் இன்னும் பல கொலைகள், தற்கொலைகள் நடந்துள்ளன. எல்லாம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களால் (மஃபியாக்களால்), கூலிப்படைகளை வைத்து நடத்தப்பட்டவை. தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கு அல்ல. பாலாறு, காவிரி, தாமிரபரணி மணற்பரப்புகளில் களப் பலியானவர்களைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.

கிரானைட் கொள்ளை
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது.

சகாயம் எந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்துகிறாரோ அவற்றைச் செய்தவர்கள், அவர்களின் அரசியல் கூட்டாளிகள், அவர்களின் கிரிமினல் குற்றப் பின்னணிகள் பற்றிய உண்மைகள் அரசியல் அறிந்த யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் மட்டுமல்ல; நாடு முழுவதுமுள்ள நிலம், கடல், ஆறு, காடுகள், மலைகளில் குவிந்துள்ள கனிமங்கள், தாதுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்ற பொதுமக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கிரிமினல் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டுக்குள், ஆதிக்கத்தின் கீழ் அரசு நிர்வாகம் முழுவதும் போய்விட்டது. இந்தக் கொள்ளைகளுக்குப் பாதுகாப்பாகவும் அவற்றை எதிர்த்துத் தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை ஒடுக்குவதாகவும் அரசுக் கட்டமைப்பு முழுவதும் மாறிவிட்டது.

நாட்டின் இந்த உண்மை நிலைமைகளோடு, சகாயம் விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் பின்வரும் செய்திகளைப் பொருத்திப் பாருங்கள்:

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என மக்கள் பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர். பணியில் இருக்கும் வருவாய்த் துறையினர் ஆவணங்களைத் திருத்தவும், கிரானைட் கற்களை வெட்டிப் பாதுகாக்கவும் துணை போகின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் வருவாய்த் துறை, டாமின் அதிகாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்து விடுகின்றனர். எப்படியெல்லாம் அரசு நிலத்தை மோசடி செய்யலாம் என இவர்கள்தான் பி.ஆர்.பி.க்கே யோசனை கூறுகின்றனர். அரசு நிலத்தை வளைத்துப் போடுவது எப்படி, அரசுக்கு தெரியாமல் மோசடியாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது எப்படி என கிரானைட் கொள்ளைக்கு அனைத்து வழிகளிலும் இந்த அதிகாரிகள்தான் உதவியுள்ளனர். 2012-ம் ஆண்டுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.

கீழையூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற கிராமத்தைத் தடம் தெரியாமல் அழித்துவிட்டு, அந்த இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் அங்கு சென்று சகாயம் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் சகாயத்திடம் கூறும்போது, கிரானைட் நிறுவனங்களுக்கு நாங்கள் விரும்பி நிலங்களை கொடுக்கவில்லை. மிரட்டியதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம். தர மறுத்தவர்களின் நிலங்களில் கற்களைக் கொட்டினர். குளங்களுக்கு நீர் செல்லும் வாய்க்கால், பாசனக் கிணறுகளிலும் மண்ணைப்போட்டு மூடிவிட்டனர். இதுபற்றி நாங்கள் அளித்த புகாரை காவல், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த அழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் முக்கிய காரணம். மேலூர் தாலுகா அலுவலகத்தில் பி.ஆர்.பி. குடும்பத்தினர் பெயரில் நிலப்பட்டா மாறிவிட்டால், அதை முழுமையாகப் பாதுகாப்பது அதிகாரிகள்தான் என கிராமத்தினர் சரமாரியாக குற்றம் சாட்டியதை சகாயம் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்தப் பகுதியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் ஓய்வுக்குப் பின் கிரானைட் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விட்டனர். எனவே அதிகாரிகள் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நீதிமன்றத்தில் இது பற்றிய விவரங்களை சமர்ப்பிப்பதாக அவர்களிடம் சகாயம் உறுதியளித்தார்.

சகாயம் விசாரணை
கிரானைட் கொள்ளை குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தும் சகாயம்.

கிரானைட் முறைகேடு குறித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாக கவனித்து மேலிடத்துக்கு உடனுக்குடன் தகவல் அளித்து வருகின்றனர். மதுரையில் முதற்கட்ட விசாரணைக்கு வந்தபோது ரயிலில் அவசரப் பிரிவில் இருக்கை ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை என்றும், மதுரையில் அவர் தங்கியிருந்த அறையில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகள் விசாரணையை கண்காணிப்பதாகவும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சகாயம் மதுரையில் இறங்குவது முதல் திரும்பிச் செல்வது வரை அவரின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் முழுமையாகக் கண்காணித்தனர். புகார் விவரம், அதை அளிப்பவர்களின் பின்னணி, சகாயத்தை சந்திப்பவர்கள், விசாரணைக்கு வந்து செல்லும் அதிகாரிகள், விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள், அரசியல் கட்சியினர் சந்திப்பு உள்பட அனைத்து விவரங்களையும் உளவுத்துறையினர் சேகரிக்கின்றனர். இதற்காக 2 முதல் 4 உளவுப்பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டனர். குவாரிக்கு சகாயம் நேரடி ஆய்வு செய்யச் சென்ற இடங்களில் எல்லாம் உளவுத்துறையினர் கண்காணித்தனர். இவர்கள் சேகரிக்கும் தகவல்களை உடனுக்குடன் மேலிட அதிகாரிகளுக்குத் தெரிவித்தபடி இருந்தனர். இத்துடன் வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் என பல்வேறு துறை அலுவலர்களும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் தங்கள் உயரதிகாரிகளுக்குப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகின்றனர். அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் மூலம் துறையின் தலைமையிடத்து அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்படுகிறது.

சகாயத்திடம் பொதுமக்கள் புகார் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், பி.ஆர்.பி. தரப்பில் இருந்து வேவு பார்த்த சூப்பர்வைசர் கண்ணன், பொதுமக்களிடமும் சகாயத்திடமும் சண்டைக்கு வந்தார். குரலை உயர்த்திப் பொதுமக்கள் சொல்லும் குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து வந்தவரை சகாயம், “உங்களிடம் நான் எதுவும் பேசவில்லை. நீங்கள் எதுவாக இருந்தாலும் முறைப்படி புகாராக எழுதி உங்கள் தரப்பு விவரத்தைச் சொல்லுங்க” என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.

“சகாயம் சார்கிட்ட புகார் கொடுத்துட்டு வந்திருக்கேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கு” என்று புகார் கொடுத்தவர்களில் ஒருவர் சொன்னார். “இது வெறும் மலைகள் இல்லை. நாம் வாழ்ந்த வரலாற்றின் ஆவணம். அதை எப்படி அழிக்க மனசு வரும்” என்று வருத்தப்பட்டு சகாயம் பேசினார். அந்த நேரத்தில் மழைத் தூறல் ஆரம்பிக்க சகாயம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தார். சகாயத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கிரானைட் மாஃபியாக்கள், அதை முடக்கக் காத்திருக்கின்றனர். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் சகாயத்தின் பயணம் தொடர்கிறது!”

சகாயம் விசாரணையிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த செய்திகளை நாட்டின் நிலைமைகளோடு பொருத்திப் பார்க்கும்போது ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. சகாயம் கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” தான் காட்டுகிறார்; அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்லமுடியாது; அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்பும் “அவரது முயற்சிகள் முட்டாள்தனம்” என்றுதான் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

  • கிரானைட் நிறுவனங்களின் மோசடிகளுக்கு மூல காரணமே அதிகாரிகளும் போலீசும்தான்.
  • சகாயத்தின் கண் முன்பாகவே புகார் கொடுக்க வந்தவர்களை கிரானைட் நிறுவன சூப்பர்வைசர் மிரட்டுகிறார்; சுதந்திரமாகவும் பயமின்றியும் புகார்கள் பெறவும் விசாரணை அதிகாரி முயலவில்லை. குற்றவாளிகளின் அடியாளிடம் மென்மையாகப் பேசுகிறார்.
  • சகாயத்தின் விசாரணையை உளவுத்துறை போலீஸார், வருவாய்த் துறை, பொதுப்பணி, தொல்லியல், சுரங்கம் – எனப் பல்வேறு துறை அலுவலர்களும் குவாரி அதிபர்களின் ஏஜெண்டுகளும் சகாயம் விசாரணை குறித்த தகவல்களைத் திரட்டித் தமது மேலிடங்களுக்கு அனுப்புகின்றனர்.
  • மேலும், சகாயம் தனது விசாரணையை மட்டுமின்றி, குற்றவாளிகளைத் தண்டிப்பதையும் இந்த அதிகார வர்க்கத்தையும் நீதிமன்றத்தையும் கொண்டு செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறார்.

இதன் மூலம் அதிகார வர்க்க சட்டவாதத்துடன் நின்றுகொண்டு இன்னொரு போலிப் போர்வீரன் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்பதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. கனிமவளக் கொள்ளைகளுக்குத் துணைநிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனைவைத்தே குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்று சகாயம் நம்புகிறார். அந்த முயற்சியில் தன்னோடு ஒத்துழைக்காத அதிகாரிகளைப் பார்த்து, “ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் ஆசிரியரிடம் பெயரெழுதிக்கொடுத்து விடுவேன்” என்று எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் “நீதிமன்றத்திடம் அறிக்கை கொடுத்து விடுவேன்” என்று பணிவோடு மிரட்டுகிறார்.

சகாயம் விசாரணை
சகாயம் குறித்தும், அவரது விசாரணை குறித்தும் உருவாக்கப்படும் பிரமைகள்.

ஆனால், சகாயம் போன்ற இன்னொரு சட்டவாதப் போர்வீரனாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு சகாயத்துக்குச் (தமிழ் தி இந்து நாளிதழில்) சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், முக்கியமாக நீதிமன்றங்களின் ஒத்துழைப்போடுதான் கிரானைட் கொள்ளைகளே நடந்திருக்கின்றன; அதையும் சகாயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். சகாயமோ இதைக் கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியிடம் காலில் விழாத குறையாக அதிகாரிகளும் நீதிபதிகளும் நடந்து கொள்கிறார்கள். அந்தக் குற்றவாளிஅரசின் எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, அவற்றுக்கு எதிராக நியாயம் கோரிப் போடப்படும் வழக்குகளைக் அடியில்போட்டு உட்கார்ந்து கொள்ளும் இந்த நீதிமன்றங்களிடமே நீதி-நியாயம் கிடைக்கும் என்று நம்பச்சொல்லுகிறார்.

“வேறென்ன செய்ய முடியும்? வேறு மாற்று ஒன்றுமே இல்லாதபோது, சகாயம் – ஏதோ அத்திபூத்தாற் போன்று ஒரு நேர்மையான, துணிச்சலான அரசு நிர்வாகப் பணி அதிகாரி வாய்த்திருக்கிறார். முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் அவரது நற்பணிக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், எல்லோரையும் எல்லாவற்றையும் குறைசொல்லுவதைப் போல சகாயத்தையும் விமர்சிக்கலாமா?” என்ற கேள்வியை நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதார சிக்கலைப் புரிந்துகொள்ளாத அரசிலற்றவர்கள் எழுப்புகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சினை சகாயம் போன்ற தனிநபர்களின் தனிப்பட்ட நேர்மை, துணிச்சல் அல்ல. சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின் சூட்சுமங்களையும் அதன் இன்றைய போக்குகளையும் கற்றுத் தேர்ந்தவர். தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அவரது சொந்த அனுபவங்களே உணர்த்தியிருக்கும். இருந்தாலும் அவ்வாறானதொரு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் விமர்சிக்கிறோம்.

நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், உதயகுமாரன், கேஜரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.

– ஆர்.கே.
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

  1. சகாயம் சட்டவாதம் பேசாமல், மாவோயிசம் பேச வேண்டுமா என்ன ? 🙂

    //தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.//

    ஆம். இதை ’முறியடிக்க’ உங்களை போன்ற குறுங்குழு வாதம் பேசும் குழுக்குள் எத்தனை நூற்றாண்டுகள் முயன்றாலும் முடியாது. வேண்டவும் வேண்டாம். ஏற்கெனவே ‘சரியான பாதையில்’ உங்களின் மூதாதை கம்யூனிஸ்டுகள் இட்டு சென்ற ‘வரலாற்றை’ தான் பார்த்தோமே !!

    தலைவலி போய் திருகுவழி வர வழி சொல்கிறீர்கள் !! 🙂

    • அதியமான்,

      நாங்கள் குறுங்குழுவாகவே இருந்துவிட்டால் நீங்கள் சொல்வது சரிதான்.

      எங்கள் குழு வளர்வதால் தானே பல மாதங்கள் கழித்து மீண்டும் இங்கே வந்திருக்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

      மனிதனின் தொடக்கம் பொதுவுடமையால் தான் சாத்தியமாயிற்று. அவன் அதை விட்டு அகன்றது அதிகபட்சம் சில ஆயிரமாண்டுகள் தான். இது மனித வரலாற்றில் சிறு பகுதிதான். நம் தவறை திருத்திக்கொள்ள இன்னும் கொஞ்சமேனும் காலம் இருக்கிறது.

      • //மனிதனின் தொடக்கம் பொதுவுடமையால் தான் சாத்தியமாயிற்று. அவன் அதை விட்டு அகன்றது அதிகபட்சம் சில ஆயிரமாண்டுகள் தான்//

        Where did you learn history ?

        • ராமன்,

          //Where did you learn history ?//

          இதைப்பற்றி பள்ளி கல்லூரி வரலாற்றில் கற்றுக்கொடுக்கும் அளவிற்கு வெளிப்படையான ஜனநாயக அமைப்பு நம்மிடையே இல்லை.

          Engels அவர்களின் குடும்பம் தனிச்சொத்து அரசு பற்றிய நூல், S A Dangay அவர்களின் ‘பண்டைக்கால இந்தியா’, பழங்குடிகளின் வாழ்க்கை அமைப்பைப் பற்றிய எழுத்துக்கள் பல (எ.கா. சோளகர் தொட்டி) போன்றவை மனித சமூகங்கள் ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை பொதுவில் வைத்து அனுபவித்தார்கள் என்பதைக் காட்டுகின்றன.
          ஒரு சமூகம் அதனிடத்தில் இருக்கும் இயற்கை வளங்கள் போதாமல் போகுமளவுக்கு வளரந்து விடும் போது குறிப்பிட்ட அளவிலான மக்கள் அந்த இடத்தை விட்ட அகன்று போதுமான தூரம் இடம்பெயர்ந்து அங்கே ஒரு புதிய சமூகத்தை உருவாக்கினர். புதிய இடத்தின் சவால்களை அவர்கள் ஒன்றாகத்தான் எதிர்கொண்டிருக்கிறார்கள். சிலரின் சிறப்பான பங்கீடும் கூட எந்த தனிப்பட்ட பலனை எதிர்நோக்காமல் குழுவின் நன்மையைக்கருதி செய்யப்பட்டதுதான். இந்த தொடர்நிகழ்வு, மனிதன் ஆப்ரிக்காவிலிருந்து உலகமுழுவதற்கும் பரவும் வரை நடந்திருக்கிறது. வடக்கே போனவர்களின் தோலின் நிறம் வெண்மையானது. ஆப்பிரிக்காவிலேயேயும் வெப்ப மண்டலங்களிலேயும் இருந்தவர்களின் தோல் கருமையாகவே இருந்துவிட்டது. வெவ்வேறு திசையில் இருந்து வந்த இரண்டு குழுக்கள் சந்திக்க நேரும் போது அவைகளுக்கிடையே பகையுறவு ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் நட்புறவும் இரண்டறக்கலப்பும் கூட ஏற்பட்டிருக்கிறது. பகையுறவின் போது ஒரு குழு அடிமைப்படுத்தப்பட மற்றொன்று அங்கேயிருந்த நிலம் நீர் தாவர விலங்கினம் போன்ற இயற்கை வளங்களை தனியுடமையாக்கிக் கொண்டது. இதில் சுகம் கண்டவர்கள் இன்னும் தெளியவில்லை. எனினும் எல்லா மனிதர்களும் தமது வரலாற்றை மறந்து விடவில்லை. நமது ஜீன்களிலேயே இது பதிவாகியிருக்கிறது.

          இதற்கு மாற்றான வரலாறு என்று ஒன்று இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளவும். விவாதிக்கலாம்.

          கம்யூனிசம் அந்தமான் தீவுகளுக்குத்தான் சாத்தியம் என்று கூறியது நீங்கள் தான். இன்று ஒரே நாளில் உலகில் எந்த இடத்திற்கும் நேரில போய் விடமுடியும். தொலை தொடர்பைப் பொறுத்தவரையில் நாம் எல்லோரும் ஒரே திண்ணையில் இருப்பதைப்போன்றது தான். இந்த அண்டவெளியில் நமது பூமி பந்து ஒரு சிறிய தீவுதான். நீண்ட காலத்திற்கு முன்பு பிரிந்தவர்களின் சந்ததிகள் எல்லோரும் இப்போது ஒன்றாக ஒரே திண்ணையில் அமர்ந்திருக்கிறோம். இனியும் நம்மில் பலர் வறுமையில் வாழ சிலர் பொதுநலனுக்கு தீங்கான விதத்தில் அதீத வளத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டும் வீண் விரயம் செய்துகொண்டும் இருக்கலாமா, இருக்கவிடலாமா, என்பவற்றை யோசிக்க வேண்டும்.

          • ராமன்,

            இந்த பூமி எனும் அந்தமானை முழுவதுமாக ஆக்ரமித்து விட்டோம். இனியும் புது இடம் தேடி போக முடியாது. நம்மை மற்ற நிலங்களிலிருந்து பிரிக்கும் அண்டவெளியை கடப்பது நீண்டகாலத்திற்கு நடவாதது. இருப்பதை சமமாக பிரித்துக் கொள்வது அதாவது பொதுவில் வைத்துக்கொள்வதுதான் ஒரே வழி. இது சுமூகமாக நடக்கப்போகிறதா அல்லது ரத்தக்களறியாகப் போகிறதா என்பதுதான் ஒரே கேள்வி.

          • //சிலரின் சிறப்பான பங்கீடும் கூட எந்த தனிப்பட்ட பலனை எதிர்நோக்காமல் குழுவின் நன்மையைக்கருதி செய்யப்பட்டதுதான். //

            Why did such an utopia fell apart ?

            //ம்யூனிசம் அந்தமான் தீவுகளுக்குத்தான் சாத்தியம் என்று கூறியது நீங்கள் தான்//

            Yes, I meant it will apply for tribes. They can kill and share the meat. No need for clothes and other amenities. basically live like animals..

            Once human is in need services of another human for clothes,house,medicine……order of the society will change.People with rare skill-set will demand more wealth …

            You suggested houses are waste and hut is enough. Have you started living in a hut yet…?

            • Raman,

              //Why did such an utopia fell apart ?//

              அது utopia இல்லை, ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். இதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் சொல்லவும்.

              அது ஏன் சிதைந்தது என்பது முந்தைய பதிலிலேயே இருக்கிறது. ஆனால் உங்களுக்கு அது புரிவது கடினம் தான். அந்த குடும்பம் சிதைக்கப்பட்டது தூரத்திலிருந்து வந்த வேறு கூட்டுக்குடும்பத்தால் தாக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டதால் தான்.

              //No need for clothes and other amenities. basically live like animals//

              உடைகளின் தேவை சமூகத்தைப் பொறுத்தது. எந்த அளவுக்கு மறைத்துக் கொள்வது என்பது அவர்களால் பொதுவாக சாத்தியமாகும் அளவைப் பொறுத்தது. இன்றும் உடையணியா குடிகள் இருக்கிறார்கள். எல்லா குழுக்களும் எல்லா காலத்திலும் உடையற்றவர்களாக இல்லை. Edgar Thurston தொகுப்பைப் பாருங்கள். நாம் சில பத்தான்டுகளுக்கு முன் எப்படி உடையணிந்திருந்தோம் என்ற போட்டோக்கள் இருக்கின்றன. இன்று உடையணிபவர்கள் மத்தியிலும் Nude colonies இருக்கின்றன.

              மற்றவர்களை சுரண்டி கோட்சூட் போட்டுக்கொள்வதை விட கோமனத்தில் இருப்பதே மேலானது என்பது எளிய மக்களின் வாழ்க்கை முறை.

              //People with rare skill-set will demand more wealth//

              தனியுடைமை சமூகத்திற்குத்தான் இது பொருந்தும். அதுவும் அரிய திறமையை வைத்து சொத்து சேர்ப்பது என்பது மிகவும் குறைந்த கேஸ்களில் தான். ஆயுதங்களை வைத்துத்தான் நிலங்கள் பிடுங்கப்பட்டன. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். கொத்தடிமையாக்கப்பட்டனர், படுகின்றனர். ஆயுதங்களை அடியாட்களை வைத்துத்தான் தனியுடைமை பெருக்கப்பட்டது, படுகின்றது.

              பொதுவாக எல்லோருக்கும் பயன்படாத அரிய திறமை என்று எதுவும் பொதுவுடைமை சமூகத்தில் வாய்ப்பில்லை, தேவையுமில்லை. எடுத்துக்காட்டாக, பழங்குடிகள் தங்கள் உடைகளை தாங்களே செய்து கொண்டார்கள். இன்றும் இந்தியாவின் வடகிழக்கில் சில பழங்குடிகள் வீட்டிற்கு வீடு நூல்நூற்று சிறிய தறியை வைத்து ஆடைகளை நெய்து கொள்கிறார்கள்.

              மறந்து விடாதீர்கள். மனிதனின் துவக்கம் பொதுவுடமை என்பதைப் பற்றித்தான் இந்த விவாதம்.

              நாளை மக்கள் நாம் எல்லோரும் ஒரே தாய் மக்கள் என்று புரிந்து கொள்ளும் போது யாரும் தனது குடும்பத்தினர் எல்லோருக்கும் பயன்படாத ஒன்றுக்காக மெனக்கெடப்போவதில்லை.

              //You suggested houses are waste and hut is enough//

              மனிதனின் வருங்காலத்திற்கான ஆலோசனை அது. எனது வாழ்நாளில் பெரும் பகுதியை குடிசையில் தான் கழித்திருக்கிறேன். இப்போது நகரத்தில் வாழ்வதால் வேறு வழியில்லாமல் காங்கிரீட் தளம்போட்ட வீட்டில் வசிக்கிறேன். அதுவும் ஒரு குறைந்த பட்ச அளவுள்ள வீடுதான். எனது Ecological foot print ஒப்பீட்டளவில் மிகச் சிறியதுதான். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நான் குடிசைக்கே திரும்பி விடுவேன்.

            • இராமன் உங்கள் மூளை சிந்தித்து எடுத்து விடும் கருத்துக்கள் உங்கள் மலத்தை போன்றே துர்நாற்றம் வீசுகின்றதே ! அவர்களாவது கொன்ற மிருகத்தின் உடலை புரதான பொது உடைமை சமுக கூறுகளின் அடிப்டையில் பங்கிட்டுக்கொள்கின்றர்கள். அதில் ஒன்றும் தவறு இல்லையே. அதே சமையம் உங்கள் முதலாளித்துவ சமுகம் மனிதனையே ,அவன் வாழ்வாதாரமான அவனின் நிலம் அந்த நிலத்தின் நீர் ஆகியவற்றை ஈர குலையை அறுப்பது போன்று அறுத்து முதலாளித்துவத்துக்கு மூலதன உணவாக உண்கின்றதே இராமன் . [உதாரணத்துக்கு நம் காஞ்சிசிபுரம் விவசாயிகளின் நிலங்களை,வாழ்வாதரங்களை பறித்த போர்ட் ,ஹோன்டாய் பன்னாட்டு நிறுவனங்களை எடுத்துக்கொள்ளலாம் ]முதாலாளித்துவம் எளிய மனிதர்களின் “உடலை- வாழ்வாதாரத்தை ” உண்ட மிச்ச சொச்ச கழிவுகளை நீர் உமது உணவாக-முதலாளித்துவத்தின் அடிவருடியாக ,மிச்ச எலும்பு தோல்களை உண்ணும் Canis lupus familiaris போன்று உண்பது உமக்கு இனிக்கின்றதா ? மனித மாமிசம் உப்பு கரிக்கும் என்று கூறுவார்களே இராமன் ! உமக்கு மனித மாமிச சுவை எப்படி இருக்கிறது ?

              //Yes, I meant it will apply for tribes. They can kill and share the meat. No need for clothes and other amenities. basically live like animals..//

              • கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி ..

                // மனித மாமிசம் உப்பு கரிக்கும் என்று கூறுவார்களே இராமன் ! உமக்கு மனித மாமிச சுவை எப்படி இருக்கிறது ?//

                உக்ரைன் காரன் கிட்ட கேட்டேன் சார் , கம்ம்யூநிசம் தன குழந்தையை தானே உண்ணும் படி செய்து விட்டது . அவருடைய தாத்தாவிற்கு சுவை பற்றி அக்கறை இல்லாமல் உணவிற்காக மட்டும் உண்டாராம் . சுவை பற்றி எதுவும் எழுதி வைக்காமல் போய்விட்டாராம் …

                கவலை வேண்டாம் தமிழ் , நார்த் கொரியாவிற்கான டிக்கெட் உங்களுக்கு அனுப்புகிறேன் . சென்று உண்டு கம்யூன்சதை அனுபவித்து எழுதுங்களேன்

                • பிறர் கருத்துகளை ஒழுங்க புரிந்து கொள்ளும் தகுதி/அறிவு இல்லாத இராமன் ,

                  முதாளித்துவம் என்ற கொள்கை , மக்களை எப்படியெல்லாம் அவர்கள் வாழ்வாதரங்களை தின்று அதன் மூலம் மக்களை கொன்று குவிக்கின்றது என்பதை நீர் புரிந்து கொள்ள உமக்கு இருக்கும் முதலாளித்துவ எடுபிடி/அடிவருடி மூளைக்கு திறன் பத்தாது தான். நீர் என்ன செய்வீர் பாவம் . எங்கள் வலி உமக்கு இன்று கொசுகடியாக, ஏளனமாக தான் தெரியும். ஆனால் உமக்கு உரிய தீர்ப்பை திரும்ப கொடுக்கும் போது அதன் ஆற்றல் , எங்கள் ஆற்றல் உமக்கு புரியும்.

          • மார்க்ஸ் அவர்களின் ஐந்து பகுதி வரலாறு பற்றி பேசுகிறீர்கள் என்று எடுத்து கொள்கிறேன். எனக்கு இது பற்றி சில கேள்விகள் உண்டு. முடிந்தால் நிவர்த்தி செய்யவும். மார்க்ஸ் வரலாற்றை பார்த்து விட்டு அதை ஐந்தாக பிரிக்கிறார். எல்லா வரலாற்று நிகழ்வுக்கும் அடிப்படை காரணம் வர்க்க போராட்டம் என்கிறார். வரலாற்றின் பல பகுதிகள் அதற்க்கு ஒத்து போகின்றன. ஆனால் பல இடங்கள் இடிக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு சில மிக மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளை எடுத்து கொள்வோம். முதன் முதலில் லட்ச கணக்கில் மக்கள் இறந்த புனிக் யுத்தம், சிலுவை போர்கள், megallen, கொலம்பஸ், மார்கோ போலோ, வாஸ்கோ ட காமா போன்றவரின் பயணம், இந்தியாவின் மீது நடந்த படையெடுப்புகள், நம் தமிழ் மன்னர்கள் இமயம் வரை சென்று பெயரை பொரித்து, உலக போர்கள் ஆகியவை எப்படி வர்க்க போராட்டம் என்று கூறவும்.

            //பகையுறவின் போது ஒரு குழு அடிமைப்படுத்தப்பட மற்றொன்று அங்கேயிருந்த நிலம் நீர் தாவர விலங்கினம் போன்ற இயற்கை வளங்களை தனியுடமையாக்கிக் கொண்டது. இதில் சுகம் கண்டவர்கள் இன்னும் தெளியவில்லை//

            ஆக கருப்பு நிற குழுவும், வெள்ளை நிற குழுவும் சந்தித்த போது பகை கொண்டனர். இதில் வென்ற குழு தோற்ற குழுவின் வளங்களை எடுத்துக்கொண்டு அனுபவித்தது. அவர்கள் போதை இன்னும் தெளியவில்லை. இதை விட மோசமான ஒரு வரலாற்று generalization நான் கேட்டதில்லை. இரு குழுவும் என்னமோ பயணத்தின் போது சந்தித்து இது நடந்தது போல ஏன் ஒரு வெட்டி பிம்பம்? அவர்கள் பயணித்ததே தேவையான வளங்களை தேடி என்னும் போது வென்ற நிலத்தின் வளங்களை அவர்கள் தாங்கள் உபயோகத்திற்கு எடுத்துகொண்டது என்ன ஆச்சிர்யம்? மேலும் ஒரே நிறம் கொண்ட இரு குழுவினரின் பகைமைக்கு என்ன காரணம் சொல்வீர்? ஆப்ரிக்க கறுப்பின மக்களை அதே நிற வேறு ஆப்ரிக்க தேசத்து மக்கள் அடிமையாக நடத்திய வரலாற்று நிகழ்வு இரு வேறு நிறத்தவர் ஒருவர் தோற்று நடந்ததா?

            • Ganesh,

              மார்க்ஸ் அவர்கள் எழுதிய வரலாற்றை நான் இன்னும் படிக்கவில்லை. விரைவில் படிக்க முயற்சி செய்கிறேன்.

              இரு குழுக்கள் சந்தித்த போது நட்புறவும் நடந்திருக்கிறது பகையுறவும் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறேன். எதிர்கொண்ட அந்த குழுக்களின் நிற வேறுபாட்டைப் பற்றி நான் ஏதும் கூறுவதை தவிர்த்திருப்பதை கவனிக்கவும். வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததால் தோலின் நிறமும் அதற்கேற்ப மாறியிருக்கிறது என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

              நிற வேறுபாடு பகையை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணிதான். ஆனால் அது மட்டும் காரணியல்ல. முகம் மற்றும் அங்க அமைப்பின் வித்தியாசங்கள், நெற்றியில் முகத்தில் இட்டுக்கொண்ட குறிகளின் வித்தியாசங்கள் கூட அவர்களுக்கிடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

              ஆப்பிரிக்காவைப் பொறுத்த வரையில் எல்லோருமே கருப்பர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சரியல்ல. அவர்களுக்கு தங்களுக்கிடையே உள்ள நிற மற்றும் தோற்ற வேறுபாடுகள் தெளிவாக தெரியும்.

              நீங்கள் முரண்பாட்டை காணும் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி அடுத்த பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.

              • உங்க கான்செப்ட் படி உலகமே பெரிய குடும்பம் , இப்போ ஆரியர்கள் உங்க ஊருக்கு வரும்போது சாப்பாடு தட்டு ஆரத்தி எடுத்து கூட்டி வந்து சாப்பாடு போட்டு இருக்க வேண்டியது தானே . அட இப்ப கூட என்ன, குடும்பத்தில ஒருத்தர் தப்பா மிரட்டி சாப்புட்டா என்ன கேட்டு போச்சு ? நீங்க அனுசரிச்சு போக வேண்டியது தான சார் ? 🙂

                • ராமன்,

                  //ஆரியர்கள் உங்க ஊருக்கு வரும்போது சாப்பாடு தட்டு ஆரத்தி எடுத்து கூட்டி வந்து சாப்பாடு போட்டு இருக்க வேண்டியது தானே//

                  தென் இந்தியாவில் அதாவது நமது ஊரில் நடந்தது exactly இதே தான். அவர்களின் தோலின் மினுமினுப்பில் மயங்கி, சாப்பாடு மட்டுமில்லை. கோயில்களில் எளிய வேலையையும் கொடுத்திருக்கிறோம். இதைப்பற்றி முன்னரே பேசியிருக்கிறோம். மீதியை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

                  //குடும்பத்தில ஒருத்தர் தப்பா மிரட்டி சாப்புட்டா என்ன கேட்டு போச்சு ?//

                  குழந்தைப்பருவம், மாணவப்பருவம் பொறுத்துக்கொள்வார்கள். தனிக்குடும்பத்தில் அதற்குமேலும் கொஞ்சகாலம் பொறுத்துக் கொள்வார்கள். பிறகு கண்டிக்கத்தான் செய்வார்கள். தொடர்ந்து ஒழுங்கீனமாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிகமிகக்குறைவுதான். அதையும் மீறினால், தாய் தந்தையரே அந்த நபரை கொன்று விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

                  கூட்டுக்குடும்பத்தில் இவ்வாறு இருப்பதற்கு சாத்தியமில்லை. மற்றவர்களின் ஒழுங்கையும் பாதிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும். அதனால் இப்படிப்பட்ட கேஸ்கள் கூட்டுக்குடும்பத்தில் வாய்ப்பில்லை.

                  உங்கள் குடும்பத்தில் இப்படிப்பட்ட நபரை எப்படிக் கையாள்வீர்கள் என்று கூறவும்.

            • Ganesh,

              நீங்கள் பல போர்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் எந்த முரண்பாடும் இல்லை. வர்க்கப் போராட்டம் முன்னுக்கு வந்து விடக்கூடாது என்று ஆளும் வர்க்கம் தொடர்ந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டேதான் இருக்கும். தேசியம் மொழி மதம் போன்ற பிரிவினைகளை உற்பத்தி செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அரசியல் பாலபாடம். போர்கள் இதற்குப்பயன் படுவதோடு புதிய நிலங்களை மக்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவும் உதவுகிறது.

              சில மனிதர்களைப் (Explorers) பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

              அவர்கள் நால்வரும் சந்தேகமில்லாமல் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களின் பயணங்களும் அவர்களின் வர்க்க நலனைச் சார்ந்தது தான். Polo வைத்தவிர மற்ற மூவரும் இஸ்லாமியர்களை Bye-pass செய்து இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினர். அவர்கள் நால்வரின் பயணம் தனியாக சாத்தியமில்லை. பல தொழிலாளர்கள் உடன் சென்று உதவியிருக்கிறார்கள். பல முன்னோடி மாலுமிகளின் பயணங்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறது. அவர்களைப் பற்றி அதிகமாக பேசப்படுவதில்லை.
              இந்தளவுக்கான விளக்கம் போதுமென்று நினைக்கிறேன். தேவைப்பட்டால் மேலும் விளக்கமாக பார்க்கலாம்.

              • நிஜ உலகத்துக்கு வாங்க சார். நீங்கள் கூறியதை வரலாறு பற்றி கொஞ்சம் தெரிந்த யாரிடமோ அல்லது வரலாற்று ஆய்வாளர் ஆகியோரிடம் கூறி பாருங்கள். மார்க்ஸ் வரலாற்று பார்வை என்னும் குமிழ் உங்களை சுற்றி கட்டிக்கொண்டு கனவில் மிதகீர்கள். எல்லா வரலாறும் வர்க்க போராட்டம் என்று மார்க்ஸ் ஆசான்கள் நிரூபித்து உள்ளனர் என்று இங்கு கொஞ்சம் முன்னர் யாரோ கூறினார்கள். மார்க்ஸ் வரலாற்று பார்வை தவறு என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டு, கிட்ட தட்ட 75 ஆண்டுகள் ஆகின்றது.

                உங்கள் பார்வைபடி எல்லா தவறுக்கும் காரணம் அதிகார வர்க்கம். தேசியம், மதம், மொழி ஆகியவை ஆளும் வர்க்கம் உருவாக்கிய பிரிவுகள். இதை விட மடத்தனம் வேறு எதுவும் இல்லை. மக்களின் முடிவுகள், வாழும் இடம், இதனால் உருவாகிய நம்பிக்கைகள், பழக்க வழக்கம் ஆகியவை எல்லாம் காரணம் அல்ல, ஆளும் வர்க்கம் தான் மக்கள் இடையே உள்ள வேறுபாடுக்கு காரணம். வரலாற்றை கொஞ்சமாவது படித்து இருந்தால் இது தெரியும்.

                முதலில் மார்க்ஸ் எழுதிய அனைத்தும் என்றும் உண்மை என்னும் மாயையை விட்டு வெளியே வாருங்கள். பிறகு கம்யூனிஸ்ட் பார்வை தான் சரி என்னும் பார்வையை விட்டு விட்டு கொஞ்சம் வரலாற்று ஆதாரத்துக்கு பொருந்தும் உண்மை எது என்று பாருங்கள். மார்க்ஸ் எழுதியதால் எல்லாம் சரி அல்ல. அவர் எழுதி 150 வருடத்துக்கு மேல் ஆகிறது. நீங்கள் கூறுவது போல ஆளும் வர்க்கம் எல்லா வரலாற்று நிகழ்வுக்கும் காரணம் என்பது எவ்வளவு தவறு என்று சிலுவை போர், அல்லது ஆசிய வரலாறு ஆகியவற்றை பார்த்தாலே புரியும். கம்முனிச பதிப்பை மட்டும் படிப்பதை விட்டு விட்டு கொஞ்சம் நல்ல ஆய்வுகளையும் படியுங்கள். வேண்டுமானால் கேளுங்கள்.

                • கனேஷ் ,

                  மார்க்ஸ் அவர்கள் வரலாற்றை 5 வகையாக, 5 சமுகங்களாக காலக்கிரமப் படி பிரித்ததை இது வரை எந்த வரலாற்று கொம்பனும் தவறு என்று நிறுபித்தது இல்லை. என்ன 5 ஆவது வகை சமூகமான கம்யுனிச சமுகம் , முதலாளிதுவத்துக்கு அடுத்த நிலையில் இருப்பதால் முதலாளித்துவ வரலாற்று ஆய்வாளர்கள் அதனை பயத்துடன் மறுதலிக்கின்றார்கள். சமுகம் ஒரு வகைமையில் இருந்து அடுத்த வகைமைக்கு நகருகிறது என்றால் [உதாரணம் நிலபிரபுத்துவத்தில் இருந்து முதாலாளித்துவம் நோக்கி ] அதற்கு காரணம் மக்களும் அவர்கள் உழைப்பும் அவர்களின் கண்டுபிடிப்புகளுமே பிரதான காரணமாக இருக்கும் நிலையில் மார்சின் சிந்தனை மிகவும் துல்லியமாக சரியாக தான் உள்ளது. ஐரோப்பியர்களால் புதிய கண்டங்கள் கண்டு பிடிக்க பட்டது , இனகுழுக்களிடையிலான யுத்தம் , உலக நிலபரப்பின் மீது இனக்குழுக்கள் உணவு ,வாழ்விடம் தேடி நகர்வது இவை எல்லாம் எப்படி மார்க்ஸ் அவர்கள் 5 வகை சமுக வரையறைக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும் ! மேலும் இந்த விடயத்தில் எடுத்துகாட்டுகளுடன் நீங்கள் அறிவு பெறவேண்டுமானால் திரு இராகுல சாங்கிரித்தியாயன் அவர்களின் வால்காவில் இருந்து கங்கா வரை என்ற நூலை படிக்கவும் . மேலும் திரு இளையராஜாவின் “Nothing But Wind” என்ற இசையை கேட்டபின்பு மீண்டும் சிந்திக்கவும் .

                  நன்றி கனேஷ் .

                  “Nothing But Wind”

                  • மன்னிக்கவும் vinavu and கனேஷ் . அதே இசை தகட்டில் உள்ள மேஸ்ரோவின் வேறு ஒரு இனிய இசையை கவன குறைவாக கொடுத்து விட்டேன். The real music is here:

                    http://mp3.tamilmp3songs.mobi/load/64%20kbps/////Instrumentals/NOTHING%20BUT%20WIND%20(ILAYARAJA)/Nothing%20But%20Wind-%5BTamilanda.com%5D.mp3

                  • //மார்க்ஸ் அவர்கள் வரலாற்றை 5 வகையாக, 5 சமுகங்களாக காலக்கிரமப் படி பிரித்ததை இது வரை எந்த வரலாற்று கொம்பனும் தவறு என்று நிறுபித்தது இல்லை.//

                    எல்லாம் நிரூபிச்சு பல ஆண்டுகள் ஆகுது சார். கொஞ்சம் தற்போதய கால வராற்று பார்வைக்கு வாங்க. மார்க்ஸ் ஒரு சமூகம் ஒரு வகையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்வதற்கு historical materialism கொண்டு மார்க்ஸ் காரணம் கூறுகிறார். அவரை பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணி மக்களின் Relations of Production. (நான் காபிடல் ஆங்கிலத்தில் தான் படித்தேன். எனவே எனக்கு அவற்றின் தமிழ் வார்த்தைகள் தெரியாது. மன்னிக்கவும்).இங்கு வேறு எதற்கும் இடம் இல்லை, மதம், மொழி, தேசியம், அரசாங்கம், ஒரு தலைவன்/அரசரின் ஒரு முடிவு போன்ற எதுவும் வரலாற்று நிகழ்வுக்கு காரணி இல்லை என்பது மார்க்ஸ் வாதம். இந்த வரலாற்று பார்வையில் உள்ள பல ஓட்டை, உடைசல்களை காண்பித்து அவரின் தியரி அதிக பட்சம் ஐரோப்பிய வரலாற்றின் ஒரு சிறுபிள்ளை தனமான கண்ணோட்டம் என்று 1970s, 1980s முதல் நிரூபிக்க பட்டு, இன்று கிட்ட தட்ட அனைத்து வரலாற்று ஆசிரியரும் ஒத்து கொள்கின்றனர். உங்களுக்கு ஒரு சில எடுத்துகாட்டுகள் மட்டும் தருகிறேன்.

                    ஐரோப்பாவை தவிர்த்த உலகின் மற்ற பகுதிகளில், முக்கியமாக தென் கிழக்கு ஆசியாவில் மார்சிய வரலாற்று பார்வை நடைமுறையில் தோல்வி அடைவதை விளக்கும் பல ஆய்வுகள் உள்ளன. இங்கு தங்கள் புரிதலுக்கு சில மட்டும்:

                    இந்தியா – தீபேஷ் சக்ரபர்த்தி எழுதிய Rethinking Working Class History எனும் நூல். குறிப்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த சணல்நூல் தொழிலாளர் பற்றிய ஆய்வில் இந்தியாவின் கலாச்சார பிண்ணனி எவ்வாறு அவர்களின் வரலாற்றை வடிவமைத்தது என்று சிறப்பான ஆய்வை தருகிறார். மார்சிய வரலாற்று பார்வை ஏன் Industrial Revolution நடந்த ஐரோப்பாவிற்கு மட்டுமே பொருந்தும், மற்ற உலக வரலாற்றுக்கு அதை பொறுத்த முற்படுவது தவறு என்று இந்தியாவை உதாரணமாக கொண்டு நிரூபிக்கும் நூல்.

                    சீனா – மார்க்ஸ் கூற்று படி அடிமை சமுதாயம் -> feudalism -> capitalism. சீன வரலாறு இதற்க்கு முற்றிலும் மாறுபட்டது. சீன வரலாற்றில் கிராமம், நகரம் என்னும் பிரிவு இல்லை. சீன வரலாற்றை மார்சிய feudalism கண்ணோட்டத்துக்கு உட்படுத்த கம்முனிச்ட்களும் முயன்று எவ்வாறு இல்லாத ஒரு Pesant என்னும் பிரிவை உருவாகினர் என்பதை இங்கு படிக்கலாம்: Cultural and Political Inventions in Modern China: The Case of the Chinese “Peasant” –

                    [சுட்டிகள் நீக்கப்பட்டன. பின்னூட்டம் இடும் வாசகர்கள் சுட்டிகளை கொடுக்காமல், தங்களது சொந்தக் கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்]

                  • பதில் தொடர்கிறது.

                    ஆசிய வரலாற்றுக்கு மார்க்ஸ் வரலாற்று பிரிவு ஏன் பொருந்தாது என்பதற்கு நல்ல பல புத்தகங்கள் உள்ளன. ஏற்கனவே இந்தியா, சீனா பற்றி பேசிவிட்டதால் ஜப்பான் பற்றிய புத்தகம் இது: Rethinking Japanese History (Michigan Monograph Series in Japanese Studies, Number 74) by Amino Yoshihiko.

                    சரி, ஐரோப்பிய வரலாற்றை மட்டுமாவது மார்சிய பார்வை பிரச்சனை இல்லாமல் விளக்குகிறதா என்றால் அதுவும் இல்லை. Industrialization சம்மந்தப்பட்ட காலத்தை சிறப்பாக விளக்குகிறது. ஆனால் பழைய வரலாற்றை பார்த்தால் அங்கே சுருண்டு விழுந்து விடுகிறது.

                    1. விவசாயம் வரும்போது அடிமை சமுதாயம் தான் வரும் என்கிறார். ஓரளவுக்கு இது ரோம, எகிப்து சமுதாயத்துக்கு பொருந்தினாலும் வேறு எந்த இடத்துக்கும் பொருந்துவதில்லை. மார்க்ஸ் வரலாறு மிக முக்கியமாக பெர்சிய பேரரசுக்கு சுத்தமாக பொருந்தாது. பெர்சியாவில் அடிமைகள் இல்லை, ஒரு தலைநகரம் கொண்ட ஒரு பேரரசு இல்லை. நான்கு தலைநகரம் கொண்ட பல தேசத்தின் கூட்டு அது, அது வீழ்ந்தது புதிய அடிமைகள் அல்லது புதிய வளங்கள் வராததால் அல்ல, பெர்சிய தன்மைக்கே உரிய பல வேறு காரணங்களால்.

                    2. ரோமபுரி வீழ்ந்தது பற்றி மார்க்ஸ் கூறுவதும் மிக மிக குறுகிய கண்ணோட்டம். அடிமை முறையின் பங்களிப்பை மிக மிக மிகைபடுதுகிறார். அந்நிய படையெடுப்புகள், கிறிஸ்துவ மதத்தின் பங்களிப்பு ஆகியவை கிட்டத்தட்ட கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நான் இதை கூறுவதை விட Yale University வரலாற்று பேராசிரியர் அவரின் உரைகளை தாங்கள் இங்கு காணலாம் :

                    [சுட்டிகள் நீக்கப்பட்டன. பின்னூட்டம் இடும் வாசகர்கள் சுட்டிகளை கொடுக்காமல், தங்களது சொந்தக் கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்]

                    3. சிலுவை போர்கள் பற்றி அவர் முன்வைக்கும் வாதம், அது நிலம் இல்லாத இரண்டாம், மூன்றாம் பிள்ளைகள் நிலம் பெற நடந்த போர் என்பது. இந்த ஒரு காரணம் கொண்ட பார்வை சில காலம் கொஞ்சம் தாக்கு பிடித்தாலும் பின்பு நடத்தப்பட்ட நீண்ட ஆய்வுகளின் மூலம் உடைக்க பட்டுவிட்டது. தாங்கள் படிக்க:

                    [சுட்டிகள் நீக்கப்பட்டன. பின்னூட்டம் இடும் வாசகர்கள் சுட்டிகளை கொடுக்காமல், தங்களது சொந்தக் கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம்]

                    4. இதே ஒரு காரணி வரலாற்று பார்வை இன்னும் பல இடங்களிலும் தோற்கிறது. English Civil War மற்றும் ஒரு உதாரணம். ஆளும் வர்க்கம் ஒரு பக்கமும், பார்லிமென்ட் இன்னொரு பக்கமும் இருந்து நடந்த புரட்சி என்பது மார்சிய வாதம். ஆனால் இன்றைய ஆய்வாளர்களால் மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக காட்டப்படும் Catholic vs Protestant tensions மார்க்ஸ் பார்வையில் இருக்காது. Conrad Russel அவர்களின் The Origins of the English Civil War இதற்க்கு ஒரு சிறந்த புத்தகம்.

                    நான் இவ்வளவு பேசுவதால் மார்சிய பார்வையை எதிர்பதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். வரலாற்றை படிப்திலும், ஆய்வு செய்வதிலும் மார்க்ஸ் ஒரு புது கோணத்தை தந்தார். வரலாற்று ஆய்வுக்கு அவரின் பங்கு இன்றியமையாத ஒன்று. ஆனால் அவர் பார்வை இன்று நமக்கு இருக்கும் எல்லா ஆதாரத்துடனும் பொருந்துவது இல்லை. The lenses through which History is studied constantly updates itself. Marx provided one such lens, thats all. Its absolutely not the definitive lens or even a good one except in some areas. ஆனால் வரலாறு என்பது பல விபத்துகளின் விளைவு என்ற பார்வையை மாற்றியதில் மார்க்ஸ் பெரும் பங்கு உண்டு. அவ்வளவே.

                    • நீங்கள் சுட்டிக்காட்டும் நூல்களை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு வரலாற்றை பற்றியும் முதலாளித்துவத்தை பற்றியும் மார்க்ஸ் விளக்கியதில் எவை எல்லாம் பிரச்சினைக்குரியவை, எவை அறிவியலுக்கு புறம்பானவை, எவை ஆசிய நாடுகளுக்கு பொருந்தாதவை என்பதை எல்லாம் வரிசைப்படுத்தி நீங்களே சொந்த முறையில் விளக்கினால் விவாதிக்கலாம்.

                  • //மேலும் இந்த விடயத்தில் எடுத்துகாட்டுகளுடன் நீங்கள் அறிவு பெறவேண்டுமானால் திரு இராகுல சாங்கிரித்தியாயன் அவர்களின் வால்காவில் இருந்து கங்கா வரை என்ற நூலை படிக்கவும்//

                    வரலாற்றை பற்றி பேசும்போது, வரலாற்றை கொண்டு புனையப்பட்ட சிறுகதை நூலை ஏன் தருகீர்கள்? சோழ வரலாற்றுக்கு பொன்னியின் செல்வனை, பல்லவ வரலாறுக்கு சிவகாமியின் சபதம் படித்தால் அந்த காலத்தை பற்றிய வரலாற்று அறிவு வந்து விடுமா? வார்த்தைக்கு மன்னிக்கவும், என்ன முட்டாள்தனம் சார் இது? குறைந்த பட்சம் வரலாற்றை பாரபட்சம் இன்றி அலசும் பதிப்புகளை தாருங்கள். சிறுகதை, புதினம், agenda driven half truths போன்றவற்றை தரவேண்டாம். Please deal with facts not fiction. முடியாவிட்டால், என் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

                    பி/கு: வோல்கா சே கங்கா நானும் படித்துள்ளேன். 1943இல் எழுதப்பட்ட வரலாற்று அடிப்படை சிறுகதை நூலை, 2015இல் வரலாற்று நூலாக தர வேண்டாம். சாங்கிரித்தியாயன் அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் நூல் வரலாற்று ஆராய்ச்சி நூல் அல்ல, வரலாற்று சிறுகதை நூல். அவ்வளவே.

                    • கனேஷ்,

                      மார்சிய அடிப்படை தத்துவமான வரலாற்று பொருள் முதல்வாதம் , மூலதனத்தின் நான்கு பாகங்கள் பற்றி எல்லாம் விவாதிக்க தயாராகவே உள்ளேன் கனேஷ். நீங்கள் கேட்பது எப்படியுள்ளது தெரியுமா ? சோழ வரலாற்றை பற்றி பேசும் போது சோழர்களின் கலை இலக்கியங்கள் பற்றி ஏன் பேசுகின்றீர்கள் என்பது போல் உள்ளது. சோழர்களின் வரலாற்றை பற்றியரிய பொன்னியின் செல்வனின் உட்கூறுகள் மிகவும் பயனுள்ளவை. முழுமையான கல ஆய்வுக்கு பின்பே, வரலாற்று ஆதாரங்கள் ஊடாக தான் [செப்பேடுகள் ,கல்வெட்டுகள் போன்ற ] திரு கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை எழுதியுள்ளார். அது போன்றே வால்காவில் இருந்து கங்கா வரை நூலிலும் திரு இராகுலசாங்கிரிதியாயன் அவர்கள் உலக வரலாற்றை மார்சிய அடிபடையில் கொடுத்து உள்ளார். முதலில் நீங்கள் எத்தகைய அறிவை இந்த மார்சிய நூலில் இருந்து பெற்றிர்கள் என்பதை கூறுங்கள். அதில் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத அம்சங்களை பட்டியல் இடுங்கள். அதன் ஊடாக நீங்கள் விவாதத்தை தொடங்குவது வெகு சுலபமாக இருக்குமல்லவா ?

                      வால்காவில் இருந்து கங்கா வரை நூல் கட்சிப்படுத்தும் புரதான பொது உடைமை சமுகமும் ,அது பெண்வழி சமுகமாக இருந்ததையும் உங்களால் மறுக்க இயலுமா ? மறுக்க முடியுமென்றால் ஆதரங்களுடன் தர்க்க பூர்வமாக விவாதியுங்கள். இப்படியாக மார்க்ஸ் அவர்கள் வரலாற்று நிகழ்வின் ஊடாக ஒவ்வொரு சமுகத்தையும் காட்சி படுத்தும் போது, அதில் ஏதேனும் விவர குறைபாடோ ,தர்க்க ரீதியான தவறோ இருக்கின்றதோ என்று ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்யுங்கள். ஆனால் நீங்கள் செய்யும் விவாதத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் வாய்பேச்சு-வெட்டிபேச்சு போன்று வெறும் கவர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. மிகவும் வருத்தமாக உள்ளது கனேஷ்.

                      ஆமாம் திரு இளையராஜாவின் காற்று மட்டும் தான் அது என்ற இசை மொழியின் ஊடாக கூட , மார்க்ஸ் கூறும் 5 வகை சமுகத்தை நாம் காணமுடியும்.கண்டு உணர்ந்தீர்களா கனேஷ் ?

                    • கணேஷ் சார்,

                      மார்க்ஸ் எழுதிய ‘வரலாற்றை’ படிச்சிருக்கீங்க. வால்கே சே கங்கா என்று ராகுல்ஜி புக்கை இந்தியிலேயை படிச்சிருக்கீங்க. காபிடல் ஆங்கிலத்தில படிச்சிருக்கீங்க. தீபேஷ் சக்ரபர்த்தி என்கிறவரு எழுதின இந்திய வரலாற்று ஆய்வு புத்தகத்தை படிச்சிருக்கீங்க.

                      “சீனாவில் விவசாயி என்ற புதிய அரசியல் ‘கண்டுபிடிப்பு'” பத்தின ஆய்வுக் கட்டுரை எல்லாம் மேற்கோள் காட்டுறீங்க. அமினோ யாஷிஹிகோவின் ஜப்பானிய வரலாற்று ஆராய்ச்சி புத்தகத்தை படிச்சிருக்கீங்க.

                      மார்க்சிய வரலாறு 75 வருசமாகவே தப்புன்னு புரூவ் ஆகியிருக்குன்னு சொல்றீங்க (உபரி மதிப்பு தப்புன்னு புரூவ் ஆயிருச்சின்னு வழக்கமா இங்க ஒரு அறிஞர் – நம்ம அதியமானத்தான் சொல்றேன் – சுட்டி போட்டுகிட்டு இருப்பாரு, அவருக்கும் தங்களுக்கும் ஏதாவது நெருங்கிய அல்லது தூரத்து தொடர்பு இருக்கா சார்)

                      உங்க பரந்து விரிஞ்ச வாசிப்பையும், வரலாற்று புலமையையும் பார்த்து மலைச்சி போய் நிக்கிறேன் நான்.

                      ஆனா, என் சேக்காளி ஒருத்தன் நடுவிலே ஒரு டவுட்ட கிளப்பி விட்டுட்டான். “நாலு சுட்டி, நாலு புக்கு பேரு, அங்கங்க காப்பி பேஸ்ட் போட்டு நடுநடுவில சொந்தமா யோசிச்சதையும் கலந்து அடிச்சு விட்டாலும் இப்படி பெரிய மேதை மாதிரிதான் இன்டர்நெட்டுல தெரியும். உண்மையில கணேசு அப்படியா, இப்படியான்னு என்ன ஆதாரம்”னு என்ன மடக்குறான்.

                      இப்படித்தான் அந்த உபரி மதிப்பு அறிஞர்கிட்ட பலபேரு பல கேள்விகள கேட்டு அவரு எஸ்கேப் ஆகிட்டு இருக்காரு. உங்ககிட்ட கேள்விகள வைச்சா டான் டான்னு பதில அடிப்பீங்கன்னு நான் பெட் கட்டியிருக்கேன். அப்படித்தான சார்?

                      1. மார்க்ஸ் காபிடல்ல இப்படி சொல்லியிருப்பதா சொல்லியிருக்கீங்களே
                      //அவரை பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணி மக்களின் Relations of Production. (நான் காபிடல் ஆங்கிலத்தில் தான் படித்தேன். எனவே எனக்கு அவற்றின் தமிழ் வார்த்தைகள் தெரியாது. மன்னிக்கவும்).இங்கு வேறு எதற்கும் இடம் இல்லை, மதம், மொழி, தேசியம், அரசாங்கம், ஒரு தலைவன்/அரசரின் ஒரு முடிவு போன்ற எதுவும் வரலாற்று நிகழ்வுக்கு காரணி இல்லை என்பது மார்க்ஸ் வாதம்//

                      மார்க்ஸ் இப்படி சொல்றது, நீங்க படிச்ச காபிடல் ஆங்கில புஸ்தகத்துல எத்தனாவது வால்யூம்ல, எத்தனாவது அத்தியாயத்தில, எத்தனாவது பக்கத்திலன்னு சொல்றீங்களா?

                      2. //சீனா – மார்க்ஸ் கூற்று படி அடிமை சமுதாயம் -> feudalism -> capitalism. சீன வரலாறு இதற்க்கு முற்றிலும் மாறுபட்டது. சீன வரலாற்றில் கிராமம், நகரம் என்னும் பிரிவு இல்லை. சீன வரலாற்றை மார்சிய feudalism கண்ணோட்டத்துக்கு உட்படுத்த கம்முனிச்ட்களும் முயன்று எவ்வாறு இல்லாத ஒரு Pesant என்னும் பிரிவை உருவாகினர் என்பதை இங்கு படிக்கலாம்//

                      நீங்க கொடுத்த சுட்டி ஏதோ காசு கட்டினாத்தான் படிக்க தர்ற கடையில இருக்கு. சீன வரலாத்துல கிராமமே இல்ல, விவசாயின்னு ஒரு பிரிவையே கம்யூனிச்ட்டுகளு உருவாக்கினாங்கன்னு சொல்றீங்களே. இதை கொஞ்சம் புரிஞ்சிக்கிற மாதிரி விளக்குங்க.

                      3. ஐரோப்பால நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு நடந்து சில வாரங்கள்ல மார்க்ஸ் எழுதின ஒரு கட்டுரை ஒரு சிலை வீழ்த்தப்படுவதை பற்றி பேசுகிறது. அது என்ன சிலை? எப்ப வைச்சது? எப்ப விழுந்தது? யார் வீழ்த்தினாங்க?

                      இன்னும் நெறைய கேள்விங்க இருக்கு. இதுக்கு கணக்கு தீர்த்தீங்கன்ன, அடுத்தடுத்து லிஸ்டோட வர்றோம்.

                      – குமரன்

              • Ganesh,

                / பல பகுதிகள் அதற்க்கு ஒத்து போகின்றன. ஆனால் பல இடங்கள் இடிக்கின்றன./ என்று நேற்று எழுதிவிட்டு, இடிக்கின்றதாக சொல்லி சில வற்றைக் கூறியிருந்தீர்கள். அதற்கான எனது விளக்கத்திலிருந்து தொடராமல் திடீரென்று இன்று /மார்க்ஸ் வரலாற்று பார்வை தவறு என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க பட்டு, கிட்ட தட்ட 75 ஆண்டுகள் ஆகின்றது./ என்று எழுதுகிறீர்கள். இதை நேற்றே எழுதியிருக்கலாமே. 🙂

                //தேசியம், மதம், மொழி ஆகியவை ஆளும் வர்க்கம் உருவாக்கிய பிரிவுகள். இதை விட மடத்தனம் வேறு எதுவும் இல்லை.//

                தேசியம் என்ற கருத்து தோன்றி இருநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. Citizen என்றாலே கிராமங்களைப் போலல்லாமல், பல குழுக்களைச்சார்ந்த மக்கள் வசிக்கும் நகரத்தில் வசிக்கும் சகமனிதன் என்று தான் பொருள் என்பதிலிருந்தும் இதை புரிந்து கொள்ளலாம்.

                அதிகாரப் போட்டிகளால், பல மதங்கள் மொழிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. திணிக்கப்பட்டிருக்கின்றன. துவக்கத்தில் எழுத்துக்கள் ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டு தங்களுக்கு மட்டுமே உரித்தானதாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தன. எழுத்துக்களின் பரவல் அதிகார பரவலுடன் நேரடியாக தொடர்பு கொண்டது. எழுதப்பட்ட வார்த்தைகள் நீண்ட ஆயுளைப் பெற்றன. புதிய அதிகாரக்குழு தங்கள் பகுதியில் தங்கள் மேலான்மையை நிறுவ புது எழுத்துக்களை உருவாக்கின. ஒரு இடத்தின் அதிகாரக்குழு தான் இணைத்துக் கொள்ள விரும்பும் மற்றொரு இடத்தின் எழுத்துக்களை அழித்திருக்கிறார்கள். புதிதாக உருவாக விரும்பும் அதிகாரக்குழு தனது பகுதிக்கு புதிய எழுத்துக்களை உருவாக்கிக்கொள்வதும் நடந்திருக்கிறது.

                புதிதாக அதிகாரம் பெற விரும்புவன், புதிதாக ப்ளாட் போட்ட இடத்தில் கோயிலுக்காக விடப்பட்ட பளாட்டில் தனது சொந்த முதலீட்டில் சிறிய கோயிலைக் கட்டி அதற்கு கதவை வைத்து ஒரு பூட்டைப் போட்டு சாவியை தன்னுடன் வைத்துக்கொள்கிறான். படிப்படியாக சிலரை சேர்த்துக்கொண்டு நன்கொடை வாங்கி கோயிலை பெரிது படுத்துகிறான். விரைவில் அந்த ஏரியாவின் முக்கிய பிரமுகர் ஆகிவிடுகிறான். காஞ்சி போன்ற மடங்கள், மருவத்தூர் போன்றவை சில உதாரணங்கள்.

                //நீங்கள் கூறுவது போல ஆளும் வர்க்கம் எல்லா வரலாற்று நிகழ்வுக்கும் காரணம் என்பது எவ்வளவு தவறு என்று சிலுவை போர், அல்லது ஆசிய வரலாறு ஆகியவற்றை பார்த்தாலே புரியும்//

                ஆளும் வர்க்கம் எல்லா வரலாற்று நிகழ்வுக்கும் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. இதை எங்கேயிருந்து பிடித்தீர்கள். வர்க்கங்களுக்கிடையே நடக்கும் பனிப்போர்தான் காரணம் என்று கூறுகிறோம். வித்தியாசம் புரியவில்லையா. நீருக்கு மேலே அமைதியாக காணப்படும் வாத்துகளின் கால்கள் நீருக்கு அடியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே யிருப்பதைப்போல, ஆளும் வர்க்கம் சற்று கூடுதலான செயல்களைச் செய்து கொண்டேயிருக்கிறது. சொல்லப்போனால் அவர்களுக்கு அதுதான் வேலையே. சிலவற்றை திட்டமிட்டு செய்யாவிட்டாலும் அது தன் இயல்பினாலேயே நடத்திவிடுகிறது. இந்த பனிப்போர் பெரும்பாலான சமயத்தில் மிகவும் அமைதியாகவே காணப்படும். அதன் இருப்பைக் காண ஒரு சிறப்பான பார்வை வேண்டும். அது தான் வர்க்கப்பார்வை. அதிகார வர்க்கத்தை அண்டி பிழைப்பவர்களுக்கு இந்த பார்வை இருப்பதில்லை. அல்லது இல்லாதது போல் நடிப்பார்கள். இரண்டு வர்க்கத்தில் இருக்கும் அப்பாவிகளுக்கு கூட இந்த பார்வை இருக்கவில்லை

                நீங்கள் குறிப்பிடும் சிலுவைப் போர்களையே எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.
                http://en.wikipedia.org/wiki/Crusades ல் உள்ள பதிவை மேலோட்டமாக படித்தாலே ஆளும் வர்க்கங்களின் இயக்கம் தெள்ளத்தெளிவாகும்.

                மேலும் விவாதிப்போம்.

                மார்க்ஸ் வரலாற்று பார்வை தவறு என்று எவ்வாறு கூறுகிறீர்கள். சுருக்கமாக விளக்கவும்.

    • Welcome Adhiyaman!Have you realised your responsibility of answering many queries raised by me in a previous blog?After I` answered all your queries,is it fair on your part to run away?Some months back,you were challenging every Vinavu reader with a question.Even that question was answered by me.When you will run back again?

  2. முதலில் முதலாளித்துவத்தில் கூட கிரனைற் கொள்ளை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்க. தேவை ஏற்படின் சட்டத்தை மாற்றி கிரனைற் கொள்ளை சட்டபூர்வமானதாக்கப்பட அரச வழிமுறைகள் உண்டு.
    கிரனைற் கொள்ளையர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? சகாயத்தின் விசாரணைக்கு ஆரதவளியுங்கள். மாபியாக்களிற்கு எதிராக அரச உளவுத்துறையின் தகிடுதத்தங்களிற்கு எதிராக வீதியில் இறங்கி பொதுநிலைப்பாட்டை உருவாக்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.
    சகாயத்தை விமர்சிப்பது கொள்ளையர்களிற்கு வாசியாக அமைந்து விடக்கூடாது.

  3. Sir, the topic is well worth a debate. Columns about the ideal structure of the society and how a ideal citizen/human being should be has been always present. The problem has been that those writings/columns are they have not evaluated the situation from the existing normality nor they have provided a solution to how to go about the situation from the existing normalcy or existing standards of society. Every one can speak about what could be the ideal situation/solution. But the real solution lies in solving the problem with the base as existing normal societal standards. I like to know whether the columnist has such wholesome solution/ idea?

  4. Sir, the column is worth a debate. These type off articles that have analysed about the situation, society and its members based on how IDEAL a society or its members should be, has been present for a long time. But the problems with these articles are that they have approached the situation from the IDEAL standards and not from the existing normal standards.The impact of these ideologies(in the articles) have been overcome so easily by the political and economic climate that have been created by neo-liberalism and the neo-liberalism influenced human thinking and behavior. So, it has been high time that we have a proper wholesome structure to approach the situation from ground reality/existing standards. I wish to know if the columnist has a wholesome structured approach to the existing situation based on existing ground reality, just not writing about the how an ideal situation or ideal citizen should be.

  5. சகாயத்தின் பணிகளில் நிறைவும் உண்டு. சில குறைகளும் இருக்கலாம். வினவு குறிபிடுவது போல, சகாயம் அதிகார வர்க்க சட்டமுறைப்படி தமது விசாரணையை அமைத்துள்ளார். வேறெந்த வகையில் அவரது விசாரணை மையம் இருக்க வேண்டும் என வினவு விரும்புகிறது? ட்ராபிக் ராமசாமி போன்று ஒன் மேன் ஆர்மியாகவா? அல்லது இடதுசாரிகள் போன்று தெருமுனை பிரச்சாரமா? வினவு குறிப்பிடுவது போன்று, மாற்றுப் பாதையை அவர் கையிலெடுத்தால், அவர் தெருமுனை பிரச்சாரம் செய்யும் ஒரு போராளியாகவே இருப்பார். மட்டுமல்ல, அவரது குரல் பத்தோடு பதினொன்றாக காற்றோடு காற்றாக கரைந்து போகும். அவர் அரசுக்கு ஜால்ரா தட்டும் ஓர் சராசரி அதிகாரியாக இருந்திருந்தால், சகாயத்தை வினாவுக்கு தெரிந்திருக்குமா? அல்லது வினவு தான் இப்படி ஓர் கட்டுரை வடித்திருக்குமா? இந்தியாவிலேயே தமது சொத்துக் கணக்கை வலைத்தளம் மூலம் வெளியிட்ட ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தானே!

    வினவு ஒன்றை சிந்திக்க வேண்டும். தங்களை வளைந்து, நெளிந்து கும்பிடு போடும் ஓர் அடிமை கூட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் ஓர் அதிகாரியாக இருந்து கொண்டு, மாபியாகளுக்கு எதிராக விசாரணை செய்வது ஒன்றும் சாதாரமானதல்ல. இந்த பணி அவரது உடலுக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதம் தரும் தருவதல்ல. இதனை வினவு அறியாததும் அல்ல. எப்போதும் போராட்ட சிந்தனையோடு இருக்கும் வினவு, கொஞ்சம் யதார்த்தத்தையும் பார்க்க வேண்டும்.

  6. சகாயம் உடனே வேலையை ராஜினாமா செய்து ம.க.இ.க.வில் சேர முயற்சிகள் செய்தால் அவர் புரட்சிகரமானவராக ஞானஸ்நானம் தரப்படும்

  7. வினவுக்கும், ஆர்கே. வுக்கும், அப்துல் கலாமில் இருந்து, சகாயம் வரை எல்லோரும் “போலிகள்”… இவனுங்க மட்டும் தான் “மகா வீரன் கள்” — பம்பாய் துப்பாக்கி சூட்டையும், தீவீரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலையும் நியாயப்படுத்தும் _______மகனுக்கு எல்லோருமே தப்பாகத்தான் தெரிவார்கள்… கூடங்குளம் போராட்டம் “அம்மா” ஆட்சியில் எப்படி இவனுங்க “வீரமும்”, “புரட்சியும்” மலம் திண்ணப்போச்சோ, அப்பவே இவனுங்க _______ எல்லோரும் தெரியும்…..

    உன்னால நாயை போல குறைக்க தான் முடியும்…தேவையில்லாம் இந்த நாட்டை பற்றி பேசாதே மலம் அள்ளும் நரனே…

  8. மறுபடியும் வினவின் பதிவு நியாயமற்ற முறையில் சகாயத்தை சுய முரணோடு விமர்சிக்கிறது.மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி இந்த இரண்டு அமைப்புகளும் 10/01/2015 அன்று இந்த போலி வீரனிடம் மனு கொடுத்ததும் அதை வினவு வெளியிட்டதும் ஏன்?பல்வேறு வழக்குகளில் சட்ட பூர்வ வழிமுறைகளை நாடி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக் கொண்டே ஒரு அரசு அதிகாரியை போலி வீரன் என்பது ஒரு நகைமுரண் அல்லவா?
    ” சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார். அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்வதா?இல்லை இல்லை அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற முட்டாள்தனமென்று சொல்வதா? விரைவிலேயே தெரிந்துவிடும்!”
    கொல்லப்பட்ட மற்றும் தற்கொலை செய்து கொண்ட நேர்மையான அதிகாரிகள் பெயரையெல்லாம் குறிப்பிட்டு சகாயம் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எச்சரிக்கையாக இருக்கவேண்டியதன் அவசியத்தையா அல்லது மறைந்துவிட்டவர்கள் தான் உண்மையில் நேர்மையாளர்கள் சகாயம் அந்தளவிற்கு கிரானைட் மாபியாக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதையா? உயர் நிதிமன்றம் நியமித்த சட்ட ஆணையர் என்பது ஒரு விசாரணை அதிகாரியாக அதன் வரம்புக்கு உள்பட்டு நடந்து கொள்வது தான்.அவருக்கு எந்த நடவடிக்கை எடுக்கவும் உரிமை வழங்கப்படவில்லை.
    முந்தைய கலெக்டர் அதிகாரம் கூட கிடையாது.காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் கூட இல்லாத நிலையில் பி ஆர் பி கையாளிடம் என்ன மாதிரியான வீர சாகசம் செய்ய முடியும்? அவரது வரம்புகளை,அதை நிர்ணயித்த நீதிமன்றத்தை அல்லது அதன் வரம்பை மீறி இந்த கமிசனால் தீர்வொன்றும் வரப்போவதில்லை என்று சொல்லுங்கள் .அதை விடுத்து போலி வீரன் என்றெல்லாம் எழுதுவது நியாயமில்லை.உங்களைத் தவிர யாராலும் நேர்மையாக இருக்க முடியாது என்று கருதிக் கொண்டு மற்றவர்களை தாழ்த்த முயலாதீர்கள்.பழைய கோப்பு படத்தை எடுத்து தற்போது மக்களிடம் விசாரிக்கும் போது எடுத்ததைப் போல அர்த்தத்தில் எழுதுவதும் சரியல்ல.அரசு சார்ந்த விழாவுக்கு வந்தபோது மக்களிடம் ஒரு கலெக்டர் என்கிற மமதையின்றி எளிமையுடன் உரையாடும் படம் அது.தற்போது விசாரணை அதிகாரி என்கிற அர்த்தத்தில் பார்த்தால் இதன் தொனி மாறிவிடும் என்பது உங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

  9. கட்டுரை சொல்லும் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு, அதே சமயம்

    //சகாயம் கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” தான் காட்டுகிறார்; அவர் இப்படிச் செய்வது “அஞ்சாத துணிச்சல்” என்று சொல்லமுடியாது; அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நம்பும் “அவரது முயற்சிகள் முட்டாள்தனம்” என்றுதான் இப்போதைக்குச் சொல்லமுடியும்.//

    என இன்று சொல்லும் தாங்கள், மூன்று மாதங்களுக்கு முன்பு முட்டாள்த்தனமான போலி போர்வீரனிடம் வி.வி.மு மற்றும் ம.உ.பா.மை (ம.உ.பா.மை) மனு கொடுத்தது எதற்க்காக? முட்டாள்த்தனமான போலியிடம் மனு கொடுத்த தங்களின் இந்த செயலை என்ன பெயரிட்டு அழைப்பது? https://www.vinavu.com/2015/01/12/hrpc-vivimu-submit-petition-to-sahayam-commission/

    இது குறித்து முன்னர் தாங்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகளையும் அறியத்தருகிறேன்

    //(2) சிறப்பு விசாரணை அதிகாரி சகாயம் அவர்களின் கீழ் பணியாற்ற சிறப்பு புலனாய்வுக்குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு இக்குழு செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன் சகாயத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
    (3) தமிழகத்தில் சட்டவிரோத தாது மணல், ஆற்று மணல், கிரானைட் குவாரி தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும், பேடி குழுவின் அறிக்கையையும் தமிழக அரசு உடனே சகாயம் அவர்களிடம் அளிக்க வேண்டும்.

    “இயற்கை கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம், சகாயம் விசாரணை முழுமையாக நடப்பது, கனிமக்கொள்ளை தொடர்பான உரிய ஆதாரங்கள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு பொது விவாதம் போன்றவை நடைபெற்றால் நீதிமன்றம் கனிமக் கொள்ளையர்களை தண்டிப்பதற்கு வாய்ப்பு உண்டு” என பதிலளிக்கப்பட்டது.//

    சகாயம் விசாரணையை தொடங்க வேண்டும், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் மக்கள் போராட்டமும், சகாயத்தின் விசாரணையும் இரண்டுமே அவசியம் என கூறிய தாங்கள் இன்று சகாயத்தை போலி போர்வீரனாக சித்தரிப்பது ஏன்? அவரின் அதிகாரவரம்பு பற்றி முன்னரே தாங்கள் அறியாதிருந்தது ஆச்சரியத்தையே அளிக்கிறது. https://www.vinavu.com/2014/09/26/sand-mining-scam-hrpc-press-release/

    கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஆர்பாட்டத்தில் தங்களின் மைய முழக்கம் மற்றும் சகாயம் விசாரணையை முடக்குவது மாபெரும் துரோகம் என நீங்கள் கூறியது

    //கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே!
    தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு!

    சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது. மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த ஜெயா அரசு, ஓட்டுப் போட்ட உழைக்கும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இது.//
    https://www.vinavu.com/2014/11/28/hrpc-demands-immediate-arrest-of-vaikundarajan/

    மக்கள் எழுச்சி மற்றும் சகாயத்தின் முறையான விசாரணை இரண்டுமே தேவை அப்போதுதான் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என கடந்த சில மாதங்களாக சொல்லிவிட்டு, தற்பொழுது

    //நாடு கொள்ளைபோகும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்கு எதிராக தமது சொந்த பலத்தால், மாபெரும் மக்கள் எழுச்சியும் புரட்சியுமில்லாமல் தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு காண முடியாது. ஆனால், அவ்வாறான மாற்றுப் பாதையை கையிலெடுக்கும் நேர்மையும் துணிவுமில்லாத பல குட்டி முதலாளிய அரசியல் குழுக்களும், அறிவுஜீவிகளும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவ்வப்போது சகாயம், உதயகுமாரன், கேஜரிவால் போன்ற தலைமையை முன்னிறுத்தி தற்போதைய அரசு அதிகார, கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகாணும் வழிமுறையின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை வைக்கச்சொல்லுகிறார்கள். அவசியமான, சரியான பாதையையும் தீர்வையும் நோக்கிச் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டுவதற்குத் துணிவு கொள்வதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாததற்கு இதையாவது ஆதரிப்போம் என்ற மாயையில் மக்களை ஆழ்த்துகிறார்கள்.//

    இப்படி சொல்வது சரியா? முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது தங்களின் எழுத்தும் செயல்பாடும்….

  10. நண்பர் இராசன் அவர்களே,

    தங்களது மறுமொழிக்கு எனது பார்வையை வைக்க விரும்புகிறேன். கவனிக்க; இது எனது பார்வையும் விமர்சனமும் ஆகும்.

    1. அரசு அதிகாரியிடம் மனுகொடுத்துவிட்டு, உச்ச நீதிமன்றங்களை நாடுகிற புரட்சிகர இயக்கங்கள் சகாயம் போன்ற அரசு அதிகாரிகளை போலி வீரன் என்று விமர்சிப்பது நகை முரண் இல்லையா என்று கேட்டிருக்கிறீர்கள். இது நகை முரண் அன்று. மாதா மாதம் கந்துவட்டி கட்டிவிட்டு கந்து வட்டிக்காரனுக்கும் மார்வாடி சேட்டுக்கும் எதிராக போராடுவதை நகைமுரண் என்பீர்களா?

    2. இந்த அரசு என்பது நீதி பரிபாலனை நடத்துகிற இடம் அன்று. மனு கொடுப்பதும் உச்ச நீதிமன்றங்களை நாடுவதும் இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டு இதன் வழி தீர்வு காண்பதற்கல்ல. இந்த அமைப்பை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கும் முற்றாக அடித்து நொறுக்குவதற்கும் தான். சான்றாக தில்லை தீட்சிதரின் வழக்கில் தீர்ப்பு என்னவென்று தெரிந்தும் உச்சநீதிமன்றத்தை நாடியதால் ஏற்பட்ட திட்டமான அரசியல் பலன் என்ன? இந்த மக்கள் முன் ஆளும் வர்க்கம் அம்பலப்பட்டு நின்றது. உச்ச நீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றமாக நின்றது. மிகவும் நல்ல தனம் உடைய உங்களாலேயே ஆளும் வர்க்கம் குறித்த பிரமையை தகர்த்துக்கொள்ள இயலவில்லையே, கோர்ட்டு கேசு என்று போனால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிய மக்களுக்கு தாங்கள் காட்ட விழைகிற நடைமுறை யதார்த்தம் என்ன?

    3. இல்லை, இதே ஒன்றை வேறொரு கோணத்தில் அணுகுவோமேயானால், அரசை விமர்சிக்கிற புரட்சியாளர்கள் அரசுப்பேருந்தில் செல்வது ஏன் என்றும் கேட்கலாம் இல்லையா? இந்தக் கேள்வி தாங்கள் முன்வைத்த கேள்வியை விட எந்த அளவிற்கு காத்திரம் குறைந்ததாக இருக்கமுடியும்? ஒரு ஆளும் வர்க்கக் கைக்கூலியாக இருக்கிற ஒரு நபர் இப்படியொரு கேள்வியை கேட்கிறார் என்றுவைப்போமே! தங்களின் பதில் என்னவாக இருக்கும்?

    4. கட்டுரையின் விவாதப்பொருள் சகாயத்தின் மீதான நேர்மையல்ல. அதைக் கட்டுரை சிறப்பாக விளக்கியிருக்கிறது என்பதைத் தாங்கள் இன்னொருமுறை படித்துப் பார்க்கலாம். ஆனால் உங்களது மறுமொழி நேர்மை, அதிகார வரம்பு என்பதன் பின்னணியிலேயே அடங்கிவிட்டது. இதற்கு பின்னாடி உள்ள அரசியல் என்ன தெரியுமா? உங்களால் போராட முடியாது என்ற பிழைப்புவாதம் ஒன்று இருக்கிறது. அந்த பிழைப்புவாதம் தான் தன்னளவில் நேர்மையாக இருக்கிற சகாயம் போன்றவர்களை கர்த்தாவாக தூக்கி நிறுத்துகிறது. புரட்சியாளர்களுக்கு இந்த மோசடியை அம்பலப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் முற்றிலும் அடித்து நொறுக்க வேண்டியது அவசியமான கடமையாகும்.

    5. உங்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் பொதுப்புத்தியில் அநீதிக்கு எதிராக நல்லவர்கள் ஆபத்பாந்தவனாக அவதாரமாக வருவார்கள். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்கிற பிரச்சாரம் வலுவாக உள்ளது. இப்பிரச்சாரத்தில் விழுந்தவர்கள் தான் சகாயத்தை முதலில் பலிகொடுக்கிறார்கள். புரட்சியாளர்கள் அல்ல. இந்த கையலாகதத்தனம் தன்னைப் பலிகடாவாக்குவது மட்டுமின்றி மக்கள் திரளை காயடிக்கவும் செய்கிறது எமது முடிபான துணிபு. இதன் முதன் விளைவாகத்தான் சகாயம் குறித்த பிம்பத்தைத் தகர்க்கிற பொழுது சற்றும் சகியாதவராக இருக்கிறீர்கள். இதையே ஒரு வரலாற்று சம்பவத்துடன் நினைவு கூறலாம். சவுரி சவுரா சம்பவத்திற்குப்பிறகு, இதே ஆளும் வர்க்கம் அம்பலப்பட்டு நின்றது. அன்றைக்கு பகத்சிங் போன்ற இளைஞர்கள் இவ்வமைப்பிற்கு எதிராக எழுந்து நின்று புரட்சிகர பதாகையை கையில் ஏந்தினார்கள். ஏன்? முதலில் அவர்கள் நம்மைப்போன்று பார்வையாளர்களாக இருக்கவில்லை. இரண்டாவதாக, இவ்வமைப்பிற்குள்ளேயே இருந்து கொண்டு தீர்வு காண்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை காந்தியை அம்பலப்படுத்தி வெளிக்கொண்டு வந்தார்கள். பகத் சிங் புரட்சியை செயல்திட்டமாக கொண்டிருப்பதை இன்றைக்கும் இந்த ஆளும் வர்க்கம் திட்டமிட்டு மறைத்துவந்திருக்கிறது. இப்படி ஒரு வரலாறு இருக்கிறது என்பதை உங்களைப்போன்றவர்கள் தெரிந்து வைத்திருந்தால் இன்றைக்கு சகாயத்தை நம்பி நின்றிருக்க மாட்டீர்கள்.

    6. சகாயத்திற்கு அதிகாரம் இருந்திருந்தால் நிறைய சாதித்திருப்பார் என்று நாசர் புலிகேசியின் கையிலே கொடுத்த ஆளும் வர்க்கத்தின் கிலுகிலுப்பையை ஆட்டியிருக்க மாட்டீர்கள் என்பது எமது இரண்டாவது முடிபான துணிபு. ஆகையால் உங்களைப்போன்றவர்களின் நிலைப்பாடு இந்தியாவின் துரோக வரலாற்றில் இதுவே முதன் முறையாக நடக்கிறது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதன்படி சகாயத்தை பற்றிய உங்களது மதிப்பீடு வரலாற்றில் வடிகட்டிய முட்டாள்தனமாக நிற்கும் என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப்போகின்றீர்கள்?

    • தென்றல் ,

      உங்களுடைய எழுத்து சாமார்த்தியத்தால மட்டும் நீங்க இந்த விசயத்தில் வாதாடி வெற்றி பெற முடியாதுங்க. புரட்சியாளர்கள் என்பவர்கள் மிகவும் குறைந்த பச்ச சட்டவாதத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள். உதாரணமாக தன் மீது திணிக்கபட்டு உள்ள தடா ,பொடா வழக்குகளை போன்ற கொலைகார சட்டங்களை எதிர்த்து. அதே சமையத்தில் சிதம்பரம் கோயில் வழக்கில் புரட்சியாளர்கள் நிதிமன்றம் மூலம் தீர்க்க தலையிட்டது எல்லாம் அப்பழுக்கு அற்ற துய்மையான சட்டவாதம் தான். மக்கள் மன்றத்தில் போராடி வெட்டி வீழ்த்தபடவேண்டியவைகளை எல்லாம் நிதி மன்றம் மூலம் தீர்க்கலாம் என்ற முயற்சியே தவறு தான். [ உச்சிக்குடுமி நீதிமன்றம் என்பதை அம்பலபடுத்தி இருக்கோம் என்பது உண்மை தான் ] புரச்சியாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதும் ,சிதம்பரம் கோயில் வழக்கில் தலையிடுவதும் ஒன்று அல்ல தென்றல். பொது போக்குவரத்தை பயன்ப்டுத்துவது நாட்டின் குடிமகன் என்ற முறையில் புரச்சியாளர்களின் அடிப்படை உரிமை . ஆனால் புரச்சியாளர்கள் சிதம்பரம் கோயில் வழக்கில் தலையிடுவதும் என்பது சடவாதம்.

      மேலும் வினவின், எமது அண்ணன் சாகாயம் அவர்கள் தொடர்பான இருகட்டுரைகளுககு இடையிலான முரண்பாடுகளை வினவு வாசகர்கள் சுட்டிக்காட்டும் போது, நமது சாமார்த்தியத்தால நாம அவர்களை திசைதிருப்ப கூடாதுங்க. அப்படி செய்வது புரச்சியாளர்கள் தம்மை தாமே ஏமாற்றி கொள்வதற்கு சமமானது. மேலும் நமது மீதான நம்பக தன்மையை குழைத்துவிடும்.

      என்னை பொருத்த வரையில் இந்த தோழர் ஆர்.கே.வின் கட்டுரை மட்டுமே மிக சரியானது. ஆமாம் சகாயம் போன்ற நிசமான சாம்ராய்கள் ஒட்டு பொறுக்கி சாக்கடை அரசியல் பன்றிகளின் தலைமையில் எதனையும் சாதிக்க முடியாது என்பது உண்மை தான் .

      //இது நகை முரண் அன்று. மாதா மாதம் கந்துவட்டி கட்டிவிட்டு கந்து வட்டிக்காரனுக்கும் மார்வாடி சேட்டுக்கும் எதிராக போராடுவதை நகைமுரண் என்பீர்களா? //

  11. //மக்கள் திரளை காயடிக்கவும் செய்கிறது எமது முடிபான துணிபு// அண்ணன் முக்கி முக்கி புரச்சி மக்கள் அணிதிரள் அப்பிடினு சொல்லுதாறு அமா மக்கள் எங்க அணி திரண்டாக யாரு அவுகள காயடிச்சா ஒன்னும் பிரியலண்ணே, பகத்சிங் மேறி புரச்சி பண்ணீ ஜெயிலுக்கு பொயி தூக்கு தன்டனை வாங்க மக்கள் என்ன இழித்த வாயர்களா அவுக கஸ்டத்தயும் பாத்து பேசுங்க …

    • யோசேப்பு,

      \\ பகத்சிங் மேறி புரச்சி பண்ணீ ஜெயிலுக்கு பொயி தூக்கு தன்டனை வாங்க மக்கள் என்ன இழித்த வாயர்களா அவுக கஸ்டத்தயும் பாத்து பேசுங்க …\\

      பகத்சிங்கின் தியாகத்தை இளிச்சவாய்த்தனத்தோடு ஒப்பிடுகிறீர்கள். ஆனால் நமது இளிச்சவாய்த்தனத்தின் பருமனும் அடர்த்தியும் வேறு.

      ஊழல் ராணி, பாசிச ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுத்த பொழுது, தமிழகத்தில் 196 இளிச்சவாயர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் (எண்ணிக்கை குறைவு என்று நினைக்கிறேன்). இப்படியொரு இழிநிலை ஆளும் வர்க்கத்தால் புகுத்தப்பட்டிருக்கிறது என்பதைத் தாங்கள் கணக்கில் எடுக்கவில்லை.

      மாறாக, இந்த சந்ததி மட்டுமல்ல, இனிவரும் சந்ததிகள் அனைத்தும் இப்பூமிபந்தில் வாழவேண்டுமானால் முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் கைக்கொள்கிற பொழுது அங்கே பகத்சிங் பிறப்பதை தடுத்துவிட இயலாது! அதற்கான போராட்டத்தை உங்களிடமிருந்தே தொடங்குவோம்.

      • //ஊழல் ராணி, பாசிச ஜெயலலிதாவிற்கு தண்டனை கொடுத்த பொழுது, தமிழகத்தில் 196 இளிச்சவாயர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் // கீகீ எங்க ஊருல கூட அம்மா அரஸ்ட் ஆன பிறகு ஒரு சில வெட்டி ஆண்களை பார்த்து மற்றவர்கள் சொன்னது “எலே நீயெல்லாம் எதுக்குடே வெட்டியா ஊர சுத்திட்டு கிடக்குத கொஞ்சம் மண்னெண்ண வாங்கிக்தறேன் கொளுத்திக்கிட்டு சாவுலே உன் குடும்பத்துக்கு 3 லட்சம் பணமாது கிடைக்கும் அம்மா குடுப்பாக
        ” அப்பிடினு சொல்லுறாயிங்க எப்பிடியாவது காசு சம்பாதிக்கனும் அப்பிடினு நினைக்கிற கூட்டம் எப்பிடி புரச்சி பன்னும் இந்த மேரி சிந்தனைக்கு முதலாளித்துவம் மட்டுமே காரனமாக இருக்கும் என்று எப்பிடி சொல்லுறீங்க அப்புறம் முதல் கேள்வில கேட்டது மாறி ஏன் மக்கள் ஏன் அணி திரலவில்லை ஏனென்றால் இந்த சமூக அமைப்பிலேயே மக்கள் திருப்தி அடைகிறார்கள் அல்லது அடைவதாக நினைத்து வாழ்கிறார்கள் …

  12. வினவு, என்ன சொல்ல வரீங்க? சகாயம் பேரு நீங்க சொன்ன அந்த கொல்லப்பட்டவங்க லிஸ்ட்ல இருக்க விரும்புறீங்களா? அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் செய்கிறார். ஆய்வு செய்வதும் அதை ஆவணப்படுத்துவதும் அவர் வேலை. மற்றவர்களை மிரட்டுவது அவர் வேலை இல்லை. அதை செய்தால் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்கு தெரியும். அவரது ஆய்வை வைத்து தண்டனை கொடுப்பதும் கொடுக்காததும் நீதி மன்றத்தின் வேலை.
    உங்களுக்கு பி ஆர் பி கொள்ளை அடித்தது தெரியும் என்று ஆணித்தரமாக நம்பினால், உங்களுக்கு நீதித் துறையின் மேல் நம்பிக்கை இல்லையென்றால், பி ஆர் பி யை சுட்டுகொள்ளலாமே, அல்லது கத்தியை வைத்து குத்தி கொள்ளலாமே. அட்லீஸ்ட் கல்லெடுத்து அவரது மண்டையை பதம்பார்க்கலாமே… ஏன் செய்யவில்லை?
    உங்களால் பி ஆர் பி யின் படத்தின் மீதாவது ஒன்னுக்கு அடிக்க முடிஞ்சுதா? இல்லையே.. அப்புறம் ஏன் அடுத்தவங்க மேல் ஆயிரம் குறை கண்டுபிடிக்கிறீங்க?

  13. நண்பர் தென்றல்,
    உஷ்ணம் மிகுந்த வார்த்தைகளை தவிர்த்து விட்டு சிலவற்றை சொல்ல விழைகிறேன்.
    1, “அரசு அதிகாரியிடம் மனுகொடுத்துவிட்டு, உச்ச நீதிமன்றங்களை நாடுகிற புரட்சிகர இயக்கங்கள் சகாயம் போன்ற அரசு அதிகாரிகளை போலி வீரன் என்று விமர்சிப்பது நகை முரண் இல்லையா என்று கேட்டிருக்கிறீர்கள்”.இல்லை நான் அப்படி கேட்கவில்லை “மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி இந்த இரண்டு அமைப்புகளும் 10/01/2015 அன்று இந்த போலி வீரனிடம் மனு கொடுத்ததும் அதை வினவு வெளியிட்டதும் ஏன்?” ஆக கேள்வி இங்கு போலி வீரனான சகாயத்திடம் மனு போட்டது பற்றி ஒரு கேள்வி .அடுத்து ”பல்வேறு வழக்குகளில் (ஒரு புரட்சிகர இயக்கமே) சட்ட பூர்வ வழிமுறைகளை நாடி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிற நிலையில், (இந்த அரசுக்கு, நீதிமன்றத்திற்கு கடப்பாடுள்ள) அரசு அதிகாரியை போலி வீரன் என்பது ஒரு நகைமுரண் அல்லவா?” இது இரண்டாவது கேள்வி.இரண்டையும் குழப்ப வேண்டாம்.
    2.”இந்த அரசு என்பது நீதி பரிபாலனை நடத்துகிற இடம் அன்று. மனு கொடுப்பதும் உச்ச நீதிமன்றங்களை நாடுவதும் இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டு இதன் வழி தீர்வு காண்பதற்கல்ல. இந்த அமைப்பை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கும் முற்றாக அடித்து நொறுக்குவதற்கும் தான். சான்றாக தில்லை தீட்சிதரின் வழக்கில் தீர்ப்பு என்னவென்று தெரிந்தும் உச்சநீதிமன்றத்தை நாடியதால் ஏற்பட்ட திட்டமான அரசியல் பலன் என்ன?”
    இது சரியில்லை அதாவது உண்மையல்ல.ஏனென்றால் தோற்போம் என்று தெரிந்தே வழக்காடினோம் என்பது தவறு.அதில் வெற்றி பெற முடியும் என நம்பினீர்கள், அந்த நம்பிக்கை கடைசி நேர திருப்பங்களில் கைமீறி போகிறது என்று துயரப்பட்டீர்கள்.உச்ச நீதிமன்ற செலவுகளுக்கு நம்பிக்கை வைத்தே நிதி திரட்டிநீர்கள். இதற்கு முன் உயர் நீதிமன்ற தீர்ப்பை வீதியில் இறங்கி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியாக கொண்டாடினீர்கள்.எல்லாமே வினவின் பதிவுகளில் உள்ளது.இந்த விபரங்களோடு ” இந்த அமைப்பை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கும் முற்றாக அடித்து நொறுக்குவதற்கும் தான்” என்கிற வாதம் பொருந்தி போகிறதா?(இது அத்தனையிலும் எனது மகிழ்வும் வருத்தமும் வினவோடு இணைந்து தான் இருந்தது .நல்லது நடக்க வேண்டும் அது நீதிமன்றம் மூலமாக இருந்தாலும் சரி என்கிற நோக்கில்)
    3. இது உனக்கு தான் இந்து மதம் பிடிக்காதே பின்னர் ஏன் இங்கிருக்கிறாய் என்று காவிகள் கேள்விக்கு நிகராக எனது கேள்வியை நிலை நிறுத்துகிற முயற்சி.இந்த பத்தியில் நல்லவேளையாக நான் கைக்கூலியாக்கப் படவில்லை என நம்புகிறேன்(?!) நன்றி(?) 4.”கட்டுரை சொல்லும் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு, அதே சமயம்….” இப்படி திரு.சீனிவாசன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்திருந்தால் நான் பிழைப்பு வாதி பட்டத்திலிருந்து தப்பிக்கலாமா என்னவோ? அது அவர்க்கு எழுதப்படும் பதிலை பார்த்த பின் தான் தெரியவரும்.
    5.இதை படிக்கும் பலரும் திகிலடைவது உறுதி.வினவை படித்து விட்டு ம க இ க உறுப்பினராக சேர்ந்து புரட்சி பணிகளில் ஈடுபடாத எல்லோருமே இந்த வசவுக்கும் நிந்தனைக்கும் ஆளாகிறார்கள் என்பதால் நான் சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.
    6. “அவரது வரம்புகளை,அதை நிர்ணயித்த நீதிமன்றத்தை அல்லது அதன் வரம்பை மீறி இந்த கமிசனால் தீர்வொன்றும் வரப்போவதில்லை என்று சொல்லுங்கள் .அதை விடுத்து போலி வீரன் என்றெல்லாம் எழுதுவது நியாயமில்லை” என்கிற எனது வரிகளை திரும்பவும் நினைவு படுத்த விரும்புகிறேன்.அதன் பொருளென்ன என்றால் கட்டுரை சொல்லுகின்ற மைய பொருளை விட்டு சகாயம் போலி வீரன் என்று தலைப்பு போடுவது சரியல்ல என்பதே .சகாயம் மாதிரி அதிகாரிகளிடம் நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க வேண்டும் என நான் எழுதவில்லை.சகாயம் பி ஆர் பி ஆளிடம் ஒதுங்கி போவதையும் சுட்டிக் காட்டுவது என்கிற பெயரில் அவர் கோழைத்தனமாக நடந்து கொள்வதாக கட்டுரை சொன்னதால் தான் நான் அவருடைய வரம்புகளைப் பற்றி எழுதினேன்.அந்த வரம்பு தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுகிற அளவில் கூட இல்லை என்பதே என் கருத்து.அதனால் தான் திரு.சீனிவாசன் அவர்கள் சுட்டியதைப் போல வினவும் கூட பாதுகாப்பளிக்க கோரியது.மாறாக சகாயத்திற்கு அதிகாரம் இருந்திருந்தால் நிறைய சாதித்திருப்பார் என்று நம்பவுமில்லை.நம்பியதாக சொல்லவுமில்லை .நீங்களாகவே ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு அதையே சரியென முழுமையாக நம்பி “ஆளும் வர்க்கத்தின் கிலுகிலுப்பையை ஆட்டியிருக்க மாட்டீர்கள்” என்கிற என் மீது பழியும், துரோக வரலாறு பற்றிய ஆவேசமும் என்னை அதிர்ந்து போக செய்துள்ளது.ஆகவே நான் கூறுவதெல்லாம் என்னை ஒரு பொருட்டாக நினைத்து பதில் சொன்னதற்கு மிக்க நன்றி. பல்வேறு வகையிலும் அயோக்கியனாக இருக்கிற எனக்கு பதில் சொல்வதை விடுத்து, இதே பொருளில் திரு.சீனிவாசன் அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நிதானமான தொனியில் பதில் சொல்லுங்கள்.நானும் வாசித்து தெளிவடைய முயற்சிக்கிறேன். நன்றி தென்றல்.

    • நண்பர் இராசன்,

      இக்கட்டுரை வாயிலாக உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதல்ல நோக்கம். செறிவான மொழியில் அடர்த்தியான பத்திகளை அறியத்தருபவர் என்ற முறையில் உங்களிடையே இத்தகையதொரு தாக்குதல் பாணியை கடைபிடிப்பது அவசியம் என்று கருதுகிறேன். மற்றபடி பிழைப்புவாதி, துரோக வரலாற்றை அறியாதவர் என்பதெல்லாம் பழியல்ல. உங்களை தனித்து புரிந்து கொள்ள வேண்டாம்.

      புரட்சிகர அரசியல் ஆக்கப்பூர்வமானது மட்டுமல்ல அது சமூகத்தின் எந்தச் சிறு சனநாயக சக்திகளையும் தனிமைப்பட அனுமதிப்பதில்லை என்பதையும் தங்கள் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

      மேற்கொண்டு விவாதத்திற்குள் செல்வோம்.

      தாங்கள் சொல்லியது மாதிரியே கணிசமான பேர் அதிர்ச்சிக்குள்ளாவர்கள் என்று வைப்போம். இந்த அதிர்ச்சியின் மூல காரணத்தை தொட்டுச் செல்வது எனது மறுமொழியின் முதன்மையான நோக்கம். தங்களுக்கு எழுதியது நண்பர் சீனிவாசனுக்கும் பொருந்தும் என்பது எனது நிலைப்பாடு. கட்டுரையை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதற்காக அவரை விட்டுவிடவில்லை. விட்டுவிடவும் முடியாது. இது குறித்து மேலும் விவரித்து எனது கருத்துக்களை கீழ்க்கண்டவாறு வைக்கிறேன்.

      1. தங்களது இரு கேள்விகளையும் குழப்பவில்லை. முதற்கேள்வியின் படி, போலி வீரனிடம் புரட்சிகர அமைப்புகள் மனுகொடுத்ததையும் அதை வெளியிட்டதையும் ஏன் என்பதை என் பார்வையில் இவ்விதம் புரிந்து கொள்கிறேன். கிரானைட் கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்தும் ஒரே இயங்கு சக்தி புரட்சிகர இயக்கங்களின் தலைமையிலான மக்கள் பாதுகாப்பு கமிட்டிகள் தான். எதிர்காலத்தில் இப்படி கமிட்டிகள் அமைகிறதென்று வைப்போம். அப்பொழுதும் கூட என் தரப்பு புரிதலின் படி சகாயத்திடம் மனுகொடுக்கத்தான் வேண்டும். அதைக் குறித்த செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதே சமயம் மக்கள் முன் இருக்கிற ஆளும் வர்க்கம் குறித்த பிரமை தகர்க்கப்பட வேண்டும். சான்றாக, ஆற்று மணற் கொள்ளை விசயத்திலும் மக்கள், ஆளும் வர்க்க அதிகாரிகளின் உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக கொடு என்று பாரிய நெருக்கடிகளை கொடுக்கவே செய்தார்கள். அது முடியாத பொழுது அதிகாரத்தை கையில் எடுத்தார்கள். எடுப்பார்கள். எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் சகாயம் அவர்களிடம் அப்படியொரு நிர்பந்தம் முன்வைக்கப்படும் என்று கருதுகிறேன். அவர்களையும் சும்மாய் விட்டுவிடுவதாயில்லை! நண்பர் சீனிவாசன் அவர்களின் கேள்விக்கு இது ஒரு வேளை பதிலளிக்கலாம்; மக்கள் பாதுகாப்புக் கமிட்டி இதே ஆளும் வர்க்க உறுப்புகளிடம் தான் தனது வலிமையை நிறுவுகிறது. கோரிக்கைகளை முன்வைக்கிறது. இங்கே அத்தி பூத்தாற்போல சகாயம் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களை ஊடறுத்து செல்லவேண்டியது அவசியம் என்ற நிலையில் அனைத்தும் சகாயம் என்ற அளவோடு நிற்பதில்லை. இது தங்களின் கேள்விக்கு எனது பதிலாகும்.

      2. இதில் நேர்மை மற்றும் அதிகாரி குறித்த பல்வேறு பாசாங்குகள் எல்லாம் போராட்டம் ஒன்றைத்தவிர இந்த ஆளும் வர்க்கத்தை எப்படி சரி செய்வது என்ற பாணியில் இருப்பதைக் கவனிக்கவேண்டும். ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிற சகாயம் குறித்த பிம்பம் மக்கள் எக்காரணம் கொண்டும் திரண்டுவிடக்கூடாது என்பதுதான். இது ஒரு மோசடியாகும். இதையும் சும்மா விடுவதாய் இல்லை. இரண்டாவது கேள்விக்கும் பதில் இதில் தான் இருக்கிறது. அதைக் கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.

      3. சான்றாக, கட்டுரையின் ஒரு பகுதியில் சகாயம் ஏன் நீதிமன்றங்களை கேள்விக்குள்ளாக்கவில்லை என்ற ஒரு வாதம் வருகிறது. அப்படியொரு வாதத்தை வைத்தவர் யார்? புரட்சியாளர்களா? அல்லர். மற்றொரு போலி வீரன் நீதிபதி சந்துரு அவர்கள். இதைக் கவனிக்கத் தவறுவது ஏன்? அழுகிப்போன ஓர் அரசு உறுப்பு அழுகிப்போன மற்றொரு அரசு உறுப்பிடம் இவ்விதம் கோரிக்கை வைப்பது அசலா? நகலா? இதே கேள்வியைத்தான் புரட்சியாளர்களிடம் திருப்புகிறீர்கள் என்றால் மகிழ்ச்சி. அப்படியானால் மேற்கொண்டு கவனியுங்கள். இதில் சந்துரு அவர்களிடம் இதே புரட்சிகர அமைப்பாளர்கள் நீதிமன்றங்களின் கொலிஜிய எதேச்சதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியவர்கள். இப்பொழுது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நொறுக்குத் தீனி தலைமுறை, ஏன் சந்துருவை போலி வீரர் என்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்களா? தாங்களே கேட்க வில்லையே? சந்துரு குறித்து புரட்சியாளர்கள் மீது வராத விமர்சனம் சகாயம் குறித்து விமர்சிக்கிற பொழுது மட்டும் வருகிறதே ஏன்? இது போலியா? அசலா? சிந்தியுங்கள். ஏனெனில் இந்த இடத்தில் ஊடகம் உருவாக்கிவைத்திருக்கிற பிரமையாவது அம்பலப்படும். ஏனெனில் பெரும்பாலானோருக்கு சகாயத்தை தெரியும் அளவிற்கு சந்துருவைத் தெரியாது.

      3. நீதி, நேர்மை, போராட்டக் குணங்கள் எல்லாம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கவேண்டிய வாழ்வியல் விழுமியங்கள். அது சகாயத்திற்கு சொந்தமானது மட்டுமல்ல. நேற்றைய மறுமொழியில் “உங்களால் போராட முடியாது என்று சொல்கிற பிழைப்புவாதம் தான் தன்னளவில் நேர்மையாக இருக்கிற சகாயத்தை கர்த்தாவாக தூக்கிக் காட்டுகிறது” என்றொரு வாதம் ஒன்றை முன்வைத்தேன் அல்லவா? ஆனால் இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை. சகாயம் புரட்சிகர அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அவரை புரட்சியாளர்கள் விமர்சிக்கிறார்கள் என்று அவதூறும் வைக்கப்படுகிறது. கறாராகச் சொன்னால் கட்டுரை சகாயத்திற்காக மட்டும் எழுதப்பட்ட ஒன்றல்ல என்று மதிப்பிடுகிறேன். சகாயத்தை நம்புகிற நமக்காக எழுதப்பட்ட ஒன்று. இதன்படி புரட்சிகர அரசியலையுமே தெருவில் இறங்கிப் போராடுபவர்களால் இன்னும் சிரமேற்கொண்டு விமர்சனம் செய்யமுடியுமென்று கருதுகிறேன். அத்தகைய போராட்டத்தைக் கோருவது முதன்மையான பணியாகும். ஆகையால் தான் இத்தகைய நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாகவே நிற்கிறேன். சகாயத்தை கருவறுப்பவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. இந்த ஆளும்வர்க்கத்தோடு சேர்ந்த பிழைப்புவாதிகள் தான்.

      4. இயேசுவை சிலுவையில் அறைந்த ஆளும்வர்க்கத்தை எதிர்த்து எந்த மனசாட்சியுள்ள நம்பிக்கையாளனும் ஏன் என்று கேள்வி கேட்கவில்ல. அவர் எங்களது பாவங்களுக்காக மரித்தார் என்று இயேசுவின் மீது காறித்துப்புகிறார்கள். இயேசுவோ ஆண்டவரே நீர் என்னைக் கைவிட்டீரும் என்று மக்களின் நம்பிக்கையையே ஒப்புக்கொடுத்தவர். இயேசுவே ஆளும்வர்க்கத்திற்கு ஒரு தூசு என்கிற பொழுது சகாயம் எம்மாத்திரம்? எனில் சகாயம் காட்டுகிற நடவடிக்கைகளின் தன்மை என்ன? சகாயம் விசயத்தில் இதுகுறித்த புனித நீர் முன்கூட்டியே தெளிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமானால் மத்தேயுவில் இருந்து ஒரு வாசகத்தை முன்வைக்கலாம்; “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது என்று” இது கிரானைட் கொள்ளையையோ அரச பயங்கரவாதத்தையோ தடுத்துவிடாது. மக்கள் எழுச்சிக்கு எதிரான வரலாறுகள் இப்படித்தான் இருக்கிறது. இதில் போலி போர் வீரன் என்பதில் தாங்கள் கண்ட நியாயமற்ற முறை என்ன?

      4. உங்களது பார்வையின் படியே வருகிறேன். இந்த சமூகம் புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து ஆலய நுழைவுப் போராட்டம் வரை எத்தனையோ வீர தீரப்போராட்டங்களை அநீதிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. எங்கே போயிற்று அந்த விழுமியங்கள்? இன்றைக்கு பிழைப்புவாதிகளாக நிற்பதற்கு பின் மக்களின் அரசியலற்ற பார்வைக்கு வழிமுறை என்னவென்பதைப் பற்றிய விமர்சனப் பார்வை ஏதுமின்றி ஏதோ சகாயமாவது நல்லது செய்கிறாரே என்ற முனைமழுங்கிப் பார்வைக்கு யார் காரணம்? அது என்ன வகையானது? இதற்கு தீர்வு என்ன?

      5. இப்பொழுது இறுதிப்பகுதிக்கு வருவோம். கட்டுரையின் தலைப்பில் தான் உங்களுக்குப் பிரச்சனை என்று சொல்லியிருக்கிறீர்கள். மற்றபடி நானாகவே உங்களைப்பற்றி பல விசயங்களைக் கருதிக்கொண்டேன் என்று தாங்கள் நினைக்கிறீர்கள். ஒரு வேளை அப்படிக்கூட இருக்கலாம். அதை சரி செய்துவிட முடியும். ஆனால் அரசியலற்ற தன்மைக்கு என்ன பதில்? தலைப்பு தான் பிரச்சனை என்றால் அது அற்பவாதமாக முடிந்துவிட வாய்ப்பு உண்டு. இதை நாம் இப்படி விளக்கலாம்.

      6. சமூக ஜனநாயகவாதிகள் என்ற ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் நம்புகிற அமைப்பிற்கு முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பங்கம் ஏற்படுகிற பொழுதெல்லாம் துணிந்து விமர்சிக்கிறார்கள். நேர்மையோடு எழுதவும் செய்கிறார்கள். கடைசியாக அதற்காக வாழ்ந்தும் இயற்கை எய்துகிறார்கள். ஆனால் இந்த அமைப்புக்கு எதிராக அல்ல. இந்த அமைப்பிற்குள்ளேயே நின்று தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையின் பால் அப்படி இருக்கிறார்கள். சகாயம் அப்படிப்பட்ட ஆளாகக்கூட இருக்க முடியும். ஆனால் அது தீர்வல்ல. இதை நேரிடையாக சொல்வதற்கு புரட்சியாளர்கள் தயங்கவில்லை என்பதுதான் இக்கட்டுரையின் வாயிலாக நான் புரிந்துகொள்வது. விழுமியங்களும் கடப்பாடுக்களையும் தொலைத்த சமூகத்திற்கு இது சற்று அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் இதைச் செய்யத்தான் வேண்டும். இது சற்று கடினமான பணி தான். ஆனால் போலி போர் வீரன்கள் வெளியே வந்துதான் தீர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?

      பின் குறிப்பு: தில்லை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது தாங்கள் நினைக்கிற படியல்ல என்பது எனது கருத்து. இது குறித்து விளக்கலாம். விரிவஞ்சி இங்கு நிறுத்துகிறேன்.

  14. தோழர்களே உங்களை தவிர அனைவரும் தவறானவர்கள் என்ற முட்டாள்தனமான என்னத்தை எப்பொழுது மாற்றப்போகிறீர்கள்? தற்கொலை செய்து கொண்ட அதிகாரிகள் மட்டும்தான் நல்லவர்களா? சகாயம் போன்றவர்கள் நல்லவர்களாக தங்கள் பணியை செய்தாலும் ஒப்புகொள்ளமாட்டீர்களா? இது என்ன சிந்தனை. பிறர் செய்யும் நல்ல பணிகளை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களது கொள்கை மட்டுமெ சரி என்பதும் அடுத்தவர்கள் செய்யும் அனைத்து செயல்கலையும் புறக்கனிப்பதும் மாற்றங்களை முன்வைப்பவர்களுக்கு ஏற்புடையதல்ல.மக்களிடையெ உள்ள சிறிய நன்மைகளையும் அங்கீகரித்து செயல்படுங்கள்.

  15. தென்றல்
    உங்களை போன்றவர்கள் கற்பனை உலகத்துலேயே பயணிக்கிறீர்கள்.நடைமுறை யதார்த்தங்களை மறந்து நீங்கள் சிந்திக்கிறீகள்.உங்களை போன்றவர்களின் புரட்சி வெறும் ஏட்டுசுரைக்காய்தான்.

  16. சகாயம் ஆயுதம் தரித்து, கிரானைட் கொள்ளையர்களுடன் போரிட வேண்டுமா? ஒருவேளை அப்படி போரிட்டு குற்றவாளிகளை வீழ்த்தினால் மனித உரிமை மீறல், சர்வாதிகாரி என்றும் அப்போதும் கட்டுரை வெளியிடுவீர்கள் என்று கருதுகிறேன். அதாவது சகாயம் என்கின்ற நேர்மையாளனை, ஊழலுக்கு எதிராக போரிடுபவனை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சேவகம் செம்படிக்காமல், மக்களுக்காக மட்டுமே போராடுபவனை பாராட்ட மனது வராது.

    வினவின் வக்கிரப் புத்தி தான் இந்த கட்டுரை. வினவின் எதிர்பார்ப்பு என்ன [சகாயம் என்ன செய்ய வெண்டும்] என்பதனை கட்டுரை தெளிவு படுத்தியிருந்தால் மட்டுமே முழுமை பெற்றதாக ஏற்றுக் கொள்ளலாம். மாறாக மனம் போன போக்கில் வெறும் ஏட்டில் பொறாமையில் ஓலமிடுவது புத்திசாலித் தனமாக தெரியவில்லை.

    ஆமாம்.. தற்சமயம் பதவியில் இருந்து கொண்டு கொள்ளை, அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டுக் கொள்ளை அடிப்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை தான் என்னவோ?

    ஒருவேளை மகஇக-இல் சேர்ந்து தெருப்பிரசாரம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

    • கிராமத்தான்,

      //சகாயம் ஆயுதம் தரித்து, கிரானைட் கொள்ளையர்களுடன் போரிட வேண்டுமா?//

      தலைகீழாக புரிந்து கொள்கிறீர்கள். தனியாளாக பறந்து பறந்து அடிக்கும் ஹீரோக்கள் நமக்குத் தேவையில்லை என்பதும் மக்கள் திரள் கூட்டு நடவடிக்கைகள் தான் வேண்டும் என்பதும் தான் கட்டுரையின் கருத்து. யதார்த்தில் இது போன்ற ஹீரோக்களை வைத்து எதையும் சாதிக்க முடியாது. சமூக விரோதிகளை சமூக நண்பர்கள் சங்கமாக திரண்டு எதிர்கொள்வதே சரியான மற்றும் உறுதியான வழி. ஹீரோ வந்து விட்டார் என்று விசில் அடிப்பது, அவர் பார்த்துக் கொள்வார் பாருங்கள் என்று போலித்தோற்றத்தை ஏற்படுத்துவது, அதை பரப்புவது, அவரை சுற்றியும் நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பது போன்றவை அருவருப்பானவைகள். சமூக விரோதிகளின் பலம் கூடியிருக்கும் போது சமூக நண்பர்களுக்கு துணையாக வராமல் வெறும் பார்வையாளர்களாக இருப்பதும் சமூக விரோத செயல் தான்.

      //[சகாயம் என்ன செய்ய வெண்டும்] என்பதனை கட்டுரை தெளிவு படுத்தியிருந்தால்//

      கட்டுரை மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்தியிருக்கிறது. கணிசமான மக்கள் மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்களில் சேர்ந்து திரண்டு விட்டால் இயற்கை வளங்கள் சிறிய எண்ணிக்கையுள்ளவர்களின் தனியுடைமையாக்கப்பட்டு பொதுநலனுக்கு பயன்படாவண்ணம் விரயமாவது எப்படி நடக்கும். அப்போது சகாயங்களின் துணிகர சாகசங்களுக் என்ன தேவை.

  17. வார்த்தைகளிற்கு அது சொல்வதை விட -அது ஏற்படுத்துகின்ற பிம்பம் – என்ற பொருள் இருக்கிறது. “அவன் ஆறு நாள் சிவகாசிக்குப் போய் தூங்கிட்டு வந்தான்” என்பதில் மறைந்திருக்கிற அவன் அங்கு போய் எதுவுமே செய்யவில்லை என்கிற பொருள் போல. வார்த்தைகளின் படி வாதாடுவதாயின் ஆறு நாள் ஒருத்தன் தூங்காம இருந்திருப்பானா என்றும் வாதாடலாம்.

    இந்தக் கட்டுரை தவறான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது:
    “இதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் துணிச்சலாகத் தனது கடமையில் கண்ணாகப் பணியாற்றுவதைப் போன்ற தோற்றம் முதலாளிய ஊடகங்களால் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், சகாயமோ கத்திமேல் நடப்பவரைப்போல “சர்க்கஸ்” காட்டுகிறார்.”
    மேலே சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகளிலும் அதுதான் இருக்கிறது. “சகாயம் தன் வேலையைச் சரிவரச் செய்யவில்லை. அவர் வெட்டிக் கிழிப்பதைப் போன்ற விம்பம் உருவாக்கப் படுகிறது. சகாயமும் கூட ஏற்கனவே ஒரு பக்கம் சார்ந்து விட்டார். நடுநிலை வகிப்பதைப் போல அவர் னே நாடகமாடுகிறார்” என்பததான் அந்த வார்த்தைகள் ஏற்படுத்துகின்ற விம்பம்.
    நான் இந்தியாவில் இல்லை. இங்கிருந்து கொண்டு சரியான தகவல்கள் இன்றி என்னால் முடிவு செய்ய முடியாது. எனினும் சகாயத்தைக் குறை சொல்லத்தக்க ஆதாரங்கள் இன்னமும் வரவில்லை என்று தான் நம்புகிறேன். இந்த நிலையில் சகாயம் முதலாளித்துவ அமைப்பின் கீழ் அதன் ‘ஜனநாயக’ எல்லைகளிற்குள் தன்னால் முடிந்ததை மக்ஸிமம் செய்யத் துடிக்கும் ஒருவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
    இதுவரை எத்தனை ‘நேர்மையான’ அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்? அவர்களிற்கு இல்லாத ஒன்று சகாயத்திடம் இருக்கிறது. மக்கள் ஆதரவு. அதுதான் அவருக்கு இருக்கிற பாதுகாப்புக் கவசம். உங்கள் கட்டுரை அதனை உடைத்தெறிய முயற்சிக்கிறது.
    இந்த விசாரணைகளில் நியாயம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைக்கலாம் அல்லது நாம் அனைவரும் ஏமாளிகளாக்கப்படலாம். சகாயத்திற்குத் தான் எத்தனை முட்டுக்கட்டைகள். தற்போது அவராலும் பெரிதாக எதைனையும் செய்ய இயலாமலிருக்கிறது. அவருக்கு வழங்கப் பட்ட அதிகாரங்கள் அவ்வளவு தான். அதனை தோலுரித்துக் காட்டுவது நல்லது. இன்னும் சொல்லப்போனால் சகாயத்திற்கு ஆதரவாகவும் அவரது பணிக்கான இடையூறுகள் நீங்கவும் அதிகாரங்கள் தரப்படவும் தான் வினவு போராட வேண்டும். அதுவே முதலாளித்துவத்தின் எல்லைகளையும் சுயரூபத்தையும் பகிரங்கப்படுத்த உதவும்.
    இதனை மீறி முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் கிரனைற் கொள்ளையர்கள் தண்டிக்கப்பட்டாலும் அதுவும் கூட வெற்றிதான்.

  18. தங்களது மத வழிபட்டு சின்னங்களை பார்த்தாலே
    கன்னத்தில் போட்டுகொள்ளுவதோ,
    சிலுவைகுறிஇட்டுகொள்ளுவதோ,
    சலாம் சொல்லிகொள்வதோ
    சாமான்ய மக்களின் மூடத்தனம்.
    அதுபோல
    அரசு,அதிகாரிகள் என்றாலே
    குத்தம்சொல்லுவது
    வினவின் மூடநம்பிக்கைதனம்.

  19. வினவு வாசகர்களுக்கு ,அரசியல்வாதிகள்[ஆளும் வர்க்கம்] ,அதிகாரிகள் [அதிகார வர்க்கம்] , அரசு படைகள்[போலிஸ் ,இராணுவம் ] ,மற்றும் மக்கள் ஆகிய ஒட்டுமொத்த போலியான ஜனநாயக இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட வர்கத்தில் இருந்து சகாயம் போன்று ஒரு சிலர் நேர்மையானவர்கள் இருகின்றார்கள் என்ற கருத்தே கேலிக்குரியது தான். ஒட்டுமொத்த அமைப்பே சாக்கடையான பின்பு அந்த சாக்கடையில் இருந்து சாக்கடை நாற்றமில்லாத ,சுகாதார கேடு இல்லாத மீன்களை பிடிக்கின்றேன் என்று கூறுவது எவ்வளவு சிரிப்பிற்கு உரியதோ அது போன்றது தான் சகாயத்தின் வினவின் சில வாசகர்கள் வைத்து உள்ள நம்பிக்கையும் .ஒரு வேலைசகாயம் தனிநபராக தன் வேளையில் இதுவரை லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு இருந்தவர் என்பது உண்மை என்றாலும் அவருக்கு மேல் மற்றும் கீழ் உள்ள அதிகாரிகளின் லஞ்ச-ஊழலை கண்டும் காணாது தானே இருந்து இருகின்ரார்.

Leave a Reply to Uppuma Shankar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க